Thursday, February 28, 2013

பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு யார் காரணம்?


முகநூலில் இந்துத்துவ சிந்தனை கொண்ட நண்பர்கள் எங்கள் மீது பல அவதூறுகளை சொன்னார் பாகிஸ்தான் பிரிவினைக்கு இங்குள்ள முஸ்லிம்கள் காரணம் என்கிற வாதத்தை முன் வைத்தார் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சரியான செய்தியை அனைவருக்கும் அறிய வைத்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக இந்த பதிவு.
இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்..
கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19ஆம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து – முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும்
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர். அதற்கு இரு வழியினைக் கடைப்பிடித்தனர்.
 1) இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்ப்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளைத் திரித்துக் கூறுதல்
2) பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும், பொறாமையையும், குரோதத்தையும் ஏற்ப்படுத்துதல்.
பிரீட்டிஷாரின் சதி
ஒரிசாவின் முன்னாள் ஆளுநரும், இந்நாள் ராஜ்யசபை உறுப்பினருமான பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படித் திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும் பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார் :
பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும். எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளர் “வுட்” எழுதியக் கடிதத்தில்,
“ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்திமூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,
“மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பெருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்ப்படுத்தித் தரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்” என எழுதியுள்ளார்.
கர்ஸான் பிரபுவுக்கு ஜார்ஜ் பிரான்ஸிஸ் ஹாமில்டன் பின்கண்டவாறு எழுதியுள்ளார் :
“படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துள்ள இருக் கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப்புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்.”
இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திரித்து எழுதப்பட்டன. மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பதுப் போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.
பொருளாதாரத் தாக்குதல் :
இரண்டவதாக, பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை ஏற்ப்படுத்த முனைந்தனர். வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்களாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன. டாக்டர். டபிள்யூ. டபிள்யூ .டபிள்யூ. ஹண்டர் பின்வறுமாறு எழுதுகிறார் :
“நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவான்தார்களாக மாற்றுவதே. அன்று வரை முக்கிய பதவிகளில்  இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்தி விட்டது. முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களை எல்லாம் இந்த இந்து ஏவலாளர்கள் சேகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.”
(Quoted The Meaning of Pakistan By F,K. Khan Durrani)
நிதி நிர்வாக விஷயங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இரானுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர்.
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பின் என்ற பத்திரிக்கை 1867ஆம் ஆண்டு ஜுலை 14 ஆம் தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவல நிலையை வெளிப்படுத்தும்,
“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாரையும் ஒரே விதமாக பாவிக்கக் கடமைப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்கு தங்களின் கெஜட்டுக்களிலிருந்து முஸ்லிம்களை பகிழரங்கமாக நீக்கி விட்டிருக்கிறது. சமீபத்தில் சுந்தர்பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாகின. இதைப் பற்றி கமிஷ்னர், அரசாங்க கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரப்பட மாட்டாதென அறிவித்திருந்தார். முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கிணித்தே வைத்திருந்தது. இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்குள் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”
 மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்ட சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும் முஸ்லிம்களை விட தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் மனோ பாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.
சிப்பாய் கலகத்திற்குப் பின்
இந்நிலையில், 1857 ஆம் வருடத்தில் பசுமாட்டின் கொழும்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய் கலகம் துவக்கப்பட்டது. அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்துக் கொண்டனர். அக்கலம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது. இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்த்து ஆயுதத் தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுத்தனர். இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்களின் மீது விழுந்தது.
சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்டனர். ஸையித் அஹ்மது கான், 1887 ஆம் ஆண்டு, காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பக்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில்,
“சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது? இந்துக்கள் அதனை ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுபட்டனர். இறுதியில் இந்துக்கள், கங்கையில் மூழ்கித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகிவிட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசிந்து நாசமடைந்தன” என குறிப்பிட்டுள்ளார்.     (பாகிஸ்தான் விளக்கம் : By எப். கே. துர்ரானி)
சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்து தீவிரவாதிகளின் போக்கு :
1867-ல் காசியிலுள்ள இந்துத் தலைவர்கள் உருது மொழிக் கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1875-ல் “இந்தியா இந்துக்களுக்கே” என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்யசமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும் கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.
 1890-ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்” எனக் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர், முஸ்லிம்கள் குர்பானிக் கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.
 1882-ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ஆனந்த மடம்’ எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார். அதில் தான் வந்தேமாதரம் என்ற கீதம் வருகிறது. அதில் இந்தியாவை “காளி” என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு, அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்லுகிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.
இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒருவகையான பயஉணர்ச்சியை ஏற்ப்படுத்தின. அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியது.
காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும்
இந்நிலையில், 1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது. அதன் முன்னோடித் தலைவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே, அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆங்கிலேயர்கள் தூவிய வேற்றுமை விஷ வித்துக்களுக்கு பலியான இந்து மதத் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்கு பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை  நடத்த விரும்பினர். விளைவு? 1906ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் சர். ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.
முஸ்லிம் லீக் ஏன் தோற்றுவிக்கப்பட்டது? என்பதன் காரணத்தை R.P. Dutt இப்படிக் குறிப்பிடுகிறார்:
“தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படையில் நடத்த விரும்பினர். இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர். எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து விடாமல் இருக்க முயற்ச்சித்தனர். அதன் விளைவே 1906 முஸ்லீம் லீக் தோன்றியது.”
(Quoted in R. At Desai’s Social Background of Indian Nationalism)
 Most members of the congress made a serious error refusing to admit the exitence and validity of muslim nationalism.
முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும். நிலைப்பாட்டையும் மறுத்ததின் மூலம் பெறும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமானத் தவறினை செய்தனர்.
    (A Short History of india and pakistan by T. Walter wall Bank) (U.S.A.) 1965.
முஸ்லிம் லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும், லீக்கிலும் இருந்தனர். மேளலானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.
பிரிவினை பிரச்சாரம் யார் துவக்கியது?
இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்கும் இடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.
இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.
 இந்நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள்; அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாக போடப்பட்டது.
“முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில் தான் முதன்முதலில் உதித்தது” என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்க செயலாளராக இருந்துவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால், “ரேடியன்ஸ்” வார இதழில் (13-6-87) ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இன்று R.S.S போற்றிப் புகழும் V.D சாவர்க்கார், இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக R.N. அகர்வால் தனது the national movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
குர்தகி மட சங்கராச்சாரியார், “இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே. அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டும். என்று முஸ்லிம்களை எச்சரித்தனர்.
அகில இந்திய சிவில் சர்வீசில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu – Muslim state is sheer nonsense “இந்து – முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது ஒரு முட்டாள்தனம்” என உரத்துச் சொன்னார்.
1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தரைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சி தரல். அதன் முக்கியக் குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே; வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை. என்பதே இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின. இஸ்லாத்தையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இழிவுப் படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. 1924-ல் லாஹுரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா) என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இஸ்லாமியர்களைப் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக் குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் நிலை
இவ்விதம் இந்துமதத் தலைவர்களில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917ல் இருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்.?
இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார். அதுவரை அவர் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார். The ambassador of Hindu-Muslim Unity” என்று சரோஜினி நாயுடுவால் பரப்பப்பட்டவர், 1933-ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை பற்றிக் குறிப்பிட்ட பொழுது An Impossible Dream’ நடைபெற இயலா கனவு என்றார் ஜின்னா.
 1906 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக் 1940 ம் ஆண்டு வரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை, 1945, 1946-ல் தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.
ஏன் கேட்டார் தனி நாடு ?
தனிநாடுக் கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை  ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட் தனது Recollection and Reflections” என்ற நூலில், Congress parentage of partitio (பக் 414) என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்.
“பாகிஸ்தான் இயக்கத்திற்கு முலாதாரம் காங்கிரஸ் தான். அது 1935 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துக் கொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்ப்படுத்தியது. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை” என்கிறார்.
வட்டமேஜை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மை பிரதிகளையும் சேர்த்துக் கொள்வதென ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது, ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில் லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆணாலே தவிர மந்திரி பதவி இல்லை. என காங்கிரஸ் கூறி விட்டது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதனைப் பற்றி டாக்டர். அம்பேத்கார் குறிப்பிடும் போது “காங்கிரஸ் அனுசரித்த போக்க விதிக்கு நேர்மாறானது. நாட்டின் இதரக் கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறைக் கையாளப்பட்டது. ஒரு ஏகாதிபத்திய யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவச் செய்யப்படும் இம்முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம். ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்” எனக் கண்டித்துக் கூறுகிறார். (Quoted in a Short History of India and Pakistan).
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கலவி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப் பற்றியோ, கலீபாக்களைப் பற்றியோ மற்றும் முஸ்லிம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம் ஒரே அடியாக அழிந்துவிடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர். ( Sir Regined Coupland. The Indian problem.)
இவ்வாறு காங்கிரஸ் நடந்துக் கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயஆட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொருப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இளைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940-ல் ஆதரித்தார். எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.
நேருவின் பேட்டியால் நிலை மாறியது :
ஒன்றுப்பட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946-ஆம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்ட கேபினேட் தூதுக் குழுவின் முடிவினை ஜுன் மாதம் 6-ம் தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின் படி ஏற்றுக் கொண்டது. 1940-ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையைக் கைவிட தயாரானது. ஆனால் ஜுலை 10ம் தேதி நேரு அவர்கள், கேபினெட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு அதிகாரம் உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை. தனிநாடுதான் தீர்வு என முடிவாக ஜின்னா கூறி விட்டார்.
“நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. என மெளலானா அபுல்கலாம் ஆஜாத் தனது India wins freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மேற்க்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம் லீகும், முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ்நிலைத் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.
R.S.S-யை நோக்கி ஒரு கேள்வி?
இன்று இந்தியாவைத் துண்டாடிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S அன்று என்ன செய்தது? இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே; பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினார்களே; பிரிக்கவேக் கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய் படேல் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தாரே; இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S என்ன செய்தது? இன்று பாரதமாதாவை துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா? இல்லையே ஏன்?
முஸ்லிம் லீக்கை, ஜின்னாசாஹிபை. காயிதேமில்லத்தை, முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினை வாதிகள் எனச் சொல்வது இல்லையே ஏன்?
இந்தியா பிளவுப்பட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டி விட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக் கொண்டனர்; விரும்பினர் R.S.S காரர்கள். ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய மக்களை இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை. இந்நாட்டிலேயே பிறந்து இந்நாட்டிலேயே வளர்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படிப் போவார்கள்? அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அதனால் ஏற்ப்பட்ட குரோத உணர்வே இன்றைய R.S.S காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.
சற்று சிந்தியுங்கள்!
மேற்க்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித் தொகுப்புகளிலிருந்து நாம் என்னப் புரிகிறோம்?
* பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் எதுவும் நடக்கவில்லை.
* இந்து – முஸ்லிம் கருத்து வேற்றுமையையும் குரோதமும் பிரிட்டிஷாரால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை.
* முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ, திட்டமிடவோ இல்லை.
* இந்து தீவிரவாதிகளும் அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.
எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்ப்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுவுமில்லை. மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புகிறோர் H.M. Sreevai partition of India : legend and Reality என்ற நூலையும், The Dialogue Between Hindus and Muslim என்ற நூலையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.  
நன்றி: கணியூர் நாஜி நீடுரி அவர்கள்
நன்றி: http://annajaath.com/?p=5468

