Sunday, September 4, 2011

மலத்தை மடியில் சுமக்கும் மழலைகள்

நாமெல்லாம் வயிறு நிறைய உண்கிறோம், உண்ட உணவு நம்மையறியாமல் ஆயிரக்கணக்கான தாக்கங்களுக்குட்பட்டு செரிமானமடைந்து கடைசியில் மலமாகின்றது. அதனை அடுத்த நாள் இலேசாக கழித்து விடுகிறோம். இதனை ஒரு பொருட்டாக நாம் கருதுவதில்லை. ஆனால், இந்த பதிவில் வரும் ஜெஸிக்காவைப் போன்று இந்த உலகில் வாழ்கின்ற பல ஆயிரம் பேருக்கு இது ஒரு பாரமான சுமை. வயிற்றில் இருக்க வேண்டிய மலத்தை மடியில் சுமப்பது, அதுவும் 24 மணிநேரமும் மடியில் சுமப்பது....

இந்தப் பூமியில் ஒருவன் 10 தசாப்தங்கள் தான் வாழ்ந்தாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களை விட 10 மாதங்கள் கர்ப்பத்தில் வாழ்கின்றபோது விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் என்கிறது மருத்துவ உல‌கம் ஒரு குழந்தை சாதாரணமாய் பிறக்கின்றதென்றால் அது விபத்துக்களில் இருந்து தப்பிப் பிறந்த அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.

அதற்காக நாம் இறைவனுக்கு நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டும். சில வேளைகளில் சில சிசுக்கள் விபத்துக்களில் சிக்கிவிடுவதுடன் அதன் பாதிப்பு பிறந்தது முதல் மரணிக்கும் வரை அவர்களில் நிலைத்திருந்து நோயாளியாய் வாழ்ந்து மரணிப்பதும் நாம் காணும் யாதர்த்த நிலை.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்(Birmingham) என்ற மாநகரில் வாழும் பெற்றோருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தை ஜெஸிக்கா அந்நகரிலுள்ள பிரபலமானதொரு மருத்துவமனையில் சாதாரணமாகப் பிறந்தது. இந்த மருத்துவமனையில் சில மாதங்கள் நானும் கடமைபுரிந்தேன்.

சாதாரண கர்ப்பம்,சுகமான பிரசவம்.அழகிய பெண்குழந்தை பிறந்துவிட்டது. பிறந்த குழந்தை அழுதது,பால் குடித்தது. கண்களை விரித்துப் பார்த்துத் தான் வந்து சேர்ந்த இந்த விசித்திரமான பூமியை ஒருமுறை நோட்டமிட்டு விட்டு மீண்டும் தூங்கியது. குழந்தைகளுக்குரிய பண்புகளான அழுவது,பால்குடிப்பது,தூங்குவது என்ற வட்டத்திற்குள் இந்தக் குழந்தையும் வாழ்க்கையைத் துவங்கியது.பொற்றோரும் உற்றார் உறவினரும் இந்தக் குழந்தைச் செல்வம் கொண்டு வந்த பாசத்தின் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஜெஸிக்கா பிறந்து இரண்டாவது நாள் மாலை வேளை குழந்தையையும் தாயையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருந்தனர்.

வீடு செல்லுவதற்கு முன்னர் சிறுவர் நோய் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்து திருப்தியடைந்த பின்னரே மருத்துவமனையிலிருந்து விடுவிப்பது வழக்கம். வழமைப்போல் அன்று மாலை எனக்கு தாதியிடமிருந்து அழைப்பு வந்தது: “குழந்தை ஜெஸிக்காவின் பெற்றோர் வீடு செல்ல ஆயத்தமாயிருக்கின்றனர். தயவுசெய்து குழந்தையைப் பரிசோதித்து விட்டுச் செல்லுங்கள்.”

