Friday, November 30, 2012

உடல் எடையை குறைக்க என்ன வழி...?

ஊதிய உடலை இளைக்க வைப்பது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் ‘உட்கார்ந்து தீனி தின்னாதே; ஓடியாடு; உடற்பயிற்சி செய்’ என்பதாகும். ஆனால் காலம் காலமாக நிலவி வரும் இந்தப் பொன்மொழி இப்போது பொலிவிழந்து வருகிறது என்கிறார், க்ரெட்சென் ரெனால்ட்ஸ்(http://well.blogs.nytimes.com/2009/11/04/phys-ed-why-doesnt-exercise-lead-to-weight-loss/).

கையைக் காலை ஆட்டினால் காலரிகள் எரிந்து அதனால் கொழுப்பு குறையும் என்பது உண்மைதான்; சோபாவில் சரிந்து கிடந்து டி.வி பார்ப்பதை விட, எழுந்து நடக்கும்போது அதிக காலரிகள் செலவாவதும் உண்மை. ஆனால் நிமிடத்துக்கு நாலைந்து காலரிகளைத்தான் இப்படி உதிர்க்க முடியும். எண்பத்தைந்து கிலோ மக்களுக்கு இந்த ரேட் போதாது ! உடல் இளைக்க வேண்டுமென்றால், பட்டர் மசாலா கேட்கும் நாக்கைப் பல்லால் கடித்து அடக்க வேண்டும்; பசித்தால் பச்சை முட்டைக்கோஸைத் தின்று தண்ணீர் குடிக்க வேண்டும்; சுருங்கச் சொன்னால், எடையைக் குறைக்க ஒரே வழி, சற்றேறக் குறைய சாப்பாட்டை நிறுத்துவதுதான் !


கொலராடோ மருத்துவக் கல்லூரியில் செய்த ஓர் ஆராய்ச்சியில் மூன்று விதமான மக்களைப் பிடித்துக்கொண்டு வந்து பரிசோதித்தார்கள். முதல் பிரிவினர், காற்றுப் போல் லேசாகக் காணப்பட்ட பந்தய வீரர்கள். இன்னும் சிலர், உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஒல்லியான உடல் வாகு கொண்ட அதிர்ஷ்டசாலிகள். கடைசி பிரிவினர் கொழு கொழு குண்டர்கள். எல்லோரையும் மாபெரும் காலரி மீட்டர் அறை ஒன்றில் அடைத்து, மனித உடல் தன் கொழுப்புத் திப்பிகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்று ஆராய்ந்தார்கள்.
நமக்கு நடமாட சக்தி தருபவை கார்போ ஹைட்ரேட், கொழுப்பு இவை இரண்டும்தான். பார்ப்பதற்கு ஓமப் பொடி போல் இருப்பவர்களுக்குக் கூட உடலில் கொழுப்பு செல்கள் ஏராளமாக உண்டு. உடலின் ஓடியாடும் தேவைகளுக்கு நேரடியாக இந்தக் கொழுப்பை எரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் தொப்பை கரையும்; இடுப்பும் தொடையும் மெலியும்; பஸ்ஸில் பக்கத்து சீட்காரர் முறைக்க மாட்டார்.
எக்ஸர்ஸைஸ் செய்யும்போது அந்த நேரத்தில் கொஞ்சம் கொழுப்பு உபயோகிக்கப்படுவது உண்மை. ஆனால் உடற்பயிற்சியை முடித்து தினசரிக் கடமைகளுக்குத் திரும்பின பிறகும், உடல் தொடர்ந்து கொழுப்பை எடுத்துக் கொள்கிறதா என்று பார்ப்பதுதான் கொலராடோ பரிசோதனையின் நோக்கம். ஃபிட்னஸ் புத்தகங்களில் இதை ஆஃப்டர் பர்ன் என்பார்கள்.
சோதனையில் கலந்து கொண்டவர்களை முதலில் காலரி மீட்டருக்குள் 24 மணி நேரம் புத்தகம் படித்துக்கொண்டு அமைதியாக உட்காரச் சொன்னார்கள். வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் தினம் மூன்று வேளை தலப்பாக் கட்டு பிரியாணி கொடுக்கப்பட்டது. பிறகு ஒரு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே மிதமான வேகத்தில் சைக்கிள் பெடல் போட வைத்தார்கள். உடற்பயிற்சியை மிதமாகச் செய்யும்போதுதான் கொழுப்புகளை உடல் எடுத்துக்கொள்ளும். தலை தெறிக்க ஓடினால் உடனடி சக்தி தேவைப்படுவதால், கார்போ ஹைட்ரேட்களைத்தான் சீக்கிரமாக ரத்தத்தில் அனுப்பி தசைகளுக்கு சக்தி தர முடியும். எக்ஸர்ஸைச் செய்தால் அன்றைக்கு ஆஃப்டர் பர்ன் நிகழ்கிறதா என்று பார்ப்பதே விஞ்ஞானிகளின் நோக்கம். கொழுப்பு எரிவதை அளவிடுவதற்கு காலரி மீட்டர்.
கொலராடோ பரிசோதனையில், கலந்துகொண்டவர்கள் யாருக்கும் ஆஃப்டர் பர்ன் ஏற்படுவதற்கான அறிகுறியே இல்லை ! சொல்லப் போனால், ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்த அன்றைக்கே அதிகம் கொழுப்பு செலவானதாக சந்தேகம்.
இதன் அடிப்படைச் செய்தி, காலரி சாப்பிட்டால் காலரியை எரித்தே ஆக வேண்டும். அரை மணி நேர உடற்பயிற்சியில் சராசரியாக 200-300 காலரிதான் இழக்க முடியும். டவலால் துடைத்துக்கொண்டு களைப்புத் தீர ஒரு கோக் குடித்தால் அத்தனை காலரியும் திரும்ப வந்துவிடும் !
ஆனால் உடற்பயிற்சியால் பலனே இல்லை என்பதல்ல; கார்டியோ குதிப்புகள் இதயத்துக்கு நல்லது.  எக்ஸர்ஸைஸ் செய்தால் சில பல ஹார்மோன்கள் சுரந்து நம் மூடை உற்சாகமாக்கும். பட்டினியால் குறைத்த எடையை அங்கேயே மெயின்டென்ய்ன் செய்யவும் மிதமான உடற்பயிற்சி உதவும். இதயத் துடிப்பு 105 முதல் 134 வரை இருக்கும்படி செய்யும் எக்ஸர்ஸைஸ்தான் கொழுப்பு கரைக்கும் ரேஞ்ச். ஆனால் மிக முக்கியம், அத்தனை காலரிகளையும் உடனே சாப்பிட்டுத் திரும்ப எடுத்துக் கொண்டுவிடக் கூடாது !
அந்த மசாலா சிப்ஸ் பாக்கெட்டை அப்படியே கொண்டு போய் நாய்க்குப் போடுங்கள்.
பின்குறிப்பு: ஆலோசனை சொன்னா 10,000 ரூபாய் பரிசு. பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னேடுத்தும் செல்லும் "இஸ்லாமிய பெண்மணி" தளம் தற்போது மற்றொரு முயற்சியாக ஒரு மாபெரும் பரிசுப்போட்டியை அறிவித்துள்ளது. கலந்துக் கொள்ளுங்கள் அதனை கான கட்டுரைப் போட்டி இங்கே அழுத்துங்கள்.

Wednesday, November 28, 2012

உங்களுக்கு தெரியுமா சேதி...?


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார்.  ‘ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’

 ‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’

‘அதில்லை...’

 ‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’

 ‘இல்லை’

 ‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’

 ‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம் செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா? என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?

எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர். ‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?’

 ‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத் திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?’

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.(அல்குர்ஆன் 104:1 )

Sunday, November 25, 2012

எறும்பு மூளையின் சிறந்த முடிவு!

‘மனிதன்’ வரிசையை அடுத்துக் கொஞ்சம் பூச்சி பிடிக்கலாம். பூச்சிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முக்கியமாக, கூட்டாகச் சேர்ந்து முடிவுகள் எடுப்பது எப்படி ?
ஒரு எறும்புப் புற்றை எடுத்துக்கொண்டால் சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு சிற்றெறும்புக்கும் ஒரு சிற்றறிவு. கால்   மிமீ. அகலத்தில் மூளை. அதிகமில்லைதான்; ஆனால் புற்றில் வசிக்கும் அத்தனை எறும்புகளும் சேர்ந்து செய்யும் சமுதாயச் செயல்கள் ஆச்சரியமானவை. உதாரணமாக, புற்று சேதமடைந்து விட்டாலோ, ஜனத்தொகை பெருத்துவிட்டாலோ வேறு வீடு தேடவேண்டும். இதை எறும்புகள் எப்படிச் செய்கின்றன என்பதில் ஒரு நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.


