Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Sunday, November 17, 2013

இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது.



பாகிஸ்தான் பிரிந்த நேரம். இந்திய முஸ்லிம்களிடையே அதிலும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு அசாதரணமான சூழ்நிலை நிலவிய தருணம். சங்பரிவாரங்களின் அச்சுறுத்தல் இன்றைக்கு காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருந்த அன்றைய சூழலில் முஸ்லிம்களிடையே இந்நாட்டின் மீதான நம்பிக்கையை எப்படி கொண்டு வருவது? 

ஒரு தலைவர் வேண்டும். அவர் நம்பிக்கை வளர்ப்பவராக அரவணைத்து செல்பவராக இருத்தல் வேண்டும். இந்த இடத்தை அருமையான நிரப்பினர் நேரு. 1948-ஆம் ஆண்டு, ஒரு இக்கட்டான சூழலில் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் உரையாற்றுகின்றார் நேரு. தி ஹிந்து இதழ் தமிழில் வெளியிட்டிருந்த அந்த பேச்சு உண்மையில் கண்ணீர் மல்க செய்தது. என்னவொரு அருமையான பேச்சு அது!!! 

நேரு இல்லாத இந்தியா எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் என்பதை இந்த பேச்சை படித்த பிறகு நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்னால். நீங்களும் படியுங்கள், உங்கள் சந்ததியினருக்கும் படிக்க கொடுங்கள்..


அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும் கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. 

இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும். நாம் இப்போது எங்கே நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும் போய்விடும்.
சுமுகமாக உடன்படுவோம்...
சுமுகமாக மாறுபடுவோம்

உங்கள் துணைவேந்தரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். உங்களை யெல்லாம் சந்திக்க வேண்டுமென்பது என் விருப்பம். அப்படிச் சந்தித்து உங்கள் மனதை ஊடுருவிப் பார்க்க வேண்டுமென்றும், என் மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் ஊடுருவிப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். நாம் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலும் நம்மால் உடன்பட முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம், மாறுபடுவதற்காவது சுமுகமாக ஒப்புக்கொள்ள வேண்டும்; எங்கே நாம் உடன்படுகிறோம், எங்கே நாம் மாறுபடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மீள்திறன் கொண்டதே இளமை

உணர்வுபூர்வமான இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆறு மாதங்களின் நிகழ்வுகள் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. நம் ஆன்மா அவமானப் படுத்தப்பட்டிருப்பதுதான் எல்லாவற்றையும்விட மோசம். வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துவிட்ட முதியவர்களுக்குப் பட்டதெல்லாம் போதும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வாழ்வின் ஆரம்ப நிலையில் இருக்கும் இளைஞர்களின் நிலை? இவ்வளவு பேரழிவுகளையும் நாசங்களை யும் பார்த்ததற்குப் பிறகும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கிறேன். இதிலிருந்தெல்லாம் அவர்கள் மீண்டுவிடுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை, எதிலிருந்தும் மீளக்கூடியதுதானே இளமை என்பது. ஆனால், இந்த வடுவை அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் நெஞ்சில் சுமக்க வேண்டியிருக்கும் என்பதுதான் கொடுமை. நாமெல்லாம் சரியான விதத்தில் சிந்தித்துச் செயல்படக் கூடியவர்களாக இருந்தால், அந்த வடுவை அகற்றுவதில் இப்போதே நம்மால் வெற்றிபெற முடியும்.
நொறுங்கிப்போன கனவுகள்; உறுதியான லட்சியங்கள்

என் தரப்பிலிருந்து நான் சொல்ல விரும்புவது இதுதான்: எல்லாவற்றுக்குப் பிறகும், இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், எனக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடில் ஊக்கமுடன் பாடுபடு வதற்கு என்னால் முடியாமல் போயிருக்கும். எனது நெடுநாள் கனவுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப்போயிருந்தாலும்கூட, அடிப்படை நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது; அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை. உயர்ந்த லட்சியங்களாலும் உன்னத முயற்சியாலும் ஆன சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முயல்வதுதான் அந்த நோக்கம். அந்த இந்தியாவில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்கும்; வெவ்வேறு சிந்தனைப் போக்குகளும் பண்பாடுகளும் ஒன்றுசேர்ந்து மக்களின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான பெரும் பிரவாகத்தை உருவாக்கும்.
இந்தியாவின் பலம்

