Wednesday, July 22, 2015

போதை மன்னனின் பணம் பதாளம் வரை பாய்ந்தது.

பணம் பாதளம் வரை பாயும் என்பார்களே அதற்க்கு சமீபத்திய மிகப் பொருத்தமான உதாரணம் உலகின் போதைப் பொருள் கடத்தல் மன்னன்  ஈ.ஐ. சப்போஸ் (el chapo)
போதைப் பொருள் கடத்தல் உலகின் மன்னன் எல்லாத்துக்கும் லீடரான  ஈ.ஐ. சப்போஸ் el chapo மெக்ஸிகோவின் மிகவும் அதீநவீன பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பித்து மெக்ஸிகோ அரசாங்கத்துக்கே பெரும்தலைகுணிவை ஏற்படுத்தி தலைமறைவாகியிருக்கிறார்.

இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் தண்ணீயா செலவு செய்து தூக்கியிருக்கிறார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம். அது எல்லாம் இவருக்கு ஒரு சுஜூ ஜூப்பி காசு என்கிறார்கள். தங்கத்தில் ஏகே 47 லிருந்து வைரக்கல் புடிகொண்ட துப்பாக்கி என்று வசதியாக வாழ்ந்த மனிதன்

உலகில் உள்ள மிகவும் திறமையான எஞ்சினியர்கள் ,நிலத்தை தோண்டுபவர்கள் , கட்டடம் கட்டுபவர்கள் , என்று பல தொழில் நுட்ப்ப வல்லுனர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள். ஏதோ நாசா விண்வெளிக்கு விண் கலத்தை அனுப்ப திட்டம் தீட்டுவதை விட கடினமான திட்டத்தை தீட்டியுள்ளார்கள் இவர்கள். 
முதலில் மெக்ஸிகோ சிறைச்சாலையான "அல்டிபிளானோ" வுக்கு 1 மைல் தொலைவில் உள்ள ஒரு நிலத்தை வாங்கிய சிலர் , அங்கே ஒரு கட்டடம் கட்டுவதாக திட்டத்தைப் போட்டார்கள். அதற்கு அரசாங்கத்திடம் இருந்து முறையாக அனுமதியும் வாங்கப்பட்டது. அங்கே இருந்து தான் எவரும் சந்தேகப்படாத வகையில் அவர்கள், ஒரு குகை(சுரங்கப் பாதையை) அடியில் கட்டிட வேலை பார்ப்பது போல் தோண்ட  ஆரம்பித்துள்ளார்கள். சுமார் 3,250 டன் எடையுள்ள மண்ணை அவர்கள் வெட்டி எடுத்து வெளியே எடுத்துக் கொட்டியுள்ளார்கள். அதில் கூட எவருக்கும் சந்தேகம் வரவில்லை.
நிலத்திற்கு அடியில் இவர்கள் சுரங்கத்தை தோண்டிக்கொண்டு , சிறைச்சாலையின் கீழ் சென்று. அங்கே உள்ள குளிக்கும் அறையின் அடியில் கொண்டுபோய் அதனை முடித்துள்ளார்கள். குளிக்கும் அறையில் கீழ் சுமார் 23 அடி ஆளத்தில் அந்த சுரங்கம் இருந்துள்ளது. அதாவது தாம் வாங்கிய நிலப்பரப்பில் இருந்து , சிறைச்சாலை வரை சுரங்கத்தை அவர்கள் தோண்டி இருந்தாலும், சிறைச்சாலைக்கு உள்ளே கிண்ட ஆரம்பிக்கும் வேளை நிலத்திற்கு அடியில் நிச்சயம் சத்தம் கேட்க்கும். இதனால் காவலாளிகளில் எவராவது உஷார் ஆகிவிடலாம். இதனால் அவர்கள் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் மெதுவாக ஓசை படாமல் , தோண்ட ஆரம்பித்துள்ளார்கள்.
 இதற்கு ஒரு சில சிறை போலீஸ்காரர்களும் உடந்தையாக இருந்துள்ளார்கள்.அவர்களுக்கு ஏதோ நடக்க இருக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். பிளான் இப்படி போகிறது என்று தெரியவில்லை. 
இது இப்படி இருக்க சுரங்கப் பாதையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றை இறக்கி , அதன் பின்னால் ஒரு சக்கர வண்டியைக் கட்டி , அதில் தான் வேட்டி எடுத்த மண்ணை கட்டி இழுத்து வந்து வெளியே கொட்டியுள்ளார்கள். அது போக இந்த 1 மைல் நீளமான சுரங்கப் பாதையில் , ஆக்சிஜன் குழாய்கள் கூட பொருத்தியுள்ளார்கள். இறுதியாக சிறைச்சாலையில் உள்ள குளியல் அறைக்கு கீழ் தோண்டப்பட்டு, ஒரு ஓட்டையைப் போட்டு அதனை பின்னர் மணலால் மூடியுள்ளார்கள். எந்த திசையில் தோண்ட வேண்டும். அது எங்கே வரை செல்கிறது , என்பது எல்லாம் துல்லியமாக அளக்கப்பட்டு வரை படம் போடப்பட்டுள்ளது. இதன் பின்னரே சிறையில் இருந்த குற்றவாளி ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார்.


குளியலறைவழியாக , உள்ளே இருந்த சுரங்கப் பாதையில் இறங்கி அங்கே தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்று அந்த கட்டடம் கட்டும் இடத்திற்குச் செல்ல , அங்கே அவர் வருகைக்காக காத்திருந்த சிலர் அவரை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் அங்கே இருந்து வெளியேற்றியுள்ளார்கள்.
அந்த பகுதியை சல்லாடை போட்டு தேடிவரும் மெக்சிக்கோ அதிரடிப்படையினர் , இச்செயலை பார்த்து ஆச்சர்யத்தின் உசிக்கே போய் விட்டார்கள். இனி எந்தக் காலத்திலும் சாப்போசை தேடிக் கண்டு பிடிக்கவே முடியாது என்கிறது மெக்ஸிகோ போலீஸ். அவர் நிச்சயம் பாதுகாப்பாக வேறு ஒரு நாட்டுக்கு தனி விமானம் மூலம் அல்லது கப்பலில் சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.
அவரது போதை வஸ்த்து கடத்தல் வலைப் பின்னல் இதுவரை , செயப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 
அவரை கைதுசெய்து பொலிசார் அடைத்தாலும் அவரது நெட்வேர்க்கை முடக்க அவர்களால் முடியவில்லை. உலக நாடுகளுக்கு போதைப் பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியாக மெக்சிக்கோ உள்ளது. இங்குள்ள காடுகளில் தான் கஞ்சா தொடக்கம் அனைத்து போதைப் பொருள் பயிர்களும் விளைகிறது அந்த விளைச்சல் தந்த டாலரில் புரண்டு உருண்டிருக்கிறார்.
காப்பான் (போலீஸ்) பெருசா கள்ளன் (திருடன்) பெருசா எனச் சின்னப்புள்ளையில் பாட்டிமார்கள் கேட்கும் போதெல்லாம் காப்பான் போலீஸ்தான் பெருசு என்று சொல்லிக் கொண்டு இருந்தேன் இனி பாட்டியிடம் கள்ளன் தான் பெரியவன் அதைவிட பணம்தான் பெரியது எனச் சொல்லத் தோன்றுகிறது.

Tuesday, July 21, 2015

விஷம் விதைக்கும் மதவாத அரசியல் வெறுப்பு வணிகர்கள்

ஒரு கட்சியை, கொள்கையை வளர்க்கப் பல வழிகள் உள்ளன. கொள்கைகளைச் சொல்லி அதனால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லி மக்களைத் தம்பக்கம் ஈர்ப்பது ஒரு வழி. இந்த வழிமுறைக்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும்.

மற்றொரு வழி மிக எளிய வழி! ஒரு பொது எதிரியை அடையாளம் காட்டி வெறுப்புப் பிரச்சாரம் செய்து மக்களின் உணர்வுகளைக் கொந்தளிக்கவைத்து அணி திரட்டுவதுதான் அந்த எளிய வழி!

