Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Tuesday, April 24, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன? -2


இதன் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

இன்று நம் நாட்டிலும்  உலகேங்கும் மிக அதிகமாகப் பேசப்படுகின்ற சொல்தான் உலகமயமாக்கல் (Globalisation).
உலகமயமாக்கலோடு சேர்த்து அலசப்படுகின்ற சொற்களாக தலமயமாக்கல் (localisation), தாராளமயமாக்கல் (Libralisation), தனியார்மயமாக்கல் (Privatisation) ஆகியவற்றையும் சொல்லலாம். இந்த நான்கும் நம் நாட்டில் மட்டுமல்லாமல் வளரும் நாடுகளிலும் உலகெங்கும் மிக அதிகமாக அலசப்படுகின்ற, பேசப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற சொற்களாக இருக்கின்றன.

எதோ கேட்பதற்கு எந்தவிதமான தொல்லையும் தராத, தீங்கற்ற, முற்போக்கான,வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்கிற மயக்கத்தில் ஆழ்த்தக் கூடிய கவர்ச்சியான சொற்களாக இவை தோன்றுகின்றன. ஆனால் இந்த நான்கு சொற்களுக்கும் பின்னணியில் தனி வரலாறே இருக்கின்றது; வானளாவிய நோக்கங்கள் இருக்கின்றன.

சென்ற பதிவில் உலகமயமாக்கல்,பொருளாதாரம்,வெளிநாட்டு வணிகம், இவைகளை பார்த்தோம். இனி வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு இவை குறித்து பார்ப்போம்.

வெளிநாட்டு உறவுகள்.

அடுத்ததாக, வெளியுறவுத் துறையை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளுடனான பரஸ்பர உறவுகளையும், அந்த உறவுகளின் கனம், பரிமாணம்,நீடித்து நிலைக்கின்றதன்மை போன்றவற்றையும் தீர்மானிக்கின்ற உரிமை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு இருக்கின்ற மறுக்க முடியாத உரிமையாகும்.

எந்த நாட்டுடன் நாட்டுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது, எதனுடன் உறவை நீட்டிப்பது, எதனுடன் உறவைத் துண்டித்துக் கொள்வது போன்றவற்றைத் தீர்மானிக்கின்ற உரிமையும் இதில் அடங்கும். இவையெல்லாம் அன்றாடம் கவனிக்க வேண்டிய விவகாரங்களாக இருக்கின்றன.

ஒரு நாட்டின் சுதந்திரம், சர்வதேச கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற விவகாரங்கள் இவை. ஆனால் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய தோழமை நாடுகளும் இவற்றையும் உலகமயமாக்குவதில் வெற்றி பெற்று வருகின்றன.

பின்தங்கிய, நலிவுற்ற நாடுகளும் மூன்றாம் உலகநாடுகளும் தம்முடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானாலும், அவற்றோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றாலும் எல்லாவற்றையும் அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற்றே செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த நாட்டுத் தலைவர்களும் பிரதமர்களும் தம் அண்டைநாட்டு அதிபர்களுடன் தொலைபேசியில் பேச நினைத்தாலும் உலக அரங்கில் பெரிய தாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் முகக்குறிப்பை அல்லது கண் அசைவைப் பார்த்தே தொலைபேசி எண்களைத் தட்டத் தொடங்குவர்.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் நடத்துகின்ற கட்டப் பஞ்சாயத்து இது.தலைதாழ்த்தி,வாய் பொத்தி,கூழைக் கும்பிடு போட்டு ஒழுங்காக நடந்து கொண்டீர்கள்... தப்பித்தீர்கள்.திமிறி நிமிர்ந்தாலோ கதை கந்தல்தான்.

விதவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் முகத்தில் வீசப்படும். வட்டார ஒத்துழைப்புக் கான நிறுவனங்கள், இருதரப்பு,முத்தரப்பு மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்கள் என பல்வேறு ஒப்பந்தங்களில் கட்டிப் போட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள். மனித உரிமை பாதுகாப்பு என்கிற கூப்பாடு,பயங்கரவாதத்தைத் தடுப்போம் என்கிற சாக்குப் போக்கு என இவை போன்ற பால்வேறு வழிமுறைகளைக் கையாண்டு நினைத்ததைச் சாதித்து விடுவார்கள்.

