Wednesday, February 15, 2012

தமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2

இந்த பதிவின் முதல் பாகத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

கடவுளின் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் கடவுளின் பணியாள் அல்லது அடிமை என்பதே தேவதாசியின் பொருளாகும். பூஜை, புனஸ்காரங்களின் போது கடவுளின் சன்னதி முன்பு நடனமாடுவதையே அவர்கள் முக்கியப் பணியாகக் கொண்டிருந்ததால் ‘நடனமாது’எனவும் அழைக்கப்படடனர். வேத இலக்கியம் அதிகாலை தெய்வமாகிய உஷையைக் குறிப்பிடும் போது பூ வேலைப்பாடு கொண்ட ஆடையை அணிந்த நாட்டிய பெண்ணாக வர்ணிக்கிறது.


ஆகமங்களில் கணிகையர் என்று அழைக்கப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகம வழிப்பட்ட கோவில்களின் பெருக்கம் ஏற்பட்ட 5 -6ம் நூற்றாண்டிலேயே இம் மரபு உறுதியடைந்த நிலை உள்ளது. சோழர்களுக்கு முந்தைய பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே கோவில்கள் கலைக்கூடங்களாகத் திகழ்ந்தன. ருத்ர கணிகையர் என்ற பெயரில் தேவதாசியர் பணியாற்ற அமர்த்தப்பட்டனர் என தேவராம் கூறுகிறது. “காரிகையார் பண்பாட சேயிழையார் நடமாடுந் திருவையாறே” என்று சம்பந்தர் பதிகம் பாடுகிறது. 


சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோவிலில் நடனமாடிய பரவையார் என்ற நாட்டியப் பெண்ணை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். பெரிய கோவில்களில் எல்லாம் அவர்கள் பணியாற்றி இசையையும், நடனத்தையும் வளர்த்தனர். கும்பகோணம், திருவையாறு, திருவொற்றியூர், காஞ்சிபுரம் ஆகிய கோவில்களில் தேவதாசியர் நடனமாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்களின் ஓவியக் களஞ்சியமான சித்தன்னவாசலில் உள்ள நடனமாதர் ஓவியங்கள் தேவரடியார் பற்றிய வடிவமே.
தமிழ்நாட்டில் கவனத்தில் கொள்ளதக்க நிலையில் இவர்கள் இருந்து வந்தனர். இதைப் பற்றி இடைக்கால தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் கானக் கிடைக்கும் செய்திகள் தேவதாசி முறை பற்றி விளக்குகின்றன.கி.பி.1004 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில், ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்த காலத்தில் இக்கோவிலில் பணிபுரிவதற்காக வெவ்வேறு கோவில்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 400 தளிச்சேரிப் பெண்களைக் கொண்டு வந்து நியமித்தான். அவர்களுக்கு இரண்டாம் முறை பொட்டுக்கட்டப்பட்டது. இந்தத் தளிச்சேரிப் பெண்கள் வசிப்பதற்கென்று கோவிலை ஒட்டி மூன்று தளிச்சேரிகளை நியமித்தான். ராஜராஜனின் 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் பணியாற்றிய தளிச்சேரிப் பெண்களைப் பற்றிய செய்திகளைத் தருகிறது.


அதே போல, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் இது போன்ற நடனமாதுக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.பெண்கள் தேவதாசிகளாக பல்வேறு வழிமுறைகளின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செங்கல் பட்டு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், அங்குள்ள நெசவாளர்கள் தங்களது மூத்தபெண் குழந்தையை தேவதாசியாக அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.சில கர்ப்பிணிப் பெண்கள் அக்காலங்களில் தங்களுக்கு சுகப்பிரசவம் வேண்டும் என்றும், அவ்வாறு நடந்தால் தனது மூத்த பெண் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதாக வேண்டிக் கொள்வர். குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது பெண் குழந்தைகளை தேவதாசியாக கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.


இவ்வாறு தேவதாசியாக அர்ப்பணிக்கப்படும் பெண், கோவில் நிர்வாகிகளின் தேவைகளை நிறைவு செய்து வந்தனர். அர்ப்பணம் செய்யப்படும் பெண் 6 வயது முதல் 8 வயதிற்குட்பட்டவளாக இருக்க வேண்டும். அப்பெண் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படும் பொழுது கோயில் பூசாரி திருமனச் சடங்குகளை செய்வார். மேலும் கடவுளுக்காக/ தெய்வத்திற்காக தாலியை அப்பெண்ணின் கழுத்தில் அணிவிப்பார். அதன் பின்னர் நட்டுவன் அல்லது நடன ஆசிரியர் அப்பெண்ணுக்கு இசை மற்றும் நாட்டியம் கற்றுக் கொடுக்கத் துவங்குவார்.
தேவதாசி சமூகம் பொதுவாக மூத்த பெண் குழந்தைகளை தேவதாசியாக அர்ப்பணம் செய்துவிட்டு மற்றவர்களை அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனமுடிப்பர் அல்லது அவர்கள் தேவதாசியாக மாற அனுமதிப்பார்கள் தேவதாசிக்கு பெண் குழந்தை இல்லையெனில் தங்களது உறவினர்களிலிருந்து தத்தெடுப்பர் அல்லது அவளது சாதிலிருந்து அல்லது பிற சாதிலிருந்து விலைக்கு வாங்கி அர்ப்பணிப்பார்கள்.


