Tuesday, April 24, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன? -2


இதன் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

இன்று நம் நாட்டிலும்  உலகேங்கும் மிக அதிகமாகப் பேசப்படுகின்ற சொல்தான் உலகமயமாக்கல் (Globalisation).
உலகமயமாக்கலோடு சேர்த்து அலசப்படுகின்ற சொற்களாக தலமயமாக்கல் (localisation), தாராளமயமாக்கல் (Libralisation), தனியார்மயமாக்கல் (Privatisation) ஆகியவற்றையும் சொல்லலாம். இந்த நான்கும் நம் நாட்டில் மட்டுமல்லாமல் வளரும் நாடுகளிலும் உலகெங்கும் மிக அதிகமாக அலசப்படுகின்ற, பேசப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற சொற்களாக இருக்கின்றன.

எதோ கேட்பதற்கு எந்தவிதமான தொல்லையும் தராத, தீங்கற்ற, முற்போக்கான,வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்கிற மயக்கத்தில் ஆழ்த்தக் கூடிய கவர்ச்சியான சொற்களாக இவை தோன்றுகின்றன. ஆனால் இந்த நான்கு சொற்களுக்கும் பின்னணியில் தனி வரலாறே இருக்கின்றது; வானளாவிய நோக்கங்கள் இருக்கின்றன.

சென்ற பதிவில் உலகமயமாக்கல்,பொருளாதாரம்,வெளிநாட்டு வணிகம், இவைகளை பார்த்தோம். இனி வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு இவை குறித்து பார்ப்போம்.

வெளிநாட்டு உறவுகள்.

அடுத்ததாக, வெளியுறவுத் துறையை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளுடனான பரஸ்பர உறவுகளையும், அந்த உறவுகளின் கனம், பரிமாணம்,நீடித்து நிலைக்கின்றதன்மை போன்றவற்றையும் தீர்மானிக்கின்ற உரிமை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு இருக்கின்ற மறுக்க முடியாத உரிமையாகும்.

எந்த நாட்டுடன் நாட்டுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது, எதனுடன் உறவை நீட்டிப்பது, எதனுடன் உறவைத் துண்டித்துக் கொள்வது போன்றவற்றைத் தீர்மானிக்கின்ற உரிமையும் இதில் அடங்கும். இவையெல்லாம் அன்றாடம் கவனிக்க வேண்டிய விவகாரங்களாக இருக்கின்றன.

ஒரு நாட்டின் சுதந்திரம், சர்வதேச கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற விவகாரங்கள் இவை. ஆனால் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய தோழமை நாடுகளும் இவற்றையும் உலகமயமாக்குவதில் வெற்றி பெற்று வருகின்றன.

பின்தங்கிய, நலிவுற்ற நாடுகளும் மூன்றாம் உலகநாடுகளும் தம்முடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானாலும், அவற்றோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றாலும் எல்லாவற்றையும் அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற்றே செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த நாட்டுத் தலைவர்களும் பிரதமர்களும் தம் அண்டைநாட்டு அதிபர்களுடன் தொலைபேசியில் பேச நினைத்தாலும் உலக அரங்கில் பெரிய தாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் முகக்குறிப்பை அல்லது கண் அசைவைப் பார்த்தே தொலைபேசி எண்களைத் தட்டத் தொடங்குவர்.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் நடத்துகின்ற கட்டப் பஞ்சாயத்து இது.தலைதாழ்த்தி,வாய் பொத்தி,கூழைக் கும்பிடு போட்டு ஒழுங்காக நடந்து கொண்டீர்கள்... தப்பித்தீர்கள்.திமிறி நிமிர்ந்தாலோ கதை கந்தல்தான்.

விதவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் முகத்தில் வீசப்படும். வட்டார ஒத்துழைப்புக் கான நிறுவனங்கள், இருதரப்பு,முத்தரப்பு மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்கள் என பல்வேறு ஒப்பந்தங்களில் கட்டிப் போட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள். மனித உரிமை பாதுகாப்பு என்கிற கூப்பாடு,பயங்கரவாதத்தைத் தடுப்போம் என்கிற சாக்குப் போக்கு என இவை போன்ற பால்வேறு வழிமுறைகளைக் கையாண்டு நினைத்ததைச் சாதித்து விடுவார்கள்.

