Saturday, September 28, 2013

தமிழிழத்திற்கு எதிரான நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் யார்?


திடீர் தமிழ் இன உணர்வாளர்கள் பலர், நரேந்திர மோடியை ஆதரிக்கும் பொழுதே அவர்களது சாயம் வெளுத்து விடுகின்றது. இனப்படுகொலைச் சகோதரர்களான மோடியையும், ராஜபக்சவையும் ஒப்பிடுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால் கூடப் பரவாயில்லை. 

மோடியை பிரதமராக்கத் துடிக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான், புலிகளின் அழிவு ஆரம்பமாகியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தோல்வியின் விளிம்பில் நின்ற சிங்கள இராணுவத்திற்கு உதவும் நோக்குடன், "இந்தியர்களின் ஜென்ம விரோதியான" பாகிஸ்தானுடன் இரகசியமாக ஒத்துழைத்த கதை யாருக்குத் தெரியும்?

2000 ம் ஆண்டு, புலிகள் திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தி, யாழ் குடாநாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். ஸ்ரீலங்கா படையினர் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாவகச்சேரி பகுதியும் பறிபோன பின்னர், ஸ்ரீலங்கா அரசு இந்தியாவின் உதவியை நாடியது. மரணப் பொறிக்குள் சிக்கிய படையினரை காப்பாற்றுவதற்காக, அன்றைய பாஜக அரசு வியூகம் வகுத்தது. இந்திய இராணுவத்தை அனுப்பி, சிங்களப் படையினரை வெளியேற்ற இருப்பதாக அறிவித்தது. அது புலிகளை ஏமாற்றுவதற்கான, பாஜக அரசின் சூழ்ச்சி என்பது சில நாட்களில் தெரிய வந்தது.

ஈழப்போரில் அதுவரையில் பாவிக்கப் படாத நவீன ஆயுதமான, பல்குழல் பீரங்கிகள் பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கின. ஒரு மீட்டர் இடைவெளி விடாமல், சீறிப் பாய்ந்து வந்த ராக்கட் தாக்குதல்களுக்குள் நின்று போரிட முடியாத, புலிகளின் படையணிகள் பின்வாங்கிச் சென்றன. யாழ் குடாநாடு மீண்டும் சிறிலங்காப் படைகளின் வசம் வந்தது. இதிலிருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம். ஸ்ரீலங்கா அரச படைகளின் தோல்வியையும், புலிகளின் தமிழீழ வெற்றியையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில், அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் இருக்கவில்லை.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், புலிகளின் பலம் மேலோங்கி இருந்தது. ஸ்ரீலங்கா படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். 2000 ம் ஆண்டு, அதிசயப் படத்தக்க வேகத்துடன் தாக்குதல் நடத்திய புலிகள், ஸ்ரீலங்கா படையினர் வசம் இருந்த ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற வன்னிப் பகுதிகளையும், நாவற்குழி, சாவகச்சேரி போன்ற யாழ் குடாநாட்டின் பகுதிகளையும் சில நாட்களுக்குள் கைப்பற்றினார்கள்.

யாழ் குடாநாடு முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தால், அன்றே தமிழீழம் பிரகடனம் செய்திருப்பார்கள். அன்றிருந்த சிங்களப் படைகள், யுத்தம் செய்யும் மன நிலையில் இருக்கவில்லை. தப்பினோம், பிழைத்தோம் என்று நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தருணத்தில் தலையிட்டு, புலிகளை மேற்கொண்டு முன்னேற விடாது தடுத்த சக்தி எது தெரியுமா? இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தான் முடிவை மாற்றி எழுதியது. புலிகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறா விட்டால், இந்திய இராணுவத்தை அனுப்பப் போவதாக எச்சரித்தது.

2000 ம் ஆண்டு, சாவகச்சேரி போரில் இடம்பெயர்ந்தவர்கள் என்னிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் இருந்து:

 //பூநகரியில் இருந்து கேரதீவு, சங்குப்பிட்டி வழியாக ஊடுருவிய புலிகளின் படையணிகள், திடீர் தாக்குதல் மூலம், நாவற்குழி, கைதடி ஆகிய இடங்களை கைப்பற்றினார்கள். புலிகள் மட்டுவில் வரையில் வந்து விட்டனர். சாவகச்சேரி நகர எல்லையில் அமைந்த வயல் பகுதியில், திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் ஆட்டிலெறி பூட்டிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கண்ட மக்கள் ஏதோ ஒரு பெரிய போர் வரப் போகின்றது என்று நினைத்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

சில நாட்களில் புலிகள் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கும் வந்து விட்டார்கள். சிங்களப் படையினர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு படையினர் முகத்திலும் கிலி தென்பட்டது. படையினர் நாலாபக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொது மக்களின் சைக்கிள்களை பறித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது சில அந்நிய நாட்டவர்கள் தோன்றி, ஸ்ரீலங்கா படையினரை பின்வாங்க விடாமல் தடுத்தார்கள்.