ஐரோப்பாவில் நீண்ட காலமாக யூதர்களை எதிரிகளாகக் காட்டி அரசியல் நடத்தினர். அதன் உச்சக் கட்டமே ஹிட்லரின் யூத விரோதப் போக்கும் படுகொலைகளும். பின்னர் கம்யூனிசத்தைப் பொது எதிரியாகச் சித்திரித்து மக்களுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஊட்டி அரசியல் நடத்தினர்.

இப்போது இஸ்லாத்தைப் பொது எதிரியாகச் சித்திரிக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டில் வகுப்புவாதிகளும், பிராந்திய வெறியர்களும் இதனையே பின்பற்றுகின்றனர். ஒரு மதத்தை, இனத்தை, சமூகத்தைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் பரப்பி, வெறுப்பும் துவேசமும் என்றும் நிலைத்திருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர். 

நல்லிணக்கம் ஏற்பட்டுவிடா வண்ணம் மிகக்கவனமாகக் காரியமாற்றி வருகின்றனர்.
பாஜக தலைமையிலான மத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வெறுப்புப் பிரச்சாரம் வெகுவேகமாக முன்னெடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஏதாவது ஒரு வடிவில், வெவ்வேறு வார்த்தைப் பிரயோகங்களில் வெறுப்பு விதைகள் தூவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

“ஒரு மனிதன் உணவின்றி, நீரின்றி, உறக்க மின்றி வாழலாம். ஆனால் தன்மானத்தை இழந்து வாழ முடியாது. எனவே இந்தத் தேர்தலில் அந்தச் சமூகத்தைப் பழிவாங்கு வோம். தக்க பாடம் கற்பிப்போம்.”

“நமது சமூகப் பெண்களை மயக்கிக் காதலித்து அவர்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்கின்றனர்.” (இதற்கு லவ் ஜிஹாத் எனும் நாமகரணம் சூட்டினர்.)

“நீங்கள் ஒரு பெண்ணை மதம் மாற்றினால் நாங்கள் உங்கள் சமூகத்தில் பத்து பெண்களை மதம் மாற்றுவோம்”

“மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது. அங்கே பச்சைக் கொடி மட்டுமே ஏற்றப்படும். மூவர்ணக் கொடி ஏற்றப்படமாட்டாது”

“உத்திரப்பிரதேசத்தையும் இன்னொரு குஜராத்தாக மாற்ற மோடி முயன்றால், அவரைத் துண்டு துண்டாக வெட்டுவோம்”

“மோடியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் போய்ச் சேரவேண்டிய ஒரே இடம் பாகிஸ்தான்”

தாக்கரேக்கள், அமித்ஷா, பிரவீன் தொகாடியா, இம்ரான் மசூத், சாக்ஷி மகராஜ், யோகி அவைத்யராஜ், ஆஸம்கான், வருண்காந்தி, சுப்பிரமணிய சுவாமி, உவைஸி என்று இவ்வெறுப்புப் பேச்சாளர்களின் பட்டியல் நீளும்.

இது தவிர வதந்திகள் மூலமே வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். நமது சமூகத்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மானபங்கப்படுத்தப்படுகின்றனர். பசுக்கள் கொல்லப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் தீ வைக்கப்படுகின்றன. புனித நூல்கள் எரிக்கப்படுகின்றன, சொத்துகள் அழிக்கப்படுகின்றன என்பன போன்ற வதந்திகளைப் பரப்புவது அல்லது சிறிய சம்பவங்களை மிகைப்படுத்துவது. அல்லது தனிமனித மோதல்களைச் சமூக மோதல்களாக வர்ணிப்பது.

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், முகநூல் வழியாக போலியாகச் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்களோடு ‘ஆதாரப்பூர்வமாக(!)’ செய்திகள் பரப்பப்பட்டு மிகவேகமாக மக்களைச் சென்றடைந்து கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன.

வெறுப்புப் பிரச்சாரத்தின் இரண்டாவது வகை தேர்தல் காலத்தில் மட்டும் என்றில்லாது எப்போதும் செய்யப்படும் நிரந்தரப் பிரச்சாரம்.

‘வரலாற்றுச் சம்பவங்களை வெறியூட்டும்வகையில் எடுத்துச் சொல்லுதல், அவற்றை மிகைப்படுத்துதல், இட்டுக்கட்டிச் சொல்லுதல் என்பன அதில் இருக்கும்.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் எல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். ஆனால் பெரும்பான்மைச் சமூகம் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்டனர்” - இதுபோன்ற பலவகைப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு மக்கள் மனதில் நிரந்தரப் பகை, வெறுப்பு விதைக்கப்படுகின்றது. இவ்வகைப் பிரச்சாரங்கள் கல்விக்கூடங்களிலேயே தொடங்கிவிடுகின்றன. காலம்சென்ற வரலாற்று ஆசிரியர் பிபின் சந்திரா “வகுப்புவாதம் வகுப்பறைகளில் உருவாகிறது” என்றார். இது தவிர பொதுக்கூட்டங்கள், ஊடகம், வகுப்புவாதிகள் நடத்தும் பயிற்சி முகாம்கள், அவர்கள் நடத்தும் கல்விக் கூடங்கள், அவர்கள் வெளியிடும் பிரசுரங்கள்

வாயிலாக வெறுப்புப் பிரச்சாரம் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்த இரண்டுவகைப் பிரச்சாரங்களுமே ஆபத்தானவை. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டிற்கு வேட்டு வைப்பவையாகும். பொதுவாகவே உலகெங்குமுள்ள வகுப்புவாதிகளும் இனவெறியர்களும், மதவெறியர்களும் வெறுப்புவாதத்தையே தமது வலுவான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உண்டாக்கி அவர்களை எதிரிகளாகச் சித்திரித்துவிட்டு, அச்சமூகத்தின்மீது தாக்குதல் தொடுத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீது அனுதாபம் இல்லாமல் போவதுடன், இது அவர்களுக்குத் தேவைதான் என்ற நிலையும் உருவாகிவிடும்.

ஐரோப்பாவில் நீண்டகாலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரமே அவர்கள் பல துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையிலான நாஜிக்கள் இப்பிரச்சாரத்தை மேலும் ஊதிப்பெருக்கினர். இறுதியில் இலட்சக்கணக்கான யூதர்கள் விஷ வாயு
மூலம் கொல்லப்படுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது.
 சமீபத்தில் ரவாண்டாவில் டுட்ஸி (ஜிutsவீ) இனத்தவர் மீது உருவாக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம் அந்த நாட்டின் பல லட்சம் மக்களின் உயிரை வாங்கியது. இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலவி வரும் அமைதியின்மைக்கு வெறுப்புப் பிரச்சாரமே முதல் காரணமாக உள்ளது.

வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் தேசத்தின் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைக் காப்பாற்ற முடியும். பதற்றமும் கலவரமும் நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும். வகுப்புக் கலவரங்கள் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரையே பெற்றுத் தருகின்றது.

உலக மனித உரிமைக் கழகங்கள் வெளியிடும் அறிக்கைகளில் நமது நாட்டில் நடைபெறும் மதக்கலவரங்கள் ஆண்டுதோறும் தவறாது சுட்டிக்காட்டப்படுகின்றன. 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தை அடுத்து வெளிநாடு புறப்படத் தயாராக இருந்த அன்றைய பிரதமர் வாஜ்பாய் “ நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன்” என்றார். ”ஒரிஸ்ஸா மாநிலத்தில் காந்தமாலில் நடைபெற்ற கலவரத்தைக் குறித்து பிரெஞ்சு அதிபர் சர்கோஸி என்னிடம் கேட்டபோது, நான் அவமானத்தால் தலைகுனிந்தேன்” என்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

நமது நாட்டின் கரும்புள்ளியாகத் திகழும் வகுப்பு மோதல்களையும், அதற்கு ஆதார சுருதியாகத் திகழும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் தடுத்து நிறுத்துவது தேசப்பற்றாளர்களின் கடமையாகும். வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடைசெய்யும் சட்ட விதிகள் ஏராளம் உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதி 125கி இந்திய தண்டனைச் சட்ட விதிகள் 153கி, 292, 293 295கி மூலம் இவற்றைத் தடைசெய்ய முடியும். ஆனால் வழக்கம்போலவே இச்சட்ட விதிகள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. தொகாடியா மீது 19 வழக்குகள் உள்ளன. உவைஸி மீது பல வழக்குகள் உள்ளன. இருப்பினும் இவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் தொடரவே செய்கின்றன.

