Sunday, May 24, 2015

பிறருக்காக நல்லறங்கள் புரிந்தால் மறுமையில் பலனளிக்காது.

பூமியில் இவ்வுலகில் பிறரால் புகழப் பட வேண்டும் என்பதற்காக நற்செயல் புரிகிறவரின் மறுமை நிலை.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்" என்று பதிலளிப்பார்.
இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, "மாவீரன்" என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)"அறிஞர்" என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "குர்ஆன் அறிஞர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்" என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய் "இவர் ஒரு புரவலர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)" என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)

அதே போல விளம்பரத்திற்க்காக நற்செயல் புரிதலும் தவறு.


நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்' என்று கூறியதைக் கேட்டேன்.
புகாரி: 6499. அறிவிப்பாளர் ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி)

மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தொழுகையாளி என்று புகழ வேண்டும் என்பதற்காக தொழுகிறவரின் மறுமை நிலை.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். 
அறிவிப்பாளர்: அபூ ஸயீத்(ரலி) புகாரி 4919. & 4920.
இறுதியாக நாம் ஏன் அழைப்புப் பணி செய்கிறோம் நம்மை விளம்பரப் படுத்திக் கொள்ளவா இல்லவே இல்லை.


நாம் ஏன் அழைப்புப் பணி செய்கிறோம் நேரப் பொழுது போக்கிற்க்காகவா? இல்லவே இல்லை. 

இஸ்லாத்தை சொல்வதின் நோக்கம் மார்க்கத்தை அறியாதவர்கள் ஓரிறையை பற்றி தெரியாதவர்கள் தப்பும் தவறுமாக விளங்கியவர்கள் நேர்வழி பெறவே அதன் மூலம் நமக்குள் அன்பு ஏற்பட்டு சகோதர உறவு வளர வேண்டும் என்பதற்காகவே (பார்க்க வசனம்:)


“அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர” என்று (நபியே!) நீர் கூறும்.

(அல்குர்ஆன்25:57.)
 


எவருடைய தாய் தந்தையரையும் திட்டாதே!



தாய் தந்தையரைத் திட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னவுடன்,

"அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் தாய், தந்தையரைத் திட்டுவானா?'' என்று நபித்தோழர்கள் கேட்டார்கள்

"ஆம்! இவன் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றான். உடனே அவன் பதிலுக்கு இவனது தந்தையைத் திட்டுகின்றான். இவன் அவனுடைய தாயைத் திட்டுகின்றான். உடனே அவன் இவனது தாயைத் திட்டுகின்றான். (இது இவன் நேரடியாகத் திட்டியதற்குச் சமம்)'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 146

நபி (ஸல்) அவர்கள் இங்கு நேரடியாக ஒருவன் தன் தாயையோ தந்தையையோ திட்டுவதைக் குறிப்பிடவில்லை. இவன் மற்றவனைத் திட்டும் போது, அவனை மட்டும் திட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், "உனது தாயைத் தெரியாதா? தந்தையைத் தெரியாதா?'என்று இழுத்துப் பேசுவான். அது தான் தாமதம்! உடனே அவனும் அது போலத் திட்ட ஆரம்பித்து விடுகின்றான். இவ்வாறு அவன் திட்டுவதற்குக் காரணமாக இருந்ததால் அது நீயே நேரடியாகத் திட்டியதாகும். இது சாதாரண பாவமல்ல! சிறு பாவம் என்று ஒதுக்கப்படக் கூடிய பாவம் அல்ல! நரகத்தில் வீழ்த்தக் கூடிய பெரும் பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

உலகமெல்லாம் தாய் தந்தையரைத் திட்டுவது பாவம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும், அடுத்தவருடைய தாய் தந்தையரைத் திட்டுவதை, அதன் மூலம் எதிர்விளைவை ஏற்படுத்துவதைப் பெரும்பாவம் என்று கூறுகின்றார்கள்.


* நீ எவருடைய தாய் தந்தையரையும் திட்டாதே!
* அதன் காரணமாக உன்னுடைய தாய் தந்தையரைப் பிறர் திட்ட வைத்து விடாதே!
இப்படி எதிர் விளைவால் திட்டுவது கூட பெரும்பாவம் எனும் போது நேரடியாக நீ திட்டினால் அது பெரும்பாவத்திலும் பெரும்பாவம் என்ற உண்மையை உணர்த்துகின்றார்களே! அவர்கள் சாதாரண போதகர் அல்லதான் அல்லாஹ்வின் தூதர் என்பதை இதன் மூலம் நிரூபிக்கின்றார்கள். 
முக்கியமாக இதன் மூலம் நாம் தெரிய வேண்டிய அரிய விஷயம்தாய் தந்தையரைத் திட்டுவது ஒரு பெரும் பாவம் என்பது தான். அவர்களிடம் "சீஎன்ற வார்த்தையைக் கூடக் கூறாமல் அன்பானஅருளானஅழகான வார்த்தைகளைக் கூறி அவர்களை அரவணைத்து வாழ்வது அழகிய பண்பாகும். 
தாய் தந்தையரை திட்டுவது பொரும்பாவம்.

