Friday, September 28, 2012

நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்.பாகம் -1

 சொற்பொழிவாற்றல்

1. உள்ளடக்கத்தைத் திட்டமிடலும் தயாரித்தலும்
  அ. படிப்படியான அணுகுமுறை
  ஆ. பயன்படும் தன்மையை அதிகரித்தல்

2. ஒப்புவிக்கும் நுட்பங்கள்: முக்கிய அம்சங்கள்
   அ. பயிற்சி
   ஆ. உடல் மொழி, குரல் மூல மற்றும் பார்வை மூலத் தொடர்பு
   இ. பேச்சை நிறுத்துதல்
    ஈ. சொற்பொழிவாளரின் சுய தோற்றம்

3. கேள்வி -பதில்: சவால்களும் சந்தர்ப்பங்களும்
4. பயன்படும் சொற்பொழிவிற்கான மாதிரிகள்
5. சொற்பொழிவிற்கான சரிபார்க்கும் பட்டியல் (Cheek List)

1. உள்ளடக்கத்தை திட்டமிடுவதும் தாயாரிப்பதும்
     அ. படிப்படியான அணுகுமுறை
1. ஆரம்பத்தில் கருத்தில் கொள்ள  வேண்டியவை
 கேட்போரை அறிந்துகொள்ளுங்கள்

ஓரு உரையை திட்டமிடுவதற்கு முன் முதலாவதாக கேட்போரைப் பற்றி அறிந்துக் கொள்வது அந்த மக்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? சமூக வாழ்நிலை சூழல் இவைகள் தெரிந்திருந்தால் மிக அழகாக அவர்களில் ஒருவனாக நின்று நாம் பேச முடியும்.நேர காலத்தோடு வந்து பிந்திச் செல்வது, கேட்போருடன் நெருக்கமான இணைப்பை ஏற்படுத்தவும் அதனால் பேச்சின் மூலம் மேலும் சிறந்த கருத்து பரிமாற்றம் நிகழவும் உதவும்.மாற்று கருத்துடையோருடன் உரையாடுவதினால் அவர்களது கருத்துக்களையும் பெயர்களையும் எமது சொற் பொழிவில் குறிப்பிடுவதன் மூலம் அவர்களது அபிப்பிராயங்களை நாம் மதிப்பதை எடுத்துக் காட்டலாம். சொற்பொழிவில் வழங்கப்பட்ட கருத்துக்களை அழுத்திச் சொல்வதற்கும் இது போன்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முடியும்.

பேச்சின் கட்டமைப்பு 
 ஒரு சொற்பொழிவின் பொதுவான மாதிரியொன்றை புறவரை (out line) கிழே தரப்படுகின்றது. ஆயினும் எல்லா சந்தர்ப்பங்களுக்குமே பொருத்தமானதென இதனைக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட  சந்தர்ப்பம் அல்லது தலைப்பு காரணமாக வேறொரு கட்டமைப்பிலான சொற்பொழிவு, தேவைப்படலாம். எப்போதும் நன்கு தொகுக்கபட்ட ஒன்றிணைந்த ஒரு சொற்பொழிவின் மூலம் நமது செய்தியைத் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

விஷயத்தை எடுத்துக் கூறல் 

பேச்சின் தொனிப்பொருளை எடுத்துக் கூற வேண்டும். அதன் அடிப்படை அம்சங்களை விவரித்து அதன் தலைப்பை விளக்க வேண்டும் ஒரு பிரச்சனை சமூகத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது எனவும், கேட்போர் இது பற்றி ஏன் அக்கறை செலுத்த வேண்டும் விளக்க வேண்டும்.

பொருளை பகுத்தாய்தல்

வரலாற்றுப் பின்னணியை விளக்கி கடந்த காலத்திலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளை எடுத்து கூறலாம். நிகழ்வுகள் இடம்பெற்ற காலத்தின் அடிப்படையைக் கொள்ளாமல் சொல்லப்படும் விஷயங்களின் அடிப்படையில் பேச்சின் உள்ளடக்கத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்வது பயனுள்ளதாக அமையும். நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனையானது இன்று ஏன் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது என்பதை கேட்பவர்கள் தெளிவாக விளங்க வேண்டும்.

முந்தைய தீர்வுகள் பற்றி விளக்குதல் 

சாத்தியமாகுமிடங்களில், குறிப்பான கடந்த காலச் சம்பவங்களைப் பரீசீலனை செய்யலாம். அவை நமது சமூகத்திருலிருந்தோ அல்லது பிற சமூகத்திற்கு தொடர்புள்ளதாக இருக்கலாம். அச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அவற்றின் வெற்றி அல்லது தோல்வியின் அடிப்படையில் ஆராயுங்கள். பிரச்சனை முற்றிலும் புதிதாக இருந்தால் கடந்த காலப் பிரச்சனைகளுடன் ஒப்பிட்டுக் கலந்துரையாடலாம்.

நன்கு திட்டமிட்ட ஒரு உரையானது திருப்திகரமான முன்னுரையுடன் ஆரம்பிப்பதோடு, முக்கியமான அம்சங்களை கொண்டதாக இருக்கும். அத்தோடு பொருத்தமான முடிவை அல்லது  சாராம்சத்தை வழங்குவதோடு, குறித்து ஒதுக்கப்பட்ட கால இடைவெளியில் அது நிறைபெறும். நமது முழுப் பேச்சையும் சமர்ப்பிப்பதற்குரிய விதத்தில் நாம் நமது நேரத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தேவையான போது பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் கருத்துக்களையும் தரவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

2. சொற்களை தேர்ந்தெடுத்தால்
  
முடிந்த அளவுக்கு மிகச் சிறந்த சொற்களை எப்போதும் பயன்படுத்துங்கள். முதிர்ச்சியுறாத மொழிப் பாவனை நம்மைப் பண்படாதவராக உடனே இனங்காட்டிவிடும். நிகழ்காலப் பேச்சு வழக்கிலுள்ள மொழி நடை பிரயோகம்,
எளிமையான மக்களுக்கு விளங்கும் சந்தர்ப்பவங்களும் இருக்கவே செய்கின்றன ஆயினும் அவை கவனமாகத் தெரிவு செய்யப்பட்டுப் பயன்படுத்த வேண்டும்.

முறையாக பயனப்டுத்தபடுகிற பயந்தரக்கூடிய “நேர்த்தியான சொற்பொழிவுக்குரிய சில சுருக்கமான மாதிரிகள் கிழே தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்களை அழுத்தி மீண்டும் கூறுவது. (சிறப்பாக மூன்று முறை)

* சொற்களை தெர்வு செய்யும் போது ஓசை ஒழுங்குடன் கூடிய போக்கைக் கருத்திற் கொள்வது.

