Showing posts with label சிறை. Show all posts
Showing posts with label சிறை. Show all posts

Friday, December 7, 2012

18+ எனது மலேசியா சிறை அனுபவம். (மீள்பதிவு)

18+ என்று போட்டவுடன் என்னோவோ ஏதோ என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.  வரதட்சனை எனும் கொடுமையால் என் நண்பன் எப்படி பாதிக்கப் பட்டான் என்பதை விளக்குவதற்காக அந்த 18+ வீடியோவை இணைத்துள்ளேன்.

சரி புத்தக அறிமுகத்திற்கு பிறகு மலேசியாஉண்மை சம்பவத்திற்கு போவோம்.

ஆசிரியர்: 
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து சமுதாயத்தின் நல்லொழக்கத்தைச் சீர்குலைக்கின்ற மாபெரும் தீமையாகத் தலைவிரித்தாடுகின்றது வரதட்சிணை எனும் கொடுமை! முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தத் தீமைகளின் ஆணிவேர் எது? இது எங்கிருந்து முளைத்தது? எப்படிப் பரவியது? அந்த ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிய என்ன வழி? அதைத்தான் இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் கே. வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள். அதுமட்டுமல்ல, வரதட்சிணைக்கு ஆதரவாகப் பேசுவோர் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய பதில்களையும் டாக்டர் அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.

பொற்றோர்,இளைஞர்கள்,இளம்பெண்கள்,சமயச் சொற்பொழிவாளர்கள்,
ஆன்மிகவாதிகள்,சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்புகளையும்
எடுத்துரைத்துள்ளார்.

இந்த புத்தகத்தில் நான் கோடிட்ட ரொம்ப பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

வரதட்சிணை என்பது எந்த உழைப்பும் இல்லாமல் முதலீடு இல்லாமல் ஒரு பெண்ணின் இயலாமையையும் சமூகத் தந்திரங்களையும் பயன்படுத்திப் பெற்ற பணமாகும்.இதுவும் ஒருவகையில் வழிப்பறிக் கொள்ளையே ஆகும்.

கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.வரதட்சிணை வாங்குபவர்களோ பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.வழிப்பறிக்காரர்கள் சில வேளைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் வரதட்சிணை வாங்குபவர்களோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதோடு,சமூகத்தில் அந்தஸ்தோடும் உலா வருகின்றனர். எனவே கொள்ளையர்களை ‘புத்தியற்ற கொள்ளைக்காரர்கள்’என்றும், வரதட்சிணை வாங்குபவர்களை ‘புத்திசாலித்தனமான கொள்ளைக்காரர்கள்’
என்றும் வர்ணிக்கலாம்.

இப்போது என்னுடைய மலேசியா சிறை அனுபவம்.


நீ எப்ப மலேசியா போன' என்று கேட்பவர்களுக்கு.இங்கே அழுத்துங்கள் மலேசியா கள்ளக் குடியேறி என்ற முந்தைய பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.2001ல் மலேசியாவில் கட்டிடட தொழிலாளியாக பர்மீட் இல்லாமல்வேலை பார்க்கும் போது பிடிபட்டு. மலேசியாவின் நெகிரி சிம்பிலான் என்ற ஊரில் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்.
மலேசியாவில் சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான்டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன்.


போலீஸில் பிடிபடும்போது போட்டுயிருக்கிற ஒரே ஒரு துணி தான் இருக்கும்.
சிறையில் எனக்கு முன்னரே பிடிபட்ட 120 மேற்பட்ட தமிழர்கள் இருந்தார்கள்
ஒரு மாத சிறை வாழ்க்கையில் பலரின் சிறைநட்பு கிடைத்தது. அதில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நண்பர் (பெயர் வேண்டாமே). அவரோடு மாப்பிள்ளை, மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது.