ஊருலே உள்ளதுலாம் போய் சேர்ந்துருச்சு இது கிடந்துகிட்டு உசுற வாங்குது என தாய் தந்தையரை திட்டுவது பரவலான வழக்கமாக இன்று மாறியிருக்கிறது நோய் வாய்ப் பட்டு கிடக்கும்போது இதுபோன்ற வசைமொழிகளை கொண்டு பொற்றோர்களை ஏசுவதை இஸ்லாம் பெரும் பாவமாகக் கருதுகின்றது. குர்ஆனில் அவர்களை நோக்கி 'சீ' என்று கூட சொல்லாதீர்கள் என்று கண்டிக்கிறது.

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 17:23,24)

அதேபோல மிகச்சிறந்த நற்செயல் தாய் தந்தைக்கு சேவை செய்வதாகும்.

"நற்செயலில்" மிகச் சிறந்தது 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நற்செயல்களில்" அல்லது "நற்செயலில்" சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுமாகும்" நூல்: முஸ்லிம் :140


Wednesday, April 15, 2015

சீன தத்துவமேதை கன்ஃபூசியஸ்

சீன மக்களின் அடிப்படை கருத்துகளைத் தொகுத்து ஒரு கோட்பாடாக வகுத்த முதல் மனிதர் பெரும் சீனத் தத்துவ அறிஞரான கன்ஃபூசியஸ் ஆவார். அவருடைய கோட்பாடு தனி மனிதனின் அறவொழுக்கத்தையும், அற நெறியின் அடிப்படையின் மக்களை ஆண்டு பணி புரியும் அரசாங்கத்தைப் பற்றிய கருத்தையும் தழுவியது. 2000 ஆண்டுகளாக சீன மக்களின் வாழ்க்கையும், பண்பாடும் இதில் ஊறித் திளைத்திருந்தன. இதன் செல்வாக்கு உலக மக்கள் தொகையில் ஒரு பகுதி முழுவதும் பரவியிருந்தது.

கன்ஃபூசியஸின் கருத்துப்படி, "ஜென்" , "லி" ஆகியவையே இரு முக்கிய நற்பண்புகளாகும். உயர்ந்தோர் இவற்றிற்கேற்ப ஒழுகுவர். "ஜென்" என்பது சிலவேளை " அன்பு" என மொழி பெயர்க்கப்படுகின்றது. ஆனால் அதைப் " பிறரிடம் காட்டும் அன்பு கூர்ந்த அக்கறை" என விளக்குதல் நன்று. "லி" என்பது ஒழுக்க முறைகள், வழிபாடு, வழக்கம், ஒழுக்க நயம், முறைமை ஆகியவற்றைக் குறிக்கும்.

கன்ஃபூசியஸ் ஒரு மதத்தை நிறுவியவராகப் போற்றப் படுகின்றார். ஆனால் அது முற்றிலும் உண்மையன்று. அவர் கடவுளைப் பற்றி மிக அரிதாகவே குறிபிட்டார். மறு உலக வாழ்வு பற்றி வாதிக்க மறுத்தார். எல்லா வகை யான மெய்விளக்க ஊகக் கோட்பாடுகளையும் தவிர்ட்த்தார். அடிப்படையில் அவர் ஓர் உலகியல் தத்துவ அறிஞர் ; தனிமனித, அரசியல் அறநெறியிலும் ஒழுக்கத்திலும் அக்கறை காட்டினார்.

கன்ஃபூசியஸ் காலத்திற்கு முன்பே முன்னோர் வழிபாடு அடிப்படை சீன சமயமாக இருந்தது. அவர் குடும்பப் பற்றையும் பெற்றோரிடம் காட்ட வேண்டிய மதிப்பையும் வலியுறுத்தி அதற்கு உறுதியளித்தர். மனைவியர் கணவருக்கும், குடிகள், அரசருக்கும் மதிப்பளித்துக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் அவர் போதித்தார். ஆயினும் அந்தச் சீன ஞானி கொடுங்கோன்மையை ஆதரிக்கவில்லை. அரசு மக்களின் நலன்களுக்காக இல்லையென்றும் அவர் நம்பினார். அரசன் வன்முறையாலன்றி அறநெறி முன்மாதிரியினால் ஆள வேண்டுமெனப் பலமுறை வலியுறுத்தி வந்தார். 

அவரது மற்றொரு கோட்பாடு கிறிஸ்து பெருமானின் பொன்னான விதியின் திரிபு ; அதாவது " பிறர் உனக்கு எதைச் செய்ய வேண்டா மென விரும்புகிறாயோ, அதை பிறர்க்குச் செய்யாதே". கன்ஃபூசியஸின் அடிப்படை நோக்கு பழமைப் பற்றுடையது. அவர் கடந்த காலமே பொற்காலமென்று நம்பினார். அரசரும் மக்களும் பழைய டஅறநெறித் தரங்களையே பின்பற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆயினும், உண்மையில், அறநெறி முன்மாதிரியினால் ஆள வேண்டுமெனும் கன்ஃபூசியஸின் இலட்சியம் முற்கால நடைமுறை டயாக இருந்ததில்லை. ஆகவே கன்ஃபூசியஸ் புதியது புனைந்த சீர்த்திருந்ததவாதியாகவே இருந்தார்.