எறும்புக் கூட்டத்திற்கும் நம் மூளையின் நியூரான் கூட்டத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. ஒரு ஒற்றை நியூரானுக்கு அதிகம் தகவல் நினைவு கிடையாது. ஆனால் நம்முடைய பத்தாயிரம் கோடி நியூரான்களின் தொகுப்புக்கு எத்தனை விஷயம் தெரிந்திருக்கிறது… என்னுடைய ஒரு நியூரானில் ‘சீ’, மற்றொன்றில் ‘னி’, இன்னொன்றில் ‘வா’ என்றெல்லாம் செய்தி பதிந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் சீனிவாசன் எனக்கு ஐம்பது ரூபாய் தர வேண்டும் என்பது மட்டும் மறக்க முடியாமல் நினைவிருக்கிறது.
அதே போல் ஒரு எறும்புக்கு மூளை சின்னதாக இருந்தாலும் எறும்புக் கூட்டத்துக்கு அறிவு அதிகம். ஒவ்வொரு எறும்பும், ஒவ்வொரு நியூரானும் ஒரு தனித்த பிறவி என்றும் சொல்லலாம்; அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் என்றும் சொல்லலாம். மத்திய கட்டுப்பாடு இல்லாமலேயே கூட்டாகச் சேர்ந்து அவை எடுக்கும் முடிவுகள், ஒற்றை மனம் எடுத்த முடிவுகள் போல ஒருமித்துத் தெளிவாக இருக்கின்றன.
எனவே, நம் மூளையைப் பற்றின ரகசியங்களை அகழ்ந்தெடுக்க விஞ்ஞானிகள் கைக்கொள்ளும் புதிய கருவி - எறும்புப் புற்று! பிரிட்டனின் பயோ விஞ்ஞானிகளும் கம்ப்யூட்டர் வல்லுனர்களும், இப்போது எறும்புகள், நியூரான்கள் இவை கூட்டாகச் சேர்ந்து எப்படி முடிவெடுக்கின்றன என்பதைத்தான் கூட்டாகச் சேர்ந்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
புதுசாகக் கல்யாணமானவர்கள் மட்டுமில்லாது, எறும்புக் கூட்டமும் தீர்மானிக்க வேண்டிய மிகச் சிக்கலான பிரச்னை, புது வீடு தேடுவது. முதலில் ஒரு ஸ்கவுட் படை போய், புற்று கட்டப் பொருத்தமான இடத்தைத் தேடும். தனித் தனியே அவைகள் கொண்டு வரும் சிபாரிசுகள் சபையில் பரிசீலிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு இடத்திற்கு ஓட்டு கிடைத்தால் அந்த இடம்தான் தேர்ந்தெடுக்கப்படும்.
நமது மூளையின் தனித் தனி நியூரான்கள் சேர்ந்து எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றன என்பதும் இதைப் போன்றதே. நம் கண் காணும் காட்சியைப் பற்றி மூளை ஒரு தீர்மானத்துக்கு வருவதை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இதை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள் ஒரு குரங்கைப் பிடித்து வந்து தாஜா செய்து அதன் விஷுவல் கார்ட்டெக்ஸ் என்ற பார்வை உணரும் பகுதியைக் கவனித்தார்கள். கண் முன்னால் கம்ப்யூட்டர் திரையில் பல புள்ளிகள் பல திசைகளில் அலைந்துகொண்டிருக்கும். அதிக பட்ச புள்ளிகள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பதைக் குரங்கு சரியாகக் கணித்தால் ஒரு வாழைப்பழம்.
விஷுவல் கார்ட்டெக்ஸில் உள்ள நியூரான்கள் தனித்தனிப் புள்ளிகளைப் பற்றிய தகவல் துணுக்குகளைப் பெறுகின்றன. அதிகமான புள்ளிகளைச் சேகரித்த நியூரான்கள் உற்சாகமாக நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ரசாயன குண்டுகளைச் சுட ஆரம்பிக்கின்றன. சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்ட நியூரான்களின் வேகம் மெல்ல அதிகரித்து, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுடும் ரேட் அதிகரித்தவுடன் குரங்கு ஒரு முடிவுக்கு வருகிறது.
எனவே, முடிவு எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேற்பட்ட எறும்புகளோ நியூரான்களோ சம்மதம் தர வேண்டும். இந்த threshold - கடவு ரேகையின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். சூழ்நிலையைப் பொருத்து, சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டுமா, அல்லது துல்லியமான முடிவுகள் தேவையா என்பதைப் பொருத்து இந்தக் கடவு ரேகையை முன்னோ பின்னோ தள்ளி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் நாளைக்கு அதே போல் சிந்தித்து முடிவு எடுக்கும் இயந்திரங்களைத் தயாரிக்க முடியும்.
கார்னெல் பல்கலையின் தாமஸ் சீலி, சமுதாயமாகச் சேர்ந்து வாழும் பூச்சியினங்கள் (social insects) என்ற ஐடியாவை மேலும் விரிவு படுத்தி, அரசாங்கங்கள் செயல்படும் விதம் வரையில் கொண்டுபோகலாம் என்கிறார். ‘தேனீக்களின் ஜனநாயகம்’ என்று அவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் அடுத்த வருடம் வெளிவருகிறது.
தேனீக்களிலிருந்து காப்பி அடித்தால் நம்முடைய கூட்டு முடிவுகளும் அரசாங்க நிர்வாகமும் கூட மேம்படும் என்கிறார் சீலி. தேனீயும் எறும்பு போலவே சமுதாயப் பூச்சிதான். பல லட்சம் வருடமாக இந்தப் பூச்சிகள், கூட்டு முடிவுகள் எடுப்பதை வெற்றிகரமாகச் செய்து வருகின்றன. எனவேதான் இந்தக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டன.
தேனீயுடன் ஒப்பிட்டால் பண்டைய கிரீஸ், ஏதென்ஸ் என்று மனித ஜனநாயகத்துக்கு வெறும் 2500 வயதுதான் சொல்லலாம். இன்னும் நாம் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கத் திணறுவதிலும், மைக்கைப் பிடுங்கி அடித்துக் கொள்வதிலும் ஆச்சரியமே இல்லை.
எறும்பும் தேனீயும் நல்ல முடிவுகளை விரைவாக எடுப்பதற்குக் காரணம், அதன் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரும் மிக எளிமையானவர்கள். பரோபகாரிகள். நம்மைப் போல மறைமுக அஜெண்டா, கோஷ்டிப் பூசல் போன்றவை அவற்றுக்குக் கிடையாது. சுயநலம் இல்லாமல் பொது நலம் எது என்பதை மட்டுமே பார்த்து, சரியான தீர்மானத்தை நோக்கி விரைவில் வந்து குவிந்துவிடும்.  நம் ஜனநாயகத்தில், உடனடிப் பிரச்னைகளில் சிக்கி நீண்ட கால முடிவுகள் தாமதமாகின்றன.
நியூரான்களையும் எறும்புகளையும் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது : தனித்தனியாகப் பார்த்தால் இருப்பதிலேயே புத்திசாலிகளை விட அறிவுத் திறன் அதிகம் கொண்ட குழுக்கள் அமைப்பது எப்படி என்பதுதான் அது.  ஆக, எறும்புப் புற்றைக் கவனித்து அரசாங்க இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இரண்டுக்குமே எறும்பு மூளைதான் என்று சொல்ல வருகிறார்களோ ?
Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்

Saturday, November 24, 2012

நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்.பாகம் -2



அடிப்படை பேச்சு பயிற்சி சம்பந்தமான முதல் பாகத்தை இங்கே அழுத்தி வாசித்து விட்டு தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற தொடரில் ஒரு சிறப்பான பேச்சு எப்படி அமைய வேண்டும் என்கிற அடிப்படை விஷயங்களை பார்த்தோம். இந்த பகுதியில் நமது சொற்பொழிவில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

“எனக்கு அவ்வளவு சரியாக தெரியாது”
“ நான் அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன்”
“ எனக்கு தெரிந்தவரை”
“ நான் இப்படி நம்புகிறேன்”
“ ஒருவரும் இல்லை”
“ எப்போழுதும்”
“ ஒரு பொழுதும் கிடையாது”
“ அனைவரும்”

இது போன்ற யூக அடிப்படையான வார்த்தைகளை தேவைப் படாமல், அவசியமின்றி உபயோகிக்க வேண்டாம்.

சொற்பொழிவுக்கான குறிப்புகளின் அவசியம்

நாம் ஒரு சொற்பொழிவை ஆரம்பிக்கும் முன் அதற்கான குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நாம் எழுதி வைத்திருக்கும் அந்த குறிப்புகளிலிருந்து நாம் பேச்சு திசைமாறி சென்று விடக்கூடாது, நாம் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை விட அந்த சமயத்தில் உதித்த வார்த்தைகள் பயன்படுத்துவதால் நமது சொற்பொழிவு சிறப்பாக போகிறது என்று நாம் நினைத்து கொண்டாலும் சரியே. ஏனேன்றால் குறிப்புகளில் இல்லாதவற்றை பேசும்போது இடையில் தடுமாறும் சூழல் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

நாம் கையில் வைத்திருக்கும் குறிப்புகளை அப்படியே வாசித்து காட்டக்கூடாது அதனை உள்வாங்கி பேச வேண்டும் அதே போல குறிப்புகளை சிலர் மறைக்க முயற்சி செய்வார்கள் அதுவும் தவறு.குறிப்புகளை மறைத்து வைத்து குனிந்து குனிந்து வாசிப்பதை பிறர் தெரியா வண்ணம் செய்கிறோம் என நினைத்துக் கொள்ளாதீர்கள் நாம் நிற்பது மேடை பார்வையாளர்களின் கவனம் முழுவதும் உங்கள் மீது தான் இருக்கும். குறிப்புகளை நாம் சிரமம் எடுத்து தயாரித்து இருக்கிறோம் அதை ஏன்? மறைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு இருங்கள். பேசும் போது கைகளை எப்படி அசைக்கிறோம் அதிக்கபடியாக அசைக்கிறோமே என்கிற மன எண்ணங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏற்படும் அதை தவிர்க்க குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

ஒப்புவிக்கும் பேசும் நுட்பங்கள் (Delivery Techniques) முக்கியமானவை

சரியான முறையில் ஒப்புவிக்காமல் சின்னபுள்ளைகள் மனப்பாடம் செய்து ஒப்பிவிக்கிற மாதிரி மூச்சு விடாமல் பேசுவது அழகல்ல மிக சிறந்த குறிப்புகள் கொண்ட பேச்சுகள் இதுபோன்ற தவறான ஒப்புவிக்கும் முறையால் பார்வையாளரின் கவனத்தை பெற முடியாமல் போய்விடும்.

