Saturday, March 31, 2012

காயப்படுங்கள்,கவலைப்படுங்கள்.

எல்லா நேரங்களிலும் துன்பம் இழிவானதும் அன்று. எல்லாக் காலங்களிலும் துயரம் வெறுக்கத்தக்கதும் அன்று. சில சூழ்நிலைகளில் காயங்கள் நமக்கு நன்மை அளிக்கும்.

மனம் வலிக்கும் போதுதான் மனிதன் உருக்கமாகப் பிரார்த்திக்கிறான். கவலையேற்படும் போதுதான் இறைவனை உளப்பூர்வமாகத் துதிக்கிறான். படிக்கும் பருவத்தில் வலிகளைச் சகித்துக் கொள்ளும் மாணவன் சிறந்த அறிஞனாக உயர்வான். படிக்கும் காலத்தில் சோதனைகள் அவனைத் திணறடிக்கலாம். ஆனால் முடிவில் ஆற்றல்மிக்க அறிஞனாகப் பிரகாசிப்பான். கவிஞனின் வலி சிறந்த இலக்கியத்தைத் தரும். அவனது உள்ளத்திலும், இரத்த நாளத்திலும் கனன்று கொண்டிருக்கும் வேதனை அவனது உணர்வுகளைத் தட்டியெழுப்பும்.ஓர் எழுத்தாளனின் காயம் உயிரோட்டமான படைப்பை நமக்குத் தரும். அதில் அனுபவங்களும் நினைவுகளும் வாழும்.

காயங்களால் அவமானங்களால் சிரமங்களால் கழுவப்படாத மாணவன், மகிழ்ச்சியை மட்டுமே அனுபபித்து அழுக்குப்படாமல் உலா வரும் மாணவன் சோம்பேறியாகவே இருப்பான். அவனிடம் தளர்ச்சியும் பலவீனமும் மிகைத்திருக்கும்.

கசப்பான அனுபவங்களைச் சுவைக்காத, இன்னல்களை அசை போடாத, வலியறியாத கவிஞனின் கவிதைகள் மிகச் சாதாரணமாகவே இருக்கும். அவை வெறும் வார்த்தை நுரைகள். ஏனெனில், அந்த வரிகள் அவனது நாவிலிருந்து வெளிப்பட்டவை; உள்ளத்திலிருந்து புறப்பட்டவை அல்ல. அந்த வார்த்தைக் குவியலில் கவிஞனின் இதயத்தையோ, உணர்வுகளையோ காண முடியாது.

சில அறிஞர்கள் மிகச் சிறந்த புத்தகங்களை எழுதியுள்ளார்கள். அவர்கள் பட்ட வேதனைகள்தான் இதற்குக் கராணம். சாதனையாளர்கள் பலரும் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகளை, சோதனைகளைக் கண்டு பயந்து ஓடாதீர்கள். அவை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும்,ஆற்றலையும் நமக்குத் தரலாம். எரிந்து கொண்டிருக்கும் உள்ளத்தோடும் உணர்வோடும் வாழும் வாழ்க்கை, எந்த உணர்ச்சியும் இல்லாமல் செத்துப் போன இதயத்தோடு வாழும் வாழ்க்கையை விடச் சிறந்தது; தூய்மையானது.

சமூக பாதிப்புகளை பார்த்து வெந்துகொண்டிருக்கும் சொற்பொழிவாளனின் மனதிலிருந்து தெறிக்கும் வார்த்தைகள் கேட்பவரது இதயத்தின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும். உயிரின் வேர் வரை பாயும். எனெனில் அந்தச் சொற்பொழிவாளன் காயங்களின் மேல் வாழ்கிறான்.

நாம் அனுபவத்தில் பல கவிஞர்களின் கவிதைகளைப் படித்திருப்போம். சில கவிதைகளில் உயிர் இல்லாமல் இருந்ததை கவனித்து இருக்கிறீர்களா? ஏனெனில், அவை வேதனையால் எழுதப்பட்டவையல்ல. அவற்றில் சூடும் இல்லை. ஐஸ் கட்டியைப் போல குளிர்ச்சியாகவும், மண்ணாகட்டியைப் போல உணர்ச்சியற்றவையாகவும் அவை இருக்கும்.

மேலும் சில சொற்பொழிவாளர்களது நூல்களையும் படிக்கும் போது அவை வாசகர்களது உள்ளத்தில் அணுவளவு பாதிப்பைக் கூட ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்காது. இதற்குக் காரணம் அந்தப் பேச்சாளர்கள் எந்த வலியையும் வேதனையையும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். எனவேதான், அவர்களது வார்த்தைகளில் உயிரோட்டத்தைப் பார்க்க முடிவதில்லை.

ஆகவே உங்களின் எழுத்தின் மூலம், கவிதையின் மூலம் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினால், முதலில் நீங்கள் சமூக அக்கறையோடு காயப்பட்ட விடயங்களை எழுதுங்கள். அல்லது காயப்படுங்கள் தோல்விகளையும் துயரங்களையும் அனுபவிங்கள். அதன் பிறகு உங்களது உள்ளத்திலிருந்து புறப்படும் வார்த்தைகள் பிறரது உள்ளங்களில் ஊடுருவும்; நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பல விடங்களில் காயப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் என் அனுபவத்தில் சொல்கிறேன்.

Wednesday, March 28, 2012

சிகரத்தில் ஏறும்போது...!


கல்வி அறிவின் விளக்கு
ஆன்மாவின் உயிரோட்டம்
நன்னடத்தையின் எரிபொருள்

மகிழ்ச்சியும் பரந்த மனமும்
கல்வியால் ஏற்படும்
கல்வி தெளிவற்றை தெளிவாக்கும்
தவறியதை கண்டுபிடிக்கும்
மறைவானதை கண்முன் நிறுத்தும்

கல்வி கற்க இரவில் விழிப்பது
எனக்கு மிகவும் இனிமையானது

கடினமானவற்றைப் புரிந்து கொள்ள
தொடர்ந்து முயல்வது
எனக்கு மிகவும் விருப்பமானது,இதமானது
சுவையான உயர் ரக பானத்தை விட

கணினியில் எழுதும் போது எழும்
கீ போர்டின் ஓசை
மிகவும் இனிமையானது
காதலியின் ஓசையை விட

என் நிலையை அடைய முயல்பவனே!
சிகரத்தில் ஏறும்போது
தளர்ந்து பாதியில் திரும்பியவனுக்கும்
சிகரத்தைத் தொட்டவனுக்கும் இடையே
எவ்வளவு வேறுபாடு உண்டு?

நீ இரவு முழுவதும் அயர்ந்து உறங்குகிறாய்
நான் கண்விழித்து உழைக்கின்றேன்
என்னை வெல்ல இன்னும் உனக்கு ஆசை உண்டா?

அறிவு சிறந்த அருட்கொடை!
அறிவைச் சுமந்த ஆன்மா
ஆனந்தம் அமைதியை பெறுகிறது

Monday, March 26, 2012

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமா?

தற்பொழுது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரணமான மின்வெட்டு,தமிழக மக்களின் வாழ்க்கையையே நிலைகுலையச் செய்துள்ளது. சிறு தொழில்கள் நிறைந்த கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை தொடர்ந்தும்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவேளி விட்டும் மின்தடை ஏற்படுகிறது.

இதே போல் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்டத்திலும் இதே நிலை. இங்கெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு ஷிப்டுகள் நடத்தி வந்தவர்கள் தற்பொழுது ஒரு ஷிப்டு கூட நடத்த முடியாத நிலை. குறைந்தபட்சம் குறிப்பிட்ட மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைத்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனும் நிலையில் பல சிறுதொழில் நிறுவனங்களும், கடுமையான பதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
தொழிற்சாலைகளை தொடர்ந்து விவசாயிகளும் மின்தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி கல்லூரிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன? தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?

தமிழ்நாடு மின்சார வாரியம் 1994- 98 முதல் 2000- 01 வரையிலான காலங்களில் ஆண்டொன்றுக்கு சுமார் 350 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வந்துள்ளது. இடையில் 2000-01 இல் 4851 கோடி நஷ்டமும் மீண்டும் 20001- 2002 இல் 112.5 கோடி லாபமும் அடைந்துள்ளது. அதன் பிறகு 2002- 03 முதல் தொடர்ந்து 1110 கோடியில் ஆரம்பித்து 2010- 11ல் 11,733 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வருங்காலத்தில் இந்த நஷ்டம் இன்னும் அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

31.3. 2011 முடிவு வரை மின்சார வாரியம் அடைந்துள்ள நஷ்டம் 53, 298 கோடி; அத்துடன் 2012-2013 ஆண்டுக்கான நஷ்டம் 14547 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சரி கட்ட மின்சார வாரியம், மின்கட்டண உயர்வை பயனீட்டாளர்களின் தலையில் சுமத்தவதற்கான அனுமதி வேண்டி மின்சார ஆணையத்திடம் கோரியுள்ளது. 2001- 02 வரை மின்சார வாரியமும், அரசுமே மின்கட்டண உயர்வை நிர்ணயம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 8 முறை அறிவித்து வந்துள்ளது. இந்த உயர்வு தொழிற்சாலைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மட்டுமே என்றாலும் வாரிய வருவாய் உபரியாகவே இருந்துள்ளது.

