பாகிஸ்தான் பிரிந்த நேரம். இந்திய முஸ்லிம்களிடையே அதிலும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு அசாதரணமான சூழ்நிலை நிலவிய தருணம். சங்பரிவாரங்களின் அச்சுறுத்தல் இன்றைக்கு காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருந்த அன்றைய சூழலில் முஸ்லிம்களிடையே இந்நாட்டின் மீதான நம்பிக்கையை எப்படி கொண்டு வருவது?
ஒரு தலைவர் வேண்டும். அவர் நம்பிக்கை வளர்ப்பவராக 
அரவணைத்து செல்பவராக இருத்தல் வேண்டும். இந்த இடத்தை அருமையான நிரப்பினர் 
நேரு. 1948-ஆம் ஆண்டு, ஒரு இக்கட்டான சூழலில் அலிகார் முஸ்லிம் 
பல்கலைகழகத்தில் உரையாற்றுகின்றார் நேரு. தி ஹிந்து இதழ் தமிழில் 
வெளியிட்டிருந்த அந்த பேச்சு உண்மையில் கண்ணீர் மல்க செய்தது. என்னவொரு 
அருமையான பேச்சு அது!!! 
நேரு இல்லாத இந்தியா எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் 
என்பதை இந்த பேச்சை படித்த பிறகு நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை 
என்னால். நீங்களும் படியுங்கள், உங்கள் சந்ததியினருக்கும் படிக்க 
கொடுங்கள்..
அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 
வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும் கண்ணோட்டத்தாலும் 
நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், 
நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு 
உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் 
துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் 
நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க 
முடியாததாகவும் காட்சியளிக்கிறது. 
இருந்தாலும், நாம் நமது இந்த 
நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் 
எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும். நாம் இப்போது எங்கே 
நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் 
பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். 
எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது 
நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை 
வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும் போய்விடும். 
சுமுகமாக உடன்படுவோம்... 
சுமுகமாக மாறுபடுவோம்
உங்கள் துணைவேந்தரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். உங்களை 
யெல்லாம் சந்திக்க வேண்டுமென்பது என் விருப்பம். அப்படிச் சந்தித்து உங்கள்
 மனதை ஊடுருவிப் பார்க்க வேண்டுமென்றும், என் மனதில் என்ன இருக்கிறது 
என்பதை நீங்கள் ஊடுருவிப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க 
வேண்டும் என்றும் நான் விரும்பினேன். நாம் அனைவரும் ஒருவரையொருவர் 
புரிந்துகொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலும் நம்மால் உடன்பட முடியவில்லை 
என்றாலும் குறைந்த பட்சம், மாறுபடுவதற்காவது சுமுகமாக ஒப்புக்கொள்ள 
வேண்டும்; எங்கே நாம் உடன்படுகிறோம், எங்கே நாம் மாறுபடுகிறோம் என்பதைத் 
தெரிந்துகொள்ள வேண்டும். 
மீள்திறன் கொண்டதே இளமை
உணர்வுபூர்வமான இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆறு மாதங்களின் 
நிகழ்வுகள் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. நம் ஆன்மா 
அவமானப் படுத்தப்பட்டிருப்பதுதான் எல்லாவற்றையும்விட மோசம். வாழ்க்கையில் 
எவ்வளவோ பார்த்துவிட்ட முதியவர்களுக்குப் பட்டதெல்லாம் போதும் என்ற நிலை 
ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வாழ்வின் ஆரம்ப நிலையில் இருக்கும் இளைஞர்களின் 
நிலை? இவ்வளவு பேரழிவுகளையும் நாசங்களை யும் பார்த்ததற்குப் பிறகும் 
அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கிறேன். 
இதிலிருந்தெல்லாம் அவர்கள் மீண்டுவிடுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே 
இல்லை, எதிலிருந்தும் மீளக்கூடியதுதானே இளமை என்பது. ஆனால், இந்த வடுவை 
அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் நெஞ்சில் சுமக்க வேண்டியிருக்கும் 
என்பதுதான் கொடுமை. நாமெல்லாம் சரியான விதத்தில் சிந்தித்துச் செயல்படக் 
கூடியவர்களாக இருந்தால், அந்த வடுவை அகற்றுவதில் இப்போதே நம்மால் வெற்றிபெற
 முடியும். 