* பேச்சு தாளத்தோடு அமையும் வண்ணம் எதுகை, மோனைகளை பயன்படுத்தலாம்.

ஒரு கருத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு மக்கள் நினைவிற் கொள்ளத்தக்க சாதுரியமான வசனத் தொடர்களைப் பிரயோகித்தல்.

சிக்கலான கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு உவமையணிகள், உருவகங்கள் ஒப்பீடுகள்,குட்டிக்கதைகள் முதலியவற்றை பயனபடுத்துதல்.

பேச்சாளர் கொண்டுள்ள  நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தும் புள்ளி விவரங்களைக் கையாள வேண்டும்.

அறிவையும் உணர்வையும் எழிச்சியுறச் செய்யும் செய்வினை, செயல்வினைகளை உபயோகப்படுத்தலாம்.

ஆரமபத்தில் கேட்போர் கவனத்தை ஈர்க்கும் வகையிலான கூற்றுகளை முன்வைத்தல். இறுதியில் நாம் பேசிய எடுத்துக் கொண்ட கருப்பொருளை கேட்போரிடமும் நன்கு பதியச் செய்து நினைவிலிருத்தக் கூடிய முடிவுரையை வழங்குதல்.

அதேவேளை சில கூற்றுகள் பேச்சின் போது தவிர்க்கப்பட வேண்டும். அவைகளை அடுத்த தொடரில் பார்ப்போம். (தொடரும்)

Thursday, September 27, 2012

‘ ஆமாம் சாமி’ யாக இருக்காதீர்கள்..!


ஆமாம் சாமி’ யாக இருக்காதீர்கள்..!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: நீங்கள் “இம்மா” (ஆமாம் சாமி போடுகிறவர்களாக, மற்றவர்களின் நடத்தையைப் பார்த்து தம்முடைய நடத்தையை அமைத்துக் கொள்கின்றவர்களாக,சுயபுத்தி இல்லாத அடிவருடிகளாக) ஆகிவிடாதீர்கள்.

மக்கள் நல்லது செய்தால் நாமும் நல்லவற்றில் ஈடுபடுவோம்; நன்மையானவற்றை செய்வோம். ஆவர்கள் அநீதி இழைத்தால் நாமும் ஆநீதி இழைப்போம் என்றெல்லாம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள். அதற்கு மாறாக உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.மக்கள் நல்லவற்றில் ஈடுபட்டால் நன்மையானவற்றில் ஈடுபடுவது உம் மீது கட்டாயமாகும். ஆவர்கள் தீயவற்றில் ஈடுபடுவார்களேயானால் அநீதி இழைக்காதீர்கள். அறிவிப்பாளர் : ஹுஸைஃபா (ரலி) நூல்: திர்மிதி.

ஹதீஸ் விளக்கவுரை.

1. எவருக்கு தம்முடைய கருத்தில் நிலைத்து நிற்கின்ற ஆற்றலும் பண்பும் சக்தியும் இல்லையோ, அறிவார்ந்த விவகாரங்களில் மற்றவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்கள் இம்மஅ என்று அரபியில் சொல்வார்கள். உயர்வு நவிற்சிக்காக இங்கு ‘தே’ என்கிற எழுத்தும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பெண்ணை ‘இம்மத்’ என்று சொல்வதில்லை.

2. மற்றவர்கள் எதனைத் தீர்மானிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே நீர் எடுக்கிற எல்லா முடிவுகளும் அமையும் எனில் அது எந்த வகையிலும் பொருத்தமான நடத்தை ஆகாது. மற்றவர்கள் எங்களுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே  அவர்களுடன் நம்முடைய நடத்தையும் தீர்மானிக்கப்படும் என்பது உகந்த மனப்பான்மை கிடையாது. அதற்கு மாறாக உங்களுக்கு என ஏதாவதொரு கருத்தோ அல்லது ஆற, அமர யோசித்து எடுக்கப்பட்ட  முடிவோ இருக்க வேண்டும். அந்த முடிவிலும் அணுகுமுறையிலும் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டும். தவறான நபர்களின் தவறான செயல்கள் பின்பற்றப்படுவதற்கான தகுதி பதைத்தவை அல்ல.

3. அதாவது உம்முடன் மோசமாக நடந்து கொள்கின்றவர்களுடன் நீரும் எல்லை மீறி விடக்கூடாது. அவர்கள் மீது அநீதி இழைத்து விடக்கூடாது. எவராவது உம் மீது அக்கிரமம் இழைத்தால் கொதித்துப் போய் அநீதி இழைத்து விடக்கூடாது. எந்த நிலையிலும் எல்லை தாண்டி விடக்கூடாது. அக்கிரமத்துக்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டுமெனில் உம்முடைய பதிலடி எந்த வகையிலும் எல்லை தாண்டி விடக் கூடாது. வரம்புகளை எக்காரணத்தை முன்னிட்டும் மீறக் கூடாது. அக்கிரமத்துக்குப் பதிலடியாக அக்கிரமம் இழைப்பது எந்த வகையிலும் அழகு கிடையாது. இந்த விஷயத்தில் இஸ்லாம் விதிக்கின்ற பொறுப்புகளையும் கடமைகளையும் முழுமையாகப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

அக்கிரமம் இழைக்கப்படும் போது அதனை மன்னித்து மறந்து விடுகிற அணுகுமுறையை மேற்கொண்டு  அக்கிரமம் இழைத்தவரை மன்னித்து விடுவதே விரும்பத்தக்கதாகும். அண்ணல் நபிகளார் (ஸல்) எந்த காலத்திலும் எவரிடமும் தனிப்பட்ட முறையில் பழிக்குப் பழி வாங்கியது கிடையாது. அக்கிரமம் இழைத்தவரை மன்னிப்பதோடு நின்று விடாமல் இன்னும் ஒருபடி மேலாக சென்று அவருக்கு நன்மை செய்தால் அது மிக உயர்வான நடத்தையாகக் கருதப்படும்.
   
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 42: 40)

Tuesday, September 25, 2012

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.

பகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள். இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது.

பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி  பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)

மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக  ஆக்கிக் கொள்கிறார்கள்.

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர் ஆன் 41: 34-35 )

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.

அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.

