Monday, August 8, 2016

குதிங்கால் வலியும், அது குணமான விதமும்.

 
பெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகின்றனர்.

ஐம்பது வயதை தொட்ட பெண்களில் அநேகம் பேருக்கு குதிங்கால் வலி என்ற உபாதையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.நானும் கடந்த ஒரு வருடமாக அந்த அவஸ்தையை அனுபவித்து அதை கடந்தும் வந்த விதத்தை கூற விரும்புகிறேன்.

அடுத்தடுத்து மகளுக்கு திருமணம், பேறுகாலம், மகனுக்கு திருமணம் என போதிய ஓய்வின்மையும்,அதிக அலைச்சலும் கூடிய காலகட்டத்தில் என் குதிங்கால்களின் மத்தியில் விண்ணென்ற வலி தோன்ற ஆரம்பித்தது. அலைச்சல் முடிந்து, போதிய ஓய்வு எடுத்த பின்பும் வலி குறையவே இல்லை. ஆஸ்பத்திரிக்கு செல்லவோ பயம். சுற்றிலும் விசாரித்ததில் கால்வலி இல்லாத மாதவிடாய் நின்ற பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாமென தோன்றியது.

ஆளாளுக்கு விளக்கங்களும், வைத்தியங்களும் சொன்னார்கள். உடல் எடை கூடுவது ஒரு காரணமாக கருதப்பட்டது. நம்மில் பலருக்கு நாற்பது வயதுக்கு மேல் உடல் எடை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று என்று உணர்வது நிஜந்தானே ? உடம்பில் ஈஸ்ட்டிரோஜன் குறைந்ததால், இயற்கையாக ஏற்படும் வயோதிக மாற்றத்தால் குதிங்காலில் வலி என்றார்கள். முற்காலத்தில் போல கொல்லம் செங்கல் பதித்த தரைக்குப் பதிலாக வீடுகளில் மொசைக், மார்பிள்,சிமெண்ட் டைல்ஸ் பதித்திருப்பதுதான் காரணம் என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டது.

கால்களை வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்தாயிற்று. அளவு கொடுத்து விசேஷமாக செய்து வாங்கிய மைக்ரோஸில் செருப்பை வீட்டிற்குள் அணிந்து கொண்டு நடக்கலானேன். வெளியே செல்லும் போது அணிவதற்கு அக்குபங்சர் செருப்பு. மருந்து கடைகளில் பிரத்யேகமாக விற்கும் ஸ்டாக்கிங்ஸ் போன்ற 'ஆங்க்லெட்ஸ் ' அணிந்து பார்தேன். விதம் விதமாய் தைலங்கள் - யூகலிப்டஸ், வேதகோடாரி, ஃபிராஞ்ச் ஆயில் - எல்லாம் தடவிப் பார்த்தும் பலனேயில்லை. எருக்கம் இலையை சூடான செங்கல்லில் வைத்து எடுத்து கொடுக்கும் ஒத்தடமும் சிபாரிசு செய்யப்பட்டது.

எலும்பு வளர்ந்திருக்கலாம், ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சிலர் குண்டைத் தூக்கிப் போட்டார்கள். இது எலும்பு தேய்மானந்தான், இதற்கு மருந்தேயில்லை என்று அடித்துச் சொன்னவர்களும் உண்டு. பயந்து பயந்து எப்போதாவது பொறுக்கமுடியாமல் வலி மாத்திரைகள் சாப்பிடுபவளிடம் ஸ்டாராய்ட் ஊசிதான் போட்டாக வேண்டும் என்று சிலர் பீதியை கிளப்பினார்கள்.

என் கால்வலி கலாட்டாவால் ரொம்ப நொந்து போன என் குடும்பத்தினர் உருப்படியான வைத்தியம் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தியபின் ஒரு எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை அணுகினேன். என்னென்ன டெஸ்டுகளோ, எவ்வளவு செலவோ என்றெல்லாம் கலக்கத்துடன் சென்ற என்னிடம் மிகவும் ஆறுதலாக பத்து வருடத்திற்கு இந்த குதிங்கால் வலியை தள்ளிப் போடுவது மிகவும் சுலபம் என்றார். அப்போதைய வலிக்கு ஐந்து நாளைக்கு மாத்திரைகள் தந்துவிட்டு வலி குறைந்ததும் எளிமையான பிஸியோதெரபி எக்ஸர்சைஸ்களை செய்து வரும்படி கூறி அனுப்பி விட்டார்.

கொஞ்ச காலத்திற்கு அதிக பளுவை தூக்கக் கூடாது, அடிக்கடி மாடிப்படி ஏறக்கூடாது, காலை அதிக நேரம் தொங்க விட்டபடி அமர்ந்து நீண்ட தூரம் ரயிலிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். பொதுவான யோசனையாக உடல் எடை கூடாமலிருக்க உணவில் கிழங்குகளை குறைக்கச் சொன்னார்.பயங்கரமான சிகிச்சைகளை, செலவை எண்ணி பயந்த எனக்கு இவ்வளவு ஈஸியாக டாக்டர் சொல்லிவிட்டது பெரிய நிம்மதியாக இருந்தாலும் உண்மையிலேயே அவர் சொன்ன எளிய எக்ஸர்சைஸால் குதிங்கால் வலி போய் விடுமா என்ற அவநம்பிக்கை நிறையவே இருந்தது.

ஆனாலும் மிகுந்த கீழ்படிதலுடன் செய்ய ஆரம்பித்தேன். முதலில் சில நாட்களுக்கு பெரிதாக முன்னேற்றம் தெரியாமல் கவலையாகக்கூட இருந்தது. இருந்தாலும் நம்பிக்கை, விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்த பயிற்சியால் சில வாரங்கள் கழித்து முதலில் ஒரு காலில் வலி முற்றிலும் போய் விட்டது. அடுத்து மற்றொரு காலிலும் வலி கிட்டதட்ட போய் விட்டது. எனக்கே இது நம்ப முடியாத ஆச்சரியமாய் இருக்கிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைகளை நன்றாக இயங்கச் செய்யும், வலியை விரட்டிய எளிய எக்ஸர்சைஸ் இதுதான்: கால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமரவும். பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உள் பக்கமாய் மடக்கி விரிக்கவும். அடுத்து முன் பாதங்களை தாளம் போடுவது போல இருபது முறை உயர்த்தி இறக்கவும். அடுத்து முன் பாதத்தை ஊன்றியபடி குதிங்கால்களை இருபது முறை தரையை விட்டு மேலே உயர்த்தி இறக்கவும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை இரு வேளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது போகவும் இடையே எத்தனை தடவை சாத்தியப்படுகிறதோ அத்தனை தடவை செய்யலாம்.

இவ்வளவு எளிய வைத்தியம், பலனளிக்கும் வைத்தியம் இருப்பதை குதிங்கால் வலியால் அவதிப்படும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், அதை செய்து பயனடைய வேண்டும் என்பதே என் அவா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல யாம் துன்பம் நீங்கிய வழி அறிக இவ்வையகம் என்ற எண்ணந்தான் இந்த கட்டுரைக்கு தூண்டுகோள்.


(நன்றி சகோதரி பவளமணிபிரகாசம் அவர்களே )

Monday, May 30, 2016

நண்டு சாப்பிடுகிறவரா? நீங்கள்? அப்ப இதை படியுங்கள்.

சாப்பிட கூட வந்த நண்பர் இன்ஸான் 
நான் ஒரு நண்டுப் பிரியன் ஊருக்குப் போனால் ஒரே நண்டா சாப்பிடுவேன். விமான நிலையத்தில் என் மனைவி அப்படி இவரு கிளம்பிட்டாரு நண்டு இனம் அழியாமல் தப்பித்தது என்று சிரிக்க வைத்து கிண்டல் பண்ணும் அளவுக்கு சாப்பிடக் கூடியவன் அதே பழக்கம் சவூதி வந்தும் தொடர்கிறது. வாரத்திற்க்கு ஒருமுறை நண்டு சாப்பிட தவறுவது இல்லை.