இவ்வழக்குகளுக்காக இவர்கள் தண்டனை பெறுவதில்லை. தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவிக்கும். தேர்தல் பிரச்சாரம் செய்ய சில நாள்களுக்குத் தடைவிதிக்கும். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்பார். அத்தோடு விவகாரம் முடிந்துவிடும். வகுப்புப் பிரச்சாரம் செய்தால் பதற்றம் மேலும் அதிகமாகும் என்பதால் அவரைக் கைது செய்யாமலிருப்பதே மேல் என்று மக்களுக்குச் சொல்லாமல் சொல்லப்படும். சில வேளைகளில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இவை கண்டுகொள்ளாமல் விடப்படும்.

நல்லிணக்கம், அமைதி இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஓர் அரசுக்கு இதனைத் தடைசெய்வது கடினமான செயல் அல்ல. வாக்குவங்கியில் கவனம் செலுத்துவதே இவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதற்குக் காரணமாக அமைகிறது.

வெறுப்புப் பிரச்சாரத்தைச் சட்டத்தின் மூலமாக மட்டுமில்லாமல் உண்மைப் பிரச்சாரத்தின் மூலமாகவும் முறியடிக்கவேண்டும். அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகளுக்குத் தக்க பதில் அளிக்கவேண்டும். “லவ் ஜிஹாத்’ மூலமாக எத்தனைபேர் மதம் மாறினார்கள்?” என்று கேட்டால் அவர்களால் பதிலளிக்க முடியாது. ஆங்காங்கே நடக்கும் ஒன்றிரண்டு சம்பவங்கள் மிகைப்படுத்தப்படும் சதி அம்பலமாகிவிடும்.

பாஜகவின் முக்கியத் தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வியும் ஷா நவாஸ் ஹுஸைனும் மதம் கடந்த திருமணம்தான் புரிந்துள்ளனர் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. வதந்திகளை உடனுக்குடன் முறியடிப்பது அரசு ஊடகங்களின் தலையாயப் பொறுப்பாகும். மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது என்றால் உளவுத்துறை சந்தேகத்தின் பெயரால் கைதுசெய்த பயங்கரவாதிகளில் எத்தனை பேர் மதரஸா மாணவர்கள்? என்று கேள்வி எழுப்பினால் அவர்களால் பதில்தர முடியாது.

முஸ்லிம்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றால் சச்சார் கமிஷன் அறிக்கையில் கல்வி, பொருளாதாரம், நில உடைமை ஆகியவற்றில் முஸ்லிம்கள் தலித்களைவிடப் பின் தங்கி உள்ளதாகக் கூறப்படுகிறதே..! என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.

வெறுப்புப் பிரச்சாரங்களைக் கண்டு உணர்ச்சி வசப்படுவது கூடாது. சட்டத்தின் துணை கொண்டும், அறிவின் துணை கொண்டும் அவற்றை முறியடிக்கவேண்டும். வரலாற்றில் பல தவறுகள் நடந்துள்ளன என்பது உண்மையே! அவற்றை நியாயப்படுத்திப் பேசுவதும் தவறு. வரலாற்றை முன்னிறுத்தித் துவேசத்தை வளர்ப்பதும் தவறு. வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்வது எனப் புறப்பட்டால் எந்த நூற்றாண்டுவரை பின்னோக்கிச் செல்வது? வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று இனி அத்தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வதே நமது கடமையாகும்.

வெறுப்புப் பிரச்சாரங்களைப் பற்றிப் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஆபத்தானது. “வசு தைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்) என்று அமெரிக்காவில் முழங்கும் நமது பிரதமர் அந்தத் தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டும் காணாதிருப்பது ஏனோ? வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசும் பிரதமர் இவற்றிற்கு முட்டுக்கட்டைபோடும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முடிவு கட்டவேண்டும். அப்போதுதான் ‘இந்த நாட்டிற்கு நல்லகாலம் பிறக்கப்போகிறது (அச்சே தின்)’ என்ற அவரது கூற்று உண்மையாகும்.

கட்டுரையாளர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் (நன்றி காலச்சுவடு)

ஆன்ராய்ட் மொபைல் போனில் தமிழில் எழுதுவது எப்படி?

ஆன்ராய்ட் மொபைல் போனில் தமிழில் எழுதுவது எப்படி?(how to write tamil in android phones)  இதுலாம் ஒரு மேட்டரா என்று மிக அறிந்தவர்கள் யாரவது இருந்தால் அப்படியே அப்பீட் ஆகிகங்க இது உங்களுக்கான பதிவல்ல. மாறாக புதிதாக போன் வாங்கி எழுதத் தெரியாமல் முழிக்கும் புதியவர்களுக்காக இப்பதிவு. (அப்பா வெளக்கியாச்சு )

இது கூட தெரியாமல் இருப்பார்களா என்று கேட்காதீர்கள் தினமும் எனது முகநூல் இன்பாக்ஸில் ஒருவராவது வந்து எப்படி தமிழில் எழுதுவது என கேள்வி தொடுக்காமல் இருந்ததில்லை. இனிமே இப்படி கேட்டால் இந்த பதிவின் லிங்கை கொடுத்து விடுவேன். அதனால் மிகவும் எளிமையாக சொல்லிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். சரி பதிவுக்குள் போவோம்.


எல்லாத்தும் முதலில் உங்கள் போனில் இணைய (நெட்) வசதி இருக்க வேண்டும் அபப்டியிருந்தால் முதலில் Play Store போங்க மேலே உள்ள படத்தில் உள்ளது போல்.

அப்புறம் அந்த பூதக் கண்ணாடியை அழுத்தி Selinam என்று எழுதி தேடுங்கள்.


பல தமிழ் கீ போர்டுகள் இருந்தாலும் செல்லினம் நன்றாக இருப்பதால் அதனை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
இப்படி பதிவிறக்கிய பிறகு நேரே போன் செட்டிங் போங்க போயி
Language & input போயி வட்டமிட்டு இருக்கு பாருங்க அங்கு அழுத்துங்கள்.
அப்புறம் இங்கு வட்டமிட்டு உள்ளது ரைட் கொடுத்து விடுங்கள்.
அதற்கு பிறகு Default என்கிற இடத்துக்கு போயி
இப்படி புள்ளி வைத்து விடுங்கள் அவ்வளவுதான் முடிந்தது இனி தமிழில் எழுதலாம் எழுதி கலக்கலாம்.
அப்புறம் இந்த செல்லின தமிழ் மூன்று வகையான கீ போர்டு இருக்கிறது அதில் ஒன்று ஆங்கிலம்.

வட்டமிட்டு இருக்கும் இடத்தில் தமிழ் என்று எழுதியிருந்தால் அது தங்கிலீஷில் ammaa என்று அடித்தால் அம்மா என்று வருகிற தமிழ் தங்கிலீஷ் வழி கீ போர்டு.

இது நேரடி தமிழ் கீ போர்டு நேரடியாகவும் தமிழில் அடிக்கலாம்.

நமது தாய்மொழியான தமிழில் எழுதுவோம் ஏனெனில் நமது தாய்மொழில் எழுதும்போதுதான் உணர்வுபூர்வமான உரையாட முடியும்.