20 ஆம் நூற்றாண்டில் தேவதாசி தடைச் சட்டம் தமிழகத்திற்கு முன்பாக லாகூர்,டெல்லி,ஆக்ரா,பேஷவார் போன்ற பகுதிகளில் நடைமுறைக்கு வந்ததால். அங்கிருந்தவர்கள் தேவதாசிமுறை அனுமதிக்கப்பட்ட பிற நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதன்மூலம், பெரும்பாலான பெண்கள் சென்னையிலுள்ள பைகிராஃப்ட்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, முஹம்மது ஹுசைன் தெரு மற்றும் பக்சின் அலி தெரு போன்ற பகுதிகளில் குடியேறினர்.


1927-இல் 20,000 தேவதாசிகள் சென்னையில் குடியேறியதுடன் தங்களுக்கென சங்கமும் துவக்கினர். தங்களை இத்தொழிலில் ஈடுபடுத்தியவரை அந்த சங்கம் கடுமையாக கண்டித்தது. அவர்கள் மீது குற்றம் சுமத்தியது. டாகடர் முத்துலெட்சுமி ரெட்டி இச்சமூகத்துடன் இணைந்து இக்கேடுகெட்ட நடைமுறையை எதிர்த்து குரலெழுப்பினார்.இதனை ஒழிப்பதற்காக கடுமையாக போராடி சட்டமன்றத்தில் குரலெழுப்பினார். இதற்காக சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை நடத்தினார். தேவதாசி முறையை எதிர்த்து ‘இந்திய மாதர் சங்கமும்’ அவர்களது அதிகாரப்பூர்வ ஏடான “ஸ்தீரீ தர்மாவும்” பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
1927-இல் இந்த சங்கங்கள் டாக்டர் ரெட்டியை இது குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்ரும்படி வற்புறுத்தின. அதேவேளை, ஜூலை 8,1927-இல் சிதம்பரத்தில் சிங்கராம் பிள்ளை தலைமையில் தேவதாசிகள் மாநாடும் நடைபெற்றது. மற்றுமொரு மாநாடு செளத்ரி V.கோனம்பாள் தலைமையில் நவம்பர் 2,1927-இல் கோவையில் மணிமேகலை சங்கம் சார்பாக நடத்தப்பட்டுள்ளது.


சென்னை சட்டமன்றத்தில் நவம்பர் 4, 1927-இல் டாக்டர் ரெட்டி கோயில்களில் தவறான காரியங்களுக்காக இளம்பெண்களும், சிறுகுழந்தைகளும் தேவதாசியாக அனுமதிக்கப்படுவதை எதிர்த்து சட்டமியற்ற முன்மொழிந்த போது தேவதாசிகளில் ஒரு பகுதியினர் அதனைக் கடுமையாக எதிர்த்த கூத்தும் நடந்தது. இத்தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர் சென்னை மற்றும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள தேவதாசிகள் இதனை எதிர்த்து பொதுக்கூட்டங்கள் நடத்தினர்.


தேவதாசிகளின் பெருமையை உணர்த்தும் வகையில் டாக்டர் ரெட்டியின் தீர்மானத்திற்கு எதிராக T.துரைக் கண்ணம்பாள் என்ற சென்னை தேவதாசிகளின் அமைப்பின் செயலர் தலைமையில் எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேவதாசிகளின் நினைவாக, “தேவதாசி நினைவு 1927” என்றழைக்கப்பட்ட மாதிரி நினைவூட்டு சென்னை அரசின் சட்ட உறுப்பினர் சி.பி. ராமசாமி அய்யரிடமும், வளர்ச்சித்துறை அமைச்சர் ரெங்கநாத முதலியாரிடமும் அளிக்கப்பட்டது.


இறுதியில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் அஞ்சாமை மற்றும் இடைவிடாத முயற்சியின் விளைவாக இந்த சட்டம்,பிப்ரவரி 1,1929-இல் செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் “சென்னை ஹிந்து அறநிலையத்துறைச் சட்டம் 1929” என அழைக்கப்பட்டது.