Tuesday, February 26, 2013

எண்ணெய்: தண்ணீரில் கலக்காது ஆனால் அழிக்கும்.

‘தங்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியாதவர்கள் அதே தப்பையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்’ என்று ஓர் ஆச்சரியகரமான பொன் மொழி இருக்கிறது. கற்றுக்கொள்ளத் தவறியவர்கள்/ மறந்தவர்கள் என்றெல்லாம் சொல்லாமல் ‘முடியாதவர்கள்’ என்ற வார்த்தையைப் போட்டதில்தான் பொடி வைத்திருக்கிறது என்று ஒரு பெரியவர் சொன்னார். ஒரு சமூகமே இப்படி ‘முடியாமல்’ போகும்போதுதான், ஏதாவது விஷ வாயு கசிந்து வெள்ளி விழாவெல்லாம் கொண்டாடிய பிறகும் ‘அந்த ஆளைப் பிடித்து ஜெயிலில் போட்டிருக்க வேண்டுமா, வேண்டாமா’ என்று இன்னும் விவாதித்துக் கொண்டிருப்போம்.

கடந்த வருடங்களில் நாம் திரும்பச் செய்த தப்பு, மெக்ஸிகோ வளைகுடாவில் எண்ணெய்க் கசிவு. பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்த ‘ஆழ்கடல் தொடுவானம்’ என்ற துரப்பண மேடையில் வெடி விபத்து ஏற்பட்டு ஐயாயிரம் அடிக் கடலில் முழுகி விட்டது. 11 பேரைக் காணவில்லை. ஏதோ பைப் புட்டுக்கொண்டு, உள்ளிருந்து தள்ளும் மீத்தேன் வாயுவின் அழுத்தமும் சேர்ந்துகொண்டு, ஒரு நாளைக்கு 60,000 பாரல் எண்ணெய் கடலில் கலக்கிறது. (அடப் பாவிகளா, இங்கே நான் கடைசிச் சொட்டு வரை ஸ்கூட்டரை சாய்த்துச் சாய்த்து உதைத்துக் கொண்டிருக்கிறேனே!)