கன்ஃபூசியஸ் சூ வம்ச காலத்தில் வாழ்ந்தார். அது சீனாவில் பெரும் அறிவுக் கிளர்ச்சிக் காலமாகத் திகழ்ந்தது. அவர் காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் அவருடைய திட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் அவர் இறந்த பின் அவருடைய கருதூதுகள் நாடு முழுவதும் பரவின. ஆயினும் கி.மு. 221 இல் சின் வம்ச காலம் தோன்றியதும் கன்ஃபூசியஸின் கொள்கைகள் நலிவுறத் தொடங்கின. சின் வம்ச முதல் மன்னரான ஷி - ஹூ - வாங்தை கன்ஃபூசியஸின் செல் வாக்கை அழித்து, கடந்தகாலத் தொடர்பை அறுத்தெறிய உறுதி பூண்டார். கன்ஃபூசியஸின் போதனைகள் பரப்புவதை தடுக்கவும், அவருடைய நூல்களை எல்லாம் எரிக்கவும் ஆணையிட்டார். இத்தடுப்பு முறைகள் தோல்வியடைந்தன. 

சில ஆண்டுகள் கழித்து சின் வம்ச காலம் முடிவுற்றதும் கன்ஃபூசிய அறிஞர்கள் திரும்பவும் அவருடைய கோட் பாடுகளைப் பரப்பத் தொடங்கினர். அதன் பிறகு தோன்றிய ஹான் வம்ச காலத்தில் (கி.மு. 206 - கி.பி. 220) கன்ஃபூசியக் கொள்கை சீன அரசின் தத்துவமாக நிலை நாட்டப் பெற்றது. 
ஹான் வம்ச காலம் முதல் நாளடைவில் சீன அரசர்கள் அரசாங்க அலுவலர்களை அரசுப் பணித் தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். காலப்போக்கில் இத்தேர்வுகள் கன்ஃபூசியஸின் நூல்களைப் பற்றிய அறிவின் அடிப்படையிலே நடைபெற்றன. சீனப் பேரரசில் அரசாங்க ஆட்சித் துறைப் பணியில் சேர்வதே உயர் வருமானத்திற்கும் சமூக நன்மதிப்பிற்குமுரிய முக்கிய வழியாக இருந்ததால், அரசுப் பணித் தேர்வுகளில் பெரும் போட்டி ஏற்பட்டது. 

ஆகவே, சீனாவில் பல தலைமுறைகளாக அறிவும் ஆரூவமுமிக்க இளைஞர் பலர் கன்ஃபூசியஸின் நூல்களைப் பல ஆண்டுகளாக ஆழ்ந்து படித்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக, சீன ஆட்சித் துறையினர் கன்ஃபூசிய தத்துவத்தில் ஊறி திளைத்த நோக்குடையவராக இருந்தனர். இம்முறை சீனாவில் (சில தடங்கல்கள் தவிர) கி.மு. 100 முதல் கி.பி. 1900 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக நிலைப்பெற்றிருந்தது. கன்ஃபூசியஸின் கொள்கை சீன அரசாங்கத்தின் தத்துவமாக மட்டும் இருக்கவில்லை. சீன மக்களுள் பெரும்பாலோர் கன்ஃபூசியஸின் இலட்சியங்களை ஏற்றுக் கொண்டிருந்தனர். அவை 2000 ஆண்டுகளாக அவர்களுடைய வாழ்விலும் சிந்தனையிலும் உயரிடம் பெற்றிருந்தது.

கன்ஃபூசியஸ் சீன மக்களைக் கவர்ந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது அவருடைய வாய்மையும் நேர்மையும் ஐயத்திற்கிடமானவையல்ல. இரண்டாவது, அவர் மிதவாதியாகவும், நடைமுறைவாதியாகவும் இருந்ததார். மக்கள் தம்மால் சாதிக்க முடியாதவற்றைச் செய்யுமாறு அவர் சொல்லவில்லை. அவர்கள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று அவர் கூறியபோது, அவர்கள் புனிதர்களாக இருக்கவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. இதிலும் பிறவற்றிலும் அவர் சீன மக்களின் நடைமுறை மனப்பாங்கையே பிரதிபலித்தர். அவருடைய கொள்கைகள் சீனாவில் பெரும் வெற்றி பெற்றதற்கு இதுதான் ஒருவேளை காரணமாக இருக்கக் கூடும்.

