Sunday, January 27, 2013

பல்பு எரிகிறதா என்று பாருங்கள்


பங்காளிப் பகைவர்களை மிஞ்சிக் காட்ட வேண்டுமென்ற உத்வேகத்தில் ஏகப்பட்ட விளக்குகளைப் போட்டுக்கொண்டு ஊர்வலம் விடுவது நம்ம ஊர்ப் பண்ணையார்கள் மட்டுமல்ல, பணக்கார உலகத்துக்கே பொதுவான குணம் இது என்கிறார், லீ பில்லிங்ஸ் (ஸீட் மாகசீன்).
நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் உயரத்திலிருந்து செயற்கைக் கோளின் விழி வழியே நம்மை நாமே பார்க்கும்போது, மனித நாகரீகத்தின் உன்னதமான சில தருணங்கள் தென்படுகின்றன : சீனப் பெருஞ் சுவர், எகிப்தின் பிரமிடுகள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மைலாப்பூர் ரயில் நிலையம். பச்சை- பழுப்பு செஸ் கட்டம் போல் வயல்கள்; அவற்றின் நடுவே நேராக ஓடும் நெடுஞ்சாலைகள்… இதனுடன் கூடவே பல மனித அநாகரீகங்களும் தென்படுகின்றன. புகை கக்கும் தொழிற்சாலை சிம்னிகள், ராட்சச வாய் கடித்த சமூசா போல் கல் குவாரி காண்ட்ராக்டர்களால் சேதப்பட்ட குன்றுகள் என்று பலவற்றை கூகிள் எர்த்தில் பார்க்க முடிகிறது.
தென்கொரியாவும், வடகொரியாவும்
அரை புத்திசாலி, அரை முட்டாள் இனம் ஒன்று இந்த கிரகத்தில் வாழ்வதற்கான அடையாளங்கள் அனைத்தும் சாட்டிலைட்டிலிருந்து தெரிகின்றன. ஆனால் அந்த செயற்கைக் கோள் அரை சுற்று சுற்றி இரவின் கருமைக்குள் போய்விட்டால், நம் நாகரீகத்துக்கு அடையாளமாக ஒன்றே ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிகிறது: மின்சார விளக்குகள்.
1962-ல் விண்வெளிக்குப் போன (சே !) முதல் அமெரிக்கர் ஜான் க்ளென். அவர் ஆஸ்திரேலியாவிற்கு மேலாகப் பறந்தபோது, பெர்த் நகரின் மக்கள் ஒரு பரிசோதனை செய்தார்கள். தங்கள் ஊரில் எல்லோரிடமும் சொல்லி வைத்து, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளக்குகளை ஆன் பண்ணி வைத்தார்கள். ஜான் இதை மேலிருந்து கவனித்து, வெளிச்சத் தீவு ஒன்று தெரிவதை உறுதிப்படுத்தினார்.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுவதற்கு, அவர்கள் இரவில் எரிக்கும் மின்சார லைட்களின் எண்ணிக்கை ஒரு முக்கியமான அளவுகோல். உதாரணமாக, தென் கொரியாவில் டூப்ளிகேட் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றுச் செல்வ வளம் கொழிக்கிறது. இரவு நேரத்தில் சாட்டிலைட்டிலிருந்து பார்த்தால் ஜோதி மயமான முந்திரிப் பருப்பு மாதிரி இருக்கிறது. ஆனால் பாவம், கம்யூனிஸ்ட் பிடியில் சிக்கிய வட கொரியாவோ இருளடைந்து கிடக்கிறது. அதிகாரிகள் வசிக்கும் வீடுகளில் மட்டும்தான் விளக்கு எரிகிறது.
இது ஃபோட்டோ; அன்றைய பொருளாதார நிலவரம். பல வருடங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் கிடைத்தால் ஒரு நாடு முன்னேறியிருக்கிறதா, பின்னேறியிருக்கிறதா என்பதை ஊகிக்க முடியும். சோவியத் யூனியனின் சோசலிச ஏழ்மை நீங்கி, ரஷ்யா படிப்படியாக சுபிட்சம் பெற்ற வரலாறே சாட்டிலைட் படங்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற முன்னேற, இரவு நேர வெளிச்சங்களும் அதிகரிக்கின்றன.
இத்தனைக்கும் இந்தப் படங்கள் அமெரிக்க விமானப் படையின் வயசான சாட்டிலைட்கள் எடுத்தவை. ஒரு சதுர கிலோமீட்டருக்குக் குறைவான பொருட்கள் அதன் கண்ணுக்குத் தெரியாது !
ப்ரௌன் பல்கலைக் கழகத்தின் பொருளாதார வல்லுனர்கள் ஹெண்டர்ஸன், வேய்ல் என்பவர்கள், தங்கள் மாணவர்களை மாடு மாதிரி வேலை வாங்கி, கடந்த பல வருட செயற்கைக் கோள் படங்களை ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள் : ஒரு நாட்டின் GDP என்னும் மொத்த உற்பத்தியும் மின்சார விளக்கு எரிப்பதும் நேரடியாகத் தொடர்பு உடையவை.
இதில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு உபயோகமான புள்ளி விவரம் இருக்கிறது. ஏழை நாடுகளில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படாத இண்டஸ்ட்ரியில்தான் நடக்கின்றன; பில் போடாமல் டாக்ஸ் கட்டாமல் சந்துக்கு சந்து நடத்தப்படுகிற  கம்பெனிகள்தான் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன. அரசாங்கப் புள்ளி விவரங்கள் எல்லாம் இருநூறு சதவீதம் தள்ளித்தான் காட்டும்! எனவே செயற்கைக்கோள் படங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார அளவீடுகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும்
1992 முதல் 2003 வரை உள்ள தகவல்களைப் பார்த்தால், காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்க அறிக்கைகள் யாவும் அழுது வடிந்தன; நாட்டின் ஜி.டி.பி சுருங்கிக் கொண்டே வருவதாகத் தெரிவித்தன. ஆனால் இரவு நேர சாட்டிலைட் படங்கள் சொல்லும் கதையே வேறு; காங்கோவின் பொருளாதாரம் உண்மையில் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அத்தனையும் வரி கட்டாத நிழல் பொருளாதாரம் ! இதற்கு நேர் மாறாக, மியான்மர் சர்வாதிகாரிகளைக் கேட்டால், ‘இந்த சூ-சியைப் பிடித்து ஜெயிலில் போட்ட அன்றிலிருந்தே நாட்டின் பொருளாதாரம் அமோகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் செயற்கைக் கோள் படங்களைப் பார்த்தால் நாளுக்கு நாள் நாடு இருளடைந்து வருவது தெரிகிறது.
கிராமப்புறத்து வயல்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் வருடங்களில், அருகிலுள்ள நகரங்களில் விளக்குகளின் பிரகாசமும் அதிகரிக்கிறது. விவசாயிகள் உபரி வருவாயில் ட்ராக்டர் முதல் டி.வி வரை வாங்குகிறார்கள். நைட் க்ளப்களிலும் மதுக் கடைகளிலும் விடிய விடியக் கூட்டம் இருக்கிறது. மாறாக, வான் பொய்த்து விவசாயி வாடினால் சிட்டியில் விளக்கணைந்து விடுகிறது !
பழங்கால மிலிட்டரி செயற்கைக் கோள்களை அவ்வளவாக நம்ப முடியாதுதான். மேகம் மறைப்பது, நிலா வெளிச்சம், மின்னல் என்று பலவிதத் தொந்தரவுகளால் சாட்டிலைட் படங்கள் மாசடைகின்றன. இருந்தும், புள்ளி விவரங்களே இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக, பொருளாதாரத்தை அளவிட ஏதோ ஒரு ஆதாரம் இருப்பது நல்லதுதானே? இதனால் நாஸாவிடம் கேட்டு இரவு நேர விளக்குகளை இன்னும் தெளிவாகப் படம் எடுப்பதற்காகவே ‘நைட்சாட்’ என்று ஒரு செயற்கைக் கோள் விடுமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நைட்சாட் வந்துவிட்டால், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நம் ஊரின் கரண்ட் இல்லாமல் விளக்குகள் எப்படி ஒளிர்ந்து மங்குகின்றன என்று கவனிப்பது சுவாரசியமான பொழுது போக்காக இருக்கும்.
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)


