Monday, August 8, 2016

குதிங்கால் வலியும், அது குணமான விதமும்.

 
பெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகின்றனர்.

ஐம்பது வயதை தொட்ட பெண்களில் அநேகம் பேருக்கு குதிங்கால் வலி என்ற உபாதையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.நானும் கடந்த ஒரு வருடமாக அந்த அவஸ்தையை அனுபவித்து அதை கடந்தும் வந்த விதத்தை கூற விரும்புகிறேன்.

அடுத்தடுத்து மகளுக்கு திருமணம், பேறுகாலம், மகனுக்கு திருமணம் என போதிய ஓய்வின்மையும்,அதிக அலைச்சலும் கூடிய காலகட்டத்தில் என் குதிங்கால்களின் மத்தியில் விண்ணென்ற வலி தோன்ற ஆரம்பித்தது. அலைச்சல் முடிந்து, போதிய ஓய்வு எடுத்த பின்பும் வலி குறையவே இல்லை. ஆஸ்பத்திரிக்கு செல்லவோ பயம். சுற்றிலும் விசாரித்ததில் கால்வலி இல்லாத மாதவிடாய் நின்ற பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாமென தோன்றியது.

ஆளாளுக்கு விளக்கங்களும், வைத்தியங்களும் சொன்னார்கள். உடல் எடை கூடுவது ஒரு காரணமாக கருதப்பட்டது. நம்மில் பலருக்கு நாற்பது வயதுக்கு மேல் உடல் எடை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று என்று உணர்வது நிஜந்தானே ? உடம்பில் ஈஸ்ட்டிரோஜன் குறைந்ததால், இயற்கையாக ஏற்படும் வயோதிக மாற்றத்தால் குதிங்காலில் வலி என்றார்கள். முற்காலத்தில் போல கொல்லம் செங்கல் பதித்த தரைக்குப் பதிலாக வீடுகளில் மொசைக், மார்பிள்,சிமெண்ட் டைல்ஸ் பதித்திருப்பதுதான் காரணம் என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டது.

கால்களை வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்தாயிற்று. அளவு கொடுத்து விசேஷமாக செய்து வாங்கிய மைக்ரோஸில் செருப்பை வீட்டிற்குள் அணிந்து கொண்டு நடக்கலானேன். வெளியே செல்லும் போது அணிவதற்கு அக்குபங்சர் செருப்பு. மருந்து கடைகளில் பிரத்யேகமாக விற்கும் ஸ்டாக்கிங்ஸ் போன்ற 'ஆங்க்லெட்ஸ் ' அணிந்து பார்தேன். விதம் விதமாய் தைலங்கள் - யூகலிப்டஸ், வேதகோடாரி, ஃபிராஞ்ச் ஆயில் - எல்லாம் தடவிப் பார்த்தும் பலனேயில்லை. எருக்கம் இலையை சூடான செங்கல்லில் வைத்து எடுத்து கொடுக்கும் ஒத்தடமும் சிபாரிசு செய்யப்பட்டது.

எலும்பு வளர்ந்திருக்கலாம், ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சிலர் குண்டைத் தூக்கிப் போட்டார்கள். இது எலும்பு தேய்மானந்தான், இதற்கு மருந்தேயில்லை என்று அடித்துச் சொன்னவர்களும் உண்டு. பயந்து பயந்து எப்போதாவது பொறுக்கமுடியாமல் வலி மாத்திரைகள் சாப்பிடுபவளிடம் ஸ்டாராய்ட் ஊசிதான் போட்டாக வேண்டும் என்று சிலர் பீதியை கிளப்பினார்கள்.