கன்ஃபூசியஸ் சீன மக்களைத் தம் அடிப்படை நம்பிக்கைகளை விட்டு விடுமாறு கேட்கவில்லை. அதற்கு மாறாக அவர் அவர்களுடைய மரபான அடிப்படை இலட்சியங்களையே தெளிவாகவும் உறுதியாகவும் திரும்ப எடுத்துக் கூறினார். ஒரு வேளை உலக வரலாற்றில் வேறு எந்தத் தத்துவ அறிஞரும் கன்ஃபூசியஸைப் போல் தம் நாட்டடவரின் அடிப்படைக் கருத்துகளுடன் அவ்வளவு நெருங்கி இருந்ததில்லை எனலாம். 

மக்களின் உரிமைகளைவிட மிகுதியாக வலியுறுத்தும் கன்ஃபூசிஸியக் கொள்கை இன்றைய டமேல்நாட்டு நோக்கதுல் செயல திறமற்றதாகவும் கவர்ச்சியில்லாததாகவும் தோன்றலாம். ஆயினும் அரசாங்கத்தின் கோட்பாடு என்ற வகையில் அது நடைமுறையில் பயனுறுதியுள்ளதாக இருந்தது. உள்நாட்டு, அமைதியையும், செழிப்பையும் பேணும் திறமையை அது பெற்றிருந்ததால் பொதுவாக சீனஒ‘ 2000 ஆண்டுகளாக நல்லாட்சி பெற்ற நாடாகத் திகழ்ந்தது.

கன்ஃபூசியஸின் இலட்சியங்கள் சீனப் பண்பாட்டுடன் நெருங்கிப் பிணைந்திருந்ததால், அவை கிழக்கு ஆசியாவுக்கு வெளியே பெரிதும் பரவலில்லை. ஆயினும் கொரியா விலும் ஜப்பானிலும் அவற்றின் விளைவுகளைக் காணலாம். அந்நாடுகள் இரண்டிலும் சீனப் பண்பாடு பெரிதும் செல்வாக்குப் பெற்றிருந்தது.

இன்று கன்ஃபூசியஸின் கொள்கை சீனாவில் மிகத் தாழ்ந்த நிலையை அடைந்துள்ளது. சீனப் பொதுவுடமை வாதிகள் (மா சே துங்) மாவோஸ்ட்கள் கடந்த காலத் தொடர்புகளைத் துண்டிக்கும் முயற்சியுயில் கன்ஃபூசியஸையும் அவருடைய கோட்பாடுகளையும் வன்மையாகத் தாக்கி வருகின்றனர். வரலாற்றில் கன்ஃபூசியஸ் பெறிருந்த செல்வாக்குக் காலம் முடிவடைந்தது.


ஆதார நூல் : The 100 அந்த நூறு பேர்கள் 


Monday, April 13, 2015

சிகப்பு அரிசியை தெரியுமா? : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.

குதிரை வால் சம்பா, மணிச் சம்பா, மடு முழுங்கி, கவுனி, தூய மல்லி என்று அழகழகான அரிசி வகைகளின் பெயர்கள் எல்லாம் ஒரு காலத்தில் எல்லோரின் வீட்டிலும் புழங்கி வந்தன. பிறகு கற்பனை வறட்சியுடன் ஐ.ஆர்.8, சி.ஓ33 என்றெல்லாம் அரசாங்க இலாகாத்தனமாகப் பெயர் வைக்கப்பட்ட ஹைப்ரிட் அரிசிகள் வந்தன. ஒரு காலத்தில் இந்தியாவில் இரண்டு லட்சம் அரிசி வகைகள் இருந்ததாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரிச்சாரியா.
அந்த வகையில் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.
சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
சவூதியில் உள்ள கேரளா ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் சாப்பிட்டு இருக்கிறேன் என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, மோட்டா ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் காண முடியும்.
இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.
மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.
இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.
'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?
சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.
ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.
ஏன்..?
ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராச்சியத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை.
தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர்.
நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.
தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!

Sunday, April 12, 2015

உங்கள் செல்பேசியில் காங்கோ குழந்தையின் கதறல் கேட்கிறதா?

நாம் பயன்படுத்தும் செல்போன் ,மடிக்கணினி , ரேடியோ, டி.வி. எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படும் கபாஸிடர்களுக்காக  காங்கோ நாட்டில் பல பேர் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். என்பது தெரியுமா? அறியாத அப்பாவி மக்கள் சுரண்டப் படுவது தெரியுமா?

கால்டன் என்பது கொலம்பியம் - டான்டலம் என்ற இரு உலோகங்கள் அடங்கிய தாதுப்பொருள். இதில் டான்டலம் என்கிற சமாச்சாரம் அதிக சூட்டைத் தாங்கக் கூடியதால் அதை உபயோகித்து கபாஸிடர் எனப்படும் மின்னேற்பிகள் செய்கிறார்கள். மின்சாரத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தரவல்ல இந்த மின்னேற்பிகள் இல்லாமல் எலக்ட்ரானிக்úஸ இல்லை! எனவே நம் செல்போன், ரேடியோ, டி.வி. சகலத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது டான்டலம். உலகில் மிகச்சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் கால்டனுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு. உலகத்தின் மொத்த கால்டனில், எண்பது சதவிகிதம்இங்கேதான் கிடைக்கிறது. உலகச் சந்தையிலோ ஏராளமாக டிமாண்ட்.  காங்கோ மக்கள் அப்பாவிகள், கோட்டை விட்டார்கள். ஆளாளுக்கு காங்கோவில் புகுந்து கால்டன் உள்படப் பல இயற்கை வளங்களையும் சூறையாடிவிட்டு, போகிற போக்கில் ஒரு உதையும் கொடுத்துவிட்டுப் போகும் அவல நிலை.