இருப்பினும் தேவதாசி முறையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இதனை முடிவுக்கு கொண்டு வர டாக்டர் ரெட்டி சட்டமன்றத்தில் ஜனவரி 24, 1930- இல் சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் இந்த அர்ப்பணிப்பு முறை முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் பிறகு 1947-இல் ஒ.பி.ராமசாமி முதல்வராக இருந்தபோது சென்னை தேவதாசி தடுப்பு மசோதா கமிட்டியின் தலைவராக இருந்த சுப்பராயன் பரிசீலனையின் பேரில் நவம்பர் மாதம் இம்மசோதா சட்டமாகியது.


60 வருடங்களுக்கு முன்பே சட்டமியற்றி தடுக்கப்பட்டிருத்தாலும் இன்றும் இம்முறை தொடர்வதை இதன் முதல் பதிவை இங்கே அழுத்தி வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
References:
Samarasam Tamil Fortnightly
http://tawp.in/r/7ma
படங்கள் கூகுள்
தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1141316

25 comments:

  1. சலாம் சகோ ஹைதர் அலி,

    இரண்டாம் பாகத்தில் இன்னும் அதிக தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி. தேவதாசி முறைய ஒழிச்சிட்டு, விபச்சாரத்தை அனுமதிச்சிட்டான்களே சகோ????

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
    சட்டங்கள் போட்டு என்ன தான் ஒன்றை தடுத்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் மனமாற்றம் பெறாதவரை அது ரகசியமாகவேனும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். அந்தவகையில் தேவதாசிகளாய் தமது பிள்ளைகளை உருவாக்கி சீரழிக்கும் அந்த பெற்றோர்கள் தான் முதல் குற்றவாளிகள். தேவதாசி முறையை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் போராடிக் கொண்டிருக்கும் போதே அதே தேவதாசிகளில் சிலர் எதிர்த்தனர் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இத்தகைய தேவதாசிகள் தான் படிக்காதவர்கள். அவர்கள் விபரம் புரியாமல் எதிர்த்தனர் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அன்றைய தினம் சட்டசபையில் முத்துலெட்சுமி அம்மையார் கொண்டு தனிநபர் தீர்மானத்தை சத்தியமூர்த்தி என்ற பிராமணர் எதிர்த்தார் என்பது தான் வரலாறு. ஏனெனில் இந்த தேவதாசி முறையின் பின்புலம் இந்துத்துவம். அதை காப்பாற்ற வேண்டும் என்று அன்று போராடியவர்கள் காங்கிரசில் இருந்த சாதிய ஆதரவாளர்கள்.

    ReplyDelete
  3. சத்தியமூர்த்தி சட்டசபையில் பேசியதாவது : "தேவதாசி பழக்கம் ஒழிக்கப்படக்கூடாது. இதனால் ஆண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக மாறிவிடுவார்கள். ஆண்களுக்கு இது ஒரு சிறந்த வடிகால். மேலும் தேவதாசி முறை என்பது கடவுளுக்குப் பணி செய்யும் சிறந்த பணியாகும். உங்கள் சமுதாயத்திற்குக் கிடைத்தது என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். அதைவிடுத்து ஒழிக்கவேண்டும் என்று பேச வேண்டாம்" என்று தன் கருத்தைப் பதிவு செய்ய அப்போது முத்துலெட்சுமி அம்மையார் அவர்கள் அளித்த பதில் நெற்றி பொட்டில் தெரித்தார் போன்று இருந்தது. முத்துலெட்சுமி அம்மையார் தன் பதிலில் "ஒரு நூற்றாண்டு காலம் நாங்கள் கடவுளுக்குச் சேவைசெய்து பெருமைப் பெற்று விட்டோம். இனி உங்கள் சமூகம்( பிராமண சமூகம்) கடவுளுக்குப் பணி செய்து பெருமையைத் தேடிக்கொள்ளலாம் என்று கூறினார்". சத்தியமூர்த்தி மறுவார்த்தை கூறாமல் சட்டசபையில் அமர்ந்தார் என்பது வரலாறு. சாதி வேண்டும் என்று தூக்கி பிடிக்கிற பெரியவர் டோண்டு ராகவன் போன்றவர்கள் இந்த தேவதாசி முறை தொடர ஏதாவது ஆவன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,

    திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.

    கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு -

    இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் -

    தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது
    என்று கூச்சல் போட்டார்.

    தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.

    `மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார்.

    இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.


    இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம் -


    வாயாடி சத்தியமூர்த்தி வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்தது போல அமுங்கினி போல உட்கார்ந்தார்.