Friday, January 25, 2013

அமெரிக்கா அடிமைத்தனத்தில் விஸ்வரூபமாய் கமல்.


அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேளையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”


அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம். 

ஆனால் உண்மையிலேயே அமெரிக்கா குழந்தைகளை கொன்றதில்லையா?? அமெரிக்காவை விட வெறு யாரும் கொன்றதில்லை என்பது தான் உண்மை.

பலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக்காட்டிலும் படுமோசமாக உள்ளது
”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
ஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.
அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல  இரத்தப் புற்றுநோய் [leukemia]  பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது.  இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.
RAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, “ஃபலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த ”அதீதமான” உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன்.  இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை” என்று கூறியிருக்கிறார்.
அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது.  இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது.  இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது.  அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்வமான முதல் ஆய்வு இது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.
பல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் கூடிய ஒரு கடிதம் எழுதினர்: “தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள்.  மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள்….
“செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன.  அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன.  அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை…
“ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன.  அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன”.
பாக்தாத் திருடன் அமெரிக்கா ஃபலூஜாவில் வீசிய அணுகுண்டு இப்படிப் பலவாறாக அம்பலப்பட்டு நிற்கிறது.  ஆனால் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஒட்டி மேற்சொன்ன பாதிப்புகள் பெருகி இருப்பதை நிரூபிக்கும்படியான எந்த ஒரு ஆய்வும் இல்லை என பெண்டகன் தடாலடியாக மறுத்துரைக்கிறது.  “குறிப்பான உடல்நலக் குறைபாடுகளை விளைவிக்கும்படியான எந்த ஒரு சூழலியல் பிரச்சினையும் இருப்பதாக ஒரு ஆய்வு கூட இதுநாள் வரை குறிப்பிடவில்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தியாளர் மார்ச் மாதம் பி.பி.சி-க்குத் தெரிவித்தார்.
ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தின்படி அதன் நுட்பமான விவரங்களை அறியும் அளவுக்கு விரிந்த அளவில் அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவில்லைதான்.. ஆனால், ஏன் இல்லை?  ஏனென்றால் அமெரிக்க வல்லரசோ, அதன் ஈராக்கியத் தலையாட்டி பொம்மை அரசோ அவ்வாறான முயற்சிகளைத் தடைசெய்கின்றன என்பதே உண்மை.
ஈராக்கிய அதிகாரிகள் தங்களது ஆய்வு நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர் என்கின்றனர் இப்புதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள். “கேள்விப்படிவத்திலான விவரத்திரட்டு அப்போதுதான் முடிந்திருந்த சமயத்தில், இந்த ஆய்வையே ஒரு பயங்கரவாதச் செயல் போல வர்ணித்து, ’பயங்கரவாதிகளால் ஒரு கேள்விப்படிவம் வினியோகிக்கப்பட்டு விவரத் திரட்டு நடைபெறுகிறது; அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அல்லது விவரம் திரட்டுபவர் எவரும் கைதுசெய்யப் படுவார்கள்’ என்று ஈராக்கியத் தொலைக்காட்சி மிரட்டியது” என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று.  இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.
அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது.  ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.  ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ்.  2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people.... You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய். அது இப்போது ஆஃப்கானில், அமெரிக்க இராணுவத் தலைமை பீடத்தில், பேட்ரஸின் இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறதாம். வாழ்க ‘கருப்பு ஆடு’ ஒபாமா.
கட்டுரை ஆதாரம் : டாம் எல்லி – க்ளோபல் ரிசர்ச், ஜூலை 23, 2010 

Wednesday, January 23, 2013

விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் புரிந்துக் கொள்வது

விஸ்ரூப களவானித்தனம்

ஜனவரி 25 அன்று திரையிட இருக்கின்ற கமலின் விஸ்வரூபம் படத்தைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எதிர்ப்புகள்! முன்னோட்ட காட்சி படிமங்களை பார்க்கும் போதே ஆழமாக ஒரு செய்தியை, ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்தி வட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. முன்னோட்ட காட்சிகளை வைத்து முடிவுக்கு வர முடியாது என்பதாலும் கமலஹாசன் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல, படத்தைப் பார்த்து விட்டு வருத்தப்பட போகிறீர்கள் என்பதாக எல்லாம் சொன்னார்.

