Tuesday, March 31, 2015

தத்துவஞானி ’பிளேட்டோ’ வை பற்றி தெரிந்து கொள்வோம்

பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன; ஆராயப்படுகின்றன. எனவே, மேலைநாட்டுச் சிந்தனையின் தந்தையர்களில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார்.
ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். கி.மு. 399 ஆம் ஆண்டில் சாக்ரட்டீஸ் 70 வயதை எட்டியிருந்த போது, அவர் மீது சமயத்தை அவமதித்ததாகவும், ஏதென்ஸ் நகர் இளைஞர்களை ஒழுக்கங்கெடச் செய்ததாகவும் ஆதாரமற்ற குற்றங்கள் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணை நாடகத்திற்குப் பின் சாக்ரட்டீஸ் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, நஞ்சு கொடுத்துச் சாகடிக்கப் பட்டார். "நான் அறிந்த அனைவரிலும் மிகச் சிறந்த அறிவாளி சாக்ரட்டீஸ். அவர் நேர்மை மிக்கவர். பொது நலம் வாய்ந்தவர்" என்று பிளேட்டோ போற்றினார். அத்தகைய பெருமைக்குரிய சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டது கண்டு பிளேட்டோவுக்கு மக்களாட்சி அரசின் மீது நீங்காத வெறுப்பு உண்டாயிற்று.
சாக்ரட்டீஸ் இறந்த சில நாட்களிலேயே பிளேட்டோ ஏதென்சிலிருந்து வெளியேறினார். அடுத்த 10 அல்லது 12 ஆண்டுகளை அயல் நாடுகளில் பயணம் செய்வதில் கழித்தார். கி.மு. 387 ஆம் ஆண்டில் மீண்டும் ஏதென்ஸ் திரும்பி, அங்கு "கலைக்கழகம்" (Academy) என்று அழைக்கப்படுகின்ற புகழ் பெற்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளி 900 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தது. பிளேட்டோ தமது வாழ்நாளில் கடைசி 40 ஆண்டுகளை ஏதென்சில் கழித்தார். அப்போது அவர் கல்வி கற்பித்தார். தத்துவம் பற்றி நூல்கள் எழுதினார். இவருடைய மாணவர்களில் மிக்க புகழ் பெற்றவர் அரிஸ்டாட்டில் ஆவார். பிளேட்டோ 60 வயதை எய்திருந்த போது அரிஸ்டாட்டில் தமது 17 ஆம் வயதில் பிளேட்டோவிடம் கல்வி பயில்வதற்காக வந்தார். பிளேட்டோ கி.மு. 347 ஆம் ஆண்டில் தமது 80 ஆம் வயதில் காலமானார்.
பிளேட்டோ 36 நூல்கள் எழுதினார். அவை பெரும்பாலும் அரசியல், அறவியல் பற்றியவை. மெய்விளக்கவியல், இறைமையியல் பற்றியும் அவர் எழுதியுள்ளார். இந்நூல்களை சில வாக்கியங்களில் சுருங்க உரைப்பது அத்தனை எளிதன்று. என்னும், அவருடைய சிந்தனையை அளவுக்கு மீறி எளிமைப் படுத்தும் அபாயம் இருந்த போதிலும், பிளேட்டோவின் மிகப் புகழ் பெற்ற "குடியரசு" (The Republic) என்ற நூலில் கூறப்பட்டுள்ள முக்கியமான அரசியல் கொள்கைகளை இங்கு சுருக்கமாகக் கூற முயல்கிறேன். "உன்னதச் சமுதாயம்" பற்றிய பிளேட்டோவின் கோட்பாட்டினை இந்த நூல் விவரிக்கிறது.
பிளேட்டோவின் கருத்துப்படி, மிகச் சிறந்த அரசு முறை என்பது "உயர் குடியினர் ஆட்சியே" (Atistocracy) ஆகும். இவ்வாறு கூறுவதால், அவர் ஒரு பரம்பரை உயர் குடியினர் ஆட்சியையோ, ஒரு முடியாட்சியையோ ஆதரிக்கவில்லை. மாறாக, தலைமை வாய்ந்த ஓர் உயர் குடியினர் ஆட்சியை அதாவது, நாட்டில் உள்ளவர்களில் அறிவிலும், திறமையிலும் மிகச் சிறந்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியை அவர் விரும்பினார். இந்த ஆட்கள், குடி மக்கள் வாக்களிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாகாது. மாறாக, அமைப்பின் உறுப்பினர்கள் தங்களுக்குள் மனம் ஒத்துத் தேர்ந்தெடுக்கும் (Co-operation) ஒரு முறையின்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். ஏற்கனவே ஆட்சி செலுத்துகின்ற உறுப்பினர்களாக அல்லது காப்பாளர் வர்க்கமாக (Guardian Class) இருக்கின்ற ஆட்கள் கூடுதலான ஆட்களை முற்றிலும் தகுதி அடிப்படையில் தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதற்குத் தங்களுடைய தகுதியை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு எல்லா மக்களுக்கும் ஆண் - பெண் இருபாலருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனப் பிளேட்டோ கருதினார். (ஆண் - பெண் இருபாலருக்கும் அடிப்படைச் சமத்துவம் அளிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் கூறிய தத்துவஞானி, நீண்ட வரலாற்றில் இதை வலியுறுத்திய ஒரேயொரு மனிதர் பிளேட்டோ தான்) சமவாய்ப்பினைக் காப்புறுதி செவ்தற்காக, குழந்தைகள் அனைவரையும் அரசாங்கமே வளர்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசாங்கமே கல்வி புகட்ட வேண்டும் என்றும் பிளேட்டோ வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு முதலில் கண்டிப்பாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும். எனினும், இசை, கணிதம் போன்ற மற்றக் கல்விப் பாடங்களைப் புறக்கணிக்கலாகாது. பல்வேறு கட்டங்களில் விரிவான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இத்தேர்வுகளில் குறைந்த வெற்றி பெறுபவர்களுக்குச் சமுதாயத்தின் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொறுப்பு குறித்தளிக்கப் படவேண்டும். நல்ல வெற்றி பெறுவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். இந்த உயர் கல்வியில் வழக்கமான கல்விப் பாடங்கள் மட்டுமின்றி "தத்துவ" ஆராய்ச்சியும் சேர்க்கப்பட வேண்டும். "தத்துவ ஆராய்ச்சி" என்ற பிளேட்டோ குறிப்பிட்டது உன்னத வடிவங்களில் மெய்விளக்கவியல் கோட்பாட்டினை ஆராய்வதாகும்.
35 ஆம் வயதில், கோட்பாட்டுத் தத்துவங்களில் தமது புலமையைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியவர்களுக்கு மேலும் 15 ஆண்டுகள் நடைமுறைச் செயல்முறை அனுபவப் பயிற்சியளிக்க வேண்டும். ஏட்டறிவை உலகியலில் பயன்படுத்தும் திறனைக் காட்டுகிறவர்கள் மட்டுமே காப்பாளர் வர்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும், பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களெனத் திட்டவட்டமாக மெய்ப்பித்துக் காட்டுகின்றவர்கள்தாம் காப்பாளர்களாக ஆக வேண்டும்.
காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினராவதை எல்லோரும் விரும்ப மாட்டார்கள். காப்பாளர் செல்வந்தர்களாக இருக்கலாகாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சொந்தமாக சொத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சொந்தமாக நிலமோ, தனி இல்லங்களோ வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை (அது பெருந்தொகையாக இருக்காது) பெறுவார்கள். அவர்கள் (சொந்தமாகத் தங்கமோ, வெள்ளியோ வைத்துக் கொள்ளலாகாது) காப்பாளர் வர்க்கத்தின் உறுப்பினர்கள், தனியாகக் குடும்பங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து உணவு உண்ண வேண்டும். பொதுவாக துணைவியை அல்லத துணைவரைத்தான் கொண்டிருக்க வேண்டும். இந்த "தத்துவ வேந்தர்" களுக்கு (Philosopher Kings) இழப்பீடாகக் கிடைப்பது பொருட்செல்வம் அன்று; மாறாக, பொது மக்ளுக்குத் தொண்டு செய்யும் மன நிறைவேயாகும். உன்னதக் குடியரசு பற்றி பிளேட்டோவின் கருத்தின் சுருக்கம் இதுதான்:
"குடியரசு" நூல், பல நூற்றாண்டுகளாக, மிகப்பரவலாகப் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனினும், அதில் விவரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு முறையை, உள்ளப்படியான குடியியல் அரசுக்கான ஒரு முன்மாதிரியாக யாரும் கொள்ளவில்லை. பிளேட்டோவின் காலத்திற்கும், இப்போதைக்கும் இடைப்பட்ட இடைவெளிக் காலத்தின் பெரும்பகுதியில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப் பரம்பரை முடியாட்சிகளே ஆண்டு வந்திருக்கின்றன. அண்மை நூற்றாண்டுகளில் பல நாடுகள் மக்களாட்சி அரசு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஹிட்லர், முசோலினி ஆகியோருடையதைப் போன்ற இராணுவச் சர்வாதிகார ஆட்சி அல்லது கட்சிவாத கொடுங்கோலாட்சிகளும் ஏற்பட்டுள்ளன. அந்த அரசு முறைகளில் எதுவும் பிளேட்டோவின் கொள்கைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏற்றுக் கொண்டதில்லை. கார்ல் மார்க்சின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசியல் இயக்கம் தோன்றியது போல், பிளேட்டோவின் கொள்கைகயை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கம் எதுவும் தோன்றவில்லை. அப்படியானால் பிளேட்டோவின் படைப்புகள் மதித்துப் போற்றப்பட்டாலும் நடைமுறையில் அடியோடு புறக்கணிக்கப் பட்டன என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா? முடியாது என்றே நான் கருதுகிறேன்.
ஐரோப்பாவிலுள்ள குடியியல் அரசு எதுவும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசை நேரடியாக முன் மாதிரியாக கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆயினும், மத்திய காலத்து ஐரோப்பாவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைக்கும், பிளேட்டோவின் காப்பாளர் வர்க்கத்திற்குமிடையே மிகுந்த ஒப்புமை காணப்படுவதை இங்கு கவனிக்க வேண்டும். மத்திய காலத்துத் திருச்சபை, தாமே நெடுநாள் அதிகாரத்தில் நீடிக்கும் உயர்ந்தோர் குழாமை (Elite) கொண்டிருந்தது. இதன் உறுப்பினர்கள், எப்பொழுதும் அதிகாரமுறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்கள். கொள்கையளவில், எல்லா ஆண்களும் அவர்களின் குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும் சமய குருவாக ஆவதற்குத் தகுதியுடைவர்களாக இருந்தார்கள். (ஆனால், பெண்கள் இதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள்). கொள்கையளவில், சமயகுருவுக்குக் குடும்பம் கிடையாது. தமது சொந்த செல்வத்தைப் பெருக்குவதில் அக்கறை கொள்வதைவிட பொது மக்களின் நலனிலேயே அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசின் காப்பாளர் வர்க்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதுண்டு. பொதுவுடமைக் கட்சியிலும், தாமே ஆட்சியில் நிலைத்து நீடிக்கும் ஒரு குழாம் அதிகாரம் செலுத்துகின்றது. அந்தக் குழாத்தின் உறுப்பினர்களும், அதிகார முறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.
அமெரிக்க அரசின் கட்டமைப்பில் கூட பிளேட்டோவின் கொள்கைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அமெரிக்க அரசமைப்பு மாநாட்டில் பங்கு கொண்ட பல உறுப்பினர்கள், பிளேட்டோவின் அரசியல் கொள்கைகளை நன்கறிந்திருந்தார்கள். மக்களின் விருப்பத்தைக் கண்டறிந்து, அதற்குச் செயல் விளைவு அளிப்பதுதான் அமெரிக்க அரசமைப்பின் குறிக்கோளாக இருந்தது. அதே சமயம், நாட்டை ஆள்வதற்கு மிகச் சிறந்த அறிவும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அது தனது நோக்கமாகக் கொண்டிருந்தது.
பிளேட்டோவின் செல்வாக்கு காலங்காலமாகப் பரந்துபட்டதாகவும், ஊடுருவி நிலவுவதாகவும் இருந்த போதிலும், அவருடைய செல்வாக்கு நேரடியாக அல்லாமல் மறைநுட்பமாகவே நிலவி வந்துள்ளது. அவரது அரசியல் கோட்பாடுகளுடன் சேர்ந்து அறவியல், மெய் விளக்கவியல் பற்றிய அவரது விவாதங்களும், பிற்காலத் தத்துவஞானிகள் பலர் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளன. 
(ஆதார நூல்: நூறு பேர் the 100 ) 

