Friday, August 26, 2011

அநியாயமான மரணதண்டனைக்கு எதிராக போராடுவோம்.

பேரறிவாளனின் தாயின் பேட்டியை கணொளியில் கண்டு என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. அந்த தாயின் வேதனையை அவர்களை போன்ற பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்ற முறையில் என்னை ஈன்ற தாய் அழுவது போல உணர்ந்தேன்.


தன் மகனுக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டு கடந்த 20  வருடங்களாக தண்டனை அனுபவித்து விட்டார். அவருக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தமில்லை என்றும் தெளிவாக கூறுகிறார் பாருங்கள். அவரை தீவிரவாதி, கொலையாளி என்று ஊடகங்கள் எப்படி தவறான பிரச்சாரத்தை முடுக்கி விட்டார்கள் என்பதையும் விளக்குகிறார். குறிப்பாக ஊடகக் காரர்களை நோக்கி அவர் கோபமாக வைக்கும் கேள்விகளுக்கு விடை இல்லை.



இதே போல் கோயமுத்தூர் குண்டுவேடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாக வாடும் அப்பாவி சிறைக்கைதிகளின் தாயின் குடும்பத்தாரின் கண்ணீரை பாருங்கள்.

ராஜீவ் காந்தியையும், பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அப்பாவி பொதுமக்களையும் கொன்றவர்கள், கோயமுத்தூரில் பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகளை கொன்றவர்கள் என்று இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் குற்றமற்றவர்களை தண்டித்து விடாதீர்கள்.

Monday, August 22, 2011

'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு


பிலால், இறைத்தூதரின் நெருங்கிய தோழர். ஒடுக்குமுறையை அகற்றி நீதத்தை நிலைநாட்டிடும் இறைத்தூதரின் போராட்டம் மற்றும் வெற்றியின் அரிய தருணங்களை அடிமையாக இருந்து, விடுவிக்கப்பட்டு, இஸ்லாமிய வரலாற்றின் நாயகர்களுள் ஒருவராக உயர்ந்த பிலால்(ரலி) அவர்கள் தன் குரலிலேயே கூறினால் எப்படி இருக்கும்...? ஹெச்..எல்.க்ரெய்க் இந்நூலினை அமைத்திருக்கும் விதம் வரலாறு வாசிப்பில் ஒரு புத்தனுபவம்.


இந்த புத்தகத்தை படிக்க கையிலேடுத்தவன் கிழே வைக்க மனமில்லை வார்த்தைகள் அழகாக கோர்க்கப்பட்டு அழகு தமிழ் நடையில் உண்மையில் வாசிப்பில் புது அனுபவத்தை உணர்ந்தேன் அதனை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.


பிலால் அடிமை எனும் நிலையில் அவரின் வார்த்தைகள்.

எதையும் அறிந்தவனல்ல அடிமை. அவன் எப்போதும் எதிர்பார்த்திருப்பவன். எஜமானின் குரலை ஒத்த வேறு குரல் ஏதும் அவனுக்கில்லை. எஜமான் அழைக்கும் போது அவனது குரலோசையிலிருந்து ஒளிந்துக் கொள்ள முடியாது. அவன் அழைக்கும் தொனிக்க்குள் அல்லது அவனது விழிக்குள் இல்லாது போனால் நீ ஒழிந்தாய். அவன் உன்னை வாங்கியுள்ளான்,அதன் விலை-உனது எஞ்சியிருக்கும் வாழ்க்கை.

பிலால் அவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்ட போது


இஸ்லாத்தை ஏற்ற அம்மார் எனும் அடிமை சித்ரவதை செய்வதற்காக என் எஜமானனிடம் கொண்டு வரப்பட்டபோது அங்கு சுவரில் சாய்ந்து நின்றேன் நான்.அம்மாரிடம் என் எஜமான் “முஹம்மது உமக்கு என்ன போதிக்கிறார்?”
 “உலகத்து மக்கள் அனைவரும், ஒரு சீப்பின் பற்களைப் போல இறைவன் முன் சமமானவர்கள்.”


இந்த சில சொற்கள் கேட்டு, சுவரில் சாய்ந்திருந்த ஓர் அடிமை, பிலால் ஆகிய நான் என் உடல் முழுவதும் குளிர்ந்து நடுங்குவதை உணர்ந்தேன். முகம் சிவந்தவராக என் எஜமான் பிழம்பானதையும் உணர்ந்தேன். எஜமானுக்குரிய அதே நாடித்துடிப்பு அடிமைக்கும் இருப்பதில்லையே!
“என்ன எஜமானுக்கு அடிமை சமம் என்றா சொல்கிறாய்...?” சலசலக்கும் பட்டின் அசைவொலியோடு அம்மரை நெருங்கிய என் எஜமான் உமையா வினவினான்.

இஸ்லாத்தை ஏற்று சுகந்திர மனிதராக இறைத்தூதருடன் பிலால்


என் கரம் பற்றிய முஹம்மது, முதன் முதலாகத் தன் அருகே அமர்வதற்காக என்னை இழுத்தார். நான் தயக்கம் காட்டியிருக்க வேண்டும். என் வாழ்நாளில் ஒருபோதும் குறைஷிய(உயர் குலத்தைச் சேர்ந்த) வம்சத்தவர் எவர் முன்னாலும் அமர்ந்திருந்ததில்லை. நிற்பது மட்டுமே என் உரிமை. தயங்கினேன் நான். அதை முறிக்கவென முஹம்மது கூறினார்:"நாம் நின்று கொண்டிருந்தால் அலீ தமது வித்தைகளை காட்டமாட்டார்" அவர் அருகில் அமர்ந்தேன். அப்போது தொடங்கியது எம் தோழமைத்துவம்.

உத்தமர் அபூபக்கர் பிலாலின் அடிமை சிந்தனையை தகர்த்து ஏறிதல்.


"ஆ பிலால்...பிலால்... நீர் செய்வதற்குப் புதிய அலுவல் ஒன்று உண்டு. இதுவரையும் உழைக்காத வகையில் நீர் இனி உழைப்பீரா?”

நான் என்ன பதில்தான் கூறலாம்? "அப்படியே எஜமான்!"என்றேன்.