அன்புடன் உங்கள் சகோதரன் வலையுகம் ஹைதர் அலி.

Monday, July 20, 2015

Nick Vujicic : (நிக் வ்யூஜெஷிக்) குறையெதுமில்லை...!

"ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா… எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா? எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு!"

இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. இந்த வார்த்தைகளை நிக், வெறுமனே உதடுகளால் உச்சரிக்கவில்லை. தன் வலி மிகுந்த பிறவியில், வளிமண்டலத்தில் எப்படியேனும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் வழி தேடி, போராடி, உச்சம் தொட்ட பின், உணர்ந்து உச்சரித்தவை.

1982-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி… ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடினாள். நர்ஸ்கள் அவளிடம் விஷயத்தைத் தயக்கத்துடன் சொல்ல, கணவர் போரிஸும் கண்ணீருடன் நிற்க, வெடித்து அழ ஆரம்பித்தாள் துஸிகா. நர்ஸ் ஒருத்தி, துணி சுற்றப்பட்ட குழந்தையை துஸிகாவின் அருகில் கொண்டுவந்து வைத்தாள். குழந்தை அழுதது. துஸிகா கதறினாள். ‘வேண்டாம். இவனை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். நான் இவனைப் பார்க்கவே மாட்டேன். 

Tetra-amelia Syndrome -  புரியும்படி சொல்வது என்றால், இரண்டு கைகள், இரண்டு கால்கள் இல்லாமல் பிறக்கும் குழந்தை. சில சமயங்களில் நுரையீரலோ, இதயமோ, வேறு சில பாகங்களோகூட முழு வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். சில கோடி குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி அரிதாகப் பிறக்கும். அப்படி பிறந்தவன்தான் நிக். பிறக்கும்போதே இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லை. துஸிகாவும் ஒரு நர்ஸ்தான். 100 பிரசவங்களுக்கு மேல் பார்த்தவர். கர்ப்பத்தின்போது இருமுறை ஸ்கேன் பார்த்தபோதுகூட குறையொன்றும் இல்லை என்றுதான் மருத்துவர்கள் சொன்னார்கள். 

‘பொய் சொல்லிவிட்டார்களோ? குறைகளின் மொத்த உருவமாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறதே. கடவுளே, நாங்கள் செய்த பாவம்தான் என்ன?’ – துஸிகாவும் போரிஸும் சிந்திய கண்ணீருக்குப் பதில் சொல்ல யாரும் இல்லை. குழந்தை பிறந்தால், தாய்க்குப் பூங்கொத்துகள் குவியும். துஸிகாவுக்கு ஒரு பூங்கொத்துகூட வரவில்லை. குழந்தை, தூக்கத்தில் சிரித்தது. அந்தக் கணத்தில் மனம் சிலிர்க்க, துஸிகா புரிந்துகொண்டாள். எனக்குப் பிறந்திருப்பதே ஒரு பூங்கொத்துதான்.
கைகள், கால்கள் இல்லாதது தவிர, நிக்குக்கு வேறு எந்த உறுப்புகளிலும் பிரச்னை இல்லை. தவிர, இடது கால் மிகச் சிறிய அளவில் துருத்திக்கொண்டிருந்தது. அதில் இரண்டு விரல்கள் ஒன்று சேர்ந்துகிடந்தன. மருத்துவர்கள் அந்த விரல்களை மட்டும் பிரித்துவிட்டார்கள். பிற்காலத்தில் எதற்காவது அந்த இரு விரல்களும் உதவும் எனப் பெற்றோர் நம்பினார்கள். 

ஏதும் அறியாத வயது வரை நிக்குக்கு எதுவும் பிரச்னையாகத் தெரியவில்லை. மூன்று வயதிலேயே ஸ்கேட்டிங் போர்டில் படுத்துக்கொண்டு நகர ஆரம்பித்தான். தானியங்கி வீல்சேர் ஒன்றைத் தானாக இயக்கவும் கற்றுக்கொண்டான். இரு விரல்கள் உதவின. ஆனால், வெளி உலகம் தெரியத் தெரிய, அவனுக்குப் பிறகு ஒரு தம்பி, தங்கை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க, நிக் விக்கித்து நின்றான். ‘எனக்கு மட்டும் ஏன் கைகள், கால்கள் இல்லை?’ – தங்கள் மகன் அடிக்கடி கேட்க, பெற்றோர் சொன்ன ஒரே பதில், ‘கடவுளிடம் கேள்’!
ஆஸ்திரேலியாவில் உடல், மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகள், இயல்பான குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க, சட்டம் அனுமதிக்காது. ஆகவே, நிக்குக்கும் ‘சிறப்புப் பள்ளி’யில்தான் இடம் கிடைத்தது. துஸிகாவுக்கு மனம் உறுத்தியது. உடலில் சில பாகங்கள் குறைவாக இருக்கிறதே தவிர, நிக் மற்ற குழந்தைகளைப்போல இயல்பானவனே. அவன் ஏன் இங்கே படிக்க வேண்டும்? போராடிப் பார்த்தார். சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே நிக் குடும்பத்தினர், மெல்போர்னில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 

அங்கே நிக் இயல்பான பள்ளியில் படிக்கலாம், மருத்துவ வசதிகள் அதிகம், நெருங்கிய உறவினர்களும் இருக்கிறார்கள் என பல காரணங்கள். ஆனால், அமெரிக்கப் பள்ளிச் சூழலில் நிக்கால் ஒன்றவே முடியவில்லை. ஒவ்வொரு பீரியடுக்கும் வேறு வேறு அறைகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம். இன்னும் பல பிரச்னைகள். நிக், மேலும் சுருங்கிப்போக, பெற்றோர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே பெட்டி கட்டினார்கள். இந்த முறை பிரிஸ்பேன்.
1989-ம் ஆண்டு உடல் குறைபாடு உள்ளவர்களும், இயல்பான குழந்தைகளுக்கான பள்ளிகளில் படிக்கலாம் என ஆஸ்திரேலியாவில் சட்டத் திருத்தம் நிறைவேற, அதன்படி அனைவருக்குமான பள்ளியில் நிக் முதல் மாணவனாக அட்மிஷன் பெற்றான். தங்கை வீல்சேரைத் தள்ளிச் செல்ல, நிக் பள்ளிக்குச் செல்லும் புகைப்படம் செய்தித்தாள்களில் வெளிவர, ஒரே நாளில் பிரபலமும் ஆனான். (1990-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் இளம் குடிமகன் விருது கிடைத்தது.) அப்போது நன்கொடைகள் குவிய, அவை நிக்கின் மருத்துவச் செலவுகளுக்கு உதவின. செயற்கைக் கைகள் பொருத்திப் பார்த்தார்கள். நிக்குக்குச் சரிப்படவில்லை. ‘நான், நானாகவே இருந்துகொள்கிறேன்’ என்றான்.