வளைகுடா கடற்கரையில் மெக்ஸிகோ தேசத்தின் அத்தனை சலவைக்காரிகளும் திரண்டு வந்தாலும் சுத்தம் செய்ய முடியாத எண்ணெய்க் கறை. எத்தனையோ உயிரினங்களின் வீடான சதுப்பு நிலங்கள் நாசம். கரையோர இரால் பண்ணைகள் சேதம். நண்டு நத்தைகள், சிப்பிகள் மரணம். எண்ணெயில் குளித்த பெலிக்கன் பறவைகள் கருகிப் போன போண்டா மாதிரி உட்கார்ந்திருக்கின்றன.
எனக்கென்னவோ இந்த விவகாரத்தில் உள்ள பொருளாதார, தொழில் நுட்ப, சுற்றுச்சூழல் கோணங்களை விட, சிந்திய எண்ணையைச் சுற்றி மனிதர்கள் எப்படியெல்லாம் நடனமாடினார்கள் என்பதுதான் சுவாரசியமாக இருக்கிறது. இதில் நாடு மொழிகளைக் கடந்த ஒரு அடிப்படை மனித இயல்பைப் பார்க்க முடிகிறது.
“என் கையில் அதிகாரம் இருந்தால் முதலில் அந்த ஆசாமிக்கு சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் மறு வேலை!” என்று பொருமினார் ஒபாமா. பிபியின் தலைவரான டோனி ஹேவார்டைப் பற்றித்தான் இந்த காமெண்ட். உடனே தங்கள் ஜாதிக்காரனை எப்படித் திட்டலாம் என்று பிரிட்டிஷ்காரர்களுக்கு சுருசுருவென்று கோபம் வந்துவிட்டது. “நாங்கள் பிரிட்டிஷ் கம்பெனி என்பதால்தானே இப்படி அனத்துகிறீர்கள்? உங்கள் ஊரில் உள்ள எக்ஸான், என்ரான், கார்பைட் எல்லாருடைய லட்சணமும் தெரியாதா?” என்று பத்திரிகைகள்தோறும் பச்சை மிளகாய்த் தலையங்கம்.
பிபி நிறுவனம் பாதுகாப்பில் சிக்கனம் பிடித்ததுதான் காரணம் என்று மற்ற போட்டிக் கம்பெனிகள் எல்லாம் அதைக் கண்டித்தன. பிறகு நிருபர்கள் தூண்டித் துருவியதில், எல்லோருமே ஒரே குட்டை மட்டைகள்தான் என்பது தெரிந்தது. உதாரணம் : எல்லா எண்ணைய்க் கம்பெனிகளுமே விபத்து நடந்தால் உடனே கூப்பிடுவதற்கென்று ஆழ்கடல் வல்லுநர் ஒருவருடைய போன் நம்பரை அச்சடித்து ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஒரே பிரச்னை, மேற்படி வல்லுநர் காலமாகி ஐந்து வருடம் ஆகிறது.
பிபியிலும் விபத்துக் காலங்களுக்காக ஒரு பாதுகாப்புக் கையேடு உண்டு. அதில், ஆயில் கொட்டிவிட்டால் உடனே வால்ரஸ் மிருகங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டிருக்கிறது. என்ன இது! மெக்ஸிகோ வளைகுடாவின் மண்டை காய்கிற வெயிலில் வால்ரஸாவது, பெங்குவினாவது ?.. ஏதோ துருவப் பிரதேசத்து எண்ணெய்க் கிணறின் பாதுகாப்புப் புத்தகத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வந்து அலமாரியில் வைத்திருக்கிறார்கள். அது படிக்கப்படவில்லை.
டோனி ஹேவார்ட் பதவி ஏற்ற புதிதில், “என்ன செலவானாலும் பரவாயில்லை; பாதுகாப்பை பலப்படுத்துவதுதான் என் முதல் வேலை” என்று உடைவாளின் மீது சபதம் எடுத்துக்கொண்டுதான் களத்தில் இறங்கினார். பிறகு பிபியின் பொருளாதாரப் பிரச்னைகளையும் தொழில் போட்டிகளையும் பார்த்தவுடன், செலவைக் குறைப்பதுதான் முதல் வேலை என்று கொள்கை மாறிவிட்டது. தொடர்ந்து சிறு சிறு விஷயங்களில் ஐந்தும் பத்துமாக சிக்கனம் பிடிக்கத் தொடங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகள் காற்றோடு போய், திரும்பத் திரும்பக் கிடைத்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, பிரச்னைகள் மூடி மறைக்கப்பட்டு, கடைசியில் ஒரு நாள் துரப்பண மேடையே எரிந்து ஐயாயிரம் அடிக் கடலில் மூழ்கியது.
முதலில் “இது ரொம்பச் சின்ன விபத்து. கவலையே வேண்டாம்” என்று சாதித்தார்கள். பிறகு கிணற்றிலிருந்து பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலத்தில் ராட்சச எண்ணை ஊற்று பீச்சி அடிக்க ஆரம்பித்தது. சேற்றையும் சிமெண்ட்டையும் கொட்டித் துளையை அடைக்கப் பார்த்தார்கள். பெரிய டப்பாவைக் கவிழ்த்து மூட முயற்சித்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு இரண்டு மாதமாக எண்ணெய் உற்சாகமாகக் கொப்பளிக்கிறது. இனி யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. “அமெரிக்க அரசாங்கம் அங்கே ஒரு அணு குண்டைப் போட்டால் கடலடிப் பாறைகள் உருகிக் கிணறு அடைத்துக் கொள்ளும்” என்று கூட ஒரு ஐடியா வந்தது. அடைத்துக் கொள்வதற்கு பதிலாக ஓட்டை இன்னும் பெரிசாகிவிட்டால் ?
பிரிட்டிஷ் பெட்ரோலியம் தன் இமேஜை வளர்த்துக் கொள்வதற்காகக் கடந்த பத்து வருடத்தில் செலவழித்த தொகை அதிகம். தான்தான் சுற்றுச்சூழல் பாதுகாவலன் என்று அறிவித்துக்கொண்டு, கம்பெனி லோகோவையே பச்சை நிறத்தில் ராஜராஜேஸ்வரி சக்கரம் மாதிரி மாற்றிக்கொண்டது. சொற்ப அளவில் சோலார் செல்கள் நிறுவிவிட்டு, பசுமைப் புரட்சி செய்துவிட்டோம் என்று முழக்கியது. ‘கார்பன் கால் சுவடு’ என்ற சொற்றொடரைப் பிரபலப்படுத்தியதே பிபிதான்.
இந்த விளம்பரங்களின் பயனாக பிபிக்கு தங்க எஃபி உள்படப் பல பசுமை விருதுகளும், அதன் தலைவருக்கு மகாத்மா பட்டமும் கிடைத்தன. அந்த லாபி செலவையெல்லாம் பாதுகாப்புக்குச் செலவிட்டிருந்தால், இன்றைக்கு வளைகுடா கடற்கரை தன் இயல்பான மரகதப் பச்சையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்; இப்படி பிளாக் அண்ட் ஒயிட் படமாகியிருக்காது.
உத்தமர் ஒபாமாவின் இமேஜும் அடி பட்டு நசுங்கியிருக்கிறது. துரப்பண மேடைகளைக் கண்காணிக்க வேண்டியது MMS என்கிற கனி வள மேலாண்மைத் துறை. அதுவோ எண்ணெய் லாபிகளுக்குப் பணிந்து தன் மேற்பார்வைப் பொறுப்புகளையெல்லாம் சிறுகச் சிறுக எண்ணெய்க் கம்பனிகளிடமே விட்டுக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது !
இப்படித்தான், கட்ரினா புயல் வந்தபோதும் கவர்மெண்ட் அங்கே கண்ணில் தட்டுப்படவே இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் சாம்பார் சாதப் பொட்டலம் விற்பது முதல் அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுவிட்டு அரசாங்க இயந்திரத்தின் ஒவ்வொரு சக்கரத்தின் ஒவ்வொரு பல்லாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். சீக்கிரமே ஒரு நாள் இயந்திரம் கிறீச்சென்று நின்றுவிடப் போகிறது !
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்க பிபி சில கோடி டாலர் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் உதவித் தொகை வினியோகிப்பதையெல்லாம் அவுட் சோர்ஸிங்கில் விட்டுவிட்டு “அதோ, அந்த ஆளைக் கேட்டுக்குங்க” என்று கை காட்டிவிட்டுக் கம்பி நீட்டிவிட்டார்கள். அந்த ஆளைப் பார்த்தால், அமுக்கராக் கிழங்கு மாதிரி இருக்கிறார்.
எத்தனை உறிஞ்சினாலும் தீராத நம் எண்ணெய் தாகம்தான் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படை. இயற்கையை நாங்கள் நன்றாக அறிந்து கொண்டுவிட்டோம் என்ற ஆணவம். இனி அதை இஷ்டத்துக்கு வளைத்து உபயோகித்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற பேராசை. ஆனால் இயற்கையோ, நம்முடைய சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கும் ஜியாலஜி மாடல்களுக்கும் சிக்காமல் சிரிக்கிறது.
நிர்வாகவியலில் டிஸாஸ்டர் ரெக்கவரி என்று ஒரு பாடம் உண்டு. அதில் படித்ததையும் விண்வெளி ஓடம் வெடித்ததையும் மங்களூர் விமானம் விழுந்ததையும் மெக்ஸிகோ எண்ணெய் கசிந்ததையும் கற்பனையாக நம் லோக்கல் சூழ்நிலையில் பொருத்திப் பார்த்தால் சில ஜோசியங்கள் சொல்லலாம் :
நாளைக்கே நம் கல்பாக்கம்,கூடங்குளம் போன்ற ஒரு அணு உலையில் ஒரு விபத்து - கடவுள் தவிர்க்கட்டும் - நடந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த சில வருடங்களுக்கு செய்தியில் என்னென்ன வெளி வரும் ? ஊகிப்பது எளிது :
1) சரியாக இதே காரணத்தால், இதே போன்ற விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரிட்டையர் ஆன தாத்தா கமிட்டி ஒன்று பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிக்கை கொடுத்திருக்கும். அந்த அறிக்கைக் காகிதம் பீச்சில் வேர்க் கடலைக் கூம்புகள் தயாரிக்கப் போயிருக்கும்.
2) விபத்து நடந்த சமயம், பொறுப்பானவர்கள் அனைவரும் லீவில் போயிருப்பார்கள். அல்லது அலுவலக ஜீப்பை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் டவுனுக்கு சினிமா பார்க்கப் போயிருப்பார்கள்.
3) கதிரியக்க அலாரம் சர்க்யூட்டில் ஒரு ஐசி சில்லு புகைந்து போய் வேலை செய்யவில்லை என்று தெரிய வரும். உக்ரைனிலிருந்துதான் ஸ்பேர் பார்ட் வரவேண்டும். ஆறு மாதம் முன்பே இண்டெண்ட் போட்டாகிவிட்டது. உக்ரைனிலோ, உள்நாட்டுக் கலவரம்.
4) அவசரத்துக்கு சில கெய்கர் கவுண்ட்டர்களாவது வாங்கி வைக்கலாம் என்றால், பட்ஜெட் இல்லை. கிடைத்த சொற்பத் தொகையும் ஒரு ரியாக்டர் திறப்பு விழாவுக்காக செலவாகிவிட்டது. பிரதமரே வந்து ரிப்பன் வெட்டினார்.
5) அந்த நேரம் பார்த்து, தீயணைப்பு நிலையத்தின் டெலிபோன் வேலை செய்யவில்லை.(ஆமாம். ரோடு தோண்டுகிறார்கள்). மூன்று தீயணைப்பு வண்டிகளில் ஒன்று ரிப்பேர், மற்றொன்றில் டீசல் இல்லை.
6) ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர்தான். மற்ற இடங்கள் அனைத்தும் நிரப்பப்படாமல் 2003-லிருந்து பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சைக்கோ, என்னத்திற்கோ காத்திருக்கின்றன. கோர்ட்டில் கேஸ் இருக்கும்போது யார்தான் என்ன செய்ய முடியும் ?
7) விபத்து நடந்து முதல் சில நாட்கள் வரை, மீட்புப் பணிகளுக்கு யார் இன் சார்ஜ் என்பதே தெரியாமல் குழப்பம் நிலவும். ஒன்று, தலைக்குத் தலை நாட்டாமை செய்வார்கள். அல்லது ‘திகைப் பூண்டை மிதித்தது போல்’ செயலற்று நிற்பார்கள்.
8 ) லோக்கல் போலீஸ், மத்திய போலீஸ், சிபிஐ, இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஆசாமிகள், தீயணைப்புத் துறை, மாநில அரசு, மத்திய உள் துறை, வெளித் துறை, பாதுகாப்பு, அணு சக்தி, சட்ட அமைச்சகம், சப் காண்ட்ராக்டர்கள் எல்லோருமே புகுந்து கண்ணைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுழற்றுவார்கள். கடைசியில் தப்பு யார் பேரில் என்ற கேள்வி வரும்போது அத்தனை பேரும் வட்டமாகச் சுற்றி நின்று, தத்தமக்கு இடது பக்கம் இருப்பவரை நோக்கி விரல் நீட்டுவார்கள்.
9) என்ன செய்தால் நிலைமையை உடனே கட்டுப்படுத்தலாம் என்பது, நிலையத்தில் வேலை செய்யும் சில அடி மட்டத்து டெக்னிஷியன்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். அவர்களுக்கு அதைச் சொல்வதற்குத்தான் வாய் இருக்காது, சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இருக்காது. பாம்பேயிலிருந்து ப்ளேன் பிடித்து வந்திருக்கும் பெருந் தலைகள் வெற்றுக் கருத்து சொல்லிக் கொண்டிருக்கும் சப்தத்தில் மற்ற எல்லாம் அடிபட்டுவிடும்.
10) பாதிக்கப்பட்டவர்களின் கொள்ளுப் பேரன்கள் நம்பிக்கை இழக்காமல் வாய்தாவுக்கு வாய்தா கோர்ட்டுக்குப் போய் வருவார்கள்.
அதற்கு அடுத்த விபத்திலும் மேற்கண்டவை அனைத்தும் சிறு சிறு மாற்றங்களுடன் அப்படியே நடக்கும்.
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)
http://www.boston.com/bigpicture/2010/06/oil_in_the_gulf_two_months_lat.html#sthash.U4OAB85V.dpuf