Monday, March 30, 2015

மருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்

இங்கிலாந்தின் தலைமை மருத்துவர் டேம் டேவிஸ் சொல்வதைப் பார்த்தால் உலக அழிவு பாக்டீரியா கிருமிகளால் வரப் போகிறது. என்பது போல்  பயமுறுத்துகிறார் இன்னும் இருபதே வருஷத்தில், ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் அறுவை செய்துகொண்டால் கூட நோயாளி இறப்பதற்கான சான்ஸ் மிக அதிகம். ஊரில் ஒரு காலரா, டி.பி பரவினால் மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து மடிந்து விடப் போகிறார்கள் என்கிறார்.
ஏன், இதற்கெல்லாம்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடித்தாகி விட்டதே ? ஆம், ஆனால் நாம் அந்த மருந்துகளை எல்லாம் கண் மூடித்தனமாக உபயோகித்துத் தள்ளியதில் எல்லாமே வீரியம் இழந்து நீர்த்துப் போய்விட்டன. பாக்டீரியா கிருமிகள் இப்போது ட்ரக் ரெஸிஸ்டன்ஸ் என்னும் மருந்து எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொண்டுவிட்டன.
உலக சுகாதார நிறுவனத்தின் வெப் சைட்டுக்குப் போய்ப் பார்த்தால், மருந்துக்குக் கட்டுப்படாத வியாதிகள் பற்றி மானாவாரியாக வெள்ளை அறிக்கைகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.
கனோரியா என்பது, வரக் கூடாத வியாதி. போகக் கூடாத இடங்களுக்குப் போகிறவர்களைப் பீடிக்கும். நேற்று வரை இதை அநாயாசமாகச் சமாளிக்கப் பல மருந்துகள் இருந்தன. இன்றைக்கு மிச்சம் இருப்பது ஒரே ஆண்டிபயாடிக். அதுவும் வேகமாகத் தன் வலிமையை இழந்துகொண்டு வருகிறது.
ஆஸ்பத்திரியிலேயே வசித்துக்கொண்டு (என்ன திமிர் !) ஆஸ்பத்திரி மூலமாகவே பரவும் MRSA என்ற கிருமி, ESCAPE என்று சுருக்குப் பெயர் கொண்ட ஆறு கிருமிகளின் கூட்டணி என்று பல கிருமிகளை நாம் ஆண்ட்டி பயாடிக்குகளைக் காட்டிக் காட்டியே வளர்த்துவிட்டோம்.
கிருமி எதிர்ப்பு மருந்துகளே இல்லாத உலகம் எப்படி இருக்கும் ? கற்பனை செய்வது கடினமே இல்லை. ஒரு 150 வருடத்துக்கு முன்பு அப்படித்தான் வாழ்ந்தோம். 14-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டுக்குள் பல முறை சீனாவிலும் ஐரோப்பாவிலும் கறும் சாவு என்ற ப்ளேக் நோய் பரவி, கோடிக் கணக்கில் மரணங்கள். சீனாவின் ஜனத் தொகையில் பாதி, ஐரோப்பிய ஜனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பலி. ஒரு கட்டத்தில் 45 கோடியாக இருந்த உலகத்தின் ஜனத் தொகையே ப்ளேகினால் 36 கோடியாகக் குறைந்துவிட்டது !
இன்றைக்கு இந்த மாதிரி ஒரு பெரிய அளவில் தொற்று நோய் வந்துவிட்டால், பணம் பிடுங்கி தனியார் ஆஸ்பத்திரிகள் எல்லாம் நாலு காலையும் தூக்கி சரணாகதி ஆகிவிடும். அரசாங்கம் தலையிட்டு ஏதாவது செய்தால்தான் உண்டு. ஆனால் அரசாங்கம் நிலைமையை மேலும் நாசமாக்காமல் இருந்தாலே பெரிய உபகாரம் என்று சொல்லும் அளவுக்குப் பல முறை நடந்திருக்கிறது. உதாரணமாக, 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஏற்பட்ட ப்ளேக் கலவரத்தைச் சொல்லலாம். ப்ளேக் வந்த பிள்ளை குட்டிகளை பலவந்தமாகப் பிடித்துப் போய்க் கொட்டடியில் அடைத்து, பாதிக்கப்பட்ட வீடுகளை எரித்துத் தள்ளி, கடைகள் தொழிற்சாலைகளை மூடி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டது அரசாங்கம். உணவுப் பஞ்சம், மக்கள் கலவரம், ஆர்ச் பிஷப் படுகொலை என்று பற்றி எரிந்தது ரஷ்யா.
நோய்களுக்கு எதிராக நம் ஒரே நம்பிக்கை, கிருமி எதிர்ப்பு மருந்துகள். கடந்த நூறு வருடத்தில் எவ்வளவோ மருந்துகள் கண்டுபிடித்து, தொற்று வியாதிகளைத் தோற்று ஓடச் செய்துவிட்டோம். காலரா, டி.பி. உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சுலபமான செலவில்லாத மருந்துகள் இருக்கின்றன…. அதாவது, இருந்தன !
நாம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் மருந்து மாத்திரைகளை உபயோகிப்பதால், மேற்படி பாராக்களின் விபரீதங்கள் மறுபடி நேரப் போகின்றன !
சின்னஞ் சிறுசாக இருப்பதால் பாக்டீரியாவை ஏதோ அற்பக் கிருமி என்று எண்ணிவிட வேண்டாம். ஆண்டி பயாடிக்குகளை சமாளிக்க அது செய்யும் தந்திரங்களைப் பார்த்தால், சில சமயம் நம்மை விட அதற்கு மூளை அதிகமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தன்னைத் தானே உரு மாற்றிக் கொள்ளும் வல்லமை அதற்கு உண்டு. அதன் மரபீனிகளில் தற்செயலாக நடக்கும் ரைபோஸோம் மாற்றங்களால் ஏதாவது ஒரு பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அப்படியே விட்டால் தானாகவே செத்து மடிந்துவிடும். ஆனால் நாம் அதை வடிகட்டிப் பிரித்து வளர்த்து ஊர் ஊராகப் பரப்பி நாமே அதை சூப்பர் கிருமியாக மாற்றிவிடுகிறோம்.
சில வகை சொறி சிரங்குக் கிருமிகள் தங்கள் மேற்பரப்பில், ஆண்டி பயாடிக்குகளைக் கவர்ந்து இழுத்து சிறைப்படுத்த வல்ல ப்ரோட்டின்களை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றன. பெனிசிலின் ஜாதி மருந்துகளில் உள்ள பீடா-லாக்டம் வளையங்களை, கண்ணாடி வளையல் மாதிரி உடைத்து எறிகிற பாக்டீரியாக்களும் உண்டு. இதற்காகவே அவை தனிப்பட்ட என்சைம்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டன. தனக்கு உள்ளே நுழைந்துவிட்ட மருந்தை வாக்குவம் க்ளீனர் வைத்துக்கொண்டு உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கும் பாக்டீரியாவும் உண்டு. இதற்கு இஃப்ளக்ஸ் பம்ப் என்று பெயர்.
உயிர் காக்கும் மருந்துகள் பாக்டீரியாவிடம் புறமுதுகு காட்ட நேர்ந்ததற்கு டாக்டர்கள், நோயாளிகள், மருந்துக் கம்பெனிகள் என்று எல்லாத் தரப்பினரும் காரணம்.
குறிப்பாக என்ன பாக்டீரியாவினால் வியாதி வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, எம்.பி.பி.எஸ்ஸில் படித்தது அத்தனையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். நேரம் கிடைத்தபோதெல்லாம் சிம்ஸ்-மிம்ஸ் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும். குழந்தைகள், கர்பிணிகள் என்று வெவ்வேறு தரப்பினருக்கு இந்த மருந்துதான், இந்த டோஸ்தான் கொடுக்க வேண்டும் என்று உப விதிகள் வேறு இருக்கின்றன. ஆனால் பல டாக்டர்கள் பர்ஸை-மன்னிக்கவும் பல்ஸை – பிடித்துப் பார்த்துவிட்டுக் குத்து மதிப்பாக ஏதாவது ஒரு ஆண்ட்டி பயாடிக்கை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது.
இப்படிச் செய்தால் நோய்க்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு மருந்து களத்தில் இறக்கப்பட்டு, தானும் செயல் இழக்கத் தொடங்கிவிடுகிறது. இதற்கு ஒரு படி மேலே போய் எத்தைத் தின்றாலாவது பித்தம் தெளிகிறதா என்று பார்க்க, நானாவித மருந்துகளைக் கலந்து போட்டு சீட்டு எழுதிக் கொடுக்கும் டாக்டர்களும் சிலர் உண்டு. ‘இந்த வழக்கம் எனக்கில்லை’ என்று அவர்கள் ஸ்டெதஸ்கோப் மீது ஆணையாகச் சொல்லட்டும் ?…
பல கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில், டாக்டர் வேலைக்கு ஒருவர் சேரும்போதே பைப் ரென்ச் வைத்து மனச்சாட்சியைக் கழற்றிக் கொண்டுதான் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஸ்கான், எக்ஸ் ரே என்று அப்பாவி மனிதனைப் பாடாய்ப் படுத்துவதுடன், அவர்கள் முழ நீளத்துக்கு எழுதிக் கொடுக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் பார்த்தாலே பலத்த சந்தேகம் தட்டுகிறது: மருந்துக் கம்பெனிகளுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை விசாரணைக் கமிஷன் வைத்துத்தான் விசாரிக்க வேண்டும்.
ஆனால் நம்முடைய அத்தனை முட்டாள்தனங்களுக்கும் பாவம், டாக்டர்களையே குறை சொல்வதும் தவறு. நாமும் கள்ளுக் குடித்த குரங்கு போல் தேவையே இல்லாத மருந்து மாத்திரைகளை விழுங்கி நம் உடம்பைப் படாத பாடு படுத்துகிறோம். அன்றைக்கு மருந்துக் கடையில் பத்து வயதே இருக்கும் குழந்தை ஒன்று வந்து “அங்க்கிள் ! ஆம்பிசிலின் கொடுங்க !” என்று கேட்டு வாங்கிச் சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.
ஒரு முறை ஆண்ட்டி பயாடிக் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால், கடைசி வரை சென்று கிருமியை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் நிறுத்த வேண்டும். அரை குறை வைத்தியம், சுய வைத்தியம் எல்லாம்தான் நமக்கு உடன் பிறப்பு ஆயிற்றே.. டி.பி மாத்திரை முழுங்க முடியாமல் மாடு மாடாக இருக்கிறது என்று பாதியில் கை விட்டுவிட்டால், இருமல் கிருமி உக்கிரமான வடிவில் திரும்பி வந்துவிடும். பல மருந்துகளுக்கு ஒரே நேரத்தில் சவால் விடும் மல்ட்டி ட்ரக் எதிர்ப்பு சக்தியுள்ள MDR பாக்டீரியா வளர்ந்துவிட்டால் பிறகு போக்குவது கடினம்.
அமெரிக்காவில் எம்.டி.ஆர் கிருமியை ‘சூப்பர் பக்’ என்கிறார்கள். (எது எதற்கெல்லாம் சூப்பர் பட்டம் சூட்டுவது என்று விவஸ்தையே இல்லையா ?)
நல்ல பழைய நாட்களில் ஒரு கிராமத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத பாக்டீரியா தோன்றினால் அந்த கிராமம் மட்டும்தான் பாதிப்புக்கு உள்ளாகும். இப்போது ஜெட் விமானங்களால் உலகமே குக்கிராமம். சூப்பர் கிருமியை நாமே சொகுசாக விமானத்தில் ஏற்றி அவனியெங்கும் பரப்புகிறோம்.
இப்போது ஆடு மாடு கோழி வளர்ப்பதும் மெகா தொழிலாக மாற்றப்பட்டு மாபெரும் பண்ணைகள் வந்துவிட்டன. விஞ்ஞான பூர்வமாக மாடு வளர்க்கிறோம் என்று அவற்றுக்கும் ஏராளமான ஆண்டி பயாடிக்குகளையும் ஆக்ஸிடோசின்களையும் ஊட்டி நாசமாக்கி, கடைசியில் அத்தனை கண்றாவியும் நாம் குடிக்கிற பாலில்தான் வந்து முடிகிறது.
ஒரு சில மருந்துகளை, தொடர்ந்து ஃப்ரிஜ்ஜில் குளிரான சூழ்நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். போலியோ வைரஸ் சொட்டு மருந்துகள் செயல் இழப்பதற்கு நம்ம ஊரின் உலகப் புகழ் பெற்ற பவர்கட்டும் ஒரு காரணம். ஃபாக்டரியில் தொடங்கிக் குழந்தையின் வாய் வரை, மருந்து பயணிக்கும் வழியெங்கும் கோல்ட் செயின் எனப்படும் குளிர் சாதன வசதி தேவை. நாம் அவ்வப்போது இலவச அடுப்பு, இலவச ஆடு என்று பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்துவிடுகிறோமே தவிர, அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் முக்கியக் கடமை என்பதை வலியுறுத்தத் தவறிவிடுகிறோம்.
மருந்துக் கம்பெனிகள் ஒரு காலத்தில் நிறையப் புதுப்புது ஆண்ட்டிபயாடிக்குகளை உருவாக்கின. இப்போது பாக்டீரியா எல்லாம் ஏழை நாடுகளின் பிரச்சினை என்று ஒதுக்கிவிட்டு அவர்கள் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உப்பு என்று லைஃப் ஸ்டைல் வியாதிகள் பக்கம் கவனத்தைக் குவித்துவிட்டார்கள். பணக்காரர்களுக்கு வரும் வியாதிகளில்தான் பணம் இருக்கிறது !
(நன்றி ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள் )