இவ்வாறாக, தம்முடைய வெளியுறவுகளை சுயமாகத் தீர்மானிக்கின்ற உரிமை அந்த நாடுகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்.ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு தன்னுடைய வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்ற உரிமையும் இல்லாமல் போகும் போது அந்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான மதிப்பும் செல்வாக்கும் எஞ்சி இருப்பதில்லை அது பொம்மை அரசாகத் தேங்கிப் போகும்.

பாதுகாப்பு.

அடுத்து இருப்பதிலேயே பொறுப்பு வாய்ந்த மிக முக்கியமான பாதுகாப்புத் துறையை எடுத்துக் கொள்வோம்.

ஒரு நாட்டுக்கு இருந்தே தீர வேண்டிய முக்கியமான உரிமை இது. இந்த உரிமையையும் உலகமயமாக்கல் என்கிற போர்வையில் பறித்து வருகின்றார்கள். என்னுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்வது? எந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது? இவற்றையெல்லாம் தீர்மானிகின்ற உரிமை. அவற்றையும் உலகமயமாக்கல் என்கிற பெயரில் பறித்து விடுவார்கள்.

அணு ஆயுதங்கள் இல்லாத நிலப்பரப்பு (Nuclear Free Zone) என்று சொல்வார்கள். சி.டி.பி.டி என்பார்கள்.என்.பி.டி என்பார்கள். விதவிதமான ஒப்பந்தங்களின் மூலமாக உங்களின் சுயாட்சியையும் கண்னியத்தையும் முடக்கிப் போடுவதற்கும் வளைத்துச் சாய்ப்பதற்கும் முயல்வார்கள். இவையெல்லாமே அமெரிக்காவின் விரல் அசைவில் போடப்படுகின்ற ஒப்பந்தங்கள்.

போதக்குறைக்கு அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள், உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பி வேரூன்றியிருக்கும் படைத்தளங்கள் ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதையும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையும் தன்னுடைய கிடுக்குப் பிடியில் இறுக்கி வைத்திருப்பதில் அமெரிக்க வெற்றி பெற்றிருக்கின்றது. அதன்பிறகு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் எதனையும் தீர்மானிக்கின்ற உரிமையும் சுதந்திரமும் முற்றாகப் பறிக்கப்பட்டுவிடுகின்றது.

பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து தேசப் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றத் தொடங்கி விட்டாலே அமெரிக்காவிடமிருந்தும் அதன் நேச நாடுகளிடமிருந்தும் மிரட்டல்களும் உருட்டல்களும் வரத் தொடங்கி விடுகின்றன.
இவ்வாறாக,நாட்டின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் தம்முடைய உரிமையையும் சுதந்திரத்தையும் முழுமையாக இழந்து நிற்கும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக குவைத்,சவூதி அரேபியா, மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகள்,சோவியத் யூனியன் சிதறிய பிறகு தோன்றிய ஒன்பது மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றைச் சொல்லலாம்,

இவ்வாறாக, ஒரு நாட்டின் அரசாங்கத்திடமிருந்து பொருளாதாரம், வெளிநாட்டு வணிகம், வெளியுறவுகள்,பாதுகாப்பு போன்ற அதிமுக்கியமான துறைகளில் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயலாற்றுகின்ற உரிமை பறிக்கப்படும்போது இந்தத் துறைகள் யாவும் இவை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் உலகமயமாக்கப்படும்போது அந்த அரசின் அந்தஸ்தும் அதிகாரமும் நகராட்சியளவுக்கு சுருங்கிவிடுகின்றது.

கொரிய எழுத்தாளர் ‘ஜெரீமி சி புரூக்’ மிகச் சரியாக தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார்: உலகமயமாக்கல் என்பது உண்மையில் மற்றெல்லா பண்பாடுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். உலகமயமாக்கல் என்கிற பெயரில் தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுத் தாக்குதலுக்கொதிராகத் தத்தமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கான போரில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்றே ஆக வேண்டும். இங்கு எவரும் அப்பாவியான பார்வையாளராக முடங்கி இருக்க முடியாது.