குழந்தையை பரிசோதிப்பதற்கு முன்னால் சில கேள்விகள் கேட்க வேண்டும்.
“ குழந்தை பால் குடிக்கின்றதா?”
“ ஆமாம், ஒரு பிரச்சினையும் இல்லை”
“ அதிகம் அழுகிறதா?”
“இல்லை, சாதாரணமாய் இருக்கின்றது”
“சிறுநீர் கழித்ததா?”
 “ ஆமாம் பலமுறை. கீழாடை (Nappy) ஈரமாய் இருந்ததால் மாற்றி விட்டோம்” என்று பதிலளித்த தாய். அடுத்த கேள்விக்கு அளித்த பதில் கதையை தலைகீழாய் புரட்டிவிட்டது.

“ குழந்தை மலம் கழித்ததா?”

“இன்னும் இல்லை டாக்டர்” என்று பதில் வந்தது பதில். இரண்டு நாட்களாகி விட்டது; குழந்தை மலம் கழித்திருக்க வேண்டுமே!” என்று சொன்னவாறு நன்றாகப் பரிசோதிக்க ஆரம்பித்தேன்.

" Everything OK?-எல்லாம் சரிதானா?” என்று கேட்டார் அந்தத் தாய்.

“ஆம்” என்று சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆதங்கம் இருந்தபோதும்....

“இன்னும் மலம் கழிக்கவில்லை என்று சொன்னீர்கள். துரதிஷ்டவசமாக குழந்தையின் விருத்தியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஜெஸிக்கா மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் பிறந்திருக்கிறாள்” என்று சொன்னபோது “What? What? What?" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்.

 “ மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் குழந்தைகள் பிறக்க முடியுமா?”

கருப்பையில் வளரும் சிசுவின் குடல் விருத்தியடையும் போது வாயில் ஆரம்பித்த துவாரம் மலம் கழிக்கும் பின் துவாரம் வரை ஒரு குழாய்(Tube) போல் விருத்தியடையும்.

வாய் என்ற துவாரத்தில் ஆரம்பிக்கும் செரிமானத் தொகுதி, உணவுக்குழாய், இரைப்பை,சிறுகுடல்,பெருங்குடல் என்ற அமைப்பாக மாறி ஒவ்வோர் அமைப்பும் தனக்கேயுரிய தொழிற்பாட்டைச் செய்ய, உணவு செரிமானமடைய‌ கடைசியாக மலமாக மாறும். அது பெருங்குடலின் எல்லையான குதம் (Anus)என்ற மலம் கழிக்கும் துவாரத்தினூடாக வெளியேற்றப்படும். தேவையானபோது துவாரத்தைத் திறப்பதற்கும் பின்னர் அதனை மூடிவிடுவதற்கும் இறுக்கமான மூடி(Anal Sphineter) அந்த இடத்தில் இருக்கிறது.

இதுதான் இயற்கையாக இறைவன் ஏற்படுத்திருக்கும் அற்புதமான அமைப்பு. இயற்கையான இந்த அமைப்பில் சில விபத்துகள் ஏற்படும்போதுதான் படைப்பின் அற்புதத்தை, அவசியத்தை உணர முடிகின்றது.

ஜெஸிக்காவிற்கு என்ன நடந்தது? பெருங்குடல் தனது எல்லையான உடலின் வெளிப்புறத் துவாரம் (Anus) வரை விருத்தியடையவில்லை. மாறாக வயிற்றுக்குள்ளே இடையில் மூடப்பட்டுவிட்டது. அதாவது பெருங்குடலின் கடைசி 4-5 செ.மீ. தூரம் குடல் இல்லை. இதனால் செரிமானம‌டையும் பால் மற்றும் உணவு வெளியேற்றப்படாமல் குடலில் தேங்கி குடல் விரிந்து விரிந்து பெரிதாகி வீங்கும். மலம் கழிக்கும் வெளிப்புறத் துவாரம் எதுவும் இல்லாமல் சாதாரண தோலால் மூடப்பட்டு உடலின் ஏனைய பகுதிபோன்று சாதாரண தோலாக இருக்கும் இது(Imperforate Auns)  என்று அழைக்கப்படுகிறது.