Sunday, March 29, 2015

wi-fi மின்காந்த அலையை கண்டுபிடித்த முன்னோடி.

குக்லியெல்மோ மார்கோனி (1874 -1937 )

வானொலியைக் கண்டுபிடித்த குக்லியெல்மோ மார்கோனி இத்தாலியிலுள்ள பொலோஞாவில் 1874 இல் பிறந்தார். அவருடைய குடும்பம் செல்வ நிலையிலிருந்தது. தனி ஆசிரியர்கள் அவருக்குக் கல்வி கற்பித்தனர். 1894 இல் மார்கோனி 20 வயதாக இருக்கும் போது, சில ஆண்டுகளுக்கு முன் ஹைன்ரிக் ஹெர்ட்ஸ் செய்த பரிசோதனைகள் பற்றி படித்தார். அப்பரிசோதனைகள் ஒளியின் வேகத்தில் காற்றினூடே செல்லும் கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அலைகளிருப்பதைத் தெளிவாக எண்பித்தன.
கம்பிகளின்றி நெடுந்தூரம் செய்திக் குறிப்புகளை அனுப்புவதற்கு இந்த அலைகளைப் பயன்படுத்தலாமெனும் எண்ணம் குக்லியெல்மோ மார்கோனியின் உள்ளத்தில் உடனே உதித்தது. தந்தியினால் முடியாத செய்தித் தொடர்புச் சாதனைகளை இதனால் செய்ய முடியுமென்பது புலனாயிற்று. எடுத்துக்காட்டாக, இம்முறையினால் கடலிலுள்ள கப்பல்களுக்குச் செய்தி அனுப்ப முடியும்.
1895 இல் குக்லியெல்மோ மார்கோனி ஓராண்டு உழைப்பின் பயனாக எளிதில் இயங்கும் கருவியைச் செய்து முடித்தார். 1896 இல் இங்கிலாந்தில் அவர் தம் கருவி இயங்கும் வகையை விளக்கிக் காட்டினார். அவர் கண்டுபிடித்த அக்கருவிக்கு முதல் காப்புரிமை வழங்கப் பெற்றது. விரைவில் மார்கோனி ஒரு வணிக நிறுவனத்தை நிறுவினார். 1898 இல் முதல் "மார்கோனி செய்திகள்" அனுப்பப் பெற்றன. அடுத்த ஆண்டில் ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து கம்பியின்றிச் செய்திகளை அனுப்ப முடிந்தது. 1900 இல் அவர் முக்கியமான காப்புரிமையைப் பெற்ற போதிலும், தாம் கண்டு பிடித்த கருவியை இன்னும் சீர்படுத்தி காப்புரிமைகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தார். 1901 இல் அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்கே இங்கிலாந்தில் நியூஃபவுண்ட்லாந்திற்கு வானொலிச் செய்திகளை அனுப்புவதில் அவர் வெற்றி கண்டார்.
1909 இல் "ரிபப்ளிக்" எனும் கப்பல் கடலில் மோதி உடைந்து மூழ்கியபோது இப்புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் தெளிவாகப் புலப்பட்டது. அப்போது வானொலிச் செய்தியை அனுப்பியதால் உதவி கிடைத்தது. அறுவரைத் தவிர ஏனையோர் காப்பாற்றப்பட்டனர். அதே ஆண்டில் மார்கோனி தமது கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றார். அடுத்த ஆண்டு அவர் அயர்லாந்திலுள்ள அர்ஜென்டினாவிற்கு 6,000 மைலுக்கப்பால் வானொலிச் செய்தியை அனுப்பினார்.
இச்செய்திகள் எல்லாம் மார்க்ஸ் குறியீடுகளான புள்ளி, கோடு முறையிலே அனுப்பப் பெற்றன. குரலையும் வானொலி வாயிலாக அனுப்ப முடியுமெனத் தெரிந்திருந்த போதிலும் 1916 வரை அவர் அதைச் செய்யவில்லை. வணிக அளவில் வானொலி ஒலிபரப்பு 1920 களின் தொடக்கத்தில் தான் தொடங்கியது. ஆனால், விரைவில் அது பரவியது. அதன் முக்கியத்துவம் வளர்ந்தது.
இத்தகைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமைகள் முக்கியமாதலால் அதைப்பற்றி வழக்குகளும் தொடரப்பட்டன. ஆயினும் 1914 இல் நீதி மன்றங்கள் மார்கோனியின் முந்துரிமையைத் தெளிவாக ஏற்றுக் கொண்டதால் அதன் பிறகு அவரை எதிர்த்து யாரும் வழங்காடவில்லை. மார்கோனி தம் வாழ்வின் பிற்காலத்தில் சிற்றலை, நுண்ணலைச் செய்தி பரப்புகளில் முக்கிய ஆய்வுகள் செய்தார், 1937 இல் அவர் ரோமில் இறந்தார்.
வானொலியைக் கண்டுபிடித்தவர் எனும் வகையில் மார்கோனி புகழ் பெற்றவர், வானொலியின் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் பொறுத்தே அவரது சிறப்பும் அமைந்துள்ளது. (மார்கோனி) தொலைக்காட்சியைக் கண்டுபிடிக்கவில்லை. ஆயினும், வானொலி, தொலைக்காட்சியின் முக்கிய முன்னோடியாக மட்டுமல்ல இணையத்தில் முன்னோடியாகவும் இருந்தது.
ஆகவே தொலைக்காட்சி மற்றும் இணையத்தை கண்டுபிடித்த புகழில் அவருக்கும் ஓரளவு பங்குண்டு என்பது பொருந்தும். இன்றைய உலகில் வானொலி மற்றும் இணையத் தொடர்பு மிகவும் முக்கியமானது என்பதில் ஐயமில்லை. அது செய்தியை அனுப்புவதற்கும், இன்பப் பொழுதுபோக்கிற்கும், படைத் துறைப் பணிக்கும், அறிவியல் ஆய்வுக்கும், காவலர் பணிக்கும் பிறவற்றிற்கும் பயன்படுகிறது. இவற்றுள் சிலவற்றிற்கு (அரை நூற்றாண்டுக்கு முன்னே கண்டு பிடிக்கப்பட்ட) தந்தி பயன்படுமெனினும் பல்வேறு பயன்களுக்கு வானொலி இன்றியமையாததாக இருந்தது. இது உந்து வண்டிகளுடனும், கடலிலுள்ள கப்பல்களுடனும், பறக்கும் வானவூர்திகளுடனும், விண்வெளிக்கலங்களுடனுங்கூட தொடர்பு கொள்ளும். அது தொலைபேசியை விட முக்கியமான கண்டுபிடிப்பாக திகழ்ந்தது. தொலைபேசியில் அனுப்பும் செய்திகளை வானொலியிலும் அனுப்பலாம். ஆனால் தொலைபேசியினால், தொடர்பு கொள்ள முடியாத இடங்களுக்கு வானொலியின் வாயிலாக தொடர்பு கொண்டார்கள்.
இன்று இதே மின்கந்த அலைவரிசை இணைய சேவை மிக முக்கியமான பரிணாம வளர்ச்சியில் வந்து நிற்கிறது.
ஆதார நூல்: 100 நூறு பேர்.  புகைப் படங்கள் கூகுள் 