என் பதில் அவரைத் துயருத்தியது. என் சொந்த இருளுலகில் மீண்டும் நான் பாதம் பதித்து, அவரது பார்வையிலிருந்து மறைந்து விட்டேன். என் முன்னைய அடிமைத் தனத்துள் மீண்டும் மூழ்கி விட்ட நான் அளித்தது அடிமையின் விடை - 'அப்படியே எஜமான்!'.நான் தலை தாழ்த்தி நின்றது, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்தது.

அபூபக்கர் அவர்கள் கையில் வைத்திருந்த பால் வாளியைக் கிழே வைத்து, எனது இரு செவிகளையும் பற்றிய அபூபக்கர் தனது நெற்றியை எனது நெற்றியில் முட்டியவராகக் கூறினார்: "நான் சொல்வதைக் கேளும் பிலால்! நீர் ஒரு சுகந்திர மனிதர். உமக்கு எஜமானர்கள் இல்லை. ஆனால் சுகந்திரவானாக இருக்க நீர் கற்க வேண்டும்."

நெற்றியின் மோதுதலது தாளத்துக்கேற்ப ஆம்... ஆம்... என்றேன் நான்.

சட்டேன சிரித்து அவர் என் செவிகளை விடுத்தார். “நான் உமக்கு என்னதான் கற்பிப்பேன்? உம்மை யாரும் அழைக்கும்போது கலவரம் அடையாதிருக்க... பிறர் முகங்களை தயக்கமின்றி ஏறிட்டு நோக்கிட... உமது நிழல் நிச்சயமாக உமதே என்ற உணர்வு கொள்ள... ஆம்... இவையேல்லாம் முக்கியமானவை.”

இப்படி புத்தகம் முழுவதும் பிலால் (ரலி) அவர்களின் வரலாறு அழகான கோணத்தில் நாம் முன் விரிகிறது.

வெளியிடு
மெல்லினம் பதிப்பகம்
ஆங்கில ஆசிரியர்
ஹெச்.ஏ.எல்.க்ரெய்க்
தமிழில்
அல்-அஸுமத்

Sunday, August 21, 2011

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் (பாகம்-2)

இமாம் புகாரி(ரஹ்) அவர்களைப் பற்றியும்.
அவர்களின் பல நூல்களில் ஒரு நூலான புகாரி கிதாபை பற்றியும்.
இந்த நூலை இமாமவர்கள் ஏன் தொகுத்தார்கள் என்பது பற்றியும். 
புகாரி நூலில் அப்படி என்ன சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது என்பது பற்றியும்.

இனி விரிவாகப் பார்ப்போம்.





முதலில் இமாம் புகாரி அவர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். 'இமாம் புகாரி' இவர்கள் யார்? இவர்களின் பெயரென்ன? அனைவராலும் புகாரி என்று அழைக்கப்படுகிறார்களே? ஆனால் அவர்களின் சொந்தப் பெயர் புகாரி அல்ல. 'புகாரி' என்பது அவர்கள் பிறந்த ஊரின் பெயர். 'புகாரா' என்ற ஊரில் பிறந்தார்கள். 'புகாரி' என்றால் அரபியில் 'புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்' என்று பொருள். சரி அவர்களுடைய சொந்த பெயரென்ன? அவர்களின் சுருக்கமான பெயர் 'முஹம்மத்'. முழுப் பெயர் 'முஹம்மத் இப்னு இஸ்மாயில் இப்னு இபுராஹீம் இப்னு முகீரா'

இமாம் புகாரி அவர்கள் அரபு நாடுகளில் பிறக்கவில்லை, அவர்கள் அரபியும் அல்ல. ஆனால் அரபிகள் மட்டுமல்ல, எவரும் செய்ய முடியாத மாபெரும் பணியை இஸ்லாத்திற்காக செய்திருக்கிறார்கள். தன் முழு வாழ்வையும் இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தார்கள். தமிழகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக் கொண்டிருக்கும் நாத்திக/கம்யூனிஸ்ட் நண்பர்கள் சிலர் அறியாமையில் தமிழ் முஸ்லிம்கள் அரபியர்களுக்கு அடிமையாக இருப்பதாக அள்ளி விடுகின்றனர். 

ஆனால் இன்றைய உஸ்பெக்கிஸ்தானில்/ அன்றைய ரஷ்யாவில் பிறந்த இமாமவர்கள் முழு இஸ்லாமிய உலகிற்கும் (அரபியரையும் சேர்த்து) ஒப்பற்ற ஒரு நூலை கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆதாரப்பூர்வமான 6 ஹதீஸ் கிரந்தங்களையும் எழுதியவர்கள் ஒரிஜினல் அரபிகள் அல்ல. அரபிகளின் வழித்தோன்றல்கள் கூட கிடையாது. ஆகவே இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது; எல்லா இனத்திற்கும் உரியது என்பதுதான் உண்மை. 

இறைவன் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலரை மேதைகளை உருவாக்குகிறான். வரும் காலங்களிலும் உருவாக்கிக் கொண்டே இருப்பான்.

இமாம் புகாரி அவர்களுக்கு அபார நினைவாற்றல்களை இறைவன் வழங்கியிருந்தான். அது அன்று தேவைப்பட்டது. அந்த ஆற்றல்கள் இன்று காண‌க் கிடைக்காது. அக்காலம் கணினி காலமல்ல. அக்கால அறிஞர்களின் மூளைகள் கணினிகளாக ஆக்க‌ப்பட்டிருந்த. எனவே இலட்சக்கண‌க்கான ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசைகளுடன் மனனம் செய்திருந்தார்கள்.