ஆனால் 2003 இலிருந்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அது புதிய மின்நிலையங்களை நிறுவுவது, மின்சார உற்பத்தி, விநியோகம், பயனீட்டுக் கட்டணங்களை நிர்ணயம் செய்வது, பற்றக்குறையைப் போக்க தனியாரிடமிருந்து மினசாரம் கொள்முதல் செய்வது, கொள்முதல் விலையை நிர்ணயிப்பது போன்ற அனைத்து நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட சர்வ வல்லமை படைத்த நீதிமன்ற அதிகாரத்துடனான ஓர் அமைப்பாக உருவானது. அதன் பிறகுதான் வாரியத்தின் நஷ்டமும் செழித்து வளந்து இருப்பதைப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

எனவே மின்வாரியம் அடைந்த நஷ்டத்திற்கும் தற்பொது நிலவும் மின் பற்றாக்குறைக்கும் காரணம் ஆணையத்தின் செயல்பாடுகளே என்று உணர முடியும். 2001- 02 முதல்தான் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை வாரியத்திற்கு விற்கத் தொடங்கின. மின்சார வாரியத்தின் விலை ரூ.2.64 /யூனிட் இருக்கும் பொழுது தனியாரிடம் வாங்கிய மினசாரத்தின் விலை அதிகபட்சம் ரூ.10.48 ஆக உள்ளது. எனவே இதில் தனியார் கொள்ளை லாபம் அடைகின்றனர். சுமார் 1200 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்காமலே ரூ.250 மானிய விலையில் மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.
 மின்வாரியத்தின் புதிய நிலையங்களை அமைப்பதற்கோ, பழைய நிலையங்களைச் சரிவரப்பராமரித்து உற்பத்தியைப் பெருக்குவதற்கோ, உற்பத்தி மின்கடத்தல்,விநியோகம் போன்ற நிலைகளில் ஏற்படும் மினசார இழப்பைச் சரி செய்யவோ ஆணையம் எந்த முயற்சியும் எடுத்தாகத் தெரியவில்லை.
மாறாக எப்பொழுதெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தனியாரிடமிருந்து அதிக விலையில் கொள்முதல் செய்வதும், தனியாரிடம் போகும் ஒப்பந்தத்தில் மின்சாரம் வழங்கினாலும் இல்லையென்றாலும் குறைந்தபட்சமாக ஒரு தொகையைத் தனியாருக்கு வாரியம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையும், தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அவர்கள் கேட்கும் போதெல்லாம் கொள்முதல் விலையை உயர்த்துவதும் வழக்கமாக உள்ளது.

மின்வாரியம் உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகளை ஆராயாமல் இழப்புகளைச் சரி செய்யவும் நிர்வாகத்தைச் சீர் செய்வதற்கும் எந்த முயற்சியும் எடுக்காமல் நஷ்டத்தை சரி கட்டுவதற்கு 9741 கோடி மின்கட்டண உயர்வு செய்ய வேண்டி ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம் அரசிடம் இருந்திருந்தால் பால் விலையையும் பேருந்து கட்டணத்தையும் உயர்த்திய போதே உயர்த்தியிருப்பார்கள்.

தற்பொழுது மின்சார ஆணையமும் இது தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய பல்வேறு முக்கிய நகரங்களில் பயனீட்டாளர்களின் கூட்டங்களை நடத்திக் கருத்து கேட்டு வருகிறது. தெருத் தெருவாக ஒவ்வொரு பயனீட்டாளரிடமும் கேட்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் ஒன்றிய அளவிலாவது கருத்துக் கேட்பை நடத்த வேண்டும். எனவே இது வேறும் கண் துடைப்பு நாடகம் தான் என்று தெரிகிறது.

எனவே ஆணையம் உடனடியாகத் தலையீட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரியத்துக்கு ஆணையிட வேண்டும்.

பல ஆண்டுகளாக அரசு, வாரியம், ஆணையம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கால் ஏற்பட்ட இழப்பைச் சரிகட்ட மக்கள் தலையில் மின் கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. எனவே இந்த இழப்பை அரசே ஏற்க வேண்டும்.

மின் வாரியம் மாநிலத்தில் உள்ள மின்நிலையங்களின் பராமரிப்பை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களின் துயரைத் துடைப்பது ஒரு மக்கள் நல அரசின் கடமை. மக்கள் போர்க்கோலம் பூணுவதைத் தவிர்க்க இது ஒன்றே வழி.

மின்வாரியத்தில் நடைபெறும் ஊழலைத் தடுத்து நிர்வாகத்தைச் சீர்செய்து செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உற்பத்தி, மின்கடத்தல், விநியோகம் ஆகியவற்றில் உயரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் இழப்புகளைக் குறைக்க வேண்டும்.
தெரு விளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும்.

தனியார் மற்றும் அரசு சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.

நன்றி: ஆ சுப்பிரமணி
(கட்டுரையாளர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத்தலைவர் ஆவார்.)

தொடாமலே ஷாக் அடிக்கும் கூடங்குளம் அனுமின் நிலையம்...!


மிடாஸ்’ என்கிற மன்னனின் கதையைப் படித்திருப்பீர்கள். மிடாஸின் பக்தியை மெச்சிய தேவதைகள் என்ன வேண்டுமானாலும் கேள்தருகிறோம்” என்கிறார்கள். போராசை பிடித்த மிடாஸ்நான் தொட்டதெல்லாம் தங்கமாகி விட வேண்டும்” என்று கேட்கிறான் . தேவதைகள் அவ்விதமேநடக்கும் என வரம் கொடுத்து விடுகிறார்கள்.மகிழ்ச்சியில் திளைத்த மிடாஸ் கும்மளமிட்டுக் கொண்டு வீடு திரும்புகிறான். ஆனால் அவனுடைய மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. சாப்பிடுவதற்காக உனவைத் தொட்டால் அது தங்கமாகி விடுகிறது.குடிக்கிற நீரும் தங்கமாகி விடுகிறது. உடுத்துகிற ஆடையும் தங்கமாகி விடுகிறது. அன்பு மனைவிஅருமை மகள் எல்லாருமே தங்கப் பதுமைகளாகி விடுகிறார்கள்.

நவீன அறிவியல் வளர்ச்சி கூட மிடாஸ் பெற்ற வரம் போன்றது தான். இந்த மிடாஸின் தொடுதலால் எல்லாமேஎல்லா வசதிகளுமே கிடைத்து விடுகிறது. ஆனால் நீர்வளம், காற்று, உணவு தானியங்கள்மழை போன்ற வாழ்வாதாரங்களும் அடிப்படைத் தேவைகளும் அழிந்து போகின்றன, கூடங்குளமும் அனுமின் நிலையமும் அப்படித்தான் ஆனால் இது தொட்டால் தங்கம் ஆகாது தொடாமலே ஷாக் அடிக்கும்.

Wednesday, March 21, 2012

’மானி’ மதம் தோன்றி மறைந்த விதம்.


மூன்றாம்(216- 276) நூற்றாண்டைச் சேர்ந்த மதம் மானி (manichaeism) இதனை நிறுவியவர் மானி என்பவர்.இந்த மதம் அடையாளமில்லாமல் இன்று அற்று போய் விட்டாலும்.நான்காம் நூற்றாண்டுகளில் அது செல்வாக்கின் உச்சகட்டத்தை எட்டி கிறிஸ்தவத்திற்கு ஒரு போட்டி மதமாக இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய இந்த மதம் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் வரையிலும் பரவியிருந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இம்மதம் நிலைத்திருந்தது. மானி தோற்றுவித்த இந்த மதம்,முந்தைய மதங்களின் பலவற்றினுடைய கொள்கைகளின் கூட்டிணைப்பாக விளங்கியது. சொராஸ்டர் (Zoroaster),புத்தர், இயேசு கிறிஸ்து ஆகியோரை உண்மையான அருட்போதர்கள் என்று மானி கருதினார். எனினும் அவர்களில் எவரையும் விட மிக முழுமையான அருள் வெளிபாட்டுச் செய்தி (Revelation) தமக்குப் பின்னாளில் கிடைத்தாக அவர் கூறிக் கொண்டார்.

