Saturday, February 1, 2014

இறைவனிடம் கையேந்துங்கள்:பிரார்த்தனை நூல் வாசிக்க

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது, அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது. இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். 

எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது தேவைகளை முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட அதிகமான மக்கள் விளங்காமல் உள்ளனர். தாங்களாகவே செய்து கொண்ட கற்சிலைகளிடமும், இறந்து விட்ட பெரியார்களின் சமாதிகளிலும் போய் பிரார்த்திக்கின்றனர். இதற்குக் காரணம், இறைவனின் பண்புகளைப் பற்றியும், அவனது வல்லமை பற்றியும் அறியாமல் இருப்பது தான். எனவே இறைவனின் பண்புகளை எடுத்துக் காட்டி, அவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை விளக்குவதுடன், இறைவனிடம் நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கான நிபந்தனைகள் என்ன? அதற்கு இடைத்தரகர்கள் தேவையா? என்பன போன்ற அம்சங்களையும் இந்நூலில் கீழ்க்காணும் தலைப்புக்களில் விளக்கியுள்ளோம். 

பிரார்த்தனை தான் வணக்கம் 
இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும் 
இறைவன் அருகில் இருக்கிறான் 
பிரார்த்தனையின் ஒழுங்குகள் 
ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும் 
அவசரப்படக் கூடாது 
பாவமானதைக் கேட்கக் கூடாது 
மரணத்தைக் கேட்கக் கூடாது 
இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் 
மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது 
வலியுறுத்திக் கேட்க வேண்டும் 
அனைத்தையும் கேட்க வேண்டும் 
இரகசியமாகவும், பணிவாகவும் 
இரவின் கடைசி நேரம் 
ஸஜ்தாவின் போது 
மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை 
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ 
பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால் 
இறைவனிடம் கையேந்துங்கள்! 

பிரார்த்தனை தான் வணக்கம் 

இவ்வுலகில் வாழும் மனிதர்களில் எவரும் அனைத்து நலன்களையும் பெற்றவர்களாக இல்லை. தான் விரும்பிய, ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்ற ஒரே ஒரு மனிதரைக் கூட உலகில் காண முடியாது. மிக உயர்ந்த பதவியைப் பெற்றவர் அனைத்து இன்பங்களையும் பெற்று மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் போது அவருக்கு வாரிசு இல்லை என்ற மனக்குறையோ, அல்லது பெயரைக் கெடுப்பவனாக வாரிசு பிறந்து விட்டானே என்ற மனக்குறையோ, மனைவியால் மகிழ்ச்சி இல்லையே என்ற மனக்குறையோ, விரும்பியதை உண்ண முடியவில்லையே என்ற மனக்குறையோ, இன்னும் இது போன்ற நூற்றுக் கணக்காண குறைகள் அவருக்கு இருப்பதை அறிய இயலும் அளவின்றி பெருஞ்செல்வத்தைப் பெற்றவர், உடல் வலிமை பெற்றவர், மழலைச் செல்வங்களைப் பெற்றவர், இன்னும் எத்தனையோ பாக்கியங்கள் பெற்றவர்கள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் கருதலாம். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களுக்குக் கிடைக்காத பாக்கியங்களைப் பட்டியல் போட்டுக் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். நினைத்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். 

இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பிரார்த்தனை தான். சர்வ வல்லமையுடைய இறைவனிடம் அந்தக் குறைகளை முறையிடும் போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி நிறைவேறாவிட்டால் கூட, பெரிய இடத்தில் பிரச்சனையை ஒப்படைத்து விட்டோம்; அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது. 

இதனால் தான் இஸ்லாம் பிரார்த்தனைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. 

பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) 
நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665 திர்மிதீ 2895, 3170, 3294 அபூதாவூத் 1364 

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை என்ற பொருள் பட நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

 ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணர்வதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் பிரார்த்தனையில் கூடுதலாகவே உள்ளது எனலாம். 

இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்

நம்முடைய இயலாமையை உணர்ந்து நம்மை விட வலிமை மிக்க இறைவனிடம் முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட விளங்காதவர்கள் மனிதர்களில் அதிகம் உள்ளனர். 

தாங்களாகக் கற்பனையாகச் செதுக்கிக் கொண்ட கற்சிலைகளிடம் முறையிடுவோர் உள்ளனர். நம்மை விட கோடானு கோடி மடங்கு தாழ்ந்த நிலையில் தான் அந்தக் கற்சிலைகள் உள்ளன என்பதை அவர்களின் பகுத்தறிவு சொன்னாலும் அதை அலட்சியப்படுத்துகின்றனர். 

இறந்தவர்களைப் புதைத்து விட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டவரிடம் பிரார்த்திப்பவர்களும் உள்ளனர். அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு அவர் இறந்ததே அசைக்க முடியாத சான்றாக இருந்தும் அதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். 

உயிருடன் வாழும் மகான்கள் எனப்படுவோர் நம்மைப் போலவே உண்பவர்களாக, மலத்தை வயிற்றுக்குள் சுமந்தவராக, நோய், கவலை, முதுமை உள்ளிட்ட எல்லா பலவீனமும் கொண்டவராக இருப்பது பளிச்செனத் தெரிந்தும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்களிடமே பிரார்த்தனை செய்பவர்களையும் நாம் பரவலாகக் காண்கிறோம். 

இன்னும் மிருகங்கள், பறவைகள் மற்றும் அற்பத்திலும் அற்பமான படைப்புகளிடம் பிரார்த்தனை செய்வோரும் மனிதர்களில் உள்ளனர். 

இவை அத்தையும் இஸ்லாம் வன்மையாக மறுக்கிறது. 
க நம்மைப் படைத்தவன் க என்றென்றும் உயிரோடிருப்பவன் 
க எந்தத் தேவைகளும் இல்லாதவன் 
க நினைத்ததைச் செய்ய வல்லவன் 
க எந்தப் பலவீனமும் அற்றவன் 

ஆகிய தகுதிகள் ஒருங்கே அமையப் பெற்ற இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது. 

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக! 

(அல்குர்ஆன் 7:191-195) 

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள். 

(அல்குர்ஆன் 7:197, 198) 

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

(அல்குர்ஆன் 10:106) 

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். 

(அல்குர்ஆன் 16:20, 21) 

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். 

(அல்குர்ஆன் 22:73) 

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை என்று கூறுவீராக! 

(அல்குர்ஆன் 34:22) 

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. 

(அல்குர்ஆன் 35:13, 14) 

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர். 

(அல்குர்ஆன் 35:40) 

என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. 

(அல்குர்ஆன் 40:43) 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள். 

(அல்குர்ஆன் 46:6) 

இந்த வசனங்கள் யாவும் இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணை வைக்கும் பெரும்பாவம் என்பதையும் அறிவிக்கின்றன. இறைவன் அருகில் இருக்கிறான் சர்வ வல்லமையுடைய இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்கள் கூட தாமாக உருவாக்கிக் கொண்ட இடைத் தரகர்களிடம் பிரார்த்திப்பதைக் காண்கிறோம். 

இறைவன் நம்மை விட்டும் தொலைவில் இருக்கிறான்; நம்மால் நேரடியாக அவனைத் தொடர்பு கொள்ள முடியாது என்று அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். கடவுள் மனிதனை விட்டும் வெகு தொலைவில் இருப்பதாக நம்புவது தான் பல தெய்வ வழிபாட்டுக்கும், இறை வழிபாடு புறக்கணிக்கப்படுவதற்கும் அடிப்படைக் காரணம். அந்தக் காரணத்தை களையெடுப்பதற்காகத் தான் நான் அருகிலிருக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான். 

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!) 

(அல்குர்ஆன் 2:186) 

எந்த அளவுக்கு அருகில் இருக்கிறான்? பத்தடி தூரத்தில் இருக்கிறானா? பார்க்கும் தூரத்தில் இருக்கிறானா? எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறானா? இதைப் பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான். மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். 

(அல்குர்ஆன் 50:16) 

ஒருவனது (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். 

(அல்குர்ஆன் 56:83, 84, 85) 

கடவுள் தொலைவில் இருப்பதாக எண்ணிக் கொண்டு சிலைகளின் முன்னே நிற்பவர்கள், சமாதிகளுக்கு முன்னே மண்டியிடுபவர்கள், சாமியார்களின் கால்களில் விழுபவர்கள் இதை நெருக்கம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏக இறைவனோ ஒரு மனிதனின் பிடறி நரம்பை விட நெருக்கத்தில் இருக்கிறான். 

ஒரு மகானின் முன்னே ஒருவன் நிற்கிறான். அவர் தனக்கு மிக மிக அருகில் இருப்பதாகவும், கடவுள் அவரை விட தொலைவில் இருப்பதாகவும் எண்ணுகிறான். ஆனால் கண் முன்னே நிற்கும் மகானை விட அந்த மனிதனுக்கு கடவுள், நெருக்கமாக இருக்கிறான். இடைவெளியைக் கற்பனை செய்ய முடியாத நெருக்கத்தில் இருக்கிறான் என்று இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான். 

கடவுள் நெருக்கமாக இருப்பது உண்மை தான். ஆயினும் நாங்கள் அவனிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவில்லையே? அவனது கட்டளைகள் பலவற்றை மீறியுள்ளோமே? நாங்கள் நேரடியாகக் கேட்டால் எங்களை அவன் கோபித்துக் கொள்வானே? அவனது கோபத்தைக் குளிரச் செய்வதற்குத் தான் இடைத் தரகர்களை, சாமியார்களை, ஷைகுமார்களை நாங்கள் நாட வேண்டியுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். 

இந்த வாதம் தவறானது என்பதைத் தெளிவுபடுத்துவதற்குத் தான் நான் அருகில் இருக்கிறேன், அழைப்பவனின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் எனவும் சேர்த்துச் சொல்கிறான். அழைப்பவன் எவனாயினும் அவனுக்குப் பதிலளிக்கிறேன் என்று பொது அழைப்பு விடுக்கிறான். மகான்கள் மட்டும் நெருங்கும் வகையில் நான் இருக்கவில்லை. சாதாரண மனிதனும் நெருங்கும் வகையில் தான் இருக்கிறேன் என்று கூறுகிறான். 

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! 

(அல்குர்ஆன் 39:53) 

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். 

(அல்குர்ஆன் 12:87) 

இறைவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் எவ்வளவு பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டவனாயினும் அதற்காக இறைவனை விட்டு விலக வேண்டாம்; இறைவன் தர மாட்டான் என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்; எவ்வளவு பயங்கரமான பாவங்களில் ஈடுபட்டாலும் அவற்றையும் அல்லாஹ் மன்னிக்கிறான்; அவர்களும் அவனிடத்தில் நேரடியாகக் கேட்கலாம் என்று மிகத் தெளிவாக இங்கே சுட்டிக் காட்டுகிறான். 

தனக்குத் தகுதியில்லை என்று எண்ணி இறைவனை விடுத்து மற்றவர்களை நாடக் கூடாது எனவும் உணர்த்துகிறான். 

கடவுள் என் மேல் கோபமாக இருக்கிறான்; அதனால் கடவுளுக்கு நெருக்கமானவர்களைத் தேடி ஓடுகிறேன் என்று கூறுவது அறிவுக்கும் ஏற்புடையதாக இல்லை. 

கடவுள் கோபமாக இருக்கிறான் என்பதால் கடவுளுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதாகக் கூறினால் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இன்னின்ன மனிதர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்று இறைவன் கூறினானா? இதை அவர்கள் சிந்திக்க வேண்டும். 

மனிதர்களைக் குளிரச் செய்வதற்காக அவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக அவர்களுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதில் அர்த்தமிருக்கிறது. அவர்கள் பக்குவமாக அவரிடம் கூறி, கோபத்தைத் தணிக்க முயலக் கூடும். மனிதனின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களைக் கூட அறிந்து வைத்திருக்கும் இறைவனுக்கு இத்தகைய இடைத்தரகர்களின் தேவை என்ன? இதைச் சிந்தித்தாலும் இந்தப் போக்கை மக்கள் மாற்றிக் கொள்வார்கள். 