மறுபடியும் நாம் பேசியதை பார்த்து சரிபண்ணிக் கொள்வதற்காக நமது பேச்சை பதிவு செய்து கொள்ளலாம் நமது பேச்சை அசைபோடுவது திரும்ப கேட்பதின் மூலம் நாம் விட்ட குறைகளை அடுத்தமுறை களைய உதவியாக இருக்கும் நமது பேச்சை ஒலியாக பதிந்து கொள்வதின் மூலம் இன்னொரு நன்மையும் இருக்கிறது நம் வளர்ச்சியில் அக்கறையுள்ள நண்பர்களிடம் கொடுத்து அந்த பேச்சு எப்படி இருக்கிறது என்பதற்காக சரியான விமர்சனங்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

உடல் மொழி குரல் மற்றும் பார்வை தொடர்புகள் 

உடல் மொழி (Body language)

இராணுவத்தில் ஆள் எடுக்க நிற்பது போல் இல்லாமல் கால்களை ஓட்டி வைத்து அசையாமல் நின்று பேச வேண்டியதில்லை. அதே சமயத்தில் டேபிளில் சாய்ந்து கொண்டும் ஒருசாய்த்து கொணி நின்று கொண்டும் பேசக்கூடாது. இயல்பாக நின்று பேசினால் போதுமானது பேசும்போது முகபாவங்கள் இயல்பாக இருக்க வேண்டும் செயற்கையாக சிரித்தல் அல்லது கோபப்படுவது போல் நடித்தல் இவைகளை தவிர்க்க வேண்டும் அது இயல்பாக பேச்சின் ஓட்டத்தில் வர வேண்டும். பறவை பறக்க ஆரம்பித்த பின் கால்களை மறந்து விடுவது போல் பேச்சில் நாம் இயல்பாக ஒன்றிட வேண்டும்.

பார்வை மூலம் உள்ள தொடர்புகள்

பேச்சின் போது பார்வைகள் மூலம் ஒரு தொடர்பை கேட்பவருக்கும் நமக்கும் இடையே ஏற்ப்படுத்த வேண்டும். அதே சமயத்தில் கண்ணியம் பேன வேண்டும் எதிர்ப்பால் பெண்களை குறுகுறுவேன்று பார்த்து விடக்கூடாது அது இயல்பாக இருக்க வேண்டும். ஒருவரை மட்டும் பார்த்து பேசக்கூடாது. ஒருவரை நாம் பார்க்கும் போது அவர் நம்மை பார்த்தால் மற்றவரின் மீது பார்வையை திருப்பி விட வேண்டும். தலைக்கு மேல் ஆகாயத்தை பார்த்து பேசுவது தரையை பார்த்து பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நம்முடைய பேச்சுஒலி மட்டும் வெளியில் பரவினால் போதும் என்கிற மனநிலையோடு பேசக்கூடாது.டி.வி. யில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அல்லது பேச்சாளர் நம்மை நோக்கி பேசுவது போல் இருக்கும் அல்லவா அதுபோன்று முயற்சிக்கலாம்.

குரல்


பிறர் கேட்பதற்காகத்தான் பேசுகிறோம் ஒரு சில வார்த்தைகள் வெளியே வந்து மீத வார்த்தைகளை முனுமுனுப்பது போல் மேதுவாக பேசி முழுங்கி விடக்கூடாது. மைக் இல்லையென்றால் அதற்கேற்றவாறு நம் குரல் மட்டத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கு கேட்கிற என்பதை ஒரு கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


சுருதி

சுருதியை சரி பண்ணுவது அவ்வளவு எளிமையான விடயம் அல்ல சரி செய்வதற்கான முதல் படி சுருதி தொடர்பான பிரச்சனைகளை அடையாளம் காண வேண்டும்.அமைதியாக நிதானமாக சொல்ல வேண்டிய விடயத்தை அழுத்தி குரல் மட்டத்தை உயர்த்தி பேசக்கூடாது அதே சமயத்தில் கருத்து அழுத்தம் கொடுத்து சொல்லவேண்டிய சந்தர்ப்பங்களில் சுருதி மிகவும் குறைந்து விடவும் கூடாது குரல் மட்டம் என்பது நம் சொல்ல வருகின்ற கருத்துக்கு ஏற்றவாறு தேவைபடும்.
நாம்ம்பேசுவதை விட விரைவாக மக்களால் கேட்க முடியும் (சராசரியாக நிமிடத்துக்கு 800 சொற்கள் கேட்கலாம்) ஆனால் 250 சொற்களே பேச முடியும்) அதனால் கேட்பதற்கு ஒன்றுமில்லாமல் நீன்ட நேர இடைவெளி விழுந்தால் கேட்பவரது கவனம் சொற்பொழிவிலிருந்து விலகிச் சென்று ஆட்கள் தான் இங்கு உட்காந்து இருப்பார்கள் மனது வெளியே வேறு சிந்தனையில் இருக்கும்  சாதாரணமாக பேசுவதை விட வேகமாக நாம் பேச வேண்டும் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய பேச்சு வேகத்தை நிர்ணயிப்பது கஷ்டம் இருந்தாலும் தெளிவில்லாமலும் உச்சரிப்புச் சொற்களில் தடுமாற்றம் ஏற்படாமல் இயன்றளவு வேகமாக நாம் பேச முயற்சிக்கலாம்.

இடையில் பேச்சை நிறுத்துவது

ஒரு சுவரஸ்யமான விடயத்தை சொல்லும் போது அல்லது சொல்ல வரும்போது இடையில் கொஞ்சம் நிறுத்தி சொல்லும் போது பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை  ஏற்படுத்தும் முக்கியமான ஒரு விடயத்தை அலசிவிட்டு முடிவு சொல்லும் போதும் சிறிது தாமதித்தும் நிறுத்தி சொல்வது சிறந்த பேச்சுக் கலை.
பேச ஆரம்பிக்க தயக்கம் காட்டுவது போலவே பலர் பேச்சை இறுதியில் எப்படி முடிப்பது என்பதிலும் அதிக தடுமாற்றங்கள் ஏற்பட்டு தயக்கத்தோடு நிறைவு செய்கின்றனர்.


பேச்சு வேகம்

திருத்தமாக பேசுவது சிறந்த சொற்பொழிவுக்கு இதயம் போன்றது ஒவ்வொரு சொல்லும் தெளிவாக உச்சரிக்கப்படுவதுடன் “உம்”  “ஹூம்” “வந்து....”  போன்ற சொற்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பேச்சை நிறுத்துதல்

சொற்பொழிவை ஆரம்பிக்கும் போது ஏற்படும் தயக்கம் போலவே சொற்பொழிவு முடிவை நெருங்கும் தருணத்தில் எவ்வாறு முடிப்பது என்பதிலும் பலர் தயக்கம் காட்டுகின்றனர். “நான் இதுவரை கூறியது என்னவேன்றால்...” என்பது போன்ற வசனங்களை திரும்ப திரும்ப சொல்ல முற்படுவார்கள். எனவே நாம் திட்டமிட்டபடியே பேச்சினை வழங்குவதும் “ இறுதியாக” “முடிவாக...” போன்ற சொற்களை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும் இருக்க முயற்சிக்க வேண்டும். வரையறுக்கப் பட்ட தொடக்கமொன்றையும் முடிவொன்றையும் திட்டமிட்டுக் கொள்வதே இதற்குரிய வழிமுறையாகும். இத்தகைய தொடக்கத்திலும் முடிவிலும் நாடகப்பாணிக்குரிய அம்சம் ஏதும் இருப்பதும் உகந்தது.

(இன்னும் தொடரும்)

Friday, November 23, 2012

உடல் உறுப்புகள் விற்பனைக்கு.