Tuesday, April 17, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன?:உலகமயமாக்கலின் உண்மை முகம்.


"ஊருக்கு போறேன்! 32 இன்ஞ் சோனி LED டிவி வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று நண்பர் சொன்னபோது அருகிலிருந்த இன்னொரு நண்பர்  "அட ஒலகமயமாக்கல் வந்ததிலிருந்து இப்ப எல்லாமே ஊர்லேயே கெடைக்கிது. இங்கே இருந்து எதுக்கு சுமந்துக்கிட்டு போற?? ஊருலேயே வாங்கிவிடலாம். ஒலகமயம் வந்தது எவ்வளவு வசதியாக இருக்கு?" என்றார்.


நண்பரை பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது பயணச்சுமையை குறைத்து ஊரிலேயே அனைத்து பன்னாட்டு கம்பெனிகளின் தரமான(!?) பொருட்களை வாரி வாரி வழங்கக்கூடிய அமிர்த சுரபி. நண்பர் சொல்வது போல உலகமயமாக்கல் என்பது அவ்வளவு நல்ல விடயமா?


உலகமயமாக்கல் என்றால் என்ன?


தகவல் தொழில்நுட்ப புரட்சியும் இணைய புரட்சியும் போட்டி போடும் யுகம் இது. அமெரிக்க அதிபர் தேர்தலை ஆண்டிப்பட்டியில் அமர்ந்து கொண்டு அலச  முடிகின்ற அசாத்திய யுகம். உலகில் எந்தவோரு மூலையில் நடக்கின்ற எந்தவோரு முக்கிய நிகழ்வும் விரல் சொடுக்கில் காட்டுத்தீயாக உலகமெங்கும் பரவிவிடுவதை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.


உலகமயமாக்கலின் இந்தப் பரிமாணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சியோடு தொடர்புடையதாகும். ஆனால் அரசியலையும், சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவதென்பது முற்றிலும் மாறுபட்ட பொருளையும் பரிமாணத்தையும் கொண்டதாகும்.


அதென்ன அரசியலையும் சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவது?


பொருளதாரம், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு உறவுகள், தேசப் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை உலகமயமாக்குவது தான் உலகமயமாக்கலின் உண்மையான இலக்காகும். இந்த நான்கும் மக்கள் நல அரசின் ஆளுகைக்குக் கீழ் வருகின்ற மிக மிக முக்கியமான துறைகளாகும்.

உலகமயமாக்கல் என்கிற போர்வையில் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் இந்த நான்கு முக்கியமான துறைகளை மூன்றாம் நாடுகளின் அரசாங்களிடமிருந்து பிடுங்கி, அவற்றைத் தம்முடைய ஆளுகையின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

1. பொருளதாரம்


முதலாவதாக, பொருளாதாரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தங்களின் கிடுக்குப் பிடியில் கொண்டு வருவதற்காக இவர்கள் என்ன செய்கின்றார்கள்? எந்தெந்த விதங்களில் வேடந் தரித்து வருகின்றார்கள்/ இந்தச் செப்பிடு வித்தையை இவர்கள் செய்வதெப்படி? இதற்காக இவர்கள் போடுகின்ற ஆட்டங்கள் என்னென்ன?

முதலில் உதவித் தொகைகளைத் தருகின்றோம் என்று தொடங்குவார்கள். பாலங்கள் கட்டுவோம், அணைக்கட்டு கட்டித் தருகின்றோம், விமானத்தளம் அமைத்துத் தருகின்றோம் என பல வடிவங்களில் ஆசை காட்டுவார்கள். குறைந்த வட்டியில் கடன் தருகின்றோம் அல்லது சேவைக் கட்டணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று தாமாக முன் வந்து கடன் கொடுத்து கடன் பொறியில் மூன்றாம் உலக நாடுகளைச் சிக்க வைப்பார்கள். பிறகு அதிக வட்டியில் குறுகிய காலக் கடன் என வலையை இறுக்கிக் கட்டுவார்கள்.
இவையெலலாமே கமுக்கமாக நடந்தேறும்.வெளிப்படையான நிர்வாகம்,ஜனநாயகம்,விடுதலை,சுதந்திரம் என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்பவர்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் எதிர்கால வளத்தோடும் தொடர்புடைய இந்த விவகாரங்களை குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் நடத்துவதை விரும்ப மாட்டார்கள்.