நொறுங்கிப்போன கனவுகள்; உறுதியான லட்சியங்கள்
என் தரப்பிலிருந்து நான் சொல்ல விரும்புவது இதுதான்: எல்லாவற்றுக்குப் 
பிறகும், இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை 
இருக்கிறது. உண்மையில், எனக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடில் ஊக்கமுடன் 
பாடுபடு வதற்கு என்னால் முடியாமல் போயிருக்கும். எனது நெடுநாள் கனவுகள் பல,
 சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப்போயிருந்தாலும்கூட, அடிப்படை
 நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது; அது மாறுவதற்கும் 
வாய்ப்பில்லை. உயர்ந்த லட்சியங்களாலும் உன்னத முயற்சியாலும் ஆன சுதந்திரமான
 இந்தியாவை உருவாக்க முயல்வதுதான் அந்த நோக்கம். அந்த இந்தியாவில் 
அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்கும்; வெவ்வேறு சிந்தனைப் போக்குகளும் 
பண்பாடுகளும் ஒன்றுசேர்ந்து மக்களின் முன்னேற்றத்துக்கும் 
மேம்பாட்டுக்குமான பெரும் பிரவாகத்தை உருவாக்கும். 
இந்தியாவின் பலம்
இந்தியத் தாயைக் குறித்து நான் பெருமை கொள்கிறேன்; அவளுடைய தொன்மையான, 
மாபெரும் பாரம்பரியத்துக்காக மட்டும் அல்ல; தன் மனதின் கதவுகளையும் 
ஜன்னல்களையும் கூடவே ஆன்மாவையும் திறந்துவைத்திருப்பவள். அவற்றின் வழியாக, 
தூர தேசங்களிலிருந்து வீசும் புத்துணர்வுமிக்க, வலுவூட்டக்கூடிய 
காற்றோட்டத்தை வர அனுமதிப்பவள்; இப்படியாக, தன் தொன்மை வளத்துக்கு மேலும் 
வளம் சேர்க்கக் கூடிய அவளுடைய மாபெரும் திறன்குறித்தும் நான் பெருமை 
கொள்கிறேன். 
இரண்டுமடங்கு பலம் கொண்டவள் இந்தியத் தாய். காலம்காலமாகச் 
செழித்தோங்கிய அவளுடைய சொந்தக் கலாச்சாரம் ஒரு பலம் என்றால், பிற 
இடங்களிலிருந்து திரட்டி அதன் மூலம் தன் வளத்தை அதிகரிக்கச் செய்யும் திறன்
 இன்னொரு பலம். வெளியிலிருந்து பாய்ந்துவரும் நீரோட்டங்களில் மூழ்கிப்போகாத
 அளவுக்குப் பலம் மிக்கவள் அவள். அதே போல் அந்த நீரோட்டங்களிலிருந்து 
தனித்துப்போய்விடாத அளவுக்குப் புத்திக்கூர்மை மிக்கவள் அவள். மேலும், 
இந்தியாவின் உண்மையான வரலாற்றில், சங்கமம் என்பது தொடர்ச்சியாக 
இருந்திருக்கிறது; பன்மைத்தன்மை கொண்ட, ஆனால், அடிப்படையில் ஒன்றுபட்ட 
இந்தக் கலாச்சாரமானது, காலம்தோறும் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அநேகமாக 
பாதிப்புக்கு உள்ளாகாமல்தான் இருந்திருக்கிறது. 
நீங்கள் பெருமை கொள்கிறீர்களா?
