Showing posts with label கிறிஸ்தவம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவம். Show all posts

Monday, August 3, 2015

அவர்கள் குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும் : யூத அறிஞர் (ரப்பி) மெனாகம் ஃபுரோமன்

“அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும்” - இது இஸ்ரேல் நாட்டில் புகழ்பெற்ற  ஆர்த்தோடாக்ஸ் மதருகுருவான ( Rabbi Menachem Froman) ரப்பி மெனாகம் ஃபுரோமனின் அறிவுரை. அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை பார்த்துதான் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். இஸ்லாத்தின் ஆதார நூல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால்தான் அந்தத் துறை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை வெளியீட்டு வருகிறது என்பதே ஃபுரோமனின் கருத்து.
இதற்க்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அந்த அதிகாரிகள் குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுமுறை எடுத்து குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும். இஸ்லாம் மாபெரும் ஆன்மீகக் கடல் என்பதையும் அதிலிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதையும் அப்போது அவர்கள் விளங்கிக் கொள்வார்.

மேற்கத்தியர்களும் யூதர்களும் முஸ்லிம்களிடம் அவமரியாதையுடன் நடந்து கொள்வதே பிரச்சனைக்குக் காரணம். ஆணவத்தின் மொழியில் அவர்கள் பேசுகின்றனர். அவர்கள் அமைதியை விரும்பினால் முஸ்லிம்களை நெருங்கிச் சென்று அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஃபுரோமன்.
ரஷ்ய வார இதழான ‘எக்ஸ்பெர்ட்டு’க்கு அளித்த நேர்காணலில் 63 வயதான ஃபுரோமன் தனது கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டுள்ளார். இவர் பலமுறை முன்பு யாசிர் அரஃபாத்தை சந்தித்து அமைதித் திட்டத்திற்காக முயன்றவர் என்பது குறிப்பிடதக்கது. அரசியல் தீர்வை விட  ஆன்மீகத் தீர்வைக் குறித்தே அவர் வலியுறுத்தி வந்தார். ஜெருசலம் யாருக்கு என்பதுதான் மோதலுக்கான முக்கியக் காரணம் என்பதால் அந்தப் புனித நகரத்தை யூத,கிறிஸ்தவ, இஸ்லாமியர் அனைவருக்கும் சொந்தமாக்கி உலகத்தின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது இவரது பரிந்துரை.

Tuesday, October 2, 2012

யார் இந்த மார்ட்டின் லூதர்...?

கிறிஸ்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர்தான் என்று கூற இயலாது. இவருக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பொஹீமியாவில் ஜான் ஹஸ் என்பவரும், ஜான் வேக்கிளிஃப் என்ற ஆங்கிலேய அறிஞரும் தோன்றியிருந்தனர். இவருக்கு முன்னதாக, 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட்டர் வால்டர் என்ற ஃபிரெஞ்சுகாரரைத்தான் உண்மையில் முதலாவது சீர்திருத்தவாதி எனக் கூற வேண்டும். ஆனால், இவருக்கு முன்னர் தோன்றிய சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துடன் நின்று விட்டன. எனினும், 1517ஆம் ஆண்டுவாக்கில் திருச்சபையினருக்கு எதிரான மனக்கசப்பு வெகுவாகப் பரவி, கிளர்ச்சித் தீயை மூட்டுவதற்கு ஏற்பப் பக்குவமாகக் கனிந்திருந்தது. லூதரின் சீர்திருத்தக் கருத்துகள் புரட்சிக் கனலாக அமைந்து உடனடியாகக் கிளர்ச்சித் தீயை மூட்டி விட்டது. இந்த எதிர்ப்பு மிக விரைவிலேயே ஐரோப்பாவின் பெரும் பகுதியில் பரவியது. எனவே, இந்தச் சமய சீர்திருத்த இயக்கம் தோன்றுவதற்கு மூலமுதற்காரணமாக விளங்கியவர் மார்ட்டின் லூதர் 