இவ்வாறாக, தம்முடைய வெளியுறவுகளை சுயமாகத் தீர்மானிக்கின்ற உரிமை அந்த நாடுகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்.ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு தன்னுடைய வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்ற உரிமையும் இல்லாமல் போகும் போது அந்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான மதிப்பும் செல்வாக்கும் எஞ்சி இருப்பதில்லை அது பொம்மை அரசாகத் தேங்கிப் போகும்.

பாதுகாப்பு.

அடுத்து இருப்பதிலேயே பொறுப்பு வாய்ந்த மிக முக்கியமான பாதுகாப்புத் துறையை எடுத்துக் கொள்வோம்.

ஒரு நாட்டுக்கு இருந்தே தீர வேண்டிய முக்கியமான உரிமை இது. இந்த உரிமையையும் உலகமயமாக்கல் என்கிற போர்வையில் பறித்து வருகின்றார்கள். என்னுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்வது? எந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது? இவற்றையெல்லாம் தீர்மானிகின்ற உரிமை. அவற்றையும் உலகமயமாக்கல் என்கிற பெயரில் பறித்து விடுவார்கள்.

அணு ஆயுதங்கள் இல்லாத நிலப்பரப்பு (Nuclear Free Zone) என்று சொல்வார்கள். சி.டி.பி.டி என்பார்கள்.என்.பி.டி என்பார்கள். விதவிதமான ஒப்பந்தங்களின் மூலமாக உங்களின் சுயாட்சியையும் கண்னியத்தையும் முடக்கிப் போடுவதற்கும் வளைத்துச் சாய்ப்பதற்கும் முயல்வார்கள். இவையெல்லாமே அமெரிக்காவின் விரல் அசைவில் போடப்படுகின்ற ஒப்பந்தங்கள்.

போதக்குறைக்கு அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள், உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பி வேரூன்றியிருக்கும் படைத்தளங்கள் ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதையும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையும் தன்னுடைய கிடுக்குப் பிடியில் இறுக்கி வைத்திருப்பதில் அமெரிக்க வெற்றி பெற்றிருக்கின்றது. அதன்பிறகு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் எதனையும் தீர்மானிக்கின்ற உரிமையும் சுதந்திரமும் முற்றாகப் பறிக்கப்பட்டுவிடுகின்றது.

பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து தேசப் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றத் தொடங்கி விட்டாலே அமெரிக்காவிடமிருந்தும் அதன் நேச நாடுகளிடமிருந்தும் மிரட்டல்களும் உருட்டல்களும் வரத் தொடங்கி விடுகின்றன.
இவ்வாறாக,நாட்டின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் தம்முடைய உரிமையையும் சுதந்திரத்தையும் முழுமையாக இழந்து நிற்கும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக குவைத்,சவூதி அரேபியா, மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகள்,சோவியத் யூனியன் சிதறிய பிறகு தோன்றிய ஒன்பது மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றைச் சொல்லலாம்,

இவ்வாறாக, ஒரு நாட்டின் அரசாங்கத்திடமிருந்து பொருளாதாரம், வெளிநாட்டு வணிகம், வெளியுறவுகள்,பாதுகாப்பு போன்ற அதிமுக்கியமான துறைகளில் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயலாற்றுகின்ற உரிமை பறிக்கப்படும்போது இந்தத் துறைகள் யாவும் இவை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் உலகமயமாக்கப்படும்போது அந்த அரசின் அந்தஸ்தும் அதிகாரமும் நகராட்சியளவுக்கு சுருங்கிவிடுகின்றது.