இன்று யோசித்துப் பாருங்கள்! நாம் ஒரு 5000 ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசையுடன் மன‌னம் செய்ய முடியுமா? ஏன்.. இமாமவர்கள் பல இலட்சம் ஹதீஸ்களை ஆய்வு செய்து, தரம் பிரித்து, தேர்ந்தெடுத்த 7000 ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் நம்மால் மன‌னம் செய்ய முடியுமா? ஆனால் புகாரி இமாமவர்கள் அந்த ஹதீஸ் துறையிலேயே முழு வாழ்வையும் செலவழித்து நமக்கு பேருதவி செய்திருக்கிறார்கள்.
இமாமவர்கள் அல்குர்ஆனையும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களையும் தனது 10 வயதில் முழுமையாக மன‌னம் செய்திருந்தார்கள். இமாம் புகாரி அவர்களின் மாணவர், அவர்களின் எழுத்தாளர் 'முஹம்மது இப்னு அபீ ஹத்தீம் அர்வர்ராஹ்'என்பவர் தன் ஆசிரியரைப் பற்றிய குறிப்பில் கூறுகிறார்:

"ஒருமுறை, தாங்கள் எத்தனை வயதில் குர்ஆனையும் ஹதீஸையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போதே ஹதீஸ்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு இயற்கையாக அதிகமாக இருந்தது என்றார்கள். அப்போது உங்களுக்கு எத்தனை வயதிருக்கும் என்று வினவினேன்? 9 அல்லது 10 வயது இருக்கும் என்றும், 16 வயதில் ('அப்துல்லாஹ் இப்னு முபராக்' என்பவர் இமாமவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த ஹதீஸ் துறையில் புலமைப் பெற்ற மிகப்பெரிய அறிஞர் ஹிஜ்ரி 181 ல் மரணித்தவர்கள்) அந்த அறிஞரின் நூலை முழுமையாக மன‌னம் செய்திருந்தேன் என்றும், அதேபோல இமாம் ஷாஃபி அவர்களின் பிரபல ஆசிரியரான 'வக்கியா இப்னு ஷர்ரா' அவர்களின் சட்ட நூல்களையும் மன‌னம் செய்திருந்தேன் என்றும் கூறினார்கள். அதுமட்டுமல்ல அந்த சமகாலத்தில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொண்ட 'முஹ்தஜ்லாக்கள்' என்ற பிரிவினரின் வாதங்கள், தர்க்கங்கள், அவர்கள் முன் வைக்கின்ற நியாயங்கள் இவைகளையும் அவர்களின் நூல்களையும் கற்றுக் கொண்டார்கள்".

(இன்று பார்க்கிறோம் இறைநம்பிக்கை கொண்டவர்கள் இறையியல் சார்ந்த நூல்களை மட்டுமே படிக்கிறார்கள். எதிர்க்கொள்கைக் கொண்ட நூல்களை படிப்பதில்லை. அவர்கள் என்ன வாதங்களை முன் வைக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்வதில்லை. 'அசத்தியத்தை/பொய்யை அறியாதவன் உண்மையை/சத்தியத்தை (ஹக்கை) அழித்துவிட்டான் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். எனவே சகோதரர்களே! நாமும் அனைத்து நூல்களையும் படிப்போமா? முயற்சியுங்கள்! இமாமவர்களின் மாதிரியை முன்மாதிரியாக கொள்ளுங்கள்!)

இமாமவர்கள் தனது 16 வது வயதில் சட்டத்துறையிலும் ஹதீஸ் துறையிலும் முழு அறிவு பெற்றிருந்தார்கள். அவர்களுடைய அன்னைய‌வர்கள், மேலும் கற்றுக் கொள்வதற்காக புகாரி அவர்களுடைய சகோதரர் 'அஹமது' என்பவரையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றார்கள். ஹஜ் செய்வது மட்டும் நோக்கமல்ல. அங்கு, மக்காவிலும் மதீனாவிலுமுள்ள அறிஞர்களிடமும் கல்வி கற்பதற்காகவும்தான். ஹஜ் முடிந்த பிறகு இமாம் புகாரி அவர்களை அரபு மண்ணில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி விடுகிறார்கள்.

தொடரும்

Thursday, August 4, 2011

வானம் வசமானதா? விஷமானதா?

து என்னுடைய மீள்பதிவு. 
சில ஜன்மங்கள் பதிவுலகில் புகழுக்காகவும். ஹிட்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் புனிதமான நாட்களையும் தன்னுடைய வாழ்வையும் கெடுத்து கொள்கிறார்கள். அது போன்ற பொது கழிவறையில் கிறுக்கும் அசிங்க பேர்வழிகளுக்காக மறுபடியும் இந்த மீள் பதிவு.


விண்மீன்கள் கண்சிமிட்டும் வான்வெளியில் வியாபித்திருக்கும் சாட்லைட்கள் யுகத்தில் தொழில் நுட்பத்தின் தவிர்க்க முடியாததுமான வலையுகத்தில் விரும்பியோ (விரும்பாமலோ) வெறுத்தோ வாழ்கிறோம். வானிலிருந்து சாட்லைட்கள் அமுதையும் பொழிகிறது. விஷ அமிலத்தையும் பொழிகிறது. துரதிஷ்டவசமாக அதிகமான இணைய பயனாளர்கள் அமில மழையில் நனைந்து இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.

இணையத்தின் ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அறிவுக்களஞ்சியம். கேட்டதை கொடுக்கும் அலாவுதீன் பூதம் என்ற
கற்பனையை விஞ்சக்கூடிய தேடு பொறிகள். இறைக்க இறைக்க நீர் சுரக்கும் கிணறு.
இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இது என்னை போன்றவர்களுக்கு இனிப்பானச் செய்தி.


நம் உள்ளம் கவர்ந்த உரைகள்.  கருத்தாழம் மிக்க கலந்துரையாடல்கள். ஆச்சரியமூட்டும் அசையும் காணொளிகள். மனம் கிளரும் ஒளிப்படங்கள். இவற்றை கேட்பதோடு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பதிவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


அன்றாட தமிழ் பத்திரிக்கையின் (பிராடு) மற்றும் உண்மைசெய்திகள்
வித்தியாசமான நாடு கடந்த நண்பர்களால் நடத்தப்படும் குழுமங்கள்
எழுத்து திறனை உளி கொண்டு செதுக்கி நம்மை ஒளிர செய்யும் நட்புகள். 
வாசிப்பார்வத்தை தண்ணீருற்றி வளர்க்கும் ஏராளமான பதிவாளர்களின் கவிதை கட்டுரை சிறுகதை மற்றும் நேர்காணல்களை தாங்கி வரும் இணைய தளங்கள். 
யாரிடமும் முறையிட முடியாத சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள்.
உலகின் எந்த மூலையிலிருந்தும் உறவை வளர்க்கும்
உபயோகமான இணையதோழமைகள்.