மானியின் மதத்தில் புத்த,கிறித்தவ சமய அம்சங்களும் அடங்கியிருந்த போதிலும், அந்த கோட்பாடு (மேலை நாடுகளின்) கருத்தை கவரும் முறையில் இருந்தது. அக்கோட்பாடு நன்மை, தீமை என்ற இரு பொருள்வாதக் கோட்பாட்டைக் கொண்ட பார்சி சமய துவைத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும். ‘இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர்கள் என்ற அடிப்படையை கொண்டது.

‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கையில் மானிக்கு உடன்பாடில்லை “இந்த உலகை ஒரே கடவுள் ஆளவில்லை. இருவேறு சக்திகளுக்கிடையிலான இடைவிடாத போராட்டத்தின் களமாகவே உலகம் விளங்கிறது.இந்த இரு சக்திகளில் ஒன்று தீய நேறி, இதனை இருளாகவும் பருப்பொருளாகவும் மானி உருவகித்துக் காட்டுகிறார். இன்னொன்று நன்னெறி இதனை ஒளியாகவும் ஆன்மாகவும் அவர் காட்டுகிறார்.

மானிக்கே சமய இறைமையியலை விரித்துரைத்தால் பதிவு ரொம்ப நீளமாக போய் விடும். எனினும் மனிதனின் ஆன்மாவை நன்னெறியோடும், அவனது உடலை தீயநெறியோடும் அவர்கள் இணைத்துக் கண்டதன் விளைவாக இனப் பெருக்கத்திற்காகக் கூட பாலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மானிக்கே மதவாதிகள் நம்பினார்கள். புலாலுண்ணுதல், மது அருந்துதல் ஆகியவற்றையும் அது தடை செய்கிறது.

இத்தகைய கடுமையான கட்டுத் திட்டங்களைக் கொண்ட ஒரு கோட்பாடு, செல்வாக்குப் பெறுவதும்,பெருமளவு மக்களின் ஆதரவைப் பெறுவதும் கடினம் என உங்களுக்கு எண்ணத் தோன்றுகிறதா?. ஆனால் மானிக்கே மத திருச்சபையின் பாமர உறுப்பினர்களுக்கு இந்த கடுமையான தடைகள் உரியன அல்ல. அவை வீடு பேற்றுக் கெனத் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரு சிறிய உயர் குழுவினர்க்கு (The Elect) மட்டுமே அவை உரியவை.
‘கேட்பவர்கள்’ (The Hearers) என்றழைக்கப்படும் பாமர உறுப்பினர்கள் மனைவியரை (அல்லது ஆசை நாயகிகளை) வைத்துக் கொள்ளலாம்; குழந்தைகள் பெற்று குடும்பம் நடத்தலாம். புலால் உண்ணலாம்; மது அருந்தலாம். அவர்கள் பல்வேறு மத சடங்குகளை அனுசரிக்க வேண்டும். “உயர் குழு” வினை ஆதரிக்க அவர்கள் கடமைப்பட்டவர்கள். ஆனால், அவர்களுக்குச் சுமத்தப்பட்ட அறநெறிகள் அளவுக்கு மீறிக் கடுமையானவை அல்ல. இதில் மானிக்கே மதத்தின் ஒரு கிளைப் பிரிவினராகிய கேத்தாரி (Cathari) போன்றவர்கள் பாமரர்களுக்கு வாழக்கையில் மேலும் பல சுதந்திரங்களையும் அளித்தனர்.

மானி 216 ஆம் ஆண்டில் மெசப்பொட்டேமியாவில் பிறந்தார். அப்போது அந்த நாடு பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. கிறித்துவக் கோட்பாட்டின் தீவிரச் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த ஒரு சிறிய சமயக் கிளையின் பின்னணியில் மானி வளர்ந்தார். அவருக்கு 12 ஆம் வயதிலேயே மத வெளிப்பாடுகள் தோன்றியதாகக் கூறினார். இருபதாம் வயதிலேயே அவர் தமது புதிய சமயத்தைப் போதிக்கலானார். அவரது சொந்த நாட்டில் முதலில் அவர் வெற்றி பெறவில்லை. அதனால் அவர் வடமேற்கு இந்தியாவுக்குச் சென்றார். அங்கு ஓர் உள்நாட்டு அரசரைத் தம் மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிக் கண்டார்.

242 ஆம் ஆண்டில் மானி பாரசீகம் திரும்பினார்.அங்கு முதலாம் ஷாப்பூர் மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஷாப்பூர் மானிக்கே சமயத்திற்கு மாறவில்லையாயினும், அவருக்கு மானியிடம் ம்திப்பு ஏற்பட்டது. அதனால் பாரசீகப் பேரரசு முழுவதிலும் அவரது புதிய மதத்தை போதிப்பதற்கு அரசர் அனுமதியளித்தார்.அடுத்த 30 ஆண்டுகள் வரை, முதலாம் ஷாப்பூர், முதலாம் ஹார்மிஸ்டு ஆகியோரின் ஆட்சியின் கீழ் மானி  தமது மதத்தை தங்கு தடையின்றி போதித்தார்.

அவருக்கு ஏராளமான ஆதரவளர்கள் தோன்றினர்.எனினும் மானியின் வெற்றி கண்டு சஸ்ஸானிடு அரசுகளின் ஆட்சியில் அரசமதமாக அதிகாரத்திலிருந்த பார்சி மதக் குருமார்கள் பொறமை கொண்டனர். முதலாம் பஹ்ராம் அரசர் 276 ஆம் ஆண்டில் ஆட்சிப் பீடம் ஏறியதும் மானி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். 26 நாட்கள் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த பிறகு அவர் இறந்தார். 

மானி தம் வாழ்நாளில் ஏராளமான நூல்கள் எழுதினார். ஒரு நூலை பாரசீக மொழியிலும் மற்ற நூல்களை ஒரு செமிட்டிக் மொழியாகிய சிரியக் (Syriac) மொழியிலும் எழுதினார்.
                                             சிரியக் மொழியின் உயிர் எழுத்துக்கள்

அந்த நூல்கள் மானிக்கே மதத்தின் வேத நூல்களாக மதிக்கப்பட்டன. மானிக்கே மதம் அற்றுப் போனதும், இந்த வேத நூல்களும் மறைந்து போயின.ஆயினும் இவற்றுள் சில இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டன.
                                   கண்டெடுக்கப்பட்ட சிதைந்த மானி மத வேதநூல்கள்
மானியின் ஆயூட் காலத்திலேயே அவரது மதத்திற்கு இந்தியா முதல் ஐரோப்பா வரையில் ஆதரவாளர்கள் ஏற்பட்டனர்.அவர் இறந்த பின்னரும் இந்த மதம் தொடர்ந்து வளர்ந்து மேற்கே ஸ்பேயின் தொடங்கி கிழக்கே சீனா வரையிலும் பரவியது. கிறிஸ்துவ மதம் ரோமானியப் பேரரசின் அரசு மதமாக ஆனதும், மனிக்கே சமயம் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. 600 ஆம் ஆண்டு வாக்கில்,மேலை நாடுகளிலிருந்து மானிக்கே மதம் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டது.

ஆனால் மொசப்பொட்டேமியாவிலும், ஈரானிலும் மானிக்கே மதம் தொடர்ந்து  வலுவாகவே இருந்தது. அங்கிருந்து அது மத்திய ஆசியாவுக்கும், துருக்கிஸ்தானுக்கும் மேற்குச் சீனாவுக்கும் பரவியது. எட்டாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில், மேற்குச் சீனாவின் ஒரு கனிசமான பகுதியையும், மங்கோலியாவையும் ஆண்டு வந்த “ உய்கூர்” களின் (Uighurs) அரசு மதமாகவும் ஆகியது. இந்த மதம் சீனாவிலும் நுழைந்து, கடற்கரை வரைப் பரவி,அங்கிருந்து தைவான் தீவையும் எட்டியது . ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் மறுமலர்ச்சியடைந்து தோன்றியதும்,அதன் வலிமையான கொள்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மானிக்கே மதம் வீழ்ச்சியடையலாயிற்று.
ஒன்பாதம் நூற்றாண்டிலிருந்து மத்திய ஆசியாவிலும் இந்த மதம் வீழ்ச்சியடையலாயிற்று. 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்புகளுக்குப் பிறகு அங்கும் அது அடியோடு அழிந்தது.

