Tuesday, March 31, 2015

தத்துவஞானி ’பிளேட்டோ’ வை பற்றி தெரிந்து கொள்வோம்

பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன; ஆராயப்படுகின்றன. எனவே, மேலைநாட்டுச் சிந்தனையின் தந்தையர்களில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார்.
ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். கி.மு. 399 ஆம் ஆண்டில் சாக்ரட்டீஸ் 70 வயதை எட்டியிருந்த போது, அவர் மீது சமயத்தை அவமதித்ததாகவும், ஏதென்ஸ் நகர் இளைஞர்களை ஒழுக்கங்கெடச் செய்ததாகவும் ஆதாரமற்ற குற்றங்கள் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணை நாடகத்திற்குப் பின் சாக்ரட்டீஸ் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, நஞ்சு கொடுத்துச் சாகடிக்கப் பட்டார். "நான் அறிந்த அனைவரிலும் மிகச் சிறந்த அறிவாளி சாக்ரட்டீஸ். அவர் நேர்மை மிக்கவர். பொது நலம் வாய்ந்தவர்" என்று பிளேட்டோ போற்றினார். அத்தகைய பெருமைக்குரிய சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டது கண்டு பிளேட்டோவுக்கு மக்களாட்சி அரசின் மீது நீங்காத வெறுப்பு உண்டாயிற்று.
சாக்ரட்டீஸ் இறந்த சில நாட்களிலேயே பிளேட்டோ ஏதென்சிலிருந்து வெளியேறினார். அடுத்த 10 அல்லது 12 ஆண்டுகளை அயல் நாடுகளில் பயணம் செய்வதில் கழித்தார். கி.மு. 387 ஆம் ஆண்டில் மீண்டும் ஏதென்ஸ் திரும்பி, அங்கு "கலைக்கழகம்" (Academy) என்று அழைக்கப்படுகின்ற புகழ் பெற்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளி 900 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தது. பிளேட்டோ தமது வாழ்நாளில் கடைசி 40 ஆண்டுகளை ஏதென்சில் கழித்தார். அப்போது அவர் கல்வி கற்பித்தார். தத்துவம் பற்றி நூல்கள் எழுதினார். இவருடைய மாணவர்களில் மிக்க புகழ் பெற்றவர் அரிஸ்டாட்டில் ஆவார். பிளேட்டோ 60 வயதை எய்திருந்த போது அரிஸ்டாட்டில் தமது 17 ஆம் வயதில் பிளேட்டோவிடம் கல்வி பயில்வதற்காக வந்தார். பிளேட்டோ கி.மு. 347 ஆம் ஆண்டில் தமது 80 ஆம் வயதில் காலமானார்.
பிளேட்டோ 36 நூல்கள் எழுதினார். அவை பெரும்பாலும் அரசியல், அறவியல் பற்றியவை. மெய்விளக்கவியல், இறைமையியல் பற்றியும் அவர் எழுதியுள்ளார். இந்நூல்களை சில வாக்கியங்களில் சுருங்க உரைப்பது அத்தனை எளிதன்று. என்னும், அவருடைய சிந்தனையை அளவுக்கு மீறி எளிமைப் படுத்தும் அபாயம் இருந்த போதிலும், பிளேட்டோவின் மிகப் புகழ் பெற்ற "குடியரசு" (The Republic) என்ற நூலில் கூறப்பட்டுள்ள முக்கியமான அரசியல் கொள்கைகளை இங்கு சுருக்கமாகக் கூற முயல்கிறேன். "உன்னதச் சமுதாயம்" பற்றிய பிளேட்டோவின் கோட்பாட்டினை இந்த நூல் விவரிக்கிறது.
பிளேட்டோவின் கருத்துப்படி, மிகச் சிறந்த அரசு முறை என்பது "உயர் குடியினர் ஆட்சியே" (Atistocracy) ஆகும். இவ்வாறு கூறுவதால், அவர் ஒரு பரம்பரை உயர் குடியினர் ஆட்சியையோ, ஒரு முடியாட்சியையோ ஆதரிக்கவில்லை. மாறாக, தலைமை வாய்ந்த ஓர் உயர் குடியினர் ஆட்சியை அதாவது, நாட்டில் உள்ளவர்களில் அறிவிலும், திறமையிலும் மிகச் சிறந்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியை அவர் விரும்பினார். இந்த ஆட்கள், குடி மக்கள் வாக்களிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாகாது. மாறாக, அமைப்பின் உறுப்பினர்கள் தங்களுக்குள் மனம் ஒத்துத் தேர்ந்தெடுக்கும் (Co-operation) ஒரு முறையின்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். ஏற்கனவே ஆட்சி செலுத்துகின்ற உறுப்பினர்களாக அல்லது காப்பாளர் வர்க்கமாக (Guardian Class) இருக்கின்ற ஆட்கள் கூடுதலான ஆட்களை முற்றிலும் தகுதி