இணையத்தின் விஷம் தேய்ந்த மறுபக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.


அரசியலில் அடாவடித்தனம் செய்பவர்கள், தம் சுயத்தை
இழந்து நடிப்பு,விளையாட்டு விளம்பரத்துறைகளில் விலைபோனவர்கள்,
மேக்-அப் மன்னர்கள், வெகுளி வேடம் தரித்தவர்கள், ஆபாசப் பேர்வழிகள், சமூக விரோதிகள், கீழமை எண்ணம் கொண்டவர்கள், இவர்களின் பாதுகாப்பான புகலிடமாக இணையம் மாறிபோயிருக்கிறது.


இணையம் ஒரு திறந்த ஊடகம். தெளிந்த மனதையும் சிதறடிக்கும் சக்தி கொண்டது.இயற்கையான வெட்கத்தின் பாற்பட்ட மெல்லுணர்வுகளை வக்கிரமாக தீர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இணையத்தில் உண்டு.


தன் சொந்த வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்திருப்பவர்கள் (பஸ் ஸ்டாண்ட்) பொது கழிவறையை அசிங்கப்படுத்துபவர்கள். யார் வந்தார்கள் அசிங்கமாக கிறுக்கினார்கள் என்று யாருக்கும் முகம் தெரியாது. 


பொது கழிவறையில் பொறுப்பில்லாமல் கிறுக்குபவர்களை விட மூர்க்கமான வக்கிர ஆபாச பேர்வழிகள் திறந்த இணைய ஊடகத்தில் இறைந்து கிடக்கிறார்கள்.
தன் வீட்டை தன் குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொண்டே அடுத்த வீட்டு குடும்ப பெண்களை திருடுகிற திருட முயற்சிக்கிற கேடு கெட்டவர்களுக்கு இணையம் எளிமையான பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
புகழ் பெற வேண்டும் என்பதற்காக இணையத்தில் பொறுப்பில்லாமல் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க தயங்காத விளம்பர பிரியர்களின் விளம்பரங்கள் குப்பைபோல் கொட்டி கிடக்கின்றன.



ஒரு பெண்ணும் இளைஞனும் சாட்டிங்கில் நீண்ட நாட்களாக (அசிங்கமான) நட்பாக பழகியதில் அந்த இளைஞனின் ரோமண்டிக்கான பேச்சில் மயங்கிய அந்த பெண் இருவரும் நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து நகரின் மத்தியுள்ள பூங்காவில் சந்திக்க திட்டமிட்டனர்.அடையாளம் கண்டுக் கொள்ள welcome  என்ற பெயர் பொறித்த சிகப்பு கலர் டி சார்ட் அணிந்து வர வேண்டும் என்று முடிவெடுத்து சந்தித்தார்கள். சந்தித்த பிறகு தான் தெரிந்தது இத்தனை நாள் தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞன் தன்னுடைய மகன் என்று.
இது அமெரிக்காவில் 2006-ல் நடந்த உண்மை சம்பவம்.



தீயை விளக்கேற்ற பயன்படுத்தாமல் தானும் அந்த வீட்டில் தான் வசிக்கின்றேன் என்ற பொது அறிவுகூட இல்லாமல் வீட்டை எரிக்க பயன்படுத்துகிறவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Friday, July 29, 2011

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் (பாகம் - 1)

றைவன் குர்ஆனில் நபிமார்களைப் பற்றியும், இறைவனின் அருள் பெற்ற நல்லடியார்களைப் பற்றியும், அநியாயக்கார சமூகத்தினர்கள் பற்றியும் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான், எதற்காக? நாம் பழங்கதைகளை தெரிந்துக் கொள்வதற்காகவா? இல்லை அதன்மூலம் படிப்பினைப் பெறுவதற்காகவா? பழங்கால மனிதர்கள் செய்த தவறுகள் நவீன வடிவில் நம்மிடம் இன்று இருந்தால் படிப்பினைப் பெற்று நம்மை திருத்திக் கொள்வதற்காகத்தான் இறைவன் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான்.


இமாம் புகாரி போன்ற அறிஞர்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்? இந்த அறிஞர்கள் இஸ்லாத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? நமக்கு அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகள் என்ன? அவர்களின் தியாகங்கள் போன்ற‌வற்றை நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வளவு ஏன்? இமாம் புகாரி அவர்களின் இயற்பெயர் பெரும்பாலான நம்முடைய சகோதரர்களுக்கு தெரிவதில்லை.

இதை விடக் கொடுமை, சிலர் இமாம் புகாரி அவர்களைப் பற்றி தவறாக அறிந்து வைத்திருக்கிறார்கள். 'புகாரி ஷரீப் ஓதும் விழா'என்று சொல்லிக் கொண்டு 25, 30 வருடங்களாக அரபியில் ஒன்றும் புரியாமல் வேக வேகமாக ஓதி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

புகாரி ஷரீப் ஒதும் விழா


சரி, அரபியில் ஓதிவிட்டு அதற்கான விளக்கத்தை தமிழில் சொல்லிக் கொடுக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. மாறாக இமாம் அவர்களைப் பற்றியும் புகாரி நூலைப் பற்றியும் தவறாக சொல்லிக் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு கீழுள்ள இந்த செய்தியைப் பாருங்கள். (இது புகாரி ஷரீப் ஓதியவர்களின் ப்ளாகிலிருந்து எடுத்தது).

"அவர்களின் இப்புனிதமான கிரந்தம் பெரும் சிறப்புகளைப் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கிரந்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவன் தனது கடற்பயணத்தைத் தொடர்ந்தால் அவனது வாகனம் கடலில் ஒருபோதும் மூழ்கிவிட மாட்டாது. மழை இல்லாத கிராமத்தில் இந்தக் கிரந்தத்திலுள்ள நபிமொழிகள் பாராயணம் செய்யப்பட்டால் அங்கே அழ்ழாஹ்வின் அருள் மழை இறக்கப்படும். பஞ்சம், வறுமையுள்ள இடங்களில் இக்கிரந்தம் ஓதப்படும்போது அங்கே அழ்ழாஹ்வின் அருள் பரக்கத் இறங்கும்". 