இந்தியத் தாயைக் குறித்து நான் பெருமை கொள்கிறேன்; அவளுடைய தொன்மையான, மாபெரும் பாரம்பரியத்துக்காக மட்டும் அல்ல; தன் மனதின் கதவுகளையும் ஜன்னல்களையும் கூடவே ஆன்மாவையும் திறந்துவைத்திருப்பவள். அவற்றின் வழியாக, தூர தேசங்களிலிருந்து வீசும் புத்துணர்வுமிக்க, வலுவூட்டக்கூடிய காற்றோட்டத்தை வர அனுமதிப்பவள்; இப்படியாக, தன் தொன்மை வளத்துக்கு மேலும் வளம் சேர்க்கக் கூடிய அவளுடைய மாபெரும் திறன்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன். 

இரண்டுமடங்கு பலம் கொண்டவள் இந்தியத் தாய். காலம்காலமாகச் செழித்தோங்கிய அவளுடைய சொந்தக் கலாச்சாரம் ஒரு பலம் என்றால், பிற இடங்களிலிருந்து திரட்டி அதன் மூலம் தன் வளத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் இன்னொரு பலம். வெளியிலிருந்து பாய்ந்துவரும் நீரோட்டங்களில் மூழ்கிப்போகாத அளவுக்குப் பலம் மிக்கவள் அவள். அதே போல் அந்த நீரோட்டங்களிலிருந்து தனித்துப்போய்விடாத அளவுக்குப் புத்திக்கூர்மை மிக்கவள் அவள். மேலும், இந்தியாவின் உண்மையான வரலாற்றில், சங்கமம் என்பது தொடர்ச்சியாக இருந்திருக்கிறது; பன்மைத்தன்மை கொண்ட, ஆனால், அடிப்படையில் ஒன்றுபட்ட இந்தக் கலாச்சாரமானது, காலம்தோறும் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அநேகமாக பாதிப்புக்கு உள்ளாகாமல்தான் இருந்திருக்கிறது.
நீங்கள் பெருமை கொள்கிறீர்களா?

நம் பாரம்பரியம்குறித்தும், அறிவிலும் கலாச்சாரத்திலும் நமக்கு மேன்மை நிலை கொடுத்த நம் முன்னோர்கள்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? இந்த வரலாறுகுறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? நீங்களும் இதன் பங்குதாரர்கள் என்றும் வாரிசுகள் என்றும் உணர்கிறீர்களா? அப்படி உணர்ந்துகொண்டு, எனக்கு எந்த அளவுக்குச் சொந்தமாக இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் சொந்தமாக இருக்கும் அந்த வரலாறுகுறித்துப் பெருமை கொள்கிறீர்களா? அல்லது அதை அந்நியமாக உணர்ந்து அதைப் புரிந்துகொள்ளாமலேயே கடந்துசென்றுவிடுகிறீர்களா? அல்லது, இந்த மாபெரும் பொக்கிஷத்துக்குப் பாதுகாவலர்களும் வாரிசுகளும் நாம்தான் என்று உணர்வதால் உண்டாகும் அதிசய உணர்வைக் கொள்கிறீர்களா? நான் இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. 

தவறான பாதைகளை நோக்கி மக்களின் மனங்களைத் திசைதிருப்புவதிலும் வரலாற்றின் போக்கைத் திரிப்பதிலும் நிறைய சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. நீங்களெல்லாம் இஸ்லாமியர்கள்; நான் ஒரு இந்து. நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாகவோ, எந்த மதங்களையும் பின்பற்றாதவர்களாகவோ இருக்கலாம். எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் உரிமை இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியத்தை, நீங்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்லியெல்லாம் உங்களிடமிருந்து தட்டிப்பறித்துவிட முடியாது. கடந்த காலம் நம்மைப் பிணைக்கிறது; நிகழ்காலமும் எதிர்காலமும் உணர்வால் ஏன் நம்மைப் பிரிக்க வேண்டும்?
வரலாற்றோடு விளையாடுதல்