அடிப்படையில் தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதற்குத் தங்களுடைய தகுதியை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு எல்லா மக்களுக்கும் ஆண் - பெண் இருபாலருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனப் பிளேட்டோ கருதினார். (ஆண் - பெண் இருபாலருக்கும் அடிப்படைச் சமத்துவம் அளிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் கூறிய தத்துவஞானி, நீண்ட வரலாற்றில் இதை வலியுறுத்திய ஒரேயொரு மனிதர் பிளேட்டோ தான்) சமவாய்ப்பினைக் காப்புறுதி செவ்தற்காக, குழந்தைகள் அனைவரையும் அரசாங்கமே வளர்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசாங்கமே கல்வி புகட்ட வேண்டும் என்றும் பிளேட்டோ வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு முதலில் கண்டிப்பாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும். எனினும், இசை, கணிதம் போன்ற மற்றக் கல்விப் பாடங்களைப் புறக்கணிக்கலாகாது. பல்வேறு கட்டங்களில் விரிவான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இத்தேர்வுகளில் குறைந்த வெற்றி பெறுபவர்களுக்குச் சமுதாயத்தின் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொறுப்பு குறித்தளிக்கப் படவேண்டும். நல்ல வெற்றி பெறுவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். இந்த உயர் கல்வியில் வழக்கமான கல்விப் பாடங்கள் மட்டுமின்றி "தத்துவ" ஆராய்ச்சியும் சேர்க்கப்பட வேண்டும். "தத்துவ ஆராய்ச்சி" என்ற பிளேட்டோ குறிப்பிட்டது உன்னத வடிவங்களில் மெய்விளக்கவியல் கோட்பாட்டினை ஆராய்வதாகும்.
35 ஆம் வயதில், கோட்பாட்டுத் தத்துவங்களில் தமது புலமையைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியவர்களுக்கு மேலும் 15 ஆண்டுகள் நடைமுறைச் செயல்முறை அனுபவப் பயிற்சியளிக்க வேண்டும். ஏட்டறிவை உலகியலில் பயன்படுத்தும் திறனைக் காட்டுகிறவர்கள் மட்டுமே காப்பாளர் வர்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும், பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களெனத் திட்டவட்டமாக மெய்ப்பித்துக் காட்டுகின்றவர்கள்தாம் காப்பாளர்களாக ஆக வேண்டும்.
காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினராவதை எல்லோரும் விரும்ப மாட்டார்கள். காப்பாளர் செல்வந்தர்களாக இருக்கலாகாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சொந்தமாக சொத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சொந்தமாக நிலமோ, தனி இல்லங்களோ வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை (அது பெருந்தொகையாக இருக்காது) பெறுவார்கள். அவர்கள் (சொந்தமாகத் தங்கமோ, வெள்ளியோ வைத்துக் கொள்ளலாகாது) காப்பாளர் வர்க்கத்தின் உறுப்பினர்கள், தனியாகக் குடும்பங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து உணவு உண்ண வேண்டும். பொதுவாக துணைவியை அல்லத துணைவரைத்தான் கொண்டிருக்க வேண்டும். இந்த "தத்துவ வேந்தர்" களுக்கு (Philosopher Kings) இழப்பீடாகக் கிடைப்பது பொருட்செல்வம் அன்று; மாறாக, பொது மக்ளுக்குத் தொண்டு செய்யும் மன நிறைவேயாகும். உன்னதக் குடியரசு பற்றி பிளேட்டோவின் கருத்தின் சுருக்கம் இதுதான்:
"குடியரசு" நூல், பல நூற்றாண்டுகளாக, மிகப்பரவலாகப் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனினும், அதில் விவரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு முறையை, உள்ளப்படியான குடியியல் அரசுக்கான ஒரு முன்மாதிரியாக யாரும் கொள்ளவில்லை. பிளேட்டோவின் காலத்திற்கும், இப்போதைக்கும் இடைப்பட்ட இடைவெளிக் காலத்தின் பெரும்பகுதியில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப் பரம்பரை முடியாட்சிகளே ஆண்டு வந்திருக்கின்றன. அண்மை நூற்றாண்டுகளில் பல நாடுகள் மக்களாட்சி அரசு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஹிட்லர், முசோலினி ஆகியோருடையதைப் போன்ற இராணுவச் சர்வாதிகார ஆட்சி அல்லது கட்சிவாத கொடுங்கோலாட்சிகளும் ஏற்பட்டுள்ளன. அந்த அரசு முறைகளில் எதுவும் பிளேட்டோவின் கொள்கைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏற்றுக் கொண்டதில்லை. கார்ல் மார்க்சின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசியல் இயக்கம் தோன்றியது போல், பிளேட்டோவின் கொள்கைகயை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கம் எதுவும் தோன்றவில்லை. அப்படியானால் பிளேட்டோவின் படைப்புகள் மதித்துப் போற்றப்பட்டாலும் நடைமுறையில் அடியோடு புறக்கணிக்கப் பட்டன என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா? முடியாது என்றே நான் கருதுகிறேன்.
ஐரோப்பாவிலுள்ள குடியியல் அரசு எதுவும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசை நேரடியாக முன் மாதிரியாக கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆயினும், மத்திய காலத்து ஐரோப்பாவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைக்கும், பிளேட்டோவின் காப்பாளர் வர்க்கத்திற்குமிடையே மிகுந்த ஒப்புமை காணப்படுவதை இங்கு கவனிக்க வேண்டும். மத்திய காலத்துத் திருச்சபை, தாமே நெடுநாள் அதிகாரத்தில் நீடிக்கும் உயர்ந்தோர் குழாமை (Elite) கொண்டிருந்தது. இதன் உறுப்பினர்கள், எப்பொழுதும் அதிகாரமுறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்கள். கொள்கையளவில், எல்லா ஆண்களும் அவர்களின் குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும் சமய குருவாக ஆவதற்குத் தகுதியுடைவர்களாக இருந்தார்கள். (ஆனால், பெண்கள் இதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள்). கொள்கையளவில், சமயகுருவுக்குக் குடும்பம் கிடையாது. தமது சொந்த செல்வத்தைப் பெருக்குவதில் அக்கறை கொள்வதைவிட பொது மக்களின் நலனிலேயே அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசின் காப்பாளர் வர்க்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதுண்டு. பொதுவுடமைக் கட்சியிலும், தாமே ஆட்சியில் நிலைத்து நீடிக்கும் ஒரு குழாம் அதிகாரம் செலுத்துகின்றது. அந்தக் குழாத்தின் உறுப்பினர்களும், அதிகார முறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.
அமெரிக்க அரசின் கட்டமைப்பில் கூட பிளேட்டோவின் கொள்கைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அமெரிக்க அரசமைப்பு மாநாட்டில் பங்கு கொண்ட பல உறுப்பினர்கள், பிளேட்டோவின் அரசியல் கொள்கைகளை நன்கறிந்திருந்தார்கள். மக்களின் விருப்பத்தைக் கண்டறிந்து, அதற்குச் செயல் விளைவு அளிப்பதுதான் அமெரிக்க அரசமைப்பின் குறிக்கோளாக இருந்தது. அதே சமயம், நாட்டை ஆள்வதற்கு மிகச் சிறந்த அறிவும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அது தனது நோக்கமாகக் கொண்டிருந்தது.
பிளேட்டோவின் செல்வாக்கு காலங்காலமாகப் பரந்துபட்டதாகவும், ஊடுருவி நிலவுவதாகவும் இருந்த போதிலும், அவருடைய செல்வாக்கு நேரடியாக அல்லாமல் மறைநுட்பமாகவே நிலவி வந்துள்ளது. அவரது அரசியல் கோட்பாடுகளுடன் சேர்ந்து அறவியல், மெய் விளக்கவியல் பற்றிய அவரது விவாதங்களும், பிற்காலத் தத்துவஞானிகள் பலர் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளன. 
(ஆதார நூல்: நூறு பேர் the 100 ) 