Saturday, March 21, 2015

காபிர்களை காணும் இடங்களில் வெட்ட வேண்டுமா?

னிதன் தான் நம்புகின்ற கொள்கை, கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் பொதுவாக நியாய உணர்வோடு நடந்துக் கொள்வதில்லை.

இயல்பில் சாதராணமாக காணப்படுகிற இக்குறைபாடு மதம் என்று வந்துவிட்டால் குறுகிய கண்ணோட்டமாகவும் வெறியாகவும் உருமாறிவிடுகின்றது.

ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.வெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். வெளிச்சத்தை வேண்டுமென்றே கைகளால் மூடிக் கொண்டு இருள் என்பதுபோல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

மதங்களின் மீதான இத்தகைய விமர்சன ஆய்வின் நோக்கம் வாய்மைக்கான தேடலாக இருப்பதில்லை. மாறாக, ஆய்வுக்கு முன்பே தன் தேர்ந்து கொண்ட ஒரு முடிவை சரியேன்று சாதிக்க நினைக்கும் வழியாகவே இருக்கிறது.


குர்ஆனில் சில வசனங்களை காட்டி முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறது பாருங்கள் என்று வரலாறு தெரிந்து கொள்ளாத தெரிந்துக் கொள்ள முயற்சிக்காத பிரிவினைவாத கூட்டத்தினர் தவறான விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் உண்மை என்ன அந்த வசனம் இறங்கிய பிண்ணனி என்ன? என்பதை பார்ப்போம்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை. வகுப்புவாதிகள் பாமர மக்களின் இதயத்தி நஞ்சை விதைக்க திரித்துக் கூறும். இரண்டாம் அத்தியாயத்திலுள்ள் 191 வது வசனம் இது. 

இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும். 

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?

போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும். 

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது. 

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர். எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.

இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:108)
"
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)

தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)

முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்
 போரின் இலக்கணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள்.
இதன் பிறகும் மக்கா வாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சி இருந் தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதித்தான்.
எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் மற்றொரு நாட்டுடன் கடைப்பிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை மேற்கொண்டது.
"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
* வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:190, 9:13)
* சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:191, 22:40)
* போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை! (திருக் குர்ஆன் 2:192)
* அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்! (திருக் குர்ஆன் 4:75, 22:39-40)
* சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 8:61)
* மதத்தைப் பரப்ப போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6)
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.
சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது.
போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 2:190, 9:12,13)
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9).

(நன்றி சகோதரர் பிஜே அவர்களின் தழிழாக்க குர்ஆனிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

Tuesday, March 10, 2015

குடிகார அத்தா சிறு(உண்மை)கதை

காதர் கூலித் தொழிலாளி அன்றாடம் உழைத்து வரும் காசை குடித்து அழிப்பதே பிழைப்பாக கொண்டவர். வல்லு வதக்குனு எதை திண்டாலும் செமிக்கிற10,8 வயதில் இரண்டு மகன்கள்.
வழக்கம் போல கிழிந்த பாயில் மது பாட்டிலை நிற்க வைத்து அதன் கழுத்தை திருகி டம்ளரில் கவிழ்த்தி குடித்து கொண்டிருந்தார். மூத்த மகன் செய்யது பட்டன் இல்லாத டவுசரை முடிச்சுப் போட்டு இடுப்பில் இறுக அணிந்தப் படி நிலைக் கதவு தாழ்ப்பாளை ஆட்டியபடி நின்றவனை கால்ச்சோ நாரங்கியை ஆட்டாதடா குடும்பம் விளங்காது என்று சமையலறையிலிருந்து சப்தமிட்டால் தாய்.
மறுபடியும் தாழ்ப்பாள் ஆட்டும் சவுண்ட ஆடங்காமல் இருக்கவும் சொன்ன கேட்க மாட்டே என்று அடிக்க ஓடிவந்தவள் மகன் குடிப்பதை வேடிக்கைப் பார்ப்பதை பார்த்து விட்டு அங்கே என்ன வேடிக்கை வெளியே போடா என்று இவனையும் உன்னால் பிள்ளைகளும் கேட்டுப் போறாய்ங்க என்று கணவனையும் திட்டிவிட்டு சமையல் அறை நுழைந்தாள்.
தாழ்ப்பாளை ஆட்டுவதை நிறுத்தினான் செய்யது ஆனால் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. இன்னுமா ஆப்பாயில் பொரிக்கிற..... முண்ட என்று பாதி குடிவெறியில் சப்தமிட்டார் காதர். இரு இரு பிள்ளைகளுக்கு இந்த முட்டையும் நீயே தின்று தீர்த்து விடு இந்த வர்றேன் பதில் கொடுத்து கொண்டிருந்தால்.
செய்யது குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான் இளையவன் அபூதாஹிர் வாண்ணே விளையாட போவோம் என்று கிழிந்த டவுசரை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் அப்படியும் அசையவில்லை செய்யது.
மூன்றாவது முறையாக கடைசியாக இருந்த பிராந்தியையும் டம்பளரில் கொட்டிக் கொண்டிருக்கும் போது சன்னல் பக்கமாக செய்யது ஓடி விட்டான் குடித்த பாட்டிலை எறிவதற்கும் அவன் ஓடிச் சென்று பிடிப்பதற்க்கும் சரியாக இருந்தது.
பாட்டி கையில் கிடைத்ததும் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தம்பி அபூதாஹீரை கூப்பிட்டான் வாடா தம்பி பழைய இரும்பு கடையில் பாட்டிலை போட்டுட்டு ரெண்டு ரூபா கொடுப்பாய்ங்க வா மிட்டாய் வாங்கி திங்கலாம்.

Saturday, January 17, 2015

தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?

உலக நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிற பின்னணி தெரியுமா? ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலும் உள்நாட்டுஅரசியலையும் மாற்றும் பின்னணி கொண்டது.

ஒவ்வொரு நாட்டிலும் உளவுத்துறை செயல்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டதுறையாக இருந்தாலும் வெளிநாட்டு அரசியலை தன் சொந்த நாட்டிற்க்கு சாதமாக மாற்றிக் கொள்ளும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறது என்பதே உண்மை.
உதாரணமாக இஸ்ரேலின் மொஸாதைக் கூறலாம்.

பாலஸ்தீனப் போராளிகளை உளவு பார்க்க நியமிக்கப்பட்ட மொஸாத் இன்று மிகப் பெரும் அளவில் தன் கிளைகளைப் பரப்பி உள்ளது. 2000 பேர் நேரடியாகவும் பல்லாயிரக்கணக்கில் மறைமுகமாகவும் இதில் வேலை செய்கின்றனர்.

உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பான மொஸாத் தேவைப்பட்டால் அரசியல் கொலைகளைச் செய்வதற்கு கூட அதிகாரம் பெற்றது. இஸ்ரேல் அரசு நான்கில் ஒரு பங்கு பட்ஜெட்டை மொஸாதிற்கு ஒதுக்குகிறது.