இதற்கிடையில், ஐரோப்பாவில் மானிக்கே மதத்திலிருந்து தோன்றி பல்வேறு கிளை மதங்கள் எழுந்தன. அதில் கிழக்கு ஐரோப்பியக் கிளை மதங்களில் மிக முக்கியமானது கேத்தாரி (Cathare) என்ற பிரிவாகும். இது ஃபிரெஞ்சு நகராகிய ஆல்பியில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதனால் இந்தக் கிளை மதத்தினரை ஆல்ஜென்சியர்கள்(Albigensians) என்றும் அழைத்தனர். 12 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குறிப்பாகத் தெற்கு ஃபிரான்சில் இந்தப் பிரிவு பெருமளவு பரவியது.
ஆல்பிஜென்சியர்களின் கோட்பாடு மானிக்கே மதக் கோட்பாட்டை பெரிதும் ஒத்திருந்தபோதிலும் அவர்கள் தங்களை கிறித்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். ஆனால், கிருஸ்தவ மரபுத் திருசபையினர் அவ்ர்களைப் புறச் சமயத்தினர் என ஒதுக்கினர். இறுதியாக மத்திய காலத்துப் போப்பாண்டவர்களிலேயே சமயச் சகிப்புணர்வு மிகக் குறைந்தவர் எனக் கருதப்பட்ட மூன்றாம் இன்னசன்ட் போப்பாண்டவர் (Pope Innocent-111) இந்த மதத்தினருக்கு எதிராக சிலுவைப்போர் தொடுக்கும்படி ஆணையிட்டார்.

1209 ஆம் ஆண்டில், இந்த சிலுவைப்போர் தொடங்கியது. 1244 ஆம் ஆண்டில் பயங்கர உயிர்ப் பலிக்கும்,தென் ஃபிரான்சின் பெரும்பகுதியின் நாசத்திற்கும் பிறகு ஆல்பிஜென்சியர்கள் அடியோடு ஓடுக்கப்பட்டனர். எனினும், கோத்தாரி மதம் இத்தாலியில் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.
சிலுவைப் போரில் மானி மதத்தினர் கொல்லப்படுகிறார்கள் (பழைய ஓவியம்)
இன்றைய தலைமுறைக்கு மானி மதம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டது. ஆனால் அழிந்த வரலாறுகளை தெரிந்துக் கொள்வதின் மூலம் இன்றைய தலைமுறையினர்க்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன.

ஆதரங்கள்
http://en.wikipedia.org/wiki/Mani_(prophet)
http://looklex.com/e.o/mani.htm
Iranian Religions: Manichaeism

Saturday, March 17, 2012

செவப்பு சட்டயே பாத்தா பயமா இருக்கு (நிஜக்கதை)


இராமநாதபுரம் To மதுரை போர்டு போட்ட பஸ் மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது பரமக்குடியிலிருந்து வந்த பலூன் வியாபாரி மைதீன் பஸ்க்குள்ளே இருந்து சுத்திமுத்தி நோட்டமிட்டார். அவிய்ங்கே நிக்கிறாய்ங்களா? ஆமா இம்பூட்டு பேரு நிக்கிறாய்ங்கே இவிய்ங்ககிட்டயிருந்து எப்படி தப்பிக்க போறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது யோவ் மாட்டுத்தாவணி வந்துருச்சு எறங்குயா கிழே என்ற நடத்துனர் குரல் குறுக்கிட்டு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

அவுட்டோருலே மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டு கட்டுறதுக்கு முன்னாடியெல்லாம் நேரே அண்ணா பஸ் ஸ்டாண்டில் பஸு நிக்கும் அங்கே இறங்கி போடி நடையாக நடந்து போனால் பலூன் சரக்கு எடுக்கிற மொத்த கொள்முதல் கடை இருக்கும் இப்ப இங்கிருந்து அங்கே போறதுக்கு ஒரு பஸ் மாறனும் அதுக்கு வேறே ஆறு ஓவா தெண்டம் கட்டனும். டீ கடையில் டீ குடிக்கனும் போல இருந்துச்சு இருந்தாலும் வேண்டாம். அண்ணா பஸ் ஸ்டாப் வண்டியில் எறிக் கொண்டு உள் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

 பஸ் முன்னோக்கி கிளம்பியது இவரின் சிந்தனைகள் மறுபடிக்கும் பின்னோக்கி போனது. வர செவ்வாக்கிழமை தங்கச்சிமடம் சூசையப்பர் கிறிஸ்துவ கோவில் திருவிழா பலூன் கம்பு போட்டா நல்ல வியாபரம் ஓடும் சரக்கு எடுக்க காசு இல்லாம ஆயிஷாவின் கையில் கெடந்த அரை பவுன் மோதிரத்தை வித்து காசாக்கியதும், அம்மா யாவாரம் பாத்து ஒனக்கு திருப்பி வாங்கி தந்துருவம்மா என்று சொன்னதும் நினைவுக்கு வர பத்து ரூபாயை மட்டும் எடுத்து முன் பாக்கேட்டில் வைத்துக் கொண்டார்.

வண்டியை விட்டு இறங்கி பலூன் ஓல்சல் சேட்டு கடைக்கு போனார்
கிலுக்கு----- --------------------ஒரு டஜன்
சக்திமான் கொட்டு ----------ஒரு டஜன்
பொம்ம தூப்பக்கி-------------ஒரு டஜன்
பாப்பா ஆப்பிள் பாலுன்----- பத்து பாக்கேட்டு

இப்படி ஒவ்வோரு சரக்காக இவர் சொல்ல சேட் கட பையன் எடுத்து அட்டை பெட்டியில் அடுக்கிக் கொண்டே இருந்தான் சேட்டு சிட்டை கொடுங்க எவ்வளவு வந்துச்சு நாலயிரம் தான் பாய் இந்தங்கோ சிட்டை என்றார் சிட்டயை பார்த்தாதும் மைதீனின் மனக்கணக்கு தவறாக இருந்தது நாலயிரம் வராதே கிலுக்கு ஒரு டஜன் எவ்வளவு சேட்டு 33 ரூபாய் தானே. இல்லே பாய் 36 ரூபாய் பேட்ரோல் விலை கூடிவிட்டது பிளாஸ்டிக் சரக்கு விலையும் கூடி விட்டது பாய் என்ற சேட்டின் பதிலை கேட்டு இப்படி விலையை கூட்டினால் நாங்க என்ன விலைக்கு விக்கிறது என்று சலித்துக் கொண்டே ரெண்டு டஜன் சரக்க எடுத்துக் கொள்ளுங்கள் பஸ்ஸுக்கு காசு இல்லே என்று சொல்லி வேகமாக அட்டை பொட்டி நிரைய இருந்த சரக்கை தலையில் வைத்து நடக்க ஆரம்பித்தார்.

சரக்கு கடைக்கு பக்கத்தில் பத்து ரூபாய்க்கு தயிர்சாதம் விக்கிற கடை இருந்தது சாப்பிடனும் போல இருந்தது,.மதுரையில் 12 மணிக்கு பஸ் எறினால் எப்புடியும் 2 மணிக்குள்ளே வீடு போய் சேர்ந்து விடலாம் வீட்டில் சாப்பிட்டு கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு கடையை கடந்தார். மாட்டுதாவணி போற பஸ்ஸில் அட்டை பெட்டி சரக்கை ஏற்றினார் இதை பார்த்த கண்ட்ரக்டர் யோவ் இவ்வளவு பெரிய அட்டை பெட்டியை உள்ளே ஏத்துறே இரண்டு ஆளு எடத்த மறைக்குது இரண்டு டிக்கேட் லக்கேஜ் போடுறேன் என்ன என்றார்? மைதீன் சரிங்கே சரிங்கே என்று தலையாட்டி காசை கொடுத்தார் கொடுக்கும் போதே மனக்கணக்கில் இதே ஆட்டோவ இருந்தா நூறு ரூபா கேப்பாய்ங்கே 12 ரூபாயோட போச்சு என்று சொல்லிக் கொண்டார்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப் வருவது முன்பாகவே இறங்கி தலையில் பலூன் சரக்கு நிரம்பிய பெரிய அட்ட பெட்டியை தலையில் சுமந்துக் கொண்டு வந்தார் வரும்போதே மனதில் பயம் கவ்வியது அவிய்ங்கே கண்ணுல மட்டும் பட்டுற கூடாது எப்புடியாவது சரக்கே பஸ்ஸுக்குள் ஏத்திடனும் பஸ் ஸ்டாண்டு முன்புறமாக வந்த தானே சரக்கே பறிப்பிங்கே நான் பின்புறமாக வருகிறேன் பார் என்று மனதில் பயத்தோடு சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தர் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டே இராமநாதபுரம் பஸு கிட்ட வரும்போது யோவ் நில்லுயா குரல் கேட்டு திரும்பி பார்த்தார்.