சரி சொந்தக் கதையை விட்டுபுட்டு விஷயத்திற்க்கு வருகிறேன் நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இணையத்தில் படித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது நீங்களும் படித்துப் பாருங்களேன்.

இரத்த சோகையை தடுக்குமாம்.
நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

முடக்கு வாதம் முடித்து வைக்கும் நண்டு.
செலினியம் என்பது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பது தெரியுமா? செலினியம் மற்ற ஆன்-ஆக்ஸிடண்ட்டுகளோடு சேர்ந்து, விஷத்தன்மையுள்ள அழுத்தத்தைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் செலினியம் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம்.

குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

வலிமையான எலும்புகளை ஏற்படுத்துமாம்.
காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

முகப்பருக்களை போக்கும்.
பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால் கொழுப்பை குறைக்க வல்லது.
கொலஸ்ட்ரால் நண்டில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் அதில் நியாசினும் அதிகமாக உள்ளுது. இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.

இதய நோய்களை தடுக்கும்.
நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும்.

கர்ப்பக் காலத்தில் நண்டு சாப்பிடக் கூடாது ஆனால்.
கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது.

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் ஜிங்க் உணவு நண்டு
கடல் நண்டு அனைத்திலுமே ஜிங்க் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் அதிலும் ஒன்றான நண்டை நன்கு ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், டெஸ்ட்ரோஜென் அளவை சீராக்கும் என்கிறது ஆய்வு.

எங்கே கிளம்பிட்டிங்க? நண்டு சாப்பிடவா? வாரத்திற்க்கு ஒருமுறை மாற்றிதான் சாப்பிட்டு பாருங்களேன். 

Saturday, May 14, 2016

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...!

அவர் ஒரு சிறந்த யோகா ஆசிரியர் யோகாசன கலைகளை நன்கு அறிந்தவர்.

ஒரு மாணவன் அவரிடம் யோக கலைகளை கற்றுக் கொண்டிருந்தான். ஆசிரியர் மாணவர் என்கிற உறவை தாண்டி மனது விட்டு பேசும் நல்ல நண்பர்களாவும் இருந்தார்கள்.

பேச்சுவாக்கில் ஒருநாள் அந்த மாணவன் சொன்னான்:

ஆசிரியரே! எனக்கு சாரசரி வாழ்வு பிடிக்கவில்லை இந்த உலகை துறந்து எங்காவது மலையடிவாரங்களில் பக்கம் இயற்கையோடு இயற்கையாக தனியாக, துறவியாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் அதற்கு விடமாட்டார்கள் என்றுதான் பயப்படுகிறேன் என்றான் மிகுந்த மனவருத்தத்துடன்.

“ஏன்?” உன்னை விட மாட்டார்கள் என்றார் ஆசிரியர்

“அவர்களுக்கு என் மீது அளவில்லாப் பாசம் கொள்ளை அன்பு. என்னைப் பிரிந்து அவர்களால் இருக்கவே முடியாது” என்றான் அவன் சற்றே கர்வத்துடன்.

“ அதை சோதித்து பார்க்கலாமா என்றார் ஆசிரியர் அமைதியாக.

மாணவன் அதற்குச் சம்மதித்தான். ஆசிரியர் அவனுக்குச் செத்தது போலவே கிடக்கும் ஒரு உயர்தர யோகாசன வித்தையைக் கற்றுக் கொடுத்து வீட்டிற்க்குப் போய் அதனை செய்யுமாறு சொன்னார்.

மறுநாள் காலை அவன் தன் வீட்டில் செத்தது போலவே கிடந்தான். செய்தியறிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் அங்கே கூடிவிட்டனர். வீட்டின் அழுகுரல் தெரு முழுவதும் கேட்டது.

ஆசிரியர் அந்த வீட்டை அடைந்தார் அவர்களை பார்த்துச் சொன்னார்:

“ இவருக்குப் பதிலாக உங்களில் யாராவது ஒருவர் உயிரைத் தர முன்வந்தால் போதும், இப்போது இவரை உயிர்ப்பிக்க எனது யோகா சக்தியால் முடியும்.”

அதைக் கேட்டு ஒவ்வொருவராகப் பின்வாங்கினார்கள். தாங்கள் வாழ வேண்டியதன் அவசியம் மற்றும் கடமைகள் பற்றி ஒவ்வொருவரும் பலவிதக் காரணங்களைக் கூறி அவருக்கு விளக்கினார்கள்.

கடைசியில் அவரின் மனைவி உரத்த குரலில் சொன்னாள்:

” அவருக்கு பதில் யாரும் சாக வேண்டாம். அவர் இல்லாமலேயே நாங்கள் காலத்தைக் கழிப்போம்.”

யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும் காலம் நின்றுவிடுவதில்லை என்கிறது இந்த ஜென் தத்துவ சிறுகதை.

Friday, May 6, 2016

வாட்ஸ் அப் வாழ்க்கை.


முன் கடந்து போவோரின்

முகம் காண முடியவில்லை.

பின் நின்று சிரிப்போரின்

எண்ணம் எனக்கு புரியவில்லை.

தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.

தொடுதிரையை தொட்டபடி

உள்ளங்கையில் தான் உலகம்.

என் கைபேசி காதலியானாள்- நான்

கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...

உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,

நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.

சாமக் கோழி கூவிய பின்னும்,

கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,

வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.

எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.

Hi என எவரோ அனுப்ப

Hai என பதிலுரைத்தேன் - ஏனோ

நான் பெற்ற பிள்ளை

'அப்பா'என்றழைக்க,

சற்றே புருவம் உயர்த்தி

பார்வையாலே சுட்டெரித்தேன்...

அடுத்தவரின்,

Status பார்த்து ரசித்தேன்,

profile பார்த்து வியந்தேன்,

Picture Msg பார்த்து லயித்தேன்,

video பதிவிறக்க ஆர்வத்தில்.

கை அலம்பியபின் யோசித்தேன்.

நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...

மாமன் வீட்டு மீன் குழம்பு,

மாமி பொறித்த அப்பளம்,

தங்கை வீட்டு தக்காளிச்சோறு,

மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,

அமிர்தம் தந்த மனையாளிடம்.

இது நஞ்சை விட கேவலமென்று...

நானாய் சிரித்தேன்,

நானாய் அழுதேன்,

நானாய் வியந்தேன்,

நானாய் ரசித்தேன்-ஏனோ

நான்,

நானாய் மட்டும் இல்லை...

ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.

என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட

Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...

கீமோஜியில் கூட

சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,

ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.

ஆனால்...

நான் நிமிர்ந்து பார்க்கும் போது

என் முன்னே எவருமில்லை.,

சுற்றமும், நட்பும்

உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...

இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்

சொந்தமே.,

இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.

நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய்.,,,   தவம் கிடக்கிறது...!

(வாட்ஸ் அப் புலம்பல் )

Friday, March 18, 2016

பயங்கரவாதத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை

இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமான டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி எழுதிய ‘பயங்கரவாதம் மற்றும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு ஃப்த்வா’ என்ற நூல் 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. நூல் வெளியீட்டிற்காக டெல்லி வந்திருந்த டாக்டர் தாஹிரை Frontline ஆங்கில இதழுக்காக நேர்காணல் கண்டவர் அஜோய் ஆசிர்வாத் மகாபிரஷஸ்தா.

‘ஷெய்குல் இஸ்லாம்’ எனப் பிரபலமாக அறியப்படும் டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி, புகழ்பெற்ற இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமாவார். 1951இல் பாகிஸ்தானின் ஜாங் நகரில் பிறந்தார். மதினாவிலுள்ள பாரம்பரியமிக்க ‘மதரசா-அல்-வுலும்-அல்-ஷரிய்யா’வில் மார்க்கக் கல்வியை 12 வயதில் தொடங்கினார். அரபு செவ்வியல் மற்றும் அறிவியல் மரபுவழிக் கல்வியைத் தன் தந்தையிடமிருந்தும் மார்க்க அறிஞர்களிடமிருந்தும் பெற்றார்.

 பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் (லாகூர், பாகிஸ்தான்) ஆனர்ஸ் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறிய டாக்டர் தாஹிர் இஸ்லாமியக் கல்வியியலில் தனிச்சிறப்புடன் முதுகலைப் பட்டமும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் இஸ்லாமியச் சட்டவியல் விரிவுரையாளராகவும் இஸ்லாமியச் சட்டமியற்றல் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். 
இஸ்லாம், இறையியல், சூஃபியிசம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் டாக்டர் தாஹிரின் நூல்கள் நானூற்றுக்கும் அதிகமாக வெளிவந்துள்ளன. ஆய்வாளர்; சிறந்த சொற்பொழிவாளர். உருது, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் உலகு முழுவதும் தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார். மின்ஹஜ்ஜுல் குர்ஆன் என்ற சர்வதேச அமைப்பின் நிறுவனர். தீவிரவாதமற்ற இஸ்லாத்தைப் போதிக்கும் இந்த அமைப்பு உலகில் 55 நாடுகளில் இயங்கிவருகிறது.

சமீபகாலமாகப் பல முஸ்லிம் அறிஞர்கள் ஜிகாத் (அறப்போர்) என்பதன் பொருளை அரசியல்ரீதியாக விளக்க முயன்றுள்ளனர். ஆனால் நீங்களோ பயங்கரவாதத்திற்கும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கும் இஸ்லாமியத் தத்துவத்தில் இடமில்லை என ‘ஜிகாத்’திற்குப் பகுத்தறிவுக் காரணகாரியங்களுடன் மதரீதியாக விளக்கம் தர முயன்றுள்ளீர்கள்.

உள்நோக்கங்கொண்ட தங்களின் குறிக்கோளை அடைவதற்காக மதத்திற்குள்ளிருந்தே சிலர் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இஸ்லாம், குர்ஆன், சுன்னா (நபி வழி) இவற்றுக்கும் பயங்கரவாதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். இதற்காக குர்ஆன் விளக்க உரைகள், இஸ்லாமியச் சட்டவியலாளர் கருத்துகள், இஸ்லாமியச் சமுதாயம் ஆகியவற்றை நுணுகி ஆராய வேண்டியதிருந்தது. அமைதிக்கும் சமாதானத்திற்குமே இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது. தீவிரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் விளக்கங்கள் உண்மையான இஸ்லாமியப் போதனைகளிலிருந்து விலகியவையாகும்.

உதாரணமாக ஜிகாத், உயிர்த்தியாகம் அல்லது சண்டையிடல் என்னும் கருத்தாக்கம் ‘சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வது’ என்பதாக எந்த இஸ்லாமிய நூல்களிலும் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இந்தச் சொற்களில் எதுவும் பெண்கள், குழந்தைகள், முதியோர், மதபோதகர், நோய்நொடியுற்றோர் ஆகியோரைக் கொல்வது என்பதாகவும் பொருள்படாது. இவர்களைக் கொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை. கோயில்கள், சர்ச்சுகள், யூதவழிபாட்டு ஆலயங்கள், பிற வணக்கத்தலங்கள் ஆகியவற்றை இடித்துத் தகர்ப்பது என்பன இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளன. ‘நியாயமான போர்’ அல்லது ‘தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே போரிடல்’ ஆகிய சந்தர்ப்பங்களில்தாம் இச்சொற்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. 

போர்க்களத்தில் இரு படைகள் மோதிக்கொள்ளும்போது மட்டுமே இந்தச் சொற்கள் இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகும். ஒரு தனிக்குழு ‘ஜிகாத்’தைப் பிரகடனப்படுத்த முடியாது. இது அத்தகைய குழுக்களின் உரிமையோ சிறப்புச்சலுகையோ அல்ல. இரண்டு ராணுவங்கள் அல்லது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரின்போது கூட பல கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்துள்ளது. தளர்ந்துபோய்விடாமல் நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் காரணத்தால் வர்த்தகர்களும் விவசாயிகளும் கொல்லப்படக்கூடாது. 

பெண்கள், குழந்தைகள், ஏற்கனவே குறிப்பிட்டுள்ள பிற குழுக்களைக் கொல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை.அவசியமில்லாமல் மரங்களை வெட்டுவதற்கும் அனுமதியில்லை. இவை அனைத்தும் தடை செய்யப்பட்டவை என்பது முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான். 

‘ஒரு முஸ்லிமைக் கொல்வது மனித குலம் முழுவதையும் கொல்வதற்குச் சமமாகும்’ என்பதாக குர்ஆன் வாசகத்திற்குத் தவறான பொருள்விளக்கம் தந்து அதனைச் சில பயங்கரவாத அமைப்புகள் பரப்பிவருகின்றன. ஆனால் குர்ஆனோ ‘மனித உயிரைக் கொல்வது’ எனத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுகிறது. (‘முஸ்லிமைக் கொல்வது’- என்பதாக அல்ல). எனவே ‘ஒரு மனித உயிரைக் கொல்வதென்பது மனிதகுலம் முழுவதையுமே கொல்வதற்குச் சமம்’ என்பதே குர்ஆன் வாசகம். ‘மனித உயிர்’ என்ற பொருளில் நஃப்சன் என்ற சொல் குர்ஆன் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் அரசியல் செயல் திட்டம்தான் இஸ்லாமியச் சட்டத்தை இவ்விதம் குறிப்பிட்டவிதமாகப் பொருள் விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறது என்று கூறுகிறீர்களா?

அரசியல் செயல் திட்டமோ அல்லது சர்வதேசச் செயல் திட்டமோ மட்டுமல்ல. சமூகப் பொருளாதாரக் காரணிகளும், ஆங்காங்கே உள்ள அரசாங்கங்களின் சித்தாந்தங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற வன்முறை, அதன் சித்தாந்தப் புரிதல்களுடன் இஸ்லாத்தில் ஊடுருவிப் பரவியுள்ளது. முஸ்லிம் உலகு நெடுகிலும் வாழும் மக்களின் சமூக அரசியல் விரக்தியின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம். எனினும் இத்தகைய அரசியல் பிரச்சினைகளும் சமயப் புரிதல்களும் ஒன்றோடு ஒன்று கலத்தல் கூடாது. 

அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைதியான ஜனநாயக வழிமுறைகள் இருக்க முடியும். சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வதற்கு (ஏன் முஸ்லிம்களைக் கொல்வதற்கும்தான்) இஸ்லாமோ இஸ்லாமியப் போதனைகளோ அனுமதிப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தப்படவேண்டும். ஆனால் தற்போது நிலவும் நிகழ்வுகள் கண்டிக்கப்படவேண்டியவை மட்டுமல்ல, திருக்குர்ஆனின் போதனைகளைக் கருத்தில்கொண்டு விளக்கப்பட வேண்டியவையுமாகும்.

இஸ்லாத்தில் தாராளமயக் கொள்கைகள் குறித்து உங்கள் புத்தகம் பேசுகிறது. கருத்துவேறுபாடுகளுக்கு இஸ்லாமிய வரலாற்றில் இடமுண்டு என்பது பற்றியும் இறையியல் ரீதியாக அது எவ்விதம் நியாயப் படுத்தப்பட்டது என்பது பற்றியும் கூறமுடியுமா?

பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே கருத்து வேறுபாடுகளுக்கு இஸ்லாத்தில் இடமிருந்து வந்திருக்கிறது. ‘லா இக்ற ஐ தீன்’ என குர்ஆன் கூறுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் யார்மீதும் இல்லை. அதே சமயம் இஸ்லாத்தின் தீனுக்குள்ளும் நிர்ப்பந்தம் ஏதுமில்லை. எனவேதான் இஸ்லாத்தில் சட்டவியல் சிந்தனைக் குழுக்கள் பலவற்றில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் காண்கிறோம். இஸ்லாமிய வரலாற்றில் ஒரே சம்பவத்திற்காக வேறுபட்ட தீர்ப்புகள் இந்தச் சிந்தனைக் குழுக்களால் வழங்கப்பட்டிருக்கின்றன. வேறுபட்ட சிந்தனை முறைகளையும் வேறுபட்ட வழிமுறைகளையும் இக்குழுக்கள் கொண்டிருந்தமையே இதற்குக் காரணம். 

உலகளாவிய ஒரு கட்டமைப்பினுள் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பதே உண்மை. இதனாலேயே சட்டவியலில் வேறுவேறு சிந்தனைப் போக்குகள்கொண்ட குழுக்கள் நிறுவப்பட்டன. எந்தக்குழுவும் - ஷியா தத்துவம் உட்பட, காஃபிர்களை (இறை மறுப்பாளர்கள்) இஸ்லாத்திற்கு வெளியே உள்ளோராகப் பிரகடனப்படுத்தவில்லை. ‘ஹதீத் - இக்தெதா- உம்மத்தி - றஹ்மத்துல்’ என்ற தத்துவத்திற்கு எப்போதுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ‘ஒரு நல்ல மத நம்பிக்கையில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் அந்தச் சமுதாயத்திற்கு இறைவனின் அருட்கொடையாகும்’ என்பது இதன் பொருளாகும். இது (கருத்து வேற்றுமை) மாற்றீடுகளைத் தருகிறது. ஒன்றில்லையெனில் இன்னொன்று -என்ற விருப்பத் தேர்வையும் நமக்குத் தருகிறது. கடந்த இரண்டாண்டுகளாய் இளையோர் இப்புரிதலைச் சிரம மேதுமின்றி எளிதாக உள்வாங்கிக் கொண்டுள்ளனர்.

‘ஃபத்வா’வின் வரலாறு என்ன?

ஃபத்வா எனும் சொல்லின் பூர்வீகம் திருக்குர்ஆனும் சுன்னாவும் ஆகும். புனித நபி மற்றும் அவரது சகாக்களின் காலத்தில் இந்தச் சொல் ஓர் ஆட்சிமுறைக் கருவியாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, தெற்காசியா நாடுகளில் சில மதகுருமார்கள் தங்களின் தனிப்பட்ட முற்சாய்வுகள் காரணமாக இந்தச் சொல்லைத் தவறாகப் பயன்படுத்தியபோது பிரச்சினை எழுந்தது. மருத்துவத்தில் ‘போலி டாக்டர்கள்’ எப்படியோ அதுபோலவே இஸ்லாமியத் தத்துவத்திற்கு இந்த மதகுருமார்கள் என்பதாகக் கொள்ளலாம். ஃபத்வா என்பது மிகுந்த அளவு வரையறைக்குட்பட்ட சட்டபூர்வமான சொல். 

காதிகளும் (நீதிபதிகள்) முஃப்திகளும் (தீர்ப்பு வழங்குவோர்) காலகாலமாக இச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஃபத்வா அல்லது இஃப்தா என்ற இரு சொற்களுமே ஒரே பொருள் கொண்டவைதாம். மிக முக்கியமான தீர்ப்புகளில் மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.

(நன்றி: காலச்சுவடு தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி )

Friday, January 15, 2016

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டா ?

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு : ஜல்லிக்கட்டா? மஞ்சு விரட்டா?

மிழகத்தில் கி.மு 1500 காலத்தில் (அதாவது, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) “மஞ்சு விரட்டு” அல்லது “எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.

நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை  வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்.

Thursday, December 31, 2015

ஆங்கில புத்தாண்டா இது ?

1-1-2016ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று கேட்கிறீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் பல நாள்கள் எப்படி புத்தாண்டாக இருக்க முடியும்.

குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
ஏனெனில், இந்தப் புத்தாண்டை (?) வரவேற்க உலகெங்கும் டிசம்பர் 31 ஆம் நாள் நடக்கும் கூத்துகளும், கேளிக்கைகளும், வீண் விரயங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. சென்னை போன்ற கடற்கரையின் நிலைமை மிக மிக மோசம். மதுக் கடைகளிலும், பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மது விருந்துடன் இரவு புத்தாண்டை வரவேற்கின்றது ஒரு கூட்டம்.
ஆண்டுதோறும் இந்தக் கூத்துகள் வாடிக்கையாகி விட்டன. மக்களும் இதனைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!
ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.
இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.
ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.
பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.
மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.

ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர்.(ஆகா!! என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு?!!) சரி, விடுங்கள்! மேலே படியுங்கள்.

மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

ஜூன் :ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.

ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க...

இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது.
முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன. அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . . இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு; அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.
ஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.
இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து உலக மக்களை பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்றே சொல்ல வேண்டும்.
(பதிவு நெட்டில் சுட்டதாடா )


Sunday, September 6, 2015

வேண்டாமே விளம்பர பகட்டு மோகம்...!

பகட்டு, பெருமைக்காக வாழ்தல்...!
பொருளீட்டுதல் , குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல் - இதுவே பெரும்பலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையாகி விட்டது. தன்னையும் குடும்பத்தாரையும் தவிர வேறு எதைப் பற்றியும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
ஆனால் மனிதர்களில் சிலர் இந்த எல்லையைக் கடந்து மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக பொருள், உழைப்பு நேரம் ஆகியவற்றைத் தியாகம் செய்கின்றனர். தம்முடைய எழுத்து, பேச்சு, சிந்தனை ஆகியவற்றால் மக்களைத் தட்டி எழுப்புகின்றனர். சிலர் தமது இன்னுயிரையும் தியாகம் செய்கின்றனர். வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெறுகின்றனர். ஆனால் இவர்கள் செய்த செயல்களுக்கு உந்து சக்தியாக இருந்தது எது என்பதை வைத்தே இச்செயல்கள புனிதம் பெறுகின்றன.
மக்களின் பராட்டு, கைம்மாறு, நன்றி ஆகியவற்றை எதிர்பார்த்து செயல்படுவதில் எந்தச் சிறப்புமில்லை. பலனை எதிர்பார்த்து வேலை செய்பவர்களால் தீமைகளே விளையும்.
இவர்கள் விளம்பர மோகத்தில் திளைப்பவர்கள். விளம்பரம் கிடைப்பதற்காக எதையும் செய்வார்கள். ஐந்து ரூபாயை தானமாகச் கொடுத்துவிட்டு அதனை விளம்பரப் படுத்த ஐம்பது ரூபாயைச் செலவிடுவார்கள். செய்ததை மிகைப்படுத்துவார்கள். செய்யாததைச் செய்ததாகச் சொல்வார்கள்.
போதிய விளம்பரம் கிடைக்காவிடில் சோர்ந்து போவர். இவர்களைச் சுற்றி புகழ்பாடும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். விமர்சகர்களைக் கண்டால் எரிந்து விழுவார்கள்.
தொடக்கத்தில் புகழ் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். பின்னர் கிட்டிய புகழை எப்படித்தக்க வைத்துக் கொள்வது என்பதே இவர்கள் கவலையாக இருக்கும்.
எனவே பலனை எதிர்பாராமல் பணிகளைச் செய்பவர்களே அமைதியான உள்ளத்துடன் இருப்பார்கள். எதையும் எதிர்பார்த்து செய்பவர்கள் ஏமாந்து போவார்கள்; விரக்தி அடைவார்கள்; அமைதி இழப்பார்கள்.
பகட்டுக்காக வீண் பெருமைக்காகச் செய்யப்படும் செயல்கள் வீணானவை. இறைவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. (அல்குர்ஆன் 2:264 )
பகட்டுக்காகவும் பிரதிபலனை எதிர்பார்த்தும் செய்யாமல் இறைவனின் திருப்தியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினால் மட்டுமே மன அமைதி கிட்டும்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிட மிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை (அல்குர்ஆன் 76: 8,9 )
அல்லாஹ்விற்காக மட்டும் அவனுடைய அருளை மட்டும் எதிர்பார்த்து பணிகளை செய்வோம் வெற்றி பெறுவோம்.

