Saturday, April 6, 2013

இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!

இஜாஸ் அஹ்மத் மிர்ஸா
2012 ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரிலிருந்து காவல்துறையினர் பிடித்துச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் 12 பேரில் ஒருவர்தாம் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா. பத்திரிகையாளர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் சிலரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்ருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி மணவர்கள். நல்ல வேலையில் உள்ளவர்கள். இவர்களில் பத்திரிக்கையாளரான முதியுர்ரஹ்மான் சீத்தீகி, உயர்கல்வி பயின்று வரும் முஹம்மது யூசுப் நள்பந்தி ஆகியோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தேசியப் புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ) முடியவில்லை. எனவே நீதிமன்றம் அவ்விருவரையும் குற்றச்சாட்டிலிருந்து வ்இடுவித்தது. இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய இயலாததால் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மத்திய அரசின் இராணுவப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (D.R.D.O )கீழ் செயல்படுகின்ற சென்டர் ஃபார் ஏர்போன் சிஸ்டத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார் இஜாஸ். மாநிலக் காவல்துறையினர், புலனாய்வு அமைப்பினர் ஆகியோரின் கடும் விசாரணைகளுக்குப் பிறகு மட்டுமே ஒருவருக்கு இந்தத் துறையில் வேலை கிடைக்கும். முஸ்லிம் என்றால் கேட்கவே வேண்டாம். இதில் சேர்ந்த பிறகு அவர் எச்சரிக்கை மிகுந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார். இவ்வாறு இருக்கும்போது, இஜாசுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்கிறது என்ற பெங்களூரு காவல் துறையினரின் வாதம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஜாமீன் பெற்று இஜாஸ் வெளிவந்த அதே நாளில், அவர் இராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனப் பணியிலிருந்து நீக்கப்படும் உத்தரவினை சென்டர் ஃபார் ஏர்போன் சிஸ்டத்தின் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை (CABS/1001/482/Adm) தெரிவித்தது. நாட்டின் பாதுகாப்பு ஆய்வுக்காகத் தம் இளமையை அர்ப்பணித்த ஓர் இளைஞரிடம் தேசம் நடந்து கொள்ளும் முறைதானா இது. இளைஞர் ஒருவரை தவறாக வழக்கில் சிக்க வைத்தல்; அது நிரூபணமாகும் முன்பே அவரைப் பணியிலிருந்து நீக்குதல் என்பது அப்பட்டமான பாகுபாடும் அநீதியுமாகும். ஸம்ஜாதா எக்ஸ்பிரஸ், மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு இதுவரை தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்ற செய்தி வெளியானதும் இந்தப் பின்னணியில்தான்.

மாலேகான்:குண்டுவெடிப்பு  முக்கிய சதியாளர் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

இஜாஸை பணியிலிருந்து நீக்கியதும் புரோஹித்துக்கு இப்போதும் சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியின் துறைதான். மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்ற பாராட்டைப் பெற்றவர் அந்தோணி. ஆனால், நிரபராதி என பொது சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் ஆணையிட்டுச் சொல்கின்ற, குற்றவாளி என எந்தப் புலனாய்வு அமைப்பாலும் நிரூபிக்கப்படாத இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை நீக்கியதற்கான நியாயத்தை அந்தோணி மக்களிடம் கூற வேண்டிய நிலை வரும். இஜாஸ் அடையாளம் மட்டுமே. பாதுகாப்புத் துறை இரட்டை நிலையைக் கைவிட வேண்டும். அது நடக்குமா என்பதை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணி
இதில் ஆறுதல் தரும் செய்தியாக. பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ள பெங்களூரு பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியை வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Apr_13/index.htm#9 )

Friday, April 5, 2013

உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!

ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர்.

பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர்.

இந்தப் பத்துநாள்களுக்குள் இன்போசிஸ் நிறுவனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் தராமல் ரஷீதைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது.

ஆனால் ரஷீத் ஹுசைன் சும்மா உட்கார்ந்துவிடவில்லை.

2008 ஆகஸ்டில் அவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராக லேபர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும் ரஷீதுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது.

இன்போசிஸ் நிறுவனம் ரஷீதுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முதல் நாளிலிருந்தே ரஷீதின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் நீதிக்கான நெடும்பயணத்தில் முன் நின்று போராடின. வெற்றி பெற்றன.

“ ரஷீதுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஆகும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தவறான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகிறார் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த தேசியச் செயலாளருமான முஹம்மது சலீம் அவர்கள்.

முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் போக்கு இனியேனும் நிறுத்தப்படுமா?

(நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Apr_13/index.htm#7)