    CLICK AND READ THE LINK

    /////// தேவதாசி /////////

    ReplyDelete
  5. சலாம் சகோ

    முன்பு தேவதாசிகளை பற்றிய குறிப்பை தேட விக்கிபீடியா சென்ற போது வார்த்தைக்கான விளக்கம் மட்டுமே கிடைத்தது.

    இன்றுதான் கோயில்களில் உள்ள சிற்பங்களில் இருந்து சங்கம் வரை அறிய முடிந்தது.

    எப்போதோ சட்டம் போட்டு ஒழிக்கப்பட்டதாக நினைத்த ஒரு இழிவான செயல் இன்றும் தொடர்வது குறித்து வேதனையே... அது பற்றி இன்று வரை யாரும் வாயை திறக்காதது ஆச்சர்யம் தான். சட்டம் ந்ம்மதியா தூங்குது போல :-(

    ReplyDelete
  6. சலாம் சகோ....
    மேலும் பல தகவல்களை அறிந்துகொண்டேன் இப்பதிவின்மூலம்...நன்றி

    ReplyDelete
  7. கோர்வையாக கருத்துக்கள் பல சொல்லி இருக்கின்றீர்கள். இது போல் தமிழ் கலாச்சார பதிவுகள் அதிகம் வர வேண்டும்.

    முதல் பதிவை விட இரண்டாம் பதிவு பிரமாதம்

    ReplyDelete
  8. தேவதாசி என்ற சமூகம் இல்லாவிட்டால் இன்று பரத நாட்டியம் என்ற கலையே முற்றிலும் அழிந்து போயிருக்கும்.

    அவர்கள் ஆடிய சதிர், என்ற பரதமே ஈ.கிருஷ்ண ஐயர், ருக்மணி தேவி அருண்டேல் போன்றோரால் செம்மை படுத்தபட்டு இன்று நம் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தந்து கொண்டிருக்கிறது.

    பரத நாட்டியம் என்ற இந்த நடனம் பிராமணர்கள் தந்த பிரச்சாரத்தால் இன்று தேசிய கலையாக ஆகியுள்ளது.

    ருக்மணி தேவி என்ற பரத நாட்டியப் பெண்மணி:



    இதனால் தான் இந்த நாட்டியத்தின் பல்வேறு பகுதிகளை சித்திரமாகச் செதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

    கராத்தே என்பது வீர விளையாட்டு ஜப்பானின் தேசியக் கலை.

    விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆடும் ஆட்டம் இந்த நாட்டின் தேசியக்கலை.

    CLICK AND READ THE LINK

    /////// தேவதாசி /////////

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

    நிறைய புதுத் தகவல்கள்.இன்னும் பெண்கள் வெறும் போகப் பொருளாகப் பார்க்கப் படுவதை தான் ஜீரணிக்க முடிய வில்லை..:-((

    ReplyDelete
  10. சுவாமிகளும் தேவடியாள்களும்

    நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் "நமது நாட்டு கடவுள்"களே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.

    அதாவது சூது, வாது, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் சில கடவுள் களிடத்தில் இவை யாவும் மொத்தமாகவும், சில சில கடவுள்களிடத்தில் தனித்தனியாகவும், சில்லறையாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம்.

    இதே குணங்கள் நமது கடவுள்களுக்கு இருப்பதாக நாமே தினப்படியும், மாதப்படியும், வருஷப்படியும் காலக்ஷேப மூலமாகவும், நடிப்பு மூலமாகவும், பூஜை மூலமாகவும், பஜனை மூலமாகவும், திருவிழாக்கள் மூலமாகவும் நடத்திக் காட்டிக் கொண்டும் வருகிறோம்.

    இவைகளுக்காகவே நம் பெரியவர்களும் ஏராளமான சொத்துக்களையும் விட்டு இவை தவறாமல் நடந்துவரச் செய்திருக்கிறார்கள்.

    தற்கால தர்ம பரிபாலனம் என்பதும் பெரும் பாலும் இக்காரியங்களைப் பரிபாலனம் பண்ணுகிறவைகளாகவே இருக்கின்றன.

    இந்த நிலையில் ஏற்படுத்திய கடவுளை வணங்கும் மக்களுக்கு ஒழுக்கம் எப்படி உண்டாகக் கூடும்?

    இம்மாதிரியான தர்மங்களை பரிபாலனம் செய்யும் மக்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்?

    கடவுள்களும், கடவுள்களைப்பற்றிய கதைகளும், புராணங்களும் மற்றும் அது சம்பந்தமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் உண்டாக்குவதற்கு உண்டாக் கப்பட்டனவேயன்றி இம்மாதிரி பலன்களுக்கு உண்டாக்கப்பட்டதாக யாரும் ஒப்புக் கொள்ள முடியாது.