கால்டனை அகழ்ந்தெடுப்பது சுலபமான வேலை. மண்வெட்டியால் மண்ணைத் தோண்டி பக்கெட்டில் போடுங்கள். தண்ணீர் ஊற்றி அலசுங்கள். கால்டனில் சற்று கனமான உலோகங்கள் இருப்பதால் அடியில் தங்கிவிடும். அப்படியே கொண்டுபோய் நிழலான ஏஜெண்ட்டுகளிடம் கொடுங்கள். அவர்கள் மனமுவந்து தரும் சொற்பத் தொகையை வாங்கிக்கொண்டு வழிப்பறித் திருடர்களிடம் மாட்டாமல் வீடு திரும்பினால் அன்றைக்கு வீட்டில் அடுப்பெரியும். ஒரு சுறுசுறுப்பான குழுவால் தினம் ஒரு கிலோ கால்டன் சேகரிக்க முடியும். 450 ரூபாய் வரை கிடைக்கும். தரகர்களைக் கடந்த பிறகு மார்க்கெட்டில் விலை என்ன தெரியுமா? ரூபாய் இருபதாயிரம்!
காங்கோ பாவம்... சின்ன வயசிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்ட தேசம். பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் வந்து கால் வைத்த போது ஆரம்பித்தது சனி. ஒரு கட்டத்தில் அவர்கள் கப்பல் கப்பலாக அடிமைகளைப் பிடித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். உள்ளூர் மக்களின் சுதந்திரப் போராட்டம் வெற்றி பெறமுடியவில்லை.
காங்கோ மன்னரே ஐரோப்பியர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கண்ணடித்துவிட்டு வேறுபுறம் திரும்பிக்கொண்டார். நடுவில் வாடிகன் சர்ச் நுழைந்து எரிகிற வீட்டில் பிடுங்கியது. பிறகு பெல்ஜியம் நேரடியாக நாட்டை அடிமைப்படுத்தியது. காலனி ஆட்சியில் காங்கோ மக்கள் அனுபவித்த நிறவெறிக் கொடுமைகளைப் பற்றி நிறையப் பேர் ஆர்ட் படம் எடுத்து அவார்ட் வாங்கியிருக்கிறார்கள்.
1965-ல் சி.ஐ.ஏ. உதவியுடன் ஆட்சியைக் கவிழ்த்துப் பதவியை அபகரித்த தளபதி மொபுடு, நாட்டின் பழைமையான கலாசாரத்தையும் தேசிய கௌரவத்தையும் ஐரோப்பிய மிலேச்சர்களிடமிருந்து காப்பாற்றப் போகிறேன் என்று சூளுரைத்தார். நாட்டின் பெயரை ஜயர் என்று மாற்றிவிட்டு, தன் பெயரையும் ஒரு பாராவுக்கு வைத்துக்கொண்டார். ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக தேர்தலில் நின்று ஜெயித்தார்.
மொழிப் பாதுகாவலையும் விட்டு வைக்கவில்லை. "எங்கள் தாய் கோங்கோ மொழி, இன்பக் கோங்கோ எங்கள் உயிருக்கு நேர்' என்று பாட்டுப் பாடி தார்ச்சட்டியை எடுத்துக்கொண்டு பெயர்ப் பலகைகளிலெல்லாம் ஃப்ரெஞ்சை அழித்தார். பிறகு நாட்டை அழித்தார். தேசத்தில் பாதியை விற்று தன் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போட்டார். ராணுவத்துக்குச் சம்பளமே தராமல், நேரடியாகப் பொது மக்களிடமிருந்து முடிந்தவரை அடித்துப் பிடுங்கிக் கொள்ளுங்கள் என்று அவிழ்த்துவிட்டு விட்டார். அராஜகம்!
காங்கோவில் தங்கம், வைரம், தாமிரம் என்று ஏராளமான இயற்கை வளங்கள். வற்றாத ஆறுகள், ஏரி, பொருள்களுக்குக் குறைச்சலே இல்லை. இருந்தும் சராசரிக் குடிமகனின் மாத வருமானம் 400 ரூபாய்; சராசரி வாழ்நாள் 42 வருடங்கள். பணவீக்கம் ஒரு சமயம் ஆறாயிரம் சதவிகிதம் வரை எகிறி நாடே மாபெரும் கப்பரையாகிவிட்டது. காரணம், அரசியல்! 