நான் அருகில் இருக்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு இறைவன் நிறுத்தவில்லை. எந்த வகையில் அருகில் இருக்கிறேன் என்பதையும் விளக்குகிறான். அழைப்பவரின் அழைப்பை ஏற்பதில் அருகில் இருக்கிறேன்என்று தெளிவுபடுத்துகிறான். பிடரி நரம்பை விட அருகில் இருப்பவனுக்கு நமது குரல் எவ்வளவு தெளிவாகச் சென்றடையுமோ அதை விடத் தெளிவாக நமது பிரார்த்தனைகள் அவனைச் சென்றடையும் என்பதே இதன் விளக்கமாகும். 

மூஸா (அலை), ஹாரூன் (அலை) இருவரையும் பிர்அவ்னிடம் இறைவன் அனுப்பும் போது, 

அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அவன் கூறினான். 

(அல்குர்ஆன் 20:46) 

என்று சொல்லியனுப்புகிறான். உங்களுடன் இருக்கிறேன் என்பதன் பொருள், உங்களுக்கு நடப்பதை நான் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் என்பது தான். 

நான் அருகில் இருக்கிறேன்; அழைப்பவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் என்று கூறிய பிறகும் அடக்கத்தலங்களில் போய் தங்கள் தேவைகளைக் கேட்கும் முஸ்லிம்களுக்கு, உண்மையை விளக்கும் போதனைகளைப் பல இடங்களில் இறைவன் கூறுகிறான். 

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. 

(அல்குர்ஆன் 30:52) 

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. 

(அல்குர்ஆன் 35:22) 

இறந்தவர்களும், கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்களும் நமக்கு அருகில் இருப்பதாக நாம் நினைத்தாலும் அவர்கள் நாம் கூறுவதைச் செவியுற முடியாது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். செவியுறவே முடியாதவர்கள் எப்படி பிரார்த்தனைக்குப் பதிலளிப்பார்கள் என்பதை, சமாதிகளை வழிபடும் முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 

(அல்குர்ஆன் 7:194) 

மிக அருகில் இருந்து கொண்டு அனைவரின் பிரார்த்தனைகளைச் செவியுறுகின்ற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதை விட்டு விட்டு மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு இந்த வசனங்களில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. 

இறைவன் அருகில் உள்ளதும், அவன் மாத்திரமே பிரார்த்தனைக்குத் தகுதியானவன் என்பதும் தான் இயற்கையான கடவுள் கொள்கையாகும். 

பல்வேறு தெய்வங்களை - பெரியார்களை வழிபடக் கூடியவன் கடுமையான, தாங்க முடியாத ஆபத்தைச் சந்திக்கும் போது அவனது வாய்,கடவுளே! அல்லாஹ்வே! என்று தான் உச்சரிக்கின்றது. சின்னச் சின்ன தேவைகள் விஷயத்தில் தான், கடவுள் தூரத்தில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். கழுத்துக்குச் சுருக்கு வரும் நேரத்தில் எந்த அவுலியாவையும் எந்தச் சிலைகளையும் மனிதன் அழைப்பதில்லை. அல்லாஹ், கடவுள் என்ற வார்த்தை தான் அவனிடமிருந்து புறப்படுகின்றது. திருமறைக் குர்ஆனிலும் அல்லாஹ் இதை அழகாக விளக்குகிறான். 

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். 

(அல்குர்ஆன் 17:67) 

உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான். 

(அல்குர்ஆன் 6:40, 41) 

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 10:12) அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். 

(அல்குர்ஆன் 29:65) 

மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! அறிந்து கொள்வீர்கள். 

(அல்குர்ஆன் 30:33, 34) 

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன் எனக் கூறுவீராக! 

(அல்குர்ஆன் 39:08) 

இறைவன் மிக அருகில் இருப்பதை மனிதனின் உள் மனது ஒப்புக் கொள்கிறது. அவனாக உருவாக்கிக் கொண்ட போலியான காரணங்களால் தான் இறைவனை விட்டு மனிதன் மற்றவர்களை நாடுகிறான் என்பதற்கு இவ்வசனம் சரியான சான்றாக அமைந்துள்ளது. இறைவன் எல்லா மனிதர்களும் நெருங்கக் கூடிய இடத்தில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவர் முன்னிலையிலும் தமது சுய மரியாதையை இழக்க மாட்டார்கள் க எவர் காலிலும் விழ மாட்டார்கள். 

க காணிக்கை செலுத்தி எவரிடத்திலும் ஏமாற மாட்டார்கள். 
க மலஜலத்தைச் சுமந்திருக்கின்ற எவரையும் புனிதர்களாகக் கருத மாட்டார்கள். 
க மதத்தின் பெயராலும், பிள்ளை வரம் என்ற பெயராலும் பெண்கள் கற்பிழக்க மாட்டார்கள். 
க இறைவன் அருகில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். க எவர் பொருளையும் முறைகேடாகப் பெற முயற்சிக்க மாட்டார்கள். 
க யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். 
க திருட மாட்டார்கள். 
க கொலை செய்ய மாட்டார்கள். 
க பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள். 
க லஞ்ச ஊழலில் ஈடுபட மாட்டார்கள். 

இறைவன் மிக அருகில் இருக்கிறான் என்று நம்புவதால் மனிதன் பெறும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!! 

பிரார்த்தனையின் ஒழுங்குகள் 

இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும், பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம். 

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் 

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி) நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம் 

எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்ற உத்தரவாதத்தை இந்த நபிமொழி வழங்குகின்றது. 

அப்படியானால் சிலரது பிரார்த்தனைகள் மறுக்கப்பட காரணங்கள் என்ன? 

ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும் 

நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் 1686 

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று விரும்பக் கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். 

அவசரப்படக் கூடாது 

அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு நான் கேட்டேன்; கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அல்லாஹ் நமது வேலையாள் அல்ல! அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும். 

நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லைஎன்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: புகாரி 6340 

பாவமானதைக் கேட்கக் கூடாது 

பிரார்த்திக்கும் போது இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது. இறைவா! லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு! என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. 

பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும், பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் 4918 

மரணத்தைக் கேட்கக் கூடாது 

முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு!என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள். 

எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) 
நூல்: புகாரி 5671, 6351 

இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் இறந்தவர்களுக்காக, உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும். அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுகின்றனர்.   

அல்குர்ஆன் 59:10 

குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும். 

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3084 

மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள். 

மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது 

பிரார்த்தனை செய்து முடிக்கும் போது, இறைவா! இந்தப் பெரியாரின் பொருட்டால் இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள் என்று சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். 

தனது அடிமைத் தனத்தையும், இறைவனின் பேராற்றலையும் உணர்ந்து உருகிக் கேட்கும் வகையில் அமைந்த பிரார்த்தனையைத் தான் இறைவன் ஏற்றுக் கொள்வான். மற்றவர் பெயரைச் சொல்லி இறைவனை மிரட்டுவது போல் அமைந்த இது போன்ற திமிரான வார்த்தைகள் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும். எந்த மகானுக்காகவும் இறைவன் எதையும் தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆதம் (அலை) அவர்கள் நபிகள் நாயகத்தின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் மன்னிக்கப்பட்டனர் என்ற கட்டுக் கதையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். 

திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும், இன்ன பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர். 

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். ஆதம் (அலை) எவ்வாறு மன்னிப்புக் கேட்டார் என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள் விளக்குவதற்கு எதிராகவும் இந்தக் கதை அமைந்துள்ளது. 

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

(அல்குர்ஆன் 2:37) 

இறைவன் புறத்திருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும் திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது. எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர். 

(அல்குர்ஆன் 7:23)

 இதைக் கூறித் தான் இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது தான் இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திருந்து அறியலாம். 

எனவே அந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும். 

இறைவன் பால் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் என்ற வசனத்துக்கு தவறான பொருள் கொடுத்து, அதனடிப்படையில் இவ்வாறு பிரார்த்திக்கின்றனர். 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். 

(அல்குர்ஆன் 5:35) 

வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடல் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாகசாதனமாக உள்ளது என்பர். 

நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது. இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலாவைசாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது. 

இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே வஸீலா தேடுங்கள்!என்பதன் கருத்தாகும். 

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள். 

வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது. இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். மகான்களும் வஸீலா தேட வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருள். 

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதல் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள். 

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும். 

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் (17:57) தெளிவாகவே கூறுகிறது. 

எனவே நல்லறங்கள் எனும் வஸீலா - சாதனம் மூலம் இறைவனை நெருங்குங்கள் என்று பொருள் கொண்டால் தான் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட அனைத்து முஃமின்களும் வஸீலா தேட வேண்டும் என்பது பொருந்தும். மகான்களைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் கொண்டால் இவ்வசனம் பொருளற்றதாகி விடும். 

வலியுறுத்திக் கேட்க வேண்டும் 

இறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே!என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் தா! என்று கேட்கும் போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது. 

உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலியுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: 
புகாரி 6338, 6339, 7464, 7477 

அனைத்தையும் கேட்க வேண்டும் 

சாதாரண சின்னச் சின்ன விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நானே அடைந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களை மட்டும் தான் அவனிடம் கேட்பேன் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள்.. 

தங்களுக்கு எவை சாத்தியமென நம்புகிறார்களோ அதைத் தான் இறைவனிடம் கேட்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமற்றவையாகத் தோன்றக் கூடியதை அவர்கள் இறைவனிடம் கேட்பதில்லை. இதவும் தவறாகும். 

திருமணம் ஆகி பத்து வருடங்கள் வரை குழந்தையில்லா விட்டால் அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்கின்றனர். ஆனால் தள்ளாத வயதையடைந்தும் குழந்தை இல்லாவிட்டால் இறைவனிடம் கேட்பதில்லை. 

தள்ளாத வயதுடையவர்களுக்குக் குழந்தை பிறப்பதில்லை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இறைவனால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் இந்தக் கட்டத்திலும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர்க்க மாட்டார்கள். 

ஜக்கரியா நபியவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் பலவீனமடைந்து மயிர்கள் நரைத்து விட்ட நிலையில் தமக்கொரு சந்ததியைக் கேட்டார்கள். இறைவனும் சந்ததியை வழங்கினான். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. 

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்பாக்கியசாலியாக இருந்ததில்லை.

 (அல்குர்ஆன் 19:2, 3, 4) 

சிறிய தொழில் செய்பவன் தன்னைக் கோடீஸ்வரனாக்குமாறு இறைவனிடம் கேட்பதில்லை. சிறிய தொழிலில் கோடிக் கணக்கான ரூபாய்கள் எப்படிக் கிடைக்க முடியும் என்று எண்ணுகிறானே தவிர வல்ல அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தான் என்று எண்ணுவதில்லை. 

தன்னைப் போன்ற பலவீனனாக இறைவனையும் அவனது உள் மனது நினைக்கிறது. அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நம்பவில்லை. இது தான் இந்தப் போக்குக்குக் காரணம். 

எனவே கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை. 

இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல் 

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். 

(அல்குர்ஆன் 7:55) 

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர் 

(அல்குர்ஆன் 7:205) 

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன. 

ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். 

நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும். 

மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான். 

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும். 

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். 

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது. 

இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும். 

ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும். 

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இரவின் கடைசி நேரம் 

இரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும். 

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூற்கள்: புகாரி 1145, 6321, 7494 

ஸஜ்தாவின் போது.. 

அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் 744 
மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை நமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட, அவருக்குத் தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும். 

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு, உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) 
நூல்: முஸ்லிம் 4912 
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ 

தந்தை தன் மகனுக்காகச் செய்யும் துஆக்களும் அதிகம் ஏற்கப்படத் தக்கவை. பிள்ளைகள், தந்தையரை சிறந்த முறையில் கவனித்து அவர்களின் துஆவைப் பெற வேண்டும். தந்தையரும் தமது பிள்ளைகளுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ, பிரயாணத்தில் செல்பவனின் துஆ, தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்: 

அபூஹுரைரா (ரலி) 
நூல்: திர்மிதீ 1828 

இது போல் நேர்மையான ஆட்சியாளன், நோன்பாளி ஆகியோரின் துஆக்கள் பற்றியும் ஹதீஸ்கள் உள்ளன. 

பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்... 