கொரிய எழுத்தாளர் ‘ஜெரீமி சி புரூக்’ மிகச் சரியாக தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார்: உலகமயமாக்கல் என்பது உண்மையில் மற்றெல்லா பண்பாடுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். உலகமயமாக்கல் என்கிற பெயரில் தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுத் தாக்குதலுக்கொதிராகத் தத்தமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கான போரில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்றே ஆக வேண்டும். இங்கு எவரும் அப்பாவியான பார்வையாளராக முடங்கி இருக்க முடியாது.

Monday, March 5, 2012

சொராஸ்டர்(பார்சீ) மதம் ஓர் பார்வை.

                                                          சொராஸ்டிரிய மதச்சின்னம்

உலகம் தோன்றிய காலத்திலிருந்து எத்தனையோ மதங்கள் பிறந்து வளர்ந்து மறைந்து இருக்கின்றன. அவைகளில் சில கருவிலேயே சிதைந்தும் இருக்கின்றன. சில மதங்கள் பிறந்து எழுந்து நடந்து ஓடி வல்லரசாக நிமிர்ந்து நின்று, பிறகு மறுபடியும் வீழ்ச்சியை நோக்கி வீழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகின்ற சொராஸ்டிரா மதமும் ஒன்று.

சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி. பண்டைய ஈரானிய மொழியில் சொராஸ்டர் (Zoroaster) என்ற இயர்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு .எனினும் இன்றைய வடக்கு ஈரானில் கி.மு.628ஆம் ஆண்டில்(கி.மு.628-கி.மு.551) இவர் பிறந்தாகத் தெரிகிறது .இவருடைய இளமைக் கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவர் தாம் உருவாக்கிய புதிய மதத்தை போதிக்க தொடங்கினார்.

                                                                   சொராஸ்டர் (Zoroaster)

அத்வைதமும் (Monotheism) துவைதமும் (Dualism) இணைந்த ஒரு கவர்ச்சிகரமான கலவையாகச் சொராஸ்டிரா இறைமையியல் அமைந்துள்ளது. இவர்களின் போதனைப்படி, ஒருவனே தேவன். அவனை அவர் ‘அஹுரா மாஜ்டா’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘ஒர்மஜ்டு’)  என்று அழைக்கின்றனார். ‘மெய்யறிவுப் பெருமான்’ (The wise Lord) என்று இதற்கு பொருள். அவன் நேர்மையினையும், வாய்மையினையும் ஊக்குவிக்கிறான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் ‘அங்ரா மைன்யூ’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘அஹ்ரிமான்) என அழைக்கின்றார்கள்.இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.

  உண்ம உலகில் நன்மையை ஆதரிப்பதா,தீமையை ஆதரிப்பதா என்பதை ஒவ்வொரு தனிநபரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையுடையவர். இவ்விருதரப்புகளுக்கிடையிலான போராட்டம் தற்போதைக்கு மிக நெருங்கிய போராட்டமாக இருந்த போதிலும், நீண்ட காலக் போக்கில் நன்மையே வெல்லும் என்று சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். மறுமை வாழ்விலும் அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.


அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார்.
                   விஷ்டாஸ்பா மன்னரிடம் ஆதரவு பெறுவது போன்ற ஒவியம்.

அதன் பின்பு  இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது.
                                                                         மகா சைரஸ்
அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது.
                                          சொராஸ்டிரா பார்சீகளின் புனித தீப்பிழம்பு 
                                              தீப்பிழம்பை வணக்குகிறார்கள்
சொராஸ்டிரார்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன.
         கோபுர உச்சியில் பிணங்கள் கழுகுகளால் தின்னப்பட்டு கிடக்கும் காட்சி

ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள்.எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
                                           மும்பையில் சொராஸ்டரா பார்சீகள்                             

இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.
                                                      தீப்பிழம்பை வணங்கும் முறை 
இவர்களில் பெரும்பாலும் மும்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர்.ஈரானிலும் சொராஸ்டிர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை.எனினும்,அங்கு இன்று சுமார் 40,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.

Monday, February 6, 2012

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்!