இஸ்லாமிய வரலாற்றில் சரியான ஹதீஸ் எது? பலஹீனமான ஹதீஸ் எது? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் எது? அறிவிப்பாளர்களின் தரம் என்ன? போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து, ஸஹீஹான ஹதீஸ்களை கடுமையான உழைப்பிற்குப் பின் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற இமாமவர்களின் மீது இட்டுக்கட்டி (மேற்கண்ட‌) இப்படி ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்.



இமாம் புகாரி அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக இணையத்தில் உலாவியபோது பல சகோதரர்கள் புகாரி இமாம் அவர்களின் பிறப்பு, பெயர், எழுதிய நூல், சொந்த ஊர், இறப்பு போன்ற விஷயங்களை மட்டும் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். (இறைவன் அந்த சகோதரர்களுக்குரிய நற்கூலியை வழங்குவானாக!) ஆனால் இமாமவர்களின் ஆளுமையைப் பற்றி படிக்கும்போது நம்மை வியக்க வைக்கிறது! "இன்று இறைவேதமான‌ குர்ஆனுக்கு அடுத்து உலக முஸ்லிம்களால் நம்பக்கூடிய ஒரு நூலாக புகாரி கிதாப் இருக்கிறது. இறைவன் இவ்வளவு பெரிய அந்தஸ்தை இந்த நூலுக்கு கொடுத்திருக்கிறான்."



எனவே நாம், புகாரி இமாம் என்றால் யார்?
இந்த நூலை ஏன் அவர்கள் தொகுத்தார்கள்?
இந்த நூலில் என்னென்ன விஷயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது?
வாசிக்கப்படுக்கின்ற ஹதீஸ்கள் நடைமுறையில் நாம் பின்பற்றுகிறோமா?
அல்லது வெறும் புத்தகம் வாசித்து முடிப்போம் என்ற ரீதியில் வாசிக்கிறோமா?




போன்ற விஷயங்களை (இன்ஷா அல்லாஹ்) விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

Tuesday, July 26, 2011

என் குடும்பத்தில் நடந்த வரதட்சணை ஒழிப்பு,நபிவழி திருமணம்

சென்ற மாதம் நான் விடுமுறையில் ஊரில் இருந்தபோது உருப்படியாக செய்த இரண்டு காரியங்கள். ஒன்று சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்தது. இரண்டு என்னுடைய குடும்பத்தில் நடந்த இஸ்லாமிய வரதட்சணை ஒழிப்பு திருமணம்.

மணமகன் என்னுடைய நண்பர் இஸ்லாமிய ஒரிறைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் அவருடைய இன்றைய பெயர்
அப்துல்லாஹ்

மணமகள் என்னுடைய அண்ணன் மகள்

அண்ணன் சவூதியில் இருப்பதால் நான் தான் பெண்ணிற்கு வலீயாக
(பொறுப்புதாரீயாக) சிறிய தந்தை என்ற முறையில் நின்று மணமுடித்துக் கொடுத்தேன்.

திருமணம் சென்னையில் நடந்தது. ஆடம்பரம், பகட்டு எதுவுமின்றி எளிமையாக மணமகனின் செலவில் நடந்தது. இஸ்லாத்திற்கு முரனான எந்த சடங்கும், மாலை,தொரணை எதுவும் இல்லை புகைப்படங்களை பாருங்கள்.

மணமகன் வெள்ளை சட்டை
அனிந்து இருக்கிறார்


என்னுடைய அண்ணன் மகளை.அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த வரதட்சணையும் கொடுக்காமல் உங்களிடம் மஹர் பெற்றுக் கொண்டு மணமுடித்து கொடுக்கின்றேன் ஏற்றுக் கொண்டீர்களா? என்று சொல்லி மணமுடித்து கொடுத்த காட்சி.


என்னுடைய அண்ணன் மகள் ஏற்றுக் கொண்டு மணஒப்பந்தத்தில் கையேழுத்திட்ட காட்சி.

மணமக்களுக்காக அவர்களின் வாழ்வு சிறக்க இறைவனிடம் துஆ(பிரார்த்தனை) செய்யுமாறு சகோதர சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, July 20, 2011

(18+) வரதட்சிணை எனும் அவமானம்.புத்தக அறிமுகமும்,எனது மலேசியா சிறை அனுபவமும்.

   18+ என்று போட்டவுடன் என்னோவோ ஏதோ என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.  வரதட்சனை எனும் கொடுமையால் என் நண்பன் எப்படி பாதிக்கப் பட்டான் என்பதை விளக்குவதற்காக அந்த 18+ வீடியோவை இணைத்துள்ளேன்.

சரி புத்தக அறிமுகத்திற்கு பிறகு மலேசியாஉண்மை சம்பவத்திற்கு போவோம்.

ஆசிரியர்:
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து சமுதாயத்தின் நல்லொழக்கத்தைச் சீர்குலைக்கின்ற மாபெரும் தீமையாகத் தலைவிரித்தாடுகின்றது வரதட்சிணை எனும் கொடுமை! முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தத் தீமைகளின் ஆணிவேர் எது? இது எங்கிருந்து முளைத்தது? எப்படிப் பரவியது? அந்த ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிய என்ன வழி? அதைத்தான் இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் கே. வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள். அதுமட்டுமல்ல, வரதட்சிணைக்கு ஆதரவாகப் பேசுவோர் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய பதில்களையும் டாக்டர் அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.

பொற்றோர்,இளைஞர்கள்,இளம்பெண்கள்,சமயச் சொற்பொழிவாளர்கள்,
ஆன்மிகவாதிகள்,சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்புகளையும்
எடுத்துரைத்துள்ளார்.

இந்த புத்தகத்தில் நான் கோடிட்ட ரொம்ப பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

வரதட்சிணை என்பது எந்த உழைப்பும் இல்லாமல் முதலீடு இல்லாமல் ஒரு பெண்ணின் இயலாமையையும் சமூகத் தந்திரங்களையும் பயன்படுத்திப் பெற்ற பணமாகும்.இதுவும் ஒருவகையில் வழிப்பறிக் கொள்ளையே ஆகும்.

கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.வரதட்சிணை வாங்குபவர்களோ பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.வழிப்பறிக்காரர்கள் சில வேளைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் வரதட்சிணை வாங்குபவர்களோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதோடு,சமூகத்தில் அந்தஸ்தோடும் உலா வருகின்றனர். எனவே கொள்ளையர்களை ‘புத்தியற்ற கொள்ளைக்காரர்கள்’என்றும், வரதட்சிணை வாங்குபவர்களை ‘புத்திசாலித்தனமான கொள்ளைக்காரர்கள்’
என்றும் வர்ணிக்கலாம்.

இப்போது என்னுடைய மலேசியா சிறை அனுபவம்.


'நீ எப்ப மலேசியா போன' என்று கேட்பவர்களுக்கு. இங்கே அழுத்துங்கள் .

மலேசியா கள்ளக்குடியேறி என்ற முந்தைய பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.

அது ஒரு தொடர் (அது இப்பதான் எனக்கு ஞாபகம் வருகிறது)

2001ல் மலேசியாவில் கட்டிடட தொழிலாளியாக பர்மீட் இல்லாமல்வேலை பார்க்கும் போது பிடிபட்டு. மலேசியாவின் நெகிரி சிம்பிலான் என்ற ஊரில் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்

மலேசியாவில்
சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான்
டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன்

போலீஸில் பிடிபடும்போது போட்டுயிருக்கிற ஒரே ஒரு துணி தான் இருக்கும்.
சிறையில் எனக்கு முன்னரே பிடிபட்ட 120 மேற்பட்ட தமிழர்கள் இருந்தார்கள்
ஒரு மாத சிறை வாழ்க்கையில் பலரின் சிறைநட்பு கிடைத்தது. அதில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நண்பர் (பெயர் வேண்டாமே). அவரோடு மாப்பிள்ளை, மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது.


சிறையில் முக்கால் வாசி பேர் குளிக்கும் போது ஆடையில்லாமல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள். சிறையில் பாகிஸ்தான், 
இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாங்க மொத்தம் 500 பேர். அதில் உடுத்துன ஆடையோடு குளித்த ஒருசிலரில் நானும், நண்பனும் அடக்கம். அதாவது ஜீன்ஸ் பேண்ட போட்டுகிட்டு குளிக்கிறது. முடிந்த பிறகு சட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட புழிந்துவிட்டு மறுபடிக்கும் போட்டுகிட்டு காய்வதற்காக வெயிலில் நிற்பது.

இப்படி நண்பன் குளித்து விட்டு சட்டையை இடுப்பில் கட்டுவதற்காக முயற்சிக்கும் போது எதார்த்தமாக விலகி அவனுடைய குந்துபுறம் தெரிந்தது. அதில் ஆழமாக மூன்று கரும்கோடுகள் தழும்பு மாதிரி இருந்தது. பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 
'டேய் மாப்ளா என்னடா இது' என்று கேட்டே விட்டேன். அதற்கு அவன் 'சிங்கப்பூர்ல இருந்தேன் மச்சான். அங்கே பர்மீட் இல்லாமல் தங்கி இருக்கிறவங்கள மூன்று
ரோத்த அடி குடுப்பாய்ங்கே. நான் அங்கு பிடிபட்டபோது எனக்கு கிடைத்த அடியின் தழும்பு இது' என்றான்.

                                       சிங்கப்பூரின் தண்டனை ரோத்த அடிப்பது இப்படித்தான்

'நீ சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லையா?' என்று கேலி செய்தேன். அதற்கு பிறகு அவன் சொன்ன பதிலில் கண்கள் உடைந்து அழுதேன். 

'அப்பா கூலித்தொழிலாளி. அன்றாட காச்சி. எனக்கு இரண்டு சகோதரிங்க. ஒன்னுக்கு வயது 30, இன்னொக்கு 32, இரண்டு பேரையும் கட்டிக்கொடுக்க முடியவில்லை. நான் டுரிஸ்ட விசாவில் சிங்கப்பூர் வந்தேன் பாஸ்போர்ட்டை தூக்கி போட்டு விட்டு இரண்டு வருடம் வேலை செய்து சில லட்சங்களை சேர்த்து மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தேன். இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை, இனி ஊருல எதாவது புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக இருந்து பிழைத்துக் கொள்வேன்' என்றான். இன்றும் அவன் நட்பு தொடர்கிறது. 

வரதட்சணையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.

Sunday, July 17, 2011

மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்?ஃபஸாதிகளா? ஜிஹாதிகளா?

மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்? என்பதுக் குறித்து இதுவரை தெளிவாக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. 






ஆனால் நம்ம நம்பர் ஒன் பத்திரிக்கை தினமலர் முந்திக் கொண்டு வழக்கம் போல் 
இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. என்று செய்தி வெளியிட்டன தினமலரின் அரசியல் அனைவரும் அறிந்த ஒன்று தான். 


என்றாலும் இந்த முறை உள்துறைக்கே யார் குண்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை ஆனால் தினமலர் அதே உள்துறை பெயரைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்ட்டு இருப்பது தான் ஆச்சரியம். இந்த செய்தியை காண்பவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுவதே தினமலரின் நோக்கம். முஸ்லிம்கள் மீது பகையுணர்வும், வெறுப்பும் கொள்ளச் செய்வதே அதன் திட்டம்.


அடுத்தப்படியாக தினமனியில். இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுகிறார். 


சென்னை, ஜூலை.14: மும்பையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மும்பையில் நேற்று மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திக்கின்றனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் உயிரிழக்கவும், பொருட்சேதமும் ஏற்பட காரணமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

குண்டு வேடிப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வண்மையாக கண்டிக்க தக்க செயல் தான் ஆனால் இன்ன பிரிவினர் தான் என்று சொல்வதின் மூலம் இவர்கள் எதற்காக அவசரப்படுகிறார்கள் என்று அம்பலப்பட்டு போயி விடுகின்றனார். இவ்வளவுக்கும் ராமகோபாலன் ரா உளவுப்பிரிவின் உயர் அதிகாரியும் இல்லை.