நீங்கள் கேளுங்கள், தருகிறேன் என்ற இறைவனின் உறுதிமொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேட்பதற்கான ஒழுங்குகளைப் பேணிக் கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் வீண் போவதில்லை. 

இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக் கூடாது. 

நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியாவிட்டாலும் இறைவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான். 

விபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதை விட அதிக விலையில் உள்ள வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிகக் கருணையுடையவன் இறைவன். அடியான் அறியாமையினால் அவனுக்குத் தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதை விடச் சிறந்ததை வழங்குவான். 

ஒரு அடியான் பெருஞ் செல்வத்தைக் கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்தி விடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதை விடச் சிறந்ததைக் கொடுப்பான். 

அது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதனின் பின்னால் ஒரு பாம்பு தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாக பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு தீண்டாமல் வேறு புறம் இழுப்போம். 

அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால், அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான். 

அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயர்த்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும். 

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள். 

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) 
நூல்: அஹ்மத் 10709 
எனவே துஆக்கள் அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது. 

இந்த ஒழுங்குகளைப் பேணி, இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கியருள் புரிவானாக!


நூலின் பெயர் : இறைவனிடம் கையேந்துங்கள் 

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் 
விலை ரூபாய் : 5.00
pdf பைலாக பதிவிறக்க 
http://www.onlinepj.com/PDF/download.php?file=Iraivnidam-Kaiyenthungal.pdf

Wednesday, January 22, 2014

வடிவேலு மறந்து போகக்கூடிய கலைஞன் அல்ல...!

லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன்.

தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு.

இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவேலுவின் வசனத்தை எடுத்தாண்டிருந்த ஒரு இலக்கியவாதிக்குக் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். தங்களின் அமரத்துவம் வாய்ந்த எழுத்தில் ஒரு கோமாளி நகைச்சுவை நடிகனுக்கெல்லாம் இடம் அளிக்கலாமா என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். ஆனால் அக்கடிதம் அத்தருணத்தில் எனக்கும் முளைத்திருந்த ஒரு குட்டிக்கொம்பால் எழுதப்பட்டது என்பதை வடிவேலு சீக்கிரமே நிரூபித்துக் காட்டினார். தன் நகைச்சுவைகளின் பின்புலத்தில், அவர் தமிழ்வாழ்வை, தமிழ்மனத்தின் உளவியலை, அதன் நுட்பமான மனவோட்டங்களை, அபிலாஷைகளை நிகழ்த்திக் காட்டினார். சில சமயங்களில் வடிவேலு இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறாரா என்று எனக்கு வியப்பாய் இருக்கும். ஆனால் ஒரு கலைஞன் எதையும் தெரியாமல் செய்துவிடுவதில்லை. ஒருவேளை அவனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாகச் சொற்களால் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அப்படி அவர் எதுவும் தெரியாதவருமல்ல என்பதற்கு ஆனந்தவிகடனில் சமஸிற்கு அவர் அளித்த நேர்காணலே சான்று. நான் என்னளவில் இந்நேர்காணலை இலக்கியம் என்கிற வகைமைக்குள்ளேயே வைக்க விரும்புவேன்.

வடிவேலுவின் பெரிய வெற்றி என்பது அவர் நம் அன்றாடத்துடன் கலந்ததுதான். வெற்றுக்கோமாளிகளால் இது முடியவே முடியாது.
“என்னடா பொழுது போய் பொழுது வந்துருச்சே. இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பாத்தேன். . .” என்றொரு வசனம்.

கடவுள் முகம் திருப்பியே பார்க்கமாட்டேன் என்று விறைப்பாய் அமர்ந்திருக்கும் வாழ்வு சில அதிர்ஷ்டக் கட்டைகளுடையது. அவர்களிடம் கேட்டால் தெரியும், இது ஒரு எளிய நகைச்சுவை வசனம் மட்டுமா என்று. பொங்கி வருகிற கண்ணீருக்குப் பதிலாக நான் பல தடவைகள் இந்த வசனத்தை வாய்விட்டுச் சொல்லியிருக்கிறேன். இதுபோல் பல வசனங்களை அவர் இவ்வாழ்வின் துன்பங்களுக்கு எதிராக உருவாக்கி வழங்கியிருக்கிறார். “பொறாமையா. . ?” என்கிற கேள்விக்கு “லைட்டா. . .” என்றவர் பதிலளிக்கையில் நான் அதை எப்படியெல்லாமோ விரித்துப் பார்த்துக்கொள்கிறேன். சத்தமிட்டுச் சிரிக்கிற அதேவேளையில் எனக்குள்ளே எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றி மறைகிறது. நான் என் பொறாமைகளைப் பரிவோடு பார்த்துப் புன்னகை செய்கிறேன். ஆலயமணி சிவாஜிதான் எவ்வளவு பாவம் என்று நினைத்துக்கொள்கிறேன்.
இப்படி நான் எழுதிச்செல்வது வடிவேலு தும்மினால்கூட அதனுள்ளே ஒரு மானுடத்துக்கம் ஒளிந்திருக்கும் என்று நீருபிக்க அல்ல. அவரிடமும் எண்ணற்ற எளிய கிச்சுகிச்சுக்கள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் மீறி அவர் தன்னை ஒரு கலைஞனாக வெளிப்படுத்திக்கொள்ளும் தருணங்களும் நிறையவே உண்டு.

தீப்பொறி பறக்கும் மதுரை மொழியை அவர் நகைச்சுவைக்கும் பகடிக்குமானதாக மாற்றிக்காட்டினார். எளிய மனிதர்களின் குசும்புகளை, ஏமாற்றங்களை, தில்லுமுல்லுகளை நேர்த்தியாகச் சித்திரித்தார்.

“வேட்டிக்கட்டு வெயிட்டா இருந்தாத்தான் நாலுபேர் பயப்படுவான் என்று உறுதியாக நம்பும் ஒருவன் ஆரஞ்சு கலர் டவுசரில் பாதி தெரியுமளவு வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வீதியில் நடந்துபோய்ப் போலீசிடம் உதைபடுகிறான். . .”
தன்னிடம் இருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டுப் பெரும் பணக்காரனாகிவிட ஆசைப்பட்டு நகரத்திற்கு வரும் ஒருவன் நண்பன் வீட்டில் இராத் தங்குகிறான். விடிகையில் தலைக்கு மேலே மேகங்கள் ஊர்ந்து போக வெட்ட வெளியில் கிடக்கிறான். நண்பன் பணத்தை மட்டுமல்லாது அந்த செட் - அப் வீட்டையும் பிரித்து எடுத்துப் போய்விடுகிறான்.

500 வாழைகளையும் 500 தென்னைகளையும் விளைவித்துக் கொடுத்துக்கொண்டிருந்த தன் வற்றாத கிணற்றைத் திடீரெனக் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கிறான் ஒருவன்.

தன் வினோத உடல் மொழியாலும் ஊளையைப் போன்றதொரு அழுகையாலும் குழந்தைகளின் மனதிலும் நிறைந்து நின்றார் வடிவேலு. அவருடைய வசனங்களில் பயன்படுத்தப்படும் ரிதமிக்கான வரிகள், சொற்களில் இயங்குபவன் என்கிற முறையில் என் கவனத்தை ஈர்ப்பவையாகவே இருந்திருக்கின்றன. அக்காட்சியின் வெற்றியில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அக்காட்சியை எளிதில் தேய்ந்து போகாதவண்ணம் காப்பாற்றுகின்றன.

“பங்குனி வெயில் பல்லக்காமிச்சுட்டு அடிச்சிட்டிருக்கு, பனிமூட்டம்ங்கற. . .” போன்ற வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.
வெறும் நடிப்பு என்றல்லாது பாடல், நடனம் என்று வெவ்வேறு திறமைகளோடு இயங்கியவர் வடிவேலு. அவரின் குறிப்பிட்ட ஒரு நடன அசைவைப் பிரபல நடிகர்கள் சிலர் அப்படியேயும் சற்றே மாற்றியும் தங்கள் நடனத்தில் பயன்படுத்தி உள்ளனர். தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்ட இந்நாளில் அநேக நடிகர்களும் பாடகர்களாகிவிட்டனர். வடிவேலுவும் சில முழுப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் காட்சிகளுக்கிடையே வாத்தியங்களின் துணையின்றிப் பாடிக்காட்டிய பாடல்கள் அவரது இசைலயிப்புக்குச் சான்றுகள்.
வடிவேலுவின் புகழை உச்சிக்குக் கொண்டுசென்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் புலிகேசி பாத்திரம் அவருக்குச் சாதாரணமானதுதான். அவர் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால் நாயக வேடமேற்றிருந்த உக்கிரபுத்தன் பாத்திரம் அவருக்குச் சவாலானது. மறக்கவே முடியாத நகைச்சுவைகளின் மூலம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் முகமாக மாறிப்போயிருந்த தன் முகத்தை வீரதீரங்கள் புரியும் நாயகனாகவும் மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டிய சவால் அதிலிருந்தது. வடிவேலு அதைத் திறம்படச் செய்து காண்பித்தார்.

வடிவேலுவின் வாழ்வில், ஒரு சூப்பர்ஸ்டார் தன் படத்தின் வெற்றிவிழாவின்போது “முதலில் வடிவேலு கால்ஷீட்டைத்தான் வாங்கச் சொன்னேன்” என்று வெளிப்படையாகச் சொன்ன காட்சி ஒன்று உண்டு. 

அவர் ஜெயக்கொடி பறந்த சினிமாத் துறையிலிருந்து யாரையும் அழைக்காமல் ஒரு ரகசிய நடவடிக்கைபோலத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்த காட்சியும் உண்டு. இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையேதான் 2009 பொதுத்தேர்தல் என்கிற காட்சி வருகிறது. திடீரென அரசியல் தெளிவு பிறந்து அந்த மகத்தான லட்சியத்தில் தானும் பங்கேற்க விரும்பி அவர் அந்தத் தேர்தலில் கர்ஜிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அத்தேர்தலையொட்டி அவருக்குச் சில கணக்குகள் இருந்திருக்கும். அது பொய்த்துப்போனது குறித்து எனக்கு வருத்தமேதுமில்லை. ஆனால் ஆன்ற சுற்றமும் அருமை நட்பும் அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டன குறித்து எனக்கு வருத்தமுண்டு. தவிர, ஒரு மனிதன் தான் விரும்பும் கட்சிக்கு ஆதரவாகப் பேசவும் இயங்கவும் உரிமையுண்டு என்றுதான் நமது ஜனநாயகமும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.
“ஒரு உண்மையைச் சொல் லட்டுங்களா. .? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. . . யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்” என்று வடிவேலுவே ஆதங்கப்பட்டாலும் திரை உலகம் அவரை ஒதுக்கி வைத்தாலும் சாமானிய மக்களிடம் அவர் குவித்து வைத்த புகழ் சேதாரம் ஏதுமின்றி அப்படியேதான் இருக்கிறது என்பது என் எண்ணம். அவர் இல்லை என்று சொல்லப்படுகிற இந்த இரண்டாண்டு காலம் எனக்கு அவர் இல்லாதது போன்ற உணர்வே இல்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் அந்தக் குறை தெரியாது பார்த்துக்கொண்டன. தவிரவும், வெறும் இரண்டு வருட இடைவெளியில் மறந்து போகக்கூடிய கலைஞனுமல்ல அவர். தமிழ்ச்சமூகம் அவரின் மீள்வருகைக்காக ரகசியமாகக் காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

(நன்றி: http://www.kalachuvadu.com/issue-169/page118.asp காலச்சுவடு )

Sunday, January 19, 2014

சர்க்கரை வள்ளி கிழங்கு சமைப்பது எப்படி??

நாங்களும் சமையல் குறிப்பு பதிவு போடுவோம்லே...


ஒன்னும் இல்லைங்க சோறு ஆக்குகிற ரைஸ்குக்கர் மேல் ஒரு தட்டு இருக்கும் அதில் அளவுக்கு தகுந்த மாதிரி வெட்டி அடுக்கி விட்டு மூடி விடுங்கள் சோறு வெந்து முடித்தவுடன் கிழங்கும் சரியான பக்குவத்தில் வெந்து இருக்கும். அப்படியே எடுத்து சாப்பிட்டு விட வேண்டியதுதான்.(இப்படித்தான் நான் செய்கிறேன்)

பின்குறிப்பு: 
வெளிநாட்டில் இருக்கும் தனிநபர்களுக்காக இந்த சமையல் 

அப்புறம் இந்த கிழங்கில் நிறைய சத்து இருக்காம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது..

இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-.

சர்க்கரைவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
கலோரிகள்- 90
பேட் -0 கிராம்
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு -0 கிராம்
கொலஸ்ட்ரால்- 0மில்லிகிராம்
கார்போஹைட்ரேட் -21 கிராம்
புரதம் -2 கிராம்
நார்ச்சத்து -3கிராம்
சோடியம் -36 மில்லிகிராம்
வைட்டமின் ஏ -19.218 சர்வதேச அலகு
ஃபோலிக் அமிலம்- 6 மைக்ரோகிராம்
பேண்டோதெனிக் அமிலம் -1 மில்லிகிராம்
வைட்டமின் பி- 61 மில்லிகிராம்
வைட்டமின் சி- 20 மில்லிகிராம்
வைட்டமின் ஈ -1 மில்லிகிராம்
கால்சியம் 3-8 மில்லிகிராம்
மாங்கனீஸ் -1 மில்லிகிராம்
கரோட்டினாய்டுகள் -11.552 மைக்ரோகிராம்
பொட்டாசியம் -475 மில்லிகிராம்
மாக்னீஷியம்- 27 மில்லிகிராம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.


Wednesday, January 8, 2014

இதுதாண்டா தமிழக போலீசு...

கோயில் பூசாரி,பஞ்சு மிட்டாய் விக்கிரவாய்ங்க இவிய்ங்க மாதிரி நம்ம அடிச்சது எல்லாம் சாப்ட் கேரக்டர்களை என்று ஒரு படத்தில் நகைச்சுவை வசனம் வரும் அது அப்படியே நமது தமிழக போலீசுக்குதான் பொருந்தும் என நினைக்கிறேன். 

முருங்கக் கீரை திருடியவரை 10 பேர் கொண்ட போலீஸ் படை அமைத்து பிடித்து அவர்களை புழல் சிறையில் தள்ளியது. திருட்டுக் குற்ற வழக்கில் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட கொசுவலை அடிக்கும் தொழிலாளி ஹுமாயூன் என்பவரை காவல்நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொன்றது. சமீபத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தொண்டையில் சுட்டது என சாதனை தொடர்கிறது.

தமிழக போலீசின் சாதனைகள் விரிவாக இதோ:

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்த ஹுமாயூன் என்ற தையல் தொழிலாளியும் அவரது நண்பரும் மற்றொரு கூலித் தொழிலாளியுமான சௌகத் அலியும் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கானத்தூர் போலீசு நிலையத்திற்கு விசாரணைக்காக ஜூலை 8 அன்று இழுத்துச் செல்லப்பட்டனர்.  திருட்டுப் புகார் கொடுத்தவர்கள் ஹுமாயூன் மீதுதான் சந்தேகம் இருப்பதாகச் சொல்லியிருந்ததால் சௌகத் அலியை விடுவித்துவிட்ட போலீசார், ஹுமாயுனை போலீசு நிலையத்திலேயே சிறை வைத்தனர்.  முதல்நாள் ஹுமாயூனை உயிரோடு பிடித்துச் சென்ற போலீசார், மறுநாள், “ஹுமாயூன் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டதாக” அப்பாவிகளைப் போல அறிக்கை வெளியிட்டனர்.
திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்
‘‘ரேஷனிலேயே மண்ணெண்ணெய் கிடைக்காதபொழுது, ஸ்டேஷனில் மண்ணெண்ணெய் எப்படி வந்தது?” என தி.மு.க. தலைவர் மு.க., இக்கொட்டடிக் கொலையை அம்பலப்படுத்தி நையாண்டி செய்து அறிக்கை அளித்தவுடன், “ஸ்டேஷனில் இருந்த போலீசார் ஹுமாயூனைத் தனியாக விட்டுவிட்டு வாகனச் சோதனைக்காகச் சென்றுவிட்டார்கள்; விசாரணைக்குப் பயந்துபோயிருந்த ஹுமாயூன் அந்தச் சமயத்தில் ஸ்டேஷனில் வேறொரு வழக்கு தொடர்பாகப் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.  ஹுமாயூனை நாங்கள் யாரும் கொடுமைப்படுத்தவில்லை.  தீ வைத்துக் கொண்ட அவரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்ற முயன்றோம்” எனக் கதையளந்தது போலீசு.  பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்க்குப் பக்கத்திலேயே போலீசார் தீப்பெட்டியையும் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் போலும்!

திருடப்பட்டது கீரை... புறப்பட்டது போலீஸ்தனிப்படை! சென்னை கொட்டி வாக்கத்தில் உள்ளது முன்னாள் டி.ஜி.பி வெங்கடேசன், இவரது மனைவி ராணி (முன்னாள் எம்.எல். ஏ ) இவர்களது மருமகந்தான் தென் சென்னை கூடுதல் கமிஷனர் ராஜேஸ்தாஸ். முன்னாள் டிஜிபி வெங்கடேசன் வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் கடந்த 5 -ம் தேதி முருங்கை இலை பறிக்க சென்ற சக்தியும் செல்வமும் மரம் முறிந்து வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள் விழுந்து காவலாளி கத்தவும் ஓடி விடுகின்றனர். தப்பியோடிய இருவர் மீதும் இதுவரை எந்த விதமான குற்றவழக்குகளும் இல்லை. ஏரியாவிலும் கெட்ட பெயர் இல்லை. ஆனால் தப்பியோடிய முருங்கை இலை மெகா திருடர்களைப் பிடிக்க ராஜேஸ்தாஸ் உத்தரவில் 10 பேர் கொண்ட போலீஸ் படை அமைத்து பிடித்து அவர்களை புழல் சிறையில் தள்ளியிருக்கிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தொண்டையில் சுட்ட அயோக்கிய ஆய்வாளர் புஷ்பராஜ்.


நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. சிறுவனை பயமுறுத்துவதற்காக கழுத்தில் துப்பாக்கியை வைத்து காவல் ஆய்வாளர் மிரட்டியபோது துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது.


சென்னை நீலாங்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சபீனாபேகம். இவரது மகன் தமீம்அன்சாரி (16). 6-ம் வகுப்புடன் படிப்பை முடித்த அன்சாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்துவந்தாராம். நீலாங்கரை காவல் துறையினர் பலமுறை அவரைப் பிடித்து எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டருகே இருந்த ஒரு கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டது.

தொண்டையில் சுடப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரி

இதுகுறித்த புகாரின் பேரில் அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சிறுவன் தமீம்அன்சாரியை நீலாங்கரை போலீஸார் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.


அங்கு சிறுவனிடம் பல காவலர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் தமீம்அன்சாரி, 'நான் திருடவில்லை' என்று திரும்பத் திரும்ப கூறினாராம். இதனால் நொந்துபோன போலீஸார் முடிவில் நீலாங்கரை குற்றவியல் ஆய்வாளர் புஷ்பராஜிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.

ஆய்வாளர் புஷ்பராஜிடமும், 'நான் திருடவில்லை' என்ற பதிலையே மீண்டும் மீண்டும் கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அன்சாரியின் கழுத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென துப்பாக்கி வெடித்து அன்சாரியின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. கழுத்தில் காயம்பட்ட சிறுவன் ரத்தம் வழிந்த நிலையில் காவல் நிலையத்துக்குள்ளேயே மயங்கி விழுந்தார். விபரீதத்தை உணர்ந்த போலீஸார் அன்சாரியை உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.


துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் புஷ்பராஜிடம் அடையாறு துணை ஆணையர் சேவியர் தன்ராஜ், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்களாம்.

பெரும் கொலைகாரன் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கொள்ளைக்காரர்களுக்கு ராஜமாரியதை அளித்துக் கொண்டே சாதாரண அப்பாவிகளிடம் வீரத்தைக் காட்டுவது என போலீஸ் அமைப்பே சீர்குலைந்து கிடக்கிறது தமிழக அரசே தேவை நடவடிக்கை சீர்திருத்தம்.

Tuesday, January 7, 2014

வெளிநாட்டு சாவு: விமானநிலைய பிணம் திண்ணிப் புழுக்கள்!


சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்!


உள்நாட்டில் எல்லா வசதிகளும் வேலை வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் வெளிநாட்டில் தன் குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக கனவுகளைச் சுமந்துகொண்டு விமானமேறி வெளிநாடு செல்லும் இந்தியர்களில் தமிழக தென்மாவட்ட ஏழை விவசாயிகளே அதிகம். அவ்வாறு சென்றவர்களில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் மலேசியா, சிங்கை, அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்.

அவ்வாறு இறந்தவர்களில் பலர் "சுமந்து சென்ற கனவுகளோடு அந்தந்த நாடுகளில் உள்ள சுடுகாட்டில்" அழுவதற்குக் கூட ஆளின்றி, முறைகள் செய்ய உறவின்றி புதைக்கப்படுகிறார்கள். 
பலர் "செல்லும்போது விமானச் சீட்டில் பயணம் செய்தவர்கள், திரும்பும்போது பெட்டிகள் அடுக்கும் பகுதிக்குள் மரப்பெட்டிக்குள் வைத்த பிணமாய்" கார்கோவிற்கு வந்து சேர்கிறார்கள். 

அவ்வாறு வந்து சேரும் கார்கோவிற்கு இங்குள்ள உறவுகள் சென்று உடலை எடுத்து வரவேண்டும். எந்த நாட்டில் இருந்து அந்த உடல் அனுப்பப்ப்டுகிறதோ அந்த நாட்டில் இருந்து அனுப்புவதற்கு முதல்நாள் அவர்களின் வீட்டிற்கு "உறுதிப்படுத்தும்" அலைபேசி சென்னை கார்கோவில் இருந்து வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வாறு கார்கோவில் இருந்து அழைப்பவர்கள் "வரும்பொழுது பத்தாயிரம் ரூபாய்" செலவாகும் எடுத்துவாருங்கள் என்றும் சொல்கிறார்கள்.
 எதற்காக இந்த பத்தாயிரம் ரூபாய் ? லஞ்சமாம்! 

ஆம்... இதனை கொடுக்கவில்லையேல், பெரும்பாலும் இரவிலேயே விமானங்கள் வந்து சேர்வதால், உடலை எடுக்கச் செல்பவர்களுக்கு அங்கே அலைக்கழிப்புத்தான் மிஞ்சும். இரவில் எடுக்க முடியாது காலையில் வாருங்கள் என்றும், பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றும், காவல்துறையில் சென்று புகார் கொடுத்து அதன் நகலை எடுத்து வாருங்கள் என்றும் துக்கத்தோடு காத்திருக்கும் குடும்பத்தினரை மேலும் கொடுமைப்படுத்துகிறார்கள். 

அதேசமயம் அங்கே இருக்கும் சில ஏஜெண்டுகளின் எண்களையும் அவர்களே தந்து, அந்த ஏஜெண்டுகளிடம் பணத்தைக் கொடுத்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "உடல் பெட்டி" வந்துவிடுகிறது. 

அந்த கார்கொவில் பணிபுரியும் அதிகாரிகள்தான் இவ்வளவு சித்து வேலையும் செய்யும் நல்ல பிறப்புப் பிறக்காத நாய்கள். அட பிணம் திண்ணி கழுகுகளா எதுக்குடா இந்த பணம். உங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்காங்கதானே. நீங்க நல்ல சாவு சாக மாட்டிங்கடா. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட உறவுகள்.

தன் மகன் வெளிநாட்டிற்கு போகிறான். தங்கச்சிய கரை சேத்துடலாம்... சின்னதாவாவது ஒரு வீடு கட்டிவிடலாம்.னு ஆசையோட காத்திருக்கும் குடும்பத்தினருக்கு "போன கடன் தீர்க்கும் முன்னே செத்துப்போன பிள்ளையின் உடலையாவது பார்ப்போமே" என்று கண்ணீரோடு காத்திருக்கும் அந்த குடும்பம் சென்னை விமான நிலையத்தில் இப்படிப் படும்பாடுகளை சொல்லி மாளாது வேதனைக்கு மேல் வேதனையை அனுபவிக்கிறார்கள்

இந்த செய்தி எல்லாருக்கும் சென்று சேர வேண்டும். எங்காவது ஒரு நல்ல அதிகாரிக்கு, ஒரு நல்ல மனசாட்சி உள்ள அமைச்சருக்கு, ஆளும் அரசுக்கு இந்த செய்தி சென்று சேரும். இனியும் இது தொடரக் கூடாது. பகிருங்கள் நண்பர்களே...