 21.01.2013 அன்று இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியபோது, அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள். கமல் "வருத்தப்படுவீர்கள்" என்று சொன்ன சரியான அர்த்தத்தை அன்றுதான் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமலின் விஸ்வரூபம் படங்களை பார்த்துதான் புரிந்துக் கொள்ள வேண்டுமா அவரின் முந்தைய போக்குகளை பார்த்தாலே புரிந்துக் கொள்ளலாமே? ஒவ்வொருவருக்கும் எதாவது வகையிலான கொள்கை இருக்கும். அது இயல்புதான். கமலுக்கும் கடவுள் மறுப்புக் கொள்கை இருப்பதாக காட்டிக் கொள்ளக் கூடியவர். அதையாவது என்றாவது நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறரா? கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் என்று தான் சொல்கிறேன் என அசினிடம் வலிவது போல் காட்சிகளை தசாவதாரத்தில் வைக்கவில்லையா? அதுதான் கமலின் உண்மையான நேர்மையற்ற களவானித்தனம்.

விருமாண்டியில் விடிய விடிய மரணதண்டனை தவறு என்று பெரும் மனிதாபிமான அறிவுஜீவிபோல் பாடம் எடுத்தவர் அப்படியே அவருடைய அடுத்த படமான உன்னை போல் ஒருவனில் அந்தர் பல்டி அடித்து என்கவுண்டர்களையும் மரணதண்டனைகளையும் நியாயப்படுத்தினாரே? தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம், இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.
அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை. 

‘ஹே ராம்’திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது இந்து மதவெறியை அம்பலப்படுத்தும் படம் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை.. படத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட இளைஞனின் பார்வையில்தான் பிரச்சினையைக் காட்டுகிறது. முஸ்லிம்கள் கலவரம் செய்யும் காட்சியுடன்தான் படமே தொடங்குகிறது. வசனங்கள் சில ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துவது போல அமைத்திருக்கலாம். ஆனால் அவை ரசிகனைச் சென்றடையாது. காட்சிப் படிமங்கள்தான் திரைப்படம் என்பது உண்மையில் இது ஆர்.எஸ்.எஸ் திரைப்படம்.

“ இது குதர்க்க வாதம். முஸ்லிம் மக்களை, முதியவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் இந்து வெறியர்கள் வேட்டையாடியதும் படத்தில் இடம் பெறத்தான் செய்கிறது. இறுதிக் காட்சியில் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் இந்து மதவெறிக் குண்டர்கள் புகுந்து கொலை வெறியாட்டம் நடத்துகின்றனர்.ஆர்.எஸ்.எஸ் காரனாக வரும் ஸ்ரீராம் அபயங்கர் முஸ்லிம் மக்களைக் கொலை செய்வதை ‘வேட்டை’ என்று ஒரு ஓநாய் ரத்த வெறியுடன் கூறுகிறான்.இவையனைத்திற்கும் மேலாக, மத நல்லிணக்கத்துக்காப் பாடுபட்டகாந்தியைக் கொன்றவன் யாரோ ஒரு இந்துவல்ல; பார்ப்பனந்தான் காந்தியைக் கொன்றான் என்ற உண்மையைத் தைரியமாக அம்பலப்படுத்தியிருக்கிறார் கமலஹாசன். 

இறுதியில் இந்து மதவெறி பிடித்த கமலஹாசனை அம்ஜத் (ஷாருக்கான்) என்கிற முஸ்லிம் நண்பன் தன் உயிர்த் தியாகத்தால் நெறிப்படுத்துகிறான். இந்த காட்சியும் முஸ்லிம்களை நியாயமாகவும், சரியாகவுமே சித்தரிக்கிறது. எனவே இது பார்ப்பன இந்து மதவெறியை அம்பலப்படுத்தும் படம் தான் என்றும் யாரையும் ஒரு முடிவுக்கு வரவிடமுடியாமல் காய் நகர்த்துவதில் கமல் கில்லாடி.ஹே ராமில் முஸ்லிம்களை வேட்டையாட வருமாறு ஆர்.எஸ்.எஸ்காரன் ஸ்ரீராம் அபயங்கர் அழைக்கும்போது “நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை” என்று மறுக்கிறான். இருப்பினும் சாவர்க்கரின் புத்தகத்தை வாங்கி, மேல் அட்டைப் போட்டு மறைத்து படிக்கிறான்.

’ஹே ராம்’ மகாராஷ்டிராவிலும் டில்லியிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டபோது காந்திக்கெதிரான வசனங்களை ஸ்ரீராம் அபயங்கர் பேசும்போது கைதட்டி பா.ஜ.க. ரசிகர்கள் வரவேற்ற அதேநேரத்தில் கம்யூனிஸ பத்திரிக்கைகள் பார்ப்பனக் கும்பலை அம்பலப்படுத்தும் இந்தப் படம் ஒருவேளை தடை செய்யப்படுமானால் அதற்குக் காரணம் சங்கர மடத்தின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று எச்சரித்தன.

கமலின் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் உலகமயமாக்களை எதிர்க்கிற மார்க்சிய,கம்யூனிஸ, நாத்திகத்தை போதிக்கும் திரைப்படம் என்று கம்யூனிஸ பத்திரிக்கை தீக்கதிர் உச்சி மோந்திருந்த அதேவேளையில், உலகமயமாக்களின் ஒன்னாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதிய ஜனதாவின் தலைவர் இல.கணேசனும் சிறந்த ஆன்மீக படம் என்று பாராட்டினாரே? இதுதான் கமல்.