ஆனால், சமூகம் அப்படி இருக்கவிடவில்லை. ‘விநோத ஜந்து’போல பார்த்தார்கள் அல்லது பரிதாபத்துடன் ‘உச்’ கொட்டினார்கள். எப்போதும் யாருடைய உதவியாவது தேவைப்பட்டது. பள்ளி செல்லப் பிடிக்கவில்லை. ‘பல் துலக்குவது, குளிப்பது, உடை அணிவது… மற்றவர்கள் செய்யும் சாதாரண வேலைகளைக்கூட என்னால் சுயமாகச் செய்ய இயலவில்லை. சாப்பிடுவதுகூட விலங்குகள் போல வாயால் கவ்வி… ச்சே..!’ – நிக் மன அளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டான். ‘இப்படியேதான் வாழ வேண்டுமா? எனக்கு வருங்காலமே கிடையாதா?’ அவநம்பிக்கையும் விரக்தியும் சூழும் கணங்கள் அதிகரித்தன. 10 வயது நிக், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான். ‘அதுவாவது என்னால் முடியுமா?’
ஒருநாள் மதிய வேளையில் துஸிகா, நிக்கைக் குளிப்பாட்ட பாத் டப்பில் வைத்தாள். ‘நான் பார்த்துக்கிறேன். வெளியே கதவைச் சாத்திட்டுப் போம்மா’ என்றான். அம்மா நகர்ந்தாள். நிக், தண்ணீர் நிரம்பிய பாத் டப்பினுள் மூழ்கினான். எதிர்மறை எண்ணங்கள் அவனை அழுத்தின. மூச்சை அடக்காமல் நீரைக் குடித்து உயிரைக் கரைக்கும் முயற்சி. கடைசி நொடிகளை எண்ணினான். 10, 9, 8… எதிர்காலமே இல்லாத இந்த வாழ்க்கையை இன்றோடு முடித்துக்கொள்ளலாம். 7, 6, 5… எல்லா வலிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 4, 3, 2… திடீரென மனக்கண்ணில் ஒரு காட்சி. தந்தையும் தாயும் அவனது கல்லறை முன் நின்று கண்ணீர்விடுவதாக… தம்பியும் தங்கையும் தன் பிரிவால் வாய்விட்டுக் கதறுவதாக. பதறி, திணறி, எகிறி நீருக்கு வெளியே வந்தான். சுவாசம் சீராக, சில நிமிடங்கள் பிடித்தன. கூடவே எண்ணங்களும். குடும்பத்தினர் என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். எப்படி இவர்களைவிட்டுப் பிரிய நினைத்தேன்? நான் சுயநலவாதி.

அன்று இரவு தன் தம்பி ஆரோனிடம் நிக் சொன்னான்… ‘என் 21 வயதில் நான் தற்கொலை செய்துகொள்வேன்!’ ஆரோன் புரியாமல் ‘எதற்கு?’ என்றான். ‘அப்போது நான் படித்து முடித்துவிடுவேன். ஆனால், எனக்கு வேலையோ, கேர்ள் ஃப்ரெண்டோ கிடைக்கப்போவது இல்லை. திருமணம் ஆகப்போவதும் இல்லை. அதன்பின் நான் எதற்காக வாழ வேண்டும்?’ ஆரோன், விஷயத்தை தந்தையிடம் சொன்னான். போரிஸ், மயில் இறகு வார்த்தைகளால் நிக்கின் மனதுக்கு ஒத்தடம் கொடுத்தார். ‘கடவுள் உன்னை பூமிக்கு இப்படி அனுப்பியிருக்கிறார் என்றால், அவரிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. முதலில் அது என்ன எனக் கண்டுபிடி. அதை நிறைவேற்று’ – தந்தையின் வார்த்தைகள் நிக்கை நேர்மறை எண்ணங்களில் நிலைத்து நிற்கச் செய்தன.

தன் உடலில் எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை என உணர்ந்த நிக், தன் இயல்பை 180 டிகிரி மாற்றினான். குடும்பத்தினரும் நிக்கை ‘சாதாரணமானவனாக’ நடத்த ஆரம்பித்தனர். நிக், தன் தம்பி ஆரோனை அதிகம் வேலை வாங்கும் சமயத்தில் அவன் முறைத்தபடியே, ‘இதுக்கு மேல ஏதாவது வேலை சொன்ன, அந்த டேபிள் டிராயர்ல போட்டு அடைச்சு வெச்சுருவேன்’ என்பான். தங்கை மிச்சேல், ‘பசிக்குது, நிக் உன் குட்டிக்கால் சிக்கன் லெக்பீஸ் மாதிரி இருக்குது. அதையே சாப்பிட்டுரவா?’ என்பாள். 

நிக்கின் உறவுக்காரப் பையன்கள் அவனை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்லும்போது, மக்கள் அவனை ஒருமாதிரி பார்த்தால், ‘ஆமா, இவன் வேற்றுக்கிரகவாசி. உங்களுக்கு வேணுமா?’ என கலாட்டா செய்வார்கள். இந்தக் கேலிப் பேச்சுகளுக்கு எல்லாம் நிக் வெடித்துச் சிரிப்பான். தன் வாழ்வின் தீராக் கசப்புச் சுவையை, நகைச்சுவையால் எட்டி உதைக்கக் கற்றுக்கொண்டான். மயக்கமா, கலக்கமா என தலைசுற்றிய பொழுதுகளில், உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப் பார்த்து மீண்டு வந்தான். உடல் குறைபாடுகளைப் புறம் தள்ளி, சிகரம் தொட்ட முன்னோடிகளின் வாழ்க்கைப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தான்.
சக்கி என்பவன், நிக்கின் பள்ளியில் படித்த புஜபல முரட்டு மாணவன். நிக்கிடம் அடிக்கடி  வம்பிழுத்தான். ‘ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?’ என ஒருமுறை அவன் கேட்க, நிக்கும் ஏதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டான். மறுநாள் மதிய இடைவேளையில் மைதானத்தில் மாணவர்கள் குழுமி இருக்க, நிக்கும் சக்கியும் எதிர் எதிரே. நிக்குக்குள் பயம் நிரம்பித் ததும்பியது. ஆசிரியர்கள் யாராவது விஷயம் அறிந்து வந்து சண்டையைத் தடுத்துவிடுவார்கள் என நம்பினான். நடக்கவில்லை. ‘வீல்சேரில் இருந்து இறங்கு’ என்றான் சக்கி. ‘நீயும் முட்டி போட்டுத்தான் மோத வேண்டும்’ என்றான் நிக். சக்கி முட்டி போட்டான். நிக்கை அடித்துப் போட்டான். நிக்குக்கு உடலைப் புரட்டி, முன்நெற்றியை தரையில் பதித்து, அழுத்தி எழுந்து நிற்பதே சிரமமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அடி. நிக், சுருண்டு விழுந்தான். 

‘அய்யோ வேணாம்’ என மாணவிகள் அழ ஆரம்பிக்க, தனக்காக யாரோ சிந்தும் கண்ணீரும், விழுந்த அவமானமும் நிக்கைச் சிலிர்த்தெழச் செய்தன. சிரமப்பட்டு மீண்டும் எழுந்து, தன் உடலைத் தரையில் ஊன்றி, ஓர் ஏவுகணைபோல பாய்ந்து, தன் தலையால் சக்கியின் முகத்தில் கடுமையாக மோதி விழுந்தான். சக்கியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. கூட்டம் ஸ்தம்பித்தது. பின் நிக்குக்காக ஆர்ப்பரித்தது. நிக்கோ பதறி, சக்கியிடம் மன்னிப்பு கேட்டான். சக்கி, அங்கே நிற்க முடியாமல் வெளியேறினான். பின் பள்ளியில் இருந்தும் நிரந்தரமாக!

பயத்தை விழுங்கிவிட்டால் எந்த ஓர் அசாதாரணச் சூழலையும் சமாளிக்கலாம் என நிக்குக்குத் தைரியப் பாடம் கற்றுக்கொடுத்தது காணாமல்போன சக்கியே. அதேபோல லாரா என்கிற பள்ளித்தோழி கேட்ட ஒரு கேள்வி, நிக்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தியது. ‘இப்படி எத்தனை காலம்தான் ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்களையே நம்பி இருப்பாய்?’- தோழியின் கேள்வியால் காயப்படாமல் ‘தான் சுதந்திரமாக இயங்கப் பழக வேண்டும்’ என உணர்ந்தான் நிக். பல் துலக்குவதில் இருந்து, குளிப்பது, கழிவறையை உபயோகிப்பது, உடை அணிவது, முட்டையை உடைத்து ஆம்லெட் போடுவது, இரண்டு விரல்களால் ரிமோட்டை இயக்குவது, கீபோர்டில் டைப் அடிப்பது, குட்டிக் காலை துடுப்பெனச் சுழற்றி நீச்சலடிப்பது என, தினம் தினம் புதிய விஷயங்களை கற்க ஆரம்பித்தான்.
‘அக்கவுன்ட்ஸ் படி. அது உன் வருங்காலத்துக்கு உதவும்’ என்றார் தந்தை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு, டிகிரிக்காக நிக் எடுத்த பாடம் அக்கவுன்ட்ஸ் மற்றும் ஃபைனான்ஸ். ஆனால், அவன் மனதில் வேறு ஒரு லட்சியம் வேர்விட்டு இருந்தது. பள்ளியின் வாட்ச்மேனாக இருந்த அர்னால்டு என்பவர், தான் நடத்தும் இளைஞர்களுக்கான கூட்டங்களில் நிக்கைக் கட்டாயப்படுத்திப் பேசவைத்தார். ‘என்ன பேச மிஸ்டர் அர்னால்டு?’ ‘உன் சொந்தக் கதையைச் சொல். அதைப் போன்ற தன்னம்பிக்கை தரும் விஷயம் வேறு எதுவுமே கிடையாது!’

