Sunday, December 30, 2012

இவர்களை கொல்லாதீர்கள்,திருட்டு மனிதர்களே.

மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான். ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத்தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.

பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.

இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே ? 
சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையை அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்த வரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக்கும் பிடிபடவில்லை…
இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ், அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித்தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு !
வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன் கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு பற்றிப் பார்க்க வேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
தேனீக்கள் முதன் முதலில் அமெரிக்காவுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்தப் புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்தபோது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங்குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை.
தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற் புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணைகள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக்காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரிதானபோது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்ததுதான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக்கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள். அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா… இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலை விதியாகவே ஆகிவிட்டது.
இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக்கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள் ! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது என்பதற்கும் பல ஆராய்ச்சி முடிவுகள் சாட்சி இருக்கின்றன.
அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள்கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்துகளின் மிச்சங்களும் அதில் காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை !
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)

Monday, December 10, 2012

கேன்சர் : மருந்து இருந்தால் சொல்லுங்கள்!


சிலருக்கு பெரிய வியாதியாக இருக்கும்; ஆனாலும் மனம் தளராமல் வீரமாக எதிர்த்துப் போராடுபவர்கள் இவர்கள். ‘கான்சருடன் போராடி வீர மரணம் எய்தினார்’ என்று ஆபிச்சுவரி கூட வரும். ஆனால் ‘ஸோ அண்ட் ஸோ, பலவீனமாக நோயை எதிர்க்க முயற்சி செய்து பரிதாபமாகச் செத்தார்’ என்று யாரைப் பற்றியாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
இவை இரண்டுமே தப்பான பார்வைக் கோணங்கள் என்கிறார், மைக் மார்க்குஸி. (http://www.mikemarqusee.com/?p=870) மைக்கிற்கு, பன்முக மைலோமா(ஒரு வித ரத்தப் புற்று நோய்) பாதித்திருப்பதாக இரண்டு வருடம் முன்னால் கண்டுபிடித்தார்கள்.
கான்சர் போல வியாதி வந்தால் வீர தீரமாக அதை எதிர்த்துப் போர் புரிய வேண்டும். அப்போதுதான் பரணி பாடுவார்கள், பள்ளிப்படைக் கோவில் கட்டுவார்கள். கான்சரை எதிர்க்க முடியவில்லை, வேகமாகப் பரவுகிறது என்றால் நோயாளியிடம்தான் ஏதோ தப்பு இருக்கிறது. மனதில் ‘வில் பவர்’ போதவில்லை என்பார்கள். போரில் தோற்றுப் போய் வில்லைக் கீழே போட்டுவிட்டான் என்பார்கள்.
