Showing posts with label அழைப்புப் பணி. Show all posts
Showing posts with label அழைப்புப் பணி. Show all posts

Sunday, May 24, 2015

பிறருக்காக நல்லறங்கள் புரிந்தால் மறுமையில் பலனளிக்காது.

பூமியில் இவ்வுலகில் பிறரால் புகழப் பட வேண்டும் என்பதற்காக நற்செயல் புரிகிறவரின் மறுமை நிலை.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்" என்று பதிலளிப்பார்.
இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, "மாவீரன்" என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)"அறிஞர்" என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "குர்ஆன் அறிஞர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்" என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய் "இவர் ஒரு புரவலர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)" என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)

அதே போல விளம்பரத்திற்க்காக நற்செயல் புரிதலும் தவறு.


நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்' என்று கூறியதைக் கேட்டேன்.
புகாரி: 6499. அறிவிப்பாளர் ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி)

மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தொழுகையாளி என்று புகழ வேண்டும் என்பதற்காக தொழுகிறவரின் மறுமை நிலை.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். 
அறிவிப்பாளர்: அபூ ஸயீத்(ரலி) புகாரி 4919. & 4920.
இறுதியாக நாம் ஏன் அழைப்புப் பணி செய்கிறோம் நம்மை விளம்பரப் படுத்திக் கொள்ளவா இல்லவே இல்லை.


நாம் ஏன் அழைப்புப் பணி செய்கிறோம் நேரப் பொழுது போக்கிற்க்காகவா? இல்லவே இல்லை. 

இஸ்லாத்தை சொல்வதின் நோக்கம் மார்க்கத்தை அறியாதவர்கள் ஓரிறையை பற்றி தெரியாதவர்கள் தப்பும் தவறுமாக விளங்கியவர்கள் நேர்வழி பெறவே அதன் மூலம் நமக்குள் அன்பு ஏற்பட்டு சகோதர உறவு வளர வேண்டும் என்பதற்காகவே (பார்க்க வசனம்:)


“அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர” என்று (நபியே!) நீர் கூறும்.

(அல்குர்ஆன்25:57.)