Friday, March 29, 2013

ஒரு நடிகை உண்மையான நாயகியாக: Firaaq (2009) – திரைப்பார்வை


முதலில் ஒரு வண்டி நிற்கிறது வண்டியில் இருந்து உடல்கள் கொட்டப்படுகிறது. இருவர் அந்த உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அடக்கம் செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வண்டியிலும் பிணக்குவியல் வந்து கொட்டிவிட்டு போகிறது.
எல்லாமே இஸ்லாமியர்களின் உடல். அந்த குவியலில் ஓர் இந்து பெண்ணின் உடலை பார்த்தவுடன் அடக்கம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு கோபம் வந்து இறந்த உடலென்றும் பார்க்காமல் கடப்பாரையால் வெட்ட போகின்றான். இப்படி தொடங்குகிறது முதல் காட்சி. நடித்தவர்கள் நம்ம ஊர் நாசரும் இன்னொரு இந்தி நடிகரும்.
ஒரு நடிகையாக நடிக்காமலும் தன்னால் திரைக்குப்பின்னாலும் சாதிக்க முடியும் என நிருபித்திருக்கிறார் “அழகி” நந்திதா தாஸ். அவர் எடுத்து கொண்ட கதைக்களம் குஜராத் கலவரம்.
Firaaq – என்ற உருது வார்த்தைக்கு பிரிவும் விருப்பமும் என பொருள்படும். இந்த படம் நந்திதா தாஸ் முதன் முறையாக அவர் இயக்கி இருக்கும் படம். எழுத்து இன்னொருவருடன் சேர்ந்து எழுதி இருக்கிறார். இது தொடக்கம், முடிவு இல்லாதை கதை என்ற ப்ரேமுக்குள் வராமல் சில சம்பவங்களின் தொகுப்பாக எடுத்து இருக்கிறார்.
முதலில் சமீர் என்ற இஸ்லாமிய பணக்கார இளைஞன் இந்து பெண்ணை திருமணம் செய்தவன். கலவரத்தில் அவனுடைய கடை சூறையாடப்பட்டுவிட மேலும் போகும் இடமெல்லாம் அவனுடைய அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய சூழ்நிலை. கணவன் மனைவி இருவரும் பயந்து வீட்டை காலி செய்து டெல்லிக்கு இடம்பெயர முடிவெடுத்து செயல்படுகின்றனர்.
இரண்டாவதாக மிடில்க்ளாஸ் இந்து குஜராத்தி குடும்பம். கலவரத்தின் போது கதவை தட்டிய இஸ்லாமிய பெண்ணை வீட்டிற்குள் விட்டு காப்பாற்றாமல் விட்டதால் குற்ற உணர்ச்சியுடன் தனக்கு தானே சூடு போட்டுக்கொள்ளும் குடும்பதலைவி, கடைகள் சூறையாடலின் போது கூட்டத்தோடு கூட்டமாக திருடிம் அவன் கணவன், ஏற்கனவே கற்பழிப்பு கேஸ் குற்றம் சாட்டப்பட்ட அவனின் தம்பி.
கலவரத்திற்கு பயந்து வெளியே தங்கியிருந்து வீட்டிற்கு வந்தால் வீடு நாசமாக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய குடும்பம். வீடு நாசமாக்கபட்டதற்கு இஸ்லாமிய பெண் பக்கத்து வீட்டு பெண்ணையே சந்தேகப்படுவது என போகிறது.
இன்னொன்று மதங்களை கடந்து பழகும் இஸ்லாமிய பழம் பாடகர் மற்றும் அவர் சந்திக்கும் கலவரம்.
கண்முன்னே குடும்பம் எல்லோரும் கொல்லப்பட தந்தை மட்டும் வெளியே கொல்லப்பட்டது தெரியாமல் தந்தையை தேடும் சிறுவன்.
இதற்கிடையில் பழிவாங்கவும், பாதுகாப்புகாகவும் துப்பாக்கியை தேடும் சில இஸ்லாமிய ஆண்கள்.
இப்படி பல தளத்தில் கதை நகர்கிறது. அங்கங்கே தொட்டுக்கொண்டு இறுதியில் படம் முடிகிறது.
பாடகராக நடித்துள்ள நஸ்ருதீன் ஷா அருமையாக நடித்துள்ளார். அதிலும் டிவி பார்த்த பின்பு அவர் கலங்குவது அருமை.
நடுத்தர இந்து குடும்பத்தலைவியாக தீப்தி நாவலின் நடிப்பு பிரமாதம். அனாதை இஸ்லாமிய சிறுவனுக்கு ஆதரவு கொடுப்பதாகட்டும் தான் தாக்கப்பட்டு அதை பார்த்து அந்த சிறுவன் தப்பிக்கும் போது இயலாமையினால் கோபப்படுவதாகட்டும். சிறப்பாக செய்துள்ளார்.
இந்த கலவரங்களில் போலிஸின் பங்கும், அவர்கள் இஸ்லாமியர்களிடம் “ வேண்டும் என்றால் பாகிஸ்தான் போங்க” என்பது எல்லாம் கலவரத்தின் சில காட்சிகளை படம் பிடித்து காட்டுகிறது.
தெருவோர சாப்பாட்டுக்கடைக்காரன் இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த மதவெறியை தன்னிடம் சாப்பிடும் பணக்கார முஸ்லீமிடம் இந்து என நினைத்து வெளிப்படுத்தும் இடமும் பிறகு சமாளிப்பதுவும் ரசிக்கதக்கது.
இறுதியாக நம்பிக்கையூட்டும் விதமாக சில காட்சிகளை முடித்துவைப்பது நன்றாக இருக்கிறது.
ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் – நம்ம ஆள் கலக்கியிருக்கிறார்,
கலை – லோ பட்ஜெட் படம் போல. பரவாயில்லை.
இசை – தேவையான இடங்களில் அமைதி காத்திருக்கிறது.
ஒரு கலவரத்தில் யார் நல்லவர், கெட்டவர் என்பதை விட சந்தர்ப்பங்களில் அந்த மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை வெளிச்சம் போட்டுகாட்டியிருக்கும் படம். கலவரத்திற்கு பின்னான சாதாரண மக்களின் வாழ்க்கையை காட்டியிருக்கும் படம் இது. உலக அளவில் சில விருதுகளையும் வென்றுள்ளது.
கலவரத்தின் நிழல்
பார்க்க வேண்டிய படம்.
Firaaq – Bire Eye view for Gujarat Riot in ordinary peoples life.

2 comments:

  1. சலாம் ஹைதர் பாய்

    பாய் இந்தப் படம் வெளிவந்துவிட்டதா??.

    ReplyDelete
  2. பார்க்க வேண்டிய படம்தான்

    ReplyDelete