(நன்றி-காரைக்குடி மக்கள் மன்றம்)

Sunday, December 29, 2013

இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம்...!

எச்சரிக்கை:  நீங்கள் இங்கே வாசிக்கப்போவது திருடப்பட்டிருக்கலாம். என்ற தலைப்பில் காலச்சுவடில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா அவர்களின் கட்டுரை இது.நல்ல வாசிப்பனுவத்தை கொடுத்தது உங்களோடும் பகிந்து கொள்கிறேன்.
எழுத்துத் திருட்டு பற்றிய கட்டுரைகளில் கட்டாயமாகச் செய்துதீரவேண்டிய காரியம் ஒன்று உண்டு. டி.ஸ். எலியட் கூறிய ஒரு வசனத்தை எப்படியாவது கட்டுரையில் தக்க இடத்தில் செருகிவிட வேண்டும். அதை நான் முதலிலேயே செய்துவிடுகிறேன். அவரின் Waste Land நூலில் இப்படி ஒரு வாக்கியம் வரும்: ‘முதிராத கவிஞர்கள் அசலை அப்படியே நகல் எடுப்பார்கள், முதிர்ந்த கவிஞர்கள் பக்குவமாகத் திருடுவார்கள்’. இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். இங்கே நான் சொல்லப்போவதெல்லாம் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. இந்தக் கட்டுரையின் உட்பொருளுடன் ஒத்துப்போக நான் அங்கங்கே கேட்டவற்றையும் படித்தவற்றையும் திருடி, திருத்தி, உருமாற்றி எழுதியிருக்கிறேன். ஆங்கிலப் பாதிரியார் William Ralph Inge (1860-1954) சொன்னதுபோல எல்லா அசல் ஆக்கங்களுமே மூலத் தடங்கள் மறைக்கப்பட்ட அபகரிப்புகள்.

வெங்காயம் விலை ஏறிவிட்டது என்ற செய்தியை நுகர்பொருட்கள் பயன்படுத்துகிறவர்கள் பரபரப்பூட்டாத செய்கையாகப் பத்திரிகையில் படிப்பதுபோல்இன்றைக்கு இலக்கியத் திருட்டு தினமும் நடக்கும் சாதாரணச் செய்தியாகிவிட்டது. உலகில் எங்கேயாவது ஒரு இடத்தில் இலக்கியத் திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது, இந்தப் பத்தியைக் கணினியில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது தைவான் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் Andrew Yang பதவி துறப்பு செய்திருக்கிறார் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அவர் செய்த குற்றம் அவரின் நாட்டின் இராணுவ இரகசியங்களைக் காசுக்கு எதிரிகளுக்கு விற்றதல்ல. பிரதான சீனாவின் விடுதலை சேனையைப் பற்றி இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை இவரின் சொந்தக் கைவண்ணம் அல்ல. களவாடப்பட்டது.

ஒரு காலகட்டத்தில் இலக்கியத் திருட்டு அப்படி ஒரு பெரிய பாரமான குற்றமல்ல. எல்லோருமே எல்லோரிடமிருந்து தாராளமாகச் சிந்தனைகள், கருத்துப் படிவங்கள், வாக்கியங்கள், வசனங்களை இரவல் வாங்கினார்கள். தயங்காமல் தூக்கி எடுத்தார்கள். சேக்ஸ்பியர் பிற படைப்பாளிகளின் வரிகளை மட்டுமல்லாமல் தன் நாடகக் கதாபாத்திரங்கள், கதைப்பின்னல்கள், (A Midsummer Night's Dream, Twelfth Night தவிர) இலக்கியப் படிமங்கள் முதலியவற்றைச் செவ்விலக்கியங்களிலிருந்தும் அவருடைய சமகாலத்துப் படைப் பாளிகளிடமிருந்தும் கூசாமல் எடுத்துக்கொண்டார். அவருடைய Henry VI நாடகத்தின் 6,033 வரிகளில் 4,144 வரிகள் சொந்தக் கைவேலை அல்ல. இதனால் ஆங்கில இலக்கிய மாணவர்கள் தளர்ச்சியடைந்து அழைப்பு மையங்களுக்கு வேலை தேடிப் போகப்போவதில்லை. பொழுதுபோக்குக்காக ஆங்கில இலக்கியத்தில் ஈடுபட்டவர்களுக்கு இது ஏற்கனவே தெரிந்த விஷயம். நமக்கு, நன்கு அறியப்பட்ட உதாரணம் கம்பர் இராமாயணத்தை வால்மீகியைத் தழுவி எழுதியது.

இந்தக் கட்டத்தில் இலக்கியத் திருட்டு என்ற பதத்திற்குப் பின்னால் இருக்கும் ஆங்கில வார்த்தையின் சொற்பிறப்பியல் (etymology) பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இலக்கியக் களவு பழமையான காரியம். எழுத்துக் கலாச்சாரம் வந்த பிறகு மட்டுமல்ல வாய்மொழி நாகரிகப் படிமமாக இருந்த நாட்களிலும் இந்தச் செய்கை இருந்திருக்கிறது. ஆனால் அதை அடையாளப்படுத்தும் வார்த்தை முதலாம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலச் சொல்லான plagiarism என்பதன் மூலம் இலத்தீன் சொல் plagiarius. இதன் பொருள் ஒரு குழந்தையை அல்லது வேறு ஒருவரின் அடிமையைக் கடத்துபவர். சுருங்கச் சொல்லப்போனால் கடத்தல்காரன், அபகரிப்பவன். ஒருவிதத்தில் திருடன். இலக்கியத்துடன் இந்த வார்த்தையை இணைத்து இதைப் பயன்படுத்தியவர் அதிகம் பிரபலமல்லாத ரோம நாட்டைச் சேர்ந்த கவிஞரான விணீக்ஷீtவீணீறீ. அதுமட்டுமல்ல காப்புரிமைக்காக முதன்முதலாகப் பணம் கேட்டவரும் அவர்தான். இந்தச் செயல் வால்மீகி, கம்பரிடம் இராமாயணத்திற்குக் கூலி கேட்டமாதிரி. அவருடைய கவிகளைத் திருடியவரிடம் வெகுமானம் கேட்டு எழுதிய செய்யுளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய வார்த்தையிலேயே தருகிறேன்:

Fame has it that you, Fidentinus, recite my books to the crowd as if none other than your own.//If you’re willing that they be called mine, I’ll send you the poems for free.//If you want them to be called yours, buy this one, so that they won’t be mine.

தற்படைப்பாற்றல் (originality) ஒரு அறிவியல் சொத்துரிமையாக இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் காப்புரிமைச் சட்டமும் அமுலாக்கப்பட்டது. படைப்பாளி புதிது ஆக்கும் ஆற்றலுடையவர் மட்டுமல்ல அவரின் பிரதிகள், சிந்தனைகள், கருத்துகள், தனி நபரின் அறிவியல் சொத்தாகக் கருதப்பட்டது. அத்துடன் இந்தத் தனிச் சொத்துக்களை உருவாக்கிய அவரே அதன் உரிமையாளர். ஆகவே அவரின் கதைகள், அபிப்பிராயங்கள், படைப்புகள், நூல்களை விற்று சம்பாதித்து வாழ்க்கை நடத்தலாம் என்ற கருத்தும் உருவானது.

ஆங்கில அடிச்சொல் வரலாறு ஒரு பக்கம் இருக்கட்டும். ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் இலக்கியத் திருட்டு என்பது அவ்வளவு பொருத்தமானதல்ல. திருட்டு இலக்கியத்தில் மட்டுமல்ல, சினிமா, இசை, ஓவியம், நடனம், முனைவர் மற்றும் ஆவண ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் உண்டு. ஆகையினால் இலக்கியத் திருட்டு என்பதைவிட ஆக்க, அல்லது படைப்பு அபகரிப்பு என்பதுதான் சரியான சொல்லாகப்படுகிறது.
ஆக்க அபகரிப்பில் பல வகைகள் உண்டு. ஒன்று அப்படியே அப்பட்டமாக வரிக்கு வரி, வசனத்திற்கு வசனம், பத்தி பத்தியாகப் பிற நூல்களிலிருந்து அப்படியே தூக்கிவிடுவது. இதைத்தான் காவியா விசுவநாதன் செய்திருந்தார். How Opal Mehta Got Kissed, Got Wild, and Got a Life என்ற அவரின் நாவல் Megan McCafferty எழுதிய Sloppy Firsts ñŸÁ‹ Second Helpings என்ற புதினங்களிலிருந்து திருடப்பட்டது. இரண்டாவது வகை சூட்சுமமானது. உதாரணம் மூலம் விளக்குகிறேன். மதுரைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முத்துமோகன் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் மார்க்ஸின் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த எடுத்துக்காட்டு உங்களுடைய ஆராய்ச்சிக்கும் உகந்ததாக இருக்கிறது. முத்துமோகன் சுட்டிக்காட்டிய பகுதியை நீங்கள் மார்க்ஸின் மூலத்தைப் படிக்காமல் ஏதோ நீங்கள்தான் இதனைக் கண்டுபிடித்த மாதிரி அப்படியே உங்களது கட்டுரையில் புகுத்திவிடுகிறீர்கள். இதுவும் ஒரு ஆக்க அபகரிப்புதான். ஆனால் மிக நுண்மையானது. இதை இரண்டாம் நிலை ஆக்க அபகரிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான நுண்ணயம் வாய்ந்த இரவல் வாங்கல்கள் பெரும்பாலும் சர்வகலாசாலை ஆய்வறிக்கைகளில் காணக்கிடைக்கும். கல்லூரிகளில் நடக்கும் அறிவியல் திருட்டு, ஆராய்ச்சி மோசடிகள் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.

திருடுவதற்கும் திரும்ப மீள எழுதுவதற்கும் வித்தியாசமுண்டு. ஆகையினால் இரண்டையும் ஒன்றாக எண்ணிவிடாதீர்கள். சில வேளைகளில் இந்த மீள் எழுதல் மூலத்தையும் மிஞ்சிவிடுகிறது, தலைகீழாக்குகிறது. கவிழ்த்தும்விடுகிறது. இரண்டு ஆங்கில உதாரணங்கள். Arthur Laurentsஇன் இசைநாடகமான West Side Story சேக்ஸ்பிரியரின் Romeo and Julietஐ தழுவியது. சேக்ஸ்பிரியரின் இந்தக் காதல் கதைக்கு மூலப்படிவம் பாபிலோன் நாட்டு காதலர்கள் பற்றிப் பொது யூகம் 43 முன் தொடங்கி பொது யூகம் 17/18 வரை வாழ்ந்த ரோமாபுரிக் கவிஞர் ளிஸ்வீபீ எழுதிய Pyramus and Thisbe, என்ற கவிதையாகும். ஆனால் Arthur Laurents வெறும் புளித்துப்போன காதல் கதையாக்காமல் 50களின் நீயுயோர்கின் இரு பதின்ம வயது தாதாக்களின் உள்சண்டை மோதலாக இந்த இசைக்கூத்து சொல்லப்படுகிறது. போர்டோ ரீக்கோ இளைஞர்களுக்கும் போலீஷ் அமெரிக்க வாலிபர்களுக்குமிடையே காணப்பட்ட இன உலைவு இந்த இசைநாடகத்தில் பிரத்தியட்சமாகத் தலை தூக்கி நிற்கிறது. சேக்ஸ்பிரியரின் மூலத்தில் இந்த இன முரண்பாடு இல்லை. மற்றது Elsie V. Aidinoff இன் நாவலான The Garden. ஆதாம் ஏவாள் கதையைப் பின்பற்றி எழுதப்பட்டது. ஆனால் வேதாகம கதைக்கும் நாவலுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. பழைய ஏற்பாட்டு கதையில் சர்ப்பம்தான் வில்லன். ஆனால் எடினொவ்வின் மீள்சொல்லலில் கடவுள்தான் அச்சமூட்டுகிற, கோரமான ஆளாக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமா வில்லன் போல் வெள்ளை வேட்டியும் குத்துவாளுடனும் நிற்கிறார். இந்தக் கடைசி வரி மூலத்தில் இல்லை. உங்கள் உணர்ச்சியை ஈர்க்க நான் சும்மா சேர்த்துக்கொண்டது. அதுமட்டுமல்ல ஏவாள் தந்தையர் மரபுக்கு இணங்கி நடக்கிற மாதுவாகச் சித்தரிக்கப்படவில்லை. சுய அறிவுள்ள சுட்டிப் பெண்ணாகத் தோன்றுகிறார். கனியைச் சுவைத்ததினால் மானிடம் கருணையிலிருந்து வீழ்ச்சி அடையவில்லை. விமோசனம் அடைகிறது. கிறிஸ்தவ வேதம் எழுதியவர்கள் நினைத்துப் பார்க்காத செயல் இது. மோசமான மீள் எழுதல்களும் உண்டு. Shashi Tharoor Þ¡ The Great Indian Novel. இந்தியக் காவியமாகிய மகாபாரதத்தை இந்தியாவின் விடுதலைப் போராட்டப் பின்னணிக்குத் தாரூர் உருசெப்பம் செய்திருந்தார். விளைவு நாவல் குழந்தைத் தனமாகக் காணப்படுகிறது. அசலிலிருக்கும் தார்மீக இருவுளப்போக்கு தாரூரின் புதுவடிவில் இல்லை.

