Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Thursday, September 27, 2012

‘ ஆமாம் சாமி’ யாக இருக்காதீர்கள்..!


ஆமாம் சாமி’ யாக இருக்காதீர்கள்..!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: நீங்கள் “இம்மா” (ஆமாம் சாமி போடுகிறவர்களாக, மற்றவர்களின் நடத்தையைப் பார்த்து தம்முடைய நடத்தையை அமைத்துக் கொள்கின்றவர்களாக,சுயபுத்தி இல்லாத அடிவருடிகளாக) ஆகிவிடாதீர்கள்.

மக்கள் நல்லது செய்தால் நாமும் நல்லவற்றில் ஈடுபடுவோம்; நன்மையானவற்றை செய்வோம். ஆவர்கள் அநீதி இழைத்தால் நாமும் ஆநீதி இழைப்போம் என்றெல்லாம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள். அதற்கு மாறாக உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.மக்கள் நல்லவற்றில் ஈடுபட்டால் நன்மையானவற்றில் ஈடுபடுவது உம் மீது கட்டாயமாகும். ஆவர்கள் தீயவற்றில் ஈடுபடுவார்களேயானால் அநீதி இழைக்காதீர்கள். அறிவிப்பாளர் : ஹுஸைஃபா (ரலி) நூல்: திர்மிதி.

ஹதீஸ் விளக்கவுரை.

1. எவருக்கு தம்முடைய கருத்தில் நிலைத்து நிற்கின்ற ஆற்றலும் பண்பும் சக்தியும் இல்லையோ, அறிவார்ந்த விவகாரங்களில் மற்றவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்கள் இம்மஅ என்று அரபியில் சொல்வார்கள். உயர்வு நவிற்சிக்காக இங்கு ‘தே’ என்கிற எழுத்தும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பெண்ணை ‘இம்மத்’ என்று சொல்வதில்லை.

2. மற்றவர்கள் எதனைத் தீர்மானிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே நீர் எடுக்கிற எல்லா முடிவுகளும் அமையும் எனில் அது எந்த வகையிலும் பொருத்தமான நடத்தை ஆகாது. மற்றவர்கள் எங்களுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே  அவர்களுடன் நம்முடைய நடத்தையும் தீர்மானிக்கப்படும் என்பது உகந்த மனப்பான்மை கிடையாது. அதற்கு மாறாக உங்களுக்கு என ஏதாவதொரு கருத்தோ அல்லது ஆற, அமர யோசித்து எடுக்கப்பட்ட  முடிவோ இருக்க வேண்டும். அந்த முடிவிலும் அணுகுமுறையிலும் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டும். தவறான நபர்களின் தவறான செயல்கள் பின்பற்றப்படுவதற்கான தகுதி பதைத்தவை அல்ல.

3. அதாவது உம்முடன் மோசமாக நடந்து கொள்கின்றவர்களுடன் நீரும் எல்லை மீறி விடக்கூடாது. அவர்கள் மீது அநீதி இழைத்து விடக்கூடாது. எவராவது உம் மீது அக்கிரமம் இழைத்தால் கொதித்துப் போய் அநீதி இழைத்து விடக்கூடாது. எந்த நிலையிலும் எல்லை தாண்டி விடக்கூடாது. அக்கிரமத்துக்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டுமெனில் உம்முடைய பதிலடி எந்த வகையிலும் எல்லை தாண்டி விடக் கூடாது. வரம்புகளை எக்காரணத்தை முன்னிட்டும் மீறக் கூடாது. அக்கிரமத்துக்குப் பதிலடியாக அக்கிரமம் இழைப்பது எந்த வகையிலும் அழகு கிடையாது. இந்த விஷயத்தில் இஸ்லாம் விதிக்கின்ற பொறுப்புகளையும் கடமைகளையும் முழுமையாகப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

அக்கிரமம் இழைக்கப்படும் போது அதனை மன்னித்து மறந்து விடுகிற அணுகுமுறையை மேற்கொண்டு  அக்கிரமம் இழைத்தவரை மன்னித்து விடுவதே விரும்பத்தக்கதாகும். அண்ணல் நபிகளார் (ஸல்) எந்த காலத்திலும் எவரிடமும் தனிப்பட்ட முறையில் பழிக்குப் பழி வாங்கியது கிடையாது. அக்கிரமம் இழைத்தவரை மன்னிப்பதோடு நின்று விடாமல் இன்னும் ஒருபடி மேலாக சென்று அவருக்கு நன்மை செய்தால் அது மிக உயர்வான நடத்தையாகக் கருதப்படும்.
   
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 42: 40)