Wednesday, September 28, 2011

(சிறுகதை)நிஜத்தைத் தரிசிக்கும் போது...



இரவு 11 மணி.

சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி,  ‘டாக்ஸி’ என கையசைத்து நிறுத்தினார்.

தம்பி ஆஸ்பத்திரி போகனும்.

நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்.

என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்’என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

‘தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

‘வேனம்மா எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்க. என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான். எதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.

ஹலோ முதியோர் இல்லமா?

ஆமா என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே?

மன்னிக்கவும் நாளு நாளைக்கி முன்னாடி அனதைன்னு சொல்லிட்டு ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக. முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்.

ஆம்! நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.

Tuesday, September 27, 2011

இஸ்லாமிய பெண்கள் பள்ளிவாசலுக்குள் நுழைய முடியுமா? (பல புத்தக அறிமுகங்கள்)

என்னிடமுள்ள இஸ்லாமிய பெண்கள் சம்பந்தமான புத்தகங்களின் தொகுப்பு தான் இப்பதிவு. என்னிடம் ஒவ்வொரு துறை சார்ந்து இவ்வளவு புத்தகங்கள் வைத்திருக்கிறேன் என்று விளம்பரப் படித்திக் கொள்ளவதற்காக அல்ல இப்பதிவு. கணினி மயமாகி விட்ட இந்த காலப் பகுதியில் வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இந்த புத்தக அறிமுகங்கள் மூலம் வாசிப்பார்வத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் என்பதை முதலில் தெளிவுப் படுத்திக் கொள்கிறேன்.


‘பள்ளிவாசலில் பெண்கள்’ என்கிறஇந்த நூல் பக்க சார்பற்ற ஆய்வு நூல் பள்ளிவாசலில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமையை இஸ்லாமிய வரலாற்றுரீதியாக நிறுபிக்கிறார்.இந்நூலின் ஆசிரியர். இந்த பதிவின் தலைப்புக்குரிய பதில் இந்நூலில் இருக்கிறது. முஸ்லிம் பெண்களின் பள்ளிவாசல் நுழைவுரிமை பற்றிய ஒரு முக்கிய ஆய்வு நூல்.


.அறியாமையின் காரணமாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட ஷரியத்தை சரியான முறையில் இதன் ஆசிரியர் அழகாக விளக்குகிறார்.

 ‘இஸ்லாமும் பெண்களும்’ எனும் இந்நூல் இரண்டு பாகங்களாக வெளியீடப் பட்டவை படிக்க வேண்டிய நூல்.
சவூதி தஃவா அலுவலகத்தின் மூலம் வெளியீடப்பட்ட.மாதவிடாய் குளிப்பு சம்பந்தப்பட்ட வழிகாட்டும் நூல்.

இஸ்லாத்தின் பெண்களுக்கான சட்டங்களை ஆதரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆன் ஒளியில் அழகாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

 “ இஸ்லாமிய பெண்ணியம்” என்ற சொல்லின் பின்னால் உள்ள மோசடியை அழகாக விளக்குகிறார் இந்நூலின் ஆசிரியர்.
இஸ்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மார்க்கம் என்ற தலைப்பில் வந்த 5 வது பாகம் இந்த புத்தகம் கதை வடிவில் நல்ல நூல்.
அன்றைய இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பாக நபித்தோழியர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை பதிவு செய்கிறது இந்நூல்.
இந்த நூலும் அன்றைய இஸ்லாமிய பெண்களின் வாழ்வை படம்பிடித்து காட்டுகிறது படிப்பினையான நூல்.
இறைத்தூதருக்கு மனைவியாக, முஃமீன்களுக்கு அன்னையாக,மார்க்கத்தை கற்றுக் கொடுத்த நல்ஆசிரியராக இவர்களின் ஆளுமையை அழகாக விளக்கும் நூல்.
அன்னை கதீஜா(ரலி) அவர்களைப் பற்றி சிறுவர்களும் விளங்கிக் கொள்ளும் விதமாக வந்த எளிமையான நூல்.

இஸ்லாத்தை தன் வாழ்க்கைநேறியாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய பெண்களின் சுயசரிதைகளை கொண்ட நூல்.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பறிக்கவில்லை என்பதை ஆதரபூர்வமாக பேசும் அழகிய நூல்.
இஸ்லாமிய பெண்கள் சம்பந்தமான மாற்று சிந்தனைரீதியான நூல் ஆய்வுரீதியாக அனுக வேண்டிய நூல்.

இந்த புத்தகம் 624 பக்கங்கள் கொண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்களின் குனநலன்களை படம்பிடித்து காட்டும் நூல்.
இளம்பெண்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது! குடும்பதலைவிகள் அனைவருடைய கைகளில் இருக்க வேண்டிய நூல்.


Sunday, September 25, 2011

உயிர் உடைத்த புகைப்படம்...



புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?


கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி  ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


 ‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am  Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.( நன்றி சமரசம் இதழ்)

Tuesday, September 20, 2011

மலேசியாவில் மங்காத்தா



லேசியாவில் ஒரு வாகன விபத்து. சம்பவ இடத்தில் நானும் என் மலேசியா நண்பனும் இருந்தோம்.  எங்கள் கண்களுக்கு முன்பு மோதிய இரு வாகனங்களும் சாலையில் சிதைந்து கிடந்தன. சாலையில் இருபுறத்தில் இருந்தவர்களும் வாகனங்களை நோக்கி ஓடி வந்தார்கள். நாங்களும் தான். சரியான கூட்டம் வாகனத்தைச் சுற்றி.