நிக் தட்டுத்தடுமாறிப் பேச, கிடைத்த பாராட்டுக்கள் அவனை நிமிர்த்தின. ஒருமுறை பள்ளிக்கு வந்து பேசிய அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ரெக்கி, ‘கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது. ஆனால், உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்’ எனச் சொன்னது, நிக்கின் மனதில் நிரந்தரமாகப் பதிந்தது.

‘சிறுவயதில் அதிசயங்கள் நிகழாதா எனக் காத்திருந்தேன். இப்போதுதான் புரிகிறது. நானே ஓர் அதிசயம்தான். இத்தனை குறைகள் கொண்ட இவனே இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக, நம்பிக்கையாக வாழ முடிகிறது என்றால், உனக்கு என்ன குறைச்சல் என, உலகத்துக்குப் புரியவைக்கத்தான் கடவுள் என்னை இப்படி அனுப்பியிருக்கிறார். என்னையே உதாரணமாக்கி, என் பேச்சால் எத்தனையோ பேருக்கு ‘நம்பிக்கை ஆக்ஸிஜன்’ ஏற்ற முடியும்’. நிக், ‘தன்னம்பிக்கைப் பேச்சாளராக’ தன் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள முடிவெடுத்தான்.


வார இறுதிகளில் சர்ச்களில் பிரசங்கம் செய்ய வாய்ப்பு அமைந்தது. ஆனால், தன்னை வெறும் மதபோதகராக அடையாளப்படுத்திக்கொள்ள நிக் விரும்பவில்லை. தன் 17-வது வயதில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதன் நோக்கம் பள்ளிகளில், கல்லூரிகளில், நிறுவனங்களில், வேறு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் சென்று நம்பிக்கை உரையாற்றுவது. நிறுவனத்தின் பெயர் 
Life without Limbs.  பள்ளிகளில் பேச அமைந்த ஆரம்ப வாய்ப்புகள் சொதப்பலாக முடிந்தன. பயத்தில், தொண்டை வறண்டு, வார்த்தைகள் வற்றிப்போயின. பெரிய கூட்டத்தைப் பார்த்தாலே, வியர்த்தது; குரலிலும் நடுக்கம்.


ஆனால், இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது என நிக், ரிவர்ஸ் கியர் தட்டவில்லை. கூட்டங்களின் மத்தியில் ஆங்காங்கே தன் நண்பர்களை உட்காரவைத்தார். அவர்களை மட்டும் பார்த்து நம்பிக்கையுடன் பேசினார். கடுமையான பயிற்சியால் வார்த்தைகளின் நெசவில் மேடைகள் வசமாயின. இருந்தாலும் ஒவ்வொரு மேடையிலும் ஆரம்ப நொடிகளில் பயம் கவ்வியது. முந்தைய பேச்சுக்குக் கிடைத்த கைத்தட்டல்களை நினைத்துக்கொண்டார். பயப்புயல் வலுவிழக்க, சொற்களால் இதயங்களைச் சூறையாட ஆரம்பித்தார்.

டென்த் கிரேடு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் ஒரு வாய்ப்பு. நிக், அங்கு இருந்த மேஜை மேல் நின்று பேச ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்திலேயே மாணவிகள் விசும்ப ஆரம்பித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் கண்ணீரை மறைக்கத் தலைகுனிந்தனர். ‘எல்லோருமே அழகானவர்களே. நான்கூட’ என நிக் சொன்ன நொடியில், ஒரு மாணவி கண்ணீருடன் ஓடிவந்து நிக்கை அணைத்துக்கொண்டாள். ‘நான்கூட அழகுதான் எனப் புரியவைத்ததற்கு நன்றி’ என அவள் நிக் காதில் கிசுகிசுத்தாள். நிக் தன் தோற்றத்தின் வலிமையை, தன் பேச்சின் வீரியத்தை முற்றிலுமாகப் புரிந்துகொண்ட நொடி அது.
டீன் ஏஜ் மாணவர்களின் பிரச்னைகளை முற்றிலுமாகப் புரிந்துவைத்திருந்த நிக், ஆஸ்திரேலியாவில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றத் தொடங்கினார். அந்த 0.99 மீட்டர் உயரம் உள்ள மனிதனைப் பார்த்ததுமே கூட்டம் உறைந்துபோகும். நிக், ‘யாராவது என்னுடன் கைகுலுக்க வருகிறீர்களா?’ எனச் சட்டெனச் சிரித்தபடியே கேட்டு, பார்வையாளர்களை இயல்பாக்குவார். அதற்குப் பின் தன் கடினமான வாழ்க்கையில் இருந்து தேவையான விஷயங்களை நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லச் சொல்ல, கூட்டம் நெக்குருகிப்போகும். அரங்கில் ஆக்ஸிஜனுக்குப் பதிலாக நம்பிக்கை நிறையும். இறுதியில் கண்ணீர் நிறைந்த தழுவல்கள். 2005-ம் ஆண்டு Young Australian of the Year  விருதுக்கு நிக் பரிந்துரைக்கப்பட்டார். விருது கிட்டவில்லை. ஆனால், வெளிநாட்டில் பேசும் வாய்ப்புகள் கிட்ட ஆரம்பித்தன.
உலகம் சுற்ற ஆரம்பித்தார் நிக். ஆரம்பத்தில் அதற்கும் பணத்தட்டுப்பாடு. ஸ்பான்ஸர்கள் கிடைக்கவில்லை. அப்போது நிக் நடித்த ஒரு குறும்படமும் 
(The Butterfly Circus,  சர்வதேச விருதுகளும், நிக்குக்கு சிறந்த நடிகர் விருதும் பெற்றுத் தந்தது. படத்தைக் காண: www.youtube.com/watch?v=p98KAEif3bI) , நிக் பற்றி எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படமும் உலகை ஈர்த்தது.