Monday, August 3, 2015

அவர்கள் குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும் : யூத அறிஞர் (ரப்பி) மெனாகம் ஃபுரோமன்

“அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும்” - இது இஸ்ரேல் நாட்டில் புகழ்பெற்ற  ஆர்த்தோடாக்ஸ் மதருகுருவான ( Rabbi Menachem Froman) ரப்பி மெனாகம் ஃபுரோமனின் அறிவுரை. அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை பார்த்துதான் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். இஸ்லாத்தின் ஆதார நூல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால்தான் அந்தத் துறை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை வெளியீட்டு வருகிறது என்பதே ஃபுரோமனின் கருத்து.
இதற்க்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அந்த அதிகாரிகள் குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுமுறை எடுத்து குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும். இஸ்லாம் மாபெரும் ஆன்மீகக் கடல் என்பதையும் அதிலிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதையும் அப்போது அவர்கள் விளங்கிக் கொள்வார்.

மேற்கத்தியர்களும் யூதர்களும் முஸ்லிம்களிடம் அவமரியாதையுடன் நடந்து கொள்வதே பிரச்சனைக்குக் காரணம். ஆணவத்தின் மொழியில் அவர்கள் பேசுகின்றனர். அவர்கள் அமைதியை விரும்பினால் முஸ்லிம்களை நெருங்கிச் சென்று அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஃபுரோமன்.
ரஷ்ய வார இதழான ‘எக்ஸ்பெர்ட்டு’க்கு அளித்த நேர்காணலில் 63 வயதான ஃபுரோமன் தனது கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டுள்ளார். இவர் பலமுறை முன்பு யாசிர் அரஃபாத்தை சந்தித்து அமைதித் திட்டத்திற்காக முயன்றவர் என்பது குறிப்பிடதக்கது. அரசியல் தீர்வை விட  ஆன்மீகத் தீர்வைக் குறித்தே அவர் வலியுறுத்தி வந்தார். ஜெருசலம் யாருக்கு என்பதுதான் மோதலுக்கான முக்கியக் காரணம் என்பதால் அந்தப் புனித நகரத்தை யூத,கிறிஸ்தவ, இஸ்லாமியர் அனைவருக்கும் சொந்தமாக்கி உலகத்தின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது இவரது பரிந்துரை.

Sunday, August 2, 2015

சிறுகதை : விற்பனை பிரதிநிதி

மாநிறமுடைய நடுத்தரவர்க்கத்து குடும்பப் பெண் தோளில் கையில் பெரும் பைகளுடன் வியர்வை வழிந்த முகத்தோடும் செயற்கைத் தனமான புன்னகையோடும் வீட்டு வாசலுக்கு முன் வந்து ஸார் புதிதாக ஆரம்பித்திருக்கிற எங்களின் பற்பசை (பேஸ்ட்) தயாரிக்கும் கம்பெனியிலிருந்து வருகிறேன் என அந்த கம்பெனி தயாரிப்பை எப்படியெல்லாம் மர்க்கெட்டிங்க் பண்ணவேண்டும் என்று இவரை தயாரித்து அனுப்பினார்களோ அதை அச்சு பிசகாமல் இயந்திரத் தனமான கிளிபிள்ளை போல மடமடவேன்று பேசினார்.
சரி என் இவ்வளவு அவசர பேச்சு கொஞ்சம் நிதானமாக உட்காந்து பேசலாமே அம்மா இருக்காங்க என் மனைவி இருக்காங்க அவுங்களிடம் கொஞ்சம் சொல்லூங்க. கண்டிப்பாக வாங்குவாங்க.
வீட்டிற்க்குள் நுழைந்தார் எனது நோக்கம் பேஸ்ட் வாங்குவதை விட வெய்யில் வேறுத்து விருவிருத்து நிற்கிற அந்த பெண்ணிற்க்கு எதாவது குளிர்பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்துவோம் என்கிற சகோதர எண்ணமே பிரதான நோக்கமாக இருந்தது.
அம்மாவிடம் பேசிகிட்டு இருந்தார் மனைவியை அழைத்து உள்ளே சவூதிலிருந்து கொண்டு வந்த டேங்க் (tang) ஆரஞ்சு குளிர்பானத்தை பிரிஜ்ஜில் கலக்கி வைத்திருந்ததை எடுத்து வரச் சொன்னேன். அவரும் எடுத்து வந்து ஆளுக்கு ஒன்றாக நீட்டினார் நாங்க குடிக்கும்போது இவர் மட்டும் குடிக்க மறுத்தார்.
ஜுஸ் குடிங்களேன் என்றேன்
இல்லேண்ணே வேண்டாம்.
வெய்யில் அலைந்து திரிபவர்களை பேன் காற்றில் உட்கார வைத்து குளிர்ந்த ஜுஸ் கொடுத்தால் யார்தான் மறுப்பார்கள் இவர் ஏன் மறுக்கிறார் ஒருவேளை உயர்சாதி பெண்ணாக இருப்பாரோ? மனதுக்குள் எழுந்தகேள்வியோடு இல்லம்மா சுத்தமானதுதான் குடிங்க.
இல்லேண்ணே வேண்டாம்
ஒருவேளை மயக்க மருந்து கியக்க மருந்து கலந்து கொடுத்து விடுவோம் எனப் பயப்படுகிறாரோ? நாம்தானே சேர்ந்து குடிக்கிறோம் அவருக்கு அப்படி சந்தேகம் வர வாய்ப்பில்லையே? சரி நேரடியாக அவரிடமே கேட்டு விடுவோம்.
ஏன் குடிக்க மாட்டேங்கிறீங்க சாதி பாக்குறீங்க? இல்லை மயக்க மருந்து எதாவது கலந்து இருக்கும் என்று பயப்படுறீங்க அல்லாஹ் மேல சத்தியமாக அப்டிலாம் எதுவும் இல்லை சகோதர பாசத்தோடுதான் என் மனைவி கொடுத்தார் ஏன் மறுக்குறிங்க??
ஐயே கடவுளே அப்டிலாம் ஒன்னும் இல்லேண்ணே கொஞ்ச நேரம் மவுனம் ...... சரி அக்கா பாத்ரூம் எங்கே இருக்கு என்று மனைவியை நோக்கி கேட்டார் உள்ளே வாம்மா என்று அழைச்சுகிட்டு போனார் அப்பதான் எனக்கு சுருக்குனு உறைத்தது.
பாத்ரூம் உள்ளே நுழையும் முன் மனைவியும் அவரும் ஏதோ பேசிக் கொள்வது சன்னமாக கேட்டது. அக்கா காலையிலிருந்து சிறுநீரை அடக்கி கிட்டு இருக்கேன் வெளியில் வந்தால் தண்ணீ ஜுஸ் அதிகமாக குடிப்பதில்லை அர்ஜன்டா வந்தால் எங்கே போவது என்கிற பிரச்சனைக்காகவே. ஆண்களாக இருந்தால் எங்காவது மூட்டுச் சந்தில் சிறுநீர் கழித்து விடுவார்கள் ஆனால் நாம்?

Wednesday, July 22, 2015

போதை மன்னனின் பணம் பதாளம் வரை பாய்ந்தது.