வெள்ளித்திரையில் சிவப்புநிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமாக் கொட்டகையில் 50,100 அபராதம் கட்டிய கம்யூனிஸ ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட நீயும் கடவுள், நானும் கடவுள் என்கிற அத்வைத ஆன்மீகக் கொள்கை கொண்ட திரைப்படம் காட்டப்பட்டது. உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். ஆனால்Rss கொள்கையை சொல்லும் இணையதளங்களிலும்,முகநூலிலும் முகமூடியாக, அடையாளப்படமாக உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் மொட்டை மாடியில் லேப்டாப் வைத்து உட்காந்திருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்.
தேவர்மகன் திரைப்படத்தில் தென்மாவட்ட அருவா கலாச்சாரத்தையும்,ஜாதி வெறியையும்,கலவரங்களையும் சாடுவதாக அவைகள் தவறு என்று சொல்லும் தோணியில் படம் துணிந்து எடுத்திருப்பதாக பத்திரிக்கைகள் அப்போது பாராட்டின. ஆனால் இன்றும் எனது தென்மாவட்ட ராமநாதபுர கிராமங்களில் நடக்கும் தேவர்சமூக திருமண பத்திரிக்கைகளிலும் டிஜிட்டல் கல்யாண பேனர்களிலும் தெருவில் ஒட்டப்படும் போஸ்ட்டர்களிலும் கமல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அரிவாளோடு நிற்கிற தேவர்மகன் ஸ்டில்களைதான் போடுகிறார்கள். அவர்கள் திருவிழாக்களில்,கல்யாண பந்தல்களில் போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல்கள் ஒலிக்கிறது எனில்.இதில் கமல் பிராண்ட் களவாணித்தனம் தெரியவில்லையா?

விஸ்வரூபமும் அப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அமெரிக்காவிற்கு எதிரான காட்டமான வசனங்களும், அமெரிக்கா அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொல்வதாக காட்சிகளும் இருக்கும், அந்த தைரியத்தில் தான்  படத்தைப் பார்த்தால் எனக்கு பிரியாணி வாங்கி தருவீர்கள் என்றார், மறுபுறம் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்கிற காட்சி படிமங்களை மிக அழுத்தமாக பதியவைத்து இறுதியில் அமெரிக்கா செய்வது நியாயம் தான் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்பது போல் விடை பெறுவார்.

எல்லோரும் முட்டாள்கள், நான் சகலகலா வல்லவன் அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். என்கிற சாதுரிய நரித்தனம் விஸ்வரூபமாக வெளிவர இருக்கிறது. இம்முறை அனுமதிக்க மாட்டோம். இம்முறை கமலின் முகத்(சினிமாத்)திரை கிழியும்.

பின்குறிப்பு:
Auro 3 தேர்ந்த இசை, தேர்ந்த நடிகர்கள்,துல்லியமான ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு,பெரும் பொருட்செலவு... எல்லாம் சரிதான். பிச்சை எடுப்பதற்கு யானை வாங்க வேண்டுமா?

Sunday, December 30, 2012

இவர்களை கொல்லாதீர்கள்,திருட்டு மனிதர்களே.

மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான். ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத்தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.

பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.

இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே ? 
சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையை அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்த வரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக்கும் பிடிபடவில்லை…
இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ், அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித்தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு !
வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன் கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு பற்றிப் பார்க்க வேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
தேனீக்கள் முதன் முதலில் அமெரிக்காவுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்தப் புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்தபோது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங்குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை.
தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற் புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணைகள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக்காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரிதானபோது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்ததுதான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக்கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள். அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா… இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலை விதியாகவே ஆகிவிட்டது.
இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக்கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள் ! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது என்பதற்கும் பல ஆராய்ச்சி முடிவுகள் சாட்சி இருக்கின்றன.
அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள்கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்துகளின் மிச்சங்களும் அதில் காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை !
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)

Monday, December 10, 2012

கேன்சர் : மருந்து இருந்தால் சொல்லுங்கள்!