நம் பாரம்பரியம்குறித்தும், அறிவிலும் கலாச்சாரத்திலும் நமக்கு மேன்மை நிலை
 கொடுத்த நம் முன்னோர்கள்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன் என்று சொன்னேன்
 அல்லவா? இந்த வரலாறுகுறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? நீங்களும் 
இதன் பங்குதாரர்கள் என்றும் வாரிசுகள் என்றும் உணர்கிறீர்களா? அப்படி 
உணர்ந்துகொண்டு, எனக்கு எந்த அளவுக்குச் சொந்தமாக இருக்கிறதோ அதே அளவுக்கு 
உங்களுக்கும் சொந்தமாக இருக்கும் அந்த வரலாறுகுறித்துப் பெருமை 
கொள்கிறீர்களா? அல்லது அதை அந்நியமாக உணர்ந்து அதைப் புரிந்துகொள்ளாமலேயே 
கடந்துசென்றுவிடுகிறீர்களா? அல்லது, இந்த மாபெரும் பொக்கிஷத்துக்குப் 
பாதுகாவலர்களும் வாரிசுகளும் நாம்தான் என்று உணர்வதால் உண்டாகும் அதிசய 
உணர்வைக் கொள்கிறீர்களா? நான் இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்பதற்குக் 
காரணம் இருக்கிறது. 
தவறான பாதைகளை நோக்கி மக்களின் மனங்களைத் 
திசைதிருப்புவதிலும் வரலாற்றின் போக்கைத் திரிப்பதிலும் நிறைய சக்திகள் 
ஈடுபட்டிருக்கின்றன. நீங்களெல்லாம் இஸ்லாமியர்கள்; நான் ஒரு இந்து. நாம் 
வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாகவோ, எந்த மதங்களையும் 
பின்பற்றாதவர்களாகவோ இருக்கலாம். எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ 
அதே அளவுக்கு உங்களுக்கும் உரிமை இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியத்தை, 
நீங்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்லியெல்லாம் உங்களிடமிருந்து 
தட்டிப்பறித்துவிட முடியாது. கடந்த காலம் நம்மைப் பிணைக்கிறது; 
நிகழ்காலமும் எதிர்காலமும் உணர்வால் ஏன் நம்மைப் பிரிக்க வேண்டும்? 
வரலாற்றோடு விளையாடுதல்
அரசியல் மாற்றங்கள் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒரு நாட்டின் 
உணர்விலும் பார்வையிலும்தான் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில 
மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் என்னைப் பெருமளவில் வேதனைக்குள்ளாக்கிவருவது 
அரசியல் மாற்றங்கள் அல்ல; நமது உணர்வில் மெல்லமெல்ல ஏற்பட்ட மாற்றம் 
நமக்கிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்தியிருப்பதுதான், அதிக அளவுக்கு என்னை 
வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய உணர்வில் மாற்றம் ஏற்படுத்த 
முயல்வதென்பது நெடும் காலமாக நாம் கடந்துவந்த வரலாற்றின் போக்கை அப்படியே 
புரட்டிப்போட முயற்சிக்கும் செயலாகும். 
வரலாற்றின் போக்கைப் புரட்டிப் போட 
நாம் முயற்சித்ததுதான் நம்மைச் சாய்த்துவிட்ட பேரழிவுக்குக் காரணம். 
பூகோளத்துடனோ, வரலாற்றை உருவாக்கும் வலுவான போக்கு களுடனோ விளையாடுவதென்பது
 அவ்வளவு எளி தல்ல. நம் செயல்களின் விளைவாக வெறுப்பையும் வன்முறையையும் 
நாம் உருவாக்கினோமென்றால், அது முடிவே இல்லாத தீங்கை உருவாக்கும் என்பதை 
நாம் மறந்துவிடக் கூடாது. 
பாகிஸ்தான் நமக்கு ஏன் முக்கியம்?
ஒருவழியாக, பாகிஸ்தான் உருவாகிவிட்டது, என்னைப் பொருத்தவரை சற்று இயல்பற்ற 
விதத்தில். இருந்தாலும், பெரும் எண்ணிக்கையி லான நபர்களின் உணர்வை அது 
அடையாளப்படுத்துகிறது. இந்த நிலை என்பது ஒரு பின்னடைவு என்றே நான் 
நம்புகிறேன். ஆனாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்கிறேன்.