கிறிஸ்டோபர் புக்கரின் The Seven Basic Plots: Why We Tell Stories என்ற நூலின் தலைப்பில் காணப்படுவதுபோல் ஏழே ஏழு தொல்கதை அமைப்புருக்கள் (archetype) இருக்கிறதென்கிறார். அவையாவன: அரக்கரை ஆட்கொள்வது, தேடல், நீள்பயணமும் திரும்புகையும், குடிசைவாசி குபேரனாவது, மறுவாழ்வு, மகிழ்ச்சி தரும் கதைகள், துன்ப காவியங்கள். என்னதான் இலக்கிய கர்த்தாக்கள் தங்களுடைய படைப்புகள் தங்களுடைய சுயமான எண்ணங்கள், தற்படைப்பாற்றல்கள் என்று கூறினாலும் அவர்களுடைய எழுத்துவீச்சு இந்தக் குறுகிய ஏழு அல்லது மிஞ்சிப்போனால் ஒரு பத்து தொல்கதை அமைப்புருக்களுக்கிடையேதான் செயல்படுகின்றன, சுழல்கின்றன. வேதாந்தி Ludwig Wittgenstein வேறு கட்டத்தில் சொல்லியது இங்கேயும் பொருந்தும்: தற்படைப்பாற்றல் என்பது தெரிந்தவற்றை வேறுவிதமாக வரிசைப்படுத்துவதாகும். தற்படைப் பாற்றல் பற்றிய வரையறை எப்போதுமே நிரந்தரமானதல்ல. ஒருவரின் மனந்திறந்த புகழுரை இன்னொருவரின் பதிப்புரிமை. ஒருவிதத்தில் மற்றைய ஆக்கங் களிலிருந்து திருடாதவர்கள் ஒருவருமே இல்லை.

இன்றைய பிரபல ஆங்கிலேயே எழுத்தாளர்களான P.D.James, Graham Swift, Ian McEwan, Andrew Motion ஏதோ ஒருகட்டத்தில் மற்றவர்களின் இலக்கியத்திலிருந்து களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். Harry Potter நாவல்கள் எழுதிய R.K. Rowling கூட தப்பவில்லை. அமெரிக்கரான Nancy Stouffer அவர் 1984இல் எழுதிய The Legend of Rah and the Muggleதான் ஹாரி பாட்டர் நாவல்களுக்கு முதுப்பிரதி (ur-tex) என்கிறார். டான் பிரவுன் விசிறிகளுக்கு அவரை நீதிமன்றம்வரை இழுத்தது ஞாபகத்தில் இருக்கும். இவரின் சதித்திட்ட நாவலான The Da Vinci Code îƒèÀ¬ìò The Holy Blood and the Holy Grail Michael என்ற சரித்திர நூலிலிருந்த சில சம்பவங்களைத் திருடியதாக Baigent and Richard Leigh வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அப்படி டான் பிரவுன் களவாடிய சம்பவம் இயேசு திருமணமானவராக மகதலேனா நாட்டு மரியாளுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தது. கிறிஸ்தவ திருமறையிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட ஆகமமான The Gospel of Philipä படித்தவர்களின் இரத்த அழுத்தம் இந்த வெளிப்பாட்டினால் பாதிக்கப்படப்போவதில்லை.

ஆக்க அபகரிப்பு தனி ஆளின் முற்றுரிமை அல்ல. ஆட்சியாளர்களும் செய்வதுண்டு. அதிகம் யோசிக்காமலேயே நினைவுக்கு வருவது ஈராக் யுத்தத்திற்குச் சாதகமாக முன்னாள் ஐக்கிய ராஜிய பிரதமர் டோனி பிளையர் தயாரித்த ஆதாரச் சான்று. ஐயத்துக்குரிய ஆவணக்கோப்பு (dodgy dossier) என்று ஊடகத்தினால் எள்ளலாக நாமம் சூட்டப்பட்ட இந்தப் பத்திரம் Ibrahim al-Marashi என்ற முதுகலை மாணவரின் Iraq's Security and Intelligence Network: A Guide and Analysis என்ற ஆய்வேட்டிலிருந்து திருடப்பட்டது. மூன்றாவது வகுப்பு மாணவன்கூட விடாத பிழையை அரசு செய்திருக்கிறது. மூலத்திலிருந்த அச்சுப் பிழைகள் அப்படியே பிரித்தானிய அரசு அறிக்கையிலும் காணப்பட்டது.
படைப்புகள் களவாடப்பட்டது என்று நிரூபிக்கப் பட்டபோது குற்றவாளிகள் சொல்லும் சாக்குப் போக்கு இவற்றில் ஒன்றாக இருக்கும்: ஐயோ நான் தெரிந்து செய்யவில்லை; அந்தப் புத்தகத்தையே நான் படிக்கவில்லை; யார் அந்தக் கதாசிரியர் கேள்விப்படவே இல்லையே. கைசலிக்க எழுதிய களைப்பினால் மேற்கோள் குறிகள் போட மறந்துவிட்டேன். இன்றைய கணினி நாட்களில் இற்றைப்படுத்தப்பட்ட சாக்கு நீண்ட நேரம் திரையைப் பார்த்ததினால் கண்கள் தொய்ந்துவிட்டன. ஆகையினால் அடிக்குறிப்புகள் சேர்க்க மறந்துவிட்டேன். இவற்றைவிட திருடிய இரண்டு படைப்பாளிகள் சொன்ன விடை புதிதாகவும் அசலான எண்ணமாகவும் எனக்குப்படுகிறது. இந்த இரண்டுக்குமே சொந்தக்காரர்கள் ஜெர்மனிய நாட்டவர்கள். ஒருவர் அரசியல்வாதி மற்றவர் பதின்ம இலக்கியம் எழுதுகிறவர். Bonn University ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரின் முனைவர் ஆராய்ச்சி திருடப்பட்டது என்று அவரின் முனைவர் பட்டம் சர்வகலாசாலையின் கல்வித் தகமையின் நாணயத்திற்குக் களங்கம்

விளைவிக்கிறது என்று ரத்து செய்த போது Jorgo Chatzimarkakis சொன்னது: ‘நான் திருடியதாகச் சொன்ன அதே வார்த்தைகளை வேறுவிதமாகப் பொழிப்புரை செய்திருக்கிறேன். எல்லாப் பனுவல்களுமே பரஸ்பர ப்பிரதியுறவுகொண்டவை’ (intertextual). இவர் அறிவியல் ஆய்வேட்டிலிருந்து திருடிய மூன்றாவது ஜெர்மனிய அரசியல்வாதி. எல்லா அரசியல் வாதிகளுக்கும் நேர்மையுணர்வில் ஏதோ ஒரு தொளதொளப்பு இருக்கும்போல் தெரிகிறது. தமிழக அரசியல்வாதிகளுக்கு 3நி ஏலம். ஜெர்மனியர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

கதாசிரியர் Helene Hegemann சொன்ன விளக்கம் இதைவிட மேலானது. இவர் எழுதிய Axolotl Roadkill என்ற நாவல் Strobo என்ற நூலின் சாயல்கள் இருப்பதாக அம்பலப் படுத்தப்பட்டபோது சளைக்காமல் இவர் சொன்ன பதில்: "நான் அபகரித்த சங்கதிகளை மூலத்தைப் பார்க்கிலும் முற்றும் வேறான தனித்தன்மை வாய்ந்த சூழமைவில் பொருத்தியிருக்கிறேன். மூலத்திலிருந்து எடுத்த பொருட்களுக்குப் பொருத்தமான கதை ஓட்டத்தை எனது நாவலில் உருவாக்கியதுதான் புதுமை".இவரின் நாவலில் கதாபாத்திரம் சொல்லும் ஒரு வசனம் இன்றைய மீள் கலப்புறு கலாச்சாரத்தின் எண்ணத்துடன் இசைந்துபோகிறது, ஒத்துப்போகிறது: "பெர்லின் நகரில் எல்லாவற்றையும் எல்லாவற்றுடனும் கலந்துவிடுகிறோம். என்னுடைய உள்ளார்ந்த நோக்கை எதிரொலிக்கும், என்னுடைய கற்பனையை வேகமாக தூண்டிவிடும் எந்த நாவலானாலும் சினிமாவானாலும் இசையானாலும் ஒளிப்படமானாலும் கவிதையானாலும் அப்படியே சிரமம் இல்லாமல் திருடிவிடுவேன்".

அறிவியல் சொத்துரிமையை இன்றைய கணினி, வலைத்தள நாட்களில் கண்காணிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இன்றைய தலைமுறை இணயத்திலிருந்து கத்தரித்து ஒட்டும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். மீள் சேர்த்திணைவு (re-mix) இவர்களுக்கு சாம்பாரும் இட்லியும்போல் இயல்பானவை. மறு கலவையாக்குவதில் எது தக்கவை எது தகாதவை என்பதில்கூட இவர்களிடையே தடுமாற்றம் இருக்கிறது. நன்னெறி சார்ந்த ஒழுக்க நெறிப் பிரச்சினையாக இவர்களுக்குத் தெரிவதில்லை. ஒருவிதத்தில் வார்த்தைகள், எண்ணங்கள், கருத்துக்கள் தனி ஆளுக்குச் சொந்தமானவை அல்ல. பொதுவானவை. இவற்றைப் பார்க்கும் பார்வையிலும் வெளிப்படுத்தும் விதத்திலும்தான் படைப்பாளியின் தனித்தன்மை தெரிகிறது. இந்தத் தனித்தன்மைகூட ஒரு இருளார்ந்த, மங்கலான சமாச்சாரம். தற்படைப்பாற்றல் என்பது படித்த, கேட்ட, அறிந்த ஆதாரங்களை, மறைத்து, மூடி, புதைத்துவிடுவதே. ஆகையினால் இன்றைய பிரச்சினை மூலப்படிவம் பற்றியதல்ல, நேர்மை பற்றியது. படைப்பாளியின் உள் எண்ணம் பற்றியது. ஆக்கியோனின் இலக்கிய யோக்கியதை பற்றியது. இதில்தான் காவியா விஸ்வநாதனும் இவரைப் போன்ற மற்ற இலக்கியத் திருடர்களும் தவறிவிடுகிறார்கள்.