நிக்குக்கு எட்டுத் திசைகளில் இருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்தன. பல நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு – தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்குச் சென்று பேசினார். பேச்சின் நடுவே, ‘தோல்விகளில் இருந்து மீண்டு எழுவது எப்படி எனச் சொல்கிறேன்’ என அப்படியே கீழே விழுவார். கூட்டம் பதறும். தன் முன் நெற்றியால் உந்தித் தள்ளி மிகவும் பிரயத்தனப்பட்டு எழுவார். 
அரங்கம் சிலிர்க்கும். வெறும் பணத்துக்காக உலகம் சுற்றாமல், தென் அமெரிக்காவின் வறுமையும் வன்முறையும் பீடித்த பகுதிகள், கொடும் சிறைகள், சீனாவின் ஆதரவற்றோர் இல்லங்கள், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி, வேறு பல நாடுகளின் சேரிகள், இயற்கைச் சீரழிவு நிகழ்ந்த பகுதிகள், போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்… என தேடித் தேடிச் சென்று, தன்னம்பிக்கை விதைக்கிறார் நிக். முதல்முறை தென் ஆப்பிரிக்கா சென்றபோது தன் சேமிப்பில் இருந்த 20 ஆயிரம் டாலரை அப்படியே கொடுத்துவிட்டுத் திரும்பினார். இன்னும் பல நல்ல காரியங்களைச் சத்தம் இல்லாமல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
2011-ம் ஆண்டு World Economic Forum சிறப்பு அழைப்பாளராகப் பேசினார் நிக். இன்னும் பல சர்வதேச மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று உலகில் Tetra-amelia  சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களில் டாப்மோஸ்ட் தன்னம்பிக்கைப் பேச்சாளர் நிக். உலகம் எங்கும் தன்னம்பிக்கை நிறைந்த, வலுவான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது நிக்கின் நிரந்தரக் குறிக்கோள். இன்று உலகமே அதிசயித்துப் பார்க்கும் மனிதராக ஜொலிக்கும் நிக், ‘கடவுள் அதிசயம் நிகழ்த்துவார்’ என்ற தனது நம்பிக்கையையும் கைவிடவில்லை. ‘ஆம், நிச்சயம் அதுவும் நடக்கும். எனக்கும் கால்கள் முளைக்கும். அந்த நம்பிக்கையில்தான் ஒரு ஜோடி ஷூ வாங்கி அலமாரியில் பத்திரமாக வைத்திருக்கிறேன்’!
‘வாழ்க்கையில் எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் அமையவே அமையாது’ என்ற கவலைதான், சிறுவயதில் நிக் தற்கொலை முயற்சி செய்ய முக்கியக் காரணம். 2010-ம் ஆண்டு டெக்ஸாஸின் ஓர் இடத்தில் உரையாற்றியபோது அவளைப் பார்த்தார் நிக். கண்டதும் காதல். அன்று மேடையில் வார்த்தைகள் தடுமாறின. அந்தப் பெண்ணின் பெயர் கேனே. அவளை எப்படியாவது காதலித்தே தீர வேண்டும் எனத் தோன்றியது. 
மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வலிய ஏற்படுத்தினார். நேசம் வளர்ந்தது. கொஞ்சம் டேட்டிங். ஒருநாள் கடலின் நடுவில் படகின் முகப்பில் ‘டைட்டானிக்’ ஜாக்கும் ரோஸுமாகத் தழுவி நின்றார்கள். அந்தப் பொழுதில் தன் காதலைச் சொல்லி, வாயால் மோதிரமும் அணிவித்தார் நிக். கேனே மகிழ்ச்சியில் திளைத்தார். ‘சில ஆண்களைப் பார்த்ததும் பாய் ஃப்ரெண்ட் ஆக்கிக்கொள்ளலாம் எனத் தோன்றும். ஆனால் நிக்கைச் சந்தித்த முதல் நொடியிலேயே இவரை கணவர் ஆக்கிக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது’ என்பது கேனேவின் லவ் மொழி. இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 
2013-ம் ஆண்டு பரிபூரண ஆரோக்கியத்துடன் ஓர் ஆண் குழந்தையும் பெற்றுக்கொண்டார்கள். அதற்குப் பின் ஒரு பேட்டியில் நிருபர் ஒருவர் நிக்கிடம் கேட்ட கேள்வி, ‘நீங்கள் எப்படி குழந்தை பெற்றுக்கொண்டீர்கள்… கை, கால்கள் இல்லாமல் எப்படிச் சாத்தியமானது?’ நிக் பட்டெனக் கேட்ட பதில் கேள்வி, ‘குழந்தை பெற்றுக்கொள்ள கை, கால்கள் அவசியமா என்ன?’
நிக்-கேனே     காதல்  கதை: www.youtube.com/watch?v=s3QezBvN1BE
Life without Limits -  இது, நிக்கின் வாழ்க்கை வரலாறு புத்தகம். Limitless, Stand Strong, Love without  Limits ஆகியவை, நிக்கின் பிற புத்தகங்கள். அனைத்துமே விற்பனையில் சாதனை படைப்பவை. தவிர, No Arms, No Legs, No Worries  என்ற நிக்கின் வாழ்க்கையும் தன்னம்பிக்கை உரைகளும் அடங்கிய டி.வி.டி மிகப் பிரபலம். நிக் ஒருமுறை இந்தோனேஷியா சென்றபோது, அங்கு இருந்த நண்பர், நிக்கின் டி.வி.டி., போலி டி.வி.டி-யாக ஒன்றரை லட்சம் காப்பிகளுக்கும் மேல் விற்றுள்ளதாக வருத்தப்பட்டார். நிக் சிரித்தபடியே சொன்ன பதில், ‘நல்ல விஷயம் மக்களிடம் எந்த வழியில் போய்ச் சேர்ந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!’
நன்றி: புகைப்படங்கள் கூகுள் தேடல், மூலக்கட்டுரை விகடன்

Sunday, July 19, 2015

பர்மா ரோஹிங்ய முஸ்லிம்களின் துயர வரலாறு

வலியிலும் வலியானது தாய்மண்ணைப் பிரிந்து அகதிகளாய்ப் புலம்பெயர்வது. ஆக்ரமிப்புப் போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள், இனஅழிப்பு வன் முறைகள் ஆகியவற்றின் காரணமாக உயிர் வாழும் உரிமைக்காகச் சொந்தநாட்டை விட்டு வெளியேறு பவர்கள் அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்.

அகதிகள் குறித்த வரைவிலக்கணம் ஐக்கிய நாட்டுச் சபையால் 1951ஆம் ஆண்டுதான் ஒழுங்குபடுத்தப்பட்டது. இன்று உலகம் முழுக்க சாதிய, இன, மத, மொழிப் பாகுபாடுகள் காரணமாகவும், அரசியல் பழிவாங்கல் மற்றும் யுத்தங்கள் காரணமாகவும் சுமார் ஐந்து கோடி பேர் அகதிகளாக உள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அகதியான பாலஸ்தீன சிறுவன்
பாலஸ்தீன மற்றும் தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் உலகமெங்கும் அகதிகளாய்ப் பரவி உள்ளனர். அவர்களில் கணிசமானோர் குடியேறிய நாடுகளில் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். பல ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் அகதிகள் விஷயத்தைக் கடந்த காலங்களில் மனிதாபிமானத்துடன் அணுகி இருக்கின்றனர். ஆனால் தற்போது தங்களின் உள்நாட்டுஅரசியல், சமூகக் கலாச்சாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இறுக்கமான போக்குகளைக் கடைப்பிடிக்கின்றன.
அகதியான ஈழத் தமிழர்கள்
அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளைக் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ‘மத்திய தரைக்கடல் படுகொலைகள்’ வெளிச்சம் போட்டுக் காண்பித் துள்ளன. லிபியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கிப் புறப்பட்ட அகதிகள் படகை இத்தாலியக் கடற்படை விரட்டியடித்தது. அதன் விளைவாக 700க்கும் மேற்பட்டோர் படகு மூழ்கி உயிரிழந்தனர். உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இன்று அதேபோன்ற படுகொலைகள் இந்தியப் பெருங்கடலிலும் நிகழ்ந்து விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.

பர்மா எனப்படும் மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இனப்படு கொலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறியதும் பெரியதுமாக நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு அஞ்சிப் பல்லாயிரக்கணக்கானோர் அண்டை நாடுகளான பங்களாதேஷுக்கும் தாய்லாந்துக்கும் தப்பி ஓடுகின்றனர்.