    மேற்கண்ட அநேகவிதமான ஒழுக்கக் குறைவுகள் கடவுள் பெயரால் நடப்பவைகளுள் விபசாரித்தனத்திற்கு அனுமதிச் சீட்டு (பொட்டுக் கட்டுதல்) என்னும் லைசென்ஸ் கொடுக்கப் படுவதைப் பற்றி மாத்திரம் இவ்வியாசத்தில் எடுத்துக் கொள்ளுவோம்.

    கோயில்களுக்கு தாசிகள் என்னும் விலைமாதர்கள் எதற்காக வேண்டும்?
    மேளமடித்தல், மணியடித்தல் முதலிய காரியங்கள் எதற்காக பூசைக்கு உபயோகப்படுகிறது என்று யாராவது கேட்டால், சுவாமிக்கு தீபாராதனை ஆகும்போது வேறு சப்தங்கள் காதில் விழாமல் இருக்கும் பொருட்டு மணிச்சப்தங்களும் மேளவாத்தியங்களும் செய்யப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    இது சரியோ, தப்போ அதைப்பற்றி நாம் இப்போது விவரிக்க வர வில்லை.

    வேறு சப்தங்கள் காதில் படாமல் இருப்பதற்கு மணியும் மேளமும் வைத்திருப்பதானால் விலைமாதர்களான விபச்சார ஸ்திரீகளை கோயிலில் நிறுத்தி இருப்பதன் காரணம் என்ன?

    என்று இந்த முறையில் யோசிப்போமானால் சுவாமி தீபாராதனையின் போது பக்தர்களுக்கு வேறு சாமான்களை (விபச்சாரிகளை) நிறுத்தி வைத்திருப்பதற்காகத்தான் கொள்ள வேண்டும்.

    இதை யாராவது அறிவாளிகளின் வேலையென்று சொல்லக் கூடுமா?

    நமது நாட்டில் விபச்சாரத்திற்காக பொட்டுக் கட்டிக் கொள்ளும் தாசிகள் எல்லோரும் ஒவ்வொரு சுவாமியின் பெயரால்தான் தங்களைப் பொதுமக்கள் என்று முடிவுகட்டி விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார்களேயல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழி இல்லாததால் இந்த வியாபாரத்திற்குப் போகிறேன் என்று யாரும் சொல்வதே இல்லை.

    இந்த மாதிரி அனுமதிச் சீட்டு கொடுக்கும் கடவுள் வேறு எந்த மதத்திலா வது இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்த்தால் நமது அறியாமையும் நமது கடவுள்களுக்கு நாம் செய்யும் இழிவும் புலப்படாமல் போகாது.

    தவிர, வேறு விவகார முறையில் பேசுவதானாலும் அதாவது, கடவுளுக்குப் பணி செய்ய இவர்கள் கோயிலில் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதானாலும், இருந்திருந்து கடவுளுக்கு பணி செய்ய இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைத்தானா நியமிக்க வேண்டும்; வேறு யோக்கியமான தொழிலில் உள்ள பெண்மக்கள் உங்கள் சமூகத்தில் இல்லையா என்று யாராவது கேட்டால் அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லக்கூடும்?

    இம்மாதிரி ஒவ்வொரு முக்கிய கோயிலிலும் பூசை காலத்தில் 10, 20, 30, சில கோயில்களில் 100, 150 வீதம் விபச்சாரப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு, கோயிலுக்குத் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் முன்னிலையில் நடமாடினால் அந்த பக்தர்களின் கதி என்ன ஆவது?

    கிராமாந்தரங்களில் எந்தக் கோயிலில் பார்த்தாலும் உள்ளதுக்குள் நன்றாய் கொஞ்சம் அழகாய் இருக்கிற தாசிகள் முதலாவது தர்மகர்த்தாவுக்கு அல்லது அவர்கள் மக்களுக்கு, அதற்கடுத்ததுதான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்பதாகவே வழக்கமாயிருக்கிறது.

    கிராமாந்தரங்களில் உள்ள கோயில்களின் கதி இப்படியென்றால் சில பெரிய பட்டணங்களிலும், முக்கிய ஸ்தலங்களிலும் உள்ள கோயில்களின் சங்கதி கேட்க வேண்டியதில்லை. விசேஷ ஸ்தலங்களில் உள்ள கோயில்களின் தாசிக்கு பெரும் பான்மையும் அந்தந்த கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களே தரகர்களாகி விடுகிறார்கள்.


    சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில்
    தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, (குடிஅரசு 4.9.1929).

    SOURCE: http://files.periyar.org.

    continued...

    ReplyDelete
  11. Part 2
    அவர்கள், சுவாமிக்கும் நமக்கும் இடையில் எப்படி தரகர்களாயிருக்கின்றார்களோ அதுபோலவே இந்த அம்மன்களுக்கும் நமக்கும் தரகர்களாயிருந்து கொண்டு யாத்திரைக்கார வாலிபர்களைப் பாழாக்கி விடுகிறார்கள்.

    சுவாமி பக்திக்காக கோயில்களுக்குப் போகும் பக்தர்கள் நாளா வட்டமாய் பழகி தாசி பக்தர்களாகிவிடுவதை நாம் எத்தனையோ பார்த்திருக்கிறோம்.

    இந்த அநாகரிகமும் கெடுதியுமான காரியங்கள் மதத்தின் பெயராலும், சுவாமியின் பெயராலும் நடைபெறுவதானது நமது சமூகத்திற்கே இழிவு என்று சொல்லாமலிருக்க முடியவில்லை.

    "சாஸ்திரங்களிலிருக்கிறது, அதற்கு நாம் என்ன செய்வது" என்று சிலர் சொல்லலாம். வெகு காலமாய் வழக்கத்தில் வந்துவிட்டது. அதற்கு நாம் என்ன செய்வது" என்று சிலர் சொல்லலாம்.

    இதெல்லாம் முட்டாள்தனமான சமாதானமா குமே தவிர அறிவுள்ள சமாதானமாகாது.

    நம்முடைய சாஸ்திரங்கள் என்பவைகளை எழுதினவர்கள் யார்?

    அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

    எதற்காக இப்படியெல்லாம் எழுதினார்கள்?

    இம்மாதிரி வேறு தேசத்தில், வேறு மதத்தில், வேறு சாஸ்திரத்தில் எங்கேயாவது இருக்கிறதா?

    என்பவைகளை யோசித்துப் பார்த்து பிறகு இவற்றை கவனிக்க வேண்டுமேயல்லாமல்,

    எவனோ தனக்கு தொழில் வேண்டும்.
    வயிற்றுப் பிழைப்பு நடக்க வேண்டும் என்பதாக ஏதாவது ஒன்றை எழுதி வைத்து நமக்குக் காட்டினால் அதுவே நமக்கு கடவுள் வாக்காகிவிடுமா அல்லது ஆதாரமாகி விடுமா?

    மனிதனுக்கு பகுத்தறிவு எதற்காக இருக்கிறது?

    இப்பொழுது வர வர அநேக கோயில்களில் இந்த தாசி வழக்கத்தை எடுத்தாகி விட்டது.

    உதாரணமாக, மைசூர் கவர்ன்மென்டார் தங்கள் ஆட்சிக்குட்பட்ட கோயில்களுக்கு எங்கும் தாசி உத்தியோகம் இருக்கக் கூடாது என்பதாக ஒரு உத்தரவு போட்டு தங்கள் சாமிகளை விபச்சாரத்தனத்திலிருந்து மீட்டு விட்டார்கள்.

    அதன் மூலம் அந்த சமஸ்தானத்துக் கோயில் தாசிகள் எல்லாம் நீக்கப்பட்டாய்விட்டது.

    மைசூர் சமஸ்தானத்து சுவாமிகளுக்கு வெட்கம் வந்து தங்களுக்கு இனிமேல் தாசிகள் வேண்டியதில்லை என்று அந்த கவர்ன்மென்டுக்கு சொல்லிவிட்டது போல நமது நாட்டு சுவாமிகளுக்கும் என்றைக்காவது வெட்கம் வந்தோ அல்லது கிழப்பருவம் வந்தோ, இனிமேல் தங்களுக்கு தாசிகள் வேண்டியதில்லை என்று தேவஸ்தான போர்டாரிடமாவது, கமிட்டியாரிடமாவது, தர்மகர்த்தாக் களிடமாவது சொல்லிவிடக் கூடாதா என்பதாக நமது நாட்டு சாமிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

    சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில்
    தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, (குடிஅரசு 4.9.1929).
    SOURCE: http://files.periyar.org.

    ReplyDelete
  12. சலாம்! சகோ ஹைதர் அலி!

    பல சிறந்த தகவல்களை பகிர்ந்திருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட அந்த பெண்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது இன்றும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை.