கடைசியாக, படைப்பாளிகள் கேட்க விரும்பாத, அவர்களுக்கு வருத்தமுண்டாக்கும், உளமுறிவு தரும் சில மேற்கோள் வாசகங்களை இங்கே தந்து இக்கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவருகிறேன். Roland Barthes எழுதிய The Library of Babel என்ற வாசகசாலை பற்றிய சிறுகதையில் அங்கே காணப்படும் பல்லாயிரக்கணக்கான நூல்களைப் பற்றி வர்ணிக்கும்போது அவை மாற்றீடு செய்ய முடியாதவை, தனித்தன்மையானவை என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதிய அடுத்த வசனம் கவனத்திற்குரியது. தான் படைப்பது எல்லாம் அசலைவிட மிஞ்சிய அசல் என்று நினைக்கும் படைப்பாளிகளுக்குக் கவலை தரும். அந்த வரி: ‘ஆனால் அந்த நூல்களிடையே காணப்படும் வித்தியாசங்கள், ஒரு சில கால்புள்ளிகளும் சில எழுத்துக்களுமே’. வேண்டுமென்றே எல்லோரையும் எரிச்சலூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க இதழாளர் James Atlas சொன்னதையும் இங்கு நினைவூட்டுகிறேன்: ‘எந்த இலக்கியமுமே திருட்டுதான்’. இதையே வேறுவிதமாக பொதுயூகத்திற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எபிரேய பிரசங்கியார் சொல்லி இருந்தார். இந்தப் பிரசங்கியார் குவளை அரைபாதி நிரம்பியது என்று நினைக்கிறவர் என்றுபடுகிறது. அவர் பண்டைய நாட்களில் பிரகடனப்படுத்திய வார்த்தைகள்: ‘சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை’.

நன்றி : காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-165/page21.asp )

பொருளை விட்டு அருளைத் தேடியவர்: சஹாபாக்கள் வரலாறு.

நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 2:272)

சுஹைப் (ரலி) ரோமபுரியிலிருந்து மக்கா வந்து இறைத்தூதரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். இறைத்தூதரை ஆழமாக நேசித்தவர். இறைநெறியை வாய்மையாகப் பின்பற்றியவர்.

நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தவுடன் சுஹைபிற்கு மக்காவில் இருப்பு கொள்ளவில்லை. மதீனா செல்வதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தார். ஒருநாள் மதீனா செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டார். அவர் புறப்பட்ட செய்தி அறிந்த மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் ஆவேசமடைந்து அவரைப் பின்தொடர்ந்து மடக்கி விடுகின்றனர்.

“ சுஹைபே! நீரோ வெளியூரிலிருந்து வந்தவர் உமது சொத்துக்கள் எல்லாம் எங்களது பணத்தால் உருவானவை. நீர் மதீனா செல்வதாயிருந்தால் உம்முடைய உடமைகளையும் செல்வத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்” என குறைஷியர் கூறியதைக் கேட்ட சுஹைப் (ரலி) அவர்கள் “ உங்களுக்கு எனது செல்வமும் சொத்துக்களும்தான் தேவை என்றால் அவற்றை இழப்பதில் எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இதைக் கேட்ட மக்காத்து இறைநிராகரிப்பாளர்கள் அதிர்ந்து போயினர். சுஹைபோ எவ்விதச் சலனமுமில்லாமல் மதீனா நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்.

மதீனா சென்றடைந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) சுஹைபை வரவேற்று பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:207)

“சுஹைபே! உமது வியாபாரம் வெற்றி அடைந்து விட்டது” என வாழ்த்து கூறி நபியவர்கள் வரவேற்றார்கள்.

இதே சுஹைப் அவர்கள், உமருக்கு அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் வரை தற்காலிக இமாமத் பொறுப்பு ஏற்றிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களின் ஜனாசா தொழுகையையும் சுஹைபே முன்னின்று நடத்தினார்கள்.

இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் படிப்பினைகள்:

இறைவழியில் அனைத்தையும் துறப்பது நஷ்ட்டமல்ல: லாபம்தான் என்பதை உணர்ந்து செயல்படுத்திக் காட்டியவர் சுஹைப் (ரலி). தற்காலிக வாழ்வை விட நிரந்தரமான மறுமை வாழ்விற்கு முன்னுரிமை அளித்தவர்.

Sunday, November 17, 2013

இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது.



பாகிஸ்தான் பிரிந்த நேரம். இந்திய முஸ்லிம்களிடையே அதிலும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு அசாதரணமான சூழ்நிலை நிலவிய தருணம். சங்பரிவாரங்களின் அச்சுறுத்தல் இன்றைக்கு காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருந்த அன்றைய சூழலில் முஸ்லிம்களிடையே இந்நாட்டின் மீதான நம்பிக்கையை எப்படி கொண்டு வருவது? 

ஒரு தலைவர் வேண்டும். அவர் நம்பிக்கை வளர்ப்பவராக அரவணைத்து செல்பவராக இருத்தல் வேண்டும். இந்த இடத்தை அருமையான நிரப்பினர் நேரு. 1948-ஆம் ஆண்டு, ஒரு இக்கட்டான சூழலில் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் உரையாற்றுகின்றார் நேரு. தி ஹிந்து இதழ் தமிழில் வெளியிட்டிருந்த அந்த பேச்சு உண்மையில் கண்ணீர் மல்க செய்தது. என்னவொரு அருமையான பேச்சு அது!!! 

நேரு இல்லாத இந்தியா எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் என்பதை இந்த பேச்சை படித்த பிறகு நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்னால். நீங்களும் படியுங்கள், உங்கள் சந்ததியினருக்கும் படிக்க கொடுங்கள்..


அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும் கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. 

இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும். நாம் இப்போது எங்கே நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும் போய்விடும்.
சுமுகமாக உடன்படுவோம்...
சுமுகமாக மாறுபடுவோம்

உங்கள் துணைவேந்தரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். உங்களை யெல்லாம் சந்திக்க வேண்டுமென்பது என் விருப்பம். அப்படிச் சந்தித்து உங்கள் மனதை ஊடுருவிப் பார்க்க வேண்டுமென்றும், என் மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் ஊடுருவிப் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். நாம் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலும் நம்மால் உடன்பட முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம், மாறுபடுவதற்காவது சுமுகமாக ஒப்புக்கொள்ள வேண்டும்; எங்கே நாம் உடன்படுகிறோம், எங்கே நாம் மாறுபடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மீள்திறன் கொண்டதே இளமை

உணர்வுபூர்வமான இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆறு மாதங்களின் நிகழ்வுகள் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. நம் ஆன்மா அவமானப் படுத்தப்பட்டிருப்பதுதான் எல்லாவற்றையும்விட மோசம். வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துவிட்ட முதியவர்களுக்குப் பட்டதெல்லாம் போதும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், வாழ்வின் ஆரம்ப நிலையில் இருக்கும் இளைஞர்களின் நிலை? இவ்வளவு பேரழிவுகளையும் நாசங்களை யும் பார்த்ததற்குப் பிறகும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று நான் எண்ணிப்பார்க்கிறேன். இதிலிருந்தெல்லாம் அவர்கள் மீண்டுவிடுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை, எதிலிருந்தும் மீளக்கூடியதுதானே இளமை என்பது. ஆனால், இந்த வடுவை அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் நெஞ்சில் சுமக்க வேண்டியிருக்கும் என்பதுதான் கொடுமை. நாமெல்லாம் சரியான விதத்தில் சிந்தித்துச் செயல்படக் கூடியவர்களாக இருந்தால், அந்த வடுவை அகற்றுவதில் இப்போதே நம்மால் வெற்றிபெற முடியும்.
நொறுங்கிப்போன கனவுகள்; உறுதியான லட்சியங்கள்

என் தரப்பிலிருந்து நான் சொல்ல விரும்புவது இதுதான்: எல்லாவற்றுக்குப் பிறகும், இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், எனக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடில் ஊக்கமுடன் பாடுபடு வதற்கு என்னால் முடியாமல் போயிருக்கும். எனது நெடுநாள் கனவுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப்போயிருந்தாலும்கூட, அடிப்படை நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது; அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை. உயர்ந்த லட்சியங்களாலும் உன்னத முயற்சியாலும் ஆன சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முயல்வதுதான் அந்த நோக்கம். அந்த இந்தியாவில் அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்கும்; வெவ்வேறு சிந்தனைப் போக்குகளும் பண்பாடுகளும் ஒன்றுசேர்ந்து மக்களின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான பெரும் பிரவாகத்தை உருவாக்கும்.
இந்தியாவின் பலம்

இந்தியத் தாயைக் குறித்து நான் பெருமை கொள்கிறேன்; அவளுடைய தொன்மையான, மாபெரும் பாரம்பரியத்துக்காக மட்டும் அல்ல; தன் மனதின் கதவுகளையும் ஜன்னல்களையும் கூடவே ஆன்மாவையும் திறந்துவைத்திருப்பவள். அவற்றின் வழியாக, தூர தேசங்களிலிருந்து வீசும் புத்துணர்வுமிக்க, வலுவூட்டக்கூடிய காற்றோட்டத்தை வர அனுமதிப்பவள்; இப்படியாக, தன் தொன்மை வளத்துக்கு மேலும் வளம் சேர்க்கக் கூடிய அவளுடைய மாபெரும் திறன்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன். 

இரண்டுமடங்கு பலம் கொண்டவள் இந்தியத் தாய். காலம்காலமாகச் செழித்தோங்கிய அவளுடைய சொந்தக் கலாச்சாரம் ஒரு பலம் என்றால், பிற இடங்களிலிருந்து திரட்டி அதன் மூலம் தன் வளத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் இன்னொரு பலம். வெளியிலிருந்து பாய்ந்துவரும் நீரோட்டங்களில் மூழ்கிப்போகாத அளவுக்குப் பலம் மிக்கவள் அவள். அதே போல் அந்த நீரோட்டங்களிலிருந்து தனித்துப்போய்விடாத அளவுக்குப் புத்திக்கூர்மை மிக்கவள் அவள். மேலும், இந்தியாவின் உண்மையான வரலாற்றில், சங்கமம் என்பது தொடர்ச்சியாக இருந்திருக்கிறது; பன்மைத்தன்மை கொண்ட, ஆனால், அடிப்படையில் ஒன்றுபட்ட இந்தக் கலாச்சாரமானது, காலம்தோறும் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அநேகமாக பாதிப்புக்கு உள்ளாகாமல்தான் இருந்திருக்கிறது.
நீங்கள் பெருமை கொள்கிறீர்களா?

நம் பாரம்பரியம்குறித்தும், அறிவிலும் கலாச்சாரத்திலும் நமக்கு மேன்மை நிலை கொடுத்த நம் முன்னோர்கள்குறித்தும் நான் பெருமை கொள்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? இந்த வரலாறுகுறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? நீங்களும் இதன் பங்குதாரர்கள் என்றும் வாரிசுகள் என்றும் உணர்கிறீர்களா? அப்படி உணர்ந்துகொண்டு, எனக்கு எந்த அளவுக்குச் சொந்தமாக இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் சொந்தமாக இருக்கும் அந்த வரலாறுகுறித்துப் பெருமை கொள்கிறீர்களா? அல்லது அதை அந்நியமாக உணர்ந்து அதைப் புரிந்துகொள்ளாமலேயே கடந்துசென்றுவிடுகிறீர்களா? அல்லது, இந்த மாபெரும் பொக்கிஷத்துக்குப் பாதுகாவலர்களும் வாரிசுகளும் நாம்தான் என்று உணர்வதால் உண்டாகும் அதிசய உணர்வைக் கொள்கிறீர்களா? நான் இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. 

தவறான பாதைகளை நோக்கி மக்களின் மனங்களைத் திசைதிருப்புவதிலும் வரலாற்றின் போக்கைத் திரிப்பதிலும் நிறைய சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. நீங்களெல்லாம் இஸ்லாமியர்கள்; நான் ஒரு இந்து. நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாகவோ, எந்த மதங்களையும் பின்பற்றாதவர்களாகவோ இருக்கலாம். எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு உங்களுக்கும் உரிமை இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியத்தை, நீங்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்லியெல்லாம் உங்களிடமிருந்து தட்டிப்பறித்துவிட முடியாது. கடந்த காலம் நம்மைப் பிணைக்கிறது; நிகழ்காலமும் எதிர்காலமும் உணர்வால் ஏன் நம்மைப் பிரிக்க வேண்டும்?
வரலாற்றோடு விளையாடுதல்

அரசியல் மாற்றங்கள் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒரு நாட்டின் உணர்விலும் பார்வையிலும்தான் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் என்னைப் பெருமளவில் வேதனைக்குள்ளாக்கிவருவது அரசியல் மாற்றங்கள் அல்ல; நமது உணர்வில் மெல்லமெல்ல ஏற்பட்ட மாற்றம் நமக்கிடையே பெரும் பிளவுகளை ஏற்படுத்தியிருப்பதுதான், அதிக அளவுக்கு என்னை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்திய உணர்வில் மாற்றம் ஏற்படுத்த முயல்வதென்பது நெடும் காலமாக நாம் கடந்துவந்த வரலாற்றின் போக்கை அப்படியே புரட்டிப்போட முயற்சிக்கும் செயலாகும். 