சிறையில் முக்கால் வாசி பேர் குளிக்கும் போது ஆடையில்லாமல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள். சிறையில் பாகிஸ்தான், 
இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாங்க மொத்தம் 500 பேர். அதில் உடுத்துன ஆடையோடு குளித்த ஒருசிலரில் நானும், நண்பனும் அடக்கம். அதாவது ஜீன்ஸ் பேண்ட போட்டுகிட்டு குளிக்கிறது. முடிந்த பிறகு சட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட புழிந்துவிட்டு மறுபடிக்கும் போட்டுகிட்டு காய்வதற்காக வெயிலில் நிற்பது.

இப்படி நண்பன் குளித்து விட்டு சட்டையை இடுப்பில் கட்டுவதற்காக முயற்சிக்கும் போது எதார்த்தமாக விலகி அவனுடைய குந்துபுறம் தெரிந்தது. அதில் ஆழமாக மூன்று கரும்கோடுகள் தழும்பு மாதிரி இருந்தது. பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 
'டேய் மாப்ளா என்னடா இது' என்று கேட்டே விட்டேன். அதற்கு அவன் 'சிங்கப்பூர்ல இருந்தேன் மச்சான். அங்கே பர்மீட் இல்லாமல் தங்கி இருக்கிறவங்கள மூன்று
ரோத்த அடி குடுப்பாய்ங்கே. நான் அங்கு பிடிபட்டபோது எனக்கு கிடைத்த அடியின் தழும்பு இது' என்றான்.
                                      சிங்கப்பூரின் தண்டனை ரோத்த அடிப்பது இப்படித்தான்

'நீ சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லையா?' என்று கேலி செய்தேன். அதற்கு பிறகு அவன் சொன்ன பதிலில் கண்கள் உடைந்து அழுதேன். 

'அப்பா கூலித்தொழிலாளி. அன்றாட காச்சி. எனக்கு இரண்டு சகோதரிங்க. ஒன்னுக்கு வயது 30, இன்னொக்கு 32, இரண்டு பேரையும் கட்டிக்கொடுக்க முடியவில்லை. நான் டுரிஸ்ட விசாவில் சிங்கப்பூர் வந்தேன் பாஸ்போர்ட்டை தூக்கி போட்டு விட்டு இரண்டு வருடம் வேலை செய்து சில லட்சங்களை சேர்த்து மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தேன். இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை, இனி ஊருல எதாவது புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக இருந்து பிழைத்துக் கொள்வேன்' என்றான். இன்றும் அவன் நட்பு தொடர்கிறது. 

வரதட்சணையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.

Wednesday, April 4, 2012

அமீர் தீவிரவாதியா....?

அமீர் தனது வாய் பேசமுடியா 
தாயாருடன்
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த முஹம்மது அமீர் என்ற 18 வயது இளைஞரை,டெல்லி போலீஸ் வேன் ஒன்று வழிமறித்துக் கைது செய்தது. அவர் மீது கொலை செய்தல், பயங்கரவாதம், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

1996 டிசம்பர் மாதத்திலிருந்து 1997 அஃக்டோபர் மாதம் வரை டெல்லி, ரோக்தாக்,சோனாபெட்,காஸியாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இவரே மூல காரணம் என்று போலீஸ் அவர் மீது குற்றம் சாட்டியது.இதில் பேருந்துகளில் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளும்,டெல்லி சதார் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும்,பிராண்டியர் மெயிலின் (Frontier Mail) மூன்று கோச்சுகளில் நிகழ்ந்த (காஸியாபாத்தில் வைத்து) குண்டுவெடிப்புச் சம்பவங்களும் அடங்கும்.இந்த இருபது சம்பவங்களிலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். அமீரைக் கைது செய்த போலீசார் அவரைத் திகார் சிறையில் அடைத்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சகீல் என்ற இன்னொருவரும் கைது செய்யப்பட்டார்.விசராணை தொடங்கும் முன்னரே சகீல் பத்து வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிற வழக்குகளுக்காகச் சிறையில் இருந்த அவர் 20009 ஆம் ஆண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் அந்த நபரின் கதை முடித்து வைக்கப்பட்டது.