அரசியல் மாற்றங்கள் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒரு நாட்டின் உணர்விலும் பார்வையிலும்தான் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் என்னைப் பெருமளவில் வேதனைக்குள்ளாக்கிவருவது அரசியல் மாற்றங்கள் அல்ல; நமது உணர்வில் மெல்லமெல்ல ஏற்பட்ட மாற்றம் நமக்கிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்தியிருப்பதுதான், அதிக அளவுக்கு என்னை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய உணர்வில் மாற்றம் ஏற்படுத்த முயல்வதென்பது நெடும் காலமாக நாம் கடந்துவந்த வரலாற்றின் போக்கை அப்படியே புரட்டிப்போட முயற்சிக்கும் செயலாகும். 

வரலாற்றின் போக்கைப் புரட்டிப் போட நாம் முயற்சித்ததுதான் நம்மைச் சாய்த்துவிட்ட பேரழிவுக்குக் காரணம். பூகோளத்துடனோ, வரலாற்றை உருவாக்கும் வலுவான போக்கு களுடனோ விளையாடுவதென்பது அவ்வளவு எளி தல்ல. நம் செயல்களின் விளைவாக வெறுப்பையும் வன்முறையையும் நாம் உருவாக்கினோமென்றால், அது முடிவே இல்லாத தீங்கை உருவாக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பாகிஸ்தான் நமக்கு ஏன் முக்கியம்?

ஒருவழியாக, பாகிஸ்தான் உருவாகிவிட்டது, என்னைப் பொருத்தவரை சற்று இயல்பற்ற விதத்தில். இருந்தாலும், பெரும் எண்ணிக்கையி லான நபர்களின் உணர்வை அது அடையாளப்படுத்துகிறது. இந்த நிலை என்பது ஒரு பின்னடைவு என்றே நான் நம்புகிறேன். ஆனாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்கிறேன். நமது தற்போதைய கண்ணோட்டம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பாகிஸ்தானின் கழுத்தை நெரித்து அதை நசுக்கி இந்தியாவுடன் இணையச் சொல்லி வற்புறுத்த வேண்டுமென்று நாமெல்லாம் வெறியேற்றப் பட்டிருக்கிறோம். மற்ற எல்லா வெறிகளையும் போலவே, பயத்தின் அடிப்படையிலும், நமது இயல்பை நாம் முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையிலும் ஏற்பட்டிருப்பதுதான் அந்த வெறியும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று நெருங்கிவருவது தவிர்க்க முடியாதது என்பதைப் பல்வேறு காரணங்கள் அடிப்படையில் நான் நம்புகிறேன். இல்லாவிட்டால் அவை அடித்துக்கொள்ள நேரிடும். 

இந்த இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலை என்று ஒன்று கிடையவே கிடையாது. நீண்ட காலமாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் நாம், பார்த்தும் பார்க்காமல் இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள் மாதிரியெல்லாம் நம்மால் இருந்துவிட முடியாது. இன்றைய உலகச் சூழலை வைத்துப் பார்க்கும்போது மற்ற பல அண்டை நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நல்லுறவைப் பேணுவது அவசியம் என்றே நான் நம்புகிறேன். அதனால், பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்க வேண்டும் என்றோ அதைப் பலவந்தப்படுத்த வேண்டும் என்றோ அர்த்தமாகிவிடாது. பலவந்தம் என்பதே இருக்கக் கூடாது.

பாகிஸ்தானைச் சீர்குலைக்க முயலும் எந்த ஒரு முயற்சியும் இந்தியாவுக்கு எதிரானதாகவே மாறிவிடும். பாகிஸ்தானைப் பிளவுபடுத்த வேண்டும் என்று நாம் விரும்பினோமென்றால், பிரிவினைக்கு ஏன் நாம் அப்போது சம்மதித்திருக்க வேண்டும்? எல்லாம் நடந்து முடிந்த பிறகு, இந்த நிலையில் தடுக்க முயல்வதைவிட, அப்போது தடுத்திருப்பது சற்றே எளிதான காரியம்தான். ஆனால், வரலாற்றைப் பொருத்தவரை பின்னோக்கிச் செல்வது என்பது இயலாத காரியம். பாதுகாப்பான, வளம்மிக்க ஒரு நாடாக பாகிஸ்தான் உருவெடுக்க வேண்டியதும் அதனுடன் நெருக்கமான, நட்புணர்வு மிக்க உறவை நாம் பேண வேண்டியதும் இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதுதான் உண்மை. இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் இணைவதற்கான ஒரு வாய்ப்பு இன்று எனக்கு வழங்கப்படுமானால், தெளிவான சில காரணங்களுக்காக அதை நான் மறுத்துவிடுவேன்.