செவப்பு சட்ட போட்ட கூலி தூக்கும் அடாவடி தொழிலாளிகள் போச்சு எல்லாம் போச்சு என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே பயந்து போய் நின்றார். அங்கிருந்து வந்தவனின் ஒருவன் உனக்கு தெரியாது பஸ் ஸ்டாண்டில் எந்த லக்கேஜாக இருந்தாலும் தூக்குறது எறக்குறது எல்லாம் நாங்க தான் நீ எப்படி தூக்கிட்டு வந்து பஸ்ஸுக்குள் ஏற்ற போகலாம்? என்று அதட்டினான் இல்லேண்ணே பணக்காரவுக லக்கேஜ தூக்க முடியாதவுக இவுங்களுக்கு தான் உங்க ஒதவி தேவைப்படும் நான் சாதாரண பலூன் வியாபாரிண்ணே விட்டுறுங்கண்ணே என்று கேஞ்சிக் கொண்டிருக்கும் போதே

டேய் வேலா அந்த லக்கேஜ பஸ்ஸுக்குள்ளே ஏத்து என்று கட்டளையிடும் தோணியில் சக கூலித் தொழிலாளியை ஏவி விட்டு நூறு ரூபா எடு என்று மைதீனை மிரட்ட ஆரம்பித்தார் அண்ணே அவ்வளவுலாம் இல்லேண்ணே பஸ்ஸுக்கு தானே காசு வச்சுருக்கேன் சொன்ன கேளுங்கண்ணே அழுதுவிடும் தோணியில் கெஞ்சுவதை பொறுட்படுத்தாமல் அந்த செவப்பு சட்டைக்காரன் டேய் வேலா அந்த லக்கேஜ பஸ்ஸ விட்டு வெளியே ஏறக்கி போடு இவன் எப்படி ஊரு போயி சேருகிறான் என்று பார்த்து விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே நாங்க யாரு தெரியுமில்லே கம்யூனிஸ்டு எங்களுக்கு சங்கம் இருக்கு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் எங்கள யாரும் மதுரையிலே ஆட்ட முடியாது எங்கள மீறி சரக்க பஸ்ஸுலே ஏத்திரு பாப்போம் சவால் விட்டான்.

அண்ணே வேண்டாம்ணே சரிங்க இந்தங்கே 50 ரூபா சத்தியமாக இது தான் எங்கிட்ட இருக்கிற காசு சாப்பிடகூட இல்லேண்ணே என்று கையை நீட்டினார் 50 ஓவா மயிரு இதுக்கு.... சரி கொண்ட என்று வாங்கி கொண்டு சரக்கே நீயே ஊள்ளே ஏத்திக்க என்று சொல்லி விட்டு நடையை கட்டினார்கள்.

Wednesday, March 14, 2012

தற்கொலையில் தீர்வை தொலைக்கும் பெண்கள்

தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

* இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்களில் ஒருவர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாதம் ஒன்றுக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்கள் அனைவருமே 15-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* கடந்த ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 10982 பேரும் கேரளாவில் 11300 பேரும் கர்நாடகாவில் 10934 பேரும் ஆந்திராவில் 9433 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

* முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் மட்டும் நாள்தோறும் 32 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நமது நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வண்ணமயமான வாழ்விலிருந்து விடுபட்டு வெள்ளைத் துணியில் அடைக்கலம் தேடும் இவர்கள், தங்களின் வாழ்வை விட்டு ஒதுங்குவதற்கான காரணங்கள் என்னென்ன? ஒரு துண்டுக் கயிற்றிலோ,ஒரு துளி விஷத்திலோ இவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும்போது அவற்றுக்கான காரணத்தை நாம் அறியாமால் போவது ஏன்? அந்த மர்ம முடிச்சுதான் என்னவோ? தற்கொலைகள் நடைபெறுகின்றபோது அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டிய காவல் துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் காட்டும் வேகம், பிறகு படிப்படியாகக் குறைந்து அந்த வழக்குகள் தூசு படிந்த கோப்புகளில் உறங்கிக் கிடப்பது ஏன்?

கடந்த 2007 ஆம் ஆண்டுக் கணக்கின்படி தற்கொலை செய்து கொள்பவர்களில் 1.8 % 14 வயதுக்கும் கீழே உள்ள சிறுமியர்கள் ஆவர்.(இது சிறுவர்களின் விகிதத்தை விட அதிகமாகும்) 15 முதல் 30 வயது வரையுள்ளவர்களின் விழுக்காடு 25.7% ஆகும்.

பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களைக் குடும்பப் பிண்ணனி, சமூக சூழல் ஃஆகியவற்றை மையப் படுத்தி விவாதிக்க வேண்டியுள்ளது.

குடும்பம்

* தாய் தந்தையரின் அவசரகோல வாழ்க்கை 

* குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் இல்லாமை

* தவறு செயுதால் தன்னைப் பாதுகாக்க குடும்பத்தில் எவருமே இல்லை என்ற எண்ணம்

* எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்ற தாய்,தந்தை இருவரில் ஒருவரை மிக எளிதாக தனது ‘கைக்குள்’ போட்டுக் கொள்வதில் கிடைக்கின்ற வெற்றி.

நாகரிகச் சூழல்

* செல்பேசி கேமரா, இணையம் ஆகியவற்றின் தவறான பயன்பாடு

* போட்டி மனப்பாங்கு

* ஆடம்பர வாழ்வின் மீதான மோகம்

* தவறான ஆண்-பெண் உறவு

*பொருளாதார நெருக்கடிகள்

உளவியல் சார்ந்தவை

* உணர்ச்சிவசப்பட்டு நடுநிலை தவறுதல்

* பருவம் அடைகின்றபோது ஏற்படுகின்ற உளவியல் பிரச்சனைகள்

* தனிமை எண்ணம்

* அன்பு,காதல் ஆகியவை குறித்த தவறான புரிந்துணர்வு

* எதையும் சாமளிக்கின்ற திறமை இன்மை

* துக்கம், கவலை

உடல் சார்ந்தவை

* மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஹார்மோன்களின் காரணமாக உண்டாகும் வேதனை

* ஆரோக்கியமின்மை

*தீரா நோய்கள்

* அழகின்மை

அரசியல்-கல்வி சார்ந்தவை

* மாஃபியா ரவுடி கும்பலின் துணையுடன் நடைபெறுகின்ற விபச்சாரம்.

* விபச்சாரக் கும்பல்களுக்கு ஆதரவளிக்கும் பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கு

* ஊடகங்கள் தருகின்ற அதிகப் படியான முக்கியத்துவம்

* துன்புறுத்தப்படுதல்

* கல்வித் திட்டங்களில் ஒழுக்கப் பாடங்களை இணைக்காதது

* ஆரோக்கியமற்ற பள்ளிக்கூட சுற்றுப்புறம்

மொபைல் கேமராவில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி, வன் புணர்ச்சி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற முறையற்ற செயலகளில் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்கள் அல்லர். இதன் பின்னணியில் பல விபச்சாரக் கும்பல்கள் உள்ளன.

மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி இந்தியாவில் 43000 கோடி ரூபாய் அளவுக்குப் பாலியல் தொழில் நடைபெறுகிறது. சுற்றுலா வளர்ச்சி எனும் பெயரில் அரங்கேற்றப்படுகின்ற செயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மஸாஜ் செண்டர்கள் என்னும் போர்வையிலும் அழகு நிலையங்களின் பின்னணியிலும் விபச்சாரக் கும்பல்கள் செயல்படுகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களைப் பாதுகாப்பது யார் தெரியுமா? அரசியல்வாதிகள்தாம். இவர்களின் செயல்களினால் சீரழிகின்ற பெண்கள் இறுதியாகத் தற்கொலை செய்து கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனை தடுக்க பள்ளி நிர்வாகம், பொற்றோர், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.விழிப்பு உணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். பெண்களின் கைப்பேசிகளுக்கு ஆபாசக் குறுந்தகவல்களையும் படங்களையும் அனுப்புகிற ஈனர்களைக் கண்டறிந்து கைது செய்யும் வசதியை செல்பேசி நிறுவனங்களே உருவாக்கித் தர வேண்டும். அத்தகையர்களின் சிம் கார்டுகளைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்களின் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒருமுறை இவர்களின் வலையில் ஒரு பெண் சிக்கிவிட்டால் அதன் பாதிப்புகளை மனம் விட்டுப் பரிமாறிக் கொள்ள குடும்பத்திலோ பள்ளிக்கூடத்திலோ அவர்களுக்கு யாரும் இல்லை. பள்ளியிலேயே இதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ஓர் ஆலோசனை மையத்தை நிறுவலாம்.

ஒழுக்கக் கல்வியை கல்வித் திட்டத்தில் இணைக்க வேண்டும். பாடத் திட்டத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மணவர்களின் செல்பேசி,கணினி, புத்தகங்கள் ஆகியவற்றைப் பெற்றோர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கின்றோம் எனும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படாதவாறு இது அமைய வேண்டும் என் தற்கொலைத் தடுப்பு மைய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தற்கொலைக்கான எண்ணம் இறுக்கமான வாழ்க்கை முறையிலிருந்துதான் தொடங்குகின்றது.குறிப்பாக சமூகத்தில் பெருகி வருகின்ற ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து எல்லாமே தொடங்குகின்றது. உலகம் அடைந்து வருகின்ற முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்காமல் விலகி இருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அன்று. கைவிட்டுப் போன நன்மைகளைப் பற்றிய, அமைதியும் நிம்மதியும் தவழுகின்ற குடும்ப அமைப்பு குறித்த விழிப்பு உணர்வே இன்று நமக்கு தேவை.