ஆனாலும், சாவகச்சேரி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. ஸ்ரீலங்கா படைகள் கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். அப்போது போர் தற்காலிகமாக நின்றிருந்தது. யாழ் குடாநாட்டிற்குள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிய படைகளை வெளியேற்ற சம்மதிப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், விரைவில் யாழ் குடாநாடு முழுவதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும் என்று புலிகள் நம்பினார்கள்.

ஆனால், அந்தக் கால அவகாசம், பாகிஸ்தானில் இருந்து மல்ட்டி பரல் ராக்கெட் வருவதற்காகத் தான் என்பது அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது சாவகச்சேரி பகுதியில் பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை. புலிகள் மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள். இராணுவத்தினரின் பல் குழல் பீரங்கிகள் ஏவிய ராக்கெட்டுகள், ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் வந்து விழுந்தன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் பல குண்டுகள் வந்து வெடித்தன. சாவகச்சேரியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. அதற்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் யாருமே உயிரோடு தப்பவில்லை. அப்படியான சூழ்நிலையில், புலிகள் அங்கே நிற்பதானது கூட்டாக தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. அதனால், யாழ் குடாநாட்டை பிடித்த புலிகளின் படையணிகள் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றன.//

இந்தியாவில் அன்று ஆட்சியில் இருந்த பாஜக அரசு, புலிகளின் மகத்தான வெற்றியை அனுபவிக்க விடாமல் தடுத்தது. நவீன ஆயுதமான மல்ட்டி பரல் ராக்கெட்டுகளை பாகிஸ்தான் தான் கொடுத்தது. ஆனால், அது இந்திய அரசின் ஒப்புதல் இன்றி நடந்திருக்க முடியாது. அன்று புலிகள் மல்ட்டி பரல் தாக்குதலை சமாளித்து நின்றிருந்தாலும், அடுத்த கட்டமாக இந்தியப் படைகளை இறக்குவதற்கு ஆலோசிக்கப் பட்டது. பாஜக அரசு அனுப்பும் இந்திய இராணுவம் வந்திறங்கி இருந்தால், (2009 ல் முடிந்த) இறுதிப் போர் அப்போதே நடந்திருக்கும். பிரபாகரன் கூட தனது மாவீரர் தின உரையில் அதனைக் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வெறியேற வேண்டி இருந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

மோடியை ஆதரிக்கும் "சமூக உளவியலும்", ராஜபக்ஷவை ஆதரிக்கும் "சமூக உளவியலும்" ஒன்று தான். இரண்டுமே சிறுபான்மையினத்திற்கு எதிரானவை. மோடியை ஆதரிக்கும் இந்து பேரினவாதிகளுக்கும், ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்து பேரினவாதிகளுக்கு முஸ்லிம் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழ் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. 


மோடிக்கான ஆதரவு, இந்து பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அது, இலங்கையில் சிங்கள பெரும்பான்மை வாக்காளர்கள் ராஜபக்ஷவை ஆதரிப்பதைப் போன்றது. மோடியை ஆதரிக்கும் தமிழர், தென்னிலங்கையில் பிறந்திருந்தால், ராஜபக்ஷவை ஆதரித்திருப்பார். ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்களவர், இந்தியாவில் பிறந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார். இவர்கள் பேசும் மொழி மட்டுமே வேறு. கொள்கை ஒன்று தான்.

புலிகளின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட, பாஜக வின் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்கும் ஒருவர், உண்மையான தமிழ் இன உணர்வாளராகவோ, அல்லது புலி ஆதரவாளராகவோ இருக்க முடியாது. அவர்கள் அணிந்திருக்கும் தமிழ் முகமூடி, என்றோ ஒருநாளைக்கு கிழியும் என்பது எதிர்பார்த்தது தான். அவர்களது தமிழ் இன உணர்வு வாய்ச் சவடால்கள் எல்லாம் மோடி பிரதமராகும் வரையில் தான். அதற்குப் பிறகு ராஜபக்சவுடனும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

(நன்றி : கலையகம்   )

2 comments:

  1. 2000 AANDU PULIKAL YAAL sundukkuli KACHCHERI VARAI athaavathu YAAL municipal ellaaiyaiyum thaandi MUNNERI IRUNTHANAR ...

    ReplyDelete
  2. www.jaffnamuslim.com/2013/09/blog-post_3768.html?m.
    INRU VELI VANTHA thagaval

    ReplyDelete