மொஸாதின் நெருங்கிய கூட்டாளி அமெரிக்க உளவு அமைப்பான CIA.இஸ்ரேலின் வெற்றிக்கு CIA- வின் பங்கு அதிகம்.

உங்களை சற்றே திகைக்க வைக்கும் உண்மை என்னவென்றால், தீவிரவாதிகளை உருவாக்குவதிலும் அவர்களை ஊக்குவித்து வழிகாட்டுவதிலும் உளவுத்துறை வெற்றி பெற்றுள்ளது.
உளவுத்துறைக்குத் தெரியாமல் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய முடியாது என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்று. அதாவது உளவுத்துறை நினைத்தால் ஆயுத சப்ளையைத் தடுக்க முடியும். ஆனால் ஆயுத வியாபாரம் மிகப் பெரும் தொழில் என்பதால் அதை விட்டு விடுகின்றனர். உளவுத்துறையின் நீண்ட காலத் திட்டத்திற்காக தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களை பலிகடா ஆக்குவது.

உளவுத்துறைகளின் தீவிரவாதச் செயல்கள் புதிதல்ல. அவற்றின் சதித் திட்டங்களும் உலகறிந்தவையே!

உளவுத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டறிவு நூல்களை படித்துப் பார்த்தால் பல உண்மைகள் தெரிய வரும்.

Tuesday, December 9, 2014

வெடிகுண்டு மிரட்டல் - இளம் பெண் சரண்யா கைது!

மதுரை: மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் சரண்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’, எனக் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும் புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போனில் மிரட்டல் விடுத்தவர் மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகள் சரண்யா(21) என தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நன்றி இந்நெரம்.காம் )

Friday, December 5, 2014

இவரா? இந்த பாபரா? ராமர் கோயிலை இடித்திருப்பார்?

மக்களை மதரீதியாக பிரித்து தங்களின் அதிகார அரசியல் தொழிலை வளர்ப்பதற்காக கால் நூற்றாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன், இராமர் கோயில்.

இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம்.  பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.
அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; பாபரின் இந்த உயில் மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் மதவெறிக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 
ஒரு சமூகத்தை தொடர்ச்சியாக குற்றவாளி சமூகமாக முன்னுறுத்தி அவர்களை எதிரிகளாக கட்டமைத்து அரசியல் செய்ய முனைகிற பாசிச தன்மைகளை ஹிட்லர் முசோலினிடம் நேரடியாக சென்று பாடம் பயின்று நடைமுறைப் படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறுகிறது ஆனாலும் ஜனநாயக சக்திகள் நடுநிலையாளர்களின் உதவியுடன் முறியடிப்போம் விரைவில்.

Sunday, July 20, 2014

இதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்...!

மிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் கல்லூரி ரூ.7 லட்சத்தையும் நிர்ணயித்திருக்கிறது.
த்தொகை கல்விக் கட்டணம் மட்டும் தான். இது தவிர நூலகத்திற்கான கட்டணம், கருத்தரங்குகளுக்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், விடுதி மற்றும் பேருந்துக் கட்டணம், சுற்றுலாக் கட்டணம், சிறப்புக் கட்டணம் போன்ற வகைகளில், இக்கல்லூரிகள் மேலும் சில லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இவை மட்டுமின்றி நன்கொடை கட்டணமாக (capitation fees) ரூ. 40 லிருந்து 80 லட்சம் வரை தனியாக வசூலிக்கின்றன.
இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து கொள்ளையடித்து அக்கொள்ளை பணத்தை கொண்டுதான் இக்கல்விக்கூடங்களின் முதலாளிகள் தங்களை கல்வி வள்ளல்களாக சித்தரித்து வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்டணங்களைப் பார்த்தால், மருத்துவம் ஒரு சேவை தொழில் என்று யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஆக, தமிழகத்தில் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வெளிவர ஒரு மாணவர் ரூ.1 கோடிக்கும் மேல் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இளநிலை படிப்புக்கான கட்டணம் மட்டுமே. முதுநிலை படிப்புக்கு மேலதிகமாக 2 லிருந்து 3 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளையோடு ஒப்பிடும் போது அரசுக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.11,500 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 20,000 மட்டுமே. தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.
ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசு நிர்ணயம் செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 25% உயர்ந்திருக்கிறது. நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சென்ற ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2.5 லட்சமாக நிர்ணயித்திருந்தது. இந்த ஆண்டு கட்டணத்தில் ரூ.10,000 உயர்த்தியிருக்கிறது.
அரசு நிர்ணயித்திருக்கும் இக்கட்டணம் நூலகம், விடுதி போன்ற இதர கட்டணங்களை உள்ளடக்கவில்லை என்பதால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மேலதிக கட்டணத்தையே வசூலிக்கின்றன. மேலும், இந்நிர்ணயம் அரசு கோட்டா இடங்களுக்கான (Govt. Quota Seats) கட்டணத்தை மட்டுமே கட்டுப்படுத்துவதால், நிர்வாக கோட்டா இடங்களுக்கான கட்டணத்தை தங்களுடைய விருப்பம் போல நிர்ணயித்து கொள்ளையை எந்த தடையுமின்றி நடத்துகின்றன.
இது மட்டுமின்றி, அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம் ராமச்சந்திரா, எஸ்.ஆர்.எம் போன்ற நிகர்நிலை பல்கலைக் கழகங்களை  கட்டுப்படுத்தாதென்பதால் அவை நடத்தும் கட்டணக்கொள்ளைக்கு அளவே இல்லை. அரசு இக்கட்டண கொள்ளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதோடு, அதை கண்டு கொள்ளாமல் மறைமுக ஆதரவையும் வழங்கி வருகிறது. கல்வி தனியார் மயம்தான் அரசு கொள்கை எனும்போது இந்த ஆதரவு மேலும் மேலும் பகிரங்கமாக மாறி வருவது கண்கூடு. தேர்தலின் போது சென்னைக்கு வந்த மோடி, பச்சமுத்து கல்லூரிக்குச் சென்று இந்தியா முழுவதும் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் வரவேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. பச்சமுத்துவும் தனது பிசினஸை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காகவே பாஜக கூட்டணியில் சேர்ந்திருப்பார்.
தனியார் கல்லூரிகள் அரசு நிர்ணயித்திருக்கும் ரூ.2.5 லட்சத்திற்கு மட்டுமே ரசீது கொடுக்கின்றன அதனால் வங்கிகள் அக்கட்டணத்தை மட்டுமே கடனாக கொடுப்பதால் கல்விக் கடன் பெற்று படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள் அவதியுறுகின்றனர்.
ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் சென்று மருத்துவம் படித்து திரும்ப சுமார் ரூ. 20 லட்சம் மட்டுமே செலவாகும் என்பதை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர், படித்து முடித்து வெளியே வந்தால், அவருக்கு அரசு வேலை கிடைக்கும் பட்சத்தில் ரூ. 40,000 வரை சம்பளமும், அதே தனியார் மருத்துவமனைகளில் ரூ. 20 முதல் 25 ஆயிரம் சம்பளம் மட்டுமே தரப்படுகிறது. இப்பின்னணியில் கல்விக்கடன் பெற்று மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியுறுவதும் நடக்கிறது. அரசு அமல்படுத்திவரும் கல்வி தனியார்மயக் கொள்கையினால் இக்கல்வி வள்ளல்களின் கொள்ளை மழலையர் பள்ளிகளில் ஆரம்பித்து மருத்துவ கல்வி வரை நீள்கிறது.
இது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. மற்றொருபுறம், இப்பெருந்தொகையை செலவழித்து மருத்துவம் பயிலும் ஒரு மருத்துவர், தனது தொழிலை சமூகத்திற்கு செய்யும் சேவையாக நினைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இம்மருத்துவர்கள் தாங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுப்பதற்காக மருத்துவம் குறித்த சமூக நெறிமுறைகள், மதிப்பீடுகள் அனைத்தையும் கைவிட்டு விட்டு எதையும் செய்ய தயாராகிவிடுகிறார்கள்.
அதாவது மருந்து கம்பெனிகள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற மற்றும் விலை அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது, மருத்துவ சோதனை நிறுவனங்கள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற சோதனைகளை பரிந்துரை செய்வதிலிருந்து பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்தும் சோதனைகளுக்கு நோயாளிகளை சோதனை எலிகளாக்குவது என்று எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர்.
இன்னொரு புறம் மருத்தவம் படிப்பது என்பது வரதட்சணை சந்தையில் பெரும் விலை போகும் சரக்கு என்பதால் அப்படியும் கொள்ளையடிக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது என்பதே அது கௌரவத்திற்கு படிப்பது என்றாகி விடுகிறது. இப்படி கௌரவம் பார்த்து படிப்பதும், அதற்கு செலவழிப்பதும் சாதாரண மக்களால் முடியாத ஒன்று. லஞ்சம், ஊழல், கழிவு, குறுக்கு வழி என்று பணம் பார்க்கும் கணிசமானோர் இப்படி செலவழித்து படிக்க வைக்க தயாராக இருக்கின்றனர்.
காசில்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்ற நிலை உருவானதில் இத்தனியார் மருத்துவக் கல்லூரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை போல மருத்துவத் துறையே முற்றிலுமாக மக்களை கொள்ளையிடும் துறையாகியிருக்கிறது. இவ்வகையில் கல்வி தனியார்மயம் கல்வி கற்கும் மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் பாதிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தையுமே அரித்து தின்கிறது.
(நன்றி - வினவு )

Wednesday, July 16, 2014

இலங்கையில் இனக்கலவரம்: நடந்தது என்ன?

இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை 2009ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு மட்டுப்பட்டு பேரினவாதிகளின் பார்வை இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள்மீது திரும்பியிருக்கின்றன. ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவர வன்முறைகளின் நெருப்புக்குத் திரியைக் கொளுத்திவிட்டது ஜூன் மாதத்திலல்ல. அது இலங்கையின் யுத்த முடிவுக்குப் பின்னர் படிப்படியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும்.

பேரினவாத வன்முறையாளர்களின் ‘பொது பலசேனா’ எனும் இயக்கமானது ஊர் ஊராகக் கூட்டங்கள் நிகழ்த்தி ‘இலங்கையானது புத்தரின் தேசம், இந்நாட்டிலுள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது’ என்ற கொள்கையைப் பரப்பி ஆள் திரட்டியது. பௌத்த போதனைகளைப் பல விதமாகத் துவேசத்தோடு பரப்பியது.