நன்றி: சமரசம்
படம் கூகுள்


Sunday, March 11, 2012

நரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்

அறுவை சிகிச்சை என்றாலே ஒரு காலத்தில் நோயாளி விழித்திருக்கும் போதே, மயக்க மருந்து இல்லாத நிலையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர் உடலை கிழித்து எலும்புகளில் இரம்பத்தைப் பாய்ச்சி அறுப்பார். இதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு பெருந் திகில் உண்டாகிறது அல்லவா?.அந்த நோயாளிக்கு எப்படி இருந்திருக்கும்?

நரகவேதனையுடம் கூடிய கடினமான மருத்துவ சிகிச்சை முறையை மாற்றியமைத்து,நோவை உணரா வண்ணம் உணர்ச்சி மயக்கமூட்டுகிற முறையை (Anaesthesia) பயன்படுத்துவதை புகுத்துவதற்கு மூலகாரணமாக விளங்கிய “வில்லியம் டி.ஜி. மோர்ட்டோன்” என்பவரை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
                                                                             William Morton
அமெரிகாவில் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் சார்ல்ட்டன் நகரில் 1819 ஆம் ஆண்டில் மோர்ட்டோன் பிறந்தார்.இளமைப் பருவத்தில் பால்டிமோர் பல்மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.1842 ஆம் ஆண்டில் இவர் பல மருத்துவத்தில் தொழில் நடத்தினார். மோர்ட்டோன் தமது மருத்துவத் தொழிலில், செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் தனித்திறமை பெற்றவராக விளங்கினார்.


செயற்கைப் பற்களைத் தக்க முறையில் பொருத்துவதற்கு முதலில் பழைய பல்லின் வேரை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.நோவு நீக்கும் மயக்க மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், பல்லின் வேர்களை பிடுங்குவது மிகுந்த வேதனையை தந்தது. இதற்கு எதேனுமொருவகை மயக்க மருந்துக் கண்டு பிடிப்பது இன்றியாமையாததாயிற்று.
                              Horace Wells மற்றும் Laughing gas(சிரிப்பூட்டும் வாயு இயந்திரம்)
மயக்கமுற செய்வதற்கு “வேல்ஸ்” என்ற இவரின் இணை மருத்துவ அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டு அன்றைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த (Laughing Gas) “சிரிப்பூட்டும் வாயு” என அழைக்கப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடு போதிய அளவுக்குப் பயனுடையதாக இராது என்பதை மோர்ட்டோன் உணர்ந்தார். அதைவிட ஆற்றல் வாய்ந்த மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார்.


அன்றைய காலப்பகுதியில் சார்லஸ் டி. ஜேக்சன் என்பவர் மருத்துவ வல்லுநராகவும், விஞ்ஞானியாகவும் விளங்கியவர். அவர் மோர்ட்டோனிடம் “ஈதரை” (Ether) மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்க்கும்படி ஆலோசனை கூறிய சார்லஸ். அவர் நோயாளிகளுக்கு ஈதரை எவ்வாறு உட்செலுத்த வேண்டும் என்பது குறித்துப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.
                                                                                 Charles Jackson


ஈதருக்கு உணர்ச்சி மயக்கமூட்டுகிற பண்பு உண்டு என்பது 300ஆண்டுகளுக்கு முன்னரே பாராசெல்சஸ் (Paracelsus) என்ற புகழ்பெற்ற சுவிஸ் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 19 ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது பற்றிய ஒரிரு அறிக்கைகள் வெளியாகியிருந்தன.
                                                                                paracelsus
ஆனால் ஈதர் பற்றி எழுதிய ஜேக்சனோ வேறு எவருமோ இந்த வேதிப் பொருளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தவில்லை. ஈதர் ஒரு வெற்றிகரமான மயக்க மருந்தாக அமையாலமென மோர்ட்டோனும் கருதினார். அதைக் கொண்டு அவர் பரிசோதனைகள் நடத்தலானார். முதலில் தமது செல்லப் பிராணி நாய் உட்பட விலங்குகளிடம் அதைப் பயன்படுத்தினார். பின்னர் தம்மிடமே சோதனை செய்து பார்த்தார். இறுதியில் 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் ஒரு நோயாளிக்கு ஈதரைப் பயன்படுத்திச் சோதனை செய்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது.
ஈபன் ஃபிராஸ்ட் என்ற நபர், கடுமையான பல வலியால் துடித்துக் கொண்டு மோர்ட்டோனிடம் வந்தார். தொல்லை கொடுத்த பல்லைப் பிடுங்கி தம் வலியை போக்கும் எந்தச் சிகிச்சைக்கும் தாம் தயாரக இருப்பதாகக் கூறினார். அவருக்கு மோர்ட்டோன் ஈதரை மயக்க மருந்தாக கொடுத்து அவருடைய பல்லைப் பிடுங்கினார். பிராஸ்ட் மயக்கம் தெளிந்து உணர்வு பெற்றபோது, பல்லைப் பிடுங்குகையில் தமக்கு வலியே தெரியவில்லை என்று கூறினார். இந்த முடிவுக்குத்தான் மோர்ட்டோன் காத்திருந்தார். வெற்றியும் புகழும் பொருளும் அவர் முன் காட்சியளித்தன.

இந்த அறுவை கிகிச்சையைப் பலர் முன்னிலையில் மோர்ட்டோன் செய்து காட்டினார். அடுத்த நாளன்றே செய்தியிதழ்களில் அந்த செய்தி வெளிவந்தது. ஆயினும் இது பரவலாகக் கவனத்தைக் கவரவில்லை. இந்த முறையை இன்னும் வியப்பு தரும் வகையில் செயல் விளக்கம் செய்து காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வலி நீக்கும்தமது முறையை ஒரு மருத்துவர் குழுவின் முன்னிலையில் நடைமுறையில் செயல் விளக்கம் செய்து காட்டுவதற்கு ஒரு வாய்ப்பளிக்கும்படி பாஸ்டனிலுள்ள மாசாசூசெட்ஸ் அரசு மருத்துவ மனையில் மூத்த அறுவைச் சிகிச்சை வல்லுநராகிய டாக்டர் “ஜான் லாரனிடம்” மோர்ட்டோன் வேண்டினார். இதற்கு டாக்டர் லாரன் இசைந்தார்.
                                                              John Collins Warren
அந்த மருத்துவமனையிலேயே செயல் விளக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாளன்று, கணிசமான எண்ணிக்கையில் குழுமிருந்த மருத்துவர்கள், மருத்துவ மணவர்கள் முன்னிலையில் ‘கில்பர்ட் அப்பாட்’ என்ற அறுவை சிகிச்சை நோயாளிக்கு மோர்ட்டோன் ஈதரை மயக்க மருந்தாக கொடுத்தார். பின்னர் அப்பாட்டின் கழுத்திலிருந்து ஒரு கழலையை டாக்டர் லாரன் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். மோர்ட்டோனின் செயல் விளக்கம் மகத்தான வெற்றியாக அமைந்தது. இதன் பின்பு, அடுத்த சில ஆண்டுகலிலேயே அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தினைப் பயன்படுத்தும் முறை மிகப் பரவலாகப் கையாளப்படலாயிற்று.
October 16th 1846 
First successful public demonstration of anaesthesia
Massachusetts General Hospital, Boston
 Anaesthetist: William Thomas Green Morton
Agent: Diethyl Ether
Patient: Gilbert Abbott
Operation: Excision of tumour under jaw
Surgeon: John Collins Warren
Comment: “Gentlemen, this is no humbug”

அன்றைய காலப்பாகுதியில் மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடு (Laughing gas. சிரிப்பூட்டும் வாயு) அறுவை சிகிச்சையில் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தி விடவில்லை. ஏற்படுத்தியிருக்கவும் முடியாது. நைட்ரஸ் ஆக்சைடில் சில விரும்பதக்க குணயியல்புகள் இருந்தாலும் பெரிய அறுவை சிகிச்சையில் மயக்க மருந்தாகத் தனியாகப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அது ஆற்றல் வாய்ந்தாக இருக்கவில்லை. (இன்று அது வேறு சில நேர்த்தியான மருத்துகளோடு இணைவாகவும், சில பல்மருத்துவப் பணிகளிலும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).
மாறாக, ஈதர் அற்புதச் செய்வினைவுடைய ஓர் ஆற்றல் வாய்ந்த வேதிப் பொருளாகும். அதைப் பயன்படுத்தியதால், அறுவை சிகிச்சையில் புரட்சிகரமான திருப்பம் உண்டாயிற்று. இன்று பெரும்பாலான நேர்வுகளில் ஈதரை விட அதிஅக் ஏற்புடைய மருந்து அல்லது கூட்டு மருந்துகள் இருக்கின்றன. ஆயினும் ஈதர் பயன்பாட்டுக்கு வந்த பின்பு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்திற்கு ஈதர் தான் பெரும்பாலும் மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 

ஈதர் எளிதில் தீப்பற்றக் கூடியது. இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவாகக் குமட்டல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இந்த பாதகங்கள் இருந்த போதிலும், இறுகாரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மயக்க மருந்துகளில் இது ஒன்று தான் மிகவும் ஆற்றல் வாய்ந்த தனியொரு மயக்க மருந்து என்பதை மறுப்பதற்கில்லை. இதை எடுத்துச் செல்வதும் உட்செலுத்துவதும் மிக எளிது. அனைத்திற்கும் மேலாக, இது மிகவும் பாதுகாப்பானதாகவும் அதே சமயம் ஆற்றல் வாய்ந்தாகவும் அமைந்துள்ளது.