உலக இன்பம் அற்பமானது.உலகம் சுமைகள் நிறைந்தது.உலகம் கவலை மிகுந்தது.உலகம் பல நிறங்களைக் கொண்டது.துக்கம்,துன்பம்,துயரம் ஆகியவற்றின் கலவைதான் உலகம்.அதில் நீயும் ஒருவன்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.உன்தந்தை,மனைவி,நண்பன் ஆகியோர் வாழ்விலும் நிச்சயமாகத் துயரங்கள் இருக்கும்.உனது வீட்டிலும்,தொழிலிலும் சிக்கல்கள் உருவாகும்.எனவே,நன்மையின் குளிர்ச்சியால் தீமையின் வெப்பத்தை நீ தணித்துக் கொள்.

இறைவன் இந்த உலகத்தை முரண்பாடுகளால் அமைத்துள்ளான்.நன்மை-தீமை, அமைதி-குழப்பம், மகிழ்ச்சி-கவலை என ஒவ்வொன்றிலும் இரு வேறு தன்மைகளை,நிலைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

பசித்த பிறகு உண்கின்றாய்,தாகித்த பிறகு நீர் அருந்துகின்றாய்,களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்.நோயுற்ற பிறகு குணமடைகின்றாய்.காணாமல் போனவன் விரைவில் வருவான். வழிதவறியவன் நேர்வழி பெறுவான்.

பரந்த பாலைவனத்தை நீ கண்டால், அதற்கப்பால் பசுமை நிறைந்த,மரங்கள் மிகுந்த அழகான தோட்டம் உண்டு என்பதைப் புரிந்துக் கொள்.

உறுதியான கயிற்றைக் கண்டால் அது ஒரு நாள் அறுந்து போகும் என்பதையும் நீ அறிந்துக் கொள்.

கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு. அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு.அதிர்ச்சிக்கு பிறகு நிம்மதி உண்டு.

எனவே எதார்த்தமான வாழ்க்கையை மேற்கொள்.கற்பனைகளில் மிதக்காதே! வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு உனது ஆன்மாவைப் பக்குவப்படுத்து. இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும் உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள் அல்ல.
கீ போர்டில் இருந்து கையை எடுத்து இறங்கி நடந்து ஏழைகள் வாழும் பகுதியில் நின்று கொண்டு உன்னைச் சுற்றிலும் பார்.வலப்பக்கமும், இடப்பக்கமும் பார். துயரப்படுவோரும்,துன்பப்படுவோரும்தாம் உனது கண்ணில் அகப்படுவார்.ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல்.ஒவ்வொரு கன்னத்திலும் கண்ணீரின் அடையாளம்... எல்லா திசைகளிலும் வலியின் ஓசை.உன்னைச் சுற்றி இதுதான் நடைபெறும்.

இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல் துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.
வருடக்கணக்காக சிறையில் வாடுவோர்தாம் எத்தனை பேர்! சிறைக் கூடத்தைத் தவிர வேறேதையும் அறிய முடியாமல், தமது கண்களால் சூரியனைக் கூட பார்க்க இயலாமல் சிறையில் வாடுவோர் ஏராளம் ஏராளம்.

இளம் வயதிலேயே தம் செல்லப்பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயும் தந்தையும் இந்த உலகில் அதிகம் உண்டு.கடன் பிரச்னையால் நொந்து போனவர்களும்,பல்வேறு இன்னல்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு.

முடிந்தது முடிந்துவிட்டது
எதிர்பார்க்கப்படுவது மறைவானது
நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

நீ கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத் துடிக்கிறாய்.

நீ கவலைப்படாதே! கவலை,புயல் போன்றது.அது காற்றை நாசமாக்கும்.பேரலைகளை உருவாக்கும்.வானிலையை மாற்றும்.இசைக்கும் தோட்டத்தின் கண்கவர் மலர்களை அழிக்கும்.

நீ கவலைப்படாதே! ஏனெனில் கவலை கடலில் குதித்து கடலிலேயே ஓடும் அறிவற்ற ஆற்றைப் போன்றது. கவலைப்படுவது உடைந்த பானையில் தண்ணீரை நிரப்புவதற்கு ஒப்பானது.

இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப் பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால் வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.

தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1139073