    ReplyDelete
  13. பெண்களை இன்னும் போகப் பொருளாகவே பார்க்கிற இன்றைய சூழலும் அதற்க்கான சமூக அமைப்பும் உண்மையில் குற்றம் உடையதே கரணம் மனித பிறவியில் ஆண் பெண் என வேறுபாடு உயர்வு தாழ்வு என்பது வெட்க கேடான செயல் அதே போல கோவில்களில் போட்டு கட்டிவிடுதலும் குற்றம் உடையதே பாராட்டுகள் தொடர்க .....

    ReplyDelete
  14. //இறுதியில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் அஞ்சாமை மற்றும் இடைவிடாத முயற்சியின் விளைவாக இந்த சட்டம்//

    இவருக்கு ஒரு கிரேட் ஸல்யூட்!!!!!!!!!!

    ReplyDelete
  15. varalaarai theriya vaiththu vitteerkal!

    ReplyDelete
  16. வணக்கம் ஹைதர் அண்ணா,
    நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

    விபச்சாரம் - தேவதாசி இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

    இந்த தேவதாசி முறைமை பத்தி ஏலவே இக்பால் செல்வனுடமும் விவாதம் செய்திருக்கிறேன்.

    விபச்சாரம் எனப்படுவது, மனம் ஒத்து, அல்லது நிர்ப்பந்தத்தின் பேரில் பணத்திற்காக
    அல்லது வறுமையின் நிமித்தம் செய்யப்படுவது. ஆனால் தேவதாசி முறமைமை அப்படி அல்ல!

    காலதி காலமாக தமிழர் தம் பண்பாட்டியல் அடிப்படையில் பின்பற்றப்பட்டு வருவது!

    உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
    மேற்குலகில் விபச்சாரம் என்ற ஒன்று ஆரம்பிக்க முன்னரே தமிழகத்தில் தமிப் பிரபுக்கள் காலத்தில் இந்த தேவதாசி முறமைமை ஆரம்பித்து வைக்கப்பட்டு விட்டது! மேலும் விடயங்களை தங்களின் இப் பதிவின் இரண்டாம் பாகத்தில் பகிர்கிறேன்!

    ReplyDelete
  17. நல்லதோர் கட்டுரைப் பகிர்வு!

    சில கருத்துக்களினை தாங்கள் தேடிப் பகிர்ந்திருந்தாலும், தேவதாசி என்பதற்கான சரியான சொற் பொருள் விளக்கம் இங்கே முன் வைக்கப்படவில்லை!

    நீங்கள் கூறுவது போல ஆகமங்களின் காலத்தில் தேவதாசி முறமைமை தோற்றம் பெற்றதாக கூறினாலும் தமிழ் இலக்கியங்கள், தமிழர் தம் வரலாறு தோன்றுகின்ற சங்க காலத்திலிருந்தே இந்த தேவதாசி முறைமை தோற்றம் பெற்றிருக்கின்றது.

    ReplyDelete
  18. ஆரம்பத்தில் தேவரடியாள் எனும் சொல் தான் வழக்கிலிருந்தது. பின்னர் சோழர் காலத்தில் தஞ்சைப் பெருங்கோயிலினை அடிப்படையாக வைத்து இராஜ ராஜ சோழனால், தேவதாசி எனும் சொல் உட்புகுத்தப்பட்டதாக சோழர் கால வரலாற்றின் கட்டடக் கலைகள் பகுதியில்
    தேவதாசி - நடன மாதுக்கள் பற்றிய குறிப்புக்கள் விளக்கம் கூறி நிற்கின்றன.

    ReplyDelete
  19. தேவரடியாள் எனும் சொல்...தேவன் அல்லது எமது இந்துக்களின் தேவனாகிய ஈசனுக்கு அடியாளாக இருக்கும் பெண்ணைக் குறிப்பதாகும்! இங்கே அடியாள் எனும் சொல் டபுள் மீனிங்கில் வரலாம்! அதற்கு நான் பொறுப்பல்ல.. ஹே ஹே ஹே


    ஆரம்பத்தில் நடன மாதுக்களை ஆலயங்களில் நடனக் கலையினை வளர்க்கும் நோக்கில் நியமிப்பார்கள். காமசூத்திரத்தில் ஓர் புஸ்த்தகத்தில் இந்த நடன மாதுக்கள் பரம்பரை, பரம்பரையாக இத் தொழிலில் ஈடுபடுவதாக கூறுகின்றார்கள்!

    தேவனுக்கு அடியாள் எனும் சொல்...பிற் காலத்தில் தேவடியாளாகவும் திரிபடைந்தது! இது சோழர் காலத்திற்கு பின்னர் என நினைக்கிறேன்!

    தேவடியாள் எனும் சொல் இன்றளவில் தமிழர்கள் பார்வையில் பொது இடத்தில் பாவிக்க முடியாத சொல்லாக இருக்கின்றது! ஆனால் உண்மை அதுவல்ல! அடுத்த பின்னூட்டத்தில் மிகுதியினை தொடர்கின்றேன்.