என் கால்வலி கலாட்டாவால் ரொம்ப நொந்து போன என் குடும்பத்தினர் உருப்படியான வைத்தியம் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தியபின் ஒரு எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை அணுகினேன். என்னென்ன டெஸ்டுகளோ, எவ்வளவு செலவோ என்றெல்லாம் கலக்கத்துடன் சென்ற என்னிடம் மிகவும் ஆறுதலாக பத்து வருடத்திற்கு இந்த குதிங்கால் வலியை தள்ளிப் போடுவது மிகவும் சுலபம் என்றார். அப்போதைய வலிக்கு ஐந்து நாளைக்கு மாத்திரைகள் தந்துவிட்டு வலி குறைந்ததும் எளிமையான பிஸியோதெரபி எக்ஸர்சைஸ்களை செய்து வரும்படி கூறி அனுப்பி விட்டார்.

கொஞ்ச காலத்திற்கு அதிக பளுவை தூக்கக் கூடாது, அடிக்கடி மாடிப்படி ஏறக்கூடாது, காலை அதிக நேரம் தொங்க விட்டபடி அமர்ந்து நீண்ட தூரம் ரயிலிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். பொதுவான யோசனையாக உடல் எடை கூடாமலிருக்க உணவில் கிழங்குகளை குறைக்கச் சொன்னார்.பயங்கரமான சிகிச்சைகளை, செலவை எண்ணி பயந்த எனக்கு இவ்வளவு ஈஸியாக டாக்டர் சொல்லிவிட்டது பெரிய நிம்மதியாக இருந்தாலும் உண்மையிலேயே அவர் சொன்ன எளிய எக்ஸர்சைஸால் குதிங்கால் வலி போய் விடுமா என்ற அவநம்பிக்கை நிறையவே இருந்தது.

ஆனாலும் மிகுந்த கீழ்படிதலுடன் செய்ய ஆரம்பித்தேன். முதலில் சில நாட்களுக்கு பெரிதாக முன்னேற்றம் தெரியாமல் கவலையாகக்கூட இருந்தது. இருந்தாலும் நம்பிக்கை, விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்த பயிற்சியால் சில வாரங்கள் கழித்து முதலில் ஒரு காலில் வலி முற்றிலும் போய் விட்டது. அடுத்து மற்றொரு காலிலும் வலி கிட்டதட்ட போய் விட்டது. எனக்கே இது நம்ப முடியாத ஆச்சரியமாய் இருக்கிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைகளை நன்றாக இயங்கச் செய்யும், வலியை விரட்டிய எளிய எக்ஸர்சைஸ் இதுதான்: கால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமரவும். பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உள் பக்கமாய் மடக்கி விரிக்கவும். அடுத்து முன் பாதங்களை தாளம் போடுவது போல இருபது முறை உயர்த்தி இறக்கவும். அடுத்து முன் பாதத்தை ஊன்றியபடி குதிங்கால்களை இருபது முறை தரையை விட்டு மேலே உயர்த்தி இறக்கவும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை இரு வேளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது போகவும் இடையே எத்தனை தடவை சாத்தியப்படுகிறதோ அத்தனை தடவை செய்யலாம்.

இவ்வளவு எளிய வைத்தியம், பலனளிக்கும் வைத்தியம் இருப்பதை குதிங்கால் வலியால் அவதிப்படும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், அதை செய்து பயனடைய வேண்டும் என்பதே என் அவா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல யாம் துன்பம் நீங்கிய வழி அறிக இவ்வையகம் என்ற எண்ணந்தான் இந்த கட்டுரைக்கு தூண்டுகோள்.


(நன்றி சகோதரி பவளமணிபிரகாசம் அவர்களே )

Monday, May 30, 2016

நண்டு சாப்பிடுகிறவரா? நீங்கள்? அப்ப இதை படியுங்கள்.

சாப்பிட கூட வந்த நண்பர் இன்ஸான் 
நான் ஒரு நண்டுப் பிரியன் ஊருக்குப் போனால் ஒரே நண்டா சாப்பிடுவேன். விமான நிலையத்தில் என் மனைவி அப்படி இவரு கிளம்பிட்டாரு நண்டு இனம் அழியாமல் தப்பித்தது என்று சிரிக்க வைத்து கிண்டல் பண்ணும் அளவுக்கு சாப்பிடக் கூடியவன் அதே பழக்கம் சவூதி வந்தும் தொடர்கிறது. வாரத்திற்க்கு ஒருமுறை நண்டு சாப்பிட தவறுவது இல்லை.