ஏற்றுமதி- இறக்குமதி வல்லுநர்கள்,வெளிநாட்டு ஆலோசகர்கள்,உள்நாட்டு அரசு அதிகாரிகள் என எல்லாரும் சேர்ந்து கைகோர்த்துக் கொண்டுச் செயல்படுவார்கள். நாட்டின் இறையாண்மை, மக்கள் நலன்,எதிர்காலம் குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் கவலையின்றி இவர்கள் எல்லாரும் புகுந்து விளையாடுவார்கள்.

அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் என்கிற வடிவில் அற்பமான உலக லாபங்களுக்காக நாட்டு நலன்களையும் எதிர்காலத்தையும் வெளிநாட்டு பண முதலைகளுக்கு அடகு வைக்கத் துணிந்து விடுகின்ற, மனச்சாட்சியற்ற கைக்கூலிகள் இவர்களுக்கு எல்லா நாடுகளிலும் கிடைத்து விடுவது தான் வேதனையான முரண்பாடு ஆகும்.

இவ்வறாக, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு சிறுக சிறுக மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் கிடுக்குப் பிடியில் முழுமையாகச் சிக்கிவிடும். உடைத்தெறிய முடியாத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அடிமைகளின் நிலைக்கு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆளாகிவிடும்.
அடுத்த கட்டமாக அந்த ஏழை நாட்டின் கரன்ஸி நாணயம் மீது கை வைக்கப்படும்.


நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிடு; இல்லையேனில் புதிய கடன் பொருளாதார ஒப்பந்தங்கள் கிடையாது என எச்சரிக்கை விடப்படும். நாணயத்தின் மதிப்பைத் திரும்பத் திரும்பக் குறைக்கும் போது உலக அரங்கில் அந்த நாணயத்துக்கு மதிப்பில்லாமல் போகும்.அதற்கு நேர்மாறாக, அதனோடு ஒப்பிடும்போது அமெரிக்க டாலர், பவுண்டு,ஸ்டெர்லிங், ஃபிராங், யென் போன்றவற்றின் மதிப்பு எகிறிக் கொண்டே போகும்.

உலக வங்கி,ஐ.எம்.எஃப் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் ஆடிய ஆட்டத்தால் இன்று உலக அரங்கில் அமெரிக்க டாலர் கொடி கட்டிப் பறக்கின்றது. அதனோடு எந்தவொரு மூன்றாம் உலக நாட்டின் நாணயத்தையும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதன் ஆதிக்கம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.சர்வதேச அரங்கில் எந்தவொரு நாட்டின் கரன்ஸியின் மதிப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் செல்வாக்கும் கணிக்கப்படும். கரன்ஸி வீழ்ந்தால் அந்த நாட்டின் செல்வாக்கும் சரிந்து விடும்.

2.வெளிநாட்டு வணிகம்


இரண்டாவதாக வெளிநாட்டு வணிகத்தை எடுத்துக் கொள்ளுவோம்.எந்த நாட்டுடன் எப்படிப்பட்ட வணிகத்தை வளர்த்துக் கொள்வது? உள்நாட்டு வணிக நலன்கள் பாதிப்படையாத வகையில் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்துக்கான கொள்கையை வகுப்பதெப்படி? போன்றவற்றைக் குறித்தெல்லாம் சுயமாக நிர்மணம் செய்கின்ற உரிமை ஒரு நாட்டுக்கு உண்டு.