திருமாவளவன் அவர்களின் பார்வையில் நபிகளார்

இஸ்லாம் உலகின் தலைசிறந்த ஜனநாயகத் தத்துவம். ஒவ்வொரு மனிதனும் ஆணவம் இல்லாமல் அகந்தை இல்லாமல் மனிதநேயத்தோடு வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை நெறி.

1400  ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் தோன்றிய மகத்தான மானுடத்தின் அற்புதம் நபிகள் நாயகம். மனிதன் எப்படி பக்குவப்பட வேண்டும், ஒழுங்கு பட வேண்டும், அமைதியாக வாழ வேண்டும் என்பது பற்றி எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் தோன்றி பரப்புரை செய்து இருக்கிறார்கள். கெளதம புத்தர், இயேசு பெருமான் போன்ற மகான்களின் வரிசையில் நபிகள் நாயகம் மகத்தான ஒரு மனிதர்.

ஆனால் அந்த மகான்களிடமிருந்து இவர் மாறுபடுகிறார் அவர்கள் மக்களுக்கு வாழ்க்கை நெறியை வழங்கினார்கள். வழிகாட்டினார்கள். என்றாலும் அந்தத் தத்துவத்தில் ஒரு ஜனநாயகப்பூர்வமான, காலம் காலமாகத் தொடர்ந்து வலுவாக மக்களை வழிநடத்திச் செல்லக் கூடிய சிறந்த ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறைகளை வழிமுறைகளை, வகுத்தளித்தவர் நமது நபிகள் நாயகம்.

உருவ வழிபாடு, அருவ வழிபாடு என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இறைவழிபாட்டில் நடைமுறையில் இருக்கிற முறைகள். அருப வழிபாடு என்பது பல மதங்களால் பின்பற்றக் கூடியது என்றாலும்கூட இஸ்லாத்தில் அது மிகவும் இறுக்கமாகவும் வலுவாகவும் பின்பற்றப்படுகிறது. உருவம் கூடாது என்று தனிமனிதனின் ஆணவத்தை, அகந்தையை அழிப்பதற்கான உத்தியாகவே நபிகள் நாயகம் கையாண்டிருக்கிறார். இறைவனுக்கு உருவம் கொடுப்பது, தனிமனித துதிக்கு வழிகாட்டுவதாக அமைந்து விடுகிறது. எந்த இறைவனைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு தூதர் வருகிறாரோ அந்தத் தூதருக்கே உருவ வழிபாட்டைச் செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்.