பாகிஸ்தானுக்கே உரித்தான பெரும் பிரச்சினைகளையும் சேர்த்துச் சுமக்க நான் விரும்பவில்லை; ஏற்கெனவே, போதும்போதும் என்ற அளவுக்கு எனக்கென்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான எந்த ஒரு ஒத்துழைப்பும் இயல்பான வழிமுறைகளின் அடிப்படையில் வர வேண்டும். அதாவது, பல நாடுகள் ஒன்றுசேர்ந்து இயங்கவிருக்கும் ஒரு மாபெரும் ஐக்கியத்தில் பாகிஸ்தானுக்கும் சமமான பங்கை அளிக்கும் வழிமுறைகளின் அடிப்படையில்தான் ஒத்துழைப்பு வர வேண்டுமே ஒழிய, பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை இல்லாமல் ஆக்கிவிட்டு வரக் கூடாது.
ஒரே உலகத்தை நோக்கி…

நான் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. உங்கள் எல்லாருடைய மனதிலும் பாகிஸ்தான் பற்றி ஓடிக்கொண்டிருக்கும். அதுகுறித்து நம் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய விரும்பியிருக்கலாம். உங்கள் மனது குழப்பமான ஒரு நிலையில் இப்போது இருக்கக்கூடும். எந்தத் திசையில் பார்ப்பது, என்ன செய்வது என்றெல்லாம் தெரியாமல் குழம்பிப்போயிருக்கக் கூடும். சில விஷயங்கள் மீது நமக்கு இருக்கும் அடிப்படையான பற்றுதலைக் குறித்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

எல்லா மதங்களையும் எல்லா விதமான சிந்தனைப் போக்குகளையும் உள்ளடக்கி னாலும் அடிப்படையில் மதச்சார்பற்றதாக இருக்கும் ஒரு தேசியத்தில் நாம் எல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறோமா? அல்லது மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலானதும் மற்ற மார்க்கத்தினரையெல்லாம் புறவினத்தாராகக் கருதுவதுமான தேசியத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோமா? மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலான தேசம் என்ற கருத்தை உலகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டதாலும் நவீன மனிதனின் மனதில் அந்தக் கருத்துக்கு இடம் இல்லை என்பதாலும் அந்தக் கேள்வி விசித்திரமான ஒன்றுதான். இருந்தாலும், இன்றைய இந்தியாவில் இந்தக் கேள்வியை முன்வைத்தே ஆக வேண்டியிருக்கிறது. ஏனெனில், நம்மில் பலர் நம் கடந்த காலத்தை நோக்கித் தாவிச் செல்ல முயல்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதில் என்னவாக இருந்தாலும், உலகமெங்கும் காலாவதி ஆனதும் நவீனச் சிந்தனைகளுக்கு சரிவராததுமான அந்தச் சிந்தனையை நோக்கிப் பின்செல்வதற்கு சாத்தியமே இல்லை.