அவமானங்களைப் பொறுத்தவரையில் பல கற்பனையானவை; சில நாமாகவே தேடிக் கொண்டவை. இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்கப்பட்டவை இத்தகைய ‘அவமானங்களை’ பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை வேண்டுமென்றே நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் அதனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43)

“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். ”(திருக்குர்ஆன் 24:22)

பழிவாங்கும் உணர்வு படைத்தோர் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளுக்கும் உங்களால் பழிவாங்க முடியாது. முழுமையான நீதி வழங்கும் அதிகாரமும் வல்லமையும் உங்கள் கையில் இல்லை. எனவே அநீதி இழைத்தவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

இறைவாக்கையே தமது வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் மன்னித்தார்கள்.

* வசைமாரிப் பொழிந்தவர்களை

* அவதூறுகள் கிளப்பியவர்களை

* கொலை செய்ய முயன்றவர்களை

* நாடு துறக்க காரணமாக இருந்தவர்களை

* சமூக பொருளாதாரத் தடைகளை விதித்தவர்களை

ஆக அத்தனை பேரையும் மன்னித்தார்கள். “ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. இறைவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்” என்று கூறினார்கள், மேலும் தம் இறுதி உரையில் “ இன்றோடு பழிக்குபழி வாங்குவது நிறுத்தப் படுகிறது. என் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னித்து விடுகிறேன்” என்று முழங்கினார்கள்.

ஆயிரம் கொடுமைகள் இழைக்கப்பட்ட நிலையிலும் அண்ணல் நபியால் அமைதியாகத் தமது பணிகளைச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவர்களின் மன்னிக்கும் மாண்பும் ஒரு காரணமாகும். அவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களும் அவர்களது நண்பர்களாக மாறியதன் ரகசியமும் அண்ணலாரின் மன்னிக்கும் மாண்பே ஆகும்.

(நன்றி :எங்கே  அமைதி..! எனும் நூலிருந்து ஒரு பகுதி)

Monday, September 24, 2012

சிறுபான்மை ‘சிங்’கங்களை அசிங்கப்படுத்தும் ஊடக நரிகள்.

ஊடக பலமும், ஆட்சி ஆதிகார பலமும் இருந்தால் குதிரையை கழுதையாக்க முடியும் கழுதையை குதிரையாக்க முடியும் என்பதற்கான நிகழ்கால ஆதாரம் தான் இந்த சீக்கிய சிறுபான்மை இனத்தினர். வீரஞ்செறிந்த சீக்கியர்களை அப்படியே எதிர்மறையாக காமெடி பீஸ்களாக மாற்றி கேலிக்குரிய சித்திரமாக உருமாற்றி “சர்தாஜி ஜோக்ஸ்” என்று ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் இந்த ஊடகங்களால் பரப்பப்பட்டு,வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளன. (சீக்கியர்களை இந்தியில் சர்தாஜிக்கள் என்றும் அழைப்பார்கள்). உண்மையில் இந்த சீக்கியர்கள் யார் வரலாற்று பின்னணி என்ன? விரிவாகப் பார்ப்போம்.
மாரட்டியத்தில் பிராமணப் புரோகிதர்களின் தலைமையில் ஓர் இந்து போரரசை நிறுவ  சிவாஜி முயற்சித்த காலத்தில் வடமேற்கு இந்தியாவில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு தேசியப்புத்தெழுச்சி அங்கும்  துவங்கியது. முகலாயர்களின் ஆட்சியின்கீழ் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு துடித்துக்கொண்டிருந்தவர்களும்,சாதிய பாகுபாடுகள் மற்றும் விக்கிரக பூசைகளின் அடிமைத்தனத்திலும். அறியாமையிலும் வீரியமிழந்தவர்களுமாக அன்றாடம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த, பாமரர்களான கிராமத்து மக்களும் மலைவாழ் மக்களும், தேச பக்தர்களாகவும் போராளிகளாகவும் உயிர்ப்பலியாளர்களாகவும் ஆக்கப்பட்டு ஒரு புதிய தேசத்தைப் படைக்கும் பணி அங்கு துவக்கப்பட்டிருந்தது.
பத்தாவது குருவான குருகோவிந்த் 1675-ல் தான் சீக்கியர்களின் தலைவாரனார். சிவாஜியைப் போல் மக்களுடைய அரசியல் விருப்பங்களை மறந்துவிட்டு வைதிகப் பழமைச்சக்திகளை ‘அஸ்திவாரம்’ போட்டு பலப்படுத்த குருகோவிந்த் முயற்சிக்கவில்லை. காலமெல்லாம் இந்தியாவின் உண்மையான அனைத்துத்தேசிய இயக்கங்களுடையவும் உயிரும் சக்தியுமாக விளங்கிய உண்மையான மகான்களெல்லாம் அறிவுறுத்திய மகத்தான உயர்ந்த கோட்பாடுகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய தேசத்தை உருவாக்க குருகோவிந்த் முடிவெடுத்தார். கொள்கைகள், கூட்டுப்படுகொலைகள் மலிந்த 15,16,17 ஆகிய நூற்றாண்டுகளில் கூட இஸ்லாம் சமயத்திற்குச் சாதகமான செல்வாக்கு பலம் இல்லாமலில்லை.அக்காலத்தில் வடஇந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மதகுருமார்களும் மகான்களும் இஸ்லாம் சமயத்தின் மகத்துவத்தால் உத்வேகம் பெற்றனர். பொருளற்ற சாதி வேற்றுமைகள் நாசகரமானவை என்றும். பூசை புனஸ்காரம் போன்ற சடங்குகளால் ஆன்மீகப் பலன் கிட்டாது என்றும் கடவுளைப் பல பெயர்களிலும் உருவங்களிலும் வழிபடுவது தவறானதும் மூடத்தனமானதும் என்றும் மக்கள் தீவிரமாக உணரத் துவங்கினர்.

இந்து சமுதாயத்தின் மூடநம்பிக்கைகளும் கெடுதல்களும் இல்லாத ஒரு புதிய அரசியல் இயக்கத்தின் நிறுவனராகும் நலவாய்ப்புப் பெற்றவர் குருநானக் ஆவார். வழிபடுவதற்கு கண்னுக்குத் தெரியாத ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகவும், வாய்மைக் குணம், தூய வாழ்க்கை, நற்செயல்கள், கடவுளிடத்தில் முழுமையான பக்தியும் அடைக்கலமும் ஆகியவைதான் மோட்சத்திற்கான பாதை என்று குருநானக் போதித்திருக்கிறார். இந்த உலகில் அமைதிக்கும் மறு உலகில் மோட்சத்திற்கும் சாமான்ய உலகியல் வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு போகத் தேவையில்லை என்று அவர் கூறினார். பல ஆண்டுகள் ஒரு தியாகியும் துறவியும் தவசியுமாக அலைந்து திரிந்த பிறகும் உண்மையான எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று கூறிய குருநானக் மீண்டும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டார். அவர் உருவாக்கிய மத அடிப்படை சமுதாய,அரசியல் அடிப்படையிலான நியதிகளும் ஆட்சிமுறையும்தான் சீக்கியர்களை இன்றைக்கும் ஒரு ஒருங்கினைந்த சமுதாயமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
சிவாஜி பாவானிதேவியின் அருள் பெற்றவர் என்று கூறி புரோகிதர்கள் நம்பவைத்ததைப் போல், குருகோவிந்த் காளிதேவியின் அருள்பெற்றவர் என்று நம்பவைக்கவும் புரோகிதர்கள் முயற்சித்தனர். காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட சில பிராமணர்களின் தலைமையில் ஒரு நரபலி மேற்கொண்டர்கள். நல்வாய்ப்பால் கள்ளங்கபடமற்றவரும் தைரியசாலியுமான குருகோவிந்த் இதற்கு எல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. தன்னுடைய நாட்டையும் மக்களையும் விக்கிரக பூசைக்கும் புரோகிதத் தந்திரங்களுக்கும் அடிமைப்படுத்த அவர் மறுத்துவிட்டார். நான் உங்களைச் சாசுவதமான கடவுளின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். வேறெதையும் திரும்பிப் பார்க்காமல் அந்தக் கடவுளிடம் மட்டும் அடைக்கலம் நாடுங்கள். அவனுடைய பாதுகாப்பில் வாழுங்கள் என்று தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி விட்டுத்தான் அவர் உயிர் நீத்தார்.

சீக்கியர்களின் முக்கியமான நம்பிக்கைப் பிரமாணங்கள்:

1. சாசுவதமான ஒரே கடவுளை மட்டும் நம்புங்கள்

2. விக்கிரகங்களையோ, சவக்கல்லறைகளையோ, மரங்களையோ, பூதங்களையோ வழிபடாதீர்கள். ஏழைகளுக்கு உதவுவதோடு, அகதிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.

3. சாதிகள், தொழில் போன்ற பாகுபாடுகளைப் பார்க்காமல் எல்லோரும் ஒரே குடும்ப உறுப்பினர்களைப் போல் வாழ வேண்டும்.

4. ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டு எப்போதும் அயுதங்களுடன் இருக்க வேண்டும். பகைவனுக்குப் பயந்து ஓடிவிடக் கூடாது. சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் உயிர்த்தியாகம் செய்யத் தயாராயிருக்க வேண்டும்.

5. கற்பு நெறி, ஆன்மபலம், கட்டுப்பாடு, கொடையுள்ளம்,கடவுளுக்கும் நாட்டுக்கும் தன்னை அர்ப்பணிக்கும் குணம் ஆகிய நற்பண்புகளைக் கொண்ட தூய வாழ்க்கையை மேற்க் கொள்ள வேண்டும்.

6. எல்லா விஷயங்களிலும், தலைமைக் குழுவான ‘கல்சா’ விடம்தான் உயரதிகாரம் இருக்க வேண்டும்.

7. பத்து குருமார்களின் போதனைகள் உள்ளிட்ட நூல்தான் மதப்பிரமாணம்.

8. ஐந்து சீக்கியர்கள் உள்ளிட்ட ஒரு குழு வேறு யாரை வேண்டுமானாலும் சீக்கியர்களாக்கி குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

9. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லாவிதமான ஆன்மீக ஆசிகளுக்கும் உரிமையிருக்கிறது.

10. எல்லோரும் நம்பிக்கையுடன் உழைத்து வாழவேண்டும். சோம்பேறிகளுடனும், கெட்டவர்களுடனும் சேரக்கூடாது.

11. இந்தப் புதிய வாழ்க்கையில் நுழைபவர்கள் எல்லோரையும் சீக்கியர்கள் (சிங்கங்கள்) என்று அழைக்க வேண்டும்.

சிறிது காலத்திற்குள்ளயே 80,000 பேர் குருகோவிந்தின் ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர். அவர்களுடைய எண்ணிக்கையும் நாளாவட்டத்தில் பெருகியது. இந்தச் சட்டங்கள் அமுலாகியபோது  சீக்கியர்களின் சங்கத்தில் சேர்ந்த ஏராளமான பிராமணர்களும் மற்றவர்களும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டனர். பழைய அனாச்சாரங்களிலும் சாதி வேற்றுமைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் பிரிந்து போனதை குருகோவிந்த் வரவேற்றார். அவர்களுக்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான ஏழைக்கிராம மக்களும்,மலைவாழ் மக்களும் சீக்கிய சங்கத்தில் சேர்க்கப்பட்டு நாட்டின் கெளரவமிக்க குடிமக்களாக உயர்த்தப்பட்டனர்.

“சீக்கியர்கள் ராஜபுத்திர வீரர்களைப் போல் தன்மானமும் துணிச்சலுமிக்க ஒரு  மக்கள்  சமுதாயமாக உருமாறினர்.ஒரே சமுதாயம்.ஒரே நம்பிக்கை,ஒரே சமூக வாழ்க்கை,ஒரே அரசியல் அபிலாஷைகள் போன்றவாற்றல் சீக்கியர்கள் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.இந்த நவீனமயமாக்கத்தின் ஆழ்ந்த பலன் உடனடியாக வெளிப்பட்டது. சீக்கியர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தும், ஒத்துழைத்தும், வாழுகின்ற துணிகரம் மிக்க மக்களாக உருவாயினர்.அக்கிரமங்களும் ஒடுக்குமுறைகளும் தென்பட்ட இடங்களிலெல்லாம் சீக்கியர்கள் பாய்ந்து சென்று வலிவற்ற எளியோர்களைப் பாதுகாத்தனர். உணவைப் பங்கிட்டு புசித்தும், தள்ளாமை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் தாங்கியும் தழுவியும் குளிப்பாட்டியும் துணிகளைத் துவைத்தளித்தும், மகிழ்ச்சியுடனும் அன்புடனும் ஒருவரை ஒருவர் வரவேற்றும், ஒரே உடன்பிறப்புக்களைப் போல் சீக்கியர்கள் வாழத் துவங்கினர்.”
குருகோவிந்த் அவர்கள் சீக்கியர்களை வலுவான ஒருங்கினைந்த சமுதாயமாக உருவாக்கினார். அடிமைத்தனத்தில் வீழ்ச்சியுற்றுக்கிடந்த மக்கள் சுதந்திரமும், ஜனநாயகமும்,நீதியும்,தியாக உணர்வும் பெற்றனர். முகலாயர்களின் சர்வாதிகாரத்தின் கீழும், இந்து மதத்தின் அவமானத்தைச் சுமந்தும் நிராதரவாக வாழ்ந்து கிடந்த மக்களின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் வெளிப்பட ஆரம்பித்தன. சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும், நாட்டுக்காகவும் வாழவும் உயிர்த்தியாகம் செய்யவும் மகத்தான உத்வேகம் பெற்றனர்.

அவர்களைச் சுற்றி காடென வளர்ந்த மூடநம்பிக்கைகளில் இருந்தும் அனாச்சாரங்களில் இருந்தும் அவர்கள் விடுதலையடைந்தனர். துணிகரச் செயல்கள் புரிய அவர்கள் எப்போதும் தயாராக இருந்தனர். இவ்வாறு வீழ்ச்சியுற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சீக்கியர்கள் காலாகாலத்திற்கு முன்னுதாரண்மாகத் திகழ்ந்தனர்.பிராமணர்கள் கட்டியெழுப்பிய மாரட்டியம் இதற்கு நேர் எதிரான சமூக அமைப்பாக இருந்தது. நம்முடைய நாடு பிராமணக் கொடுங் கோன்மையில் இருந்து தப்பிவிட்டதாகச் சொல்லக்கூடிய தருணம் வரவில்லை. இந்தியாவின் ஏனைய மக்களைப் போலவே சீக்கியர்களையும் அது இன்றளவும் அச்சுறுத்திக் கொண்டுதானிருக்கிறது.
(Reference : Chapter XIV - C.A.Natesan & Co., Guru Govind Page 22)

தினமனி,தினமலர், போன்ற ஊடகங்கள் சிறுபான்மையினரின் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும் இயல்புக்கு மாறாக சிறுபன்மையினரை சித்தரிப்பதும் எதோ இயல்பானது எதார்த்தமானது என புரிந்துக் கொள்ளாதீர்கள் மிகப் பெரிய அரசியல் பின்னணி இவைகளுக்கு உண்டு.

Saturday, September 22, 2012

தமிழி(NHM Writer')ல் எவ்வாறு எழுதுவது?

தமிழி(NHM Writer')ல்  எவ்வாறு எழுதுவது?

நீங்கள் பேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப், ஜிமெயில் ஷாட் பண்ண மடல் எழுத அனைத்தும் தமிழிலேயே செய்யலாம். 

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  1. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  1. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  1. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  1. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  1. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  1. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  1. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.
எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.
உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

2ஆம் படி (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

4ஆம் படி (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.
NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் பார்க்க கிழே உள்ளது மாதிரி

மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்.  இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். 

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தங்கிலிஷ் முறையில் தட்டச்சு செய்ய Alt Key மற்றும் 2 யையும் சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.



தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். 



நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. 
Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.


உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.


நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி நீங்கள் பேஸ்புக்,டிவிட்டர்,ஸ்கைப்,ஜிமெயில் ஷாட் பண்ண மடல் எழுத அனைத்தும் தமிழிலேயே செய்யலாம். வாழ்த்துகள்.

நன்றி: சகோதரர்  Faizal K.Mohamed 


Wednesday, September 19, 2012

காங்கிரஸும், பி.ஜே.பி-யும் ஒன்னு அறியாத ஈழப்போராட்டவாதிகளின் வாயில் மண்ணு.

இந்தியாவில் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ராஜபட்ச பல வழக்கமான எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று(புதன்கிழமை) மாலையில் அவர் தில்லி வந்தார்.  

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடுத்து அமைந்துள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் சிறப்பு விமானத்தில் அவர் வந்தார். சிவப்புக் கம்பள வரவேற்பை மத்திய அரசு அளித்தது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று  மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார்.பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசுகிறார். அங்கு ராஜபட்சவுக்கு பிரதமர் இரவு விருந்து அளிக்கிறார்.
வெள்ளிக்கிழமை காலையில் தில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி செல்கிறார். அங்கு அமைய இருக்கும் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

கங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று மறுபடியும் நிரூபித்து உள்ளது எனவும் எதிர்கட்சியான பி.ஜே.பி புலம்பியது அட ராஜபட்சேவை வரச் சொன்னதே வருங்கால பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருக்கின்ற சுஜ்மா சுவராஜ் தானுங்கே அப்புறம் மத்தியபிரதேசம் பி.ஜே.பி ஆளும் மாநிலம் அங்குதானே புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.தமிழர்கள் மீது அக்கறையுள்ள பி.ஜே.பி அரசு தடுக்க வேண்டியது தானே என்ற உண்மையை போட்டு சில ஊடகங்கள் உடைத்தவுடன் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் துடித்து போய் அப்படியெல்லாம் இல்லை நாங்க ஈழத்தமிழர்களுக்கு விசுவாசமானவர்கள் பழைய வரலாற்றை பாருங்கள் என பச்சை சந்தர்ப்பவாத பொய்யை கூசாமல் சொல்கிறார் பாருங்கள்.
////சென்னை, செப். 5: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் தீவிரமடையத் தொடங்கிய 2008-ம் ஆண்டு முதல் இலங்கை அரசையும், அதற்கு துணைபோன மத்திய காங்கிரஸ் அரசையும் தமிழக பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றனர்.///

அடப்பாவிகளா பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லை?? “இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்க்கும் பாரதிய ஜனதாவுக்கும் ஒரே கொள்கைதானே? 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றர்களாம் ஆனால் உண்மை என்ன??.

பி.ஜே.பி. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர். (4.2.2009 ல் ஜூனியர் விகடனில் வெளியான பேட்டி)

 இந்திய - இலங்கை பிரகதி சன்சதியா’ என்ற அமைப்பில் கங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி - யை ச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவிவைச் சேர்ந்த ரவ்னி தாக்கூரும், பி.ஜே.பி -யின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரான சேஷாத்ரி சாரியும் சென்று வந்தனர். இவர்களுடைய பயணத்துக்கு அரசியல் காரணங்களோடு பொருளாதார, வர்த்தக விவகாரங்களும் காரணம். இந்தியாவும் இலங்கையும் உள்ளார்ந்த பொருளாதாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட இருக்கின்றன. அது தொடர்பான ஆலோசனைகளோடு, அரசியல் விவகாரங்கள் குறித்தும் இலங்கை அதிபர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

சேஷாத்ரி சாரியிடம் இது குறித்து பேசினோம்.
“இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவில்லாத நாடுகள் என்றால். இலங்கையும் பூட்டானும் தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளால் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையால் நல்ல பயன்பாடு உண்டு.பொருளாதார ஒப்பந்தங்களைப் போட நல்ல சூழ்நிலை வரவேண்டும். இலங்கையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், செய்துகொள்ளும் உடன்படிக்கைகளால் பலனில்லை. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனதில் வைத்து தான் முடிவு செய்யப்பட்டது.

நாங்கள் இலங்கையில் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் இந்திய அரசின் நிலையை எடுத்துச் சொன்னோம். நான் இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி -யின் கொள்கை என்ன என்பதையும் விளக்கினேன். அதிபர் ராஜபக்‌ஷேவையும் அவருடைய ஆலோசகர் பசில் ராஜபக்‌ஷேவையும் சந்தித்துப் பேசினோம். இப்போது புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் போராடிக் கொண்டு இருக்கிறது. இதில் கிட்டதட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அரசு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கு ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் பலம் பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து, தமிழர் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய வசதிகளை செய்து, அவர்களுடைய நம்பிக்கையை அரசுத் தரப்பு பெறவேண்டும். விடுதலைப்புலிகள் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் பணி முடிந்தவுடன் அங்கு ராணுவம் அல்லாத,சமுதாயப் பணிகளை மேற்கொள்ளும் சிவிலியன்களின் முகம் மட்டுமே தென்பட வேண்டும். எற்கனவே பிள்ளையான், கருணா போன்றவர்களின் உதவியோடு இந்தப் பணிகளை இலங்கை அரசு செய்து வந்தாலும், இவர்களை விடவும் தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிகையாக வைக்கபட்டது! ஆனால், இப்படி நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஓர் ஆபத்தும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்தான அச்சம் நிலவுகிறது.

அதிபர் ராஜபக்‌ஷே ஒரு மிதவாதி. அவர் சாதாரண எம்.பி -யாக இருந்த காலத்தியேயே அவரை கவனித்து வருகிறோம். பி.ஜே. பி ஆட்சியில் 1999 -ல் பொக்ரான்  அணுகுண்டுச் சோதனை நடந்தபோது, அவர் டெல்லிக்கு வந்து எங்களைப் பாராட்டிவிட்டுச் சென்றார். அவருடைய விஜயத்துக்கு அப்போதைய அதிபர் சந்திரிகா போன்றவர்கள எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜபக்‌ஷேவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இதனால் ராஜபக்‌ஷே இருக்கிறவரை பிரச்சனையில்லை. இலங்கையில் எல்லோரையும் அரவணைத்துப் போவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் சிங்களவாதத்தைக் கடைபிடிக்கும் சக்திகள் அதிகாரத்துக்கு வந்தால், தமிழர்களுக்கு எதிராகச் செயல்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மொழி, மத வேறுபாடு இன்றி எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்க அரசியல் சாசனம் மூலமாக நிரந்தரத் தீர்வு காணக் கோருகிறோம்.

ராஜபக்‌ஷே ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார். தமிழ் மாகாணம், சிங்கள மாகாணம் எந்தையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் உள்ளூர் மக்களுக்கு இங்கே அதிகாரம் கொடுப்பதைப் போல் இலங்கையில் மொழிவாரியாகவோ இனவாரியாகவோ இல்லாமல் சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார். இதம் மூலம் உள்ளூர் மக்கள் இன, மொழி வேறுபாடில்லாமல் பலனடைய வாய்ப்பிருக்கிறது! என்றவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

“விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பி.ஜே.பி முதலில் சாஃப்டாக இருந்ததே? பால் தாக்கரே போன்றவர்கள் பிரபாகரனை ஹீரோவாக நினைக்கிறார்களே? தமிழ் ஈழம் மட்டுமே தமிழர்களை பாதுஇகாக்கும் என்று சொல்லப்படுகிறதே?”

“ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம். இதில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவை பி.ஜே.பி-யும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ராணுவத் தீர்வு காண முடியாது என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குறிப்பாக, புலிகள்தான் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள். அதோடு, மற்ற தமிழ் அமைப்புகளையும் அழித்து விட்டு, சர்வாதிகார அமைப்பாகச் செயல்படுகின்றனர். இது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதல்ல. அரசியல் தீர்வுக்குப் புலிகள் எதிராக இருக்கின்றனர். தமிழர்கள், சட்டப்படியான அதிகாரம் பெற விரும்புகிறார்கள். புலிகளால் இதற்குத் தடை ஏற்படுகிறது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே இலங்கைத் தமிழர்களுக்கு பலன் கிடைக்கும்!”

“இலங்கையில் இனி சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லப்படுகிறதே...”

“ இது தவறான வாதம். இலங்கைத் தமிழர்களுக்கு, தாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். இலங்கையில் அந்நாட்டு அரசுகளும் பல தவறுகளைச் செய்துள்ளன. விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளும் தவறுகள் செய்தது. இலங்கையில் சிங்கள மொழியோடு தமிழும் அலுவலக மொழியாக உள்ளது. தமிழர்களும் அரசியலில் பங்கெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பெற்றுத்தான் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முன்னுக்கு வர முடியும். சிங்கள மக்களை எதிர்த்து, தமிழர்கள் இலங்கையில் முன்னேற முடியாது!” என்றார் சேஷாத்ரி சாரி.

சேஷாத்ரி சாரியோடு இலங்கைக்குச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் ரவ்னி தாக்கூரும் சாரியின் கருத்துகளையே எதிரொலிக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் போடப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானம் குறித்து தாக்கூரிடம் கேட்டோம்.

“ விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் நாம் ஆதரவு அளிக்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகள். இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுகிறோம். அவர்களுடைய உரிமைகள் கிடைப்பதற்கும் நாம் ஆதரவு கொடுப்போம். பஞ்சாப்பில் காலிஸ்தான் போன்ற பயங்கரவாத இயக்கங்களைப் பூண்டோடு அழித்தோம். இப்போது பஞ்சாப் மற்ற மாநிலங்களை விடச் சிறப்பாக இருக்கிறது. அதே மாதிரி இலங்கைத் தமிழர்கள், ‘விடுதலைப்புலிகள்தான் எதிர்காலம்’ என்று நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது!” என்று முடித்தார்.