இயேசு பெருமானுக்கு உருவம் கெளதம புத்தருக்கு உருவம். இவர்கள் இறைவனின் தூதர்களாக மக்களால் அறியப்பட்டாலும் இறைவனுக்கு உருவம் உண்டு என்று நம்புகிற காரணத்தால் இந்தத் தூதர்களுக்கும் உருவம் இருக்கும். அதன் மூலம் அதைப் பின்பற்றக் கூடிய அல்லது மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய பரப்பக் கூடிய பின்னால் வருகிற மதகுருமார்கள், மடாதிபதிகள் தங்களை முன்னிறுத்தி தங்களுக்கான உருவத்தை உயர்த்திப் பிடித்து மக்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டு வருகிற நிலையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

மதம் என்பது மூலதனமாக வளர்ச்சி பெற்று அந்த மதத்தை வழிநடத்தக் கூடிய மதகுருமார்கள், மடாதிபதிகள் தாங்களே இறைவனின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரு நிலை பிற்காலத்தில் வளர்ந்து விடுகிறது. இதைக் காலச்சுவடுகளில் நம்மால் காண முடிகிறது.

ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய நபிகள் நாயகம் அவர்க:ள் இறைவனுக்கு உருவம் இல்லை; உருவ வழிபாடு கூடாது என்று மக்களுக்கு வழிகாட்டியதோடு தம்முடைய உருவத்தை எந்தச் சூழ்நிலையிலும் முன்னிறுத்த விரும்பவில்லை. தம்முடைய உருவப் படத்தையோ சிலைகளையோ மக்களுக்கு ஒரு வடிவமாக அடையாளமாக உயர்த்திப் பிடிப்பது தம்மை இறைவனால் அனுப்பப்பட்ட ஆளுமைமிக்க, என்னை வழிபட்டால் அது கடவுளை வழிபட்டது போல் ஆகும் என்கிற வகையில் எப்போதும் மக்களைத் தவறாக வழிநடத்தவில்லை.

சாதாரணமாக ஒவ்வொரு மனிதனும் தன்னை முன்னிறுத்துவது இயற்கை. தன்னுடைய உருவத்தையும் வடிவத்தையும் திரும்பத் திரும்ப மக்களின் கண் முன்னால் நிறுத்தி அவர்களின் நெஞ்சத்தில் ஆழப் பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். தலைவர்களாக இருப்பவர்கள் அது அரசியல் தளமாக இருந்தாலும் மதத் தளமாக இருந்தாலும் அந்தத் தளங்களில் பணியாற்றக் கூடிய ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதை நாம் பார்க்கிறோம். 100க்கு 99 %  அப்படித்தான்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் தம்மை எந்தச் சூழலிலும் எந்த வகையிலும் அடையாளப்படுத்துவதற்கு, முன்னிறுத்துவதற்கு அவர் விரும்பவில்லை என்பது அடிப்படை  கொள்கையிலிருந்து வழிதவறி விடக் கூடாது, திசை மாறக் கூடாது என்பதுதான். தமக்குப் பின்னால் வருபவர்கள் உருவ வழிபாட்டை உயர்த்திப் பிடித்தால் தமது வழிபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அடிப்படை நோக்கத்தைச் சிதைத்து விடக் கூடும். ஆகவே இறைவனுக்கு  உருவம் இல்லை; வடிவம் இல்லை என்கிற அந்த கோட்பாட்டை மிக அழுத்தமாகவும் வலுவாகவும் மக்களுக்குச் சொன்னவர் நபிகள் நாயகம்.

இதில் மிகச் சிறந்த ஜனநாயகத் தத்துவத்தை மானுடத்தின் அற்புதத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த 1400 வருடங்களில் பலரையும் மறந்தும் நாயகத்தின் திருவுருவப் படத்தையோ திருவுருவச் சிலையையோ உலகத்தில் எந்த நாட்டிலும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு எத்தனிக்கவில்லை; முயலவில்லை என்பது அவருடைய சிறந்த ஆளுமையை. அவருடைய தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது. அந்த அளவுக்கு அதில் அவர் ஓர் உறுதியான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறார்.

ஒரு மனிதனை வணங்குவதின் மூலம் அகந்தை உள்ளவனாக ஆணவம் மிக்கவனாக மாறுகிறான். அதனால் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. அவன் அரசனாக இருந்தாலும் சரி; தற்போதைய காலத்தில் இருக்கிற முதலமைச்சர், பிரதமராக இருந்தாலும் சரி, தனிமனிதர் வழிபாடு என்பது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அடிமைத்தனத்தை வளர்ப்பதற்கும் வழி வகுக்கக் கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. ஆகவே  ஆண்டாம் அடிமை யாரும் இல்லை என்கிற ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டுமானால் தனிமனித வழிபாடு என்பது கூடாது. எனவே மனிதனை வழிபடுவது என்பது இந்த மானுடத்தை சிதைக்கும் நிலையை உருவாக்கி விடுகிறது. மன்னர்கள் எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இறைவன் என்றால் கடவுளையும் குறிக்கும் அரசனையும் குறிக்கும். கோயில் என்றால் கடவுள் இருக்கிற இடத்தையும் குறிக்கும். அரசன் இருக்கிற இடத்தையும் குறிக்கும். ஆகவே மன்னம் வேறு அல்ல; இறைவன் வேறு அல்ல என்று எண்ணக் கூடிய அளவுக்குத் தனிமனித ஆதிக்கம் இந்த மண்ணுலகில் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது ஆகவே ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வழிபட விரும்புகிறான் அல்லது வழிபட வைக்கப்படுகின்றான் என்ற நிலை வருகின்றபோது அங்கு இயல்பாகவே அடிமைத்தனம் வந்து விடுகிறது.

ஆகவே தான் மனிதனை வணங்கக் கூடாது இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அந்த இறைவனும் உருவமற்றவன்; அவனுக்கு எந்த வடிவமும் இல்லை என்ற கோட்பாட்டை இந்த உலகுக்கு வழங்கி, அதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லாமல், தளர்வுக்கும் இடமில்லாமல் திசை மாறுவதற்கோ வழி தவறுவதற்கோ வாய்ப்பு இல்லாமல் ஓர் இறுக்கமான கோட்பாட்டை இந்த உலகிற்கு வழங்கியவர்தான் நமது நாயகம். அவர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். 

அவருடைய வாழ்க்கை முறை என்பது மிகச் சிறந்த ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை. எளியவர்களை மதிப்பது, எளியவனாகவே வாழ்வது, கடைசி மனிதர்களோடு உறவாடுவது, கடைசி மனிதர்களின் விடுதலைக்காக உழைப்பது, இவற்றுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி தலைவராக நபிகள் நாயகம் விளங்கி இருக்கிறார்.

(இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்)

நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Jan_13/index.htm )

Sunday, February 24, 2013

சவூதி சலூன் கடை.சிறுகதை (உண்மை கதை)


தண்ணீயை தலையிலே சருக்கு... சருக்குனு அடிச்சுகிட்டே பாய் சோட்ட,தோடா பாடா (சிறுசா,இல்ல கொஞ்சம் பெருசா) வெட்டவா என்று கேட்டுக் கொண்டே சீவ ஆரம்பித்தார்.  நார்மல் பாய் என்றேன் (நமக்குதான் ஹிந்தி தெரியாதே).  சொன்னவுடன் வெட்ட ஆரம்பித்தார் பாகிஸ்தானி. இந்த கடைக்கு மொத தடவையாக வர்றேன். வழக்கமாக வெட்டுவது மலையாளியிடம். 8 வருட பழக்கம். அங்கே போயி உக்கார்ந்தா ஒடனே  எந்த கேள்வியும் கேட்காமல் வெட்ட ஆரம்பித்து விடுவார். அவருக்கு தெரியும் எப்படி வெட்டனும் என்று....

