Saturday, May 14, 2016

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...!

அவர் ஒரு சிறந்த யோகா ஆசிரியர் யோகாசன கலைகளை நன்கு அறிந்தவர்.

ஒரு மாணவன் அவரிடம் யோக கலைகளை கற்றுக் கொண்டிருந்தான். ஆசிரியர் மாணவர் என்கிற உறவை தாண்டி மனது விட்டு பேசும் நல்ல நண்பர்களாவும் இருந்தார்கள்.

பேச்சுவாக்கில் ஒருநாள் அந்த மாணவன் சொன்னான்:

ஆசிரியரே! எனக்கு சாரசரி வாழ்வு பிடிக்கவில்லை இந்த உலகை துறந்து எங்காவது மலையடிவாரங்களில் பக்கம் இயற்கையோடு இயற்கையாக தனியாக, துறவியாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் அதற்கு விடமாட்டார்கள் என்றுதான் பயப்படுகிறேன் என்றான் மிகுந்த மனவருத்தத்துடன்.

“ஏன்?” உன்னை விட மாட்டார்கள் என்றார் ஆசிரியர்

“அவர்களுக்கு என் மீது அளவில்லாப் பாசம் கொள்ளை அன்பு. என்னைப் பிரிந்து அவர்களால் இருக்கவே முடியாது” என்றான் அவன் சற்றே கர்வத்துடன்.

“ அதை சோதித்து பார்க்கலாமா என்றார் ஆசிரியர் அமைதியாக.

மாணவன் அதற்குச் சம்மதித்தான். ஆசிரியர் அவனுக்குச் செத்தது போலவே கிடக்கும் ஒரு உயர்தர யோகாசன வித்தையைக் கற்றுக் கொடுத்து வீட்டிற்க்குப் போய் அதனை செய்யுமாறு சொன்னார்.

மறுநாள் காலை அவன் தன் வீட்டில் செத்தது போலவே கிடந்தான். செய்தியறிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் அங்கே கூடிவிட்டனர். வீட்டின் அழுகுரல் தெரு முழுவதும் கேட்டது.

ஆசிரியர் அந்த வீட்டை அடைந்தார் அவர்களை பார்த்துச் சொன்னார்:

“ இவருக்குப் பதிலாக உங்களில் யாராவது ஒருவர் உயிரைத் தர முன்வந்தால் போதும், இப்போது இவரை உயிர்ப்பிக்க எனது யோகா சக்தியால் முடியும்.”

அதைக் கேட்டு ஒவ்வொருவராகப் பின்வாங்கினார்கள். தாங்கள் வாழ வேண்டியதன் அவசியம் மற்றும் கடமைகள் பற்றி ஒவ்வொருவரும் பலவிதக் காரணங்களைக் கூறி அவருக்கு விளக்கினார்கள்.

கடைசியில் அவரின் மனைவி உரத்த குரலில் சொன்னாள்:

” அவருக்கு பதில் யாரும் சாக வேண்டாம். அவர் இல்லாமலேயே நாங்கள் காலத்தைக் கழிப்போம்.”

யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும் காலம் நின்றுவிடுவதில்லை என்கிறது இந்த ஜென் தத்துவ சிறுகதை.

1 comment: