Friday, May 6, 2016

வாட்ஸ் அப் வாழ்க்கை.


முன் கடந்து போவோரின்

முகம் காண முடியவில்லை.

பின் நின்று சிரிப்போரின்

எண்ணம் எனக்கு புரியவில்லை.

தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.

தொடுதிரையை தொட்டபடி

உள்ளங்கையில் தான் உலகம்.

என் கைபேசி காதலியானாள்- நான்

கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...

உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,

நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.

சாமக் கோழி கூவிய பின்னும்,

கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,

வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.

எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.

Hi என எவரோ அனுப்ப

Hai என பதிலுரைத்தேன் - ஏனோ

நான் பெற்ற பிள்ளை

'அப்பா'என்றழைக்க,

சற்றே புருவம் உயர்த்தி

பார்வையாலே சுட்டெரித்தேன்...

அடுத்தவரின்,

Status பார்த்து ரசித்தேன்,

profile பார்த்து வியந்தேன்,

Picture Msg பார்த்து லயித்தேன்,

video பதிவிறக்க ஆர்வத்தில்.

கை அலம்பியபின் யோசித்தேன்.

நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...

மாமன் வீட்டு மீன் குழம்பு,

மாமி பொறித்த அப்பளம்,

தங்கை வீட்டு தக்காளிச்சோறு,

மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,

அமிர்தம் தந்த மனையாளிடம்.

இது நஞ்சை விட கேவலமென்று...

நானாய் சிரித்தேன்,

நானாய் அழுதேன்,

நானாய் வியந்தேன்,

நானாய் ரசித்தேன்-ஏனோ

நான்,

நானாய் மட்டும் இல்லை...

ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.

என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட

Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...

கீமோஜியில் கூட

சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,

ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.

ஆனால்...

நான் நிமிர்ந்து பார்க்கும் போது

என் முன்னே எவருமில்லை.,

சுற்றமும், நட்பும்

உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...

இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்

சொந்தமே.,

இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.

நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய்.,,,   தவம் கிடக்கிறது...!

(வாட்ஸ் அப் புலம்பல் )

2 comments:

  1. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நான் உரை நடையில்..

    http://eliyavai.blogspot.com/2015/07/blog-post.html

    ReplyDelete
  2. அருமையான கவிதைப்பகிர்வு.

    ReplyDelete