    ReplyDelete
  20. ஆரம்பத்தில் நடன மாதுக்கள் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்பட்ட தேவதாசிகள், பின்னர் சோழர் காலத்தில் தஞ்சைப் பெருங் கோயிலுக்கு தொண்டு செய்யும் நோக்கில் பிரிக்கப்பட்டார்கள்!

    சோழ மன்னர்கள் தஞ்சைப் பெருங் கோயிலுக்கு பணிவிடை செய்வோரை அவர்களின் தொழில் அடிப்படையில் பகுக்கும் போது, இந்த நடன மாதுக்கள் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது!

    ஆலயங்களை மையமாக கொண்டு, ஆடல், பாடற் கலைகளை இந்து சமயம் வளர்த்தது என்பது நிஜமே! இந்துக்கள் இக் கலையினை வளர்க்கும் போது, நடனக் கலைகளைப் பார்த்து ரசிக்கும் மன்னன், மந்திரிகள் தமக்குப் பிடித்த ஆடலழகியினை தம்முடன் இரவினைக் கழிக்கும் நோக்கில் அழைத்துச் செல்வார்கள்!

    ReplyDelete
  21. தேவதாசி எனும் சொல் நாகரிகத்திற்காக கையாளப்பட்டாலும்,
    உண்மையான பதம்..தேவடியாள் அல்லது தேவரடியாள் என்பதேயாகும்! சான்றாதாரம்: சோழர் காலச் சிற்பங்கள்!

    தேவ மங்கைகள் என்றோர் அம்சம் கம்பராமாயண காலத்தில் இருந்ததாக கூறுகின்றது கம்பரின் கம்பராமாயணம்!

    இதனை விட, இந்திரன் முதலிய தேவலோக தலைவர்களுக்கும், அவர்களுக்கு ஆடல் கலைகளை வழங்கும் நோக்கில் பஞ்ச (ஐந்து) ரம்பையர் இருந்ததாகவும் இந்து சமய, மற்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

    ReplyDelete
  22. பிற் காலத்தில் தேவதாசி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் முற்றாக ஒழிக்கப்பட்டதாக அறிய முடியவில்லை. இன்றும் சில இடங்களில் தேவதாசி முறைமை பரம்பரை, பரம்பரையாக பின் பற்றப்பட்டு வருகின்றது என்பது உண்மையே.

    ReplyDelete
  23. இந்த தேவதாசி முறைமை காலத்தில்,
    பரம்பரை பரம்பரையாக இந்த சேவையினை செய்வோர்
    தமக்கு அழகான மகள் இல்லையே எனும் நோக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் உள்ளன.

    ReplyDelete
  24. @நிரூபன்

    வாருங்கள் நீருபன் அவர்களே

    //விபச்சாரம் - தேவதாசி இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.//

    கண்டிப்பாக

    19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேவதாசிகளைப் பற்றியோ அல்லது அந்த சமூகத்தைப் பற்றியோ பேசினால்,“பேசுபவரது நாக்கு எரிந்துவிடும்” என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்வர். அந்த அளவுக்கு தேவதாசி முறைக்கு மதிப்பு கொடுத்து வந்தனர்.ஆனால் நாளடைவில் தேவதாசிகளை மன்னர்களும்,நிலபிரபுக்களும்,முக்கியப் பிரமுகர்களும் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் தேவதாசி என்பது பொதுமகளிர் என்பதாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது இது வக்கிரமானது, அக்கிரமமும் கூட.

    இப்படி முதல் பாகத்தில் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன்

    அப்புறம் சங்க இலக்கியங்களில் விபச்சாரியை குறிக்க பரத்தை என்ற சொல்லே குறிக்கப்பட்டுயிருக்கிறது

    ReplyDelete
  25. @நிரூபன்அவர்களுக்கு

    பரத்தையர் என்றாலே தளுக்கி மினுக்கி ஆடவரைத் தம்பால் இழுத்து வாழ்பவரே ஆவர். (நற்றிணை பா. 320) பொருளுக்காகத் தம் உடலை விற்பவரே பரத்தையர் அல்லது பொருட்பெண்டிர் எனப்பட்டனர். இவர்களையே வள்ளுவரும் பொருட் பெண்டிர் எனக்குறித்தார்(குறள் 913).

    பழகிய பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதல் பிணந்தழீஇ அற்று.குறள் 913:

    விளக்கம்
    விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.

    இதனையும் பாருங்கள் சகோ

    வருகைக்கு நன்றி

    ReplyDelete