இந்தியாவைப் பொருத்தவரை ஓரளவு நிச்சயத்துடன் என்னால் பேச முடியும். வலுவான போக்குகளுக்கு இணங்க மதச்சார்பின்மை, தேசியம் ஆகிய வழிகளில் நாம் சர்வதேசியத்தை நோக்கி நடைபோடுவோம். நிகழ்காலம் என்னதான் குழப்பங்களைக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் எதிர்காலம் என்பது அதன் கடந்த காலத்தைப் போலவே அனைத்து நம்பிக்கைகளையும் சமமாகக் கருதி மதிப்பதாகத்தான் இருக்கும். ஆனால், தேசியம் என்பதைப் பொருத்தவரை ஒன்றுபட்ட பார்வை கொண்டிருக்குமே தவிர, கிணற்றுத் தவளையாக இருக்கும் தேசியவாதத்தைக் கொண்டிருக்காது என்றே நான் நம்புகிறேன். ஆனால், அது தன் மக்களின் அறிவுத்திறனில் நம்பிக்கை வைத்திருக்கும் தேசியமாக இருக்கும்; சகிப்புத்தன்மை, படைப்பூக்கம் மிக்க தேசியமாக இருக்கும்; சர்வதேசத் தரத்திலான அமைப்பை நிறுவுவதில் பங்கெடுக்கும் தேசியமாக இருக்கும். 

‘ஒரே உலகம்’என்பதுதான் நமது இறுதி இலக்காக இருக்க முடியும். ஆனால், ஒன்றுக்கொன்று சண்டையிடும் அணிகள், மூன்றாம் உலகப் போருக்கான குரல்கள், அதற்கான ஏற்பாடுகள் என்றிருக்கும் இந்த நிலையில், அந்த இலக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றலாம். இந்த ஆபத்துகளுக்கெல்லாம் மத்தியில் நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு அது ஒன்றாகவே இருக்க முடியும். ஏனென்றால் ‘உலக நல்லுறவு’க்கு மாற்று என்பது ‘பேரழிவு’தான்.
மதமும் கல்வியும்

இந்த விசாலமான மனப்பான்மையைத்தான் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, குறுகிய மனப்பான்மை கொண்டவர்களைப் பின்பற்றி உணர்விலும் மனப்பான்மையிலும் நாம் குறுகிப்போய்விடக் கூடாது. மதப்பிரிவினைவாதம் என்று அழைக்கப்படும் அந்த ஒன்றால், இந்த நாட்டில் நாம் பட்டதெல்லாம் போதும்; கசப்பும் விஷத்தன்மையும் கொண்ட அதன் கனிகளை நாம் சுவைத்திருக்கிறோம். இந்த மதவாத உணர்வு எங்கும் ஊடுருவுவதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதை அடியோடு விரும்ப மாட்டேன். 

கல்வி என்பது மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி, கூண்டுக்குள் போட்டு அடைத்துவைப்பதற்கானது அல்ல. வாரணாசிப் பல்கலைக்கழகம், இந்துப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதை நான் எப்படி விரும்பவில்லையோ அதேபோல் இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. இதனால், ஒரு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிட்ட கலாச்சாரத் துறைகளிலோ ஆய்வுகளிலோ தனிக்கவனம் செலுத்தக் கூடாது என்றில்லை. இஸ்லாமியச் சிந்தனை, கலாச்சாரம் போன்றவற்றின் சில அம்சங்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சிறப்புக் கவனம் செலுத்துவது சரிதான் என்றே நான் நினைக்கிறேன்.
என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்த்து, நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த முடிவுகளையெல்லாம் உங்கள் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. இருந்தும், நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாத விதத்தில் நிகழும் சம்பவங்கள், குறிப்பிட்ட விதத்தில் முடிவெடுக்கும்படி உங்களைக் கட்டாயப்படுத்தும் என்பது உண்மைதான். நீங்களெல்லாம் உங்களை அந்நியர்களாகக் கருதாதீர்கள். எல்லாரையும் போலவே ரத்தத்தாலும் சதையாலும் நீங்களும் இந்தியரே. இந்தியா வழங்கும் எதிலும் பங்குபெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், உரிமைகளைக் கோரும் யாரும் கடமைகளிலும் அவசியம் பங்கெடுக்க வேண்டும்.

உண்மையில், கடமைகளும் கடப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உரிமைகள் தாமாகவே வந்துசேரும். சுதந்திர இந்தியாவின் சுதந்திரக் குடிமக்களாக இந்த மாபெரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு செய்வதற்கு உங்கள் எல்லாரையும் நான் வரவேற்கிறேன்; எல்லாரையும் போலவே நீங்களும் அதன் பங்குதாரர்களாக இருக்கவும் அதன் பாதையில் வரும் வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும், அதில் பங்குகொள்ளவும் உங்களை நான் வரவேற்கிறேன். துன்பங்களையும் துயரங்களை யும் கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் கடந்துபோய்விடும். எதிர்காலம்தான் நமக்கு முக்கியம். குறிப்பாக, இளையோருக்கு, உங்களை அழைப்பது அந்த எதிர்காலம்தான். அதன் குரலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் நீங்கள்? 
   