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து குறைபாடுகளை நீக்குவதற்காக 16 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவச் சமயச் சீர்திருத்த இயக்கத்தை தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர். இவர் 1483 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ஐஸ்லிபென் என்ற ஊரில் பிறந்தார். இவர் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார். தமது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால், சட்டக் கல்வியை இவர் முடிக்கவில்லை. மாறாக, புனித அகஸ்டினியனைப் பின்பற்றும் கிறிஸ்துவத் துறவியாக ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில், டாக்டர் பட்டம் பெற்றார். விரைவிலேயே அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு எதிரான மனக் குறைகள் இவரிடம் படிப்படியாக வளர்ந்தன. இவர் 1510-ஆம் ஆண்டில் ரோமாபுரி சென்றார். அங்கு ரோமானிய சமயக் குருமார்கள் கைக்கூலிக்கு எளிதில் ஆட்படுவதையும், சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால், இதையெல்லாம் விட பாவமன்னிப்புச் சலுகைகளைப் பணத்திற்கு விலைபேசும் கயமைச் செயல்கள் தாம் இவர் தமது எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதற்கு உடனடித் தூண்டுதலாக அமைந்தன. (செய்த பாவத்திற்குப் பணத்தண்டம் செலுத்தி விட்டால் அந்தப் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதாகத் திருச்சபை அறிவிப்பதுதான் இந்தப் பாவமன்னிப்பாகும். 
மரணத்திற்குப் பிறகு பாவம் போக்கப்படும் இடத்தில் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக பாவம் செய்தவர் கழிக்க வேண்டிய கால அளவுகளைக் கூடத் திருச்சபையினர் பணம் வாங்கிக் கொண்டு குறைத்தனர். லூதர் 1517 ஆம் ஆண்டில் தமது புகழ் பெற்ற தொண்ணூற்றைந்து முற்கோள்கள் (Ninety five Theses) என்னும் நெறிமுறையை விட்டன்பர்கு தேவாலயத்தில் கதவில் ஒட்டி வைத்தார். இதில், பணத்திற்காக இழிசெயல்களில் ஈடுபடுகிற திருச்சபையினரின் நடத்தையை வன்மையாகக் கண்டிருத்திருந்தார். குறிப்பாக, பணம் வாங்கிக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்குவதைக் கடுமையாகச் சாடியிருந்தார். லூதர் தமது தொண்ணூற்றைந்து முற்கோள்களின் படியொன்றை மெயின்ஸ் மேற்றிராணியாருக்கு அனுப்பி வைத்தார். அது மட்டுமின்றி, அந்த முற்கோள்களை அச்சிட்டு அந்த வட்டாரம் முழுவதிலும் வழங்கினார்.
விட்டன்பர்க் ஆலயக்கதவில் லூதர் 95 விதிகளை அறைகின்றார்.
திருச்சபைக்கு எதிரான லூதரினுடைய கண்டனத்தின் குறியிலக்கு விரைவாக விரிவடைந்தது. இவர் விரைவிலேயே போப் ஆண்டவரின் அதிகாரத்தையும் திருச்சபைப் பொது மன்றங்களின் அதிகாரத்தையும் எதிர்க்கலானார். விவிலியத்தை மட்டுமே நான் வழிகாட்டியாகக் கொள்பவன். வெற்று வாதங்களை நான் ஏற்க மாட்டேன் என்று அவர் அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே, இந்தக் கருத்துகள் திருச்சபையினருக்கு ஆத்திரமூட்டின. திருச்சபை அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக முன்னிலையாகுமாறு லூதருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டன. பல்வேறு விசாரணைகள் நடந்தன. தம் சமய மறுப்புக் கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்கும்படி லூதருக்குப் பலமுறை ஆணையிடப்பட்டது.  இறுதியில், லூதருக்கு திருச்சபைக்கு முரணான கோட்பாட்டுடையவர் (heretic) என்றும், சட்ட விரோதி என்றும் அறிவிக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டன.