 நமது தற்போதைய கண்ணோட்டம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாகப் 
புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 
பாகிஸ்தானின் கழுத்தை நெரித்து அதை நசுக்கி இந்தியாவுடன் இணையச் சொல்லி 
வற்புறுத்த வேண்டுமென்று நாமெல்லாம் வெறியேற்றப் பட்டிருக்கிறோம். மற்ற 
எல்லா வெறிகளையும் போலவே, பயத்தின் அடிப்படையிலும், நமது இயல்பை நாம் 
முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையிலும் 
ஏற்பட்டிருப்பதுதான் அந்த வெறியும். இந்தியாவும் பாகிஸ்தானும் 
ஒன்றுக்கொன்று நெருங்கிவருவது தவிர்க்க முடியாதது என்பதைப் பல்வேறு 
காரணங்கள் அடிப்படையில் நான் நம்புகிறேன். இல்லாவிட்டால் அவை 
அடித்துக்கொள்ள நேரிடும். 
இந்த இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலை என்று 
ஒன்று கிடையவே கிடையாது. நீண்ட காலமாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் 
நாம், பார்த்தும் பார்க்காமல் இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள் 
மாதிரியெல்லாம் நம்மால் இருந்துவிட முடியாது. இன்றைய உலகச் சூழலை வைத்துப் 
பார்க்கும்போது மற்ற பல அண்டை நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நல்லுறவைப் 
பேணுவது அவசியம் என்றே நான் நம்புகிறேன். அதனால், பாகிஸ்தானின் கழுத்தை 
நெரிக்க வேண்டும் என்றோ அதைப் பலவந்தப்படுத்த வேண்டும் என்றோ 
அர்த்தமாகிவிடாது. பலவந்தம் என்பதே இருக்கக் கூடாது. 
பாகிஸ்தானைச் சீர்குலைக்க முயலும் எந்த ஒரு முயற்சியும் இந்தியாவுக்கு 
எதிரானதாகவே மாறிவிடும். பாகிஸ்தானைப் பிளவுபடுத்த வேண்டும் என்று நாம் 
விரும்பினோமென்றால், பிரிவினைக்கு ஏன் நாம் அப்போது சம்மதித்திருக்க 
வேண்டும்? எல்லாம் நடந்து முடிந்த பிறகு, இந்த நிலையில் தடுக்க 
முயல்வதைவிட, அப்போது தடுத்திருப்பது சற்றே எளிதான காரியம்தான். ஆனால், 
வரலாற்றைப் பொருத்தவரை பின்னோக்கிச் செல்வது என்பது இயலாத காரியம். 
பாதுகாப்பான, வளம்மிக்க ஒரு நாடாக பாகிஸ்தான் உருவெடுக்க வேண்டியதும் 
அதனுடன் நெருக்கமான, நட்புணர்வு மிக்க உறவை நாம் பேண வேண்டியதும் 
இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதுதான் உண்மை. இந்தியாவும் பாகிஸ்தானும் 
மறுபடியும் இணைவதற்கான ஒரு வாய்ப்பு இன்று எனக்கு வழங்கப்படுமானால், 
தெளிவான சில காரணங்களுக்காக அதை நான் மறுத்துவிடுவேன். 
பாகிஸ்தானுக்கே உரித்தான பெரும் பிரச்சினைகளையும் சேர்த்துச் சுமக்க நான் 
விரும்பவில்லை; ஏற்கெனவே, போதும்போதும் என்ற அளவுக்கு எனக்கென்று ஏகப்பட்ட 
பிரச்சினைகள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான எந்த ஒரு 
ஒத்துழைப்பும் இயல்பான வழிமுறைகளின் அடிப்படையில் வர வேண்டும். அதாவது, பல 
நாடுகள் ஒன்றுசேர்ந்து இயங்கவிருக்கும் ஒரு மாபெரும் ஐக்கியத்தில் 
பாகிஸ்தானுக்கும் சமமான பங்கை அளிக்கும் வழிமுறைகளின் அடிப்படையில்தான் 
ஒத்துழைப்பு வர வேண்டுமே ஒழிய, பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை இல்லாமல் 
ஆக்கிவிட்டு வரக் கூடாது. 
ஒரே உலகத்தை நோக்கி…
நான் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. உங்கள் 
எல்லாருடைய மனதிலும் பாகிஸ்தான் பற்றி ஓடிக்கொண்டிருக்கும். அதுகுறித்து 
நம் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய விரும்பியிருக்கலாம்.