சிலருக்கு பெரிய வியாதியாக இருக்கும்; ஆனாலும் மனம் தளராமல் வீரமாக எதிர்த்துப் போராடுபவர்கள் இவர்கள். ‘கான்சருடன் போராடி வீர மரணம் எய்தினார்’ என்று ஆபிச்சுவரி கூட வரும். ஆனால் ‘ஸோ அண்ட் ஸோ, பலவீனமாக நோயை எதிர்க்க முயற்சி செய்து பரிதாபமாகச் செத்தார்’ என்று யாரைப் பற்றியாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
இவை இரண்டுமே தப்பான பார்வைக் கோணங்கள் என்கிறார், மைக் மார்க்குஸி. (http://www.mikemarqusee.com/?p=870) மைக்கிற்கு, பன்முக மைலோமா(ஒரு வித ரத்தப் புற்று நோய்) பாதித்திருப்பதாக இரண்டு வருடம் முன்னால் கண்டுபிடித்தார்கள்.
கான்சர் போல வியாதி வந்தால் வீர தீரமாக அதை எதிர்த்துப் போர் புரிய வேண்டும். அப்போதுதான் பரணி பாடுவார்கள், பள்ளிப்படைக் கோவில் கட்டுவார்கள். கான்சரை எதிர்க்க முடியவில்லை, வேகமாகப் பரவுகிறது என்றால் நோயாளியிடம்தான் ஏதோ தப்பு இருக்கிறது. மனதில் ‘வில் பவர்’ போதவில்லை என்பார்கள். போரில் தோற்றுப் போய் வில்லைக் கீழே போட்டுவிட்டான் என்பார்கள்.
மொத்தப் பழியையும் பேஷண்ட் மீது போட்டுவிட்டு விலகிக் கொள்ளும் இத்தகைய போக்குகளுக்குப் பின்னால், மேற்கத்திய நாடுகளுக்கே உரிய ‘தான்’ என்ற தனி மனித சுய வழிபாடு இருக்கிறது. வெற்றி-தோல்வி என்று அவர்கள் சுண்டிவிட்ட காசுக்கு இரண்டே பக்கம்தான். ஒவ்வொரு தனி மனிதனின் தகுதிக்கும் ஏற்ப வெற்றியும் தோல்வியும் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு, ஏழைகளே காரணம். அதுதான் மார்க்கெட்டின் விதி !
பராக் ஒபாமா, ‘ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்வையும் ஏதோ ஒரு வகையில் தொட்டுவிட்ட கான்சருடன் போராட ஒரு புதிய வியூகம் அமைத்திருக்கிறோம்’ என்கிறார். அவருக்கு முன்னால் நிக்ஸன் ‘இன்னும் பத்து வருடத்தில் கான்சருக்கு ஒரு மருந்து கண்டுபிடித்துவிடுவோம்’ என்றார். அது சொல்லிப் பல பத்து வருடம் ஆயிற்று. ஒபாமா சற்று ஜாக்கிரதையாக ‘நம் வாழ்நாளுக்குள் கான்சரை ஒழிப்போம்’ என்கிறார். நீண்ட ஆயுளுடன் இருக்கப்போகிறோம் என்று யாருக்குத்தான் நம்பிக்கை இல்லை ?
‘கான்சருக்கு எதிரான போர்’ என்பது, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது போல்தான் பயனின்றிக் காற்றில் தோட்டா சுடுவது. முதலில் ஒரு அடிப்படைக் கேள்வி : எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்துச் செய்ய வேண்டிய எந்த ஒரு செயலையும் ‘போர்’ என்று உருவகப்படுத்துவது எதனால் ? இது போர் என்றால், எதிரிகள் யார் ? (நல்ல விஷயத்துக்குக் கூட முழு மூச்சாக ‘க்ருஸேட்’ நடத்தும் மேலை நாட்டு சொற் பிரயோகங்களை, ‘ஊர் கூடித் தேர் இழுப்பது’ போன்ற நம் உருவகங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அமைதி விரும்பிகள் ?)
போர் வெறியுடன் ‘புற்று நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கிறோம்’ என்று இறங்குவதில் சற்றே முட்டாள்தனமும், பெரிதே நேர்மைக் குறைவும் தெரிகின்றன. கான்சருக்கு ஒரு தனிப்பட்ட மருந்து அல்லது ஒற்றை சிகிச்சை கண்டுபிடிக்கப்படுவது அவ்வளவு சாத்தியமாகத் தோன்றவில்லை. நமக்குத் தெரிந்த கான்சரிலேயே 200 வகைகள் உண்டு. அவற்றின் காரணங்களும் வெவ்வேறானவை.
கான்சருக்கு சஞ்சீவி மலையைக் கொண்டு வருகிறேன் என்று ஒற்றைத் திசையில் உழைப்பையும் பணத்தையும் செலவழித்துக் கொண்டிருந்தால் மற்ற பல முக்கியமான துறைகள் கவனிக்கப்படாமல் சவலையாகிவிடுகின்றன : வருமுன் காப்பது; விரைவில் கண்டுபிடிப்பது; வந்த பிறகு தரமான சிகிச்சை பரவலாகக் கிடைக்க வழி செய்வது போன்றவையே நம் உடனடித் தேவைகள். இவற்றுக்கு, புரட்சிகரமான புதிய கண்டுபிடிப்பு எதுவும் தேவையில்லை.
ஆனால், கான்சர் எதிர்ப்புப் பணிகளை, ‘போர்’ என்று வர்ணிப்பதில் பல பேருக்கு சகாயமும் இருக்கிறது, சம்பாத்தியமும் இருக்கிறது.
விஞ்ஞானிகள் ஓய்வாக இருக்கும்போது ஒரு கையால் தாடியையும் மறு கையால் மனச்சாட்சியையும் கோதிக்கொண்டு யோசிக்க வேண்டும். புகையிலை, ஆஸ்பெஸ்டாஸ் போன்றவைகளால் கான்சர் வருகிறது என்ற உண்மை விஞ்ஞானிகளுக்கு விரைவிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் அது பரவலாக வெளியே வருவதற்குப் பல பத்தாண்டுகள் ஆயிற்றே, ஏன் ? அரசல் புரசலாக உண்மையைப் பேச முயன்றவர்களையும் ‘பூ பூ !!’ என்று கத்தி வாயடைத்து உட்கார்த்தி வைத்துவிட்டார்களே, அதுதான் ஏன் ? காரணம், இவற்றைத் தயாரிக்கும் மெகா கம்பெனிகள். அவற்றின் கிகா வருமானம் !
கடந்த 2007-ம் வருடத்தில் பிரிட்டனில் ஆறு சதவீத கான்சர், பணியிடம் சார்ந்து ஏற்பட்டதுதான். இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் பிறகு யாரிடம் போய்த் தேர்தல் நிதி வசூல் செய்வதாம் ? எனவேதான் ‘மாமருந்து கண்டுபிடிப்போம்’ என்ற மார்தட்டல்கள்; அவை, உண்மையான பிரச்னையிலிருந்து கவனத்தைத் திருப்பும் முயற்சி !
தற்போதுள்ள மருத்துவ விஞ்ஞானமே கான்சரைச் சமாளிப்பதில் கணிசமாக முன்னேறியிருக்கிறது. பிரிட்டனில் கான்சர் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிப் பேர் ஐந்து வருடம் அல்லது அதற்கு மேலும் வாழ்கிறார்கள். ஆச்சரியமான புதிய மருந்துகளை விட, இருக்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு சீக்கிரமாகவே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க ஆரம்பிப்பது அவசியம். தரமான சிகிச்சை எல்லோருக்கும் பரவலாகக் கிடைப்பதும் அவசரம். ஆனால் நிலைமை என்ன ?
இங்கிலாந்து-வேல்ஸ் பகுதியில் மட்டும் பெண் கான்சர் நோயாளிகளில் பாதிப் பேருக்குதான் நல்ல சிகிச்சை கிடைக்கிறது. அதுவே ஆணாக இருந்தால் முக்கால்வாசிப் பேருக்கு சிகிச்சை கிடைக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் சதவீதக் கணக்கு போட ஆரம்பித்தால், கால்குலேட்டரிலேயே காண்பிக்க முடியாத அளவுக்கு சின்ன எண்ணாகத்தான் இருக்கும். இதையெல்லாம் சரி செய்வதற்கு நம் அமைப்புகளில் மாற்றம் தேவையே தவிர, புதிய மருந்துகள் எதுவும் தேவையில்லை.
நிஜமோ கற்பனையோ, எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் சில பிணக் கழுகுகளுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. கான்சர் ‘போரிலும்’ அப்படித்தான். கான்சர் நோயாளிகள் வெளி நாட்டுப் பயணம் செல்வதற்கு முன்பு இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முயன்றால் பத்து மடங்கு ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
ஈஸி சேரில் உட்கார்ந்துகொண்டு ‘கான்சர்தானே ! கவலையே வேண்டாம்’ என்று சுய உதவி நூல்கள் எழுதி சம்பாதிக்கவே ஒரு எழுத்தாளர்-பதிப்பாளர் கூட்டம் இருக்கிறது. மல்ட்டி வைட்டமின் மாத்திரை விற்பவர்கள் முதல் ஆல்டர்னேடிவ் மெடிசின், காந்த சிகிச்சை, சர்வ ரோக நிவாரணக் கற்கள், தலைச்சன் பிள்ளை மண்டை ஒட்டு தாயத்து என்று வித விதமான வியாபாரிகள் செம துட்டு பார்க்கிறார்கள்.
இவர்கள் எல்லோரையும் விடக் கில்லாடிகள் என்று சொல்லத் தக்கவர்கள் பல அல்லோபதி மருந்துக் கம்பெனிகள்தான். மருந்து விலைகள் மட்டுமல்லாது மருந்து ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி முடிவுகள் எல்லாமே இவர்களின் இரும்புப் பிடியில் இறுகியிருக்கின்றன. மற்ற எந்த இண்டஸ்ட்ரியையும் விட மூன்று மடங்கு லாபம். பண வீக்கத்தை விட எப்போதும் ஒரு படி உயரத்திலேயே பயணம் செய்யும் மருந்து விலைகள். கேட்டால் ‘எங்கள் ஆராய்ச்சி செலவுகள் அதிகம்’ என்பார்கள். உண்மை என்னவென்றால் மருந்துக் கம்பெனிகளின் ஆராய்ச்சி வளர்ச்சி செலவுகள், அவர்களுடைய விளம்பரச் செலவு, லாபி செய்வது இவற்றில் பாதிதான். மார்க்கெட்டினால் அதிக பட்சம் எவ்வளவு வலி தாங்க முடியுமோ, அவ்வளவு உயரத்தில் விலையை ஏற்றி வைத்துவிடுகிறார்கள்.
மருந்து ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடுவதில் கூடப் பற்பல வெட்டு, ஒட்டு வேலைகள், ஸ்டாடிஸ்டிக்ஸ் பொய்கள். இதில் தெரிந்தோ, தெரியாமலோ மீடியாவும் கூட்டணி. பாதகமான செய்தியாக இருந்தால் முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளைக் கூட இருட்டடிப்பு செய்துவிடுவது, ஒன்றுமில்லாத விஷயத்தை ‘புரட்சிக் கண்டுபிடிப்பு - இனி நோயாளிகளுக்கு விடிவு காலம்தான்’ என்றெல்லாம் முடி சிலிர்க்கும் கருத்துப் பத்திக் கட்டுரை எழுத வைப்பது என்று அவர்கள் செய்யும் உள் குத்து வேலைகள் ஏராளம்.
கடைசியில், கான்சர் நோயாளிகளுக்கு அடிப்படையான பிரச்னையே அரசாங்கங்கள்தான் என்று தோன்றுகிறது. இன்று உடல் நலப் பாதுகாப்புக்குப் பொது நிதி ஒதுக்கீட்டைப் படிப் படியாகக் குறைத்துக்கொள்ளாத கவர்மெண்ட்டே இல்லை. ஏற்கனவே வேதனையில் குற்றுயிராகக் கிடக்கும் நோயாளிகளைத் தனியார் ஆஸ்பத்திரி - மருந்துக் கம்பெனிகள் முன்னால் ‘இந்தா, சாப்பிடு !’ என்று எலும்புத் துண்டு போல் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களே, இந்த வியாதிக்கு ஒரு மருந்து உண்டா ?
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)
பின்குறிப்பு: அப்படியே இந்த பதிவையும் படித்துப் பாருங்கள் http://www.islamiyapenmani.com/2012/12/to.html மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்.