ஆனால், இவர்களை ஏற்க மறுக்கும் அந்நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி அவர்களை விரட்டுகின்றன. கடல்வழியாகப் படகுகளில் தப்பி வருபவர்களைத் தங்கள் எல்லைக்குள் நெருங்க விடாமல் தடுக்கின்றன. இதனால் தென்கிழக்காசிய நாடுகளான மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் படகுகளில் திரும்பும் அம்மக்களின் துயரம் கொடுமையானது. ஏற்கனவே அவர்களுக்கு இந்நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்து வருகின்றன என்றாலும், அவர்களைத் தொடர்ந்து அனுமதிக்கத் தயங்குகின்றன. 
இதனால் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா நாடுகளின் கடற்கரைக்கருகே சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் படகுகளில் நடுக்கடலில் தத்தளிக்கின்றனர். உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்நிகழ்வு ரோஹிங்ய முஸ்லிம்களின் வரலாற்றையும் தொடர் துன்பத்தையும் பொது விவாதத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

பர்மாவில் பௌத்தம் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது அடுத்த நிலையில் இஸ்லாம், இந்து, கிறிஸ்துவ மதங்கள் இருக்கின்றன. பர்மாவில் 130க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழ்கின்றன. அங்கு வாழும் ஆறு கோடி மக்களில் பத்து சதவீதம் பேர் முஸ்லிம்களாவர். இவர்கள் அனைவரும் அம்மண்ணின் மைந்தர்களாவர். 1300 ஆண்டுகளுக்கு முன்பே பர்மாவில் இஸ்லாம் பரவியது. பர்மாவுக்கும் பங்களாதேஷ்க்கும் இடைப்பட்ட பகுதியான அராக் காணில்தான் பெருமளவு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். பர்மாவின் மேற்குப்பகுதி மாகாணமான இங்கு வாழும் முஸ்லிம்கள்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் எனப்படுகிறார்கள். கி.பி. 11ஆம் நூற்றாண்டு பாகன் அரசர்கள் காலத்திலேயே ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத வன்முறைகள் முதன்முதலாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

கட்டாயப் பௌத்த வழிபாடுகளுக்கு வற்புறுத்தப் படல், ஹலால் உணவுகளுக்குத் தடை, பெருநாள் பண்டிகைகளுக்குத் தடை, கூட்டுத் தொழுகைகளுக்கு நெருக்கடி, கட்டாய மதமாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அம்மக்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் முடியாத பலவீனமானவர்களாகவே அடிமைப்படுத்தப்பட்டார்கள்.

17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முகலாயப் பேரரசில் உள்நாட்டுப் போர் மூண்டது. ஔரங்கசீப்புக்கு எதிராக அவரது சகோதரர்கள் போரிட்டனர். ஔரங்கசீப்பிடம் தோல்வியடைந்த, அவரது சகோதரர்களில் ஒருவரான ஷுஜாவும் அவரது சிறுபடையினரும் பர்மாவின் அரக்காண் பகுதிக்குள் அகதிகளாக நுழைந்தனர். அவர்கள் அனைவரையும் அரக்காண் பகுதியை ஆண்ட பௌத்த மன்னன் சண்டதுடாமா கொன்று குவித்தான்.

பல நூற்றாண்டுகளாய்ப் பர்மாவின் ராஜபக்ஷேக்களால் அங்குள்ள முஸ்லிம்கள் விவரிக்க முடியாத துன்பங்களை அடைந்தனர். பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின்கீழ் பர்மா வந்தபோது, இந்திய முஸ்லிம்கள் பர்மாவுக்கு வணிக ரீதியான பயணங்களை மேற்கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு சமூக மக்களுடன் தமிழ் முஸ்லிம்களும் அங்கு குடி பெயர்ந்தனர்.
முதல் உலகப்போருக்குப் பின்னால்தான் அதிக மானோர் பர்மாவுக்கு வந்தனர்.
1930களில் தலை நகர் ரங்கூனில் இந்தியர்கள் பெரும்பான்மையினராக மாறினர். வியாபாரங்களும் தொழில்களும் அவர்கள் வசமாயின. ஆங்கிலேயர்களின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பர்மாவில் விடுதலை முழக்கங்கள் வெடித்தன. 1938இல் உருவான ஆங்கிலேய எதிர்ப்புக் கலவரம், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாக மாறியது.

ஆங்கிலேயர் எதிர்ப்பு, இந்தியர் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு என மூன்று முழக்கங்கள் பர்மாவில் எதிரொலித்தன. இதில் முஸ்லிம்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அதில் பர்மாவை பிரிட்டிஷ் இந்தியாவிடமிருந்து பிரித்து தனிநாடாக நிர்வகிப்பது என்றும், பர்மாவில் வாழும் முஸ்லிம்களுக்கு சமஉரிமையும் குடியுரிமையும் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில் இரண்டாவது கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது. அதன் கொடூரங்களைத்தான் இன்று ரோஹிங்ய முஸ்லிம்கள் அனுபவிக் கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் பர்மாவை ஆக்ரமித்தது. அப்போதும் ஜப்பானியர்கள் பௌத்த இனவெறியோடு முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். 1948இல் பர்மா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் அரசுப் படுகொலைகளாக மாறின. ராணுவத்தின் துணைகொண்டு பௌத்த இனவாத இயக்கங்கள் கடந்த 68 ஆண்டுகளாக முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களை நடத்தி வருகின்றன.
 2012ஆம் அண்டு ஐ.நா. பிரதிநிதியாகச் சென்ற யான் கி லீ என்ற பெண்மணி அங்கு முஸ்லிம்கள் படும் இன்னல்களை அறிக்கையாகத் தயாரித்து உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார். அந்த அறிக்கை பர்மாவில் முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து கொத்தடிமைகளாக வாழ்வதாகக் கூறியது. இதனைப் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான ஃபாஸிஸ அமைப்பான ‘969’ இயக்கத்தின் தலைவர் விராது கடுமையாகக் கண்டித்தார். இவரை டைம் பத்திரிகை தோலுரித்து அம்பலப்படுத்தியது. அவருக்கு ஆதரவாகப் பர்மாவின் அதிபர் தெய்ன் செய்ன் குரல் கொடுத்தார். அவரைத் தங்களின் வழிகாட்டி எனப் புகழ்ந்தார். இதன்மூலம் முஸ்லிம் இனப்படுகொலைகளைப் பர்மாவின் அரசும் ராணுவமும் பகிரங்கமாக ஆதரிப்பது தெளிவானது.

இதுவரை பர்மாவிலிருந்து புறஅகதிகளாகப் புறப்பட்ட 12 லட்சம் ரோஹிங்ய முஸ்லிம்கள் பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். முன் எப்போதுமில்லாத அளவில் நடைபெறும் கொடுமைகளால், கூட்டம் கூட்டமாக அகதிகளாக புறப்பட்டு எங்கு செல்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள். இவர்களின் அவலங்களை ‘ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்’ அமைப்பு ‘ALL YOU CAN DO IS PRAY’ என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
பர்மாவின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவும் இந்தியாவும் வேடிக்கை பார்க்கின்றன. பர்மாவின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடிய ஆங்சான் சூகியின் மௌனம் இனப்படுகொலைகளைவிடக் கொடுமையானது. அமெரிக்க அதிபர் ஒபாமா ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் தருகிறது. இதுதொடர்பாக தாய்லாந்தில் கூடிய 17 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பெரும்பான்மையான நாடுகள் பர்மாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது ஆறுதலான விஷயம்.

பௌத்த மக்களின் உலகத் தலைவரான தலாய்லாமா பர்மா அரசின் மதவாதத்தைக் கண்டித்து உரத்த குரல் எழுப்பியிருக்கிறார். அந்த மக்களுக்கு ஆதரவாக உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்று ஆங்சான் சூகியை இரண்டு முறை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
உலக அகதிகள் தினமாக ஜூன் 20ஐ ஐ.நா. சபை கடைப்பிடிக்கிறது. இவ்வாண்டும் அது ஒரு சடங்காகவே கழிந்துவிட்டது. பர்மா, தமிழ் ஈழம், சிரியா, ஏமன் என உலகமெங்கும் சொந்த மண்ணைப் பிரிந்து வாழும் அனைவருக்காகவும் மனிதநேயத்தோடு குரல் கொடுப்போம். கொலையைவிடக் கொடுமையானது அநீதிக்கு எதிரான மௌனம் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.

( மூலக்கட்டுரை நன்றி காலச்சுவடு புகைப் படங்கள் கூகுள் )