மொத்தப் பழியையும் பேஷண்ட் மீது போட்டுவிட்டு விலகிக் கொள்ளும் இத்தகைய போக்குகளுக்குப் பின்னால், மேற்கத்திய நாடுகளுக்கே உரிய ‘தான்’ என்ற தனி மனித சுய வழிபாடு இருக்கிறது. வெற்றி-தோல்வி என்று அவர்கள் சுண்டிவிட்ட காசுக்கு இரண்டே பக்கம்தான். ஒவ்வொரு தனி மனிதனின் தகுதிக்கும் ஏற்ப வெற்றியும் தோல்வியும் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு, ஏழைகளே காரணம். அதுதான் மார்க்கெட்டின் விதி !
பராக் ஒபாமா, ‘ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்வையும் ஏதோ ஒரு வகையில் தொட்டுவிட்ட கான்சருடன் போராட ஒரு புதிய வியூகம் அமைத்திருக்கிறோம்’ என்கிறார். அவருக்கு முன்னால் நிக்ஸன் ‘இன்னும் பத்து வருடத்தில் கான்சருக்கு ஒரு மருந்து கண்டுபிடித்துவிடுவோம்’ என்றார். அது சொல்லிப் பல பத்து வருடம் ஆயிற்று. ஒபாமா சற்று ஜாக்கிரதையாக ‘நம் வாழ்நாளுக்குள் கான்சரை ஒழிப்போம்’ என்கிறார். நீண்ட ஆயுளுடன் இருக்கப்போகிறோம் என்று யாருக்குத்தான் நம்பிக்கை இல்லை ?
‘கான்சருக்கு எதிரான போர்’ என்பது, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது போல்தான் பயனின்றிக் காற்றில் தோட்டா சுடுவது. முதலில் ஒரு அடிப்படைக் கேள்வி : எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்துச் செய்ய வேண்டிய எந்த ஒரு செயலையும் ‘போர்’ என்று உருவகப்படுத்துவது எதனால் ? இது போர் என்றால், எதிரிகள் யார் ? (நல்ல விஷயத்துக்குக் கூட முழு மூச்சாக ‘க்ருஸேட்’ நடத்தும் மேலை நாட்டு சொற் பிரயோகங்களை, ‘ஊர் கூடித் தேர் இழுப்பது’ போன்ற நம் உருவகங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அமைதி விரும்பிகள் ?)
போர் வெறியுடன் ‘புற்று நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கிறோம்’ என்று இறங்குவதில் சற்றே முட்டாள்தனமும், பெரிதே நேர்மைக் குறைவும் தெரிகின்றன. கான்சருக்கு ஒரு தனிப்பட்ட மருந்து அல்லது ஒற்றை சிகிச்சை கண்டுபிடிக்கப்படுவது அவ்வளவு சாத்தியமாகத் தோன்றவில்லை. நமக்குத் தெரிந்த கான்சரிலேயே 200 வகைகள் உண்டு. அவற்றின் காரணங்களும் வெவ்வேறானவை.
கான்சருக்கு சஞ்சீவி மலையைக் கொண்டு வருகிறேன் என்று ஒற்றைத் திசையில் உழைப்பையும் பணத்தையும் செலவழித்துக் கொண்டிருந்தால் மற்ற பல முக்கியமான துறைகள் கவனிக்கப்படாமல் சவலையாகிவிடுகின்றன : வருமுன் காப்பது; விரைவில் கண்டுபிடிப்பது; வந்த பிறகு தரமான சிகிச்சை பரவலாகக் கிடைக்க வழி செய்வது போன்றவையே நம் உடனடித் தேவைகள். இவற்றுக்கு, புரட்சிகரமான புதிய கண்டுபிடிப்பு எதுவும் தேவையில்லை.
ஆனால், கான்சர் எதிர்ப்புப் பணிகளை, ‘போர்’ என்று வர்ணிப்பதில் பல பேருக்கு சகாயமும் இருக்கிறது, சம்பாத்தியமும் இருக்கிறது.
விஞ்ஞானிகள் ஓய்வாக இருக்கும்போது ஒரு கையால் தாடியையும் மறு கையால் மனச்சாட்சியையும் கோதிக்கொண்டு யோசிக்க வேண்டும். புகையிலை, ஆஸ்பெஸ்டாஸ் போன்றவைகளால் கான்சர் வருகிறது என்ற உண்மை விஞ்ஞானிகளுக்கு விரைவிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் அது பரவலாக வெளியே வருவதற்குப் பல பத்தாண்டுகள் ஆயிற்றே, ஏன் ? அரசல் புரசலாக உண்மையைப் பேச முயன்றவர்களையும் ‘பூ பூ !!’ என்று கத்தி வாயடைத்து உட்கார்த்தி வைத்துவிட்டார்களே, அதுதான் ஏன் ? காரணம், இவற்றைத் தயாரிக்கும் மெகா கம்பெனிகள். அவற்றின் கிகா வருமானம் !
கடந்த 2007-ம் வருடத்தில் பிரிட்டனில் ஆறு சதவீத கான்சர், பணியிடம் சார்ந்து ஏற்பட்டதுதான். இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் பிறகு யாரிடம் போய்த் தேர்தல் நிதி வசூல் செய்வதாம் ? எனவேதான் ‘மாமருந்து கண்டுபிடிப்போம்’ என்ற மார்தட்டல்கள்; அவை, உண்மையான பிரச்னையிலிருந்து கவனத்தைத் திருப்பும் முயற்சி !
தற்போதுள்ள மருத்துவ விஞ்ஞானமே கான்சரைச் சமாளிப்பதில் கணிசமாக முன்னேறியிருக்கிறது. பிரிட்டனில் கான்சர் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிப் பேர் ஐந்து வருடம் அல்லது அதற்கு மேலும் வாழ்கிறார்கள். ஆச்சரியமான புதிய மருந்துகளை விட, இருக்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு சீக்கிரமாகவே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க ஆரம்பிப்பது அவசியம். தரமான சிகிச்சை எல்லோருக்கும் பரவலாகக் கிடைப்பதும் அவசரம். ஆனால் நிலைமை என்ன ?