மலேசியா மக்களுக்கு என்ன ஒரு மனிதாபிமானம்! வாகன விபத்து நடந்தவுடன் காப்பாற்ற, முதலுதவி செய்ய இப்படி கூடிவிட்டார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே... அந்த நினைப்பில் என் நண்பன் மண்ணை அள்ளிக் கொட்டினார். வாகன நம்பரை குறித்துக் கொண்டிருந்தவரிடம்,


'ஆம்புலன்ஸுக்கு போன் பண்ண‌வா?' இல்லை. 
'அப்புறம் எதற்கு?' சூதாட. 
'சூதாடாவா? என்ன சொல்றீங்க?!' ஆமா, எந்த கார் மோதுதோ அந்த கார்களின் நம்பரை தாய்லாந்து நம்பர் லாட்டரியில் எழுதினால் பரிசு கிடைக்கும். இது அதிர்ஷட நம்பர். இன்னொரு அதிர்ஷ்ட நம்பரும் இருக்கு. அதாவது இங்கு இரண்டு கார்கள் அடிபட்டிருக்கு, இதில் கிடைப்பது நம்பர் இரண்டு (2), முதல் காரில் அடிப்பட்டது ஒரு ஆள் (1), இரண்டாவது காரில் அடிபட்டவர்கள் மூன்று பேர் (3), இப்பொழுது அந்த அடைப்புக்குறிக்குள் உள்ள இலக்கங்களை இணைக்கவும். மொத்தம் 213. இந்த மூன்று இலக்க நம்பரை எழுதினால் கண்டிப்பாக பரிசு கிடைக்கும். சாலையில் போகிற கார்களில் இந்த கார் மட்டும் ஏன் அடிபடவேண்டும்? மற்ற கார்கள் ஏன் அடிபடவில்லை? அதனால் இந்த நம்பர் கண்டிப்பாக ஏறும் என்று விளக்கினார் அந்த சிந்திக்காத அறிவிலி!


213 என்ற நம்பரை 10 வெள்ளிக்கு எழுதினால் நம்பர் அப்படியே விழுந்தால் 4000 (ரிங்கிட்) வெள்ளிகள். 100 வெள்ளிக்கு எழுதினால்.. இப்படி கணக்கு போட்டுக் கொண்டு வந்தவர்களில் முக்கால்வாசி பேர் பேனாவில், மொபைலில் கார் நம்பரையும் அடிபட்டவர்களின் எண்ணிக்கைகளையும் குறித்துக் கொண்டிருந்தனர்.

இது 3 இலக்க நம்பர் ஷாட்

இத ஒரு மாதிரியாக கூட்டி, பெருக்கி

நம்பரை மாற்றி மாற்றி எழுதுவார்கள்.

சிலர் காப்பாற்ற ஓடி வந்தது உண்மைதான். ஆனால் அரைகுறை உண்மை. “முழுப் பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள்” என்பதை விளங்கிக் கொண்டேன்! பணத்தாசையும் மூடநம்பிக்கையும் ஒன்று சேர்ந்து இவர்களின் இரக்க உணர்ச்சியை, மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைத்துவிட்டதே என்று ஆதங்கப்பட மட்டுமே என்னால் முடிந்தது.



தாய்லாந்து லாட்டரி எனும் சூதாட்டம் மலேசியா அரசின் அனுமதியோடும் முழு ஆதரவோடும் நடக்கும் ஒரு தீமையான வியாபாரம். இதற்கென பிரத்யேகமாக கடைகள் இருக்கின்றன. நாம் வாங்கிய சூதாட்ட லாட்டரி சீட்டு முடிவுகளை அறிய எங்கும் போக தேவையில்லை. சிக்னலில் நிற்கும்போது சிக்னலில் இருக்கும் பெரிய மானிட்டரில் இன்றைய சூதாட்ட லாட்டரி சீட்டு முடிவுகள் ஓடும். ATM இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு முன்னால் இன்றைய லாட்டரி முடிவுகள் திரையில் தெரியும்.

மலேசியாவில்  நம்பர் லட்டரி கடை
இதுவும் சூதாட்டக் கடைதான்
இந்த நம்பர் எழுதுபவர்கள் இதற்கு அடிமையாகி ஒருவிதமான மனநோயாளியாக ஆகிவிடுகின்றனர். இவர்களின் சிந்தனை முழுவதும் நம்பரில்தான் இருக்கும்.மொபைல் புதிதாக வாங்கினால் அந்த மாடல் நம்பரை எழுதுவார்கள். அவர்களின் மொபைல் நம்பரின் கடைசி மூன்று நம்பரை எழுதுவார்கள். புதிதாக ஒரு நண்பர் அறிமுகமானால் அவரின் பெயரைக் கேட்டு அந்த பெயரின் கூட்டு நம்பரை எழுதுவார்கள். கிரிக்கெட் விளையாட்டின் இறுதி ரன்களின் மொத்த எண்ணிக்கையை எழுதுவார்கள். இவ்வளவு ஏன், இங்கு நான் கொடுத்திருக்கிற நம்பரை சூதாட்ட பைத்தியங்கள் பார்த்தால் இதையும் எழுதுவார்கள்.




இந்த சூதாட்டத்தின் விளைவாக அமைதியிழந்த குடும்பங்கள், நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் இவர்களை வாழும் சாட்சியாக நான் பார்த்திருக்கிறேன்.
ஏன் இங்குள்ள மலேசியர்கள் சாமி கும்பிடும்போது அவர் முதலில் வைக்கிற கோரிக்கையே 'சாமி! எனக்கு தாய்லாந்து லாட்டரி விழணும்' என்றுதான் இருக்கும்.

மலேசியாவில் தம்பிரான் சுவாமி என்பவர் பேட்டி கொடுக்கும்போது "கடவுள்கிட்ட போயி வழிபாடு செய்றவங்க, 'எனக்கு லாட்டரி டிக்கட் விழணும், காடி வாங்கணும், வீடு கட்டணும்' அப்படின்னுதான் வேண்டிக்கிறாங்க. அதுக்கு அஞ்சு காசு கற்பூரத்தைக் காட்டி, தேங்காய் உடைத்து சாமிக்கிட்ட பேரம் பேசுறாங்க" இப்படி மலேசியர்களின் ஆன்மாவை உலுக்கி கேள்வி கேட்டார்.

இதைவிட கொடுமை மலேசியாவில் 1999 ல் நடந்த மனதை உலுக்கிய உண்மை சம்பவம். நகரின் ஒதுக்குப்புற காளி கோவிலில் கொடூரமாக வயிற்றை கிழித்து கொல்லப்பட்டு, குடல்களை காளியின் சிலையில் மாலையாக்கிய நிலையில் ஒரு சிறுமியின் பிணம் கிடைத்தது. போலீஸ் பல மாதங்கள் தேடி கண்டுபிடித்ததில் இந்த கொலையை செய்தவர் பத்ரகாளியின் பக்தர்; அப்படியே சூதாட்டத்தின் தீவிர பக்தர்; அவரின் கனவில் தோன்றிய காளி, 'மகனே! வயது வராத ஒரு சிறுமியின் வயிற்றைக் கிழித்து, குடலை வெளியே எடுத்து, மாலையாக என்னுடைய சிலையின் கழுத்தில் போடு; உனக்கு சூதாட்ட லாட்டரியில் 10 லட்சம் ரிங்கிட் விழும்' என்று சொல்ல இவரும் 'அதுபோலவே சிறுமியைக் கடத்திக் கொன்றேன்' என்று போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.