Monday, March 30, 2015

மருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்

இங்கிலாந்தின் தலைமை மருத்துவர் டேம் டேவிஸ் சொல்வதைப் பார்த்தால் உலக அழிவு பாக்டீரியா கிருமிகளால் வரப் போகிறது. என்பது போல்  பயமுறுத்துகிறார் இன்னும் இருபதே வருஷத்தில், ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் அறுவை செய்துகொண்டால் கூட நோயாளி இறப்பதற்கான சான்ஸ் மிக அதிகம். ஊரில் ஒரு காலரா, டி.பி பரவினால் மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து மடிந்து விடப் போகிறார்கள் என்கிறார்.
ஏன், இதற்கெல்லாம்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடித்தாகி விட்டதே ? ஆம், ஆனால் நாம் அந்த மருந்துகளை எல்லாம் கண் மூடித்தனமாக உபயோகித்துத் தள்ளியதில் எல்லாமே வீரியம் இழந்து நீர்த்துப் போய்விட்டன. பாக்டீரியா கிருமிகள் இப்போது ட்ரக் ரெஸிஸ்டன்ஸ் என்னும் மருந்து எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொண்டுவிட்டன.
உலக சுகாதார நிறுவனத்தின் வெப் சைட்டுக்குப் போய்ப் பார்த்தால், மருந்துக்குக் கட்டுப்படாத வியாதிகள் பற்றி மானாவாரியாக வெள்ளை அறிக்கைகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.
கனோரியா என்பது, வரக் கூடாத வியாதி. போகக் கூடாத இடங்களுக்குப் போகிறவர்களைப் பீடிக்கும். நேற்று வரை இதை அநாயாசமாகச் சமாளிக்கப் பல மருந்துகள் இருந்தன. இன்றைக்கு மிச்சம் இருப்பது ஒரே ஆண்டிபயாடிக். அதுவும் வேகமாகத் தன் வலிமையை இழந்துகொண்டு வருகிறது.
ஆஸ்பத்திரியிலேயே வசித்துக்கொண்டு (என்ன திமிர் !) ஆஸ்பத்திரி மூலமாகவே பரவும் MRSA என்ற கிருமி, ESCAPE என்று சுருக்குப் பெயர் கொண்ட ஆறு கிருமிகளின் கூட்டணி என்று பல கிருமிகளை நாம் ஆண்ட்டி பயாடிக்குகளைக் காட்டிக் காட்டியே வளர்த்துவிட்டோம்.
கிருமி எதிர்ப்பு மருந்துகளே இல்லாத உலகம் எப்படி இருக்கும் ? கற்பனை செய்வது கடினமே இல்லை. ஒரு 150 வருடத்துக்கு முன்பு அப்படித்தான் வாழ்ந்தோம். 14-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டுக்குள் பல முறை சீனாவிலும் ஐரோப்பாவிலும் கறும் சாவு என்ற ப்ளேக் நோய் பரவி, கோடிக் கணக்கில் மரணங்கள். சீனாவின் ஜனத் தொகையில் பாதி, ஐரோப்பிய ஜனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பலி. ஒரு கட்டத்தில் 45 கோடியாக இருந்த உலகத்தின் ஜனத் தொகையே ப்ளேகினால் 36 கோடியாகக் குறைந்துவிட்டது !
இன்றைக்கு இந்த மாதிரி ஒரு பெரிய அளவில் தொற்று நோய் வந்துவிட்டால், பணம் பிடுங்கி தனியார் ஆஸ்பத்திரிகள் எல்லாம் நாலு காலையும் தூக்கி சரணாகதி ஆகிவிடும். அரசாங்கம் தலையிட்டு ஏதாவது செய்தால்தான் உண்டு. ஆனால் அரசாங்கம் நிலைமையை மேலும் நாசமாக்காமல் இருந்தாலே பெரிய உபகாரம் என்று சொல்லும் அளவுக்குப் பல முறை நடந்திருக்கிறது. உதாரணமாக, 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஏற்பட்ட ப்ளேக் கலவரத்தைச் சொல்லலாம். ப்ளேக் வந்த பிள்ளை குட்டிகளை பலவந்தமாகப் பிடித்துப் போய்க் கொட்டடியில் அடைத்து, பாதிக்கப்பட்ட வீடுகளை எரித்துத் தள்ளி, கடைகள் தொழிற்சாலைகளை மூடி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டது அரசாங்கம். உணவுப் பஞ்சம், மக்கள் கலவரம், ஆர்ச் பிஷப் படுகொலை என்று பற்றி எரிந்தது ரஷ்யா.