சரி சொந்தக் கதையை விட்டுபுட்டு விஷயத்திற்க்கு வருகிறேன் நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இணையத்தில் படித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது நீங்களும் படித்துப் பாருங்களேன்.

இரத்த சோகையை தடுக்குமாம்.
நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

முடக்கு வாதம் முடித்து வைக்கும் நண்டு.
செலினியம் என்பது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பது தெரியுமா? செலினியம் மற்ற ஆன்-ஆக்ஸிடண்ட்டுகளோடு சேர்ந்து, விஷத்தன்மையுள்ள அழுத்தத்தைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் செலினியம் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம்.

குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

வலிமையான எலும்புகளை ஏற்படுத்துமாம்.
காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

முகப்பருக்களை போக்கும்.
பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால் கொழுப்பை குறைக்க வல்லது.
கொலஸ்ட்ரால் நண்டில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் அதில் நியாசினும் அதிகமாக உள்ளுது. இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.

இதய நோய்களை தடுக்கும்.
நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும்.

கர்ப்பக் காலத்தில் நண்டு சாப்பிடக் கூடாது ஆனால்.
கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது.

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் ஜிங்க் உணவு நண்டு
கடல் நண்டு அனைத்திலுமே ஜிங்க் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் அதிலும் ஒன்றான நண்டை நன்கு ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், டெஸ்ட்ரோஜென் அளவை சீராக்கும் என்கிறது ஆய்வு.

எங்கே கிளம்பிட்டிங்க? நண்டு சாப்பிடவா? வாரத்திற்க்கு ஒருமுறை மாற்றிதான் சாப்பிட்டு பாருங்களேன். 

Saturday, May 14, 2016

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...!

அவர் ஒரு சிறந்த யோகா ஆசிரியர் யோகாசன கலைகளை நன்கு அறிந்தவர்.

ஒரு மாணவன் அவரிடம் யோக கலைகளை கற்றுக் கொண்டிருந்தான். ஆசிரியர் மாணவர் என்கிற உறவை தாண்டி மனது விட்டு பேசும் நல்ல நண்பர்களாவும் இருந்தார்கள்.

பேச்சுவாக்கில் ஒருநாள் அந்த மாணவன் சொன்னான்:

ஆசிரியரே! எனக்கு சாரசரி வாழ்வு பிடிக்கவில்லை இந்த உலகை துறந்து எங்காவது மலையடிவாரங்களில் பக்கம் இயற்கையோடு இயற்கையாக தனியாக, துறவியாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் அதற்கு விடமாட்டார்கள் என்றுதான் பயப்படுகிறேன் என்றான் மிகுந்த மனவருத்தத்துடன்.

“ஏன்?” உன்னை விட மாட்டார்கள் என்றார் ஆசிரியர்

“அவர்களுக்கு என் மீது அளவில்லாப் பாசம் கொள்ளை அன்பு. என்னைப் பிரிந்து அவர்களால் இருக்கவே முடியாது” என்றான் அவன் சற்றே கர்வத்துடன்.

“ அதை சோதித்து பார்க்கலாமா என்றார் ஆசிரியர் அமைதியாக.

மாணவன் அதற்குச் சம்மதித்தான். ஆசிரியர் அவனுக்குச் செத்தது போலவே கிடக்கும் ஒரு உயர்தர யோகாசன வித்தையைக் கற்றுக் கொடுத்து வீட்டிற்க்குப் போய் அதனை செய்யுமாறு சொன்னார்.

மறுநாள் காலை அவன் தன் வீட்டில் செத்தது போலவே கிடந்தான். செய்தியறிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் அங்கே கூடிவிட்டனர். வீட்டின் அழுகுரல் தெரு முழுவதும் கேட்டது.