சிவகங்கையைச் சேர்ந்த மைதீன் என்பவர் மலேசியாவிற்கு என்னைப் போல பிழைப்புக்காக வந்தவர். மலேசியா வந்த புதிதில் வெள்ளந்தியாக திரிந்தவர் ஒருமுறை நண்பர்கள் குழுவாக உட்கார்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, 'அண்ணே.. பெப்ஸி குடிக்கணும், எங்கே வாங்கலாம்?' என்று கேட்டார். நாங்க பெப்ஸி தானியங்கி இயந்திரத்தைக் கைக்காட்டி அதில் ஒரு வெள்ளியை போடுங்கள், பெப்ஸி இயந்திரத்தின் அடியில் விழும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது, 'அண்ணே.. கேலி பண்ணாதீங்கே, அது எப்படி காசு போட்டா பெப்ஸி விழும்?' என்று கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தவர்.


எப்படியோ கெட்ட தொடர்பு ஏற்பட்டு, சூதாட்ட லாட்டரி அறிமுகம் கிடைத்து முதலில் விளையாட்டாக 4 வெள்ளிகளுக்கு எழுதினார். அதில் உல்டா நம்பராக 500 வெள்ளி என்று நினைக்கிறேன் பரிசு விழுந்தது. மனமகிழ்ந்துப் போன அவர் நண்பர்களுக்கு பீர் பார்ட்டி வைத்தார். மலேசியாவில் என்னைத் தவிர அனைத்து நண்பர்களும் அங்கு குடிக்கக் கூடியவர்கள். என்னையும் வற்புறுத்தினார்கள், 'அடே இது சாராயம் இல்லை, பீர்தான்; அதுவும் இந்த கின்னஸ் பீரில் 8 சதவீத ஆல்கஹால்தான் சேர்த்து இருக்கிறார்கள்' என்றெல்லாம் கூறி குடிக்கவைக்க முயற்சித்து தோற்றுப் போனார்கள்.


அதன்பிறகு அவர் நம்பர் எழுதுவதில் மூழ்கிப்போனார். கொஞ்சமாக எழுத ஆரம்பித்து முழு சம்பளத்தையும் எழுத ஆரம்பித்தார். ஊருக்கு பல மாதங்கள் பணம் அனுப்பாமல் மனைவியும் குழந்தைகளும் அங்கு பட்டினி. அவர்கள் சாப்பாட்டு செலவிற்காக ஊரைச் சுற்றி அவர் மனைவி கடன் வாங்கி பல மாதங்களை சமாளித்து இவரை அனுப்பச்சொல்லி போன் பண்ணும்போதெல்லாம், விதவிதமான பொய்க் காரணங்களை சொல்லி தவிர்த்தார். நண்பர்கள், 'ஏன் இப்படி பொய் சொல்கிறாய், வீட்டுக்கு பணம் அனுப்பித் தொலை' என்று சொல்லும்போதெல்லாம், 'இல்லை ஹைதர்.. போனமுறை ஒரு நம்பரில் போச்சு. இந்த முறை சரியான நம்பர் எழுதி இருக்கிறேன். அவ வாங்குன மொத்த கடனையும் அடைச்சிடலாம்' என்று சொல்லியே போலீஸில் பிடிபடும்வரை ஊருக்கு பணமே அனுப்பவில்லை. ஊருக்கு போகும்போது பெரும் கடன்காரனாய் போய்ச் சேர்ந்தார்.


இங்கு மலேசியா நாடு சட்டப்படி அனுமதிக்கிறது. இங்குள்ளவர்கள் தெரிந்தே நாசமாகப் போகிறார்கள். ஆனால் நான் தற்போது வேலைப் பார்க்கும் சவூதியில் இதே சூதாட்ட அடிமைகள் இருக்கிறார்கள். இங்கு சட்டப்படி அனுமதி இல்லை. ஆனாலும் இங்கு கள்ளத்தனமாய் சூதாட்ட தாய்லாந்து லாட்டரி எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள் ஆதாரங்களுடன் விபரமாக
சவூதியில் மங்காத்தா (கள்ளசூதாடிகள்) என்ற பதிவில் இன்ஷா அல்லாஹ் விரிவாக பார்ப்போம்.


Wednesday, September 14, 2011

கவலையில்லா கவிதை....


நீ கவலைப்படாதே!
ஏனெனில் நீ மகிழ்ச்சியோடும்
மனநிம்மதியோடும் வாழ்கின்ற
நாள்கள் தான் உனது உண்மையான வயது.

கவலையிடம் உனது
வாழ்க்கையைத் தொலைத்து விடாதே.
துக்கப்பட்டு உனது
இரவுகளை வீணாக்கி விடாதே.
கவலையிடம் உனது
நேரங்களைப் பங்கு வைத்துக் கொடுத்து விடாதே
உனது வாழ்க்கையை
அதை விரயம் செய்து விடாதே.
விரயம் செய்வோரை
இறைவன் நேசிப்பதில்லை.

மகிழ்ச்சியான,உறுதியான,அமைதியான,உள்ளம்தான்
அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்தது.
ஏனெனில், உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது
உறுதியான,ஆக்கப்பூர்வமானநல்ல சிந்தனைகள் பிறக்கும்.
மகிழ்ச்சி என்பது ஒரு கலை.

பூமியில் மரண ஆட்சி நடக்கிறது
இந்த உலகம் நிரந்தரம் அல்ல
சேறோ அழுக்கோ அற்ற
தூய வாழ்க்கையை நீ விரும்புகிறாய்
ஆனால்,வாழ்க்கை
சேற்றில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

இயற்கைக்கு மாறாக ஒவ்வோரு நாளும்
துன்பங்களை அனுபவிப்பவன்
தண்ணீரில் எரிகொள்ளியைத் தேடுகிறான்
கிடைக்காததற்கு ஆசைப்படுவது
பள்ளத்தாக்கின் விளிம்பில்
ஆசை எனும் வீட்டை
கட்டுவதற்கு சமம்.