நோய்களுக்கு எதிராக நம் ஒரே நம்பிக்கை, கிருமி எதிர்ப்பு மருந்துகள். கடந்த நூறு வருடத்தில் எவ்வளவோ மருந்துகள் கண்டுபிடித்து, தொற்று வியாதிகளைத் தோற்று ஓடச் செய்துவிட்டோம். காலரா, டி.பி. உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சுலபமான செலவில்லாத மருந்துகள் இருக்கின்றன…. அதாவது, இருந்தன !
நாம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் மருந்து மாத்திரைகளை உபயோகிப்பதால், மேற்படி பாராக்களின் விபரீதங்கள் மறுபடி நேரப் போகின்றன !
சின்னஞ் சிறுசாக இருப்பதால் பாக்டீரியாவை ஏதோ அற்பக் கிருமி என்று எண்ணிவிட வேண்டாம். ஆண்டி பயாடிக்குகளை சமாளிக்க அது செய்யும் தந்திரங்களைப் பார்த்தால், சில சமயம் நம்மை விட அதற்கு மூளை அதிகமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தன்னைத் தானே உரு மாற்றிக் கொள்ளும் வல்லமை அதற்கு உண்டு. அதன் மரபீனிகளில் தற்செயலாக நடக்கும் ரைபோஸோம் மாற்றங்களால் ஏதாவது ஒரு பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அப்படியே விட்டால் தானாகவே செத்து மடிந்துவிடும். ஆனால் நாம் அதை வடிகட்டிப் பிரித்து வளர்த்து ஊர் ஊராகப் பரப்பி நாமே அதை சூப்பர் கிருமியாக மாற்றிவிடுகிறோம்.
சில வகை சொறி சிரங்குக் கிருமிகள் தங்கள் மேற்பரப்பில், ஆண்டி பயாடிக்குகளைக் கவர்ந்து இழுத்து சிறைப்படுத்த வல்ல ப்ரோட்டின்களை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றன. பெனிசிலின் ஜாதி மருந்துகளில் உள்ள பீடா-லாக்டம் வளையங்களை, கண்ணாடி வளையல் மாதிரி உடைத்து எறிகிற பாக்டீரியாக்களும் உண்டு. இதற்காகவே அவை தனிப்பட்ட என்சைம்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டன. தனக்கு உள்ளே நுழைந்துவிட்ட மருந்தை வாக்குவம் க்ளீனர் வைத்துக்கொண்டு உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கும் பாக்டீரியாவும் உண்டு. இதற்கு இஃப்ளக்ஸ் பம்ப் என்று பெயர்.
உயிர் காக்கும் மருந்துகள் பாக்டீரியாவிடம் புறமுதுகு காட்ட நேர்ந்ததற்கு டாக்டர்கள், நோயாளிகள், மருந்துக் கம்பெனிகள் என்று எல்லாத் தரப்பினரும் காரணம்.
குறிப்பாக என்ன பாக்டீரியாவினால் வியாதி வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, எம்.பி.பி.எஸ்ஸில் படித்தது அத்தனையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். நேரம் கிடைத்தபோதெல்லாம் சிம்ஸ்-மிம்ஸ் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும். குழந்தைகள், கர்பிணிகள் என்று வெவ்வேறு தரப்பினருக்கு இந்த மருந்துதான், இந்த டோஸ்தான் கொடுக்க வேண்டும் என்று உப விதிகள் வேறு இருக்கின்றன. ஆனால் பல டாக்டர்கள் பர்ஸை-மன்னிக்கவும் பல்ஸை – பிடித்துப் பார்த்துவிட்டுக் குத்து மதிப்பாக ஏதாவது ஒரு ஆண்ட்டி பயாடிக்கை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது.
இப்படிச் செய்தால் நோய்க்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு மருந்து களத்தில் இறக்கப்பட்டு, தானும் செயல் இழக்கத் தொடங்கிவிடுகிறது. இதற்கு ஒரு படி மேலே போய் எத்தைத் தின்றாலாவது பித்தம் தெளிகிறதா என்று பார்க்க, நானாவித மருந்துகளைக் கலந்து போட்டு சீட்டு எழுதிக் கொடுக்கும் டாக்டர்களும் சிலர் உண்டு. ‘இந்த வழக்கம் எனக்கில்லை’ என்று அவர்கள் ஸ்டெதஸ்கோப் மீது ஆணையாகச் சொல்லட்டும் ?…
பல கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில், டாக்டர் வேலைக்கு ஒருவர் சேரும்போதே பைப் ரென்ச் வைத்து மனச்சாட்சியைக் கழற்றிக் கொண்டுதான் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஸ்கான், எக்ஸ் ரே என்று அப்பாவி மனிதனைப் பாடாய்ப் படுத்துவதுடன், அவர்கள் முழ நீளத்துக்கு எழுதிக் கொடுக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் பார்த்தாலே பலத்த சந்தேகம் தட்டுகிறது: மருந்துக் கம்பெனிகளுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை விசாரணைக் கமிஷன் வைத்துத்தான் விசாரிக்க வேண்டும்.
ஆனால் நம்முடைய அத்தனை முட்டாள்தனங்களுக்கும் பாவம், டாக்டர்களையே குறை சொல்வதும் தவறு. நாமும் கள்ளுக் குடித்த குரங்கு போல் தேவையே இல்லாத மருந்து மாத்திரைகளை விழுங்கி நம் உடம்பைப் படாத பாடு படுத்துகிறோம். அன்றைக்கு மருந்துக் கடையில் பத்து வயதே இருக்கும் குழந்தை ஒன்று வந்து “அங்க்கிள் ! ஆம்பிசிலின் கொடுங்க !” என்று கேட்டு வாங்கிச் சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.
ஒரு முறை ஆண்ட்டி பயாடிக் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால், கடைசி வரை சென்று கிருமியை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் நிறுத்த வேண்டும். அரை குறை வைத்தியம், சுய வைத்தியம் எல்லாம்தான் நமக்கு உடன் பிறப்பு ஆயிற்றே.. டி.பி மாத்திரை முழுங்க முடியாமல் மாடு மாடாக இருக்கிறது என்று பாதியில் கை விட்டுவிட்டால், இருமல் கிருமி உக்கிரமான வடிவில் திரும்பி வந்துவிடும். பல மருந்துகளுக்கு ஒரே நேரத்தில் சவால் விடும் மல்ட்டி ட்ரக் எதிர்ப்பு சக்தியுள்ள MDR பாக்டீரியா வளர்ந்துவிட்டால் பிறகு போக்குவது கடினம்.
அமெரிக்காவில் எம்.டி.ஆர் கிருமியை ‘சூப்பர் பக்’ என்கிறார்கள். (எது எதற்கெல்லாம் சூப்பர் பட்டம் சூட்டுவது என்று விவஸ்தையே இல்லையா ?)
நல்ல பழைய நாட்களில் ஒரு கிராமத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத பாக்டீரியா தோன்றினால் அந்த கிராமம் மட்டும்தான் பாதிப்புக்கு உள்ளாகும். இப்போது ஜெட் விமானங்களால் உலகமே குக்கிராமம். சூப்பர் கிருமியை நாமே சொகுசாக விமானத்தில் ஏற்றி அவனியெங்கும் பரப்புகிறோம்.
இப்போது ஆடு மாடு கோழி வளர்ப்பதும் மெகா தொழிலாக மாற்றப்பட்டு மாபெரும் பண்ணைகள் வந்துவிட்டன. விஞ்ஞான பூர்வமாக மாடு வளர்க்கிறோம் என்று அவற்றுக்கும் ஏராளமான ஆண்டி பயாடிக்குகளையும் ஆக்ஸிடோசின்களையும் ஊட்டி நாசமாக்கி, கடைசியில் அத்தனை கண்றாவியும் நாம் குடிக்கிற பாலில்தான் வந்து முடிகிறது.
ஒரு சில மருந்துகளை, தொடர்ந்து ஃப்ரிஜ்ஜில் குளிரான சூழ்நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். போலியோ வைரஸ் சொட்டு மருந்துகள் செயல் இழப்பதற்கு நம்ம ஊரின் உலகப் புகழ் பெற்ற பவர்கட்டும் ஒரு காரணம். ஃபாக்டரியில் தொடங்கிக் குழந்தையின் வாய் வரை, மருந்து பயணிக்கும் வழியெங்கும் கோல்ட் செயின் எனப்படும் குளிர் சாதன வசதி தேவை. நாம் அவ்வப்போது இலவச அடுப்பு, இலவச ஆடு என்று பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்துவிடுகிறோமே தவிர, அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் முக்கியக் கடமை என்பதை வலியுறுத்தத் தவறிவிடுகிறோம்.
மருந்துக் கம்பெனிகள் ஒரு காலத்தில் நிறையப் புதுப்புது ஆண்ட்டிபயாடிக்குகளை உருவாக்கின. இப்போது பாக்டீரியா எல்லாம் ஏழை நாடுகளின் பிரச்சினை என்று ஒதுக்கிவிட்டு அவர்கள் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உப்பு என்று லைஃப் ஸ்டைல் வியாதிகள் பக்கம் கவனத்தைக் குவித்துவிட்டார்கள். பணக்காரர்களுக்கு வரும் வியாதிகளில்தான் பணம் இருக்கிறது !
(நன்றி ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள் )