கூட்டாளிகளை பார்க்க வந்த எடத்துலே அவிய்ங்க எல்லாரும் வெளியே ஒரு வேலையா போயிட்டாய்ங்க. சும்மா ரூமில் தனியாக இருக்க ஒரு மாதிரியாக  இருந்துச்சு. (நெட் இருந்தால் எவனும் தேவையில்லை இந்த காலத்துலே! நெட் வசதியில்லாமா எப்படித்தான் இவிய்ங்க இருக்காய்ங்களோ??) சரி கிடைத்த நேரத்தில் வெளியே போயி முடி வெட்டிட்டு வந்துடலாம் என்று கிளம்பி வந்து இங்கே தலையை கொடுத்துகிட்டு ஒக்காந்து இருந்தேன்.


உள்ளே நுழையும் போதே கட ரொம்ப பந்தவாக இருந்தது. கொஞ்சம் பெரிய கடை, அதிக ஆடம்பரம்! முடிவெட்ட காத்துகிட்டு இருக்கும் எடத்துல பெரிய LED Ssmsung 42 இன்ச் டிவியை பொருத்தி வச்சு இருந்தாய்ங்க. அதில் Fair & Lovely வெளம்பரம் ஓடிகிட்டு இருந்துச்சு செவப்பா  இருக்குற அரபி பொம்பளைங்க இன்னும் கொஞ்சம் செவப்பா ஆகுவது எப்படி என்று ஏமாத்திக்கிட்டு இருந்தாய்ங்க (உண்மையிலேயே சாதி,மத,மொழி வட்டார எல்லைகள் இல்லாதவய்ங்க, இந்த பன்னாட்டு கம்பெனி காரய்ங்கதேன் ). முழு மனிதனையும் அப்படியே முழுங்கி கொள்ளும் அகலமான சோபா வேற! முடிவெட்டுற தொழிலாளிகள் வெள்ள கோட்டு யூனிபார்மில் இருந்தார்கள்.  காசு கொஞ்சம் கூடத்தான் கேப்பாய்ங்க. எப்படியும் 25 ரியால் கேப்பாய்ங்க. சரி பரவாயில்லை என்று முடிவெடுத்து தான் உள்ளே போனேன்.

உள்ளே நுழையும் போதே. "எந்தா ஹைதரு! சுகமா?" என்று வரவேற்கிற கேசவன் (மலையாளியின்  பெயர்) குரல் மிஸ்ஸிங். அவர் சொந்தமாக சின்ன கடை வைத்திருப்பவர்.  இவர்கள் வேலையாட்கள்! "இப்பதான் கொஞ்சம் பிரியாக  இருந்தோம்! அதுக்குள்ளையும் ஆள் வந்துருச்சு" என்கிற கோபமாக கூட இருக்கலாம்.  இயந்திரதனமாக பைட்டோ பாய் (உட்காருங்க) என்றார். மிக நிதானமாக வெட்ட ஆரம்பித்தார்.

நம்ம கேசவன் அப்படியில்லை. வெட்டும் போதே கண்ணாடி கதவை ஊடுறுவி வெளியே எட்டிப் பார்த்துக் கொள்வார். கூட்டமாக இருக்கு என முடி வெட்ட வருகிறவர்கள் திரும்பி போய் விடக் கூடாது என்பதற்காக!  வெட்டிக் கொண்டிருக்கும் போது ஆள் உள்நுழைந்து விட்டால் இன்னும் வேகம் கூடிவிடும். வெளிநாட்டு சக தொழிலாளி; சொந்த கட; வாடகை அதிகம்; முடிந்த வரை சம்பாரிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் நானும் புரிந்துக் கொள்வதால் அவரின் திடீர் வேகம் எனக்கு எரிச்சலை தராது. அப்புறம் முடிவெட்டி, தாடி மீசையை லேசா சரிபண்ணுவதற்கு எல்லாம் சேர்த்து இவர் 10 ரியால் தான் வாங்குவார்.

பாகிஸ்தானி நிதானமாக முடிவெட்டிக் கொண்டிருக்கும் போது என் மொபைல் அடித்தது. ஆமா முடிவெட்டும் போது தான் போன் அடிப்பாய்ங்க என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு சரி அப்புறம் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே இன்னொரு நியாபகமும் அப்பதான் வந்துச்சு, "போன எடுத்து வந்தியே மணிப்பர்சு காசு எடுத்துட்டு வந்தியா??" . துணியை விளக்கி கையை விட்டு பாக்கெட்டில் தடவி பார்த்தா மணிப்பர்ஸ் இல்லை!  "போச்சுடா... புது கட! காசு கொடுக்காமா எப்படி போவ??"  வலது புற பாக்கேட்டை தடவிப் பார்த்தால் காசு இருக்கு!  எதர்த்தமாக எப்பவோ வைத்திருந்த 10 ரியால்.

"ஆஹா 10 ரியால் பத்தாதே! எப்பூடி சமாளிக்க போறேன்? ஒருவேள இவிய்ங்களும் 10 ரியால் தான் வாங்குவாய்ங்களோ? இருக்காது!  கட இவ்வளவு டெக்ரேஷனாக இருக்கு! எப்படியும் 25,30 ரியால் கேப்பாய்ங்க.. என்ன செய்ய போறேன்?" .  பக்கத்தில் ஒருவர் முடி வெட்டி முடிச்சு பணம் எடுத்துக் கொடுத்தார். அதை தலையை திருப்பிப் பார்க்காமல் ஓரக்கண்ணால் பார்த்தேன். சரியாக தெரியவில்லை. அவரு பாட்டுக்கு அஞ்சு ஆறு தாளை கொடுப்பது போல் இருந்தது. "ஒரு ரியாலாக 10 ரியால் கொடுத்து இருப்பாரோ, அஞ்சு ரியாலாக அஞ்சு தாள் கொடுத்து இருப்பாரோ?" அதுவே பெரிய சந்தேகம் ஆகிவிட்டது.

போன் அடித்து நண்பர்களை காசு கொண்டுகிட்டு வரச் சொல்லுவோமா?? அவிங்க இப்பதானே போனாய்ங்க. மார்க்கெட் வேலையை முடித்து வர  இரண்டு மணி நேரம் ஆகுமே! அதுவரை இங்கேயே ஒக்காந்து இருப்பமா? அசிங்கமாக ஒரு மாதிரியாக இருக்குமே. காசு இல்லை என்று எப்படி சொல்வது? சுத்தி ஆட்கள் வேற இருக்காய்ங்க. சரி...  பத்து ரியாலை கொடுத்து விட்டு மொதுவாக மேற்கொண்டு காசு இல்லை நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்து காசு கொடுத்து விட்டு போவது என்று முடிவேடுத்துக் கொண்டேன். ஒருவேள பத்து ரியால் தான் இவர்களும் வாங்குவார்கள் என்றால் கவுரமாக தப்பித்து விடலாம்.

முடிவெட்டி முடித்த பாகிஸ்தானி தாடியை சரிபண்ண வேண்டுமா என்றார் முடிவெட்டுனதுக்கே சரியான காசு இல்லை, இதுலே தாடி வேற சரி பண்ணினால் எவ்வளவு வருமோ என்று நொடியில் நினைத்துக் கொண்டு,  வேண்டாம் என்று மறுத்தேன்.