வளர்ச்சியற்ற பெருங்குடல்


“ மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் குழந்தைகள் பிறக்க முடியுமா?” என்று ஆச்சரியத்தோடும் ஏமாற்றத்தோடும் கண்ணீர் மலகக் கேட்டார் அந்தத் தாய்.

“ஆம் 5000 இல் ஒரு குழந்தை இவ்வாறு பிறக்க முடியும்.என்று சொன்னபோது தடுமாறிப்போன அந்தத் தாயின் வாய் வார்த்தைகள் இன்றி மெளனமாகிப் போனது.

“ஜெஸிக்கா எப்படி மலம் கழிப்பாள் டாக்டர்?” சில நிமிடங்கள் மெளனமாய் இருந்துவிட்டு மீண்டும் கேட்கிறாள் அந்தத் தாய்.

ஜெஸிக்காவின் தாயிடம் பதிலளிக்க ஆரம்பித்தேன். “ஜெஸிக்காவின் பெருங்குடலில் கடைசி 4-5 செ.மீ. விருத்தியடையவில்லை.குதம் வயிற்றுக்கு வெளியே வராமல் வயிற்றுக்குள்ளேயே மூடப்பட்டு விட்டது. இதனால் மலம் குடலில் தேங்கி பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே,கவனமாக மலத்தை வெளியேற்றி நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து ஜெஸிக்காவைப் பாதுகாப்பதற்காகவும் மலம் கழிக்கம் ஏற்பாட்டை செய்வதற்காகவும் வயிற்றில் ஒரு துவாரமிட்டு குடலை அந்தத் துவாரத்தினூடாக இழுத்து வந்து மலத்தை வயிற்றுக்கு வெளியே கழிக்கும் ஓர் அமைப்பைச் செய்ய வேண்டும். இதற்காக அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்” என்று சொன்னதும் அந்தத் தாய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

மலப்பை(Colostomy Bag) யோடு குழந்தை

இந்த அறுவைசிகிச்சை (Colostomy) என்று அழைக்கப்படுகின்றது. வயிற்றில் ஏற்படுத்திய இந்தத் துவாரத்தினூடாக மலம் தொடர்ந்து 24 மணிநேரமும் கொஞ்சம் கொஞ்சமாய் வந்து கொண்டிருக்கும். சாதாரணமான நிலையில் குடலின் எல்லைக்கு வரும் மலம் Rectum என்ற குடலின் பகுதியில் நாம் மலம் கழிக்கும் வரை தேங்கியிருக்கும். ஆனால், இத்தகைய நோயாளிகளுக்கு Rectum இல்லாதிருப்பதால் மலம் தேங்க முடியாது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதனை வயிற்றுக்கு வெளியே சேர்த்தெடுப்பதற்கு வயிற்றில் ஏற்படுத்திய துவாரத்தில் ஒருவகைப் பை(Colostomy Bag) ஒன்று ஒட்டி வைக்கப்படும். இந்தப் பை நிறையும்போது அதனை எடுத்து வீசிவிட்டு புதிய பையை இணைக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு சிலவேளைகளில் 5-6 பைகள் மாற்றவேண்டிய சூழல் ஏற்படலாம். துரதிஷ்டவசமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டு விட்டால் பாவம் அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கும்.
மலப்பை(Colostomy Bag) 

“ எனது குழந்தை வாழ்நாள் முழுவதும் மலத்தை மடியில் சுமக்க வேண்டுமா?” என்று மீண்டும் கேட்டார் அந்தத் தாய்” மலத்தை மடியில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏன் எனது குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்று சொல்லியவாறு அழுது கொண்டிருந்தார் அந்தத் தாய்.

அடுத்த நாள் அவசரமாக Colostomy அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. உடலின் கீழ்ப்புறத்தில் மறைந்திருக்க வேண்டிய இயற்கைத் துவாரம் இல்லாமல் வயிற்றில் இடதுபுறமாய் துளைக்கப்பட்டு செயற்கையான துவாரம் ஏற்படுத்தப்பட்டு Colostomy Bag இணைக்கப்பட்டது.