பாம் வெடிக்கும் பிரிவினைவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு பட்டாசு சப்ளை செய்யும் பக்கத்து நாடுகள், அவ்வப்போது ராணுவ ஆட்சி, ஆட்சியில் பயங்கர ஊழல், ஊழலுக்குத் துணை நிற்கும் மேற்கத்திய நாடுகள், மேற்கத்திய அநியாயங்களை அதட்டிக் கேட்க முடியாமல் முப்பது வருஷமாக அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கும் ஐ.நா.சபை என்று கச்சிதமாக எல்லாம் விதிப்படியே நடந்துகொண்டிருந்தது.
காங்கோவின் தீவிரவாதப் பிரச்னை, பற்பல பரிமாணங்கள் கொண்ட பன்னாட்டுச் சிக்கல். இந்த மொபுடு சும்மா இருக்கமுடியாமல் ருவாண்டா, உகாண்டா, அங்கோலா என்று பல நாடுகளின் உள்நாட்டுச் சண்டையில் தலையிட்டு ஊதித் தொலைத்துவிட்டார். அவரவர்கள் கோபம் கொண்டு ஆளுக்கொரு தீவிரவாதக் குழுவுக்குக் கொம்பு சீவி காங்கோவுக்கு அனுப்பி வைக்க, இந்தப் பிரதேசத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் ஃப்ரான்ஸ் மட்டம் தட்டுவதற்காக அமெரிக்காவும் புகுந்த அலம்பல் செய்ய, ஆயுதம் தாங்கிய அகதிகள் பிரச்னை வேறு சேர்ந்துகொள்ள, எல்லாத் தரப்பினரும் காங்கோவை பன் மாதிரி பிய்த்து டீயில் தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
இந்தப் பின்னணியில் மறுபடி கால்டனுக்கு வருவோம். காங்கோவின் உள்நாட்டுப் போர் முடிவில்லாமல் நீள்வதற்கு கால்டன் தரும் பணம் ஒரு முக்கிய காரணம். கால்டன் சுரங்கங்கள் திட்டமிட்டு சுரண்டப்பட்டு பல தீவிரவாதக் குழுக்கள் கையில் போய்ச் சேருகிறது. பக்கத்து நாடான ருவாண்டாவின் ராணுவம் காங்கோவில் புகுந்து ஒரே வருஷத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கால்டனைக் கடத்தியிருக்கிறது. 
காங்கோவின் பல்லாயிரம் வருட சொத்தான ட்ராபிகல் காடுகள் ஐம்பதே வருடத்தில் மழுங்கச் சிரைக்கப்பட்டு எங்கெங்கும் பள்ளம் தோண்டி வேளச்சேரி மெயின் ரோடு மாதிரி ஆகிவிட்டதற்குக் காரணம் கால்டன். உள்ளூர் மக்களின் விவசாய நிலங்களெல்லாம் துப்பாக்கி முனையில் அபகரிக்கப்பட்டு கால்டன் சுரங்கமாக மாறியதன் விளைவு - விலா எலும்பு தெரியும் குழந்தைகள். அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் கட்டாயமாக கால்டன் தோண்ட கொத்தடிமையாகவும் பிடித்துப்போகிறார்கள். குடியும் குடித்தனமுமாக அமைதியாக வாழ்பவர்கள் குறைந்துபோய், நாடு முழுவதும் சுரங்கத் தொழிலாளர்களும் போராளிகளும் நிறைந்துவிட்டதால் விபசாரம் மிகவும் பெருகி எங்கு பார்த்தாலும் எய்ட்ஸ்!
சந்தடி சாக்கில் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்பும் காங்கோவை நெருக்குகின்றன. எல்லா இயற்கை வளங்களையும் சுரங்கம் தோண்டும் உரிமைகளையும் மேற்கத்திய தனியார் கம்பெனிகளின் வசம் ஒப்படைத்தால்தான் உதவித்தொகை வருமாம். சண்டையை நீடித்துக்கொண்டே போவதால் காங்கோவிலிருந்து யாரும் கால்டன் வாங்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் போட்டார்கள். ஊகூம். ஐ.நா. தீர்மானத்தை யாராவது மதிப்பார்களா? 
அமெரிக்காவில் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் இப்போது காங்கோ பிரச்சினையைப் பற்றிய ஞானம் ஓரளவு ஏற்பட்டிருக்கிறது. கெமட் போன்ற பெரிய கபாஸிடர் தயாரிப்பாளர்கள், டான்டலம் வாங்கும்போது அது சட்ட விரோதமாகத் தோண்டப்பட்டதல்ல என்று சர்டிபிகேட் கேட்கிறார்கள்.ஆஸ்திரேலியா போன்ற மாற்று சப்ளையர்களிடமிருந்துதான் டான்டலம் வாங்குகிறோம் என்று பொய்ச்சத்தியம் செய்கின்றன சில கம்பெனிகள். கிரீன்லாந்தின் எரிமலைகளுக்குள் நிறைய டான்டலம் இருக்கிறது என்று ஒரு கோஷ்டி தைரியமாக கிட்டே போய் எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சில தன்னார்வக் குழுக்கள் காங்கோவின் கண்ணீரை உள்ளடக்கிய கம்ப்யூட்டர், டி.வி. போன்றவற்றைப் போட்டு உடையுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு முறை நாம் டி.வி. பார்க்கும்போதும் செல்போன் பேசும்போதும் காங்கோவில் யாரோ ஒருகலூங்காவின் துயரத்திற்கு காரணமாகிறோம். ஒரு அநியாயம் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்; சம்பவ இடத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருந்தால் நமக்கு அதில் மறைமுகமான பொறுப்பில்லை என்று மனசாட்சி உறுத்தாமல் வாழ முடியுமா? 