1846 ஆன் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் காலையில் மயக்க மருந்தின் செயல் விளக்கம் செய்து காட்டியது மனித வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பின்குறிப்பு:
இந்த கண்டுபிடுப்புத் தம்மை செல்வந்தராக்கும் என்ற மோர்ட்டோனின் நம்பிக்கை நிரைவேறவில்லை. ஈதரை மயக்க மருந்தாகப் பயனபடுத்திய பெரும்பாலான மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மோர்ட்டோனுக்கு உரிமைத் தொகை (Royalty) கொடுப்பது குறித்து கவலைப்படவேயில்லை. இதற்கென அவர் தொடுத்த வழக்குகளுக்காகவும், முந்துரிமைக்கான போராட்டத்திற்காகவும் அவர் செய்த செலவுகள் அவரது கண்டுபிடிப்புக்காக அவருக்கு கிடைத்த பணத் தொகையை விட அதிகமாக இருந்தன. மனச்சோர்விலும் வறுமையிலும் வாடிய மோர்ட்டோன் 1888 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 49 வயதுகூட ஆகியிருக்கவில்லை.

References:
HISTORY OF ANAESTHESIA - lecture handout, ODP course Bristol 18/01/02
http://en.wikipedia.org/wiki/John_Collins_Warren,_Jr.
http://fx.damasgate.com/laughing-gas-ether-and-surgical-anesthesia/
http://www.general-anaesthesia.com/images/william-morton.html

Monday, March 5, 2012

சொராஸ்டர்(பார்சீ) மதம் ஓர் பார்வை.

                                                          சொராஸ்டிரிய மதச்சின்னம்

உலகம் தோன்றிய காலத்திலிருந்து எத்தனையோ மதங்கள் பிறந்து வளர்ந்து மறைந்து இருக்கின்றன. அவைகளில் சில கருவிலேயே சிதைந்தும் இருக்கின்றன. சில மதங்கள் பிறந்து எழுந்து நடந்து ஓடி வல்லரசாக நிமிர்ந்து நின்று, பிறகு மறுபடியும் வீழ்ச்சியை நோக்கி வீழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகின்ற சொராஸ்டிரா மதமும் ஒன்று.

சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி. பண்டைய ஈரானிய மொழியில் சொராஸ்டர் (Zoroaster) என்ற இயர்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு .எனினும் இன்றைய வடக்கு ஈரானில் கி.மு.628ஆம் ஆண்டில்(கி.மு.628-கி.மு.551) இவர் பிறந்தாகத் தெரிகிறது .இவருடைய இளமைக் கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவர் தாம் உருவாக்கிய புதிய மதத்தை போதிக்க தொடங்கினார்.

                                                                   சொராஸ்டர் (Zoroaster)

அத்வைதமும் (Monotheism) துவைதமும் (Dualism) இணைந்த ஒரு கவர்ச்சிகரமான கலவையாகச் சொராஸ்டிரா இறைமையியல் அமைந்துள்ளது. இவர்களின் போதனைப்படி, ஒருவனே தேவன். அவனை அவர் ‘அஹுரா மாஜ்டா’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘ஒர்மஜ்டு’)  என்று அழைக்கின்றனார். ‘மெய்யறிவுப் பெருமான்’ (The wise Lord) என்று இதற்கு பொருள். அவன் நேர்மையினையும், வாய்மையினையும் ஊக்குவிக்கிறான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் ‘அங்ரா மைன்யூ’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘அஹ்ரிமான்) என அழைக்கின்றார்கள்.இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.

  உண்ம உலகில் நன்மையை ஆதரிப்பதா,தீமையை ஆதரிப்பதா என்பதை ஒவ்வொரு தனிநபரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையுடையவர். இவ்விருதரப்புகளுக்கிடையிலான போராட்டம் தற்போதைக்கு மிக நெருங்கிய போராட்டமாக இருந்த போதிலும், நீண்ட காலக் போக்கில் நன்மையே வெல்லும் என்று சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். மறுமை வாழ்விலும் அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.


அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார்.
                   விஷ்டாஸ்பா மன்னரிடம் ஆதரவு பெறுவது போன்ற ஒவியம்.

அதன் பின்பு  இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது.
                                                                         மகா சைரஸ்
அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது.
                                          சொராஸ்டிரா பார்சீகளின் புனித தீப்பிழம்பு 
                                              தீப்பிழம்பை வணக்குகிறார்கள்
சொராஸ்டிரார்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன.
         கோபுர உச்சியில் பிணங்கள் கழுகுகளால் தின்னப்பட்டு கிடக்கும் காட்சி

ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள்.எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
                                           மும்பையில் சொராஸ்டரா பார்சீகள்                             

இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.
                                                      தீப்பிழம்பை வணங்கும் முறை 
இவர்களில் பெரும்பாலும் மும்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர்.ஈரானிலும் சொராஸ்டிர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை.எனினும்,அங்கு இன்று சுமார் 40,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.

Saturday, March 3, 2012

கடன் பயங்கரவாதம்: தீர்வு என்ன?-3

இந்த பதிவின் முதல் பகுதியை பார்வையிடஇங்கே அழுத்துங்கள்  மற்றும் இரண்டாம் பகுதியை பார்வையிட இங்கே அழுத்துங்கள் இன்று மனித குலம் சந்தித்து நிற்கும் மிகப் பெரும் கொடுமைகள் கடன் பயங்கரவாதம் என்பதை சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்.


இதனை முறியடிப்பது எப்படி? என்னதான் தீர்வு? சில அதிகார வெறிபிடித்த அரசியல்வாதிகள் மற்றும் வங்கியாளர்களின் போராசையை வெற்றிக் கொள்வது எப்படி? இவர்களுக்கு எதிராக பாமர மக்களை அணி திரட்டுவதற்கும் மக்கள் எழுச்சியைத் தூண்டி விடுவதற்கும் என்ன செய்ய வேண்டும்? ‘கடன் பயங்கரவாதம்’ மீது எப்படி போர் தொடுக்கப் போகிறோம்?


சர்வதேசப் பொருளாதாரத்தை ஜனநாயகமயமாக்குவதற்கும், உலகை வாழ்வதற்கு ஏற்ற இடமாக ஆக்கவும் இங்கு பதினொன்று குறிப்புகள் தரப்படுகின்றன. இவையாவும் மிகச் சுலபமான, உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய வழிமுறைகள் எனச் சொல்ல மாட்டேன். இவற்றை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் உறுதியும் தொடர் முயற்சியும் அர்ப்பணிக்கும் பண்பும் காட்டப்பட்டால் வெற்றி நிச்சயமே.


பதினொன்று அம்சத் திட்டங்கள் விவரம் வருமாறு:

1.முதலாவதாக உலக வர்த்தக அமைப்பை (WTO)க் கலைத்து விட்டு அதன்
 இடத்தில் முழுக்க முழுக்க ஜனநாயகமான,வெளிப்படையாகச் செயல்படக் கூடிய, ஓர் அமைப்பு நிறுவப்பட வேண்டும். இந்த அமைப்பு (WTO)வைப் போல் பன்னாட்டு வணிக அமைப்புகளுக்குப் பதிலளிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது.அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த உலகின் குடிமக்கள் அனைவருக்கும் பதிலளிக்கக் கூடிய வகையில் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தொழிலாளர்கள், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதை உறுதிசெய்யும் வகையில் வணிகக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
2. பன்னாட்டு நிறுவனங்கள் சமூகப் பொறுப்பு உணர்வுடன் செயல்படுவது சட்டரீதியாக உறுதி செய்யப்பட வேண்டும். அவை சமூகத்துக்குப் பயனளித்தால் இயங்க அனுமதிக்கப்படும். இல்லையேல் அவை கலைக்கப்பட்டு விடும். பொதுமக்களின் தேவைகளை மதித்து இந்த விடயத்தில் பதிலளிக்கும் பொறுப்பு உணர்வுமிக்கவையாக பன்னாட்டு நிறுவனங்கள் இருந்தாக வேண்டும்.