ஆசிரியர் அந்த வீட்டை அடைந்தார் அவர்களை பார்த்துச் சொன்னார்:

“ இவருக்குப் பதிலாக உங்களில் யாராவது ஒருவர் உயிரைத் தர முன்வந்தால் போதும், இப்போது இவரை உயிர்ப்பிக்க எனது யோகா சக்தியால் முடியும்.”

அதைக் கேட்டு ஒவ்வொருவராகப் பின்வாங்கினார்கள். தாங்கள் வாழ வேண்டியதன் அவசியம் மற்றும் கடமைகள் பற்றி ஒவ்வொருவரும் பலவிதக் காரணங்களைக் கூறி அவருக்கு விளக்கினார்கள்.

கடைசியில் அவரின் மனைவி உரத்த குரலில் சொன்னாள்:

” அவருக்கு பதில் யாரும் சாக வேண்டாம். அவர் இல்லாமலேயே நாங்கள் காலத்தைக் கழிப்போம்.”

யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும் காலம் நின்றுவிடுவதில்லை என்கிறது இந்த ஜென் தத்துவ சிறுகதை.

Friday, May 6, 2016

வாட்ஸ் அப் வாழ்க்கை.


முன் கடந்து போவோரின்

முகம் காண முடியவில்லை.

பின் நின்று சிரிப்போரின்

எண்ணம் எனக்கு புரியவில்லை.

தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.

தொடுதிரையை தொட்டபடி

உள்ளங்கையில் தான் உலகம்.

என் கைபேசி காதலியானாள்- நான்

கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...

உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,

நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.

சாமக் கோழி கூவிய பின்னும்,

கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,

வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.

எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.

Hi என எவரோ அனுப்ப

Hai என பதிலுரைத்தேன் - ஏனோ

நான் பெற்ற பிள்ளை

'அப்பா'என்றழைக்க,

சற்றே புருவம் உயர்த்தி

பார்வையாலே சுட்டெரித்தேன்...

அடுத்தவரின்,

Status பார்த்து ரசித்தேன்,

profile பார்த்து வியந்தேன்,

Picture Msg பார்த்து லயித்தேன்,

video பதிவிறக்க ஆர்வத்தில்.

கை அலம்பியபின் யோசித்தேன்.

நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...

மாமன் வீட்டு மீன் குழம்பு,

மாமி பொறித்த அப்பளம்,

தங்கை வீட்டு தக்காளிச்சோறு,

மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,

அமிர்தம் தந்த மனையாளிடம்.

இது நஞ்சை விட கேவலமென்று...

நானாய் சிரித்தேன்,

நானாய் அழுதேன்,

நானாய் வியந்தேன்,

நானாய் ரசித்தேன்-ஏனோ

நான்,

நானாய் மட்டும் இல்லை...

ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.

என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட

Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...

கீமோஜியில் கூட

சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,

ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.

ஆனால்...

நான் நிமிர்ந்து பார்க்கும் போது

என் முன்னே எவருமில்லை.,

சுற்றமும், நட்பும்

உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...

இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்

சொந்தமே.,

இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.

நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய்.,,,   தவம் கிடக்கிறது...!

(வாட்ஸ் அப் புலம்பல் )

Friday, March 18, 2016

பயங்கரவாதத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை

இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமான டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி எழுதிய ‘பயங்கரவாதம் மற்றும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு ஃப்த்வா’ என்ற நூல் 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. நூல் வெளியீட்டிற்காக டெல்லி வந்திருந்த டாக்டர் தாஹிரை Frontline ஆங்கில இதழுக்காக நேர்காணல் கண்டவர் அஜோய் ஆசிர்வாத் மகாபிரஷஸ்தா.