புனித பௌர்ணமி தினங்களில் பௌத்த விகாரைகளில் பௌத்த போதனைகளோடு சொல்லப்படும் பௌத்த பிக்கு ஞானசார தேரரின் வசீகரிக்கும் துவேசப் பேச்சால் மயங்கியவர்கள் அவரைப் பின்பற்றி அவர் பின்னால் செல்லத் தொடங்கினர். அவரைப் பின்பற்றும் கூட்டம் இலங்கை முழுவதும் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் பொதுபலசேனாவின் உத்தியோகப்பூர்வமான அலுவலகங்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளரும் மஹிந்த ராஜபக்?ஷவின் சகோதரருமான கோதபாய ராஜபக்?ஷவின் தலைமையில் நாட்டின் பிரதான நகரங்களில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில் இலங்கையில் 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவுக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களிலும் ஆங்காங்கே முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் பெண்களும் பேரினவாதிகளால் இன்னல்களுக்குள்ளாகிய சம்பவங்களும் பதிவாகிக் கொண்டேயிருந்தன. ஹலால் உணவுகள் தொடர்பான சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. பேரினவாதிகள் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். பொய்யான வழக்குகளில் சிக்க வைத்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை எரித்தனர். பௌத்த பிரதேசங்களில் இருந்த பள்ளிவாசல்களை இயங்க அனுமதிக்காது மூடச் செய்தனர்.

இவ்வாறான நிலையில் பௌத்த தேசத்தில் எங்கும் முஸ்லிம் மக்களுக்கு நீதி கிட்டவில்லை. எனவே முஸ்லிம் மக்கள் சச்சரவுகள் என வரும்போது பொறுமை காக்கவும் ஒதுங்கிச் செல்லவும் நிதானமாகவும் அமைதியாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தனர். எந்தச் சச்சரவுகளுக்கும் வழியில்லாத நிலையில் ஏதேனும் சிறு பொறியாவது கிட்டாதா எனப் பொதுபலசேனா இயக்கம் காத்திருந்தது.

தர்கா நகர், அளுத்கம, பேருவளை பகுதிகள்முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள். இவை இலங்கையின் மேல்மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரையோர பிரதேசங்கள் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களின் பிரதானத் தொழிலாக வியாபாரத்தைச் சொல்லலாம். இரத்தினக்கல் வியாபாரத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த முஸ்லிம்கள் இங்கு வசிக்கின்றனர். சர்வதேச அறபிக் கல்லூரியான ஜாமிய்யா நளீமிய்யா கல்லூரி இங்கிருக்கிறது. புராதனப் பெருமை வாய்ந்த பல பள்ளிவாசல்கள் இங்கிருக்கின்றன. இப்பிரதேசங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டவை. ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப் பட்டால், தப்பிச் செல்ல ஒரு தரைவழி மாத்திரமே உள்ள பிரதேசங்கள் என்பதால் இங்கு வாழும் முஸ்லிம் மக்கள்மீது தாக்குதல் நடத்துவது எளிது.

ஜூன் 12, வியாழக்கிழமை, பௌத்தர்களின் புனித தினமான பொஸொன் பௌர்ணமி. தர்கா நகர், ஸ்ரீ விஜயராம விகாரையின் பிக்குவான அயகம சமித்த தேரர் பகல் நேரம், மோட்டார் வாகனமொன்றில் தனது சாரதியுடன் தெருவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். எதிரே முஸ்லிம் இளைஞர்கள் இருவர் வீதியில் நின்று கதைத்துக் கொண்டிருக்கின்றனர். வண்டியின் சாரதியான சிங்களவர், அந்த இளைஞர்களைத்
தூஷண மொழியில் மோசமாகத் திட்டுகிறார். பதிலுக்கு முஸ்லிம் இளைஞர்களும் கோபமாகத் திட்டச் சத்தம் கேட்டு சில முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்துசாரதியையும் பிக்குவையும் பத்திரமாக அனுப்பிவைக்கின்றனர்.
மாலை நேரம் பேச்சுவாக்கில் பொதுபலசேனா உறுப்பினர் ஒருவரிடம் பகலில் நடந்த நிகழ்வை சாரதி விவரிக்கின்றார். அவர்கள் காவல் நிலையம் சென்று முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் சேர்ந்து ஒரு பௌத்த பிக்குவை மோசமாகத் தாக்கினர் என்று முறைப்பாடும் செய்தனர். சிங்கள ஊடகங்களுக்கு இவ்விடயத்தைத் தெரிவித்தனர். அவையும் இச்செய்திக்கு முன்னுரிமை வழங்கி, பிக்கு வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருக்கும் காட்சியையும் காட்டி, முழு இலங்கைக்கும் விடயத்தைத் தெரிவுபடுத்தின.

தம்மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதை அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாகக் காவல்நிலையம் சென்று உண்மை நிலையை எடுத்துரைத்தனர் என்ற போதிலும் போலிஸ் அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகச் சிங்கள ஊடகங்கள் செய்தி அறிவிக்கவே பொதுபலசேனா இயக்க உறுப்பினர்களும் இன்னுமொரு இனவாத இயக்கமான இராவண பலய இயக்க உறுப்பினர்களும் சேர்ந்து அளுத்கம காவல் நிலையத்தைச் சுற்றி வளைத்தனர். அந்த நான்கு இளைஞர்களையும் உடனடியாகத் தம்மிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சென்று இறுதியில் கொழும்பு - காலி பிரதான வீதியின் போக்குவரத்து நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்தது. பதற்றமான சூழல் எங்கும் நிலவியது. அரசு சில அமைச்சர்களை அனுப்பி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பார்த்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சர்களின் வாகனங்களுக்கும் தாக்குதல்கள் நடத்தவே, உடனடியாக இலங்கை போலிஸ்

மாஅதிபர் என்.கே. இலங்ககோன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விஜயம் செய்தார். கண்ணீர்க் குண்டுப் பிரயோகத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு காவல் துறையைப் பணித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்க் குண்டுப் பிரயோகம் நடத்தப்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து ஓடினர். இரவு 10.30 மணியளவில் முற்றாகச் சீரடைந்ததாகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலிஸால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 13, 2014 - வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றனர். அவர்களை 25ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளையிடுகிறார். இளைஞர்களின் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத் தரணிகள், இளைஞர்கள் சிறையில் வைத்துக் காவல் துறையினரால் தாக்குதல்களுக்குள்ளாகியதைச் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே நீதவான், அவர்களைத் தனித் தனிச் சிறையிலடைக்குமாறு கட்டளையிடுகின்றார்.

ஜூன் 15, 2014 - ஞாயிற்றுக்கிழமை புனித பொஸொன் பௌர்ணமி தினத்தன்று பௌத்த பிக்கு தாக்குதலுக்குள்ளானதைக் கண்டித்துப் பொதுபலசேனா இயக்கம், அளுத்கம பிரதேசத்தில் ஒரு மாநாடும் பேரணியும் நடத்தவிருப்பதான தகவல் கசிகிறது. முஸ்லிம் பிரதேசங்களில் அச்சமான சூழ்நிலை பரவுகிறது. உடனே செயற்படும் முஸ்லிம் தலைமைகள் 'பொதுபலசேனா உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் தற்போதைய சூழ்நிலையில் இப்பிரதேசத்தில் கூட்டங்களையும் பேரணியையும் நடத்துமானால், அது ஆபத்தினை ஏற்படுத்தும்' எனத் தெளிவுபடுத்தி, இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி போலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் மகஜரொன்றைக் கையளிக்கின்றனர்.

இக்கடிதத்தில் முஸ்லிம் கவுன்சில், வக்பு சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் எனப் பல அமைப்புக்கள் கையெழுத்திட்டிருந்தன. என்றபோதும் அன்று அக்கூட்டத்துக்கோ, பேரணிக்கோ தடை விதிக்கப்படவில்லை. அன்றே அவற்றுக்குத் தடை விதித்திருந்தால் பல அழிவுகளையும் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம் எனப் போலிஸ் மாஅதிபர் பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திட்டமிட்டதன்படி இராவண பலய, புத்த சாசன கமிட்டி, பொதுபலசேனா இயக்கம் ஆகியவை ஒன்றுசேர்ந்து கூட்டத்தை நடாத்தின. நாடுமுழுவதிலிருந்தும் திரண்டு வந்திருந்த மேற்படி இயக்க உறுப்பினர்களின் முன்னிலையில் பொது பலசேனா இயக்கத்தின் செயலாளரான கலகொட அத்தே ஞானசேர தேரர் இனக் கலவரத்தைத் தூண்டும் விதமாக மிகக் கொச்சையான மொழியில் உரையாற்றுகிறார். அந்த உரை கூட்டத்தை உசுப்பேற்றுகிறது.
கூட்ட முடிவில், முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் சித்தரித்த புத்தபிக்கு தங்கியிருக்கும் விகாரைக்கு, முஸ்லிம் பிரதேசங்களினூடாகப் பேரினவாத உறுப்பினர்கள் அனைவரும் ஊர்வலமாகச் செல்கின்றனர். ஊர்வலம் செல்லும் வீதியோரமாக அமைந்திருக்கும் பள்ளிவாசல்மீதும் அங்கு தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் மீதும் ஊர்வலத்தில் வந்த பேரினவாதிகள் குழு தூஷண வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கற்களாலும் தடிகளாலும் தாக்கத் தொடங்குகிறது.