பணம் பாதளம் வரை பாயும் என்பார்களே அதற்க்கு சமீபத்திய மிகப் பொருத்தமான உதாரணம் உலகின் போதைப் பொருள் கடத்தல் மன்னன்  ஈ.ஐ. சப்போஸ் (el chapo)
போதைப் பொருள் கடத்தல் உலகின் மன்னன் எல்லாத்துக்கும் லீடரான  ஈ.ஐ. சப்போஸ் el chapo மெக்ஸிகோவின் மிகவும் அதீநவீன பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பித்து மெக்ஸிகோ அரசாங்கத்துக்கே பெரும்தலைகுணிவை ஏற்படுத்தி தலைமறைவாகியிருக்கிறார்.

இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் தண்ணீயா செலவு செய்து தூக்கியிருக்கிறார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம். அது எல்லாம் இவருக்கு ஒரு சுஜூ ஜூப்பி காசு என்கிறார்கள். தங்கத்தில் ஏகே 47 லிருந்து வைரக்கல் புடிகொண்ட துப்பாக்கி என்று வசதியாக வாழ்ந்த மனிதன்

உலகில் உள்ள மிகவும் திறமையான எஞ்சினியர்கள் ,நிலத்தை தோண்டுபவர்கள் , கட்டடம் கட்டுபவர்கள் , என்று பல தொழில் நுட்ப்ப வல்லுனர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள். ஏதோ நாசா விண்வெளிக்கு விண் கலத்தை அனுப்ப திட்டம் தீட்டுவதை விட கடினமான திட்டத்தை தீட்டியுள்ளார்கள் இவர்கள். 
முதலில் மெக்ஸிகோ சிறைச்சாலையான "அல்டிபிளானோ" வுக்கு 1 மைல் தொலைவில் உள்ள ஒரு நிலத்தை வாங்கிய சிலர் , அங்கே ஒரு கட்டடம் கட்டுவதாக திட்டத்தைப் போட்டார்கள். அதற்கு அரசாங்கத்திடம் இருந்து முறையாக அனுமதியும் வாங்கப்பட்டது. அங்கே இருந்து தான் எவரும் சந்தேகப்படாத வகையில் அவர்கள், ஒரு குகை(சுரங்கப் பாதையை) அடியில் கட்டிட வேலை பார்ப்பது போல் தோண்ட  ஆரம்பித்துள்ளார்கள். சுமார் 3,250 டன் எடையுள்ள மண்ணை அவர்கள் வெட்டி எடுத்து வெளியே எடுத்துக் கொட்டியுள்ளார்கள். அதில் கூட எவருக்கும் சந்தேகம் வரவில்லை.
நிலத்திற்கு அடியில் இவர்கள் சுரங்கத்தை தோண்டிக்கொண்டு , சிறைச்சாலையின் கீழ் சென்று. அங்கே உள்ள குளிக்கும் அறையின் அடியில் கொண்டுபோய் அதனை முடித்துள்ளார்கள். குளிக்கும் அறையில் கீழ் சுமார் 23 அடி ஆளத்தில் அந்த சுரங்கம் இருந்துள்ளது. அதாவது தாம் வாங்கிய நிலப்பரப்பில் இருந்து , சிறைச்சாலை வரை சுரங்கத்தை அவர்கள் தோண்டி இருந்தாலும், சிறைச்சாலைக்கு உள்ளே கிண்ட ஆரம்பிக்கும் வேளை நிலத்திற்கு அடியில் நிச்சயம் சத்தம் கேட்க்கும். இதனால் காவலாளிகளில் எவராவது உஷார் ஆகிவிடலாம். இதனால் அவர்கள் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் மெதுவாக ஓசை படாமல் , தோண்ட ஆரம்பித்துள்ளார்கள்.
 இதற்கு ஒரு சில சிறை போலீஸ்காரர்களும் உடந்தையாக இருந்துள்ளார்கள்.அவர்களுக்கு ஏதோ நடக்க இருக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். பிளான் இப்படி போகிறது என்று தெரியவில்லை. 
இது இப்படி இருக்க சுரங்கப் பாதையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றை இறக்கி , அதன் பின்னால் ஒரு சக்கர வண்டியைக் கட்டி , அதில் தான் வேட்டி எடுத்த மண்ணை கட்டி இழுத்து வந்து வெளியே கொட்டியுள்ளார்கள். அது போக இந்த 1 மைல் நீளமான சுரங்கப் பாதையில் , ஆக்சிஜன் குழாய்கள் கூட பொருத்தியுள்ளார்கள். இறுதியாக சிறைச்சாலையில் உள்ள குளியல் அறைக்கு கீழ் தோண்டப்பட்டு, ஒரு ஓட்டையைப் போட்டு அதனை பின்னர் மணலால் மூடியுள்ளார்கள். எந்த திசையில் தோண்ட வேண்டும். அது எங்கே வரை செல்கிறது , என்பது எல்லாம் துல்லியமாக அளக்கப்பட்டு வரை படம் போடப்பட்டுள்ளது. இதன் பின்னரே சிறையில் இருந்த குற்றவாளி ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார்.


குளியலறைவழியாக , உள்ளே இருந்த சுரங்கப் பாதையில் இறங்கி அங்கே தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்று அந்த கட்டடம் கட்டும் இடத்திற்குச் செல்ல , அங்கே அவர் வருகைக்காக காத்திருந்த சிலர் அவரை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் அங்கே இருந்து வெளியேற்றியுள்ளார்கள்.
அந்த பகுதியை சல்லாடை போட்டு தேடிவரும் மெக்சிக்கோ அதிரடிப்படையினர் , இச்செயலை பார்த்து ஆச்சர்யத்தின் உசிக்கே போய் விட்டார்கள். இனி எந்தக் காலத்திலும் சாப்போசை தேடிக் கண்டு பிடிக்கவே முடியாது என்கிறது மெக்ஸிகோ போலீஸ். அவர் நிச்சயம் பாதுகாப்பாக வேறு ஒரு நாட்டுக்கு தனி விமானம் மூலம் அல்லது கப்பலில் சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.
அவரது போதை வஸ்த்து கடத்தல் வலைப் பின்னல் இதுவரை , செயப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 
அவரை கைதுசெய்து பொலிசார் அடைத்தாலும் அவரது நெட்வேர்க்கை முடக்க அவர்களால் முடியவில்லை. உலக நாடுகளுக்கு போதைப் பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியாக மெக்சிக்கோ உள்ளது. இங்குள்ள காடுகளில் தான் கஞ்சா தொடக்கம் அனைத்து போதைப் பொருள் பயிர்களும் விளைகிறது அந்த விளைச்சல் தந்த டாலரில் புரண்டு உருண்டிருக்கிறார்.
காப்பான் (போலீஸ்) பெருசா கள்ளன் (திருடன்) பெருசா எனச் சின்னப்புள்ளையில் பாட்டிமார்கள் கேட்கும் போதெல்லாம் காப்பான் போலீஸ்தான் பெருசு என்று சொல்லிக் கொண்டு இருந்தேன் இனி பாட்டியிடம் கள்ளன் தான் பெரியவன் அதைவிட பணம்தான் பெரியது எனச் சொல்லத் தோன்றுகிறது.

Tuesday, July 21, 2015

விஷம் விதைக்கும் மதவாத அரசியல் வெறுப்பு வணிகர்கள்

ஒரு கட்சியை, கொள்கையை வளர்க்கப் பல வழிகள் உள்ளன. கொள்கைகளைச் சொல்லி அதனால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லி மக்களைத் தம்பக்கம் ஈர்ப்பது ஒரு வழி. இந்த வழிமுறைக்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும்.

மற்றொரு வழி மிக எளிய வழி! ஒரு பொது எதிரியை அடையாளம் காட்டி வெறுப்புப் பிரச்சாரம் செய்து மக்களின் உணர்வுகளைக் கொந்தளிக்கவைத்து அணி திரட்டுவதுதான் அந்த எளிய வழி!