1948, ஜனவரி, 24-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேரு ஆற்றிய உரை
தமிழில்: ஆசை
நன்றி : தி இந்து Published: November 14, 2013

Thursday, February 28, 2013

பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு யார் காரணம்?


முகநூலில் இந்துத்துவ சிந்தனை கொண்ட நண்பர்கள் எங்கள் மீது பல அவதூறுகளை சொன்னார் பாகிஸ்தான் பிரிவினைக்கு இங்குள்ள முஸ்லிம்கள் காரணம் என்கிற வாதத்தை முன் வைத்தார் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சரியான செய்தியை அனைவருக்கும் அறிய வைத்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக இந்த பதிவு.
இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்..
கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19ஆம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து – முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும்
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர். அதற்கு இரு வழியினைக் கடைப்பிடித்தனர்.
 1) இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்ப்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளைத் திரித்துக் கூறுதல்
2) பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும், பொறாமையையும், குரோதத்தையும் ஏற்ப்படுத்துதல்.
பிரீட்டிஷாரின் சதி
ஒரிசாவின் முன்னாள் ஆளுநரும், இந்நாள் ராஜ்யசபை உறுப்பினருமான பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படித் திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும் பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார் :
பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும். எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளர் “வுட்” எழுதியக் கடிதத்தில்,
“ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்திமூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,
“மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பெருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்ப்படுத்தித் தரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்” என எழுதியுள்ளார்.
கர்ஸான் பிரபுவுக்கு ஜார்ஜ் பிரான்ஸிஸ் ஹாமில்டன் பின்கண்டவாறு எழுதியுள்ளார் :
“படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துள்ள இருக் கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப்புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்.”
இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திரித்து எழுதப்பட்டன. மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பதுப் போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.
பொருளாதாரத் தாக்குதல் :
இரண்டவதாக, பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை ஏற்ப்படுத்த முனைந்தனர். வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்களாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன. டாக்டர். டபிள்யூ. டபிள்யூ .டபிள்யூ. ஹண்டர் பின்வறுமாறு எழுதுகிறார் :
“நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவான்தார்களாக மாற்றுவதே. அன்று வரை முக்கிய பதவிகளில்  இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்தி விட்டது. முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களை எல்லாம் இந்த இந்து ஏவலாளர்கள் சேகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.”
(Quoted The Meaning of Pakistan By F,K. Khan Durrani)
நிதி நிர்வாக விஷயங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இரானுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர்.
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பின் என்ற பத்திரிக்கை 1867ஆம் ஆண்டு ஜுலை 14 ஆம் தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவல நிலையை வெளிப்படுத்தும்,
“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாரையும் ஒரே விதமாக பாவிக்கக் கடமைப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்கு தங்களின் கெஜட்டுக்களிலிருந்து முஸ்லிம்களை பகிழரங்கமாக நீக்கி விட்டிருக்கிறது. சமீபத்தில் சுந்தர்பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாகின. இதைப் பற்றி கமிஷ்னர், அரசாங்க கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரப்பட மாட்டாதென அறிவித்திருந்தார். முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கிணித்தே வைத்திருந்தது. இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்குள் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”
 மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்ட சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும் முஸ்லிம்களை விட தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் மனோ பாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.
சிப்பாய் கலகத்திற்குப் பின்
இந்நிலையில், 1857 ஆம் வருடத்தில் பசுமாட்டின் கொழும்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய் கலகம் துவக்கப்பட்டது. அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்துக் கொண்டனர். அக்கலம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது. இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்த்து ஆயுதத் தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுத்தனர். இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்களின் மீது விழுந்தது.
சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்டனர். ஸையித் அஹ்மது கான், 1887 ஆம் ஆண்டு, காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பக்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில்,
“சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது? இந்துக்கள் அதனை ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுபட்டனர். இறுதியில் இந்துக்கள், கங்கையில் மூழ்கித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகிவிட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசிந்து நாசமடைந்தன” என குறிப்பிட்டுள்ளார்.     (பாகிஸ்தான் விளக்கம் : By எப். கே. துர்ரானி)
சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்து தீவிரவாதிகளின் போக்கு :
1867-ல் காசியிலுள்ள இந்துத் தலைவர்கள் உருது மொழிக் கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1875-ல் “இந்தியா இந்துக்களுக்கே” என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்யசமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும் கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.
 1890-ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்” எனக் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர், முஸ்லிம்கள் குர்பானிக் கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.
 1882-ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ஆனந்த மடம்’ எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார். அதில் தான் வந்தேமாதரம் என்ற கீதம் வருகிறது. அதில் இந்தியாவை “காளி” என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு, அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்லுகிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.
இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒருவகையான பயஉணர்ச்சியை ஏற்ப்படுத்தின. அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியது.
காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும்
இந்நிலையில், 1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது. அதன் முன்னோடித் தலைவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே, அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆங்கிலேயர்கள் தூவிய வேற்றுமை விஷ வித்துக்களுக்கு பலியான இந்து மதத் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்கு பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை  நடத்த விரும்பினர். விளைவு? 1906ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் சர். ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.
முஸ்லிம் லீக் ஏன் தோற்றுவிக்கப்பட்டது? என்பதன் காரணத்தை R.P. Dutt இப்படிக் குறிப்பிடுகிறார்:
“தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படையில் நடத்த விரும்பினர். இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர். எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து விடாமல் இருக்க முயற்ச்சித்தனர். அதன் விளைவே 1906 முஸ்லீம் லீக் தோன்றியது.”
(Quoted in R. At Desai’s Social Background of Indian Nationalism)
 Most members of the congress made a serious error refusing to admit the exitence and validity of muslim nationalism.
முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும். நிலைப்பாட்டையும் மறுத்ததின் மூலம் பெறும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமானத் தவறினை செய்தனர்.
    (A Short History of india and pakistan by T. Walter wall Bank) (U.S.A.) 1965.
முஸ்லிம் லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும், லீக்கிலும் இருந்தனர். மேளலானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.
பிரிவினை பிரச்சாரம் யார் துவக்கியது?
இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்கும் இடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.
இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.
 இந்நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள்; அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாக போடப்பட்டது.
“முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில் தான் முதன்முதலில் உதித்தது” என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்க செயலாளராக இருந்துவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால், “ரேடியன்ஸ்” வார இதழில் (13-6-87) ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இன்று R.S.S போற்றிப் புகழும் V.D சாவர்க்கார், இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக R.N. அகர்வால் தனது the national movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
குர்தகி மட சங்கராச்சாரியார், “இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே. அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டும். என்று முஸ்லிம்களை எச்சரித்தனர்.
அகில இந்திய சிவில் சர்வீசில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu – Muslim state is sheer nonsense “இந்து – முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது ஒரு முட்டாள்தனம்” என உரத்துச் சொன்னார்.
1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தரைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சி தரல். அதன் முக்கியக் குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே; வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை. என்பதே இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின. இஸ்லாத்தையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இழிவுப் படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. 1924-ல் லாஹுரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா) என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இஸ்லாமியர்களைப் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக் குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் நிலை
இவ்விதம் இந்துமதத் தலைவர்களில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917ல் இருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்.?
இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார். அதுவரை அவர் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார். The ambassador of Hindu-Muslim Unity” என்று சரோஜினி நாயுடுவால் பரப்பப்பட்டவர், 1933-ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை பற்றிக் குறிப்பிட்ட பொழுது An Impossible Dream’ நடைபெற இயலா கனவு என்றார் ஜின்னா.
 1906 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக் 1940 ம் ஆண்டு வரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை, 1945, 1946-ல் தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.