ஒரு பக்கம் செயற்கை உயிர், அது இது என்று உதார் விட்டுக்கொண்டு அந்தப் பதினைந்து நிமிஷப் புகழ் மழையில் செயற்கையாக நனைந்துவிட்டு, ஈரம் உலர்ந்தவுடன் மறக்கப்படுகிற விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் மருத்துவ இயலில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் மற்றொரு பக்கம் ஓசைப்படாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக டிஷ்யூ எஞ்சினியரிங் என்ற இயலைச் சொல்லலாம்.
இந்த திசுப் பொறியியல் என்பது நம் உடலின் செல்கள் அழிந்து போனால் மறுபடி புதுப்பித்து வளர்க்கும் கலை. சேதாரமான உடல் உறுப்புகளை மீண்டும் வளரச் செய்வது உட்பட பலவித சாத்தியங்கள் இதில் உள்ளன. டாரிஸ் டெய்லர் என்பவர் ஒரு எலியின் முழு இதயத்தையே மாவடு போல் ஜாடியில் வைத்து வளர்த்திருக்கிறார்.
எலி இதயத்தோடு டாரிஸ் டெய்லர்
உயிரியல் தவிர எஞ்சினியரிங், மருத்துவம், பொருட்களைப் பற்றிப் படிக்கும் மெட்டீரியல் விஞ்ஞானம், பயோ இன்ஃபர்மாடிக்ஸ் என்ற கணினி வேலை என்று பல துறை வல்லுநர்கள் ஒத்துழைத்து இதை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டுக் கம்பெனிகள் ஒவ்வொரு தப்படிக்கும் பேடண்ட் வாங்கிப் பூட்டி வைத்து விடாவிட்டால், இந்த இயல் சீக்கிரமே நன்கு வளர்ந்து பெரிய குழந்தையாகிவிடும்.
டிஷ்யூ எஞ்சினியரிங்கின் உடனடிப் பலன் என்ன? உடலில் ஒரு குருத்தெலும்போ, ரத்தக் குழாயோ, மூத்திரப் பையோ சேதமடைந்துவிட்டால் அந்த இடத்தில் புதிய செல்கள் வளர்த்து ரிப்பேர் செய்துவிடலாம். ஆனால் இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவம், கனம், கடினத் தன்மை கொண்டவை. எனவே திசுக்களை வளர்ப்பது மட்டுமில்லாமல் அவற்றை உயிரியல் லேத் பட்டறையில் கொடுத்து சரியான ஷேப்பில் கடைந்து எடுத்தால்தான் உடலுடன் பொருந்திப் போகும். இங்கேதான் எஞ்சினியரிங் வருகிறது. தேவையான வடிவத்தில் தயாரித்த பாலிமர் வலை, கார்பன் நானோ டியூப்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து அதன் மீது செல் வளர்த்து செயற்கை மூக்கு, காது தயாரிக்க முடியும்.
தற்போது ரீஜெனரேட்டிவ் மெடிஸின் என்று மற்றொரு நதியும் வந்து இதில் இணைந்து கொண்டிருக்கிறது. அவர்களின் ஆயுதம் ஸ்டெம் செல்கள். இந்த ஸ்டெம் செல்கள் என்பவை பச்சைக் களி மண் மாதிரி, ஆதாரமான செல்கள். அவை தேவைக்கேற்றபடி பரிணமித்து இதயம், கிட்னி அல்லது ஈரலாக மாற வல்லவை.
சோதனைச் சாலையில் கண்ணாடித் தட்டில் வைத்து உயிருள்ள செல்களை வளர்க்க முடியும் என்பது, மைக்ராஸ்கோப் கண்டுபிடித்த நாளிலிருந்து தெரிந்த விஷயம்தான். ஆனால் செல்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து எண்ணிக்கையில் பெருகுவது ஒரு சில தடவைகள்தான் நடந்தது. ஹேஃப்ளிக் எல்லை என்பது வரை செல்கள் பிரிந்துவிட்டு அதற்குப் பிறகு சண்டித்தனம் செய்து நின்றுவிடும். க்ரோமசோம்களின் வால் பகுதியில் உள்ள டெலோமியர்கள் படிப்படியாக வெட்டுப்பட்டு சிறுத்துப் போய்விடுவதால் வரும் விளைவு இது. கடைசியாக 1998-ல் ஜெரான் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்த டெலோமியர்கள் சேதமாகாமல் செல்லைப் பிரிப்பது எப்படி என்று கண்டுபிடித்தார்கள்.
டிஷ்யூ எஞ்சினியரிங்கின் அடிப்படைச் செங்கற்கள், செல்கள். ரத்தம், கொழுப்பு போன்ற திரவப் பொருள்களிலிருந்து பம்ப் வைத்துச் சுழற்றி செல்களைப் பிரித்து எடுத்துவிடலாம். தசை நார்கள் போன்று கெட்டிப்பட்டுவிட்ட பாகங்களிலிருந்து தனிப்பட்ட செங்கல்லை உருவ வேண்டுமென்றால், முதலில் அதை என்ஸைம் வைத்துக் கரைத்து அலச வேண்டும். அதிலிருந்து மாதுளம் பழம் மாதிரி செல்களை உதிர்த்துக்கொள்வார்கள்.
சிவில் எஞ்சினியரிங்கில் ஒரு கான்க்ரீட் கட்டடம் கட்டு முன் தேவையான வடிவத்தில் இரும்புக் கம்பியால் ஃப்ரேம் செய்து கொள்கிறார்களே, அதே பொறியியல் இங்கேயும் தேவை. உதாரணமாக, எலும்புகள் ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தில் இருக்கும். அச்சாக அதே மாதிரி எலும்பு செய்து பொருத்தினால்தான் முழங்கையை மடக்க முடியும்.

இதற்காகக் கொலம்பியா பல்கலைக் கழகத்தில், வாயில் பெயர் நுழைய மாட்டாத பேராசிரியை ஒருவர் செயற்கை எலும்புகளை உருவாக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அடிப்படையிலிருந்து ஆரம்பித்து தாடை எலும்புகளை உருவாக்கியிருக்கிறார். இதற்கு உதவியது ஸ்டெம் செல்கள்தான். சண்டை போட்டுத் தாடை உடைவதற்கு முன் இருந்த எக்ஸ்ரே படங்களை கம்ப்யூட்டரில் கொடுத்து அதே மாடலில் ஸ்டெம் செல்களை வார்த்து எடுத்தார்கள்.
சி.டி.ஸ்கான் செய்து ஒரு நல்ல டிஜிட்டல் படம் மட்டும் இருந்துவிட்டால் எத்தகைய சிக்கலான ஷேப்பையும் உருவாக்கிவிடலாம் என்கிறார்கள். முக்கியமாக, உள் காதின் சின்னஞ் சிறிய சொப்பு போன்ற குருத்தெலும்புகள் செவிச் செல்வத்துக்கு அவசியம். இதற்கு டிஷ்யூ எஞ்சினியரிங்தான் ஒரே நம்பிக்கை.
பயோ ரியாக்டர் என்று இட்லிப் பானை போன்ற பாத்திரம் ஒன்றுக்குள்தான் எல்லாம் வெந்து தயாராகிறது. முதலில் ஒரு துண்டு எலும்பை சுத்தம் செய்து கம்ப்யூட்டர் உதவியுடன் அதைச் செதுக்கி வேண்டிய வடிவத்தில் ஒரு ஃப்ரேம் தயார் செய்துகொள்கிறார்கள். பிறகு சரியான அளவில், வடிவில் இருக்கும் அச்சு ஒன்றுக்குள் அதை இறக்குகிறார்கள். இனி இடைவெளிகளை எல்லாம் செல்களைப் போட்டு நிரப்ப வேண்டும்.
அதற்கு எலும்பு மஜ்ஜை அல்லது தொப்பைக் கொழுப்பிலிருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட செல்களை உயிரியல் ஃப்ரேமின் மீது படர விடுகிறார்கள். அவை வளர்வதற்கு உரிய ஹார்மோன்கள், ஆக்ஸிஜன், சர்க்கரை மற்ற சத்துப் பொருட்களை வேளா வேளைக்கு சாப்பிடக் கொடுத்து வந்தால், செல்கள் நாம் இன்னும் தலைவனின் உடலுக்குள்தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இரட்டித்து வளரும். முழுவதும் வளர்ந்தபிறகு ஸ்பேர் பார்ட்டை எடுத்து மனிதனுக்குப் பொருத்த வேண்டியதுதான் பாக்கி.
மிச்சிகனில் மற்றொரு பேராசிரியர் ஹோலிஸ்டர், இட்லிப் பானைக்குப் பதிலாக நம் உடலுக்குள்ளேயே வைத்து செல்களை வளர்க்க முடியுமா என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
மனித உடலிலேயே மிகப் பெரிய பாகம் எது? விடை, நம் தோல்! சிலருக்கு, தீயினாலோ நோயினாலோ தோலின் பெரும் பகுதி சேதாரமாகிவிடுவதுண்டு. முன் காலத்தில் எல்லாம் பேஷண்ட்டை வாழை இலை மீது படுக்க வைத்து மாரியம்மனுக்கு மஞ்சள் காசு முடிந்து வைத்துவிட்டு, பக்கத்தில் உட்கார்ந்து விசிறிக் கொண்டிருப்பது தவிர வேறு வழியே இல்லாமலிருந்தது. இப்போது டிஷ்யூ எஞ்சினியரிங்கில் தோலைத் தனியாக வளர்த்து சீட் கவர் மாதிரி பொருத்தி மூடி விடலாம்.
தோலின் வெளிப் பகுதி மெலனோசைட், லாங்கர்ஹான்ஸ் போன்ற செல்களால் ஆனது. அதற்கு அடியில் கொலாஜன் என்ற நீண்ட இழைகள். (இந்த இழைகளின் அமைப்பைக் கண்டுபிடித்த ராமச்சந்திரன் குழுவினரின் உபயமாக இதற்கு மெட்ராஸ் மாடல் என்று பெயர்!)
செயற்கைத் தோல் வளர்ப்பில் கொலாஜனில் அஸ்திவாரம் போட்டுக்கொண்டு அதன் மேல் தோல் செல்களை விட்டு வளரச் செய்தார்கள். இந்தத் தோல் செல்கள் எடுக்கப்பட்டது, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளின் முக்கியமான பாகத்தின் நுனியிலிருந்து. ஒரு குழந்தையிடமிருந்து எடுக்கப்பட்ட தோலை வைத்துக்கொண்டு நான்கு ஏக்கர் பரப்பளவுக்குப் புதிய தோல் தயாரிக்க முடியும்! தோலை சேமித்து வைக்கும் முறைகள் இன்னும் செம்மைப் படுத்தப்பட்டால் மீட்டர் கணக்கில் செயற்கைத் தோல் தயாரித்து, கோயம்புத்தூரிலிருந்து பேல் பேலாக ஏற்றுமதி செய்யலாம்.
தற்போது செயற்கையாக வளர்க்கப்பட்ட எலும்புகளை நாய், நரிக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில துணிச்சல் மிக்க மனிதர்களும் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வசதி எதிர்காலத்தில் பரவலாக எல்லோருக்கும் கிடைக்கப் போகிறது. ஆபரேஷன் தியேட்டரில் முனியாண்டி விலாஸ் போல “சாருக்கு சூடா ஒரு கிட்னி!” என்று ஆர்டர் கொடுப்பதையும் கேட்கக் கூடும். (அப்புறம் திருட்டு பயமே இருக்காது).
டிஷ்யூவில் காசு இருக்கிறது என்று மோப்பம் பிடித்துவிட்டதால்,  பெய்யெனப் பெய்யும் மழையாய்த் தனியார் முதலீடு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. தினம் ஒரு புதிய கம்பெனி ஆரம்பித்துக் காதும் மூக்கும் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். ரத்தக் குழாய்களின் உள்ளே இருக்கும் லைனிங்கிற்காக மட்டுமே இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கம்பெனிகளும் உண்டு. முக எலும்பு, முதுகெலும்புக்காக மற்றொரு கம்பெனி. கல்லீரல், மண்ணீரல் என்றெல்லாம் பெரிய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்



