Friday, January 13, 2012

தமிழ் முஸ்லிம்களின் நாட்டார் மரபு பழமொழிகள்

முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்கில் உள்ள சில அழகிய பழமொழிகளை இப்பதிவின் மூலம் அறிமுகம் செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

 ‘பள்ளியைத் தின்ற குடி பற்றி எரியும்’ 
‘பள்ளி’ என்ற சொல் பள்ளிவாசலுக்கு உரிமையான செல்வத்திற்கு ஆகி வந்தது என்றும்,‘குடி’என்ற சொல்லுக்கு வம்சம்,மரபுவழி,குலம் என்று பொருள் உணர்ந்து கொண்டால்,அப்பழமொழி உணர்த்தும் ஆழிய பொருளை நாம் அனுபவிக்க முடியும்.

‘சிவன் சொத்து குல நாசம்’ 
என்ற இந்து சமயத்தவரின் பழமொழியோடு,இப்பழமொழியை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

‘அன்பு’என்ற ஒற்றைச் சொல்தான் அவனியையே இயக்குகிறது.
அன்பில்லாதவனை மக்கள் வெறுக்கிறார்கள்.அன்பில்லாதவனை ஆண்டவனும் வெறுத்து ஒதுக்குவான் என்கிறது ஒரு இஸ்லாமிய பழமொழி
‘அன்பில்லாதவன் வீட்டில் அல்லாஹ் குடியிருக்க மாட்டான்’ 
என்பது தான் அந்த பழமொழி அகும்
“வாயில் ஓதல் இருந்தால் வழியெல்லாம் சோறு”
ஓதல் என்ற சொல்லை,கல்வி என்று பொருள் கொள்ளலாம்.படித்தல் என்ற பொருளைத் தருகிற ‘ஓதுதல்’என்ற சொல்லை இஸ்லாமியர்கள் பேச்சு வழக்கில் மிக இயல்பாகக் கையாள்கின்றார்கள்

“கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு”
என்ற பொதுத்தமிழ் பழமொழியுடன் இப்பழமொழியின் பொருளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது.இதே தொனியில் உள்ள இன்னொரு இஸ்லாமியப் பழமொழி. “ஞானமும் கல்வியும் ஆணமும் சோறு” என்பதாகும்.

‘ஆணம்’என்பது இஸ்லாமியர்களிடம் மட்டுமே புழங்கும் ஒரு வழக்குச் சொல்லாகும்.ஆணம் என்றால் கொழம்பு என்று பொருள்.

 “பொதுவாக மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியம். மனிதர்களின் கல்வியும்,அறிவும்,முதலில் அவர்களது பசியைப் போக்க உதவி செய்வதாக இருக்க வேண்டும்” என்ற கருத்தை இப்பழமொழி வலியுறுத்துகிறது.

சிலர் நெஞ்சுக்கு நேரே நம்மைப் புகழ்ந்து பேசுவார்கள்.அதே ஆள்,நம் முதுகுக்குப் பின்னே நம்மைத் தூற்றுவார்கள்.இந்த வாழ்வியல் நடைமுறையை , “கண்டா சாயுபே,காணாட்டி பாவியே” என்ற பழமொழிச் சுட்டிச் சொல்கிறது.
தொழுகையாளிகள் எதார்த்த வாழ்வில் நேர்மையுடன் வாழ வேண்டும் என்ற கருத்தை 
“தொழுகிறான்,தொழுகிறான் அல்லாஹ்வுக்காக,வைக்கோலை களவாடறான் மாட்டுக்காக!’
என்ற பழமொழி விளக்குகிறது.இப்பழமொழியில் ‘அங்கதச் சுவை’ அமைந்துள்ளது.
‘தொழாதவனின் ‘கிப்லா’ எல்லாத் திக்கிலும்’
என்கிறது இன்னொரு பழமொழி.திக்கு- என்ற வாட்டார வழக்கு சொல்லுக்கு ‘திசை’ என்பது பொருள். ஒரு முஸ்லிம் உலகத்தில் எந்த மூலையிலிருந்தும் இறைவனைத் தொழுதாலும்,தொழுகின்ற ஒவ்வொருவரும் ‘கிப்லா’ கஅபாவை முன்னோக்கி நின்றுதான் தொழுவார்கள்.

இறைவனை நம்புகிறவர்களுக்கும்,தொழுகையைக்
கடைப்பிடிக்கிறவர்களுக்கும் தான் ‘கிப்லா’வின் திசை தெரியும்...! இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு, கிப்லாவின் திசையைப் பற்றி கவலை இல்லை என்பது இப்பழமொழி விளக்க வரும் பொருளாகும்.