பொதுமக்களின் ஆய்வுக்குட்படும் வகையிலும் யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கின்ற வகையிலும் அவற்றின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருத்தல் வேண்டும்.வாழ்வாதாரத்தை வழங்குபவையாகவும், எல்லவிதமான சுற்றுச் சூழல் மற்றும் தொழிலாளர் சட்டங்களுக்குட்பட்டவையாகவும்,அவை செயலபட வேண்டும். பங்குதாரர்கள் விழிப்புடன் செயல்படக் கூடியவர்களாக இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் நடத்தையைச் சீர்படுத்த உதவும்.
3. சர்வதேச நிதிக்கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். நாணயத்தின் மதிப்பில் நிகழ்கின்ற ஏற்ற இறக்கங்களைக் கணித்து வணிகம் செய்வது கொழுத்துப் போன முதலீட்டாளர்களுக்கு வேண்டுமானால் குறுகிய கால லாபங்களைத் தரலாம். ஆனால் நீண்டகால வளர்ச்சிக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. நாணயப் பரிமாற்றங்கள் மீது 1 சதவீத வரி விதித்தாலே போதும். நாணய மதிப்பு மீதான சூதாட்டமும் வணிகமும் நின்று விடும். உண்மையான நிதி முதலீடும் பாதிக்கப் படாது. உலகெங்கும் பள்ளிக் கூடங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களைக் கட்டி அமைப்பதற்கு உதவியாக பெரும் நிதி உருவாகும்.

4. மூன்றாம் உலகின் எல்லாக் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கான ஜுபிலி நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தர வேண்டும். கட்டவமைப்பு திருத்தப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக வேண்டும். ஒரு நாட்டு மக்களின் நல வாழ்வுக்குத் துணை போகும் பொருளாதார முடிவுகளை எடுக்கிற உரிமையையும் அதிகாரமும் அந்நாட்டு அரசுக்கு மட்டுமே உண்டு. இந்த விடயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் தலையீடுக்கு இடம் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

5. வணிக ஒப்பந்தங்களில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் இருக்கின்ற பொருளாதார மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கு இணக்கமானவையாகவும் மனித உரிமைகள் தொடர்பான உயர் சட்டங்களுக்குட்பட்ட வகையிலும் வணிக விதிகள் இருக்க வேண்டும். நியாயமான வணிகம், கடன் நீக்கம், மைக்ரோ கடன், வளர்ச்சிக் கொள்கைகள் உள்ளூர் மக்கள் கையில் இருப்பது போன்ற விடயங்களைக் கொண்ட மாற்று வணிக ஒப்பந்தங்களை ஊக்குவிக்க வேண்டும்.

6.வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது நுகர்வியம் அல்ல. தங்கு தடையற்ற முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலமே வளர்ச்சி சாத்தியமாகும். ஏற்றுமதி சார்ந்ததாக சர்வதேச வளர்ச்சி இருக்கலாகாது. உணவு உத்தரவாதம், நீடித்த சீரான வளர்ச்சி,ஜனநாயக பங்கேற்பு ஆகியவையே சர்வதேச வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.
7.ஐ.டி.பி. (இஸ்லாமிய வளர்ச்சி வங்கி) உறுப்பினர் நாடுகளில் பொருளாதாரக் கட்டமைப்புக்கு அடிப்படை இஸ்லாமிய வழிமுறையாக இருக்க வேண்டும். சத்துணவு,கல்வி,ஒழுக்க,தார்மிக வளர்ச்சி போன்றவற்றில் பெண்களுக்கு இருக்கின்ற முக்கிய பங்கை கருத்தில் கொண்டே கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.(இஸ்லாமிய வங்கியைப் பற்றி விரிவாக பிறகு பார்போம்)

8. உள்ளூர் அளவிலும் சர்வதேச அளவிலும் வலுவான, சுதந்திரமான தொழிலாளர் யூனியன்கள் கட்டமைக்கப்பட்டு, யூனியன் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பற்பல நாடுகளில் தங்களின் பணியை விரிவுப்படுத்திக் கொண்டே போகிற சூழலில் யூனியன்கள் எல்லைகளைத் தாண்டி பாலங்கள் அமைத்து சர்வதேச அளவில்  வலுப்பெறுவதற்கு யூனியன்கள் முனைப்புக் காட்டி வருகின்றன. யூனியன்களின் அந்த முயற்சிகளுக்கு சமூக ஆர்வலர்கள் ஆதரவளித்து எந்தவொரு சுதந்திர சந்தை ஒப்பந்தத்திலும் முக்கியமான பகுதியாக ‘தொழிலாளர் சுதந்திரம்’ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

9.முதலீடு மீதான சமூகக் கட்டுப்பாட்டை வளர்த்து, சமூகப் பொறுப்பு உணர்வுள்ள முதலீடுகளுக்கு ஆதரவளித்து, உள்ளூர் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வகையில் முதலீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் திறன் கொண்டவைகளாக சமூகங்கள் இருக்க வேண்டும்.

10. சுதந்திர வணிகத்துக்குப் பதிலாக நியாயமான வணிகத்தை ஊக்குவிக்க வேண்டும். அடிமட்ட வணிகம் தழைக்க உதவும் வகையில் ஆதரவு, பயிற்சிக்கான பின்னல்கள் ஏற்படுத்தப்படுவதும் அவசியமாகும். செல்வம் பரவலாகப் பங்கிடப்படுவதற்கும், சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வணிகம் நிலை பெறுவதற்கும் இது உதவும். பண்டங்களுக்கு நியாய வணிக சான்றளிக்கப்பட்டது, ஆர்கானிக், சுற்றுச் சூழல் ஊறு விளைவிக்காதது என முத்திரைச் சான்று அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

11. இருபதாம் நூற்றாண்டில் பலவேறு அரசாங்கங்கள் 17 கோடி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தன. போர்க்களங்களில் மாண்ட வீரர்களின் உயிரிழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை. எல்லா நாடுகளையும் ஆயுதமில்லா நாடாக ஆக்கிவிட்டு, எல்லா இராணுவ நடவடிக்கைகளையும் ஒழித்து விட்டால், இவ்வாறாக முதல் மாதத்தில் சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் உணவு, உடை, உறைவிடம் கொடுத்து கல்விப் பயிற்சியும் புகட்டி விட முடியும்.
இறுதியாக ஒன்று

நாம் எத்தகைய வெட்கங் கெட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், தெரியுமா? கூலியாக உணவு தரப்படுகிற உலகில், தண்டனையாக உணவு மறுக்கப்படுகிற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏழை அமெரிக்கர்கள்,ஏழை ஈராக்கியர்கள்,ஏழை இந்தியர்கள், ஏழை ஆப்ரிக்கர்கள்,ஏழை பாலஸ்தீனர்கள், ஏழை இந்துக்கள், ஏழை கிறிஸ்துவர்கள் மற்றும் ஏழை முஸ்லிம்கள் எல்லாருமே பல விடயங்களில் ஒரே மாதிரியானவர்களாக,பொதுவான பிரச்சனைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோருமே பிரமிடின் அடிப்பாகமாக இருக்கிறார்கள். அந்த பிரமிடை தலைகீழாகத் திருப்பியமைப்பதில் நாம் உதவ வேண்டும்.

மூன்றாம் உலகக் கடன் ஏற்படுத்திய நெருக்கடியால் தான் நம்மால் ஐ.எம்.எப்., உலக வங்கி, யூ.எஸ்.டிரெஷ்ஷரி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகியவை எந்த அளவுக்கு உலகை கவ்விப் பிடித்து வைத்துள்ளன என்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

நம்மில் எல்லாருமே மற்றவர்களுடன் அமைதியாக வாழவும், சுதந்திரத்தை அனுபவிக்கவும்,அன்பு,கண்ணியம், மரியாதை ஆகியவற்றை உணரவுமே விரும்புகிறோம். சமூகங்களாக வாழ்ந்து, சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காமல் பணியாற்றவும், இனச்செருக்கின் அடிப்படையிலான துவேஷத்தை ஒதுக்கித் தள்ளவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறாக சொத்துரிமைக்குப் பதிலாக பகிர்தல் நிலை பெற்று விடக் கூடிய சர்வதேச சமூகம் மலர்ந்து விடும்.

References:டாக்டர் மன்சூர் துர்ரானி
பேராசிரியர். மலிக் முஹம்மத் ஹுஸைன்
நூல்: உலக மயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
படங்கள்: கூகுள்