Thursday, November 22, 2012

ஆசிரியர் அமைவதெல்லாம்...!


நல்ல ஆசிரியர் என்பவர் யார் ? நன்றாகக் கற்பிப்பது எப்படி ? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெளிவாக இல்லை என்கிறார் அமண்டா ரிப்ளி (http://www.theatlantic.com/doc/201001/good-teaching). அதை ‘ஆமாண்டா’ என்று ஆமோதிக்கிறார் ஜனாதிபதி ஒபாமா. அவரும் இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்தவர் என்பதால், உலகில் நல்ல வாத்தியார்கள் கிடைப்பது அரிது என்ற விஷயம் ஒபாமாவுக்குத் தெரிந்திருக்கிறது. அமெரிக்கப் பள்ளி ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக 430 கோடி டாலர் பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறார். சந்தையில் மற்ற எல்லாச் சரக்குகளும் போலவே கல்வியும் தனியார் மயமாகிவிட்ட சூழ்நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் வரலாறு காணாத முயற்சி இது !
வாஷிங்டனில் ஐந்தாம் வகுப்புப் பையன்கள் இரண்டு பேர். இருவரும் ஒரே மாதிரி ஏழைக் குடும்பம். ஒரே மாதிரி கணக்கில் ஃபெயில் மார்க். அதில் ஒரு பையன், மிஸ்டர் டெய்லர் என்ற திறமையான ஆசிரியரின் வகுப்பில் சேர்ந்தான். மற்றவன், ஒரு சாதா பள்ளிக்கூடத்தில் சாதா ஆசிரியரின் வகுப்பில் சேர்ந்தான். வருடக் கடைசியில் இரண்டாமவன் கணக்குப் பாடத்தில் அதே முட்டை வாங்கிக் கொண்டிருக்க, டெய்லரிடம் படித்தவனிடம் அபாரமான முன்னேற்றம். அதற்கு வாத்தியார்தான் முழுக் காரணம். டெய்லரின் வகுப்பில் படித்த அத்தனை பேருமே சராசரியிலிருந்து முன்னேறி, பிரகாசிக்கும் மாணவர்கள் என்ற வரிசையில் சேர்ந்துவிட்டார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் கல்விக்கூட ஆராய்ச்சிகள் பலப் பல செய்யப்பட்டு அத்தனையின் முடிவும் ஒன்றுதான் : நல்ல பள்ளிக்கூடம், நல்ல சூழ்நிலை, முன்னேறிய சிலபஸ், பெற்றோர் வருமானம், மதிய உணவில் முட்டை எல்லாவற்றையும் விட மாணவர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது ஆசிரியர்கள்தான்.
பெற்றோர்கள் எல்லோருமே தத்தம் குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டுமென்றுதான் ராத்திரி நாலு மணிக்குப் போய் விண்ணப்ப கியூவில் நிற்கிறார்கள். பி.எஃப்பில் லோன் போட்டு நன்கொடை கட்டுகிறார்கள். இருந்தும் பள்ளிக் கூடம், பாடத் திட்டம் எல்லாவற்றையும் விட சாக்கட்டித் தூசி படிந்த கையுடன் குழந்தைகளின் எதிரே நிற்பவர்தான் முக்கியம்.
வாஷிங்டன் பரிசோதனையில் கவனிக்கப்பட்ட இரண்டு பையன்களும் இன்னும் நாலைந்து வருடத்துக்குத் தத்தம் ஆசிரியர்களிடம் படித்தால், அவர்களின் வாழ்க்கை நிரந்தரமாக வெவ்வேறு திசைகளில் பிரிந்துவிடும். அவர்கள் ஹைஸ்கூலுக்கு வரும்போது நல்ல ஆசிரியர் - அல்லாத ஆசிரியர்களால் தொடர்ந்து ஏற்பட்ட மொத்த விளைவுகளும், பிறகு என்ன செய்தாலும் மாற்ற முடியாத அளவுக்குப் பெரிதாக இருக்கும்.
இதையே வேறு விதமாகச் சொல்லலாம் : ஏறக் குறைய குப்பத்திலிருந்து வந்த மாணவர்கள் தொடர்ந்து டெய்லர் போன்ற ஆசிரியரிடம் படித்தால், அவர்களுக்கும் நகர்ப்புறத்தின் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கும் அறிவில் திறனில் வித்தியாசமே இருக்காது !
டஃபா (Teach For America) என்ற தன்னார்வ அமைப்பு, பத்து வருடங்களாக லட்சக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர்கள் விடை கண்டு பிடிக்க விரும்பும் கேள்வி - ‘சில ஆசிரியர்களிடம் படித்த மாணவர்கள் மட்டும் வேகமாக முன்னேறிவிடுகிறார்களே, அதன் ரகசியம் என்ன ?’
இந்த அமைப்பு பட்டதாரிகளை இரண்டு வருட காண்ட்ராக்டில் ஆசிரியர் பணியில் அமர்த்தி, பொருளாதார வசதியில் குறைந்த பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறது. பெரும்பாலும் கறுப்பு-அமெரிக்க, லத்தீன்-அமெரிக்கக் குழந்தைகள். கிராமத்தில் நடவு, நாற்று என்றால் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு ஜூட் விட்டுவிடும் ! 5 லட்சம் மாணவர்கள், 7300 ஆசிரியர்களின் ஜாதகத்தையே கம்ப்யூட்டரில் சேகரித்திருக்கிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஆசிரியர் தேர்வு, பயிற்சி ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொண்டு மறுபடி மறுபடி பரிசோதனை செய்கிறார்கள்.
டஃபா ஆரம்பித்த போது, பேச்சுத் திறமை, முன் அனுபவம், கல்லூரிச் சாதனைகள் போன்ற 12 கோணங்களில் அலசி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு டேட்டாவை வைத்துக்கொண்டு பின்னோக்கிப் பார்த்தார்கள். மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்று தெரிய வந்தவர்களுக்கெல்லாம், ஆரம்பத்தில் பொதுவான அம்சங்கள் என்ன இருந்தன ?
முதலாவதாக, விடா முயற்சி. பையன்கள் என் மீது பேப்பர் ராக்கெட் விட்டாலும் சரி, பெஞ்சுக்கு அடியில் குனிந்துகொண்டு பூனை மாதிரி கத்தினாலும் சரி, எது எப்படிப் போனாலும் என் மாணவர்களை முன்னேற்றியே தீருவேன் என்று பல்லை நற நறவென்று கடித்துக்கொண்டு களத்தில் இறங்கும் ஆசிரியர்கள் நல்ல ரிசல்ட் தருகிறார்கள்.
ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் இல்லை, புத்தகம் இல்லை, ஹெட் மாஸ்டர் வண்டை வண்டையாகத் திட்டுகிறார், போர்டில் சாக்கட்டி கீச்சுகிறது என்பது போன்ற எந்தப் பிரச்னையும் அவர்கள் பணியை பாதிப்பதில்லை. எடுத்த வேலையை முடித்து விட்டுத்தான் மறு வேலை.
தங்கள் மாணவர்களுக்கு அவர்கள் பெரிய பெரிய இலக்குகளை நிர்ணயிக்கிறார்கள். வருடம் முழுவதும் என்னென்ன செய்ய வேண்டும், அடுத்த வாரத்துக்கு என்ன பாடம் என்று வித விதமாக அட்டவணை போட்டுக் கொள்கிறார்கள். தினமும் ஏதோ தாங்கள்தான் பரீட்சைக்குப் போவது போல முற்றிலும் தயாரிப்புடன் வகுப்பறையில் நுழைகிறார்கள்.
தாங்கள் செய்வதையும் அதற்குப் பலன் இருந்ததா என்பதையும் சீர்தூக்கிப் பார்த்து அவ்வப்போது தக்கபடி கியரை மாற்றிக் கொள்கிறார்கள்.
‘பொங்கல் செலவெல்லாம் எங்கோ போய்விட்டது’ என்று எப்போதும் மூக்கால் அழும் ஆசிரியர்களைவிட, உற்சாகமே வடிவாக, எப்போதும் பாஸிட்டிவ் ஆக வாழ்க்கையை அணுகும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள். தன் வாழ்க்கையை நினைத்துத் திருப்தியுடன் மலர்ச்சியாக இருப்பவர்களின் உற்சாகம், குழந்தைகளையும் தொத்திக் கொள்கிறது.
தங்கள் கல்லூரிப் படிப்பின்போது கை நிறைய மார்க் வாங்கின ஆசிரியர்களின் பின்னாள் மாணவர்களும் அதே போல் நிறைய மார்க் வாங்குகிறார்கள்.
லீடர்ஷிப் : ஒரு என்.சி.சி அணிக்காவது தலைமை ஏற்று வழி நடத்தின அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், மாணவர்களைச் சரியாகத் திருப்பி ஓட்டிக்கொண்டு போக வல்லவர்களாக இருக்கிறார்கள்.
மற்றபடி பி.எட், எம்.எட் படிப்பெல்லாம் பைசா பிரயோசனமில்லை என்று தெரிவிக்கின்றன டஃபா ஆராய்ச்சிகள். (அடிக்க வராதீர்கள், சொன்னது நான் இல்லை !)
போன வருடம் 35,000 விண்ணப்பங்களைப் பரிசீலித்து 4,100 புதிய ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தது டஃபா. 30 பரிமாணங்களில் அவர்களின் தகுதியை அலசி பாயிண்ட் கொடுக்கிறார்கள். வருடா வருடம் இந்த மதிப்பிடும் முறையைப் பிழை திருத்திக் கூர் தீட்டிக் கொள்கிறார்கள். இண்டர்வியூவின்போது கற்பனை வகுப்புக்குப் பாடம் நடத்தச் சொல்லியும் கவனிப்பார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களைக் கண்காணித்து அவ்வப்போது அவர்களுக்கு உக்கிரமான ட்ரெயினிங். அவர்கள் செய்யும் தப்புக்களையெல்லாம் திருத்தி வெற்றி விகிதத்தை அதிகரிக்க, ஒவ்வொருவருக்கும் அளவெடுத்துத் தைத்தது போல் தனிப்பட்ட பயிற்சி கொடுக்கிறார்கள்.
டஃபாவில் வகுப்புக்குப் போவதற்கு முன்பு நாடக ஒத்திகை போல நன்றாகத் தயார் செய்துகொண்டுதான் போக வேண்டும். எங்கள் தியாகராசன் சார் மாதிரி ட்ரிக்னாமெட்ரி கணக்கைப் பாதியில் சொதப்பி வளைத்து வளைத்து போர்டு பூரா எழுதியும் விடை வராமல் திருதிருவென்று முழித்தால் வேலை போய்விடும் !
அமெரிக்க அரசாங்கம் இத்தகைய ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்துவிட்டுத்தான் ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக Race to the top என்ற ப்ராஜெக்டை ஆரம்பித்து, முன்னே சொன்ன மில்லியன்களை ஒதுக்கியிருக்கிறது. அமெரிக்கா நல்ல காரியங்களுக்காகப் பர்ஸைத் திறப்பது அபூர்வம் என்பதால் இந்தப் பணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒபாமாவுக்கும் டஃபாவில் இருப்பவர்கள்தான் ஆலோசகர்கள். இந்த வருடத்திலிருந்து வாஷிங்டன் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களுக்கும் பரீட்சை. நூற்றில் ஐம்பது மார்க், அவர்களுடைய மாணவர்கள் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. மற்ற ஐம்பது மார்க், வருடம் முழுவதும் அவ்வப்போது வகுப்புக்கு வந்து அமர்ந்து கவனிக்கும் இன்ஸ்பெக்டர்கள் போடும் மார்க்.
இந்த முயற்சிக்கு எதிர்ப்புகளும் அதிகம். ‘மாணவர்கள் வாங்கும் மார்க்குக்கு ஏற்பத்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்’ என்று சொன்னபோது ஆசிரியர் யூனியன்கள் பல்லாலும் நகத்தாலும் எதிர்த்தன. ‘கல்வி பிசினஸ், மாநில அரசுகளின் பிசினஸ். அதில் மத்திய அரசு தலையிடுவதாவது’ என்று ஒரு பக்கம் அரசியல் கலகக் கொடி. இது வரை எதற்கும் அசரவில்லை ஒபாமா. போகப் போக என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும்.
கூலிக்கு மாரடிக்கும் ஆசிரியர்களால் பாழாய்ப் போன வாழ்க்கைகள் எத்தனையோ கோடி. அதே சமயத்தில் எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்னை செதுக்கியவர் இவர்தான் என பெருமையோடு அறிமுகப்படுத்தி மனமகிழ்ச்சியடைந்து நினைவு கூறும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
Reference : http://www.theatlantic.com/doc/201001/good-teaching 
ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்