(ஆதார கட்டுரைகள் : ராமன் ராஜா அறிவியல் கட்டுரை மற்றும் The Congo Mines That Supply 'Conflict Minerals' For The World's Gadgets ) புகைப் படங்கள் கூகுள் தேடல் 

Saturday, April 11, 2015

கற்பழிக்கப் பட்ட பெண்ணை காப்பாற்ற உதவிய பேஸ்புக்.

பிலிப்பைன்ஸ் பெண் தொழிலாளி லூனா 
பேஸ்புக்கில் நேரப் போக்கிற்க்காக எழுதுபவர்கள் மொக்கை போடுபவர்கள் வெட்டிக் கதை அடிக்கிற வேலை வெட்டி இல்லாதவர்கள் நிறைந்த இடம் என்பது போன்ற முன்முடிவு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் பேஸ்புக் தவிர்க்க முடியாத அதிவேக ஊடகமாக மாறி இருக்கிறது அதனை ஆக்கபூர்வமாக கையாளும் நல்லுள்ளம் கொண்டவர்களும் இந்த ஊடகத்தில் நிறைந்து நின்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.

அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அப்பு லூனா (வயது 28) இவர் பஹ்ரைனில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்து உள்ளார். இவர் தன்னை தனது முதலாளி மகன் கற்பழித்து விட்டதாகவும். தினமும்  அடித்து உதைப்பதாகவும்  சமூக வலைதளமான பேஸ் புக்கில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவை 19 ஆயிரம் பேர் லைக் செய்து இருந்தனர். 78 ஆயிரம் ஷேர் செய்யபட்டு இருந்தது.இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பில்லைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது இதை தொடர்ந்து  தூதரக அதிகாரிகளால் அவர் மீட்கபட்டார்.
3 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் லூனா கூறியது :



தனது முதலாளியின் போதைக்கு அடிமையான மகன் தன்னை கற்பழித்து விட்டதாகவும். மேலும் நான் வெளிவர உதவி செய்யுங்கள், இப்போது வரை,  நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். என்  பிறப்புறுப்பு காயமடைந்து உள்ளது. நான் தடுத்ததற்காக எனது காலில் அடித்து உள்ளார்கள் அதனால் காலில் காயமாக உள்ளது. எனது முதலாளி மகன் என்னை திட்டினார். இதை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார். என கூறுகிறார்


அவரது முதலாளி அவரது மகன் கற்பழித்ததையும் அடித்து உதைப்பதையும் நம்ப வில்லை. ஓப்பந்தம் மீதம் முள்ள 2 மாதங்களையும் முடித்து விட்டு நீ உன் நாட்டுக்கு போ எனச் சொன்னதாகச் சொல்கிறார். நீ கர்ப்பமாக இருந்தால் கருகலைப்பு செய்து விடு என முதலாளி அறிவுறுத்தியாகவும் சொல்லி அழுகிறார். 


லூனா இது குறித்து எழுத்துபூர்வமாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு ஒரு புகார் அளித்து உள்ளார். பேஸ்புக்கில் பரவலாக செய்தி சென்ற பிறகு மீட்கபட்ட பிறகு அப்பு லூனா வெளியீட்டு இருந்த வீடியோவில் தான்  தூதரக பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.  இது குறித்து பில்ப்பைன்ஸ் தூதரக அதிகாரி கூறும் போது லூனாவை வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் அவர் வேலை செய்யும் வீட்டில் இருந்து அழைத்து வந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறி உள்ளார். 


ஆதே சமயத்தில் லூனா தாக்கபட்ட குற்றசாட்டை போலீசார் மறுத்து உள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் தூதர துணை அதிகாரி ரிக்கி ஆரகன் தகவல் வெளியீட்டுள்ளார். எது எப்படியே பிடிக்காத இடத்திலிருந்து மீட்ட உதவியிருக்கிறது சமூக வலைத்தளமான பேஸ்புக்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக அந்நாட்டை சேர்ந்த இலட்சணக் கணக்கான பெண்கள் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை போன்ற பல வேலைகளில் ஈடுபாடுகிறார்கள். இதுபோன்ற பெண்கள் வீட்டுக்குள் முடங்கினாலும் சமூக வலைத் தளங்கள் மூலம் தங்களை தற்காத்துக் கொள்ள முயல்வது ஆரோக்கியமனதுதான் அதே சமயத்தில் தவறான பயன்படுகளுக்கான சாத்தியம் இல்லாமல் இல்லை.