‘ஷெய்குல் இஸ்லாம்’ எனப் பிரபலமாக அறியப்படும் டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி, புகழ்பெற்ற இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமாவார். 1951இல் பாகிஸ்தானின் ஜாங் நகரில் பிறந்தார். மதினாவிலுள்ள பாரம்பரியமிக்க ‘மதரசா-அல்-வுலும்-அல்-ஷரிய்யா’வில் மார்க்கக் கல்வியை 12 வயதில் தொடங்கினார். அரபு செவ்வியல் மற்றும் அறிவியல் மரபுவழிக் கல்வியைத் தன் தந்தையிடமிருந்தும் மார்க்க அறிஞர்களிடமிருந்தும் பெற்றார்.

 பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் (லாகூர், பாகிஸ்தான்) ஆனர்ஸ் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறிய டாக்டர் தாஹிர் இஸ்லாமியக் கல்வியியலில் தனிச்சிறப்புடன் முதுகலைப் பட்டமும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் இஸ்லாமியச் சட்டவியல் விரிவுரையாளராகவும் இஸ்லாமியச் சட்டமியற்றல் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். 
இஸ்லாம், இறையியல், சூஃபியிசம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் டாக்டர் தாஹிரின் நூல்கள் நானூற்றுக்கும் அதிகமாக வெளிவந்துள்ளன. ஆய்வாளர்; சிறந்த சொற்பொழிவாளர். உருது, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் உலகு முழுவதும் தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார். மின்ஹஜ்ஜுல் குர்ஆன் என்ற சர்வதேச அமைப்பின் நிறுவனர். தீவிரவாதமற்ற இஸ்லாத்தைப் போதிக்கும் இந்த அமைப்பு உலகில் 55 நாடுகளில் இயங்கிவருகிறது.

சமீபகாலமாகப் பல முஸ்லிம் அறிஞர்கள் ஜிகாத் (அறப்போர்) என்பதன் பொருளை அரசியல்ரீதியாக விளக்க முயன்றுள்ளனர். ஆனால் நீங்களோ பயங்கரவாதத்திற்கும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கும் இஸ்லாமியத் தத்துவத்தில் இடமில்லை என ‘ஜிகாத்’திற்குப் பகுத்தறிவுக் காரணகாரியங்களுடன் மதரீதியாக விளக்கம் தர முயன்றுள்ளீர்கள்.

உள்நோக்கங்கொண்ட தங்களின் குறிக்கோளை அடைவதற்காக மதத்திற்குள்ளிருந்தே சிலர் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இஸ்லாம், குர்ஆன், சுன்னா (நபி வழி) இவற்றுக்கும் பயங்கரவாதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். இதற்காக குர்ஆன் விளக்க உரைகள், இஸ்லாமியச் சட்டவியலாளர் கருத்துகள், இஸ்லாமியச் சமுதாயம் ஆகியவற்றை நுணுகி ஆராய வேண்டியதிருந்தது. அமைதிக்கும் சமாதானத்திற்குமே இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது. தீவிரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் விளக்கங்கள் உண்மையான இஸ்லாமியப் போதனைகளிலிருந்து விலகியவையாகும்.

உதாரணமாக ஜிகாத், உயிர்த்தியாகம் அல்லது சண்டையிடல் என்னும் கருத்தாக்கம் ‘சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வது’ என்பதாக எந்த இஸ்லாமிய நூல்களிலும் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இந்தச் சொற்களில் எதுவும் பெண்கள், குழந்தைகள், முதியோர், மதபோதகர், நோய்நொடியுற்றோர் ஆகியோரைக் கொல்வது என்பதாகவும் பொருள்படாது. இவர்களைக் கொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை. கோயில்கள், சர்ச்சுகள், யூதவழிபாட்டு ஆலயங்கள், பிற வணக்கத்தலங்கள் ஆகியவற்றை இடித்துத் தகர்ப்பது என்பன இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளன. ‘நியாயமான போர்’ அல்லது ‘தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே போரிடல்’ ஆகிய சந்தர்ப்பங்களில்தாம் இச்சொற்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. 