அதிர்ச்சியுற்ற முஸ்லிம் இளைஞர்கள் பள்ளிவாசல் சேதமுறாதவண்ணம் தாக்குதலைச் சமாளிக்க அரணாக நின்று காயமடைகின்றனர். அதற்கு மேலும் பொறுமைகாக்க இயலாத முஸ்லிம் இளைஞர்கள் பதிலுக்கு ஆயுதங்களேதும் இல்லாத நிலையில் கற்களைக்கொண்டு திருப்பித் தாக்குகின்றனர். இதனால் வெருண்டோடும் பேரினவாதப் பௌத்த இளைஞர்கள் நகரிலிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொள்கின்றனர். கடைகளை உடைத்துப் பெறுமதியானவற்றை எடுத்துக் கொண்டு மீதமானவற்றைச் சேதப்படுத்திக் கடைகளை முற்றுமுழுதாக எரித்துவிடுகின்றனர். நிலைமையின் தீவிரம் கட்டுக்கடங்காமல் போகவே அப்பிரதேசத்தில் மாலை 6.45 மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

அளுத்கம, பேருவளை, மருதானை, வெலிப்பிட்டிய, அம்பேபிட்டிய ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமலிலிருந்த போதிலும்கூட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. தமது பிரதேசங்களிலிருக்கும் பள்ளிவாசல்களும் எரிக் கப்படவே, கலவரக்காரர்களின் வன்முறைகளிலிருந்து தப்பிய முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் தப்பித்து வந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்தனர்.

ஞாயிறு நள்ளிரவு 12.30ஐத் தாண்டியபோது வன்முறையாளர்கள் குழு வெலிப்பிட்டிய பள்ளி வாசலுக்கு வந்து தம் தாக்குதலை ஆரம்பிக்கிறது. பள்ளிவாசலையும் தஞ்சம் புகுந்திருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டி அரணாக முஸ்லிம் ஆண்கள் எல்லோரும் பள்ளிவாசலுக்கு வெளியே கைகோர்த்து நிற்கின்றனர். அவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. காவலுக்கு இருந்த ஆண்கள் எவரும் பின்வாங்கவில்லை. இதனால் இளைஞர்கள் சிலர் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர்.

ஜூன் 16, 2014 - திங்கட்கிழமை விடிவதற்குள்ளாகக் கடந்த ஒரு இரவில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நாற்பதுக்கும் அதிகமான வீடுகளும் இருபதுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களும் எண்ணிக்கையிலடங்காத வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் ஆட்டோக்களும் சேதப்படுத்தப்பட்டும் எரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. இங்கு போலிஸ், விஷேட காவற்படையின் முன்னிலையிலேயே கலவரக்காரர்கள் வந்து வன்முறைகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலிலிருக்கிறது. பட்டினியோடும் காயமடைந்தும் இருக்கும் மக்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து உலர் உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் ஆடைகளும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. என்றபோதும் அவை எவையும் பாதிக்கப்பட்டவர்களைப் போய்ச் சேரவில்லை.

அதே தினம் பகலில், வெலிப்பன்ன எனும் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டது. சுமார் 350 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் பலபிடிய பிரதேசத்தில் பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. இவ்வாறு அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற பிரதான நகர்களோடு, அப்பிரதேசங்களைச் சுற்றியுள்ள சிறிய முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் அன்றைய தினம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகிக்கொண்டேயிருந்ததோடு பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

தர்கா நகரில் இடம்பெறும் அசம்பாவிதங்களின் பின்னணியில் இராணுவமே செயற்பட்டு வருவதை எல்லோரும் கண்டுகொண்ட வேளையில் நகரின் நிலை குறித்துக் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவித்து, பள்ளிவாசல் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சுடன் பேசியபோது, ‘வீதிக்கு வீதி இராணுவத்தை அனுப்பிப் பாதுகாப்பு தருகிறோம்’ என்று பாதுகாப்பு அமைச்சு பதில் அளித்தது.

திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்தும் நிலவியது. ஜூன் 17, 2014 செவ்வாய்க்கிழமை, மக்கள் தாம் தஞ்சம் புகுந்திருந்த இடங்களிலேயே அச்சத்தோடும் பட்டினியோடும் பொழுதைக் கழித்தனர். நள்ளிரவு தாண்டியதும் மீண்டும் வெலிப்பன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் உக்கிரமடைந்தது.

அரசாங்கம் பாதுகாப்புக்காக அனுப்பியிருந்த நான்கு போலிஸாரும் தம்மால் எதுவும் செய்ய இயலாத நிலையுள்ளதாகக் கூறிக் கைவிரித்துவிட்ட நிலையில் வெலிப்பன்ன பிரதேசத்தின் இன்னுமிரு பகுதிகளான முஸ்லிம் கொலனி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை இரண்டிலும் நூறுக்கும் அதிகமான காடையர்கள் ஆயுதங்களோடு களமிறங்கினர். முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பண்ணையொன்றுக்குள் பிரவேசித்துக் காவலாளியாக நின்ற தமிழ் முதியவரைக் கொன்றுவிட்டுப் பண்ணையை எரித்தனர்.

மேலும் வெலிப்பன்ன பள்ளிவாசல் தாக்குதலுக் குள்ளாகியுள்ளதோடு, முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் எரியூட்டப்பட்டன. விடிந்ததும் அங்கு விஷேட அதிரடிப்படை வந்து சேர, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனவே, காலை எட்டு மணி முதல் பகல்

12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது. நாட்டின் பல முஸ்லிம் பிரதேசங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர்ந்தன. ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு தான் தர்கா நகர் பிரதேசத்துக்குச் சென்ற சர்வதேச ஊடகமான அல் ஜஸீராவின் ஊடகவியலாளர் கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. அப்பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஜூன் 18, 2014 - புதன்கிழமை அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பிரதேசங்களில் அமலிலிருந்த ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது. ஆனால் இன்னுமொரு முஸ்லிம் பிரதேசமான கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுத் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நள்ளிரவு சேதமாக்கப்பட்டிருந்ததோடு, இந்தத் தாக்குதல் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனச் சித்தரிக்கும் முயற்சியும் பொதுபலசேனா உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

வன்முறைகளால் பாதிக்கப்பட்டுப் பேருவளை, அல் ஹுமைஸரா கல்லூரியில் எங்கும் செல்ல வழியற்றுத் தஞ்சமடைந்திருந்த முஸ்லிம் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி, அங்கு வந்த அரச உயரதிகாரிகள் கட்டளையிட்டார்கள். ஒன்றும் செய்ய வழியற்ற மக்கள் செல்ல மறுக்கவே அங்கு சலசலப்பு உண்டானது. சிறிது பதற்றமான சூழ்நிலை உருவானதும் உடனே அரச உயரதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
அன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சர்கள் சிலரோடு பேருவளைக்கு விஜயம் செய்தார். இஸ்லாமிய, பௌத்த மதத் தலைவர்களையும் பிரமுகர்கள் சிலரையும் வரவழைத்து வழமை போலவே ‘விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படும்’ என்ற பதிலை அளித்துவிட்டுத் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார். பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவுமில்லை. பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்கவுமில்லை.
பாரிய இனக்கலவரக் காலப்பகுதியில் நாடு முழுவதும் முஸ்லிம் பிரதேசங்களில் பல அசம்பாவிதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அளுத்கம, தர்கா நகர், பேருவளை பிரதேசங்களில் வன்முறை நடந்து கொண்டிருக்கும்போது கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மருந்தகம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதே போலப் பதுளை, கஹட்டோவிட்ட, குருந்துவத்த, வரக்காபொல, பாணந்துறை நகரங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்த காரணத்தால், மாவனல்லை நீதிமன்ற வளாகத்தில், காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள்மீது ஆசிட் தாக்குதல் இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்பட்டது. படு காயப்பட்ட நிலையில் போலிஸார் இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நாளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் எனும் பிக்கு, கடத்தப்பட்டுக் கை, கால்கள் கட்டப்பட்டு மிக மோசமாகத் தாக்கப்பட்ட நிலையில் பாணந்துறை, ஹிரண பாலத்துக்கருகிலிருந்து நிர்வாணமாக மீட்கப்பட்டார். 

அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், தாக்கியவர்கள் அவருக்குக் கத்னா (சுன்னத்) செய்ய முயற்சித்துள்ளமை வைத்தியப் பரிசோதனைகளை வைத்தும் காயங்களை வைத்தும் தெளிவானது. அதற்கு முன்னரும்கூடப் பொதுபலசேனா இயக்கத்தினால் பல தடவைகள் இவர் அச்சுறுத்தலுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகியிருந்தார். காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும்கூட இவருக்கு மரண அச்சுறுத்தல் இருந்து வந்ததால் வைத்தியசாலையிலும் இவருக்குப் போலிஸ் காவல் வழங்கப்பட்டது.
எரிக்கப்பட்ட NO LIMIT ஆடை விற்பனை நிலையம்

பொதுபலசேனா இயக்கத்தால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வந்த ‘NO LIMIT - நோ லிமிட்’ எனும் பெரிய ஆடை விற்பனை நிலையம், 21.06.2014 அன்று விடிகாலை மூன்று மணிக்கு இனந்தெரியாதோரால் தீ மூட்டி முற்றுமுழுதாக எரிக்கப்பட்டது. முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான NO LIMIT வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் கிளைகள் இலங்கையின் பிரதான நகரங்கள் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளன.
கலவரம் தோன்றி, நாட்டில் அமைதியை விரும்பும் அனைத்து இன மக்களும் அண்மைய வன்முறை நிகழ்வுகளின் காரணமாக மனச்சோர்வுக்காளான நிலையிலும் கொந்தளித்த நிலையிலும் காணப்பட்டபோது இலங்கையின் முக்கியத் தலைமைகள் கூறிய கருத்துக்கள், மக்களை மென்மேலும் அசௌகரியத்துக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மைக்கும் ஆளாக்கியுள்ளன.
சிங்கள இனவாதிகளால் தக்கப்படும் இஸ்லாமியருக்கு சொந்தமான மெடிக்கல்

இலங்கையின் நிலவரத்தில் உடனடியாகப் பங்குகொண்டு அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொது பலசேனா இயக்கமும் அதன் செயலாளருமான ஞானசார தேரோதான் குற்றவாளி எனப் பகிரங்க மாகத் தெரிந்த பிறகும்கூட “இந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்ட குற்றவாளியை இனங்கண்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்” எனக் கூறியிருப்பதுவும் இலங்கையில் பொதுபலசேனா இயக்கத்தைத் தடை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டங்களை மறுத்ததும் சம்பவங்களின் பின்னணியில் அவர் இருப்பாரோ எனப் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்த ஏதுவாகியிருக்கிறது.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதியின் செல்லப் பிள்ளையாக அறியப்பட்டிருக்கும் பொது சன உறவுகள், பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா “ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து தந்தால் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நான் தயார்” எனப் பகிரங்கமாக மேடைகளில் முழங்கினார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களான தர்கா நகர், பேருவளை பிரதேசங்களுக்குப் பொறுப்பான ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அஸ்லம், தனக்குப் பொறுப்பான பிரதேசங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் அப்பிரதேசங்களுக்குச் செல்லாமல் கொழும்பில் தங்கியிருந்தார். காரணம் கேட்டபோது “முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேலைகள் காரணமாக என்னால் ஊர் செல்ல முடியவில்லை. இனிமேல்தான் செல்ல வேண்டும்” (செய்தி மூலம்: விடியல், 17-06-2014, 17:58) என்றார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால், உடனே எந்த முயற்சி எடுத்தேனும் அதைத் தடுக்க வேண்டியவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமும் இந்த வன்முறைகளின் முன்னிலையில் மௌனம் சாதித்தார். வன்முறைகள் நடைபெற்ற பிரதேசங்களுக்கு உடனடியாக இவர் சமூகமளிக்கவில்லை. இதனால் நாட்டின் முஸ்லிம் சமூகம், அவரைத் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வற்புறுத்தியது. ‘முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் வழங்கினால், பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ எனவும் கூறித் தனது பதவியைப் பாதுகாத்துக் கொண்டார்.