“இந்த அழகிய வயிற்றைத் துளைத்து அசிங்கப்படுத்தாமல் உடலின் கீழ்ப்புறம் அதற்கேயுரிய இடத்தில் ஏன் செயற்கையான துவாரம் ஏற்படுத்த முடியாது? தயவுசெய்து அப்படியான ஒரு ஏற்பாட்டையாவது செய்யுங்கள்? என்று மன்றாடினாள் அந்தத் தாய்.

இந்த அழகிய வயிற்றைத் துளைத்து அசிங்கமாக்கி அதனை ஒரு மலகூடமாய் மாற்ற மருத்துவர்களுக்கும் உடன்பாடில்லை. இருந்தபோதும் வேறுவழியில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழல்.

உடலின் கீழ்ப்புறம் மறைந்த இடத்தில் துவாரமிட முடியும். ஆனால் குடல் 4-5 செ.மீ. குள்ளமாக இருப்பதால் அதனை கீழ்ப்புற எல்லைக்கு கொண்டு வர நீளம் போதாது. மேலும் கீழ்ப்புறமாய் துவாரமிட்டால் தொடர்ந்தும் 24 மணிநேரமும் சேரும் மலத்தை சேர்த்தெடுக்கும் Colostomy Bag ஐ கீழ்ப்புறத்தில் இணைப்பதற்கு ஒரு ஆதாரம் (Base) இல்லை ஒரு ஆதாரம் இல்லாமல் Bag ஐ இணைக்க முடியாது. இப்படி பல பிரச்சினைகள் இருப்பதால் மலங்கழிக்கும் துவாரத்தை வயிற்றில் ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இரண்டாவது நாள் இன்பமாய் வீடு செல்ல வேண்டிய ஜெஸிக்காவின் பெற்றோரும் உறவினரும் இரண்டு வாரங்களுக்குப் பின் ஜெஸிக்கா மலத்தை  மடியில் சுமக்க,ஜெஸிக்காவை சுமந்தவாறு மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றபோது...

மலத்தை மடியில் சுமந்து வயிற்றை மலகூடமாக்கும் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தாமல் ஆரோக்கியமானவனாக என்னை வாழ வைக்கும் இறைவனுக்கு எனதுள்ளம் பல நூறு தடவைகள் (அல்ஹம்துலில்லாஹ்) நன்றி சொல்லிக் கொண்டது.

நன்றி Dr.முஸ்தபா ரயீஸ் (MBBS,DCH,MD,MRCPH)
 Peadiatric Intensivst, Cardiac PICU
Hariey street Hospital,London


நன்றி அல்ஹஸனாத் மாத இதழ்

26 comments:

  1. என்ன சொல்வது என்று தெரியவில்லை நண்பா!

    ReplyDelete
  2. //துவாரத்தை வயிற்றில் ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை//

    இரண்டு மூன்று வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். இதேபோல மலத்துவாரம் இல்லாத குழந்தை பிறந்ததால், குழந்தையை பிறந்த அரசு ஆஸ்பத்திரியேலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர் ஏழைப் பெற்றோர். மதுரை என்று நினைவு. மருத்துவமனை ஊழியர்கள் பொறுப்பேற்று, அக்குழந்தைக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து அதன் இயல்பான இடத்திலே வருமாறு ஒரு மலத்துவாரம் அமைத்தனர் என்று செய்தித்தாளில் வாசித்ததுண்டு.

    அந்தக் குழந்தைக்குச் செய்ய முடிந்தது இந்தக் குழந்தைக்கு ஏன் முடியவில்லையோ? மருத்துவக் காரணங்கள் பல இருக்கலாம். இறைவன் லேசாக்கித் தரட்டும்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.

    மனது கனக்கிறது சகோ.ஹைதர் அலி.