முரண்கோட்பட்டாளர்களை கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கும் தண்டனை
இந்த தண்டனைக்கு லூதர் சாதாரண கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவருடைய கொள்கைகள் ஜெர்மன் மக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றிருந்தன. சில ஜெர்மனிய இளவரசர்கள் கூட அவரை ஆதரித்தனர். லூதர் ஓராண்டுக் காலம் வரை தலைமறைவாக இருந்தார். எனினும், ஜெர்மனியில் அவருக்கு ஆதரவு வலுப்பெற்றிந்தமையால் கடுமையான தண்டனைகள் விதிப்பது தவிர்க்கப்பட்டது.
லூதர் ஏராளமாக எழுதினார். அவருடைய எழுத்துகளில் பல மிகப் பெருமளவில் செல்வாக்குப் பெற்றன. விவிலியத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தது அவருடைய முக்கியப் பணிகளில் ஒன்றாகும். இவருடைய இந்த மொழி பெயர்ப்பு, திருச்சபையினையோ, அதன் பாதிரிமார்களையோ நம்பியிராமல் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் இந்த வேத நூலைத் தானே படித்தறிந்து கொள்ள உதவியது. (லூதரின் மொழிபெயர்ப்பு மிக அழகிய நடை அமைந்திருந்தது. அதனால் ஜெர்மன் மொழியிலும் இலக்கியத்திலுங் கூட இந்த மொழிபெயர்ப்பு அளப்பரிய செல்வாக்குப் பெற்றது.)
லூதரினுடைய இறைமையியலை முழுமையாக விரித்துரைக்க இந்த சுருங்கிய இடம் போதாது. கடவுட் பற்றினால் மட்டுமே பாவ மன்னிப்புப் பெற முடியும் என்னும் கோட்பாடு லூதரின் கொள்கையில் தலையாயதாகும். இந்தக் கொள்கையைப் புனித பாலின் எழுத்துகளிலிருந்து அவர் பெற்றார். மனிதன் இயற்கையிலேயே பாவக் கடலில் மூழ்கியிருப்பவன். எனவே, நற்செயல்களைச் செய்வதால் மட்டுமே அவன் மீளா நரகிலிருந்து தப்பித்து விட முடியாது. வீடுபேறு என்பது, ஆழ்ந்த பக்தியினாலும், இறைவன் அருளினாலும் மட்டுமே கிட்டும் என்று லூதர் நம்பினார். எனவே, பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பைத் திருச்சபையினர் விற்பனைச் செய்வது முறையற்ற செயல் என்று அவர் கண்டித்தார். தனிப்பட்ட கிறிஸ்தவனுக்கும் இறைவனுக்குமிடையிலான இடையீட்டாளர் திருச்சபையினர் தாம் என்ற சம்பிரதாயக் கருத்து ஐயப்பாட்டுக்குரியது. லூதரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதாயின், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தோற்றத்திற்கென மூல காரணமே அடியோடு துடைத்தளிக்கப்பட்டு விட்டது எனலாம்.
திருச்சபையினரின் கடமையை எதிர்த்ததுடன், திருச் சபையினுடைய பல்வேறு நம்பிக்கைகளையும், நடை முறைகளையுங்கூட லூதர் குறிப்பாகக் கண்டித்தார். எடுத்துக் காட்டாக, மரணத்திற்குப் பின்பு பாவம் போக்கப்படும் இடம் ஒன்று உண்டு என்பதை அவர் மறுத்தார். இவரே கூட 1525 ஆம் ஆண்டின் ஒரு கிறிஸ்துவப் பெண் துறவியை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். லூதர் 1546 ஆம் ஆண்டு தமது சொந்த ஊராகிய ஐஸ்லிபெனுக்குச் சென்றிருந்தபோது அங்கு காலமானார்.
