Sunday, July 20, 2014

இதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்...!

மிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் கல்லூரி ரூ.7 லட்சத்தையும் நிர்ணயித்திருக்கிறது.
த்தொகை கல்விக் கட்டணம் மட்டும் தான். இது தவிர நூலகத்திற்கான கட்டணம், கருத்தரங்குகளுக்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், விடுதி மற்றும் பேருந்துக் கட்டணம், சுற்றுலாக் கட்டணம், சிறப்புக் கட்டணம் போன்ற வகைகளில், இக்கல்லூரிகள் மேலும் சில லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இவை மட்டுமின்றி நன்கொடை கட்டணமாக (capitation fees) ரூ. 40 லிருந்து 80 லட்சம் வரை தனியாக வசூலிக்கின்றன.
இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து கொள்ளையடித்து அக்கொள்ளை பணத்தை கொண்டுதான் இக்கல்விக்கூடங்களின் முதலாளிகள் தங்களை கல்வி வள்ளல்களாக சித்தரித்து வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்டணங்களைப் பார்த்தால், மருத்துவம் ஒரு சேவை தொழில் என்று யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஆக, தமிழகத்தில் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வெளிவர ஒரு மாணவர் ரூ.1 கோடிக்கும் மேல் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இளநிலை படிப்புக்கான கட்டணம் மட்டுமே. முதுநிலை படிப்புக்கு மேலதிகமாக 2 லிருந்து 3 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளையோடு ஒப்பிடும் போது அரசுக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.11,500 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 20,000 மட்டுமே. தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.
ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசு நிர்ணயம் செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 25% உயர்ந்திருக்கிறது. நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சென்ற ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2.5 லட்சமாக நிர்ணயித்திருந்தது. இந்த ஆண்டு கட்டணத்தில் ரூ.10,000 உயர்த்தியிருக்கிறது.
அரசு நிர்ணயித்திருக்கும் இக்கட்டணம் நூலகம், விடுதி போன்ற இதர கட்டணங்களை உள்ளடக்கவில்லை என்பதால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மேலதிக கட்டணத்தையே வசூலிக்கின்றன. மேலும், இந்நிர்ணயம் அரசு கோட்டா இடங்களுக்கான (Govt. Quota Seats) கட்டணத்தை மட்டுமே கட்டுப்படுத்துவதால், நிர்வாக கோட்டா இடங்களுக்கான கட்டணத்தை தங்களுடைய விருப்பம் போல நிர்ணயித்து கொள்ளையை எந்த தடையுமின்றி நடத்துகின்றன.
இது மட்டுமின்றி, அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம் ராமச்சந்திரா, எஸ்.ஆர்.எம் போன்ற நிகர்நிலை பல்கலைக் கழகங்களை  கட்டுப்படுத்தாதென்பதால் அவை நடத்தும் கட்டணக்கொள்ளைக்கு அளவே இல்லை. அரசு இக்கட்டண கொள்ளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதோடு, அதை கண்டு கொள்ளாமல் மறைமுக ஆதரவையும் வழங்கி வருகிறது. கல்வி தனியார் மயம்தான் அரசு கொள்கை எனும்போது இந்த ஆதரவு மேலும் மேலும் பகிரங்கமாக மாறி வருவது கண்கூடு. தேர்தலின் போது சென்னைக்கு வந்த மோடி, பச்சமுத்து கல்லூரிக்குச் சென்று இந்தியா முழுவதும் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் வரவேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. பச்சமுத்துவும் தனது பிசினஸை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காகவே பாஜக கூட்டணியில் சேர்ந்திருப்பார்.
தனியார் கல்லூரிகள் அரசு நிர்ணயித்திருக்கும் ரூ.2.5 லட்சத்திற்கு மட்டுமே ரசீது கொடுக்கின்றன அதனால் வங்கிகள் அக்கட்டணத்தை மட்டுமே கடனாக கொடுப்பதால் கல்விக் கடன் பெற்று படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள் அவதியுறுகின்றனர்.
ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் சென்று மருத்துவம் படித்து திரும்ப சுமார் ரூ. 20 லட்சம் மட்டுமே செலவாகும் என்பதை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர், படித்து முடித்து வெளியே வந்தால், அவருக்கு அரசு வேலை கிடைக்கும் பட்சத்தில் ரூ. 40,000 வரை சம்பளமும், அதே தனியார் மருத்துவமனைகளில் ரூ. 20 முதல் 25 ஆயிரம் சம்பளம் மட்டுமே தரப்படுகிறது. இப்பின்னணியில் கல்விக்கடன் பெற்று மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியுறுவதும் நடக்கிறது. அரசு அமல்படுத்திவரும் கல்வி தனியார்மயக் கொள்கையினால் இக்கல்வி வள்ளல்களின் கொள்ளை மழலையர் பள்ளிகளில் ஆரம்பித்து மருத்துவ கல்வி வரை நீள்கிறது.
இது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. மற்றொருபுறம், இப்பெருந்தொகையை செலவழித்து மருத்துவம் பயிலும் ஒரு மருத்துவர், தனது தொழிலை சமூகத்திற்கு செய்யும் சேவையாக நினைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இம்மருத்துவர்கள் தாங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுப்பதற்காக மருத்துவம் குறித்த சமூக நெறிமுறைகள், மதிப்பீடுகள் அனைத்தையும் கைவிட்டு விட்டு எதையும் செய்ய தயாராகிவிடுகிறார்கள்.
அதாவது மருந்து கம்பெனிகள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற மற்றும் விலை அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது, மருத்துவ சோதனை நிறுவனங்கள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற சோதனைகளை பரிந்துரை செய்வதிலிருந்து பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்தும் சோதனைகளுக்கு நோயாளிகளை சோதனை எலிகளாக்குவது என்று எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர்.
இன்னொரு புறம் மருத்தவம் படிப்பது என்பது வரதட்சணை சந்தையில் பெரும் விலை போகும் சரக்கு என்பதால் அப்படியும் கொள்ளையடிக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது என்பதே அது கௌரவத்திற்கு படிப்பது என்றாகி விடுகிறது. இப்படி கௌரவம் பார்த்து படிப்பதும், அதற்கு செலவழிப்பதும் சாதாரண மக்களால் முடியாத ஒன்று. லஞ்சம், ஊழல், கழிவு, குறுக்கு வழி என்று பணம் பார்க்கும் கணிசமானோர் இப்படி செலவழித்து படிக்க வைக்க தயாராக இருக்கின்றனர்.
காசில்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்ற நிலை உருவானதில் இத்தனியார் மருத்துவக் கல்லூரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை போல மருத்துவத் துறையே முற்றிலுமாக மக்களை கொள்ளையிடும் துறையாகியிருக்கிறது. இவ்வகையில் கல்வி தனியார்மயம் கல்வி கற்கும் மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் பாதிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தையுமே அரித்து தின்கிறது.
(நன்றி - வினவு )

No comments:

Post a Comment