சரோஜ் கண்பத்
_ ஜூனியர் விகடன்


பின்குறிப்பு: இந்த பேட்டி வெளியானது  (4.2.2009 ல் ஜூனியர் விகடனில்) அதே ஆண்டு . 2009-ல் மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றகளாம்(!?) நம்ம தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அடித்து விடுகிறார்.இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் நேர்மையற்ற சந்தர்ப்பவாதத்தை புரிந்துக் கொள்ள இது ஒன்று போதும் என்று நினைக்கிறேன். கானல் நீரில் மீனை தேடுகின்ற தமிழக ஈழ ஆதரவு போராட்டக்காரர்கள் புரிந்துக் கொள்வர்களா???

Friday, August 31, 2012

குஜராத் பெண் அமைச்சரின் கொடூரம்

2002 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் இந்தியாவின் புகழுக்குத் தீராத களங்கம் விளைந்த ஆண்டு. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி வெளிநாடுகளுக்குச் செல்வேன் என பாரதப் பிரதமரே கவலைப்பட்ட ஆண்டு  அது.

கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற குஜராத் இனப்படுகொலையை இந்தியா ஒளிர்கிறது; VIBRANT GUJARAT என என்னதான் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டி, வாய்மாலம் பேசி மறைக்க முயன்றாலும் அது என்றுமே மறைந்து போகாத பாவக் கறை படிந்த சோக வரலாறு என்பது தெளிவாகிக் கொண்டே இருக்கின்றது.

இந்த இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கி, முன்பு தலைமறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளிகளான குஜராத் அரசின் குழந்தைகள், பெண்கள் நலத்துறை அமைச்சர் மாயாபென் கோட்னானி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஜெய்தீப் பட்டேல் ஆகியோர் சிறப்பு விசாரணைக் குழுவிடம் சரணைடைந்து இதற்கான ஆதாரம். குஜராத் கலவரம் என்பது ஓர் எதிர்வினையன்று. குஜராத் அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை என்பது இந்த நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்தியாவின் அன்மைக்கால வரலாற்றில் மிகக் கொடூரமானன் முறையில் நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை அரசு பயங்கரவாதத்திற்கு ஒரு வலுவான ஆதாரம். 2002 இல் நரோதாபாட்டியா,நரோதாகாம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரத்தில் 106 பேர்
கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையில்,அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாயாபென் கோட்னானிக்கு நேரடித் தொடர்பு உள்ளது என சாட்சிகள் தெரிவித்திருந்தும்கூட மாநிலக் காவல் துறை இவர்களை வேண்டுமென்றே குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. மாயாவைப் பாதுகாக்க அனைத்துவிதமான உதவிகளையும் நரேந்திர மோடி அரசு செய்து கொடுத்தது. அதுமட்டுமல்ல அதற்குப் பின்னர் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டும் மாயாவின் தண்ணிகரற்ற ’சேவைகளுக்கு’ மதிப்பளித்தார் நரேந்திர மோடி.
எந்தவிதமான விசாரணையையும் மேற்கொள்ளாமல் மாயாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்ற தன்னிச்சையான முடிவுக்கு வந்தது குஜராத் மாநிலக் காவல் துறை. நரோதாபாட்டியாவில் வன்முறை நடைபெற்றபோது அங்கு மாயா காரில் வந்து இறங்கினார். கூரிய வாள்கள்,தாடி போன்ற பயங்கர ஆயுதங்களை விநியோகித்தார். பெண்கள், குழந்தைகள் உள்பட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை நெருப்பிலிட்டுக் கொல்ல வன்முறை வெறி பிடித்த கயவர் கூட்டத்துக்குக் கட்டளை பிறப்பித்தார். இதனை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் இருந்தும் கூட காவல் துறை அதனைப் பொருட்படுத்தவே இல்லை. ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்திய பிறகே தீயிலிட்டுக் கொளுத்தினார்.

உச்ச நீதிமனறம் இதில் தலையிட்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த பிறகுதான் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கின. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ’ஜன சங்கர்ஷ் மன்ச்’ எனும் அமைப்பு, சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த ஆதாரங்கள் மாயாவுக்கு எதிரான வலுவான ஆதாரமாகத் திகழ்ந்தது. முன்னாள் குற்றப் புலானாய்வுத்துறை அதிகாரி ராகுல் சர்மா சேகரித்த இரண்டு செல்பேசி நிறுவனங்களின் அறிக்கைகளை ஆதாரமாக்கி, ஜன சங்கர்ஷ் மன்ச்சின் வழக்குரைஞர் முகுல் சர்மா சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த ஆதாரங்களின் முலம், சம்பவம் நடைபெற்றபோது நான் காந்தி நகரில் இருந்தேன் என்ற மாயாவின் வாக்குமூலம் பொய்யானது.

முன்பு மாயாபென் கோட்னானிக்கும் ஜெய்தீப் பட்டேலுக்கும் சிறப்பு விசாரணைக் குழு நேரில் வரும்படி அறிவிக்கை அனுப்பியும்கூட அவர்கள் நேரில் வராமல் தலைமறைவானார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசில் அமைச்சராக உள்ள ஒருவர் மாநிலத்தில் எங்கு பதுங்கி உள்ளார் என்பது கூட ஓர் அரசுக்குத் தெரியமலா இருக்கும்? ஒரு போதும் இல்லை. அவர்கள் அரசின் பாதுகாப்பில்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் முன் பிணை கேட்டு அஹமதாபத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அவர்கள் அணுக வேண்டிய கட்டாயம் வந்தது.

சிறப்பு விசாரணைக் குழுவின் நேர்மையான விசாரணைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது எனும் நிபந்தனையுடன் அஹமதாபத் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த முன் பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த காரணத்தால் வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையில்தான் அவர்கள் சரணடைந்தார்கள் என்பது தெளிவு. தலைமறைவாக இருந்த காலம் முழுவதும் அவர்கள் மோடியின் அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர். தாமாகப் பதவி விலகவும் இல்லை; குற்றம் சாட்டப்பட்டவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. செஷன்ஸ் நீதிமனறம் வழங்கிய முன் பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னர்தான் அமைச்சரவையிலிருந்து அவர்கள் விலகினர்.

குஜராத் இனப்படுகொலை குறித்த விசாரணைகலை திசை திருப்பும் நடவடிக்கைகளை மட்டுமே மோடி அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. ஜன சங்கர்ஷ் மன்ச் சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்த அதே ஆவணங்களைத்தான் குஜராத் அரசி நியமித்த நானாவதி - கே.ஜி.ஷா - அக்‌ஷய் மேத்தா விசாரணை ஆணையத்திடமும் அளித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆவணங்களை கணக்கில் கொள்ளாமல் மோடி அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது நானாவதி குழு.

அக்‌ஷய் மேத்தா குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது, நரோதாபாட்டியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எந்தவித ஆதாரங்களையும் ஆவ்ணங்களையும் பார்க்காமலேயே பிணை வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.இதனைத் தெஹல்கா புலனாய்வுக் குழு நடத்திய இரகசிய விசாரனையின்போது முக்கியக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கியே ஒப்புக் கொண்டுள்ளார். நீதிபதி ஷா மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட காலி இடத்துக்கு மாநில அரசு மேத்தாவை நியமித்தபோது இவர் அரசுக்குச் சாதகமானவர்; ஒருதலைப்பட்சமானவர்; இவரிடம் நீதி கிடைக்காது; வேறு ஒரு நடுநிலையான நீதிபதியை நியமிக்க வேண்டும் எனக்கூறி இதனை ஜனசங்கர்ஷ் மன்ச் எதிர்த்தது. ஜனசங்கர்ஷ் மன்ச் பரிந்துரைத்த ஒருவரைக்கூட நீதிபதியாக நியமிக்க மோடி அரசு ஒத்துக் கொள்ளவில்லை.

தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து சிசுக்களை வெளியே தூக்கி வீசுகின்ற ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர்களுக்குத் தலைமை தாங்குகின்ற சூத்திரதாரியாக மாற்றி விட்டன.

இன்று இவர் தப்பிக்க முயற்சித்து நடத்திய நாடங்கங்களும், அனைத்து சட்ட ஓட்டைகளும் அடைபட "மாயா கோட்னானி"க்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவன் "பாபு பஜ்ரங்கி"க்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தப் பயங்கர சூழலிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமரசமின்றி போராடிய நடுநிலைவாதிகள், ’ஜனசஙகர்ஷ் மன்ச்’ அமைப்பினர், தீஸ்டா செடல்வாட், மல்லிகா சாராபாய், போன்ற வீரமங்கைகளும் நீதி வழங்குவதில் எச்சரிக்கை உணர்வுடன் திகழுகின்ற நீதிபரிபாலனமும் நமக்கு தருகின்ற ஆறுதலும் நிவாரணமும் சாதாரணமானதன்று.


Thursday, August 23, 2012

மது ஒரு பொதுத்தீமை (மீள் பதிவு)

மிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

"உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,
பயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.
இளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு"

இம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.

மதுவால் புத்தி பேதலித்தவர்கள் எத்தனைப்பேர்.....?
மதுவால் தற்கொலை செய்தவர்கள் எத்தனைப்பேர்....?
மதுவால் பிறரைக் கொண்றவர்கள் எத்தனைப்பேர்....?

ஒய்வறியாமல் உழைத்து உருக்குலைந்து குடிபோதையில் தடுமாறும் கணவன்மார்களின் கால்களில் மிதிபட்டு, பசி மயக்கத்தில் தள்ளாடும் பிள்ளைகளுக்கு சோறிடும் பொறுப்பைச் சுமந்தபடி அன்றாடம் வாழ்க்கையுடன் போராடும் இலட்சக்கணக்கான தமிழக கிராம பெண்களின் அவலம் உங்களுக்கு தெரியுமா?

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி, குடியானவனை கொன்று விட்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இது அந்த ஏழைக் குடியானவன் இதுவரை அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஒய்வூதியமா என்பதை இந்த அரசு விளக்குமா?

தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்த நிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, இனி மொத்த 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண்மக்களின் வாய்களில் மதுவைத் திணித்துவிட்டு.அப்புறம் என்ன மயி.....க்கு மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எச்சரிக்கை செய்கிறது?

குடிபோதையில் வீட்டிற்கு வராமல் தன் மனைவி குழந்தைகள் வீட்டில் என்னவானார்கள் என்பதைப்பற்றி கூட கண்டுக்கொள்ளாத அவர்களின் பாதுகாப்பு குறித்துக்கூட கவலைப்படாத கணவன்மார்கள்,மதுவால் தன் மகளிடம் தகாத முறையில் நடக்கும் தந்தை, தன் மருமகளிடம் மப்பில் மதி கேட்டு நடக்கும் மாமனார், தன் தாய் மது அருந்த காசு தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்ய துணியும் மகன்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது.
மது அருந்தும் தனிப்பட்ட மனிதனோடு அதன் பாதிப்பு நின்றுவிடுவதில்லை. ஆனால் அது அருந்தியவனின் மனைவி, பிள்ளைகள், குடும்பம், வசிக்கும் பகுதி என பாதிப்பின் வலை விரிந்துகொண்டே செல்வதுதான் போராபத்து. சமூகத்தின் பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் ஒருசேர குழித்தோண்டிப் புதைக்கும்.

எனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த மதுவை குறித்த சிறு வரலாற்றுப்பார்வை:

மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறை (Distillation) அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது. இதில் ஒயினை விடவும் கூடுதல் போதை தரும் ‘அல்-கூகுல்’ எனும் திரவத்தைக் கண்டு பிடித்தவர் ஜாபர் இப்னு கையாம் என்பவர். இவர் ஒரு வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுலே பிறகு அல்கஹால்
 என்று அழைக்கப்பட்டது. 

ஜாபர் இப்னு கையாம் அதை மருந்தாகத்தான் பயன்படுத்தினார். அவரது நோக்கமும் அதுவே. பிறகு 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். இன்றைய நவீன மது வகைகள் தோன்றிய வரலாறு இதுவே.

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
ஆனால் இன்று தமிழர்கள், திராவிடர்கள் என்று சொல்லப்படுகின்றன தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? சில புள்ளி விபரங்களை பார்ப்போம்.

1.குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.

2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.

3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

4.தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

5.மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம்.

6.மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

7.கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.

நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.

டாஸ்மாக் குடிவெறியில் மனைவி, மகனை 


கொன்ற விவசாயி

போதையில் தடுமாறும் தந்தை
போதையில் பொது இடத்தில் போலீஸ்

மாணவர்கள் எதிர்கால இந்திய எங்கே
நிற்கிறது பார்த்தீர்களா?
சத்தியமா இது திருவிழா கூட்டம் இல்லீங்கே

போதை என்பதே விஷம் தான். அது எந்த வடிவத்தில் சமூகத்தில் நடமாடினாலும் சரி. இந்த பொதுத்தீமையை எதிர்த்துப் போர்த்தொடுப்போம். வைரஸ் காய்ச்சலை விட மிக வேகமாக பரவி வரும் இந்த போதைக் கலாச்சாரத்தை அழிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து நாம் நழுவினால், வருங்கால தலைமுறையினருக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.