ஒரு நாட்டுக்கு இருக்கின்ற இந்த சுய நிர்ணய உரிமையைப் பறிக்கின்ற நோக்கத்துடன் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளால் அமைக்கப்பட்ட நிறுவனம் தான் உலக வர்த்தக அமைப்பு (WTO)

வெளிநாட்டு வணிகத்தில் ஒரு நாட்டுக்கு இருக்கின்ற சுதந்திரத்தையும் உரிமையையும் முற்றாகப் பறிக்கின்ற வலுவான ஆயுதமாக இது இருக்கின்றது. இதனோடு சுதந்திர சந்தை, சந்தை பொருளதாரம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் மூலகமாகவும் வெளிநாட்டு வணிகத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருக்கின்ற சுதந்திரமும் உரிமையும் திட்டமிட்ட முறையில் பறிக்கப்படுகின்றது. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டாக ஈரான் -இந்திய எண்ணெய்க்குழாய் அமைக்கின்ற திட்டம் முடக்கப்பட்டதைச் சொல்லலாம். இவற்றுக்குப் பின்னால் அமெரிக்க, யூத சூழ்ச்சிகளும் சதித் திட்டங்களும் இயங்குகின்றன என்பது வெளிப்படை.

சுதந்திர சந்தை, சந்தை பொருளாதாரம்,ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வணிகவசதி, சில குறிபிட்ட நாடுகளை மட்டும் அதிகமாக சலுகை காட்டப்பட வேண்டிய நேசநாடுகளை(Most Favoured Countries) அறிவிக்குமாறு அமெரிக்கா செய்கின்ற நிர்பந்தம்- இவையெல்லாமே எதற்காக என நினைத்தீர்கள்?

யாருக்குத் துணை நிற்கின்ற ஏற்பாடுகள் இவை என நினைத்தீர்கள்?

இவற்றால் மூன்றாம் உலக நாடுகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. அதற்கு மாறாக மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களும் காலூன்றுவதற்குத் தான் இவையனைத்தும் துணை நிற்கின்றன.இதுதான் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.

இன்னும் வெளிநாட்டு உறவுகள்,பாதுகாப்பு இவை பற்றியும் உலகமயமாக்கல் தொடர்பில் எழுத வேண்டியிருப்பதால். தொடரும்

ஆதாரங்கள்: நூல் உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

Sunday, April 15, 2012

ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!



நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களுடைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்காக‌,
சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதி ஒருவன், ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர், என மக்களிடம் விஷமம் செய்து, கடும் கலவரத்தை ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அந்த கயவனின் பெயர், G.சிவகுமார் (எ) ராகேஷ், வயது 19, 7ம் வகுப்பு வரை படித்துள்ளான். (அவனுக்கு 18 வயது தான் ஆகிறது என்றும், அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், அவனை காப்பாற்றும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர், ஹிந்துத்துவா தீவிரவாதிகள்) தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட அவனை, நேற்று பத்திரிக்கையாளர் முன்பு, போலீசார் ஆஜர் படுத்தினர். மேலும், விஷமி சிவகுமார் மீது IPC 153/A மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No 83/2012) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நன்றி:www.maruppu.in

Saturday, April 14, 2012

சிசுக் கொலை தீர்வு என்ன?

அண்மையில் மூன்று மாத பெண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை எனும் செய்தியை படித்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண் சிசுக் கொலையை பற்றி பதிவு எழுதலாம் என்று அதற்கான கூடுதல் தகவல்களுக்காக கூகுளில் போய் தேடிப் பார்த்தால் இதுபோன்ற பாதகக் கொலைகள் இறைந்து கிடக்கின்றன.உதராணத்திற்க்கு ஒரு சில தேடல் முடிவுகளை தருகிறேன் பாருங்கள்.

1.பிறந்து 2 நாளேயான பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றதந்தை கைது. செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 10, 2012, 13:48 [IST]. போபால்: மத்திய ...

2.2 நாட்களுக்கு முன்னர் – சங்கராபுரம் அரசு பஸ்சில் பிணம்: பெண்-குழந்தையை கொன்றகொலையாளி கைரேகை சிக்கியது; தனிப்படை போலீஸ் தீவிரம்.

3.பிறந்து 4 நாட்களே ஆனபெண் குழந்தையைகிணற்றில் வீசி கொன்ற தந்தைஇரவில் தூங்க செல்வதற்கு முன்குழந்தையைஉடல் முழுவதும் ...

4. சங்குரூர்: பிறந்து 4 நாட்களே ஆனபெண் குழந்தையை கொன்றதந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து பஞ்சாப் கோர்ட் அதிரடி தீர்ப்பு ...