இந்தச் சமயச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய விளைவாகச் சமயச் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் பல்வேறு புரோட்டஸ்டாண்டுப் பிரிவுகள் உருவாகின. புரோட்டஸ்டாண்டு சமயப் பிரிவு, கிறிஸ்துவ சமயத்தின் ஒரு கிளைப் பிரிவுதான். இச்சமயச் சீர்திருத்த இயக்கத்தின் இரண்டாவது முக்கிய விளைவு, ஐரோப்பாவில் மூண்ட சமயப் போர்களாகும். இந்தச் சமயப் போர்களில் சிலவற்றினால் பெரும் இரத்தக் களரி ஏற்பட்டது. உதாரணமாக, ஜெர்மனியில் நடந்த முப்பதாண்டுப் போர் 1618 முதல் 1648 வரை நடைபெற்றது. இந்தப் போர்கள் ஒருபுறமிருக்க, கத்தோலிக்கர்களும், புரோட்டஸ்டாண்டுகளுக்குமிடையிலான அரசியல் பூசல்கள், அடுத்த சில நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவின் அரசியலில் பெரும் பங்கு பெற்றன.
மேற்கு ஐரோப்பாவின் அறிவு மேம்பாட்டிலும் இந்தச் சமயச் சீர்திருத்த இயக்கம் மறைமுகமான, ஆனால், மிக முக்கியமான பங்கு பெற்றது. 1517ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை என்ற ஒரேயொரு திருச்சபைதான் இருந்து வந்தது. இதன் கொள்கைகளிலிருந்து மாறுபட்டவர்கள் முரண் கோட்பாட்டாளர்கள் எனக் கருதப்பட்டனர். சுதந்திரமான சிந்தனைக்கு இந்தச் சூழல் ஏற்புடையதாக இருக்கவில்லை. சமயச் சிந்தனைக் கொள்கையை பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதைத் தொடர்ந்து மற்ற துறைகளிலும் சிந்தனைச் சுதந்திரம் ஏற்கப்பட்டது.
லூதரிடமும் குறைபாடுகள் இல்லாதிருக்கவில்லை. சமய ஆதிக்கத்திற்கு எதிராக இவர் புரட்சி செய்த போதிலும், சமயப் பொருட்பாடுகளில் தம்முடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களிடம் இவர் மிகக் கொடூரமாக நடந்து கொண்டார். சமயப் போர்கள், இங்கிலாந்தைவிட ஜெர்மனியில் மிகக் கடுமையாகவும், அதிக இரத்தக் களரியுடனும் நடந்ததற்கு லூதர் தொடங்கி வைத்த சமயச் சகிப்புத் தன்மையற்ற போக்கு ஓரளவுக்குக் காரணம் எனலாம். அத்துடன் யூத இனத்தவரை லூதர் அதீத மூர்க்கத் தனத்துடன் வெறுத்தார். யூதர்களைப் பற்றி இவர் எழுதிய கருத்துகள் தாம், இருபதாம் நூற்றாண்டு ஜெர்மனியில் இட்லர் சகாப்தம் தோன்றுவதற்கு வழி வகுத்தது என்று கூடச் சொல்லலாம்.
ஜெர்மனி ஹிட்லர்
சட்டப்படி அமைந்த ஆட்சிக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை லூதர் வலியுறுத்தினார். குடியியல் அரசின் அலுவல்களில் திருச்சபையினர் தலையிடுவதை அவர் தீவிரமாக எதிர்த்ததே அவர் இவ்வாறு வலியுறுத்தியதற்குக் காரணம். (சீர்திருத்த இயக்கம் என்பது ஓரளவுக்கு இந்தக் காரணத்தினாலேயே, ஜெர்மானிய இளவரசர்களிடமிருந்து லூதருக்கும் பெருமளவு ஆதரவு கிடைத்தது). லூதரின் உள் நோக்கங்கள் என்னவாக இருந்தபோதிலும், அரசியல் விவகாரங்களில் வரம்பற்ற ஆட்சிக் கொள்கையை (Absolutism) பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஏற்றுக் கொள்வதற்கு லூதரின் உரைகள் வழிவகுத்தன எனலாம். இந்த வகையிலும், ஹிட்லரின் சகாப்தத்திற்கு லூதரின் உரைகள் வழி வகுத்தன எனலாம். இந்த வகையிலும், ஹிட்லரின் சகாப்தத்திற்கு லூதரினுடைய எழுத்துகள் வழியமைத்திருக்கலாம்.
“உண்மையை அறிந்த பின்னரும் உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்.” என்று முழங்கிய மார்டின் லூதர் கிங் கிறிஸ்துவத்தில் தர்க்கரீதியான ஒரு பிரிவை ஏற்படுத்தி வரலாற்றில் இடம் பிடித்தார்.

Reference :  Martin Luther: ,the 100