வாழ்க்கை உறங்கிக் கொண்டிருக்கிறது
மரணம் விழித்துக் கொண்டிருக்கிறது
இரண்டுக்குமிடையே மனிதன்
கற்பனையில் நடமாடிக் கொண்டிருக்கிறான்.

எனவே
உங்கள் இலக்கை
விரைவில் அடைந்துக் கொள்ளுங்கள்
உங்கள் ஆயுள் ஒரு புனித நூல்;இரவல் பொருள்
அதைமீட்க
இளமைக் குதிரையில் வேகமாகச் செல்லுங்கள்
அமைதியாக வாழ
நீ பேராசை கொண்டாலும்
காலம் அமைதியானது அல்ல
சுதந்திரத்திற்கு எதிர்ப்பு என்பது
காலத்தின் இயல்பு.

பாலத்தை அடைவதற்கு முன்பே அதைக் கடக்காதே
பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பே
அவற்றை நினைத்துக் கவலைப்படாதே.

ஆதமின் மகனே!
மூன்று நாள்கள்தான் உனக்குரியவை
'நேற்று' அது சென்று விட்டது
'நாளை' அது இன்னும் வரவில்லை
'இன்று' அதில் நீ இறைவனை அஞ்சி வாழு!


Sunday, September 4, 2011

மலத்தை மடியில் சுமக்கும் மழலைகள்

நாமெல்லாம் வயிறு நிறைய உண்கிறோம், உண்ட உணவு நம்மையறியாமல் ஆயிரக்கணக்கான தாக்கங்களுக்குட்பட்டு செரிமானமடைந்து கடைசியில் மலமாகின்றது. அதனை அடுத்த நாள் இலேசாக கழித்து விடுகிறோம். இதனை ஒரு பொருட்டாக நாம் கருதுவதில்லை. ஆனால், இந்த பதிவில் வரும் ஜெஸிக்காவைப் போன்று இந்த உலகில் வாழ்கின்ற பல ஆயிரம் பேருக்கு இது ஒரு பாரமான சுமை. வயிற்றில் இருக்க வேண்டிய மலத்தை மடியில் சுமப்பது, அதுவும் 24 மணிநேரமும் மடியில் சுமப்பது....

இந்தப் பூமியில் ஒருவன் 10 தசாப்தங்கள் தான் வாழ்ந்தாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களை விட 10 மாதங்கள் கர்ப்பத்தில் வாழ்கின்றபோது விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் என்கிறது மருத்துவ உல‌கம் ஒரு குழந்தை சாதாரணமாய் பிறக்கின்றதென்றால் அது விபத்துக்களில் இருந்து தப்பிப் பிறந்த அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.

அதற்காக நாம் இறைவனுக்கு நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டும். சில வேளைகளில் சில சிசுக்கள் விபத்துக்களில் சிக்கிவிடுவதுடன் அதன் பாதிப்பு பிறந்தது முதல் மரணிக்கும் வரை அவர்களில் நிலைத்திருந்து நோயாளியாய் வாழ்ந்து மரணிப்பதும் நாம் காணும் யாதர்த்த நிலை.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்(Birmingham) என்ற மாநகரில் வாழும் பெற்றோருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தை ஜெஸிக்கா அந்நகரிலுள்ள பிரபலமானதொரு மருத்துவமனையில் சாதாரணமாகப் பிறந்தது. இந்த மருத்துவமனையில் சில மாதங்கள் நானும் கடமைபுரிந்தேன்.

சாதாரண கர்ப்பம்,சுகமான பிரசவம்.அழகிய பெண்குழந்தை பிறந்துவிட்டது. பிறந்த குழந்தை அழுதது,பால் குடித்தது. கண்களை விரித்துப் பார்த்துத் தான் வந்து சேர்ந்த இந்த விசித்திரமான பூமியை ஒருமுறை நோட்டமிட்டு விட்டு மீண்டும் தூங்கியது. குழந்தைகளுக்குரிய பண்புகளான அழுவது,பால்குடிப்பது,தூங்குவது என்ற வட்டத்திற்குள் இந்தக் குழந்தையும் வாழ்க்கையைத் துவங்கியது.பொற்றோரும் உற்றார் உறவினரும் இந்தக் குழந்தைச் செல்வம் கொண்டு வந்த பாசத்தின் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஜெஸிக்கா பிறந்து இரண்டாவது நாள் மாலை வேளை குழந்தையையும் தாயையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருந்தனர்.

வீடு செல்லுவதற்கு முன்னர் சிறுவர் நோய் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்து திருப்தியடைந்த பின்னரே மருத்துவமனையிலிருந்து விடுவிப்பது வழக்கம். வழமைப்போல் அன்று மாலை எனக்கு தாதியிடமிருந்து அழைப்பு வந்தது: “குழந்தை ஜெஸிக்காவின் பெற்றோர் வீடு செல்ல ஆயத்தமாயிருக்கின்றனர். தயவுசெய்து குழந்தையைப் பரிசோதித்து விட்டுச் செல்லுங்கள்.”

குழந்தையை பரிசோதிப்பதற்கு முன்னால் சில கேள்விகள் கேட்க வேண்டும்.
“ குழந்தை பால் குடிக்கின்றதா?”
“ ஆமாம், ஒரு பிரச்சினையும் இல்லை”
“ அதிகம் அழுகிறதா?”
“இல்லை, சாதாரணமாய் இருக்கின்றது”
“சிறுநீர் கழித்ததா?”
 “ ஆமாம் பலமுறை. கீழாடை (Nappy) ஈரமாய் இருந்ததால் மாற்றி விட்டோம்” என்று பதிலளித்த தாய். அடுத்த கேள்விக்கு அளித்த பதில் கதையை தலைகீழாய் புரட்டிவிட்டது.

“ குழந்தை மலம் கழித்ததா?”

“இன்னும் இல்லை டாக்டர்” என்று பதில் வந்தது பதில். இரண்டு நாட்களாகி விட்டது; குழந்தை மலம் கழித்திருக்க வேண்டுமே!” என்று சொன்னவாறு நன்றாகப் பரிசோதிக்க ஆரம்பித்தேன்.

" Everything OK?-எல்லாம் சரிதானா?” என்று கேட்டார் அந்தத் தாய்.

“ஆம்” என்று சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆதங்கம் இருந்தபோதும்....