 உங்கள் மனது குழப்பமான ஒரு நிலையில் இப்போது இருக்கக்கூடும். எந்தத் 
திசையில் பார்ப்பது, என்ன செய்வது என்றெல்லாம் தெரியாமல் 
குழம்பிப்போயிருக்கக் கூடும். சில விஷயங்கள் மீது நமக்கு இருக்கும் 
அடிப்படையான பற்றுதலைக் குறித்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். 
எல்லா மதங்களையும் எல்லா விதமான சிந்தனைப் போக்குகளையும் உள்ளடக்கி னாலும் 
அடிப்படையில் மதச்சார்பற்றதாக இருக்கும் ஒரு தேசியத்தில் நாம் எல்லாம் 
நம்பிக்கை வைத்திருக்கிறோமா? அல்லது மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் 
அடிப்படையிலானதும் மற்ற மார்க்கத்தினரையெல்லாம் புறவினத்தாராகக் 
கருதுவதுமான தேசியத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோமா? மதம், 
மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலான தேசம் என்ற கருத்தை உலகம் சில 
நூற்றாண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டதாலும் நவீன மனிதனின் மனதில் 
அந்தக் கருத்துக்கு இடம் இல்லை என்பதாலும் அந்தக் கேள்வி விசித்திரமான 
ஒன்றுதான். இருந்தாலும், இன்றைய இந்தியாவில் இந்தக் கேள்வியை முன்வைத்தே ஆக
 வேண்டியிருக்கிறது. ஏனெனில், நம்மில் பலர் நம் கடந்த காலத்தை நோக்கித் 
தாவிச் செல்ல முயல்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்விக்கு நாம் 
வைத்திருக்கும் பதில் என்னவாக இருந்தாலும், உலகமெங்கும் காலாவதி ஆனதும் 
நவீனச் சிந்தனைகளுக்கு சரிவராததுமான அந்தச் சிந்தனையை நோக்கிப் 
பின்செல்வதற்கு சாத்தியமே இல்லை. 
இந்தியாவைப் பொருத்தவரை ஓரளவு நிச்சயத்துடன் என்னால் பேச முடியும். வலுவான 
போக்குகளுக்கு இணங்க மதச்சார்பின்மை, தேசியம் ஆகிய வழிகளில் நாம் 
சர்வதேசியத்தை நோக்கி நடைபோடுவோம். நிகழ்காலம் என்னதான் 
குழப்பங்களைக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் எதிர்காலம் என்பது அதன் கடந்த 
காலத்தைப் போலவே அனைத்து நம்பிக்கைகளையும் சமமாகக் கருதி மதிப்பதாகத்தான் 
இருக்கும். ஆனால், தேசியம் என்பதைப் பொருத்தவரை ஒன்றுபட்ட பார்வை 
கொண்டிருக்குமே தவிர, கிணற்றுத் தவளையாக இருக்கும் தேசியவாதத்தைக் 
கொண்டிருக்காது என்றே நான் நம்புகிறேன். ஆனால், அது தன் மக்களின் 
அறிவுத்திறனில் நம்பிக்கை வைத்திருக்கும் தேசியமாக இருக்கும்; 
சகிப்புத்தன்மை, படைப்பூக்கம் மிக்க தேசியமாக இருக்கும்; சர்வதேசத் 
தரத்திலான அமைப்பை நிறுவுவதில் பங்கெடுக்கும் தேசியமாக இருக்கும். 
‘ஒரே 
உலகம்’என்பதுதான் நமது இறுதி இலக்காக இருக்க முடியும். ஆனால், 
ஒன்றுக்கொன்று சண்டையிடும் அணிகள், மூன்றாம் உலகப் போருக்கான குரல்கள், 
அதற்கான ஏற்பாடுகள் என்றிருக்கும் இந்த நிலையில், அந்த இலக்கு சாத்தியமற்ற 
ஒன்றாகவே தோன்றலாம். இந்த ஆபத்துகளுக்கெல்லாம் மத்தியில் நாம் 
தேர்ந்தெடுக்கும் இலக்கு அது ஒன்றாகவே இருக்க முடியும். ஏனென்றால் ‘உலக 
நல்லுறவு’க்கு மாற்று என்பது ‘பேரழிவு’தான். 