ஏன் கேட்டார் தனி நாடு ?
தனிநாடுக் கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை  ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட் தனது Recollection and Reflections” என்ற நூலில், Congress parentage of partitio (பக் 414) என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்.
“பாகிஸ்தான் இயக்கத்திற்கு முலாதாரம் காங்கிரஸ் தான். அது 1935 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துக் கொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்ப்படுத்தியது. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை” என்கிறார்.
வட்டமேஜை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மை பிரதிகளையும் சேர்த்துக் கொள்வதென ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது, ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில் லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆணாலே தவிர மந்திரி பதவி இல்லை. என காங்கிரஸ் கூறி விட்டது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதனைப் பற்றி டாக்டர். அம்பேத்கார் குறிப்பிடும் போது “காங்கிரஸ் அனுசரித்த போக்க விதிக்கு நேர்மாறானது. நாட்டின் இதரக் கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறைக் கையாளப்பட்டது. ஒரு ஏகாதிபத்திய யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவச் செய்யப்படும் இம்முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம். ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்” எனக் கண்டித்துக் கூறுகிறார். (Quoted in a Short History of India and Pakistan).
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கலவி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப் பற்றியோ, கலீபாக்களைப் பற்றியோ மற்றும் முஸ்லிம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம் ஒரே அடியாக அழிந்துவிடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர். ( Sir Regined Coupland. The Indian problem.)
இவ்வாறு காங்கிரஸ் நடந்துக் கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயஆட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொருப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இளைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940-ல் ஆதரித்தார். எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.
நேருவின் பேட்டியால் நிலை மாறியது :
ஒன்றுப்பட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946-ஆம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்ட கேபினேட் தூதுக் குழுவின் முடிவினை ஜுன் மாதம் 6-ம் தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின் படி ஏற்றுக் கொண்டது. 1940-ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையைக் கைவிட தயாரானது. ஆனால் ஜுலை 10ம் தேதி நேரு அவர்கள், கேபினெட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு அதிகாரம் உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை. தனிநாடுதான் தீர்வு என முடிவாக ஜின்னா கூறி விட்டார்.
“நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. என மெளலானா அபுல்கலாம் ஆஜாத் தனது India wins freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மேற்க்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம் லீகும், முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ்நிலைத் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.
R.S.S-யை நோக்கி ஒரு கேள்வி?
இன்று இந்தியாவைத் துண்டாடிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S அன்று என்ன செய்தது? இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே; பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினார்களே; பிரிக்கவேக் கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய் படேல் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தாரே; இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S என்ன செய்தது? இன்று பாரதமாதாவை துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா? இல்லையே ஏன்?
முஸ்லிம் லீக்கை, ஜின்னாசாஹிபை. காயிதேமில்லத்தை, முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினை வாதிகள் எனச் சொல்வது இல்லையே ஏன்?
இந்தியா பிளவுப்பட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டி விட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக் கொண்டனர்; விரும்பினர் R.S.S காரர்கள். ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய மக்களை இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை. இந்நாட்டிலேயே பிறந்து இந்நாட்டிலேயே வளர்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படிப் போவார்கள்? அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அதனால் ஏற்ப்பட்ட குரோத உணர்வே இன்றைய R.S.S காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.
சற்று சிந்தியுங்கள்!
மேற்க்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித் தொகுப்புகளிலிருந்து நாம் என்னப் புரிகிறோம்?
* பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் எதுவும் நடக்கவில்லை.
* இந்து – முஸ்லிம் கருத்து வேற்றுமையையும் குரோதமும் பிரிட்டிஷாரால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை.
* முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ, திட்டமிடவோ இல்லை.
* இந்து தீவிரவாதிகளும் அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.
எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்ப்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுவுமில்லை. மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புகிறோர் H.M. Sreevai partition of India : legend and Reality என்ற நூலையும், The Dialogue Between Hindus and Muslim என்ற நூலையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.  
நன்றி: கணியூர் நாஜி நீடுரி அவர்கள்
நன்றி: http://annajaath.com/?p=5468