“இன்னும் மலம் கழிக்கவில்லை என்று சொன்னீர்கள். துரதிஷ்டவசமாக குழந்தையின் விருத்தியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஜெஸிக்கா மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் பிறந்திருக்கிறாள்” என்று சொன்னபோது “What? What? What?" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்.

 “ மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் குழந்தைகள் பிறக்க முடியுமா?”

கருப்பையில் வளரும் சிசுவின் குடல் விருத்தியடையும் போது வாயில் ஆரம்பித்த துவாரம் மலம் கழிக்கும் பின் துவாரம் வரை ஒரு குழாய்(Tube) போல் விருத்தியடையும்.

வாய் என்ற துவாரத்தில் ஆரம்பிக்கும் செரிமானத் தொகுதி, உணவுக்குழாய், இரைப்பை,சிறுகுடல்,பெருங்குடல் என்ற அமைப்பாக மாறி ஒவ்வோர் அமைப்பும் தனக்கேயுரிய தொழிற்பாட்டைச் செய்ய, உணவு செரிமானமடைய‌ கடைசியாக மலமாக மாறும். அது பெருங்குடலின் எல்லையான குதம் (Anus)என்ற மலம் கழிக்கும் துவாரத்தினூடாக வெளியேற்றப்படும். தேவையானபோது துவாரத்தைத் திறப்பதற்கும் பின்னர் அதனை மூடிவிடுவதற்கும் இறுக்கமான மூடி(Anal Sphineter) அந்த இடத்தில் இருக்கிறது.

இதுதான் இயற்கையாக இறைவன் ஏற்படுத்திருக்கும் அற்புதமான அமைப்பு. இயற்கையான இந்த அமைப்பில் சில விபத்துகள் ஏற்படும்போதுதான் படைப்பின் அற்புதத்தை, அவசியத்தை உணர முடிகின்றது.

ஜெஸிக்காவிற்கு என்ன நடந்தது? பெருங்குடல் தனது எல்லையான உடலின் வெளிப்புறத் துவாரம் (Anus) வரை விருத்தியடையவில்லை. மாறாக வயிற்றுக்குள்ளே இடையில் மூடப்பட்டுவிட்டது. அதாவது பெருங்குடலின் கடைசி 4-5 செ.மீ. தூரம் குடல் இல்லை. இதனால் செரிமானம‌டையும் பால் மற்றும் உணவு வெளியேற்றப்படாமல் குடலில் தேங்கி குடல் விரிந்து விரிந்து பெரிதாகி வீங்கும். மலம் கழிக்கும் வெளிப்புறத் துவாரம் எதுவும் இல்லாமல் சாதாரண தோலால் மூடப்பட்டு உடலின் ஏனைய பகுதிபோன்று சாதாரண தோலாக இருக்கும் இது(Imperforate Auns)  என்று அழைக்கப்படுகிறது.

வளர்ச்சியற்ற பெருங்குடல்


“ மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் குழந்தைகள் பிறக்க முடியுமா?” என்று ஆச்சரியத்தோடும் ஏமாற்றத்தோடும் கண்ணீர் மலகக் கேட்டார் அந்தத் தாய்.

“ஆம் 5000 இல் ஒரு குழந்தை இவ்வாறு பிறக்க முடியும்.என்று சொன்னபோது தடுமாறிப்போன அந்தத் தாயின் வாய் வார்த்தைகள் இன்றி மெளனமாகிப் போனது.

“ஜெஸிக்கா எப்படி மலம் கழிப்பாள் டாக்டர்?” சில நிமிடங்கள் மெளனமாய் இருந்துவிட்டு மீண்டும் கேட்கிறாள் அந்தத் தாய்.

ஜெஸிக்காவின் தாயிடம் பதிலளிக்க ஆரம்பித்தேன். “ஜெஸிக்காவின் பெருங்குடலில் கடைசி 4-5 செ.மீ. விருத்தியடையவில்லை.குதம் வயிற்றுக்கு வெளியே வராமல் வயிற்றுக்குள்ளேயே மூடப்பட்டு விட்டது. இதனால் மலம் குடலில் தேங்கி பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே,கவனமாக மலத்தை வெளியேற்றி நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து ஜெஸிக்காவைப் பாதுகாப்பதற்காகவும் மலம் கழிக்கம் ஏற்பாட்டை செய்வதற்காகவும் வயிற்றில் ஒரு துவாரமிட்டு குடலை அந்தத் துவாரத்தினூடாக இழுத்து வந்து மலத்தை வயிற்றுக்கு வெளியே கழிக்கும் ஓர் அமைப்பைச் செய்ய வேண்டும். இதற்காக அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்” என்று சொன்னதும் அந்தத் தாய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

மலப்பை(Colostomy Bag) யோடு குழந்தை

இந்த அறுவைசிகிச்சை (Colostomy) என்று அழைக்கப்படுகின்றது. வயிற்றில் ஏற்படுத்திய இந்தத் துவாரத்தினூடாக மலம் தொடர்ந்து 24 மணிநேரமும் கொஞ்சம் கொஞ்சமாய் வந்து கொண்டிருக்கும். சாதாரணமான நிலையில் குடலின் எல்லைக்கு வரும் மலம் Rectum என்ற குடலின் பகுதியில் நாம் மலம் கழிக்கும் வரை தேங்கியிருக்கும். ஆனால், இத்தகைய நோயாளிகளுக்கு Rectum இல்லாதிருப்பதால் மலம் தேங்க முடியாது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதனை வயிற்றுக்கு வெளியே சேர்த்தெடுப்பதற்கு வயிற்றில் ஏற்படுத்திய துவாரத்தில் ஒருவகைப் பை(Colostomy Bag) ஒன்று ஒட்டி வைக்கப்படும். இந்தப் பை நிறையும்போது அதனை எடுத்து வீசிவிட்டு புதிய பையை இணைக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு சிலவேளைகளில் 5-6 பைகள் மாற்றவேண்டிய சூழல் ஏற்படலாம். துரதிஷ்டவசமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டு விட்டால் பாவம் அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கும்.
மலப்பை(Colostomy Bag) 

“ எனது குழந்தை வாழ்நாள் முழுவதும் மலத்தை மடியில் சுமக்க வேண்டுமா?” என்று மீண்டும் கேட்டார் அந்தத் தாய்” மலத்தை மடியில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏன் எனது குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்று சொல்லியவாறு அழுது கொண்டிருந்தார் அந்தத் தாய்.