    பிறப்பிலிருந்து இறப்புவரை ஒவ்வொரு முறை மூச்சை இழுத்து வெளியே விடுகிறோம். இங்கே O2 எடுத்துக்கொள்ளப்பட்டு அழகாய் CO2 வெளிவிடப்படுகிறது.இதில் நம் முயற்சி என்று ஏதேனும் உண்டா..? ( complete auto mode )

    இந்த சுவாச மண்டலத்தில் கோளாறு இல்லாமல் இருப்பதற்காக... இதுபோல ஒவ்வொரு மண்டலமும் ஒழுங்காய் நம் உத்தரவு கண்காணிப்பு இன்றியே சீராக இயங்குவதற்காக...

    ஆரோக்கியமானவனாக படைத்து அப்படியே என்னை வாழவைப்பதற்காக...

    'இறைவனுக்கே புகழனைத்தும்' என ஒவ்வொரு நொடியும் நன்றி செலுத்த சொல்லாமல்...

    ஒரு நாளைக்கு ஐந்து தடவை செலுத்தினால் போதும் என்ற இறைவனின் கருணைக்கு நன்றி.

    மருத்துவ அறிவியல் முன்னேற்றம் மூலமோ அல்லது ஏதாவது அதிசயம் நடந்தோ எப்படியாகினும் இக்குழந்தை ஜெசிக்கா பூரண நலம் பெற இறைவனை இறைஞ்சுகிறேன்.

    ReplyDelete
  4. புது விஷயம் நன்றி, சமீபத்தில் வலது பக்கம் இதயம் உள்ள மனிதர்களை பற்றி அறிந்து கொண்டேன், இன்று நீங்கள் சொன்னது..

    ReplyDelete
  5. நான் ஒரு பெரியவரை பார்த்திருக்கிறேன். ஒரு சத்திர சிகிச்ச்சையின் போது, அவருக்கு இதே போல் செய்யப் பட்டிருந்தது. எவ்வளவுதான் சரியாக அந்தப் பை வைக்கப் பட்டிருந்தாலும் சிறிது துர் நாற்றம் வெளியே வந்து கொண்டிருந்தது. அந்தப் பையை இன்னொருவர் சுத்தம் செய்யவேண்டிய நிலமையும் இருக்கு.
    அப்பொழுதுதான் புரிந்தது இறைவனின் அருட்கொடை.

    ReplyDelete
  6. பார்வெர்ட் மெயிலில் வந்த ஒரு குட்டிக் கதை

    ஒரு 70 வயசு தாத்தாவுக்கு சிறுநீர் கழிப்பதில் சிக்கல். ஆபரேஷனும் முடிந்து பில்லைப் பார்த்ததும் தாத்தாவின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் ஓடுது.. டாக்டர் “பரவாயில்லைங்க தாத்தா.. பில் தொகையை எங்க டிரஸ்ட்டில் பேசி குறைக்க ஏற்பாடு செய்கின்றேன் என்கிறார். தாத்தா “கடந்த 70 வருடமா நானே சுயமாக சிறுநீர் கழிக்கும்படிச் செய்த இறைவன் பில் தந்ததேயில்லையே!!”

    ReplyDelete
  7. அருமையான படைப்பு நண்பரே நானும் இப்படி ஒரு வயது போன அம்மாவை பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
  8. கடவுளின் படைப்பில் எத்தனை வித்தியாசம், என்னவென்று சொல்வது......

    ReplyDelete
  9. @விக்கியுலகம்

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  10. @ஹுஸைனம்மா

    //இதேபோல மலத்துவாரம் இல்லாத குழந்தை பிறந்ததால், குழந்தையை பிறந்த அரசு ஆஸ்பத்திரியேலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர் ஏழைப் பெற்றோர்.//

    மருத்துவம் வியாபரமாயமாகி விட்டதால் எழைகள் அதுபோன்ற முடிவை எடுக்கிறார்கள் இது அதை விட பரிதாபம்.

    தகவலுக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

    ReplyDelete
  11. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    வருகைக்கும் அழமான கருத்திற்கும் நன்றி சகோ

    ReplyDelete
  12. @suryajeeva

    தேரிந்துக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது நண்பரே

    இந்த விஷயம் எனக்கும் இப்பதான் அறிய வந்தது.