Wednesday, November 21, 2012

அறிவே ஆயுதம்

பயங்கரவாத நாடான இஸ்ரேல். சுற்றிலும் அரபு நாடுகள் சூழ தனித்து நின்று நான் முரடன், பெரும்ரவுடி, பலம் வாய்ந்தவன் என்பதை நிருபிக்க தனது ஆயுத பலத்தை இக்கட்டுரை எழுதும் இந்நேரத்தில் கூட நிருபித்துக் கொண்டு இருக்கிறது. யூதர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் சுற்றியுள்ள அரபுக்கள் (முஸ்லிம்கள்) ஏன் வலிமை குன்றிப் போயுள்ளனர்? என்பதையும் பார்ப்போம்.

இந்த உலகில் மொத்தம் உள்ள யூதர்களின் எண்ணிக்கை 1.41 கோடி ஆகும்.70 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். 50 இலட்சம் பேர் ஆசியாவிலும், 20 இலட்சம் பேர் ஐரோப்பாவிலும், ஒரு இலட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் வாழ்கின்றனர். இவ்வுலகில் உள்ள யூதருக்கு 100 முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் யூதர்கள் முஸ்லிம்களின் வலிமையை விட நூறு மடங்கு அதிகம் வலிமையுடன் காணப்படுகிறார்களே! இது ஆச்சர்யமாக உள்ளது.

நாசரேத்தில் இயேசு யூதராக இருந்தார். உலகில் எல்லாக் காலங்களிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய, நூற்றாண்டின் சிறந்த மனிதர் என டைம் இதழ் புகழ்கின்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யூதராக இருந்தார். உளவியலின் தந்தை, சிக்மன் ஃபராய்டு ஒரு யூதர். கார்ல் மார்க்ஸ், பால் சாமுவேல்சன், மில்டன் ஃப்ரீட்மேன் ஆகியோர் யூதர்களாக இருந்தனர்.

பெஞ்சமின் ரூபின் மனித குலத்திற்கு மருந்தை உடலுக்குள் செலுத்தும் ஊசியை வழங்கினார் ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பு மருந்தை முதலில் உருவாக்கினார். அலர்ட் ஸாபின் தற்போதுள்ள போலியோ சொட்டு மருந்தை உருவாக்கினார். கொர்ட்ருட் எலியன் லீகேமியா என்ற நோயைப் போக்கும் மருந்தை கண்டுபிடித்தார். பாருச் பிளம்பர்க் ஹெபாடிடிஸ் B தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். பால் எர்லிக் சிஃபிலிஸ் என்ற பாலியல் நோய்க்கு சிகிச்சை அளித்தார். எலீ மெட்ச்நிகாஃப் தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார்.

பெர்னார்டு கட்ஸ் நரம்புத் திசு மாற்ற ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார். ஆண்ட்ரூ ஸ்கேலி ‘ என் டோக்ரினாலஜி’ ஆய்வில் நோபல் பரிசைப் பெற்றார். ஆரோன் பெக் உளவியல் சிகிச்சையை கண்டு பிடித்தவர். கிரிகரி பின்கஸ் மாத்திரையை முதலில் உருவாக்கியவர். வால்ட் என்பவர் கண் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர். ஸ்டேலி கோஹன் கருவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசைப் பெற்றார். வில்லம் கோஃப் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை உருவாக்கினார். இவர்கள் அனைவரும் யூதர்கள் ஆவர்.

கடந்த 105 வருடங்களில் 1.41 கோடி உள்ள யூதர்கள் 180  நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். 140 கோடி உள்ள முஸ்லிம்கள் மூன்று நோபல் பரிசுகளை மட்டுமே வென்றுள்ளனர். (அமைதிக்காகத் தரப்படும் விருதுகள் நீங்கலாக.)

யூதர்கள் ஏன் வலிமையுடன் திகழ்கின்றனர்?  ஸ்டேன்ஸி மெஸார் முதல் மைக்ரோ சிப்பைக் கண்டு  பிடித்தவர். லியோ ஸலார்ட் முதன் முறையாக நியூக்ளியர் சங்கிலித் தொடர்பைக் கண்டுபிடித்தார். பீட்டர் ஸ்கல்ட்ஸ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்; சார்லஸ் அட்லர் - போக்குவரத்து சிக்னல் விளக்கு; பென்னோ ஸ்ட்ராஸ் - ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்; ஐசடோர் கிஸி - ஒலித் திரைப்படங்கள்; எமைல் பெர்லினர் - தொலைபேசி மைக்ரோ ஃபோன்; சார்ல்ஸ் கின்ஸ்பர்க் - வீடியோ ஒளிப்பதிவுக் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்தனர்.