(பிலிப்பைன்ஸ் பெண் பேஸ்புக் மூலம் மீட்பு முதலாளியின் மகன் தன்னை கற்பழித்து அடித்து உதைத்ததாக கதறல். நன்றி - மூலச் செய்தி தினந்தந்தி ) 


Monday, April 6, 2015

பழைய கஞ்சி குடிக்கலாம் வாங்க



பழைய கஞ்சி, நேத்து வச்சு சுண்ட வைத்த மீன் குழம்பு அப்படியே கொஞ்சம் வத்தல் சின்ன வெங்காயம், தயிர் ஆஹா இதுதான் இறைவனின் அருட்கொடை .

கஞ்சியை சாதாரணமாக நினச்சுடாதீங்க:

பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன்பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

தென் இந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போயிருக்கிறார்கள்.

பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு. மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி–6, பி–12 ஆகியவை மிகுதியாக காணப்படுகின்றன. பழைய சோற்றில் உருவாகும் கோடிக் கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணீகள் அதிகமாக உள்ளன.

பழைய கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடல் உள் உறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன.

காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சனையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித வயிற்று புண்ணும் (அல்சர்) நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப்பொலிவுடனும் இருக்குமாம்.
அதனால்தான் நம்ம விவசாய பெருமக்கள் ஒல்லியாக இருந்தாலும் நல்ல ஆரோக்கியமாக நோய் நொடியின்றி நல்லா இருக்காகெ போல.

Sunday, April 5, 2015

கத்தரிக்காய், தாக்காளியில் அல்லாஹ்வின் பெயரா??

எப்படி தாம் சார்ந்திருக்கும் சமயத்தின் சிறப்புகளைச் சொல்லி, மக்களை நேர்வழிப்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் எதிர்மறையாக மாற்று மதங்களை திட்டி தாங்கள் மதத்தை உயர்வாக காட்ட முயல்வார்களோ அதேபோன்றுதான் தங்கள் மதத்தை மிகைப் படுத்தி பொய்யான தோற்றங்களை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்த சிந்தனையுடையவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். (அல்குர்ஆன் 6:108 )
பிற மதக்கடவுள்களை திட்டக் கூடாது என்று குர்ஆன் கட்டளை இடுவது போலவே கேள்விப் படுகிற செய்திகளை அப்படியே  பரப்பி விடக் கூடாது அப்படி பரப்பினால் அவரும் பொய்யர் என்கிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )

இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் போட்டோஷாப் துணையுடன் பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது என்கிறார்கள் இந்த பழங்களில்  அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுமா?
அல்லாஹ் என்கிற அரபு எழுத்து தெரிகிறது என்றே வைத்துக் கொள்வோம் இதேபோன்றே இயற்கையாக ஏசு தெரிவது போலவும் பிள்ளையார் தெரிவது போலவும் வடிமைத்திருக்கிறார்களே அதை என்ன சொல்வது??
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது என பரப்புகிறார்கள் இவர்கள் ஆடு மாடுகள் கால்நடைகள் போல் வந்து விழ மாட்டார்கள் சிந்திப்பார்கள் என்கிற குர்ஆனிய வசனத்தை மறந்த விளைவு இது.
அல்லாஹ் என்கிற எழுத்து மட்டுமா தெரிகிறது இது என்ன பிரமாதம் நெற்றில் சிலுவை இருக்கு பாருங்க முதுகில் ஓம் இருக்கு பாருங்க கீழேயுள்ள படத்தில்.


பொய்களை மூலதனமாக வைத்து மார்க்கத்தை பரப்ப இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது அவ்வளவு பலஹீனமான மார்க்கம் அல்ல இஸ்லாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும். அறிவிப்பவர் : யசீத் பின் சயீத் (ரலி) நூல் : அஹ்மத் (17261) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சிலர் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா நூல் : அஹ்மத் (21986)

விளையாட்டுக் கூட ஒருவரை கேலி பண்ணக் கூட பொய் சொல்லக் கூடாது என்கிற இஸ்லாம் எப்படி மார்க்கப் பரப்புரைக்கு பொய்யை அனுமதிக்கும்,

அற்புதத்தை கத்தரிக்காயில்,மீனில், குழந்தையின் காதில் அல்லாஹ் என்று எழுதியிருக்கிறது என்று தேடாதீர்கள் அது தேவையற்றது. ஏனெனில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் 'நம்பியே ஆகவேண்டிய' அல்லது 'பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய' நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். (புகாரி: 7274.)

எழுதப் படிக்க தெரியாத ஆடு மேய்த்த பழங்குடியின படிக்காத (உம்மி) நபிக்கு இறங்கிய உயர்ந்த இலக்கிய தரத்தில் அதே சமயத்தில் பாமரர்களுக்கும் புரியும் வகையிலுள்ள குர் ஆனே மிகப் பெரிய அற்புதம் இதைவிட வேறு அற்புதங்களை தேட வேண்டிய அவசியமில்லை.