வன்முறை நிகழ்ந்த நாட்களில் இலங்கையின் பிரதான ஊடகங்கள் எல்லாமே கலவரம் தொடர்பான உண்மைச் செய்திகளை வெளியிட மறுத்தன. Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் வன்முறை குறித்தான தகவல்களையும் சம்பவங்களையும் உடனடியாகப் பகிர்ந்து கொண்டதால் பல சேதங்களைத் தவிர்த்துக் கொள்ள முடிந்ததோடு, இலங்கையைத் தாண்டி சர்வதேசரீதியிலும்கூட இந்த அநீதியை உடனடியாகத் தெரியப்படுத்த முடிந்தது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தியா, லண்டன், குவைத், பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையின் இன வன்முறைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் மறுநாளே பதிவு செய்யப்பட்டன. சர்வதேசம் முழுவதும் இலங்கையின் தற்போதைய இனக் கலவர வன்முறைச் செய்திகள் பரவியதும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டன. இதனால், பல இஸ்லாமிய நாடுகள் ‘உடனடியாக வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லையானால், இலங்கையருக்கான விசா நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர நேரிடும்’ என அரசை அச்சுறுத்தின.

இப்பொழுது உலகம் முழுவதிலிருந்தும் இலங்கையை நோக்கிக் கேட்கப்படும் கேள்வியானது‘வன்முறை களுக்கும் அசம்பாவிதச் சம்பவங்களுக்கும் காரணமான வர்கள் யார்?’ என்பதாகும். இங்கு குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியது, அரசின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் பொதுபலசேனா இயக்கம், இராவண பலய இயக்கம், ஜாதிக ஹெல உருமய கட்சியின் உறுப்பினர்களேயன்றி நாட்டின் ஒட்டுமொத்தச் சிங்களவர்களுமல்ல.

ஏனெனில் வன்முறையின்போது முஸ்லிம்களைக் காப்பாற்ற முயற்சித்த எத்தனையோ சிங்கள இன மக்களும்கூடப் பேரினவாதிகளால் படுமோசமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் குடும்பங்களைத் தனது வாகனத்திலேற்றி வந்து காப்பாற்றிய, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவர். முஸ்லிம்களைக் காப்பாற்றப் போய் இவரும் இவரது வாகனமும்கூடப் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. நடந்த அசம்பாவித நிகழ்வுக்கு மிகவும் மனம் வருந்திய பல சிங்களவர்கள் பொதுபலசேனா அமைப்பை இலங்கையில் தடை செய்யும்படியே கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் குடும்பத்தை காக்கும் முயற்சியில் பாலித்த தெவரப்பெரும ஒரு சிங்களவரின் காரும் கண்களும் தாக்குதலுக்குள்ளாகி நிற்கிறார்.

கிட்டத்தட்ட 20 மில்லியன்கள் அளவான மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடேயாகும். இந்நிலையில் யுத்த முடிவுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் மக்கள்மீது பேரினவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கம் திணிக்கும் அழுத்தம் சொல்லி மாளாது.

இஸ்லாமியப் பெயர்களில் இருக்கும் வீதிகளின் பெயர்ப் பலகைகளை, படையோடு சென்று அழித்துச் சிங்களப் பெயர்களுக்கு மாற்றுவது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகளைச் சேதப்படுத்துவது, பள்ளிவாயில்களுக்குள் அசுத்தங்களை எறிவது, பயணங்களை மேற்கொள்ளும் முஸ்லிம்களைத் தாக்குவது, ஹலால் எதிர்ப்பு நடவடிக்கை எனப் பலவற்றையும் எந்தத் தயக்கமுமின்றி முஸ்லிம்கள்மீது பிரயோகித்துக் கொண்டேயிருந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முஸ்லிம்களின் கைத்தொலைபேசிக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அது ஒரு எச்சரிக்கைச் செய்தி. ‘மே மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் முஸ்லிம் பெண்களைக் கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கவனமாக இருந்துகொள்ளுங்கள்’ என அக்குறுஞ்செய்தி சொன்னது. யாரால் அனுப்பப்பட்டது எனத் தெரியாதபோதும் இச்செய்தி நாடெங்கிலும் முஸ்லிம்களிடத்தில் ஒருவிதப் பதற்றத்தைத் தோற்று வித்தது. இரகசியத் தகவல் வெளியானதை அறிந்த பாதுகாப்பு அமைச்சு உடனடியாக அக்குறுஞ்செய்தி ஒரு வதந்தி என அறிவித்தது. (ஆதாரம் - விடிவெள்ளி வாரப் பத்திரிகை, 2014.05.22, பக்கம் - 08)

தமது திட்டம் குறித்த தகவல்கள் கசிந்து விட்டமையால் அப்போது பொதுபலசேனா அமைப்பு எவ்விதச் செயற்பாட்டிலும் இறங்காமல் அமைதியாக இருந்தது. ஆனால் அதற்குச் சரியாக ஒரு மாதம் கழித்து, குறுந்தகவலில் சொன்னது போலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவும் பாதுகாப்பு அமைச்சருமான கோதபய ராஜபக்?ஷவும் நாட்டில் இல்லாத நேரத்தில் தனது இன அழிப்பு வேலையை வெற்றிகரமாக மேற்கொண்டது பொதுபலசேனா இயக்கம். அப்பொழுதே குறுந்தகவலைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருந்திருந்தால் பல அழிவுகளைத் தடுத்திருக்கலாம் என்பது பலரதும் கருத்தாக அமைந்திருக்கிறது .

இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 21.06.2014 அன்று முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்தபின் ஊடகங்கள் ஊடாகவும் தனது Twitter வழியாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். இன, மத ரீதியாகத் தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவார்களானால் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி போலிஸாருக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு சில வெளிநாட்டுச் சக்திகள் தமது நலனுக்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்த முனைகின்றன. சட்டம் ஒழுங்கை யாரும் தமது கையில் எடுத்துச் செயல்பட முடியாது. இவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்?ஷ மேற்சொல்லியிருக்கும் அறிக்கைகள் எல்லாம் சிறுபான்மை இனத்தவர்மீது மாத்திரமே செல்லுபடியாகும். சிறுபான்மை இனத்தவர்மீதே பிரயோகிக்கப்படும். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே தண்டனைக்குள்ளாவர். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவர்; கடத்தப்படுவர்; கைது செய்யப்படுவர்; காணாமல் போவர்.

முன்னர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அடித்துப் போட்டால்கூடக் கேட்பதற்கு ஆளில்லை என்ற கருத்தும் நிலைப்பாடும் பேரினவாதத் தலைமைகளிடம் இருந்தது. ஆனால் அண்மைய வன்முறைகளின்போது தான் தனது நாட்டு ஊடகங்களை மௌனிக்கச் செய்த பின்னரும்கூட, சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறைச் செய்திகள் உலகம் முழுவதும் பரவி, சர்வதேச அழுத்தங்கள் கிளம்பி, ஜனாதிபதியைக் கலவரத்துக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கை யுத்தத்தில் வென்ற இறுமாப்பில், வெற்றிக் களிப்போடு எல்லா நாடுகளாலும் நோக்கப்படும் ஜனாதிபதி மீதும் இலங்கை மீதும் சர்வதேச சமூகத்தின் பார்வைகள் இக்கலவரங்கள் மூலமாக மீண்டும் திரும்பியுள்ளன.

கலவரத்தில் மாண்ட உயிர்கள் மீண்டு வராது. மீளக் கட்டியெழுப்ப முடியாத சேதங்கள். சூன்யமாகிப்போன வாழ்க்கைகள். எல்லோரையுமே அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கும் பார்வைகள். ஒரு ஜனநாயக நாட்டில் இனியும் சிறுபான்மை இன மக்கள் இப்படித்தான் துயரத்தோடு வாழப்போகிறார்கள். வாழ்க்கையும் இருப்பிடங்களும் தமக்குரிய மத வழிபாட்டுத் தலங்களும் என எதுவுமே நிரந்தரமற்று, அவர்களை அல்லலுறச் செய்யப்போகிறது.
இலங்கை நிலவரம் இவ்வாறிருக்கையில், 16.06.2014 கலவரத் தினமன்று ஜனாதிபதியை பொலிவியா நாட்டுக்கு அழைத்து, இராணுவ மரியாதையோடு ஒரு விருதையும் வழங்கியிருக்கிறார்கள். அது இலங்கையில் சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் பொலிவிய நாட்டின் ‘அதியுயர் கௌரவ விருது!’

நன்றி: http://www.kalachuvadu.com/issue-175/page17.asp 
நன்றி : எம். ரிஷான் ஷெரீப்

இலங்கை - கறுப்பு ஜூன் 2014 - முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் பின்னணியும் என்கிற கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு இது.