ரால்ஃப் லாரன் (போலோ), லீவிஸ் ஸ்ட்ராஸ் (லீவிஸ் ஜீன்ஸ்), ஹோவர்டு ஸ்கல்ஸ் (ஸ்டார்பக்ஸ்), செர்ஜிபிரின் (கூக்ளி), மைக்கேல் டெல் (டெல் கம்யூட்டர்), லேரி எல்லிசன் (ஓராகள்), டொன்னா கரண் (DKHY),இர்வ் ராப்பின்ஸ் (பாஸ்கின்ஸ் & ராபின்ஸ்), பில்ரோசன்பர்க் (டன்கின் டொனட்ஸ்) ஆகியோர் தொழில் உலகில் முன்னணி முதலீட்டாளர்கள் ஆவர்.

(2006 ல் அதிகாரத்தில் இருந்த யூதர்கள் மட்டும் )ரிச்சர்டு லெவின்,யேல் பல்கலைக்கழகத் தலைவர் ஒரு யூதர். அவரைப் போன்றே  ஹென்ரி கிஸ்ஸிங்கர் (அமெரிக்கா உள்துறைச் செயலாளர்). ஆலன் கிரீன்ஸ் பான், ஜோசப் லிபர்மேன், மெடலின் ஆல்பிரைட் காஸ்பர் வீன்பர்கள், மேக்ஸிம் லிட்வினோவ். டேவிட் மார்ஷல் (சிங்கப்பூரின் முதல் முதலைமைச்சர்), ஐசக் இஸாக்ஸ் (ஆஸ்திரேலிய காவ்ர்னர் ஜெனரல்), பெஞ்சமின் டிஸ்ரேலி, யெவ்ஜனி பிரிமா கோவ் (ரஷ்யப் பிரதமர்), பாரி கோல்டு வாட்டர், ஜார்ஜ் ஸாம்போய் (போர்ச்சுகல் அதிபர்), ஜான் டெட்ஸ் (CIA, இயக்குநர்), ஹெர்ப் கிரே (கனடா துணைப் பிரதமர்), பியர்ரி மென்டஸ் (பிரான்ஸ் பிரதமர்), மைக்கேல் ஹோவர்டு (இங்கிலாந்து உள்துறைச் செயலாளர்), புரூனோ கிரிஸ்கி (ஆஸ்திரிய வேந்தர்), ராபர்ட் ரூபின் (அமெரிக்க நிதிச் செயலாளர்) ஆகியோரும் யூதர்களே.

ஊடகத் துறையில், வோல்ஃப் பிளிட்சர் (CNN), பார்பரா வால்டர்ஸ் (ABC News), யூகின் மேயர் (வாஷிங்டன் போஸ்ட்), ஹென்ரி கிரன்வால்ட் (TIme - எடிட்டர்), காதரின் கிரஹாம் (வாஷிங்டன் போஸ்ட் அதிபர்), ஜோசப் லெலிட் (நியூயார்க் டைம்ஸ் எடிட்டர்), மேக்ஸ் ஃப்ரான்கல் (நியூயார்க் டைம்ஸ்) ஆகிய யூதர்கள் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

உலக வரலாற்றில் இடம் பெற்ற மிகச் சிறந்த ஐரோப்பா கொடையாளரின் பெயரை உங்களால் கூற முடியுமா? அவர்தான் ஜார்ஜ் ஸோரஸ். ஒரு யூதர். இதுவரை அவர் 4 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வாழங்கியுள்ளார். உலகில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த உதவி கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வால்டர் அனன்பர்க் என்ற மற்றோரு யூதர் 2 பில்லியன் டாலர்களை வழங்கி 100 நூலகங்களைக் கட்டியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மார்க் ஸ்பிட்ஸ் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். லென்னி கிரேஸல்பர்க் மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றவர். ஸ்பிட்ஸ், கிரேசில் பர்க் மற்றும் போரிஸ் பெக்கர் ஆகியோர் யுதர்களே.

இந்தப் பூமியில் 1,476,233,470 முஸ்லிம்கள் வழ்கின்றனர். 100 கோடி மக்கள் ஆசியாவிலும் 40 கோடி மக்கள் ஆப்ரிக்காவிலும் 4.4 கோடி பேர் ஐரோப்பாவிலும் 60 லடசம் பேர் அமெரிக்காவிலும் உள்ளனர். ஒவ்வொரு யூதருக்கும் 100 முஸ்லிம்கள் உள்ளனர்.ஆனாலும் பலம் குன்றிப் போயிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

இஸ்லாமிய மாநாட்டு அமைப்பில் (OIC)  57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து 500 பல்கலைக்கழகங்களை மட்டுமே அமைத்துள்ளனர். 30 இலடசம் முஸ்லிம்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் என்ற விகிதத்தில். அமெரிக்கா 5758 பல்கலைக்கழகங்களையும் இந்தியா 8407 பல்கலைக்கழங்களையும் பெற்றுள்ளன.

2004 இல் ஷாங்காய் ஜியோ டான்க் பல்கலைக்கழகம் நடத்திய உலகப் பல்கலைக்கழங்களின் தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடத்தில் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

YNDP தகவல்படி கிறிஸ்தவ நாடுகளில் கல்வியறிவு விகிதம் 90% கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் 15 நாடுகளில் எழுத்தறிவு 100%, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் சராசரி 40% மட்டுமே.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பத்து லட்சம் முஸ்லிமுக்கு 230 விஞ்ஞானிகள் மட்டுமே உள்ளனர். அமெரிக்கா 4000 விஞ்ஞானிகளையும் ஜப்பான் 5000 விஞ்ஞானிகளையும் பெற்றுள்ளது. முழு அரபுலகிலும் முழு நேர ஆராய்ச்சியாளர்களின் மொத்த எண்ணிக்கை 35000 மட்டுமே. முஸ்லிம் நாடுகள் அந்தந்த நாடுகளின்  மொத்த வருமானத்தில் கல்விக்காக 0.2 % மட்டுமே செலவிடுகின்றன. கிறிஸ்தவ நாடுகள் 5% செலவிடுகின்றன.

முஸ்லிம் உலகம் அறிவை உற்பத்தி செய்வதில், பெறுவதில் பின்தங்கி உள்ளதே இதற்கு காரணம்.

1000 மக்களுக்கு எத்தனை நாளிதழ்கள், புத்தகங்கள் உள்ளன என்பதை வைத்து அந்த சமூகத்தின் அறிவை எடை போட முடியும். பாகிஸ்தானில் 1000 மக்களுக்கு 23 நாளிதழ்கள் உள்ளன. சிக்கப்பூரில் 360. UK வில் 10 லட்சம் மக்களுக்கு 2000 புத்தகங்கள், எகிப்தில் 20 மட்டுமே.

முஸ்லிகள் ஏன் வலிமை குன்றி உள்ளனர்? நாம் அறிவை உற்பத்தி செய்யவில்லை.

முஸ்லிம்கள் ஏன் அதிகாரமின்றி உள்ளனர்? நாம் அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்தவில்லை.

முஸ்லிம்கள் ஏன் பலத்தைப் பெறவில்லை? நாம் அறிவை பயன்படுத்தவில்லை.

அறிவு சார்ந்த சமூகத்திற்குத்தான் எதிர்காலம் என்பதை நாம் கவனத்தில் கொண்டு, கல்வி அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் மாற்றத்தை ஏற்படுத்தும். அப்போதுதான் நாம் வலிமையானவர்களாய் திகழ முடியும்.

Monday, November 19, 2012

இஸ்ரேலுக்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை


ஆம்ஸ்டர்டாமில் நடந்த காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் (17.11.12) முன்வரிசையில் கலந்து கொண்ட யூத மதகுரு.

இஸ்ரேல் என்பது யூதர்களின் தாயகம் என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அடைக்க வைக்க பல்வேறு வழிகளில் முயல்கின்றது. மாறுபட்ட அரசியல் கொள்கை காரணமாக, இஸ்ரேலிய அரசினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட யூத மதகுரு ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டு, நெதர்லாந்து வந்து சேர்ந்து, தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கின்றார ஆனால்,  அவரின் மனைவியையும், மகனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து வைத்திருப்பதால், அவர்களை பிரிந்து வர வேண்டிய அவலம் நேர்ந்தது. இன்று வரையில், தனது மனைவியும், மகனும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார். 

Josef Antebi  என்ற யூத மதகுரு, ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த, "காஸா  போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்"  கலந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலாக அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். ஆர்ப்பாட்டத்தில் முன்வரிசையில் நின்ற அவரை படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்தப் படம், பலரைக் கவர்ந்திருந்தது. (அந்தப் புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.) காஸா போர் எதிர்ப்பு பேரணி என்றால், அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லின மக்கள் பங்களித்திருந்தனர். பெருமளவு (இடதுசாரி) டச்சுக் காரர்களும் வந்திருந்தனர். ஆனால், யூதர்கள் அதிலும் மதகுருக்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கேயுள்ள படத்தில் காணப்படும், ஜோசெப் என்ற யூத மதகுரு, வருகிற திங்கட்கிழமை காஸா போகப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு தான், அவரைப் பற்றிய தகவல்கள் பல எனக்குத் தெரிய வந்தன. 