இங்கிலாந்து-வேல்ஸ் பகுதியில் மட்டும் பெண் கான்சர் நோயாளிகளில் பாதிப் பேருக்குதான் நல்ல சிகிச்சை கிடைக்கிறது. அதுவே ஆணாக இருந்தால் முக்கால்வாசிப் பேருக்கு சிகிச்சை கிடைக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் சதவீதக் கணக்கு போட ஆரம்பித்தால், கால்குலேட்டரிலேயே காண்பிக்க முடியாத அளவுக்கு சின்ன எண்ணாகத்தான் இருக்கும். இதையெல்லாம் சரி செய்வதற்கு நம் அமைப்புகளில் மாற்றம் தேவையே தவிர, புதிய மருந்துகள் எதுவும் தேவையில்லை.
நிஜமோ கற்பனையோ, எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் சில பிணக் கழுகுகளுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. கான்சர் ‘போரிலும்’ அப்படித்தான். கான்சர் நோயாளிகள் வெளி நாட்டுப் பயணம் செல்வதற்கு முன்பு இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முயன்றால் பத்து மடங்கு ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
ஈஸி சேரில் உட்கார்ந்துகொண்டு ‘கான்சர்தானே ! கவலையே வேண்டாம்’ என்று சுய உதவி நூல்கள் எழுதி சம்பாதிக்கவே ஒரு எழுத்தாளர்-பதிப்பாளர் கூட்டம் இருக்கிறது. மல்ட்டி வைட்டமின் மாத்திரை விற்பவர்கள் முதல் ஆல்டர்னேடிவ் மெடிசின், காந்த சிகிச்சை, சர்வ ரோக நிவாரணக் கற்கள், தலைச்சன் பிள்ளை மண்டை ஒட்டு தாயத்து என்று வித விதமான வியாபாரிகள் செம துட்டு பார்க்கிறார்கள்.
இவர்கள் எல்லோரையும் விடக் கில்லாடிகள் என்று சொல்லத் தக்கவர்கள் பல அல்லோபதி மருந்துக் கம்பெனிகள்தான். மருந்து விலைகள் மட்டுமல்லாது மருந்து ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி முடிவுகள் எல்லாமே இவர்களின் இரும்புப் பிடியில் இறுகியிருக்கின்றன. மற்ற எந்த இண்டஸ்ட்ரியையும் விட மூன்று மடங்கு லாபம். பண வீக்கத்தை விட எப்போதும் ஒரு படி உயரத்திலேயே பயணம் செய்யும் மருந்து விலைகள். கேட்டால் ‘எங்கள் ஆராய்ச்சி செலவுகள் அதிகம்’ என்பார்கள். உண்மை என்னவென்றால் மருந்துக் கம்பெனிகளின் ஆராய்ச்சி வளர்ச்சி செலவுகள், அவர்களுடைய விளம்பரச் செலவு, லாபி செய்வது இவற்றில் பாதிதான். மார்க்கெட்டினால் அதிக பட்சம் எவ்வளவு வலி தாங்க முடியுமோ, அவ்வளவு உயரத்தில் விலையை ஏற்றி வைத்துவிடுகிறார்கள்.
மருந்து ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடுவதில் கூடப் பற்பல வெட்டு, ஒட்டு வேலைகள், ஸ்டாடிஸ்டிக்ஸ் பொய்கள். இதில் தெரிந்தோ, தெரியாமலோ மீடியாவும் கூட்டணி. பாதகமான செய்தியாக இருந்தால் முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளைக் கூட இருட்டடிப்பு செய்துவிடுவது, ஒன்றுமில்லாத விஷயத்தை ‘புரட்சிக் கண்டுபிடிப்பு - இனி நோயாளிகளுக்கு விடிவு காலம்தான்’ என்றெல்லாம் முடி சிலிர்க்கும் கருத்துப் பத்திக் கட்டுரை எழுத வைப்பது என்று அவர்கள் செய்யும் உள் குத்து வேலைகள் ஏராளம்.
கடைசியில், கான்சர் நோயாளிகளுக்கு அடிப்படையான பிரச்னையே அரசாங்கங்கள்தான் என்று தோன்றுகிறது. இன்று உடல் நலப் பாதுகாப்புக்குப் பொது நிதி ஒதுக்கீட்டைப் படிப் படியாகக் குறைத்துக்கொள்ளாத கவர்மெண்ட்டே இல்லை. ஏற்கனவே வேதனையில் குற்றுயிராகக் கிடக்கும் நோயாளிகளைத் தனியார் ஆஸ்பத்திரி - மருந்துக் கம்பெனிகள் முன்னால் ‘இந்தா, சாப்பிடு !’ என்று எலும்புத் துண்டு போல் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களே, இந்த வியாதிக்கு ஒரு மருந்து உண்டா ?
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)
பின்குறிப்பு: அப்படியே இந்த பதிவையும் படித்துப் பாருங்கள் http://www.islamiyapenmani.com/2012/12/to.html மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்.