ஐரோப்பாவில் நீண்ட காலமாக யூதர்களை எதிரிகளாகக் காட்டி அரசியல் நடத்தினர். அதன் உச்சக் கட்டமே ஹிட்லரின் யூத விரோதப் போக்கும் படுகொலைகளும். பின்னர் கம்யூனிசத்தைப் பொது எதிரியாகச் சித்திரித்து மக்களுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஊட்டி அரசியல் நடத்தினர்.

இப்போது இஸ்லாத்தைப் பொது எதிரியாகச் சித்திரிக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டில் வகுப்புவாதிகளும், பிராந்திய வெறியர்களும் இதனையே பின்பற்றுகின்றனர். ஒரு மதத்தை, இனத்தை, சமூகத்தைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் பரப்பி, வெறுப்பும் துவேசமும் என்றும் நிலைத்திருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர். 

நல்லிணக்கம் ஏற்பட்டுவிடா வண்ணம் மிகக்கவனமாகக் காரியமாற்றி வருகின்றனர்.
பாஜக தலைமையிலான மத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வெறுப்புப் பிரச்சாரம் வெகுவேகமாக முன்னெடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஏதாவது ஒரு வடிவில், வெவ்வேறு வார்த்தைப் பிரயோகங்களில் வெறுப்பு விதைகள் தூவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

“ஒரு மனிதன் உணவின்றி, நீரின்றி, உறக்க மின்றி வாழலாம். ஆனால் தன்மானத்தை இழந்து வாழ முடியாது. எனவே இந்தத் தேர்தலில் அந்தச் சமூகத்தைப் பழிவாங்கு வோம். தக்க பாடம் கற்பிப்போம்.”

“நமது சமூகப் பெண்களை மயக்கிக் காதலித்து அவர்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்கின்றனர்.” (இதற்கு லவ் ஜிஹாத் எனும் நாமகரணம் சூட்டினர்.)

“நீங்கள் ஒரு பெண்ணை மதம் மாற்றினால் நாங்கள் உங்கள் சமூகத்தில் பத்து பெண்களை மதம் மாற்றுவோம்”

“மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது. அங்கே பச்சைக் கொடி மட்டுமே ஏற்றப்படும். மூவர்ணக் கொடி ஏற்றப்படமாட்டாது”

“உத்திரப்பிரதேசத்தையும் இன்னொரு குஜராத்தாக மாற்ற மோடி முயன்றால், அவரைத் துண்டு துண்டாக வெட்டுவோம்”

“மோடியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் போய்ச் சேரவேண்டிய ஒரே இடம் பாகிஸ்தான்”

தாக்கரேக்கள், அமித்ஷா, பிரவீன் தொகாடியா, இம்ரான் மசூத், சாக்ஷி மகராஜ், யோகி அவைத்யராஜ், ஆஸம்கான், வருண்காந்தி, சுப்பிரமணிய சுவாமி, உவைஸி என்று இவ்வெறுப்புப் பேச்சாளர்களின் பட்டியல் நீளும்.

இது தவிர வதந்திகள் மூலமே வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். நமது சமூகத்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மானபங்கப்படுத்தப்படுகின்றனர். பசுக்கள் கொல்லப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் தீ வைக்கப்படுகின்றன. புனித நூல்கள் எரிக்கப்படுகின்றன, சொத்துகள் அழிக்கப்படுகின்றன என்பன போன்ற வதந்திகளைப் பரப்புவது அல்லது சிறிய சம்பவங்களை மிகைப்படுத்துவது. அல்லது தனிமனித மோதல்களைச் சமூக மோதல்களாக வர்ணிப்பது.

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், முகநூல் வழியாக போலியாகச் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்களோடு ‘ஆதாரப்பூர்வமாக(!)’ செய்திகள் பரப்பப்பட்டு மிகவேகமாக மக்களைச் சென்றடைந்து கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன.

வெறுப்புப் பிரச்சாரத்தின் இரண்டாவது வகை தேர்தல் காலத்தில் மட்டும் என்றில்லாது எப்போதும் செய்யப்படும் நிரந்தரப் பிரச்சாரம்.

‘வரலாற்றுச் சம்பவங்களை வெறியூட்டும்வகையில் எடுத்துச் சொல்லுதல், அவற்றை மிகைப்படுத்துதல், இட்டுக்கட்டிச் சொல்லுதல் என்பன அதில் இருக்கும்.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் எல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். ஆனால் பெரும்பான்மைச் சமூகம் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்டனர்” - இதுபோன்ற பலவகைப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு மக்கள் மனதில் நிரந்தரப் பகை, வெறுப்பு விதைக்கப்படுகின்றது. இவ்வகைப் பிரச்சாரங்கள் கல்விக்கூடங்களிலேயே தொடங்கிவிடுகின்றன. காலம்சென்ற வரலாற்று ஆசிரியர் பிபின் சந்திரா “வகுப்புவாதம் வகுப்பறைகளில் உருவாகிறது” என்றார். இது தவிர பொதுக்கூட்டங்கள், ஊடகம், வகுப்புவாதிகள் நடத்தும் பயிற்சி முகாம்கள், அவர்கள் நடத்தும் கல்விக் கூடங்கள், அவர்கள் வெளியிடும் பிரசுரங்கள்

வாயிலாக வெறுப்புப் பிரச்சாரம் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்த இரண்டுவகைப் பிரச்சாரங்களுமே ஆபத்தானவை. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டிற்கு வேட்டு வைப்பவையாகும். பொதுவாகவே உலகெங்குமுள்ள வகுப்புவாதிகளும் இனவெறியர்களும், மதவெறியர்களும் வெறுப்புவாதத்தையே தமது வலுவான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உண்டாக்கி அவர்களை எதிரிகளாகச் சித்திரித்துவிட்டு, அச்சமூகத்தின்மீது தாக்குதல் தொடுத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீது அனுதாபம் இல்லாமல் போவதுடன், இது அவர்களுக்குத் தேவைதான் என்ற நிலையும் உருவாகிவிடும்.

ஐரோப்பாவில் நீண்டகாலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரமே அவர்கள் பல துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையிலான நாஜிக்கள் இப்பிரச்சாரத்தை மேலும் ஊதிப்பெருக்கினர். இறுதியில் இலட்சக்கணக்கான யூதர்கள் விஷ வாயு
மூலம் கொல்லப்படுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது.
 சமீபத்தில் ரவாண்டாவில் டுட்ஸி (ஜிutsவீ) இனத்தவர் மீது உருவாக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம் அந்த நாட்டின் பல லட்சம் மக்களின் உயிரை வாங்கியது. இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலவி வரும் அமைதியின்மைக்கு வெறுப்புப் பிரச்சாரமே முதல் காரணமாக உள்ளது.

வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் தேசத்தின் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைக் காப்பாற்ற முடியும். பதற்றமும் கலவரமும் நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும். வகுப்புக் கலவரங்கள் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரையே பெற்றுத் தருகின்றது.

உலக மனித உரிமைக் கழகங்கள் வெளியிடும் அறிக்கைகளில் நமது நாட்டில் நடைபெறும் மதக்கலவரங்கள் ஆண்டுதோறும் தவறாது சுட்டிக்காட்டப்படுகின்றன. 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தை அடுத்து வெளிநாடு புறப்படத் தயாராக இருந்த அன்றைய பிரதமர் வாஜ்பாய் “ நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன்” என்றார். ”ஒரிஸ்ஸா மாநிலத்தில் காந்தமாலில் நடைபெற்ற கலவரத்தைக் குறித்து பிரெஞ்சு அதிபர் சர்கோஸி என்னிடம் கேட்டபோது, நான் அவமானத்தால் தலைகுனிந்தேன்” என்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

நமது நாட்டின் கரும்புள்ளியாகத் திகழும் வகுப்பு மோதல்களையும், அதற்கு ஆதார சுருதியாகத் திகழும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் தடுத்து நிறுத்துவது தேசப்பற்றாளர்களின் கடமையாகும். வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடைசெய்யும் சட்ட விதிகள் ஏராளம் உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதி 125கி இந்திய தண்டனைச் சட்ட விதிகள் 153கி, 292, 293 295கி மூலம் இவற்றைத் தடைசெய்ய முடியும். ஆனால் வழக்கம்போலவே இச்சட்ட விதிகள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. தொகாடியா மீது 19 வழக்குகள் உள்ளன. உவைஸி மீது பல வழக்குகள் உள்ளன. இருப்பினும் இவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் தொடரவே செய்கின்றன.