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    சுபுஹானல்லாஹ்..... இப்படியெல்லாம் நடக்குதே.
    படித்து விட்டு ரெம்பவும் வேதனையாக இருந்தது சகோ.

    நமக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம்....
    யாஅல்லாஹ் இனி பிறக்கபோகும் எந்த மக்களுக்கும் இந்த சோதனையை கொடுக்காதே என்று துஆ செய்யோம்.

    ReplyDelete
  14. @Mohamed Faaique

    நம்மை ஆரோக்கியமானவர்களாக வாழ வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

    கருத்துரைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. வரவர கடவுளின் படைப்பில் எத்தனை விந்தைகள்!...பாவம் அப்படி அரையும் குறையுமாய் பிறக்கும் குழந்தைகள் .நல்ல பகிர்வு ஒன்றினைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி சகோ .முடிந்தால் இன்று என் தளத்திர்ற்கு வருகை தாருங்கள் .

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். கண்களை கண்ணீர் கட்டிக்கொண்டது சகோ. இந்த பச்சை மண் செய்த பாவம் என்ன?? இறை ரகசியத்தை அறிய முடியாது. பிரார்த்தனை செய்வதை தவிர. கனத்த மனதுடன்.

    ReplyDelete
  17. @ஹுஸைனம்மா

    இந்த பதிவுக்கேற்ற பார்வெர்ட் மெயில் பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  18. @கவி அழகன்

    தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  19. @ரத்னா
    //கடவுளின் படைப்பில் எத்தனை வித்தியாசம், என்னவென்று சொல்வது......//

    இறைவனின் படைப்பில் படிப்பினைகளை கற்றுக் கொண்டே இருக்கலாம்

    நன்றி சகோ தங்களின் முதல் வருகைக்கு

    ReplyDelete
  20. @ஆயிஷா அபுல்.

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    தங்களின் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்வானாக

    நன்றி சகோ

    ReplyDelete
  21. @அம்பாளடியாள்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  22. @Feroz

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
    ரொம்ப இளகிய மனம் கொண்டவராக இருக்கிறீர்கள்

    இறைவனின் படைப்பின் நோக்கங்களை யாரும் முழுமையாக உணர்ந்துக் கொள்ள முடியாது தானே

    நன்றி சகோ

    ReplyDelete
  23. .
    சகோதர இந்த நிலைமை
    இங்கே 42 வயது ஆன இரண்டு குழந்தைகளின் தாய்க்கு இந்நிலைமை ஏற்பட்டு நீங்க குறிபிட்டுள்ள குழந்தை போல் மலத்தை வெளியே சுமக்கிறார் .
    இவருக்கு சமீபத்தில்தான் இந்நிலைமை ஏற்பட்டது .இந்த நிலைமை யாருக்கும் ஒரு வயதிற்கு மேல் வரலாம் .ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினையை கவனிக்காமல் விட்டதால்தான் என்கின்றனர் மருத்துவர்கள்.ஜெசிக்கா விரைவில் குணமடையவும் இனி ஒரு பாவமறியாத பிஞ்சுகளுக்கு இந்த கஷ்டம் வரவேண்டாமெனவும் இறைவனை பிரார்த்திப்போம்

    ReplyDelete
  24. @angelin

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...
    இறைவன் அழகான படைப்பாளன்; அவனின் அருட்கொடைகளில் நீங்கள்(மனித,ஜின்) இருவரும் எதனைப் பொய்யாக்குவீர்கள் என்று சூரா அர் ரஹ்மானின் வார்த்தைகள் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.

    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

    எம்மைப் படைத்து அழகிய முறையில் பக்குவப்படுத்திய இறைவனுக்கே எல்லாப் புகழும்!

    ReplyDelete
  26. அல்லாகூ அக்பர் எல்லாப் புகழும் இறைவனுக்கு

    ReplyDelete