கீழே இறங்கி ஒருமுறை சரியாக வெட்டி இருக்கிறாரா என்று கண்ணாடியில் பார்த்து விட்டு 10 ரியாலை எடுத்து நீட்டினேன். மனதில் ஆயிரம் கூச்சத்தோடு கொடுத்துட்டு,  இதோட விட்டா  ஒடி போய் விடுவோம், மேற்கொண்டு கேட்டால் போன் பண்ணுவோம் என்று போனையும் ஒரு கையில் வைத்துக் கொண்டேன். வாங்கி கிட்டு ஒன்றும் சொல்லவில்லை. அம்மாடி பெரிய நிம்மதி!   சரி நைசா வாசலை நோக்கி வெளியே கிளம்ப ஆரம்பித்தேன்.  பாய், பாய் என்கிற பாகிஸ்தானியின் குரல் தடுத்து நிறுத்தியது!  போச்சா? சரி சமாளிப்போம் என்று திரும்பினேன். பாய் இங்க ஆட் (8) ரியால் தான். தாடி சரி பண்ணினால் தான் 10 ரியால்! 2 ரியாலை பிடி என்று கொடுத்தார். ரொம்ப நிதானமாக வெட்டினீங்க 2 ரியால் டிப்ஸ் என்று திருப்பிக் கொடுத்தேன்.

கண்ணாடி கதவுகளை திறந்து வெளியே வந்தேன் குளிர்ந்த காற்று காதோரத்தில் வருடிச் சென்றது. கடையை ஒருமுறை திரும்பி பார்த்தேன்.

சுத்தமான பெரிய கடை, நிதானமாக வெட்டக் கூடிய தொழிலாளி.  நம்ம கேசவன் கடையோடு ஒப்பிட்டு பார்த்தேன்.  இது எவ்வளவோ மேல்! இனி இங்கையே முடி வெட்ட வரலாமா?... ம்ஹும் வேண்டாம்!  கேசவன் கேரளாவிலிருந்து என்னை போலவே ஆயிரம் கனவுகளோடு இங்கு வந்து நம்பிக்கையோடு சொந்த கடை நடத்திக் கொண்டு இருக்கும் சக நண்பர். சோ வேகமாக பதறி பதறி வெட்டுகிற கேசவனிடம் தான் அடுத்தமுறை தலையை கொடுக்கணும் என்ற முடிவோடு அந்த இடத்திலிருந்து புறப்பட்டேன். 

Saturday, February 23, 2013

தீவிரவாதம் தீர்வை தருமா?

“முடிவு அல்லது நோக்கம் நல்லதாக இருக்கும் வரை அதை அடைவதற்கு நேர்மையானதோ, அதற்கு மாறானதோ, நீதியோ அநீதியோ எதுவானாலும் கையாளலாம்.” (மாக்கியாவல்லி (கி.பி.1469 - 1527இத்தாலி)

Ends Justify Means ‘ நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே’ என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப் படுகிறது.

‘நான் செய்வது தவறாக இருப்பினும் அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதட்சிணை வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்’ என்கிறார்கள்.

 ‘லாட்டரி தவறுதான். ஆனால் அரசுக்கு வருமானம் வருகிறதே! விழுந்தால் வீட்டுக்கு! இல்லையேல் நாட்டுக்கு! இதில் என்ன தவறு’ என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.

‘மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவது தவறா...? என்று மதுவை நியாயப்படுத்துகின்றனர் சிலர்.

மக்களை கொள்ளையடிப்பவர்கள் கூட, நாங்கள் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குத்தானே வழங்குகிறோம். ‘ வயிறு புடைத்தவன் தர மாட்டான். வயிறு பசித்தவன் விட மாட்டான்’ என்ற  “பொன்மொழிகளை” களை உதிர்த்து தமது செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

தனிமனிதர்களை விட இலட்சியங்களுக்காகப் பாடுபடும் குழுக்களிடம் இந்த எண்ணம் அதிகம் காணப்படுகிறது. மதம், இனம், வட்டாரம், நாடு ஆகியவற்றிற்காகப் போராடும் குழுக்களிடையே இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாகவே ஆகி விட்டது.

அப்பாவிகளைக் கடத்திச் செல்லுதல், விமானங்களைக் கடத்துதல், வெடிகுண்டு வைத்தல்,அதை திட்டமிட்டு ஒரு சமூகத்தின் மீதே பழியை சுமத்துதல்,ரயிலைக் கவிழ்த்தல், வழிப்பறி செய்தல்,கொள்ளையடித்தல்,போதைப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல செயல்களைச் செய்துவிட்டு ‘இதில் தவறென்றும் இல்லையே என்று வாதிடுகின்றன இந்த ‘இலட்சிய குழுக்கள்.’

நோயைவிட நோய்க்குத் தரப்படும் சிகிச்சை மோசமாக உள்ளதே! சிகிச்சையே நோயாளியைக் கொன்று விடும் போலிருக்கிறதெ!

இத்தனை நாட்களாக அறவழியில் போராடியும் எந்த வெற்றியும் கிட்டவில்லை; மக்கள் ஆதரவும்ம் எங்களுக்கு இல்லை; எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துதே தவிர பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை; எனவே தான் இந்த வழிமுறைகளைக்  கையாளுகிறோம்... இப்போது பாருங்கள்; நாடே எங்களைப் பற்றி விவாதிக்கிறது. மக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றோம், என்று கூறி அநியாயங்களை நியாயபப்டுத்த முயல்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஆனால் ‘வினை விதைத்தவன் தினையை அறுக்க முடியாது. வினையைத்தான் அறுப்பான்’ என்ற உண்மையை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.ஒரு அநீதியை இன்னொரு அநீதியால் அழித்திட முடியாது. இவர்கள் விதைத்த வினையின் விளைவுகள் பின்னால் வெளிப்படும்.

இதுபோலவே ஒவ்வொரு வன்முறைக்கும், அநீதியும் இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர பிரச்சனையைத் தீர்க்காது. நீண்ட காலமாக வன்முறைப் பாதையில் சென்ற பல இயக்கங்கள் இதனைப் புரிந்துக் கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு மக்கள் இயக்கமாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எந்த மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வன்முறையில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே கூட அதனை விரும்பவில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து தமது நிலைகளை மாற்றிக் கொண்டன பல தீவிரவாதக் குழுக்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைவன் தீமையின் வாயிலாக தீமைகளை அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றுவதில்லை (நூல் மிஷ்காத்)

இறைவன் கூறுகிறான் திருக்குர்ஆனில்:

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன்: 41 :34,35 )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துயரங்கள் இழைக்கப்பட்டன. அவதூறுகள் அள்ளி வீசப் பட்டன. அடி உதைகள் அன்றாட நடவடிக்கையாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில்தான் அவருக்கு இந்த போதனை இறைவானால் வழங்கப்பட்டது.

ஒரு கொடுமைக்கு இன்னொரு கொடுமை தீர்வாகாது. ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வாகாது. தீமைகளை நன்மையைக் கொண்டே தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அநீதி எப்போதும் அநீதிதான். ஒரு நெருக்கடியைச் சுட்டிக் காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது.

தீமையின் பேயாட்டத்தின் முன் நன்மை பலவீனமாகத் தான் தென்படும். ஆனால் இறுதியில் நன்மையே வெற்றி பெறும். “சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்” என்கிறது இறைமறை குர்ஆன்.