ஆனால் ரா மற்றும் பல உளவுப் பிரிவுகளை வைத்திருக்கின்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுகிறார்.

மும்பை தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கவில்லை: .சிதம்பரம்

First Published : 14 Jul 2011 11:00:22 AM IST
Last Updated : 14 Jul 2011 11:33:08 AM IST

மும்பை, ஜூலை.14: மும்பை தாக்குதல் தொடர்பாக நம்பகமான உளவுத் தகவல் எதுவும் வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட உள்துறை அமைச்சர் .சிதம்பரம், இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை சீர்குலைக்கச் செய்யும் முயற்சியும் இருக்கலாம் என்றார்.
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்காக பொதுமக்களிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த சிதம்பரம், இந்தியாவில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடிய தகுதி உள்ள அனைத்து பயங்கரவாதக் குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்த தாக்குதல் குறித்து குறிப்பிடத்தகுந்த உளவுத் தகவல் எதுவும் வரவில்லை. அதுபோன்று தகவல்கள் வந்தபோதெல்லாம் அதை அந்தந்த மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம்.

முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவதிகளாக தேசத் தூரோகிகளாக சித்தரிக்க நினைக்கின்ற அதனை பிரச்சாரம் செய்வதில் பல ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளும் துணை நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நடுநிலையாக உள்ள நல்லவர்களும், நேசஉணர்வு கொண்டவர்களும் இந்த சதிக்கு ஆளாகி விரோத உணர்வு கொண்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதற்கு விளக்கம் எழுதும்படி என் உள்ளுணர்வு தூண்டியது.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் (Criminal Laws) கடுமையானவை என்று விமர்சிக்கப்படுகின்றன. அந்தச் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் தண்டனைக்கும், சட்டம் அனுமதிக்காத ‘வெளிப்படை வன்முறை’(Overt Violence)க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிரது.

அதிலும் அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற சமுதாயத்திற்கும் முன்னதாக வழங்கப் பட்டதாகக் கூறுகிறது. அதனால் அனைவரும் பின்பற்றக் கூடிய பொதுசட்டமாக அதனை அறிவிக்கிறது. இதோ திருக்குர்ஆன்:


“கொலைக்குப் பதிலாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும்,ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்ம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.(அல்குர்ஆன் 5:32)

ஆகவே நியாயமான காரணங்களுக்காக நீதிபரிபாலன முறையில் வழங்கப்படும் தண்டனையை தவிர்த்து ஓர் உயிரைக் கொலை செய்வது அனைவரையும் கொலை செய்வதற்கு சம்மாகும் என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது. ஒருபடிமேல் சென்று ஓர் உயிரைக் காப்பாற்றுபவன் அனைவரையும் வாழ வைப்பவன் போலாவான் என்றும் முழங்குகிறது.

அந்தச் சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்களை. அப்பாவி மக்களை கொன்று பூமியில் குழப்பத்தை விளைவிப்பவர்களை “வரம்பு மீறியவர்கள்” என்று குர்ஆன் கண்டிப்பதை பாருங்கள். அவர்கள் "அல்லாஹ்வுடனும், அவன் தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள்"என்றும் அடுத்த வசனத்தில் அது சாடுவதுடன், அவர்களுக்குரிய தண்டனை என்ன என்பதையும் குர்ஆன் வரையறை செய்கிறது. இதோ குர்ஆன் பேசுகிறது :

கொல்லப்படுவது அல்லது சிலுவையில் அறையப்படுவது அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்.அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.(5:33)


அப்பாவி மக்களை எந்தக் காரணமும் இன்றி கொலை செய்து நாட்டில் கலவரங்களைத் தூண்டி குழப்பங்கள் விளைவிக்கும் கொடூரமான குற்றத்துக்கு மிகக் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்தும் திருக்குர்ஆன், அதனை எந்த சந்தர்ப்பத்தில் (Context) விதியாக்கியது என்பதையும் அறிவிக்கிறது. அதற்கு  குர்ஆனின் 5:32 வது வசனம் “இதன் காரணமாகவே” என்ற சொற்றொடருடன் ஆரம்பமாகி முன் வசனங்களின் கருத்துடன் இணைக்கிறது.

ஆதமுடைய புதல்வர்களான காபில் (Cain) ஹாபில் (Abel) இருவரிடையே எழுந்த சர்ச்சையில் ஒரு பாவமும் அறியாத அப்பாவியான ஹாபிலை காபில் கொலை செய்து கொன்று விடும் வரலாற்றுப் பின்னணியிலேயே மேற்கண்ட தண்டனை சட்டம் வழங்கப்படுகிறது.

ஆகவே அப்பாவி மக்களைக் கொல்வது எவ்வளவு பாவமானது, கொடூரமானது, இழிவானது என்பதை இதை விடவும் வன்மையாகவும் கடுமையாகவும் கண்டிக்க முடியுமா? இல்லை, குர்ஆனுக்கு நிகராக வன்முறையைக் கண்டிக்கும் வேதங்களையோ அல்லது சமூக வாழ்வியல் நூல்களையோ காட்ட முடியுமா?


ஆகவே நாட்டில் நடக்கும் குற்றங்களுக்குப் பெயர் ஜிஹாது(அறப்போர்) அல்ல. அதற்கு பெயர் 'ஃபஸாது'(குழப்பவாதிகள்) அதைச் செய்பவர்கள் ஜிஹாதிகளும் அல்ல. முஜாஹித்தீன்களும் அல்ல. அதனைச் செய்பவர்கள் ஃபாஸதிகள். (குழப்பவாதிகள்) ஃபாஸாது என்னும் அரபுச் சொல் உருதுவிலும் ஹிந்தியிலும் ஏன் தமிழ் முஸ்லிம்கள் மத்தியிலும் புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை. ஆகவே இது போன்ற குற்றங்களை வர்ணிப்பதானால் ஊடகங்கள் இனி அந்த வார்த்தையைப் பயன்படுத்தட்டும். சரியான வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் இருக்கும். முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரு அரபிச் சொல்லை பயன்படுத்திய திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும்.

திவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சட்டத்தை கையிலேடுத்து சதி செயல் செய்பவர்கள் இஸ்லாமியரும் அல்ல. இதனை இஸ்லாமிய வரலாறும் நபிகளாரின் வாழ்வும் நமக்கு கற்றுக் கொடுக்கும் உண்மைகள்.

இஸ்லாத்தின் இரண்டாவது கஃலீபா (மக்கள் பிரதிநிதி) உமர் அவர்கள். சிரியா, லெபனான், ஈரான், ஈராக், பாலஸ்தின் என்று 36 நாடுகளை மாநிலமாக கொண்டு ஆட்சி புரிந்த மிகப்பெரிய ஆட்சியாளர். அவர்களை தொழுதுக் கொண்டிருக்கும் போது எதிரி ஒருவன் கத்தியால் ஆழமாக குத்தி விட்டு ஒட முயற்சிக்கும் போது உமரின் மகன் அவனை தடுத்து நிறுத்தி வெட்டுவதற்காக வாளை ஒங்கிய போது.   உமர் அவர்கள் வெட்டு காயத்தோடு தடுத்து மகனே நீ அவனை தண்டிக்க முடியாது இஸ்லாமிய அரசாங்கம் இருக்கிறது கோர்ட் இருக்கிறது அவர்களுக்கு தான் தண்டிக்கும் உரிமை இருக்கிறது. எனவே அவனை பிடி என்றார்கள். அந்த காயத்தினால் உமர் ரலி அவர்கள் இறந்தார்கள். குத்தியவனுக்கு கோர்ட் மரணதண்டனை கொடுத்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


எவருடைய நாசவேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ, அவன் உண்மை முஸ்லிமல்ல.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா,நூல்: முஸ்லிம் 73)

Tuesday, July 12, 2011

மது ஒரு பொதுத்தீமை

மிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
"உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,
பயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.
இளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு"

இம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.

மதுவால் புத்தி பேதலித்தவர்கள் எத்தனைப்பேர்.....?
மதுவால் தற்கொலை செய்தவர்கள் எத்தனைப்பேர்....?
மதுவால் பிறரைக் கொண்றவர்கள் எத்தனைப்பேர்....?

ஒய்வறியாமல் உழைத்து உருக்குலைந்து குடிபோதையில் தடுமாறும் கணவன்மார்களின் கால்களில் மிதிபட்டு, பசி மயக்கத்தில் தள்ளாடும் பிள்ளைகளுக்கு சோறிடும் பொறுப்பைச் சுமந்தபடி அன்றாடம் வாழ்க்கையுடன் போராடும் இலட்சக்கணக்கான தமிழக கிராம பெண்களின் அவலம் உங்களுக்கு தெரியுமா?

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி, குடியானவனை கொன்று விட்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இது அந்த ஏழைக் குடியானவன் இதுவரை அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஒய்வூதியமா என்பதை இந்த அரசு விளக்குமா?

தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்த நிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, இனி மொத்த 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண்மக்களின் வாய்களில் மதுவைத் திணித்துவிட்டு.அப்புறம் என்ன மயி.....க்கு மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எச்சரிக்கை செய்கிறது?

குடிபோதையில் வீட்டிற்கு வராமல் தன் மனைவி குழந்தைகள் வீட்டில் என்னவானார்கள் என்பதைப்பற்றி கூட கண்டுக்கொள்ளாத அவர்களின் பாதுகாப்பு குறித்துக்கூட கவலைப்படாத கணவன்மார்கள்,மதுவால் தன் மகளிடம் தகாத முறையில் நடக்கும் தந்தை, தன் மருமகளிடம் மப்பில் மதி கேட்டு நடக்கும் மாமனார், தன் தாய் மது அருந்த காசு தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்ய துணியும் மகன்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது


மது அருந்தும் தனிப்பட்ட மனிதனோடு அதன் பாதிப்பு நின்றுவிடுவதில்லை. ஆனால் அது அருந்தியவனின் மனைவி, பிள்ளைகள், குடும்பம், வசிக்கும் பகுதி என பாதிப்பின் வலை விரிந்துகொண்டே செல்வதுதான் போராபத்து. சமூகத்தின் பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் ஒருசேர குழித்தோண்டிப் புதைக்கும்.

எனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த மதுவை குறித்த சிறு வரலாற்றுப்பார்வை:

மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறை (Distillation) அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது. இதில் ஒயினை விடவும் கூடுதல் போதை தரும் ‘அல்-கூகுல்’ எனும் திரவத்தைக் கண்டு பிடித்தவர் ஜாபர் இப்னு கையாம் என்பவர். இவர் ஒரு வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுலே பிறகு அல்கஹால்
 என்று அழைக்கப்பட்டது.

ஜாபர் இப்னு கையாம் அதை மருந்தாகத்தான் பயன்படுத்தினார். அவரது நோக்கமும் அதுவே. பிறகு 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். இன்றைய நவீன மது வகைகள் தோன்றிய வரலாறு இதுவே.

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

ஆனால் இன்று தமிழர்கள், திராவிடர்கள் என்று சொல்லப்படுகின்றன தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? சில புள்ளி விபரங்களை பார்ப்போம்.

1.குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.

2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.

3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

4.தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

5.மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம்.

6.மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

7.கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.

நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.


டாஸ்மாக் குடிவெறியில் மனைவி, மகனை 

கொன்ற விவசாயி

போதையில் தடுமாறும் தந்தை
போதையில் பொது இடத்தில் போலீஸ்
சத்தியமா இது திருவிழா கூட்டம் இல்லீங்கே
மாணவர்கள் எதிர்கால இந்திய எங்கே
நிற்கிறது பார்த்தீர்களா?

போதை என்பதே விஷம் தான். அது எந்த வடிவத்தில் சமூகத்தில் நடமாடினாலும் சரி. இந்த பொதுத்தீமையை எதிர்த்துப் போர்த்தொடுப்போம். வைரஸ் காய்ச்சலை விட மிக வேகமாக பரவி வரும் இந்த போதைக் கலாச்சாரத்தை அழிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து நாம் நழுவினால், வருங்கால தலைமுறையினருக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.