Friday, December 7, 2012

18+ எனது மலேசியா சிறை அனுபவம். (மீள்பதிவு)

18+ என்று போட்டவுடன் என்னோவோ ஏதோ என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.  வரதட்சனை எனும் கொடுமையால் என் நண்பன் எப்படி பாதிக்கப் பட்டான் என்பதை விளக்குவதற்காக அந்த 18+ வீடியோவை இணைத்துள்ளேன்.

சரி புத்தக அறிமுகத்திற்கு பிறகு மலேசியாஉண்மை சம்பவத்திற்கு போவோம்.

ஆசிரியர்: 
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து சமுதாயத்தின் நல்லொழக்கத்தைச் சீர்குலைக்கின்ற மாபெரும் தீமையாகத் தலைவிரித்தாடுகின்றது வரதட்சிணை எனும் கொடுமை! முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தத் தீமைகளின் ஆணிவேர் எது? இது எங்கிருந்து முளைத்தது? எப்படிப் பரவியது? அந்த ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிய என்ன வழி? அதைத்தான் இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் கே. வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள். அதுமட்டுமல்ல, வரதட்சிணைக்கு ஆதரவாகப் பேசுவோர் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய பதில்களையும் டாக்டர் அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.

பொற்றோர்,இளைஞர்கள்,இளம்பெண்கள்,சமயச் சொற்பொழிவாளர்கள்,
ஆன்மிகவாதிகள்,சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்புகளையும்
எடுத்துரைத்துள்ளார்.

இந்த புத்தகத்தில் நான் கோடிட்ட ரொம்ப பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

வரதட்சிணை என்பது எந்த உழைப்பும் இல்லாமல் முதலீடு இல்லாமல் ஒரு பெண்ணின் இயலாமையையும் சமூகத் தந்திரங்களையும் பயன்படுத்திப் பெற்ற பணமாகும்.இதுவும் ஒருவகையில் வழிப்பறிக் கொள்ளையே ஆகும்.

கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.வரதட்சிணை வாங்குபவர்களோ பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.வழிப்பறிக்காரர்கள் சில வேளைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் வரதட்சிணை வாங்குபவர்களோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதோடு,சமூகத்தில் அந்தஸ்தோடும் உலா வருகின்றனர். எனவே கொள்ளையர்களை ‘புத்தியற்ற கொள்ளைக்காரர்கள்’என்றும், வரதட்சிணை வாங்குபவர்களை ‘புத்திசாலித்தனமான கொள்ளைக்காரர்கள்’
என்றும் வர்ணிக்கலாம்.

இப்போது என்னுடைய மலேசியா சிறை அனுபவம்.