போர்க்களத்தில் இரு படைகள் மோதிக்கொள்ளும்போது மட்டுமே இந்தச் சொற்கள் இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகும். ஒரு தனிக்குழு ‘ஜிகாத்’தைப் பிரகடனப்படுத்த முடியாது. இது அத்தகைய குழுக்களின் உரிமையோ சிறப்புச்சலுகையோ அல்ல. இரண்டு ராணுவங்கள் அல்லது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரின்போது கூட பல கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்துள்ளது. தளர்ந்துபோய்விடாமல் நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் காரணத்தால் வர்த்தகர்களும் விவசாயிகளும் கொல்லப்படக்கூடாது. 

பெண்கள், குழந்தைகள், ஏற்கனவே குறிப்பிட்டுள்ள பிற குழுக்களைக் கொல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை.அவசியமில்லாமல் மரங்களை வெட்டுவதற்கும் அனுமதியில்லை. இவை அனைத்தும் தடை செய்யப்பட்டவை என்பது முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான். 

‘ஒரு முஸ்லிமைக் கொல்வது மனித குலம் முழுவதையும் கொல்வதற்குச் சமமாகும்’ என்பதாக குர்ஆன் வாசகத்திற்குத் தவறான பொருள்விளக்கம் தந்து அதனைச் சில பயங்கரவாத அமைப்புகள் பரப்பிவருகின்றன. ஆனால் குர்ஆனோ ‘மனித உயிரைக் கொல்வது’ எனத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுகிறது. (‘முஸ்லிமைக் கொல்வது’- என்பதாக அல்ல). எனவே ‘ஒரு மனித உயிரைக் கொல்வதென்பது மனிதகுலம் முழுவதையுமே கொல்வதற்குச் சமம்’ என்பதே குர்ஆன் வாசகம். ‘மனித உயிர்’ என்ற பொருளில் நஃப்சன் என்ற சொல் குர்ஆன் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் அரசியல் செயல் திட்டம்தான் இஸ்லாமியச் சட்டத்தை இவ்விதம் குறிப்பிட்டவிதமாகப் பொருள் விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறது என்று கூறுகிறீர்களா?

அரசியல் செயல் திட்டமோ அல்லது சர்வதேசச் செயல் திட்டமோ மட்டுமல்ல. சமூகப் பொருளாதாரக் காரணிகளும், ஆங்காங்கே உள்ள அரசாங்கங்களின் சித்தாந்தங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற வன்முறை, அதன் சித்தாந்தப் புரிதல்களுடன் இஸ்லாத்தில் ஊடுருவிப் பரவியுள்ளது. முஸ்லிம் உலகு நெடுகிலும் வாழும் மக்களின் சமூக அரசியல் விரக்தியின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம். எனினும் இத்தகைய அரசியல் பிரச்சினைகளும் சமயப் புரிதல்களும் ஒன்றோடு ஒன்று கலத்தல் கூடாது. 

அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைதியான ஜனநாயக வழிமுறைகள் இருக்க முடியும். சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வதற்கு (ஏன் முஸ்லிம்களைக் கொல்வதற்கும்தான்) இஸ்லாமோ இஸ்லாமியப் போதனைகளோ அனுமதிப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தப்படவேண்டும். ஆனால் தற்போது நிலவும் நிகழ்வுகள் கண்டிக்கப்படவேண்டியவை மட்டுமல்ல, திருக்குர்ஆனின் போதனைகளைக் கருத்தில்கொண்டு விளக்கப்பட வேண்டியவையுமாகும்.

இஸ்லாத்தில் தாராளமயக் கொள்கைகள் குறித்து உங்கள் புத்தகம் பேசுகிறது. கருத்துவேறுபாடுகளுக்கு இஸ்லாமிய வரலாற்றில் இடமுண்டு என்பது பற்றியும் இறையியல் ரீதியாக அது எவ்விதம் நியாயப் படுத்தப்பட்டது என்பது பற்றியும் கூறமுடியுமா?

பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே கருத்து வேறுபாடுகளுக்கு இஸ்லாத்தில் இடமிருந்து வந்திருக்கிறது. ‘லா இக்ற ஐ தீன்’ என குர்ஆன் கூறுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் யார்மீதும் இல்லை. அதே சமயம் இஸ்லாத்தின் தீனுக்குள்ளும் நிர்ப்பந்தம் ஏதுமில்லை. எனவேதான் இஸ்லாத்தில் சட்டவியல் சிந்தனைக் குழுக்கள் பலவற்றில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் காண்கிறோம். இஸ்லாமிய வரலாற்றில் ஒரே சம்பவத்திற்காக வேறுபட்ட தீர்ப்புகள் இந்தச் சிந்தனைக் குழுக்களால் வழங்கப்பட்டிருக்கின்றன. வேறுபட்ட சிந்தனை முறைகளையும் வேறுபட்ட வழிமுறைகளையும் இக்குழுக்கள் கொண்டிருந்தமையே இதற்குக் காரணம். 

உலகளாவிய ஒரு கட்டமைப்பினுள் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பதே உண்மை. இதனாலேயே சட்டவியலில் வேறுவேறு சிந்தனைப் போக்குகள்கொண்ட குழுக்கள் நிறுவப்பட்டன. எந்தக்குழுவும் - ஷியா தத்துவம் உட்பட, காஃபிர்களை (இறை மறுப்பாளர்கள்) இஸ்லாத்திற்கு வெளியே உள்ளோராகப் பிரகடனப்படுத்தவில்லை. ‘ஹதீத் - இக்தெதா- உம்மத்தி - றஹ்மத்துல்’ என்ற தத்துவத்திற்கு எப்போதுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ‘ஒரு நல்ல மத நம்பிக்கையில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் அந்தச் சமுதாயத்திற்கு இறைவனின் அருட்கொடையாகும்’ என்பது இதன் பொருளாகும். இது (கருத்து வேற்றுமை) மாற்றீடுகளைத் தருகிறது. ஒன்றில்லையெனில் இன்னொன்று -என்ற விருப்பத் தேர்வையும் நமக்குத் தருகிறது. கடந்த இரண்டாண்டுகளாய் இளையோர் இப்புரிதலைச் சிரம மேதுமின்றி எளிதாக உள்வாங்கிக் கொண்டுள்ளனர்.

‘ஃபத்வா’வின் வரலாறு என்ன?

ஃபத்வா எனும் சொல்லின் பூர்வீகம் திருக்குர்ஆனும் சுன்னாவும் ஆகும். புனித நபி மற்றும் அவரது சகாக்களின் காலத்தில் இந்தச் சொல் ஓர் ஆட்சிமுறைக் கருவியாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, தெற்காசியா நாடுகளில் சில மதகுருமார்கள் தங்களின் தனிப்பட்ட முற்சாய்வுகள் காரணமாக இந்தச் சொல்லைத் தவறாகப் பயன்படுத்தியபோது பிரச்சினை எழுந்தது. மருத்துவத்தில் ‘போலி டாக்டர்கள்’ எப்படியோ அதுபோலவே இஸ்லாமியத் தத்துவத்திற்கு இந்த மதகுருமார்கள் என்பதாகக் கொள்ளலாம். ஃபத்வா என்பது மிகுந்த அளவு வரையறைக்குட்பட்ட சட்டபூர்வமான சொல். 

காதிகளும் (நீதிபதிகள்) முஃப்திகளும் (தீர்ப்பு வழங்குவோர்) காலகாலமாக இச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஃபத்வா அல்லது இஃப்தா என்ற இரு சொற்களுமே ஒரே பொருள் கொண்டவைதாம். மிக முக்கியமான தீர்ப்புகளில் மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.

(நன்றி: காலச்சுவடு தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி )

Friday, January 15, 2016

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டா ?

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு : ஜல்லிக்கட்டா? மஞ்சு விரட்டா?

மிழகத்தில் கி.மு 1500 காலத்தில் (அதாவது, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) “மஞ்சு விரட்டு” அல்லது “எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.

நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை  வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்.