அடுத்த நாள் அவசரமாக Colostomy அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. உடலின் கீழ்ப்புறத்தில் மறைந்திருக்க வேண்டிய இயற்கைத் துவாரம் இல்லாமல் வயிற்றில் இடதுபுறமாய் துளைக்கப்பட்டு செயற்கையான துவாரம் ஏற்படுத்தப்பட்டு Colostomy Bag இணைக்கப்பட்டது.

“இந்த அழகிய வயிற்றைத் துளைத்து அசிங்கப்படுத்தாமல் உடலின் கீழ்ப்புறம் அதற்கேயுரிய இடத்தில் ஏன் செயற்கையான துவாரம் ஏற்படுத்த முடியாது? தயவுசெய்து அப்படியான ஒரு ஏற்பாட்டையாவது செய்யுங்கள்? என்று மன்றாடினாள் அந்தத் தாய்.

இந்த அழகிய வயிற்றைத் துளைத்து அசிங்கமாக்கி அதனை ஒரு மலகூடமாய் மாற்ற மருத்துவர்களுக்கும் உடன்பாடில்லை. இருந்தபோதும் வேறுவழியில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழல்.

உடலின் கீழ்ப்புறம் மறைந்த இடத்தில் துவாரமிட முடியும். ஆனால் குடல் 4-5 செ.மீ. குள்ளமாக இருப்பதால் அதனை கீழ்ப்புற எல்லைக்கு கொண்டு வர நீளம் போதாது. மேலும் கீழ்ப்புறமாய் துவாரமிட்டால் தொடர்ந்தும் 24 மணிநேரமும் சேரும் மலத்தை சேர்த்தெடுக்கும் Colostomy Bag ஐ கீழ்ப்புறத்தில் இணைப்பதற்கு ஒரு ஆதாரம் (Base) இல்லை ஒரு ஆதாரம் இல்லாமல் Bag ஐ இணைக்க முடியாது. இப்படி பல பிரச்சினைகள் இருப்பதால் மலங்கழிக்கும் துவாரத்தை வயிற்றில் ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இரண்டாவது நாள் இன்பமாய் வீடு செல்ல வேண்டிய ஜெஸிக்காவின் பெற்றோரும் உறவினரும் இரண்டு வாரங்களுக்குப் பின் ஜெஸிக்கா மலத்தை  மடியில் சுமக்க,ஜெஸிக்காவை சுமந்தவாறு மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றபோது...

மலத்தை மடியில் சுமந்து வயிற்றை மலகூடமாக்கும் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தாமல் ஆரோக்கியமானவனாக என்னை வாழ வைக்கும் இறைவனுக்கு எனதுள்ளம் பல நூறு தடவைகள் (அல்ஹம்துலில்லாஹ்) நன்றி சொல்லிக் கொண்டது.

நன்றி Dr.முஸ்தபா ரயீஸ் (MBBS,DCH,MD,MRCPH)
 Peadiatric Intensivst, Cardiac PICU
Hariey street Hospital,London


நன்றி அல்ஹஸனாத் மாத இதழ்

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்.(பழைய நூல் புதிய அறிமுகம்)

ஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்தகத்தின் முதல் பாகத்தை 2000 ஆம் ஆண்டு படித்தேன் இஸ்லாமிய ஆட்சியாளர்களை நடுநிலையோடு ஆய்வு செய்து வெளியான புத்தகம் படித்து முடித்த பிறகு இரண்டாவது பாகத்திற்காக காத்திருந்தேன் 11 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாவது பாகம் கிடைத்தது இதனை “தின்னைத் தோழர்கள் பதிப்பகம்” வெளியிட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எனது நன்றியும் பிரார்த்தனைகளும்.


முதல் பகுதியில்: இஸ்லாமிய இறையாட்சி பற்றிய இஸ்லாமியக் கன்ணோட்டம் ஏன்ன? முதலாம் நூற்றாண்டில் எந்தேந்த நியதிகளின் கீழ் அது செயல்பட்டது? என்னென்ன காரணங்களால் அது மன்னராட்சியாக மாறியது? அதனால் ஏற்பட்ட விளைவுகள் யாவை? அவ்விளைவுகளினால் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட எதிர்தாக்கங்கள் என்னென்ன? என்பது பற்றியும்.

வரலாற்றில் உயர்ந்து நிற்கும் கஃலீபாக்கள்(மக்கள்பிரதிநிதித்துவ) ஆட்சி எப்படி இருந்தது? இஸ்லாமிய ஆட்சியை மன்னராட்சியின் பக்கம் இழுத்துச் சென்ற காரணிகள் யாவை? கிலாஃபத்துக்கும்- மன்னராட்சிக்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை?. இவைகள் குறித்து அறிந்துக் கொள்ள சரியான ஆதாரபூர்வமான புத்தகம்.


நான்கு கஃலீபாக்கள் இஸ்லாமிய அடிப்படையில் எப்படி ஆட்சி நடத்தினார்கள்   என்பது நம் கண்முன் விரிகிறது. இந்த காலப்பகுதியில் வாழ்ந்திருந்தால்அரசியல் என்பது சாக்கடை என்ற சிந்தனையோ, சொற்களோ பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. 

உதாரணத்திற்கு இப்புத்தகத்திலிருந்து சில சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு.

முதல் கலீஃபாவாக ஆக்கப்பட்ட மறுநாள் அபுபக்கர்(ரழி) அவர்கள் தமது தோளில் ஒரு துணிமூட்டையை சுமந்துக் கொண்டு விற்பதற்காக வீதியில் கிளம்பினார்கள் அதுதான் அவர்களுடைய வருமானத்திற்குரிய வழியாக இருந்தது. வழியில் உமர்(ரலி) அவர்கள் அபுபக்கரைக் கண்டு “தங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “எனது மனைவி மக்களை நான் காப்பற்ற வேண்டாமா?” என்றார்கள்.