நீ எப்ப மலேசியா போன' என்று கேட்பவர்களுக்கு.இங்கே அழுத்துங்கள் மலேசியா கள்ளக் குடியேறி என்ற முந்தைய பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.2001ல் மலேசியாவில் கட்டிடட தொழிலாளியாக பர்மீட் இல்லாமல்வேலை பார்க்கும் போது பிடிபட்டு. மலேசியாவின் நெகிரி சிம்பிலான் என்ற ஊரில் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்.
மலேசியாவில் சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான்டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன்.


போலீஸில் பிடிபடும்போது போட்டுயிருக்கிற ஒரே ஒரு துணி தான் இருக்கும்.
சிறையில் எனக்கு முன்னரே பிடிபட்ட 120 மேற்பட்ட தமிழர்கள் இருந்தார்கள்
ஒரு மாத சிறை வாழ்க்கையில் பலரின் சிறைநட்பு கிடைத்தது. அதில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நண்பர் (பெயர் வேண்டாமே). அவரோடு மாப்பிள்ளை, மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது.


சிறையில் முக்கால் வாசி பேர் குளிக்கும் போது ஆடையில்லாமல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள். சிறையில் பாகிஸ்தான், 
இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாங்க மொத்தம் 500 பேர். அதில் உடுத்துன ஆடையோடு குளித்த ஒருசிலரில் நானும், நண்பனும் அடக்கம். அதாவது ஜீன்ஸ் பேண்ட போட்டுகிட்டு குளிக்கிறது. முடிந்த பிறகு சட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட புழிந்துவிட்டு மறுபடிக்கும் போட்டுகிட்டு காய்வதற்காக வெயிலில் நிற்பது.

இப்படி நண்பன் குளித்து விட்டு சட்டையை இடுப்பில் கட்டுவதற்காக முயற்சிக்கும் போது எதார்த்தமாக விலகி அவனுடைய குந்துபுறம் தெரிந்தது. அதில் ஆழமாக மூன்று கரும்கோடுகள் தழும்பு மாதிரி இருந்தது. பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 
'டேய் மாப்ளா என்னடா இது' என்று கேட்டே விட்டேன். அதற்கு அவன் 'சிங்கப்பூர்ல இருந்தேன் மச்சான். அங்கே பர்மீட் இல்லாமல் தங்கி இருக்கிறவங்கள மூன்று
ரோத்த அடி குடுப்பாய்ங்கே. நான் அங்கு பிடிபட்டபோது எனக்கு கிடைத்த அடியின் தழும்பு இது' என்றான்.
                                      சிங்கப்பூரின் தண்டனை ரோத்த அடிப்பது இப்படித்தான்

'நீ சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லையா?' என்று கேலி செய்தேன். அதற்கு பிறகு அவன் சொன்ன பதிலில் கண்கள் உடைந்து அழுதேன். 

'அப்பா கூலித்தொழிலாளி. அன்றாட காச்சி. எனக்கு இரண்டு சகோதரிங்க. ஒன்னுக்கு வயது 30, இன்னொக்கு 32, இரண்டு பேரையும் கட்டிக்கொடுக்க முடியவில்லை. நான் டுரிஸ்ட விசாவில் சிங்கப்பூர் வந்தேன் பாஸ்போர்ட்டை தூக்கி போட்டு விட்டு இரண்டு வருடம் வேலை செய்து சில லட்சங்களை சேர்த்து மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தேன். இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை, இனி ஊருல எதாவது புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக இருந்து பிழைத்துக் கொள்வேன்' என்றான். இன்றும் அவன் நட்பு தொடர்கிறது. 

வரதட்சணையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.

Sunday, December 2, 2012

சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!

இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே என்னுடைய உடற்பயிற்சி சம்பந்தமான பதிவுகளில் சுவாசத்தின் முக்கியதுவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன் பார்க்க: இங்கே அழுத்துங்கள்


சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?
சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.
கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.
கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.
மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.
கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!
நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)
டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.
கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இறுதியாக ஒன்று
மனிதன் உயிர் வாழப் பிராண வாயு எனப்படும் ஆக்ஸிஜன் அவசியம். இந்த ஆக்ஸிஜன் தான் இரத்தத்தைச் சுத்திகரிக்கச் செய்கிறது. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

இந்த ஆக்ஸிஜனை மனித உடல் எந்த அளவுக்குப் பெறுகிறதோ அந்த அளவுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.காற்றிலிருந்து அதிக அளவு ஆக்ஸிஜனை உடல் பெற்றுக் கொள்ள உடற்பயிற்சி வழி செய்தாலும். ஒரு சில விஷயங்களை நாம் உடற்பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டும்.

1. எப்போதும் மூச்சை கவனிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் வாயினால் சுவாசிக்காதீர்கள்.

இணையத்தில், பேஸ்புக்கில் ஷாட் செய்யும் போது உதடுகளை இறுக மூடிக் கொள்ளுங்கள். மூக்கினால் சுவாசியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் வாழ்த்துகள்.

Friday, November 30, 2012

உடல் எடையை குறைக்க என்ன வழி...?

ஊதிய உடலை இளைக்க வைப்பது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் ‘உட்கார்ந்து தீனி தின்னாதே; ஓடியாடு; உடற்பயிற்சி செய்’ என்பதாகும். ஆனால் காலம் காலமாக நிலவி வரும் இந்தப் பொன்மொழி இப்போது பொலிவிழந்து வருகிறது என்கிறார், க்ரெட்சென் ரெனால்ட்ஸ்(http://well.blogs.nytimes.com/2009/11/04/phys-ed-why-doesnt-exercise-lead-to-weight-loss/).

கையைக் காலை ஆட்டினால் காலரிகள் எரிந்து அதனால் கொழுப்பு குறையும் என்பது உண்மைதான்; சோபாவில் சரிந்து கிடந்து டி.வி பார்ப்பதை விட, எழுந்து நடக்கும்போது அதிக காலரிகள் செலவாவதும் உண்மை. ஆனால் நிமிடத்துக்கு நாலைந்து காலரிகளைத்தான் இப்படி உதிர்க்க முடியும். எண்பத்தைந்து கிலோ மக்களுக்கு இந்த ரேட் போதாது ! உடல் இளைக்க வேண்டுமென்றால், பட்டர் மசாலா கேட்கும் நாக்கைப் பல்லால் கடித்து அடக்க வேண்டும்; பசித்தால் பச்சை முட்டைக்கோஸைத் தின்று தண்ணீர் குடிக்க வேண்டும்; சுருங்கச் சொன்னால், எடையைக் குறைக்க ஒரே வழி, சற்றேறக் குறைய சாப்பாட்டை நிறுத்துவதுதான் !