அமீர் 14 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு.2012 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த இருபது வழக்குகளில் 18 வழக்குகளின் அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லையென்றும், எந்த விதமான சாட்சிகளோ, ஆவணங்களோ இல்லாமல் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் கூறி ‘விசராணை நீதி மன்றம்’ அமீரை விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று வழக்குகளில் மட்டும்(அது ஏன் மூன்று வழக்குகளில் மட்டும்?) போலீஸார்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதி மன்றம் “குற்றத்தை நீரூபிப்பது இருக்கட்டும். எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் போலீஸார் அமீர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று தீர்ப்பளித்தது.

அமீரின் வழக்கறிஞரான திரு.என்.டி. பஞ்சோலியா இது பற்றிக் கூறும் போது “எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்,18 வயதான இளைஞர் இருபது இடங்களில் குண்டுகள் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது” என்கிறார்.

தனது 18 வது வயதில் கைது செய்யப்பட்ட அமீர் 14 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் சிறை வாசம் அனுபவித்து விட்டு 33 வது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்க்கையின் வசந்தகாலம் முழுவதையும் அவர் சிறையில் கழித்துள்ளார். தனது மகனைச் சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே கொண்டு வரமுடியாமல்,அமீரின் தகப்பனார் மனமுடைந்து இறந்து போனார் அவரது தாயார் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்து விட்டார்.அவரின் குடும்பமே நிர்மூலமாகிப் போயுள்ளது.

போலீஸ் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் அமீரைத் தொடர்புபடுத்தி பொய்யான வழக்குகள் தொடுத்த கதை இன்னும் வேதனையானது. பாகிஸ்தானில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக அமீர் அந்நாட்டுக்கு ஒரு முறை சென்று வந்துள்ளார்.12.2.1997 இல் பாகிஸ்தான் சென்ற அவர் 13.2.1998 அன்று அங்கிருந்து நாடு திரும்பினார்.

பாகிஸ்தான் செல்லுமுன்,விசா பெறுவதற்காக, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனர் அலுவலகத்திற்கு அவர் சென்றிருந்தபோது, வெளியில் நின்று கொண்டிருந்த இந்திய உளவுப் பிரிவைச் சார்ந்த இரண்டு பேர்,அவரைச் சந்தித்து பாகிஸ்தானிலிருந்து சில ஆவனங்களைக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். உளவுத்துறையினர் கொடுப்பதாக வாக்களித்த சிறு தொகைக்கு ஆசைப்பட்டு, அமீரும் அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் வாக்களித்தபடி அவரால் ஆவணங்கள் கொண்டுவர இயலவில்லை. இத்தகவல்களை உளவுத்துறையினரிடமிருந்து தெரிந்துக் கொண்ட டெல்லி போலீஸார் அவரை இந்தக் குண்டுவெடிப்புச் சமபவங்களுடன் தொடர்புப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது சகோதரியைப் பார்ப்பதற்காகப் பாகிஸ்தான் சென்ற அவரை,அங்கு சென்று பயிற்சி பெற்று வந்தாகக் கதை கட்டினர்.

18 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அமீரின் மீது இன்னும் இரண்டு வழக்குகளே நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீருபணம் ஆனால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனையே கிடைக்கும். ஆனால், அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்து விட்டது.

தன்னை சந்திக்க வருபவர்களிடம் அமீர் கேட்கும் கேள்வி இதுதான் : “நான் செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டேன். ஹாஸிம்புராவில் பல முஸ்லிம்களைக் கொன்று குவித்த போலீஸ்காரர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு ஏன் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை?” அமீர் மட்டுமல்ல, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வியும் இதுதான்.

நன்றி : 7.2.2012 ‘ஹிந்து ஆங்கில நாளிதழ்
நன்றி : சேயன் இப்ராஹிம்
நன்றி : சமரசம்