Friday, December 7, 2012

18+ எனது மலேசியா சிறை அனுபவம். (மீள்பதிவு)

18+ என்று போட்டவுடன் என்னோவோ ஏதோ என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.  வரதட்சனை எனும் கொடுமையால் என் நண்பன் எப்படி பாதிக்கப் பட்டான் என்பதை விளக்குவதற்காக அந்த 18+ வீடியோவை இணைத்துள்ளேன்.

சரி புத்தக அறிமுகத்திற்கு பிறகு மலேசியாஉண்மை சம்பவத்திற்கு போவோம்.

ஆசிரியர்: 
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து சமுதாயத்தின் நல்லொழக்கத்தைச் சீர்குலைக்கின்ற மாபெரும் தீமையாகத் தலைவிரித்தாடுகின்றது வரதட்சிணை எனும் கொடுமை! முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தத் தீமைகளின் ஆணிவேர் எது? இது எங்கிருந்து முளைத்தது? எப்படிப் பரவியது? அந்த ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிய என்ன வழி? அதைத்தான் இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் கே. வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள். அதுமட்டுமல்ல, வரதட்சிணைக்கு ஆதரவாகப் பேசுவோர் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய பதில்களையும் டாக்டர் அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.

பொற்றோர்,இளைஞர்கள்,இளம்பெண்கள்,சமயச் சொற்பொழிவாளர்கள்,
ஆன்மிகவாதிகள்,சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்புகளையும்
எடுத்துரைத்துள்ளார்.

இந்த புத்தகத்தில் நான் கோடிட்ட ரொம்ப பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

வரதட்சிணை என்பது எந்த உழைப்பும் இல்லாமல் முதலீடு இல்லாமல் ஒரு பெண்ணின் இயலாமையையும் சமூகத் தந்திரங்களையும் பயன்படுத்திப் பெற்ற பணமாகும்.இதுவும் ஒருவகையில் வழிப்பறிக் கொள்ளையே ஆகும்.

கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.வரதட்சிணை வாங்குபவர்களோ பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.வழிப்பறிக்காரர்கள் சில வேளைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் வரதட்சிணை வாங்குபவர்களோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதோடு,சமூகத்தில் அந்தஸ்தோடும் உலா வருகின்றனர். எனவே கொள்ளையர்களை ‘புத்தியற்ற கொள்ளைக்காரர்கள்’என்றும், வரதட்சிணை வாங்குபவர்களை ‘புத்திசாலித்தனமான கொள்ளைக்காரர்கள்’
என்றும் வர்ணிக்கலாம்.

இப்போது என்னுடைய மலேசியா சிறை அனுபவம்.


நீ எப்ப மலேசியா போன' என்று கேட்பவர்களுக்கு.இங்கே அழுத்துங்கள் மலேசியா கள்ளக் குடியேறி என்ற முந்தைய பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.2001ல் மலேசியாவில் கட்டிடட தொழிலாளியாக பர்மீட் இல்லாமல்வேலை பார்க்கும் போது பிடிபட்டு. மலேசியாவின் நெகிரி சிம்பிலான் என்ற ஊரில் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்.
மலேசியாவில் சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான்டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன்.