கொலராடோ மருத்துவக் கல்லூரியில் செய்த ஓர் ஆராய்ச்சியில் மூன்று விதமான மக்களைப் பிடித்துக்கொண்டு வந்து பரிசோதித்தார்கள். முதல் பிரிவினர், காற்றுப் போல் லேசாகக் காணப்பட்ட பந்தய வீரர்கள். இன்னும் சிலர், உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஒல்லியான உடல் வாகு கொண்ட அதிர்ஷ்டசாலிகள். கடைசி பிரிவினர் கொழு கொழு குண்டர்கள். எல்லோரையும் மாபெரும் காலரி மீட்டர் அறை ஒன்றில் அடைத்து, மனித உடல் தன் கொழுப்புத் திப்பிகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்று ஆராய்ந்தார்கள்.
நமக்கு நடமாட சக்தி தருபவை கார்போ ஹைட்ரேட், கொழுப்பு இவை இரண்டும்தான். பார்ப்பதற்கு ஓமப் பொடி போல் இருப்பவர்களுக்குக் கூட உடலில் கொழுப்பு செல்கள் ஏராளமாக உண்டு. உடலின் ஓடியாடும் தேவைகளுக்கு நேரடியாக இந்தக் கொழுப்பை எரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் தொப்பை கரையும்; இடுப்பும் தொடையும் மெலியும்; பஸ்ஸில் பக்கத்து சீட்காரர் முறைக்க மாட்டார்.
எக்ஸர்ஸைஸ் செய்யும்போது அந்த நேரத்தில் கொஞ்சம் கொழுப்பு உபயோகிக்கப்படுவது உண்மை. ஆனால் உடற்பயிற்சியை முடித்து தினசரிக் கடமைகளுக்குத் திரும்பின பிறகும், உடல் தொடர்ந்து கொழுப்பை எடுத்துக் கொள்கிறதா என்று பார்ப்பதுதான் கொலராடோ பரிசோதனையின் நோக்கம். ஃபிட்னஸ் புத்தகங்களில் இதை ஆஃப்டர் பர்ன் என்பார்கள்.
சோதனையில் கலந்து கொண்டவர்களை முதலில் காலரி மீட்டருக்குள் 24 மணி நேரம் புத்தகம் படித்துக்கொண்டு அமைதியாக உட்காரச் சொன்னார்கள். வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் தினம் மூன்று வேளை தலப்பாக் கட்டு பிரியாணி கொடுக்கப்பட்டது. பிறகு ஒரு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே மிதமான வேகத்தில் சைக்கிள் பெடல் போட வைத்தார்கள். உடற்பயிற்சியை மிதமாகச் செய்யும்போதுதான் கொழுப்புகளை உடல் எடுத்துக்கொள்ளும். தலை தெறிக்க ஓடினால் உடனடி சக்தி தேவைப்படுவதால், கார்போ ஹைட்ரேட்களைத்தான் சீக்கிரமாக ரத்தத்தில் அனுப்பி தசைகளுக்கு சக்தி தர முடியும். எக்ஸர்ஸைச் செய்தால் அன்றைக்கு ஆஃப்டர் பர்ன் நிகழ்கிறதா என்று பார்ப்பதே விஞ்ஞானிகளின் நோக்கம். கொழுப்பு எரிவதை அளவிடுவதற்கு காலரி மீட்டர்.
கொலராடோ பரிசோதனையில், கலந்துகொண்டவர்கள் யாருக்கும் ஆஃப்டர் பர்ன் ஏற்படுவதற்கான அறிகுறியே இல்லை ! சொல்லப் போனால், ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்த அன்றைக்கே அதிகம் கொழுப்பு செலவானதாக சந்தேகம்.
இதன் அடிப்படைச் செய்தி, காலரி சாப்பிட்டால் காலரியை எரித்தே ஆக வேண்டும். அரை மணி நேர உடற்பயிற்சியில் சராசரியாக 200-300 காலரிதான் இழக்க முடியும். டவலால் துடைத்துக்கொண்டு களைப்புத் தீர ஒரு கோக் குடித்தால் அத்தனை காலரியும் திரும்ப வந்துவிடும் !
ஆனால் உடற்பயிற்சியால் பலனே இல்லை என்பதல்ல; கார்டியோ குதிப்புகள் இதயத்துக்கு நல்லது.  எக்ஸர்ஸைஸ் செய்தால் சில பல ஹார்மோன்கள் சுரந்து நம் மூடை உற்சாகமாக்கும். பட்டினியால் குறைத்த எடையை அங்கேயே மெயின்டென்ய்ன் செய்யவும் மிதமான உடற்பயிற்சி உதவும். இதயத் துடிப்பு 105 முதல் 134 வரை இருக்கும்படி செய்யும் எக்ஸர்ஸைஸ்தான் கொழுப்பு கரைக்கும் ரேஞ்ச். ஆனால் மிக முக்கியம், அத்தனை காலரிகளையும் உடனே சாப்பிட்டுத் திரும்ப எடுத்துக் கொண்டுவிடக் கூடாது !
அந்த மசாலா சிப்ஸ் பாக்கெட்டை அப்படியே கொண்டு போய் நாய்க்குப் போடுங்கள்.
பின்குறிப்பு: ஆலோசனை சொன்னா 10,000 ரூபாய் பரிசு. பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னேடுத்தும் செல்லும் "இஸ்லாமிய பெண்மணி" தளம் தற்போது மற்றொரு முயற்சியாக ஒரு மாபெரும் பரிசுப்போட்டியை அறிவித்துள்ளது. கலந்துக் கொள்ளுங்கள் அதனை கான கட்டுரைப் போட்டி இங்கே அழுத்துங்கள்.

Wednesday, November 28, 2012

உங்களுக்கு தெரியுமா சேதி...?


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார்.  ‘ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’

 ‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’

‘அதில்லை...’

 ‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’

 ‘இல்லை’

 ‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’

 ‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம் செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா? என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?

எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர். ‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?’

 ‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத் திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?’

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.(அல்குர்ஆன் 104:1 )