வரலாற்றின் போக்கைப் புரட்டிப் போட நாம் முயற்சித்ததுதான் நம்மைச் சாய்த்துவிட்ட பேரழிவுக்குக் காரணம். பூகோளத்துடனோ, வரலாற்றை உருவாக்கும் வலுவான போக்கு களுடனோ விளையாடுவதென்பது அவ்வளவு எளி தல்ல. நம் செயல்களின் விளைவாக வெறுப்பையும் வன்முறையையும் நாம் உருவாக்கினோமென்றால், அது முடிவே இல்லாத தீங்கை உருவாக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பாகிஸ்தான் நமக்கு ஏன் முக்கியம்?

ஒருவழியாக, பாகிஸ்தான் உருவாகிவிட்டது, என்னைப் பொருத்தவரை சற்று இயல்பற்ற விதத்தில். இருந்தாலும், பெரும் எண்ணிக்கையி லான நபர்களின் உணர்வை அது அடையாளப்படுத்துகிறது. இந்த நிலை என்பது ஒரு பின்னடைவு என்றே நான் நம்புகிறேன். ஆனாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்கிறேன். நமது தற்போதைய கண்ணோட்டம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பாகிஸ்தானின் கழுத்தை நெரித்து அதை நசுக்கி இந்தியாவுடன் இணையச் சொல்லி வற்புறுத்த வேண்டுமென்று நாமெல்லாம் வெறியேற்றப் பட்டிருக்கிறோம். மற்ற எல்லா வெறிகளையும் போலவே, பயத்தின் அடிப்படையிலும், நமது இயல்பை நாம் முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதன் அடிப்படையிலும் ஏற்பட்டிருப்பதுதான் அந்த வெறியும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று நெருங்கிவருவது தவிர்க்க முடியாதது என்பதைப் பல்வேறு காரணங்கள் அடிப்படையில் நான் நம்புகிறேன். இல்லாவிட்டால் அவை அடித்துக்கொள்ள நேரிடும். 

இந்த இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலை என்று ஒன்று கிடையவே கிடையாது. நீண்ட காலமாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் நாம், பார்த்தும் பார்க்காமல் இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள் மாதிரியெல்லாம் நம்மால் இருந்துவிட முடியாது. இன்றைய உலகச் சூழலை வைத்துப் பார்க்கும்போது மற்ற பல அண்டை நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நல்லுறவைப் பேணுவது அவசியம் என்றே நான் நம்புகிறேன். அதனால், பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்க வேண்டும் என்றோ அதைப் பலவந்தப்படுத்த வேண்டும் என்றோ அர்த்தமாகிவிடாது. பலவந்தம் என்பதே இருக்கக் கூடாது.

பாகிஸ்தானைச் சீர்குலைக்க முயலும் எந்த ஒரு முயற்சியும் இந்தியாவுக்கு எதிரானதாகவே மாறிவிடும். பாகிஸ்தானைப் பிளவுபடுத்த வேண்டும் என்று நாம் விரும்பினோமென்றால், பிரிவினைக்கு ஏன் நாம் அப்போது சம்மதித்திருக்க வேண்டும்? எல்லாம் நடந்து முடிந்த பிறகு, இந்த நிலையில் தடுக்க முயல்வதைவிட, அப்போது தடுத்திருப்பது சற்றே எளிதான காரியம்தான். ஆனால், வரலாற்றைப் பொருத்தவரை பின்னோக்கிச் செல்வது என்பது இயலாத காரியம். பாதுகாப்பான, வளம்மிக்க ஒரு நாடாக பாகிஸ்தான் உருவெடுக்க வேண்டியதும் அதனுடன் நெருக்கமான, நட்புணர்வு மிக்க உறவை நாம் பேண வேண்டியதும் இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதுதான் உண்மை. இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் இணைவதற்கான ஒரு வாய்ப்பு இன்று எனக்கு வழங்கப்படுமானால், தெளிவான சில காரணங்களுக்காக அதை நான் மறுத்துவிடுவேன்.

பாகிஸ்தானுக்கே உரித்தான பெரும் பிரச்சினைகளையும் சேர்த்துச் சுமக்க நான் விரும்பவில்லை; ஏற்கெனவே, போதும்போதும் என்ற அளவுக்கு எனக்கென்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான எந்த ஒரு ஒத்துழைப்பும் இயல்பான வழிமுறைகளின் அடிப்படையில் வர வேண்டும். அதாவது, பல நாடுகள் ஒன்றுசேர்ந்து இயங்கவிருக்கும் ஒரு மாபெரும் ஐக்கியத்தில் பாகிஸ்தானுக்கும் சமமான பங்கை அளிக்கும் வழிமுறைகளின் அடிப்படையில்தான் ஒத்துழைப்பு வர வேண்டுமே ஒழிய, பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை இல்லாமல் ஆக்கிவிட்டு வரக் கூடாது.
ஒரே உலகத்தை நோக்கி…

நான் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. உங்கள் எல்லாருடைய மனதிலும் பாகிஸ்தான் பற்றி ஓடிக்கொண்டிருக்கும். அதுகுறித்து நம் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய விரும்பியிருக்கலாம். உங்கள் மனது குழப்பமான ஒரு நிலையில் இப்போது இருக்கக்கூடும். எந்தத் திசையில் பார்ப்பது, என்ன செய்வது என்றெல்லாம் தெரியாமல் குழம்பிப்போயிருக்கக் கூடும். சில விஷயங்கள் மீது நமக்கு இருக்கும் அடிப்படையான பற்றுதலைக் குறித்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

எல்லா மதங்களையும் எல்லா விதமான சிந்தனைப் போக்குகளையும் உள்ளடக்கி னாலும் அடிப்படையில் மதச்சார்பற்றதாக இருக்கும் ஒரு தேசியத்தில் நாம் எல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறோமா? அல்லது மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலானதும் மற்ற மார்க்கத்தினரையெல்லாம் புறவினத்தாராகக் கருதுவதுமான தேசியத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோமா? மதம், மதக்கோட்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலான தேசம் என்ற கருத்தை உலகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டதாலும் நவீன மனிதனின் மனதில் அந்தக் கருத்துக்கு இடம் இல்லை என்பதாலும் அந்தக் கேள்வி விசித்திரமான ஒன்றுதான். இருந்தாலும், இன்றைய இந்தியாவில் இந்தக் கேள்வியை முன்வைத்தே ஆக வேண்டியிருக்கிறது. ஏனெனில், நம்மில் பலர் நம் கடந்த காலத்தை நோக்கித் தாவிச் செல்ல முயல்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதில் என்னவாக இருந்தாலும், உலகமெங்கும் காலாவதி ஆனதும் நவீனச் சிந்தனைகளுக்கு சரிவராததுமான அந்தச் சிந்தனையை நோக்கிப் பின்செல்வதற்கு சாத்தியமே இல்லை.

இந்தியாவைப் பொருத்தவரை ஓரளவு நிச்சயத்துடன் என்னால் பேச முடியும். வலுவான போக்குகளுக்கு இணங்க மதச்சார்பின்மை, தேசியம் ஆகிய வழிகளில் நாம் சர்வதேசியத்தை நோக்கி நடைபோடுவோம். நிகழ்காலம் என்னதான் குழப்பங்களைக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் எதிர்காலம் என்பது அதன் கடந்த காலத்தைப் போலவே அனைத்து நம்பிக்கைகளையும் சமமாகக் கருதி மதிப்பதாகத்தான் இருக்கும். ஆனால், தேசியம் என்பதைப் பொருத்தவரை ஒன்றுபட்ட பார்வை கொண்டிருக்குமே தவிர, கிணற்றுத் தவளையாக இருக்கும் தேசியவாதத்தைக் கொண்டிருக்காது என்றே நான் நம்புகிறேன். ஆனால், அது தன் மக்களின் அறிவுத்திறனில் நம்பிக்கை வைத்திருக்கும் தேசியமாக இருக்கும்; சகிப்புத்தன்மை, படைப்பூக்கம் மிக்க தேசியமாக இருக்கும்; சர்வதேசத் தரத்திலான அமைப்பை நிறுவுவதில் பங்கெடுக்கும் தேசியமாக இருக்கும். 

‘ஒரே உலகம்’என்பதுதான் நமது இறுதி இலக்காக இருக்க முடியும். ஆனால், ஒன்றுக்கொன்று சண்டையிடும் அணிகள், மூன்றாம் உலகப் போருக்கான குரல்கள், அதற்கான ஏற்பாடுகள் என்றிருக்கும் இந்த நிலையில், அந்த இலக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றலாம். இந்த ஆபத்துகளுக்கெல்லாம் மத்தியில் நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு அது ஒன்றாகவே இருக்க முடியும். ஏனென்றால் ‘உலக நல்லுறவு’க்கு மாற்று என்பது ‘பேரழிவு’தான்.
மதமும் கல்வியும்

இந்த விசாலமான மனப்பான்மையைத்தான் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, குறுகிய மனப்பான்மை கொண்டவர்களைப் பின்பற்றி உணர்விலும் மனப்பான்மையிலும் நாம் குறுகிப்போய்விடக் கூடாது. மதப்பிரிவினைவாதம் என்று அழைக்கப்படும் அந்த ஒன்றால், இந்த நாட்டில் நாம் பட்டதெல்லாம் போதும்; கசப்பும் விஷத்தன்மையும் கொண்ட அதன் கனிகளை நாம் சுவைத்திருக்கிறோம். இந்த மதவாத உணர்வு எங்கும் ஊடுருவுவதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதை அடியோடு விரும்ப மாட்டேன். 

கல்வி என்பது மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி, கூண்டுக்குள் போட்டு அடைத்துவைப்பதற்கானது அல்ல. வாரணாசிப் பல்கலைக்கழகம், இந்துப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதை நான் எப்படி விரும்பவில்லையோ அதேபோல் இந்தப் பல்கலைக்கழகம் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. இதனால், ஒரு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிட்ட கலாச்சாரத் துறைகளிலோ ஆய்வுகளிலோ தனிக்கவனம் செலுத்தக் கூடாது என்றில்லை. இஸ்லாமியச் சிந்தனை, கலாச்சாரம் போன்றவற்றின் சில அம்சங்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சிறப்புக் கவனம் செலுத்துவது சரிதான் என்றே நான் நினைக்கிறேன்.
என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்த்து, நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த முடிவுகளையெல்லாம் உங்கள் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. இருந்தும், நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாத விதத்தில் நிகழும் சம்பவங்கள், குறிப்பிட்ட விதத்தில் முடிவெடுக்கும்படி உங்களைக் கட்டாயப்படுத்தும் என்பது உண்மைதான். நீங்களெல்லாம் உங்களை அந்நியர்களாகக் கருதாதீர்கள். எல்லாரையும் போலவே ரத்தத்தாலும் சதையாலும் நீங்களும் இந்தியரே. இந்தியா வழங்கும் எதிலும் பங்குபெற உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், உரிமைகளைக் கோரும் யாரும் கடமைகளிலும் அவசியம் பங்கெடுக்க வேண்டும்.

உண்மையில், கடமைகளும் கடப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உரிமைகள் தாமாகவே வந்துசேரும். சுதந்திர இந்தியாவின் சுதந்திரக் குடிமக்களாக இந்த மாபெரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு செய்வதற்கு உங்கள் எல்லாரையும் நான் வரவேற்கிறேன்; எல்லாரையும் போலவே நீங்களும் அதன் பங்குதாரர்களாக இருக்கவும் அதன் பாதையில் வரும் வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும், அதில் பங்குகொள்ளவும் உங்களை நான் வரவேற்கிறேன். துன்பங்களையும் துயரங்களை யும் கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் கடந்துபோய்விடும். எதிர்காலம்தான் நமக்கு முக்கியம். குறிப்பாக, இளையோருக்கு, உங்களை அழைப்பது அந்த எதிர்காலம்தான். அதன் குரலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் நீங்கள்? 
   
1948, ஜனவரி, 24-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேரு ஆற்றிய உரை
தமிழில்: ஆசை
நன்றி : தி இந்து Published: November 14, 2013