போலீஸில் பிடிபடும்போது போட்டுயிருக்கிற ஒரே ஒரு துணி தான் இருக்கும்.
சிறையில் எனக்கு முன்னரே பிடிபட்ட 120 மேற்பட்ட தமிழர்கள் இருந்தார்கள்
ஒரு மாத சிறை வாழ்க்கையில் பலரின் சிறைநட்பு கிடைத்தது. அதில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நண்பர் (பெயர் வேண்டாமே). அவரோடு மாப்பிள்ளை, மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது.


சிறையில் முக்கால் வாசி பேர் குளிக்கும் போது ஆடையில்லாமல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள். சிறையில் பாகிஸ்தான், 
இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாங்க மொத்தம் 500 பேர். அதில் உடுத்துன ஆடையோடு குளித்த ஒருசிலரில் நானும், நண்பனும் அடக்கம். அதாவது ஜீன்ஸ் பேண்ட போட்டுகிட்டு குளிக்கிறது. முடிந்த பிறகு சட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட புழிந்துவிட்டு மறுபடிக்கும் போட்டுகிட்டு காய்வதற்காக வெயிலில் நிற்பது.

இப்படி நண்பன் குளித்து விட்டு சட்டையை இடுப்பில் கட்டுவதற்காக முயற்சிக்கும் போது எதார்த்தமாக விலகி அவனுடைய குந்துபுறம் தெரிந்தது. அதில் ஆழமாக மூன்று கரும்கோடுகள் தழும்பு மாதிரி இருந்தது. பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 
'டேய் மாப்ளா என்னடா இது' என்று கேட்டே விட்டேன். அதற்கு அவன் 'சிங்கப்பூர்ல இருந்தேன் மச்சான். அங்கே பர்மீட் இல்லாமல் தங்கி இருக்கிறவங்கள மூன்று
ரோத்த அடி குடுப்பாய்ங்கே. நான் அங்கு பிடிபட்டபோது எனக்கு கிடைத்த அடியின் தழும்பு இது' என்றான்.
                                      சிங்கப்பூரின் தண்டனை ரோத்த அடிப்பது இப்படித்தான்

'நீ சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லையா?' என்று கேலி செய்தேன். அதற்கு பிறகு அவன் சொன்ன பதிலில் கண்கள் உடைந்து அழுதேன். 

'அப்பா கூலித்தொழிலாளி. அன்றாட காச்சி. எனக்கு இரண்டு சகோதரிங்க. ஒன்னுக்கு வயது 30, இன்னொக்கு 32, இரண்டு பேரையும் கட்டிக்கொடுக்க முடியவில்லை. நான் டுரிஸ்ட விசாவில் சிங்கப்பூர் வந்தேன் பாஸ்போர்ட்டை தூக்கி போட்டு விட்டு இரண்டு வருடம் வேலை செய்து சில லட்சங்களை சேர்த்து மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தேன். இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை, இனி ஊருல எதாவது புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக இருந்து பிழைத்துக் கொள்வேன்' என்றான். இன்றும் அவன் நட்பு தொடர்கிறது. 

வரதட்சணையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.

Sunday, December 2, 2012

சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!

இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே என்னுடைய உடற்பயிற்சி சம்பந்தமான பதிவுகளில் சுவாசத்தின் முக்கியதுவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன் பார்க்க: இங்கே அழுத்துங்கள்


சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?
சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.
கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.
கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.
மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.
கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!
நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)
டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.
கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இறுதியாக ஒன்று
மனிதன் உயிர் வாழப் பிராண வாயு எனப்படும் ஆக்ஸிஜன் அவசியம். இந்த ஆக்ஸிஜன் தான் இரத்தத்தைச் சுத்திகரிக்கச் செய்கிறது. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

இந்த ஆக்ஸிஜனை மனித உடல் எந்த அளவுக்குப் பெறுகிறதோ அந்த அளவுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.காற்றிலிருந்து அதிக அளவு ஆக்ஸிஜனை உடல் பெற்றுக் கொள்ள உடற்பயிற்சி வழி செய்தாலும். ஒரு சில விஷயங்களை நாம் உடற்பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டும்.

1. எப்போதும் மூச்சை கவனிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் வாயினால் சுவாசிக்காதீர்கள்.

இணையத்தில், பேஸ்புக்கில் ஷாட் செய்யும் போது உதடுகளை இறுக மூடிக் கொள்ளுங்கள். மூக்கினால் சுவாசியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் வாழ்த்துகள்.