இவ்வழக்குகளுக்காக இவர்கள் தண்டனை பெறுவதில்லை. தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவிக்கும். தேர்தல் பிரச்சாரம் செய்ய சில நாள்களுக்குத் தடைவிதிக்கும். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்பார். அத்தோடு விவகாரம் முடிந்துவிடும். வகுப்புப் பிரச்சாரம் செய்தால் பதற்றம் மேலும் அதிகமாகும் என்பதால் அவரைக் கைது செய்யாமலிருப்பதே மேல் என்று மக்களுக்குச் சொல்லாமல் சொல்லப்படும். சில வேளைகளில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இவை கண்டுகொள்ளாமல் விடப்படும்.

நல்லிணக்கம், அமைதி இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஓர் அரசுக்கு இதனைத் தடைசெய்வது கடினமான செயல் அல்ல. வாக்குவங்கியில் கவனம் செலுத்துவதே இவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதற்குக் காரணமாக அமைகிறது.

வெறுப்புப் பிரச்சாரத்தைச் சட்டத்தின் மூலமாக மட்டுமில்லாமல் உண்மைப் பிரச்சாரத்தின் மூலமாகவும் முறியடிக்கவேண்டும். அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகளுக்குத் தக்க பதில் அளிக்கவேண்டும். “லவ் ஜிஹாத்’ மூலமாக எத்தனைபேர் மதம் மாறினார்கள்?” என்று கேட்டால் அவர்களால் பதிலளிக்க முடியாது. ஆங்காங்கே நடக்கும் ஒன்றிரண்டு சம்பவங்கள் மிகைப்படுத்தப்படும் சதி அம்பலமாகிவிடும்.

பாஜகவின் முக்கியத் தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வியும் ஷா நவாஸ் ஹுஸைனும் மதம் கடந்த திருமணம்தான் புரிந்துள்ளனர் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. வதந்திகளை உடனுக்குடன் முறியடிப்பது அரசு ஊடகங்களின் தலையாயப் பொறுப்பாகும். மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது என்றால் உளவுத்துறை சந்தேகத்தின் பெயரால் கைதுசெய்த பயங்கரவாதிகளில் எத்தனை பேர் மதரஸா மாணவர்கள்? என்று கேள்வி எழுப்பினால் அவர்களால் பதில்தர முடியாது.

முஸ்லிம்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றால் சச்சார் கமிஷன் அறிக்கையில் கல்வி, பொருளாதாரம், நில உடைமை ஆகியவற்றில் முஸ்லிம்கள் தலித்களைவிடப் பின் தங்கி உள்ளதாகக் கூறப்படுகிறதே..! என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.

வெறுப்புப் பிரச்சாரங்களைக் கண்டு உணர்ச்சி வசப்படுவது கூடாது. சட்டத்தின் துணை கொண்டும், அறிவின் துணை கொண்டும் அவற்றை முறியடிக்கவேண்டும். வரலாற்றில் பல தவறுகள் நடந்துள்ளன என்பது உண்மையே! அவற்றை நியாயப்படுத்திப் பேசுவதும் தவறு. வரலாற்றை முன்னிறுத்தித் துவேசத்தை வளர்ப்பதும் தவறு. வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்வது எனப் புறப்பட்டால் எந்த நூற்றாண்டுவரை பின்னோக்கிச் செல்வது? வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று இனி அத்தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வதே நமது கடமையாகும்.

வெறுப்புப் பிரச்சாரங்களைப் பற்றிப் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஆபத்தானது. “வசு தைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்) என்று அமெரிக்காவில் முழங்கும் நமது பிரதமர் அந்தத் தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டும் காணாதிருப்பது ஏனோ? வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசும் பிரதமர் இவற்றிற்கு முட்டுக்கட்டைபோடும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முடிவு கட்டவேண்டும். அப்போதுதான் ‘இந்த நாட்டிற்கு நல்லகாலம் பிறக்கப்போகிறது (அச்சே தின்)’ என்ற அவரது கூற்று உண்மையாகும்.

கட்டுரையாளர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் (நன்றி காலச்சுவடு)

ஆன்ராய்ட் மொபைல் போனில் தமிழில் எழுதுவது எப்படி?

ஆன்ராய்ட் மொபைல் போனில் தமிழில் எழுதுவது எப்படி?(how to write tamil in android phones)  இதுலாம் ஒரு மேட்டரா என்று மிக அறிந்தவர்கள் யாரவது இருந்தால் அப்படியே அப்பீட் ஆகிகங்க இது உங்களுக்கான பதிவல்ல. மாறாக புதிதாக போன் வாங்கி எழுதத் தெரியாமல் முழிக்கும் புதியவர்களுக்காக இப்பதிவு. (அப்பா வெளக்கியாச்சு )

இது கூட தெரியாமல் இருப்பார்களா என்று கேட்காதீர்கள் தினமும் எனது முகநூல் இன்பாக்ஸில் ஒருவராவது வந்து எப்படி தமிழில் எழுதுவது என கேள்வி தொடுக்காமல் இருந்ததில்லை. இனிமே இப்படி கேட்டால் இந்த பதிவின் லிங்கை கொடுத்து விடுவேன். அதனால் மிகவும் எளிமையாக சொல்லிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். சரி பதிவுக்குள் போவோம்.


எல்லாத்தும் முதலில் உங்கள் போனில் இணைய (நெட்) வசதி இருக்க வேண்டும் அபப்டியிருந்தால் முதலில் Play Store போங்க மேலே உள்ள படத்தில் உள்ளது போல்.

அப்புறம் அந்த பூதக் கண்ணாடியை அழுத்தி Selinam என்று எழுதி தேடுங்கள்.


பல தமிழ் கீ போர்டுகள் இருந்தாலும் செல்லினம் நன்றாக இருப்பதால் அதனை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
இப்படி பதிவிறக்கிய பிறகு நேரே போன் செட்டிங் போங்க போயி
Language & input போயி வட்டமிட்டு இருக்கு பாருங்க அங்கு அழுத்துங்கள்.
அப்புறம் இங்கு வட்டமிட்டு உள்ளது ரைட் கொடுத்து விடுங்கள்.
அதற்கு பிறகு Default என்கிற இடத்துக்கு போயி
இப்படி புள்ளி வைத்து விடுங்கள் அவ்வளவுதான் முடிந்தது இனி தமிழில் எழுதலாம் எழுதி கலக்கலாம்.
அப்புறம் இந்த செல்லின தமிழ் மூன்று வகையான கீ போர்டு இருக்கிறது அதில் ஒன்று ஆங்கிலம்.

வட்டமிட்டு இருக்கும் இடத்தில் தமிழ் என்று எழுதியிருந்தால் அது தங்கிலீஷில் ammaa என்று அடித்தால் அம்மா என்று வருகிற தமிழ் தங்கிலீஷ் வழி கீ போர்டு.

இது நேரடி தமிழ் கீ போர்டு நேரடியாகவும் தமிழில் அடிக்கலாம்.

நமது தாய்மொழியான தமிழில் எழுதுவோம் ஏனெனில் நமது தாய்மொழில் எழுதும்போதுதான் உணர்வுபூர்வமான உரையாட முடியும்.

அன்புடன் உங்கள் சகோதரன் வலையுகம் ஹைதர் அலி.