5.Search ஜோதிடரின் பேச்சைக்கேட்டு மாதபெண் குழந்தையை கொன்ற

6.1 மார்ச் 2012 – கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி தனக்குப் பிறந்த பச்சிளம்பெண் குழந்தையை கொன்றநிகிதா அகர்வால் என்னும் அப்பெண் இதுவரை ...

மேலேயுள்ளவைகள் குழந்தைகள் பிறந்த பிறகு கொன்றவைகளில் மீடியாக்களின் பார்வைக்கு வந்த ஒரு சில சம்பவங்கள் மட்டுமே இன்னும் எத்தனை குழந்தைகள் அன்றாடம் கொல்லப்படுகின்றனவோ? குழந்தையை பிறக்க விட்டாதானே என்பது போல் கருவிலேயே வைத்து கொல்லப் படுகின்ற சிசுக்கொலை,என்ற கருக்கலைப்பை பற்றிய புள்ளி விபரங்களை பார்த்தால் இன்னும் அதிர்ச்சியடைவீர்கள்.
உலக அளவில்ஆண்டுக்கு சுமார் 4.2 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 2.2 கோடி மட்டுமே பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகும். மற்றவை பதுகாப்பற்ற கருக்கலைப்புகள் ஆகும். உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர்.



நமது நாட்டில் ஆண்டுதோறும் 1.10 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் 80 இலட்சம் பெண் சிசுக்களின் மரணம் நிகழ்கிறது. இதுபோன்ற கருக்கலைப்பு பொதுவாக திருமணம் ஆகாத பெண்களின் விஷயத்தில்தான் செய்யப்படுகிறது என்பது கூடுதல் வேதனை.


பொதுவாக திரைமறைவாக நடைபெறும் கருக்கலைப்பில் அரைகுறை வைத்தியர்களும் அறிவோ அனுபவமோ இல்லாத செவிலியர்களும் ஈடுபாடுகிறார்கள். அவற்றில் வயிற்றில் வளரும் குழந்தை செத்து விடுவதுடன் தாயின் வாழ்வும் முடிந்து விடுகிறது. இது எத்தகைய கொடுமை?


இஸ்லாம் வருவதற்கு முன்பு இருந்த அன்றைய அறியாமை அரபு சமூகம் பிறந்த பெண் குழந்தைகளைஅற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கித்தது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: 


பார்க்க: 16:58   وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். (குர்ஆன்: 16 58)


16:59   يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ ۚ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ ۗ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? (குர்ஆன் 16:59)


சரி இந்த சிசுக் கொலைகளுக்கு தீர்வுதான் என்ன?
பிரச்சனை சிக்கலானது அறிவுரை, உபதேசத்தினால் இப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது.சரி தீர்வுஅடுத்த பதிவில் தொடரும்.

Wednesday, April 4, 2012

அமீர் தீவிரவாதியா....?

அமீர் தனது வாய் பேசமுடியா 
தாயாருடன்
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த முஹம்மது அமீர் என்ற 18 வயது இளைஞரை,டெல்லி போலீஸ் வேன் ஒன்று வழிமறித்துக் கைது செய்தது. அவர் மீது கொலை செய்தல், பயங்கரவாதம், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

1996 டிசம்பர் மாதத்திலிருந்து 1997 அஃக்டோபர் மாதம் வரை டெல்லி, ரோக்தாக்,சோனாபெட்,காஸியாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இவரே மூல காரணம் என்று போலீஸ் அவர் மீது குற்றம் சாட்டியது.இதில் பேருந்துகளில் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளும்,டெல்லி சதார் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும்,பிராண்டியர் மெயிலின் (Frontier Mail) மூன்று கோச்சுகளில் நிகழ்ந்த (காஸியாபாத்தில் வைத்து) குண்டுவெடிப்புச் சம்பவங்களும் அடங்கும்.இந்த இருபது சம்பவங்களிலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். அமீரைக் கைது செய்த போலீசார் அவரைத் திகார் சிறையில் அடைத்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சகீல் என்ற இன்னொருவரும் கைது செய்யப்பட்டார்.விசராணை தொடங்கும் முன்னரே சகீல் பத்து வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிற வழக்குகளுக்காகச் சிறையில் இருந்த அவர் 20009 ஆம் ஆண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் அந்த நபரின் கதை முடித்து வைக்கப்பட்டது.