மதமும் கல்வியும்
இந்த விசாலமான மனப்பான்மையைத்தான் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, 
குறுகிய மனப்பான்மை கொண்டவர்களைப் பின்பற்றி உணர்விலும் மனப்பான்மையிலும் 
நாம் குறுகிப்போய்விடக் கூடாது. மதப்பிரிவினைவாதம் என்று அழைக்கப்படும் 
அந்த ஒன்றால், இந்த நாட்டில் நாம் பட்டதெல்லாம் போதும்; கசப்பும் 
விஷத்தன்மையும் கொண்ட அதன் கனிகளை நாம் சுவைத்திருக்கிறோம். இந்த மதவாத 
உணர்வு எங்கும் ஊடுருவுவதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் கல்வி 
நிறுவனங்களில் ஊடுருவுவதை அடியோடு விரும்ப மாட்டேன். 
கல்வி என்பது 
மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி, 
கூண்டுக்குள் போட்டு அடைத்துவைப்பதற்கானது அல்ல. வாரணாசிப் பல்கலைக்கழகம், 
இந்துப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதை நான் எப்படி விரும்பவில்லையோ 
அதேபோல் இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று 
அழைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. இதனால், ஒரு பல்கலைக்கழகம் என்பது 
குறிப்பிட்ட கலாச்சாரத் துறைகளிலோ ஆய்வுகளிலோ தனிக்கவனம் செலுத்தக் கூடாது 
என்றில்லை. இஸ்லாமியச் சிந்தனை, கலாச்சாரம் போன்றவற்றின் சில அம்சங்களுக்கு
 இந்தப் பல்கலைக்கழகம் சிறப்புக் கவனம் செலுத்துவது சரிதான் என்றே நான் 
நினைக்கிறேன்.
என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்த்து, நீங்களாகவே 
ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த 
முடிவுகளையெல்லாம் உங்கள் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. 
இருந்தும், நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாத விதத்தில் நிகழும் சம்பவங்கள், 
குறிப்பிட்ட விதத்தில் முடிவெடுக்கும்படி உங்களைக் கட்டாயப்படுத்தும் 
என்பது உண்மைதான். நீங்களெல்லாம் உங்களை அந்நியர்களாகக் கருதாதீர்கள். 
எல்லாரையும் போலவே ரத்தத்தாலும் சதையாலும் நீங்களும் இந்தியரே. இந்தியா 
வழங்கும் எதிலும் பங்குபெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. 
ஆனால், உரிமைகளைக் கோரும் யாரும் கடமைகளிலும் அவசியம் பங்கெடுக்க வேண்டும்.
 
உண்மையில், கடமைகளும் கடப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உரிமைகள் 
தாமாகவே வந்துசேரும். சுதந்திர இந்தியாவின் சுதந்திரக் குடிமக்களாக இந்த 
மாபெரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு செய்வதற்கு உங்கள் 
எல்லாரையும் நான் வரவேற்கிறேன்; எல்லாரையும் போலவே நீங்களும் அதன் 
பங்குதாரர்களாக இருக்கவும் அதன் பாதையில் வரும் வெற்றி தோல்வி எதுவாக 
இருந்தாலும், அதில் பங்குகொள்ளவும் உங்களை நான் வரவேற்கிறேன். 
துன்பங்களையும் துயரங்களை யும் கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் 
கடந்துபோய்விடும். எதிர்காலம்தான் நமக்கு முக்கியம். குறிப்பாக, 
இளையோருக்கு, உங்களை அழைப்பது அந்த எதிர்காலம்தான். அதன் குரலுக்கு என்ன 
பதில் சொல்லப்போகிறீர்கள் நீங்கள்? 
1948, ஜனவரி, 24-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேரு ஆற்றிய உரை
தமிழில்: ஆசை
நன்றி : தி இந்து Published: November 14, 2013
நன்றி : தி இந்து Published: November 14, 2013
 


 


.jpg)
.jpg)
.jpg)
.jpg)


.jpg)
