Sunday, August 2, 2015

சிறுகதை : விற்பனை பிரதிநிதி

மாநிறமுடைய நடுத்தரவர்க்கத்து குடும்பப் பெண் தோளில் கையில் பெரும் பைகளுடன் வியர்வை வழிந்த முகத்தோடும் செயற்கைத் தனமான புன்னகையோடும் வீட்டு வாசலுக்கு முன் வந்து ஸார் புதிதாக ஆரம்பித்திருக்கிற எங்களின் பற்பசை (பேஸ்ட்) தயாரிக்கும் கம்பெனியிலிருந்து வருகிறேன் என அந்த கம்பெனி தயாரிப்பை எப்படியெல்லாம் மர்க்கெட்டிங்க் பண்ணவேண்டும் என்று இவரை தயாரித்து அனுப்பினார்களோ அதை அச்சு பிசகாமல் இயந்திரத் தனமான கிளிபிள்ளை போல மடமடவேன்று பேசினார்.
சரி என் இவ்வளவு அவசர பேச்சு கொஞ்சம் நிதானமாக உட்காந்து பேசலாமே அம்மா இருக்காங்க என் மனைவி இருக்காங்க அவுங்களிடம் கொஞ்சம் சொல்லூங்க. கண்டிப்பாக வாங்குவாங்க.
வீட்டிற்க்குள் நுழைந்தார் எனது நோக்கம் பேஸ்ட் வாங்குவதை விட வெய்யில் வேறுத்து விருவிருத்து நிற்கிற அந்த பெண்ணிற்க்கு எதாவது குளிர்பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்துவோம் என்கிற சகோதர எண்ணமே பிரதான நோக்கமாக இருந்தது.
அம்மாவிடம் பேசிகிட்டு இருந்தார் மனைவியை அழைத்து உள்ளே சவூதிலிருந்து கொண்டு வந்த டேங்க் (tang) ஆரஞ்சு குளிர்பானத்தை பிரிஜ்ஜில் கலக்கி வைத்திருந்ததை எடுத்து வரச் சொன்னேன். அவரும் எடுத்து வந்து ஆளுக்கு ஒன்றாக நீட்டினார் நாங்க குடிக்கும்போது இவர் மட்டும் குடிக்க மறுத்தார்.
ஜுஸ் குடிங்களேன் என்றேன்
இல்லேண்ணே வேண்டாம்.
வெய்யில் அலைந்து திரிபவர்களை பேன் காற்றில் உட்கார வைத்து குளிர்ந்த ஜுஸ் கொடுத்தால் யார்தான் மறுப்பார்கள் இவர் ஏன் மறுக்கிறார் ஒருவேளை உயர்சாதி பெண்ணாக இருப்பாரோ? மனதுக்குள் எழுந்தகேள்வியோடு இல்லம்மா சுத்தமானதுதான் குடிங்க.
இல்லேண்ணே வேண்டாம்
ஒருவேளை மயக்க மருந்து கியக்க மருந்து கலந்து கொடுத்து விடுவோம் எனப் பயப்படுகிறாரோ? நாம்தானே சேர்ந்து குடிக்கிறோம் அவருக்கு அப்படி சந்தேகம் வர வாய்ப்பில்லையே? சரி நேரடியாக அவரிடமே கேட்டு விடுவோம்.
ஏன் குடிக்க மாட்டேங்கிறீங்க சாதி பாக்குறீங்க? இல்லை மயக்க மருந்து எதாவது கலந்து இருக்கும் என்று பயப்படுறீங்க அல்லாஹ் மேல சத்தியமாக அப்டிலாம் எதுவும் இல்லை சகோதர பாசத்தோடுதான் என் மனைவி கொடுத்தார் ஏன் மறுக்குறிங்க??
ஐயே கடவுளே அப்டிலாம் ஒன்னும் இல்லேண்ணே கொஞ்ச நேரம் மவுனம் ...... சரி அக்கா பாத்ரூம் எங்கே இருக்கு என்று மனைவியை நோக்கி கேட்டார் உள்ளே வாம்மா என்று அழைச்சுகிட்டு போனார் அப்பதான் எனக்கு சுருக்குனு உறைத்தது.
பாத்ரூம் உள்ளே நுழையும் முன் மனைவியும் அவரும் ஏதோ பேசிக் கொள்வது சன்னமாக கேட்டது. அக்கா காலையிலிருந்து சிறுநீரை அடக்கி கிட்டு இருக்கேன் வெளியில் வந்தால் தண்ணீ ஜுஸ் அதிகமாக குடிப்பதில்லை அர்ஜன்டா வந்தால் எங்கே போவது என்கிற பிரச்சனைக்காகவே. ஆண்களாக இருந்தால் எங்காவது மூட்டுச் சந்தில் சிறுநீர் கழித்து விடுவார்கள் ஆனால் நாம்?

1 comment:

  1. 'உண்மைக் கதை' போலவே எழுதியுள்ளீர்கள்...

    ஆனால், அதனுள் மையம் கொண்டிருந்த கருத்து...
    இப்படியான பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்டிர்களின்
    பரிதாப நிலையை விளக்கியது.

    .
    .

    ReplyDelete