அமீர் 14 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு.2012 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த இருபது வழக்குகளில் 18 வழக்குகளின் அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லையென்றும், எந்த விதமான சாட்சிகளோ, ஆவணங்களோ இல்லாமல் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் கூறி ‘விசராணை நீதி மன்றம்’ அமீரை விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று வழக்குகளில் மட்டும்(அது ஏன் மூன்று வழக்குகளில் மட்டும்?) போலீஸார்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதி மன்றம் “குற்றத்தை நீரூபிப்பது இருக்கட்டும். எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் போலீஸார் அமீர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று தீர்ப்பளித்தது.

அமீரின் வழக்கறிஞரான திரு.என்.டி. பஞ்சோலியா இது பற்றிக் கூறும் போது “எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்,18 வயதான இளைஞர் இருபது இடங்களில் குண்டுகள் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது” என்கிறார்.

தனது 18 வது வயதில் கைது செய்யப்பட்ட அமீர் 14 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் சிறை வாசம் அனுபவித்து விட்டு 33 வது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்க்கையின் வசந்தகாலம் முழுவதையும் அவர் சிறையில் கழித்துள்ளார். தனது மகனைச் சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே கொண்டு வரமுடியாமல்,அமீரின் தகப்பனார் மனமுடைந்து இறந்து போனார் அவரது தாயார் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்து விட்டார்.அவரின் குடும்பமே நிர்மூலமாகிப் போயுள்ளது.

போலீஸ் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் அமீரைத் தொடர்புபடுத்தி பொய்யான வழக்குகள் தொடுத்த கதை இன்னும் வேதனையானது. பாகிஸ்தானில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக அமீர் அந்நாட்டுக்கு ஒரு முறை சென்று வந்துள்ளார்.12.2.1997 இல் பாகிஸ்தான் சென்ற அவர் 13.2.1998 அன்று அங்கிருந்து நாடு திரும்பினார்.

பாகிஸ்தான் செல்லுமுன்,விசா பெறுவதற்காக, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனர் அலுவலகத்திற்கு அவர் சென்றிருந்தபோது, வெளியில் நின்று கொண்டிருந்த இந்திய உளவுப் பிரிவைச் சார்ந்த இரண்டு பேர்,அவரைச் சந்தித்து பாகிஸ்தானிலிருந்து சில ஆவனங்களைக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். உளவுத்துறையினர் கொடுப்பதாக வாக்களித்த சிறு தொகைக்கு ஆசைப்பட்டு, அமீரும் அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் வாக்களித்தபடி அவரால் ஆவணங்கள் கொண்டுவர இயலவில்லை. இத்தகவல்களை உளவுத்துறையினரிடமிருந்து தெரிந்துக் கொண்ட டெல்லி போலீஸார் அவரை இந்தக் குண்டுவெடிப்புச் சமபவங்களுடன் தொடர்புப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது சகோதரியைப் பார்ப்பதற்காகப் பாகிஸ்தான் சென்ற அவரை,அங்கு சென்று பயிற்சி பெற்று வந்தாகக் கதை கட்டினர்.

18 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அமீரின் மீது இன்னும் இரண்டு வழக்குகளே நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீருபணம் ஆனால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனையே கிடைக்கும். ஆனால், அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்து விட்டது.

தன்னை சந்திக்க வருபவர்களிடம் அமீர் கேட்கும் கேள்வி இதுதான் : “நான் செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டேன். ஹாஸிம்புராவில் பல முஸ்லிம்களைக் கொன்று குவித்த போலீஸ்காரர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு ஏன் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை?” அமீர் மட்டுமல்ல, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வியும் இதுதான்.

நன்றி : 7.2.2012 ‘ஹிந்து ஆங்கில நாளிதழ்
நன்றி : சேயன் இப்ராஹிம்
நன்றி : சமரசம்