இன்றைய இஸ்ரேலில் வாழும், 90 சதவீதமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தேறிய குடிகள் ஆவர். அன்றைய பிரிட்டிஷ் காலனியான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள், இன்று சொந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ளனர். ஐரோப்பிய யூதர்கள் குடியேறும் வரையில், பாலஸ்தீனத்தில் யூதர்களும், அரேபியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் இனப்பகை சிறு துளியேனும் இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சியோனிசம் என்ற கொள்கை வழி நடந்த தேசியவாத யூதர்கள், பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேறியதால், அவர்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில், "இஸ்ரேல் என்ற தேசத்திற்கான சுதந்திரப் போர்"  என்று அழைக்கப் படலாயிற்று. வந்தேறுகுடிகளான ஐரோப்பிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியரின் நிலங்களை அபகரித்து, குடியேற்றங்களை உருவாக்கினார்கள். நில அபகரிப்பை எதிர்த்த அரேபியரை தாக்கினார்கள். அப்போது அங்கு வாழ்ந்த "பாலஸ்தீன யூதர்கள்", அரேபிய அயலவரின் பக்கம் நின்று போராடினார்கள். 

தற்பொழுது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் யூத மதகுருவான ஜோசெப், ஒரு பாலஸ்தீன யூதராக, பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது வாழ்க்கை கதையை, சுருக்கமாக கூறினார்:
"நான் ஒரு பாலஸ்தீன யூத குடும்பத்தை சேர்ந்தவன். பாலஸ்தீன விவசாயிகளுடன் சமாதானமாக வாழ்ந்து வந்தோம். யூதர்கள் அல்லாத பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச தாக்குதல்களை ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தோம். அதற்காக நான் பெரியதொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற, பாலஸ்தீனத்தில் பிறந்த யூதர்கள், சியோனிசத்தை எதிர்த்து போராடுவதை இஸ்ரேலிய அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்தார்கள். சித்திரவதை செய்தார்கள். கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் எனது மனைவியை இழந்தேன். எனது மகனை பதினெட்டு வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன்.  பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவது எத்தனை வேதனையானது என்பது எனக்குத் தெரியும். பிள்ளையை இழப்பது எந்தளவு வலி எடுக்கும் என்பது எனக்குப் புரியும். அதனால் தான், காஸாவில்  அல்லலுறும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, நான் அங்கே செல்லவிருக்கிறேன்." 

வருகிற திங்கட்கிழமை, ஆம்ஸ்டர்டாமில் இருந்து செல்லும் குழுவில் ஜோசேப்பும்  இடம்பெருகிறார். அந்தக் குழுவினர் முதலில் எகிப்து சென்று, எல்லை கடந்து காஸாவினுள்ளே நுழைய இருக்கின்றனர். இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள காசாவில், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதக் கவசமாக தங்கியிருப்பார்கள்.

கீழேயுள்ள வீடியோவில், யூத மதகுருவான ஜோசெப் சியோனிசத்திற்கு எதிராக போராடுவதற்கான காரணங்களை முன்வைக்கின்றார்: 
இஸ்ரேலில் தடுத்து வைக்கப் பட்டுள்ள மனைவியையும், பிள்ளையையும் இழந்து தவிக்கும் யூத மதகுரு ஜோசெப் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி:

நன்றி: தோழர் கலையரசன் (கலை) http://kalaiy.blogspot.nl/2012/11/blog-post_9997.html


Friday, November 16, 2012

சுட்ட சொல்...!



நீ சுட்டிய சொல்லில்
சுருண்டு போனேன்.

ஒரு தீக்குச்சியின் உரசல்
வெடி மருந்து கிடங்கில்.

விரல் நீண்டது என் பக்கம்
குத்தியது உன் கண்களை

இருபக்க கூர் கொண்ட
கத்தி அச்சொல்

என் கூட படித்தவனே
என் மனதையும் படித்தவனே.

இதுவரை அப்படி
ஒரு சொல் 
சொல்லியதில்லை.நீ

யாரோ சொன்னார்களாம்
அச்சொல்லை சொல்ல

தனியாக சொல்லியிருந்தால்
தவித்து இருக்க மாட்டேன்.

பொதுவில் சொன்னயாடா
போங்க வாங்க என்று.

போலித்தனமான உலகில்
உன் போடா வாடா
என் நிஜ உலகம்
அதை கலைத்து விடாதே

Monday, November 5, 2012

சிவாஜி கணேசன் : ஒரு நடிப்பின் கதை

“ இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலைசிறந்தவர், நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம் : இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்;  அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச் சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும்  சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்துக் கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் செய்யத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.

பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும்  உயர்குடி நாயகனாக, பக்தர்கள் மீது பழமையை நிலை நாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கணவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியை திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் தந்தையாக என்று ஏகப்பட்ட தந்தைகளாக சிவாஜி நடித்தார்; நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழஇயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் - என்று என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.

சிவாஜியும் மிகை நடிப்பும்

அதை மிகை நடிப்பு என்பாரின் விமர்சனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்திலும் அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்குக் குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்குக் காரணம் என்று கூறி விட முடியாது.

மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர்  அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்திவிட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.

தி.மு.க வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது. முதலில் ஜாடிக்கேற்ற மூடி ; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு - அது முற்றத் தொடங்கியது.
‘ பாரசக்தி’ கால சமூகப் பின்னணி

‘பாரசக்தி’ தயாரிப்பாளருக்குப் பண உதவி செய்த எவிஎம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 - இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது.  மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன. அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூகநோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், சின்னப்பா போன்ற நட்சத்திரங்கள்ப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.

கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. கங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான  அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொருபுறம் மொழிவழி மாநிலங்களுக்கான  போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி - இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின்  குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னுறுத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி

இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம் மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு - வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 - களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி 60 - களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் திரை நட்சத்திரமாகி விட்டார்.

அவரது ‘இமேஜு’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்குத் ‘தீனி’ போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள் ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’களுக்கும் இதுவே இலக்கணம். எம்.ஜி.ஆர். ரஜினியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப்பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமல்ஹாசனுக்கு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்டகதையும், வித்தியாசமான மேக் -அப்பும், மணிரத்தினம் - சங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை - தனது நடிப்பாற்றலால் - தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.

இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களில் வெற்றியை வைத்து, வெற்றி பெறும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னது தான் எனத் தமக்குத்தாமே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர். திரையுலகில் திறமையும் - சமூக நோக்கமும் கொண்டவர்கள் நுழைய முடியாமல் இருப்பதும், இருந்தால் ஒழிக்கப்படுவதும் மேற்படி நட்சத்திர முறையின் முக்கிய விளைவுகளாகும். திரையுலகத்தைக் கோடிகளைச் சுருட்டும் மாபெரும் தொழிலாக மாற்றிவிட்ட முதலாளிகளுக்கு இந்த ‘சூப்பர் ஸ்டார்கள்’ நம்பகமான மூலதனமாக இருப்பதால், நட்சத்திரங்களை அவர்களே திட்டமிட்டு உருவாக்கவும் செய்கின்றனர். நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும், குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான - சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க முன் வைத்த தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப்பாசம், மொழி - இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.
சிவாஜி கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும்

சிவாஜி தனது நடிப்புத்திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளைப் பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை -  எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போலவே, அவரும் சமகாலச் சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும், பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், கங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் - உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் - வாழ்க்கையும், இமேஜூம் கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.

ஆகவே சிவாஜி கற்றுக் கொண்டு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாகப் புகை விடுவது, கம்பளி போர்த்திய உடலுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ -நளினமாகவோ நடந்து வருவது போன்ற சாதனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியைப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான் வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.
வீழ்ந்த நடசத்திரம்

சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களை வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதை சரிக்கட்ட சிவாஜியும், எம்ஜிஆரும் 70 -களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். அதன் பின்னர் 80 - களின் துவக்கத்தில் பேரன் - பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீ தேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடனும் ஆடிப்பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது .அதன்பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை’  ‘தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப்பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90 -களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் ‘இளைய தளபதி விஜய்’ ன் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார்.
உயர்ந்த மனிதரின் இறுதிக் காட்சி

இனியும் இந்தக் கட்டுரையை நீட்டினால் மிகையாகி விடும் என்பதால், புகழ்பெற்ற வளர்ப்பு மகன் திருமணக் காட்சியுடன் முடித்து விடுவோம். இத்திருமணத்தின் போது தமிழக மக்களால் வெறுக்கப்படும் முதல் நபராக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தையே கொள்ளையடித்த ஜெயா - சசி கும்பல் தனது டாம்பீகத்தைக் காட்ட நினைத்த இத்திருமணத்தில் சிவாஜிக்குத் தனது பேத்தியைக் கொடுப்பதில் முழுச் சம்மதமில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாயின. சிவாஜி அதை பகிரங்கமாக உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை. தனது நடிப்புச் சாம்ராச்சியத்தில் அடங்கிக் கிடந்த ஒரு நடிகையும், புதுப்பணக்காரியாக உருவெடுத்த நடிகையின் உயிர்த் தோழியும், பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்குச் சமமாக எப்படிச் சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக்கூடும்.

இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் கூடிய அந்த மாபெரும் ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ நிகழ்ச்சியில், தூய வெள்ளை ஆடையுடன், அதிகம் பேசாமல், ஒரு வாய்கூடச் சாப்பிடாமல், சோகத்துடன் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இங்கும் ‘வாழ்ந்து கெட்ட உயர்குடி மனிதராகவே’ காட்சியளித்தார் - நடிக்கும் தேவை ஏற்படவில்லை.

Reference : நூல் :சினிமா திரை விலகும் போது.