Sunday, March 29, 2015

wi-fi மின்காந்த அலையை கண்டுபிடித்த முன்னோடி.

குக்லியெல்மோ மார்கோனி (1874 -1937 )

வானொலியைக் கண்டுபிடித்த குக்லியெல்மோ மார்கோனி இத்தாலியிலுள்ள பொலோஞாவில் 1874 இல் பிறந்தார். அவருடைய குடும்பம் செல்வ நிலையிலிருந்தது. தனி ஆசிரியர்கள் அவருக்குக் கல்வி கற்பித்தனர். 1894 இல் மார்கோனி 20 வயதாக இருக்கும் போது, சில ஆண்டுகளுக்கு முன் ஹைன்ரிக் ஹெர்ட்ஸ் செய்த பரிசோதனைகள் பற்றி படித்தார். அப்பரிசோதனைகள் ஒளியின் வேகத்தில் காற்றினூடே செல்லும் கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அலைகளிருப்பதைத் தெளிவாக எண்பித்தன.
கம்பிகளின்றி நெடுந்தூரம் செய்திக் குறிப்புகளை அனுப்புவதற்கு இந்த அலைகளைப் பயன்படுத்தலாமெனும் எண்ணம் குக்லியெல்மோ மார்கோனியின் உள்ளத்தில் உடனே உதித்தது. தந்தியினால் முடியாத செய்தித் தொடர்புச் சாதனைகளை இதனால் செய்ய முடியுமென்பது புலனாயிற்று. எடுத்துக்காட்டாக, இம்முறையினால் கடலிலுள்ள கப்பல்களுக்குச் செய்தி அனுப்ப முடியும்.
1895 இல் குக்லியெல்மோ மார்கோனி ஓராண்டு உழைப்பின் பயனாக எளிதில் இயங்கும் கருவியைச் செய்து முடித்தார். 1896 இல் இங்கிலாந்தில் அவர் தம் கருவி இயங்கும் வகையை விளக்கிக் காட்டினார். அவர் கண்டுபிடித்த அக்கருவிக்கு முதல் காப்புரிமை வழங்கப் பெற்றது. விரைவில் மார்கோனி ஒரு வணிக நிறுவனத்தை நிறுவினார். 1898 இல் முதல் "மார்கோனி செய்திகள்" அனுப்பப் பெற்றன. அடுத்த ஆண்டில் ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து கம்பியின்றிச் செய்திகளை அனுப்ப முடிந்தது. 1900 இல் அவர் முக்கியமான காப்புரிமையைப் பெற்ற போதிலும், தாம் கண்டு பிடித்த கருவியை இன்னும் சீர்படுத்தி காப்புரிமைகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தார். 1901 இல் அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்கே இங்கிலாந்தில் நியூஃபவுண்ட்லாந்திற்கு வானொலிச் செய்திகளை அனுப்புவதில் அவர் வெற்றி கண்டார்.
1909 இல் "ரிபப்ளிக்" எனும் கப்பல் கடலில் மோதி உடைந்து மூழ்கியபோது இப்புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் தெளிவாகப் புலப்பட்டது. அப்போது வானொலிச் செய்தியை அனுப்பியதால் உதவி கிடைத்தது. அறுவரைத் தவிர ஏனையோர் காப்பாற்றப்பட்டனர். அதே ஆண்டில் மார்கோனி தமது கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றார். அடுத்த ஆண்டு அவர் அயர்லாந்திலுள்ள அர்ஜென்டினாவிற்கு 6,000 மைலுக்கப்பால் வானொலிச் செய்தியை அனுப்பினார்.
இச்செய்திகள் எல்லாம் மார்க்ஸ் குறியீடுகளான புள்ளி, கோடு முறையிலே அனுப்பப் பெற்றன. குரலையும் வானொலி வாயிலாக அனுப்ப முடியுமெனத் தெரிந்திருந்த போதிலும் 1916 வரை அவர் அதைச் செய்யவில்லை. வணிக அளவில் வானொலி ஒலிபரப்பு 1920 களின் தொடக்கத்தில் தான் தொடங்கியது. ஆனால், விரைவில் அது பரவியது. அதன் முக்கியத்துவம் வளர்ந்தது.
இத்தகைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமைகள் முக்கியமாதலால் அதைப்பற்றி வழக்குகளும் தொடரப்பட்டன. ஆயினும் 1914 இல் நீதி மன்றங்கள் மார்கோனியின் முந்துரிமையைத் தெளிவாக ஏற்றுக் கொண்டதால் அதன் பிறகு அவரை எதிர்த்து யாரும் வழங்காடவில்லை. மார்கோனி தம் வாழ்வின் பிற்காலத்தில் சிற்றலை, நுண்ணலைச் செய்தி பரப்புகளில் முக்கிய ஆய்வுகள் செய்தார், 1937 இல் அவர் ரோமில் இறந்தார்.
வானொலியைக் கண்டுபிடித்தவர் எனும் வகையில் மார்கோனி புகழ் பெற்றவர், வானொலியின் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் பொறுத்தே அவரது சிறப்பும் அமைந்துள்ளது. (மார்கோனி) தொலைக்காட்சியைக் கண்டுபிடிக்கவில்லை. ஆயினும், வானொலி, தொலைக்காட்சியின் முக்கிய முன்னோடியாக மட்டுமல்ல இணையத்தில் முன்னோடியாகவும் இருந்தது.
ஆகவே தொலைக்காட்சி மற்றும் இணையத்தை கண்டுபிடித்த புகழில் அவருக்கும் ஓரளவு பங்குண்டு என்பது பொருந்தும். இன்றைய உலகில் வானொலி மற்றும் இணையத் தொடர்பு மிகவும் முக்கியமானது என்பதில் ஐயமில்லை. அது செய்தியை அனுப்புவதற்கும், இன்பப் பொழுதுபோக்கிற்கும், படைத் துறைப் பணிக்கும், அறிவியல் ஆய்வுக்கும், காவலர் பணிக்கும் பிறவற்றிற்கும் பயன்படுகிறது. இவற்றுள் சிலவற்றிற்கு (அரை நூற்றாண்டுக்கு முன்னே கண்டு பிடிக்கப்பட்ட) தந்தி பயன்படுமெனினும் பல்வேறு பயன்களுக்கு வானொலி இன்றியமையாததாக இருந்தது. இது உந்து வண்டிகளுடனும், கடலிலுள்ள கப்பல்களுடனும், பறக்கும் வானவூர்திகளுடனும், விண்வெளிக்கலங்களுடனுங்கூட தொடர்பு கொள்ளும். அது தொலைபேசியை விட முக்கியமான கண்டுபிடிப்பாக திகழ்ந்தது. தொலைபேசியில் அனுப்பும் செய்திகளை வானொலியிலும் அனுப்பலாம். ஆனால் தொலைபேசியினால், தொடர்பு கொள்ள முடியாத இடங்களுக்கு வானொலியின் வாயிலாக தொடர்பு கொண்டார்கள்.
இன்று இதே மின்கந்த அலைவரிசை இணைய சேவை மிக முக்கியமான பரிணாம வளர்ச்சியில் வந்து நிற்கிறது.
ஆதார நூல்: 100 நூறு பேர்.  புகைப் படங்கள் கூகுள் 

Saturday, March 21, 2015

காபிர்களை காணும் இடங்களில் வெட்ட வேண்டுமா?

னிதன் தான் நம்புகின்ற கொள்கை, கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் பொதுவாக நியாய உணர்வோடு நடந்துக் கொள்வதில்லை.

இயல்பில் சாதராணமாக காணப்படுகிற இக்குறைபாடு மதம் என்று வந்துவிட்டால் குறுகிய கண்ணோட்டமாகவும் வெறியாகவும் உருமாறிவிடுகின்றது.

ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.வெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். வெளிச்சத்தை வேண்டுமென்றே கைகளால் மூடிக் கொண்டு இருள் என்பதுபோல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

மதங்களின் மீதான இத்தகைய விமர்சன ஆய்வின் நோக்கம் வாய்மைக்கான தேடலாக இருப்பதில்லை. மாறாக, ஆய்வுக்கு முன்பே தன் தேர்ந்து கொண்ட ஒரு முடிவை சரியேன்று சாதிக்க நினைக்கும் வழியாகவே இருக்கிறது.


குர்ஆனில் சில வசனங்களை காட்டி முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறது பாருங்கள் என்று வரலாறு தெரிந்து கொள்ளாத தெரிந்துக் கொள்ள முயற்சிக்காத பிரிவினைவாத கூட்டத்தினர் தவறான விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் உண்மை என்ன அந்த வசனம் இறங்கிய பிண்ணனி என்ன? என்பதை பார்ப்போம்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை. வகுப்புவாதிகள் பாமர மக்களின் இதயத்தி நஞ்சை விதைக்க திரித்துக் கூறும். இரண்டாம் அத்தியாயத்திலுள்ள் 191 வது வசனம் இது. 

இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும். 

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?

போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும். 

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது. 

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர். எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.

இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:108)
"
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)

தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)

முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்
 போரின் இலக்கணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள்.
இதன் பிறகும் மக்கா வாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சி இருந் தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதித்தான்.
எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் மற்றொரு நாட்டுடன் கடைப்பிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை மேற்கொண்டது.
"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
* வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:190, 9:13)
* சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:191, 22:40)
* போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை! (திருக் குர்ஆன் 2:192)
* அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்! (திருக் குர்ஆன் 4:75, 22:39-40)
* சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 8:61)
* மதத்தைப் பரப்ப போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6)
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.
சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது.
போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 2:190, 9:12,13)
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9).

(நன்றி சகோதரர் பிஜே அவர்களின் தழிழாக்க குர்ஆனிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

Tuesday, March 10, 2015

குடிகார அத்தா சிறு(உண்மை)கதை

காதர் கூலித் தொழிலாளி அன்றாடம் உழைத்து வரும் காசை குடித்து அழிப்பதே பிழைப்பாக கொண்டவர். வல்லு வதக்குனு எதை திண்டாலும் செமிக்கிற10,8 வயதில் இரண்டு மகன்கள்.
வழக்கம் போல கிழிந்த பாயில் மது பாட்டிலை நிற்க வைத்து அதன் கழுத்தை திருகி டம்ளரில் கவிழ்த்தி குடித்து கொண்டிருந்தார். மூத்த மகன் செய்யது பட்டன் இல்லாத டவுசரை முடிச்சுப் போட்டு இடுப்பில் இறுக அணிந்தப் படி நிலைக் கதவு தாழ்ப்பாளை ஆட்டியபடி நின்றவனை கால்ச்சோ நாரங்கியை ஆட்டாதடா குடும்பம் விளங்காது என்று சமையலறையிலிருந்து சப்தமிட்டால் தாய்.
மறுபடியும் தாழ்ப்பாள் ஆட்டும் சவுண்ட ஆடங்காமல் இருக்கவும் சொன்ன கேட்க மாட்டே என்று அடிக்க ஓடிவந்தவள் மகன் குடிப்பதை வேடிக்கைப் பார்ப்பதை பார்த்து விட்டு அங்கே என்ன வேடிக்கை வெளியே போடா என்று இவனையும் உன்னால் பிள்ளைகளும் கேட்டுப் போறாய்ங்க என்று கணவனையும் திட்டிவிட்டு சமையல் அறை நுழைந்தாள்.
தாழ்ப்பாளை ஆட்டுவதை நிறுத்தினான் செய்யது ஆனால் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. இன்னுமா ஆப்பாயில் பொரிக்கிற..... முண்ட என்று பாதி குடிவெறியில் சப்தமிட்டார் காதர். இரு இரு பிள்ளைகளுக்கு இந்த முட்டையும் நீயே தின்று தீர்த்து விடு இந்த வர்றேன் பதில் கொடுத்து கொண்டிருந்தால்.
செய்யது குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான் இளையவன் அபூதாஹிர் வாண்ணே விளையாட போவோம் என்று கிழிந்த டவுசரை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் அப்படியும் அசையவில்லை செய்யது.
மூன்றாவது முறையாக கடைசியாக இருந்த பிராந்தியையும் டம்பளரில் கொட்டிக் கொண்டிருக்கும் போது சன்னல் பக்கமாக செய்யது ஓடி விட்டான் குடித்த பாட்டிலை எறிவதற்கும் அவன் ஓடிச் சென்று பிடிப்பதற்க்கும் சரியாக இருந்தது.
பாட்டி கையில் கிடைத்ததும் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தம்பி அபூதாஹீரை கூப்பிட்டான் வாடா தம்பி பழைய இரும்பு கடையில் பாட்டிலை போட்டுட்டு ரெண்டு ரூபா கொடுப்பாய்ங்க வா மிட்டாய் வாங்கி திங்கலாம்.