  “உங்களை கஃலீபவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம் தலைமை பொறுப்பு சுமத்தப் பட்டுள்ளது தங்கள் வியாபாரமும் செய்துகொண்டு அதனை நிறைவேற்ற முடியாது!” என்று கூறிய உமர் (ரலி) “வாருங்கள் நிதி அமைச்சர் அபூஉபைதா (ரழி) விடம் செல்வோம்” என்று அழைத்து சென்றார் இவருக்கு ஒரு சம்பளம் போட்டுக் கொடுங்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு அபுஉபைதா (ரழி) கூறினார்கள் “தங்களுக்கு அகதிகளின் ஒரு சாதாரண நபரின் வருமானத்தின் அளவு உதவிப்பணம் வழங்கப்படும் அது மிக உயர்ந்த நிலையிலுள்ளோரின் வருமான அளவைப் போன்றும் இருக்காது. மிகதாழ்ந்த நிலையிலுள்ளோரின் வருமான அளவைப் போன்றும் இருக்காது!”

அவ்வடிப்படையில் அபுபக்கர்(ரழி) அவர்களுக்கு வருடாந்திர உதவிப் பணமாக நாலாயிரம் திர்ஹம் தீர்மானிக்கப்பட்டது. அப்படியிருந்த போதும் அபுபக்கர் (ரழி) மரணத்தருவாயில் எட்டாயிரம் திர்ஹம்கள் தன்னிடம் மீதமுள்ளதை (பைத்துல்மால்) அரசாங்க கஜானவிற்கு கொடுத்து விடுங்கள் என்று இறுதி சாசனம் செய்துவிட்டு சென்றார்கள். இப்பொருள் இரண்டாம் கஃலீபா உமர்(ரழி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவர் கூறினார்.

“தமக்கு பின்னால் (கஃலீபவாக) வருபவர்களை அபுபக்கர்(ரழி) மிகவும் கஷ்டத்திற்கு ஆளாக்கிவிட்டார்.

கஃலீபாக்களின் ஜனநாயக ஆட்சிமுறை
ஈரான்,ஈராக்,சிரியா, பாலஸ்தீன் போன்ற 36 நாடுகளை மாநிலமாக கொண்டு ஆட்சி செய்த கஃலீபா அலி(ரழி)அவர்களை காரிஜிய்யாக்கள்(அலி (ரழி)அவர்களின் ஆட்சியை ஏற்காமல் எதிர்புரட்சி செய்தவர்கள்) பகிரங்கமாக பொது இடத்தில் அவரைத் திட்டினார்கள் என்று ஐந்து காரிஜியாக்கள் கைது செய்யப்பட்டு அவர் முன்பு கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் நான் அலியைக் கொள்வேன் என்றும் பகிரங்கமாக கூறியிருந்தான்.
அவர்களை விடுவித்தபிறகு அலி(ரழி) தமது ஆதரவாளர்களிடம் கூறினார்கள். ”நீங்களும், நாடினால் அவர்கள் திட்டுவதைப் போன்றே திட்டிவிடுங்கள்.

ஆனால் செயல் வடிவில் அவர்கள் எதுவும் செய்யாதவரை அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் கூடாது!
வார்த்தைகளில் திட்டுவது ஒன்றும் கைநீட்டும் அளவுக்கு கொடிய குற்றமல்ல என்றார்கள்.(பக்கம் 137ல்)


வெளியீடு
தின்னைத் தோழர்கள் பதிப்பகம்
24,நேரு வீதி குமராநந்தபுரம்
திருப்பூர் 641602,தமிழ்நாடு
தொடர்புக்கு
9994600350-9952635343


Thursday, September 1, 2011

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்.(பாகம்-3)


இமாம் புகாரி அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு விரிவாக எழுதுகிறேன் என்பதற்கு அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து விட்டு நாம் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்று நினைக்கிறேன்.


(ஸஹீஹான) சரியான ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் இமாமவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.ஓர் ஊரிலிருந்த பெரியவர் ஒருவரிடம் சில ஹதீஸ்கள் இருப்பதை அறிந்து நீண்ட நெடுந்தூரம் நாள்கணக்காக கால்நடையாகப் பயணம் செய்து அவரைக் காணச் சென்றார்கள்.

அவர் ஒரு பையைக் காட்டி தம் ஒட்டகத்தை அழைத்தபோது அது,அதில் தமக்குரிய உணவு இருக்குமென நம்பி அருகில் வந்ததும் அவர் அதைப் பிடித்துக் கட்டினார். அவர் அந்த பையை உதறியபோது அதில் எதுவுமே இல்லை. இதை தொலைவிலிருந்து கவனித்த இமாம் அவர்கள், உடனே அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிவிட்டார்கள். காலிப்பையை காணம் உள்ள பை போல் காட்டி ஒரு வாயில்லாப் பிராணியை ஏமாற்றும் இவர், எவரைத்தான் ஏமாற்றமாட்டார்? இவர் சொல்லை எப்படி நம்புவது என இமாம் திரும்பி விட்டார்கள்.
ஸஹீஹ்
(பலமானது)
ளயீஃப்
(பலமற்றது)
மவ்ழூஉ
(புனையப்பட்டது)
ஹஸன்
(அறிவிப்பாளர் தகுதியில் சிறு குறைபாடு இருந்து வேறு பல வழிகளில் ஹதீஸின் கருத்தை சொல்லக்கூடியது)
ஹதீது முஅல்லக்
(ஹதீஸை சொன்னவர்களில் ஒருவர் அல்லது இருவர் பெயர் விடுபட்டிருந்தால்)
முன்கத்ஃ
(அறிவிப்பாளர் வரிசையில் சஹாபாக்களுக்கு அடுத்து யாரேனும் விடப்பட்டிருந்தால்)
மக்தூஃ
ஒரு ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு இரண்டாவது தலைமுறையினரால் சொல்லப்பட்டிருந்தால்.
 (இதை இன்னும் விரிவாக நூலை தொகுத்த முறையில் பார்ப்போம்)

இப்படி ஹதீஸ்களை தொகுப்பதில் தனக்கு தானே கண்டிப்பான நியதிகளை வகுத்துக் கொண்டு ஹதீஸ் தொகுக்கும் கலையில். புது வழிமுறைகளை ஏற்ப்படுத்தி சென்ற மாமேதை.
சரி தொடருக்கு வருவோம்
சென்ற தொடரில் 

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் (பாகம்-2) இதில் மதீனாவில் விட்டுவிட்டு சென்றார்கள் என்பதை பார்த்தோம்.