எனவே நன்மையைக் கொண்டே தீமையை அழிப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது. ஆனால் இத்தகைய சிந்தனைகளை தீவிரவாதிகளிடமிருந்து காண்பது அரிது. பெரும் பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரிய பண்புகிட்டும். நோக்கம் எவ்வளவு உயர்வாக இருப்பினும் வழிமுறைகள் தீமையானவைகளாக இருந்தால் அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

“ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவானால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
(நூல்: மிஷ்காத்)

அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வல்ல.
அநீதிக்கு அறமே தீர்வு.

(Reference :நூல்: எங்கெ அமைதி )

Sunday, February 10, 2013

பயங்கர தீவிரவாதியின் உண்மை கதை. (மீள் பதிவு)

அமெரிக்காவின் புதிய அடிமை கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில். ஏற்கனவே அமெரிக்க அரச தீவிர கண்கானிப்பில் இருக்கும் முஸ்லிகளை தன்னுடைய ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்கிற வெறிக்காக இன்னும் ஆழமாக அவர்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டும் என்ற செய்தியை கூறியிருக்கிறார் ஆனால் உண்மை என்ன?

அந்த நாள் (11.9.2001) காலை பத்து மணிக்கு நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியிலுள்ள தனது இல்லத்திலிருந்து 23 வயது நிரம்பிய முஹம்மது சல்மான் ஹம்தானி என்ற இளைஞர் (பாகிஸ்தானி- அமெரிக்கா) ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் தனக்குக் கிடைத்திருந்த புதிய ஆராய்ச்சியாளர் பதவியில் சேருவதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
                                                  முஹம்மது சல்மான் ஹம்தானி
அப்போது மன்ஹாட்டனிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கடுமையான புகைமூட்டம் வருவதைக் கண்டு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்கிறார்.


அவசரகால மருத்துவ சிகிச்சை பற்றிய தொழில்நுடபம் பயின்றிருந்த அவர் அந்தக் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தன்னிடமிருந்த சான்றிதழையும் அடையாள அட்டையையும் காவலர்களிடம் காண்பித்து மேலே சென்றார்.

அப்படிச் சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. அவரைப் பற்றி தகவல்களும் வெளிவரவில்லை.

2605 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இந்த நிகழ்வு அமெரிக்காவையே உலுக்கியது.அதன் காரணமாக உலகில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன. அமெரிக்காவிலுள்ள சிறுபான்மை மக்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டனர்.அமெரிக்கா ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்று சொல்லித் தக்குதல்களைத் தொடங்கியது.

இச்சம்பவம் பற்றி சல்மான் ஹம்தானியின் தாயார் திருமதி ஹம்தானி ‘இந்து’ நாளிதழ் செய்தியாளரிடம்,நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடம் தாக்கப் பட்டபோது அதில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் எனது மகன் அங்கு சென்றிருக்கிறான். இயல்பாகவே அன்பும் இரக்கமும் பிறருக்கு உதவும் எண்ணமும் கொண்டிருந்த அவன் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டதில் வியப்பில்லை என்றார்.

இந்த வீடியோவை பாருங்கள் சல்மானின் தாயார் மற்றும் நண்பர்கள்,அவர் படித்த கல்லூரியின் ஆசீரியர்களின் வாக்குமூலங்கள்.


மகனின் நிலை பற்றித் தெரியாத அவர் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி தனது மகனின் இறந்த உடல் கிடக்கிறதா என்று பார்த்துள்ளார். ஒன்றும் கிடைக்கவில்லை.

பின்னர் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு தனது மகன் சிகிச்சை பெற்று வருகிறானா என்று பார்த்து விசாரித்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் தனது மகன் இல்லை என்பதை அறிந்த அவர் பெரும் துயரத்துக்கு ஆளானர்.காவல்துறையினரிடம் சென்றும் விசாரித்தார் ஒன்றும் பலன் இல்லை.

ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் நியூயார்க் காவல் துறையினர் சல்மான் ஹம்தானி தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் என்று செய்தியை பரப்பினர். இதனால் அவரது தாயார் பெரிதும் அதிர்ச்சி அடைந்து தன் மகன் பொருட்டு பிரார்த்தனை செய்வதற்காக அவர் மக்காவுக்குச் சென்றார்.அந்த நேரத்தில் ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழ் சல்மான் ஹம்தானி காணமால் போயிருக்கலாம் அல்லது தலைமறைவாகி இருக்கலாம் என்று தினமலர் பாணியில் செய்தி வெளியிட்டது.

அன்று காலை 11 மணி அளவில் அவர் வர்த்தக மையக் கட்டிடத்தின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தார் என்றும் கையில் குர்ஆனை வைத்துக் கொண்டிருந்தார் என்றும் அந்த இதழ் தினமலர் பாணியில் அடித்து விட்டது

அவர் பிறப்பால் பாகிஸ்தானி இது போதுமே சந்தேகப்பட உலக மீடியாக்கள் முழுவதும் பாகிஸ்தான் என்றலே தீவிரவாத நாடு மார்க்கேட்டில் காய்கறி விற்பது போல் வெடிகுண்டுகளை விற்கும் நாடு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. நம்ம விசயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூட போடாத சண்டையா? பயன்படுத்தாத ஆயுதமா?

பிரபல எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் பாகிஸ்தான் பயண அனுபவம் பல போலி பிம்பங்களை உடைக்கிறது (கொஞ்சம் பாருங்கள்)


சரி விஷயத்துக்கு வருகின்றேன்
அமெரிக்காவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் சீக்கியர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.பல்பீர்சிங் சோதி உள்ளிட்ட பல சீக்கியர்கள் கொல்ல்லப்பட்டனர். முஸ்லிம்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பலரும் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் சல்மான் ஹம்தானி இல்லை.

தனது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும்; சிறையில் இருக்கக்கூடும் என எண்ணியிருந்த அவரது தாயாரின் நம்பிக்கையும் இது பின்னர் தகர்த்தது. ஒரு திருப்பமாக, சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பின் சல்மான் ஹம்தானியின் இறந்த உடலைத் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் நியூயார்க் காவல் துறையினர்க்கு கிடைக்கிறது.

எனினும் அவர்கள் சுமார் ஆறுமாதங்களுக்குப் பிறகு அதாவது 2002, மார்ச்சில் தான் புகன் விசாரனையை முடித்துக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போன போது சல்மான் ஹம்தானி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.

முஹம்மது சல்மான் ஹம்தானியின் உடலை அமெரிக்க பள்ளிவாசலில் அடக்கம் பன்ன கொண்டு சென்றபோது.


அதன்பின்னர் சல்மான் ஹம்தானி ஒரு வீரராக அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப் பட்டார் அவரது பெயர் யு.எஸ் பேட்ரியாட் ஆக்டில் இடம் பெற்றது. உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது அதில் சிக்குண்டவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்றபோது வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

2002 ஆம் ஆண்டு நியூயார்க் இஸ்லாமிய பண்பாட்டுக் கழகம் நடத்திய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் புளூம் பெர்க்கும் நகர காவல்துறை ஆணையாளர் ரே கெல்லியும் காங்கிரஸ் செனட்டர் கேரி ஆக்கர் மேனும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு சல்மான் ஹம்தானியின் வீரத்தை நினைவுகூர்ந்தனர்.

களங்கப்படுத்தப்பட்ட தனது மகன் மீட்சி பெற்றார் எனக் கூறுகிறார் திருமதி ஹம்தானி.
(ஆதார நூல்கள்.நன்றி: இந்து 12.9.11, நன்றி சமரசம் 16-31 ஆக் 
படங்கள் கூகுள் வீடியோ யூ டியுப்)