இங்கு இமாம் புகாரி அவர்களின் தாயின் தியாகத்தை நினைவு கூற வேண்டியதிருக்கிறது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த மகனுக்கு தாய் பாசம் மட்டுமே கிடைத்த சூழலில் மார்க்க கல்வி கற்பதற்காக அதனையும் இழந்து 16 வயதில் மகனை மக்காவில் விட்டு விட்டு ஊர் திரும்புகிறார்கள் இன்றைய காலம் மாதிரி சாப்பிட்டயா? உடல்நலம் எப்படி இருக்கிறது? என்று மணிக்கொருமுறை கைத்தொலைபேசியில் உரையாடுகிற தொழில்நுட்பம் வளர்ந்த காலமல்ல அவ்வளவு ஏன் கடித போக்குவரத்துக் கூட நவீனமாக இல்லாத காலம் அதுவும் உஸ்பேக்கிஸ்தான் எங்கிருக்கிறது மக்கா எங்கிருக்கிறது. இவர்களின் தியாகத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

இமாம் புகாரி மக்காவில் வந்ததிலிருந்து அதற்குபிறகு 16 வருடங்களாக மதீனா.எகிப்து,ஷாம்,பாலஸ்தீன்,ஜோர்டன்,லெபனான்,சிரியா,ஈராக் பாக்தாத்,கூபா,பஸார.(இன்றைய ஈராக்) இப்படி ஒவ்வொரு நாடாக பயணம் செய்தார்கள் பிற நாடுகளில் இருக்கின்ற மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்பதற்காகவும்,ஹதீஸ் செவிவழி கேட்டுயிருந்த அறிவிப்பாளர்களை நேரடியாக சந்தித்து ஹதீஸ்களை திரட்டுவதற்காகவும் மாதக் கணக்கில் வருடக் கணக்கில் பயணம் செய்தார்கள் தன்னுடைய வாழ்நாளை பயணங்களிலேயே அதிகமாக செலவழித்தார்கள்.

மக்காவிலிருந்து பாக்தாதிதிற்கு மட்டும் கிட்டதட்ட 7 முறை திரும்ப திரும்ப பயணம் செய்திருக்கிறார்கள் அன்றைய காலப்பகுதியில் பெரிய மார்க்க அறிஞர் என்று போற்றப்பட்ட ‘இமாம் அஹமது’(ரஹ்) அவர்களை சந்திப்பதற்காக அவர்களிடம் ஹதீஸ் கலையை கற்றுக் கொள்வதற்காக. நேரடியாக சந்தித்து ஆலோசனைகளைப் மார்க்க கல்வியை மேருக்கேற்றிக் கொண்டார்கள்.

நாம் இன்று புகாரியில் வருகிறது என்று ஈஸியாக சொல்கிறமே அதனை அவர்கள் தொகுக்கும் போது வீட்டுக்குள் அமர்ந்து அல்லது A.C.க்கு கிழே இருந்து கொண்டு இணையத்தில் தேடி எடுத்து பதிவிடுகிற நம்மை போன்ற டேபிள் எழுத்தளராக இருக்கவில்லை. இரவு பகலும் கொவெறு கழுதையிலும்,ஒட்டகத்திலும் தூசி மணல்,கடுங்குளிர்,பாலைவனவெயில்
இவைகளை கடந்து தான் சேகரிக்க முடிந்தது.

இமாமவர்களின் மணவர் சொல்கிறார். நான் ஒரு இரவு பார்த்தேன் இமாம் புகாரி அவர்கள் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்து விளக்கை பத்த வைப்பதும் ஏதோ குறிப்பு எழுதுவதுமாக இருந்தார்கள். ஹதீஸை தொகுக்கும் சிந்தனையில் அந்த ஆர்வத்தில் முழிப்பு வரும்போதேல்லாம் ஹதிஸ்களின் தரத்தை குறித்துக் கொள்வதும் அறிவிப்பாளர்களில் பெயர்களை குறித்துக் கொள்வதுமாக இருந்தார்கள் என்பதை நான் விளங்கிக் கொண்டேன் என்கிறார்.

இமாவர்கள் மொத்தம் 20 நூல்களை எழுதியுள்ளர்கள் ஒவ்வொரு நூல்களும் பல பாகங்கள் கொண்டவை. அவைகள் ஹதிஸ் துறையை சர்ந்த நூல்கள், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைச் சார்ந்த நூல்கள், பிக்ஹு (சட்டநூல்கள்) என்று வகைப்படுத்தலாம். அவைகளில் சில "கிதாபுல் தாரீக்" என்ற நூலில் ஹதீஸ்களை யார் யாரேல்லாம் அறிவித்தார்களோ அவர்களை சகல தகவல்களையும் தொகுத்து எழுதி மிகப் பெரும் சதனையை புரிந்தார்கள்.



தனது பதினெட்டாம் வயதில் எழுதிய “தாரீகுல் கபீர்” பிறகு “தாரீகுல் அஸ்கர்”, "தாரீகுல் அவ்ஸத்" கிதாபுல் குன்னா, கிதாபுல் உஹ்தான், "கிதாபுல் அதபில் முஃப்ரத்" கிதாபுல் அஃபாஃ" ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்கள்
இமாமவர்கள் இவ்வளவு நூல்களை ஏன் எழுத வேண்டும்?  முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாக்கை சரியான முறையில் கொடுத்து செல்ல வேண்டும்  என்ற ஒரே காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. 

அவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும் முகமாக நாம் சமூகத்தில் சில குழுவினர் சரியான ஹதீஸ் சரியற்ற ஹதீஸ் என்பதேல்லாம் கிடையாது அரபியில் ஒரு வார்த்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி சொல்லப் படுபவைகள் அனைத்தும் ஹதீஸ்துதான் நிலைப்பாடு எடுக்கிறார்கள் இது எவ்வளவு பெரிய தவறு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நூல்களில் முதல் இடத்திலிருப்பது "ஸஹீஹ் புகாரி" எனும் நூல் ஆகும்.
82-க்கும் மேற்பட்ட விரிவுரை நூல்கள் வெளி வந்துள்ளன. அவற்றில் முகவும் சிறந்தது, இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானீ (ரஹ்) எழுதிய "ஃபத்ஹுல் பாரியும்" அடுத்து இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கஸ்தலானீ (ரஹ்) எழுதிய "இர்ஷா துஸ்ஸாரி"யும் அதை அடுத்து இமாம் ஸகரிய்யா அல் அன்ஸாரீ (ரஹ்) எழுதிய "துஹ்ஃபத்துல் பாரீ"யும் ஆகும்.

 அடுத்த தொடரில்(4ம் பாகத்தில்) முற்றும்