‘பிறவிக் குணத்திற்கு மட்டை வைத்துக் கட்ட முடியுமா?’’ என்று கேட்கிறது ஒரு தமிழ் பழமொழி.இதே கருத்தை அடியொட்டி, 
‘அரபிக் குதிரை என்றாலும் பிறவிக் குணம் போகாது’ என்கிறது ஒரு இஸ்லாமியப் பழமொழி.

சில பழமொழிகளைக் கேட்கிற போது நமக்குச் சிரிப்பு வந்து விடுகிறது.
 “உள்ளது ஒரு பிள்ளை என்று ஒண்பது தடவை சுன்னத் செய்தானாம்!”
என்ற பழமொழியில் நகைச்சுவை உணர்வு உள்ளது.

சகோதரச் சமுதாயத்தினரின் பேச்சு வழக்கில் 
“அப்துல் காதருக்கும்,அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்” என்பது போன்ற வழக்கு வழக்குத் தொடர்கள் பயன்படுத்தப் படுகின்றன.

அல்லாஹ்வை வணங்கினால், இம்மை -மறுமை இரண்டிலும் நன்மை கிடைக்கும் எனது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.இக்கருத்தை,
“அல்லாஹ்வைத் தொழுதால்-ஆகிரமெல்லாம் சொர்க்கம் தான்!”
என்கிறது ஒரு பழமொழி.ஆகிரம் என்றால் ‘மறுமை’யாகும்.

16 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அடடா... இவ்வளவு பழமொழி இருக்கா? எனக்கு தெரியல..

    //அப்துல் காதருக்கும்,அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்”//

    இதுமட்டும் தான் கேட்டிருக்கேன் ஹி...ஹி...ஹி...

    வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  2. // “உள்ளது ஒரு பிள்ளை என்று ஒண்பது தடவை சுன்னத் செய்தானாம்!”//

    பாவம் அந்த சிறுவன். :-(

    ReplyDelete
  3. கேள்விபடத பழமொழிகளும் விளக்கங்களும் அருமை சகோதரா

    நான்கேட்ட ஒரு பழமொழி
    "பெரை கேட்ட சுல்தானு செயலை பார்த்த சைத்தானு"

    ReplyDelete
  4. @ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //அடடா... இவ்வளவு பழமொழி இருக்கா? எனக்கு தெரியல.//

    இன்னும் இருக்கு பதிவின் நீளம் கருதி குறைத்திருக்கிறேன்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  5. @சுவனப்பிரியன்

    தேவையில்லாத விழாக்களும் செலவினங்களும் சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்லும் இஸ்லாமிய கிராம நாட்டார் மரபு பழமொழி அதை நேரடியாக புரிந்துக் கொள்ளமால் அது தரும் பொருளை விளங்கி பாருங்கள் உதாரணத்திற்கு

    எனக்கு உள்ளது ஒரு மகள் தான் அதனால் அவர் திருமணத்தில் 100 பவுன் நகை 5 இலட்சம் தடா புடலான சீர் சாமன்கள் இப்படி கொடுத்து சமூகத்தை கெடுத்து தொலைக்கிறார்கள்

    இதனால் மூன்று நான்கு பெண் குமர்களை வைத்திருக்கும் ஏழை தகப்பன் மறைமுகமாக பாதிக்கப் படுகிறார்கள். இது சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கோணத்தில் புரிந்து கொள்வது ஆரோக்கியமானது என்று நினைக்கிறேன்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன் சகோதரர்.

    குழம்பை குறிக்கும் 'ஆணம்' என்ற சொல் முஸ்லிம் தமிழர்கள் மட்டுமே உபயோகிக்கும் சொல்லா? ஆச்சர்யம் தான்..

    பகிர்வுக்கு ஜசாகல்லாஹ்.

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  7. @சகோதரர்Nizam

    //நான்கேட்ட ஒரு பழமொழி
    "பெரை கேட்ட சுல்தானு செயலை பார்த்த சைத்தானு"//

    அருமையான சொல் சகோ
    சொல்லிய வன்னம் செயல் என்பதை உணர்த்தும் பழமொழி

    உண்மையில் நான் தொகுக்கும் போது இந்த பழமொழி என் நினைவுக்கு வரவில்லை எடுத்து கொடுத்ததிற்கு நன்றி

    ReplyDelete
  8. Azhagana Palamozhigal. Arputha Vilakkangal. Arumai Sir!

    ReplyDelete
  9. சலாம் சகோ,
    கலந்து கட்டி அடிக்கிறீங்க. வித்தியாசமான கோணங்களில் வருகிறது உங்கள் பதிவுகள். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஈழத்தமிழிலும் சொல்லுவர்ர்கள் மீன் கரைந்தால் ஆணத்தில் என்று.. ஆணம் என்ற சொல் பேச்சு வழக்கில் இல்லாவிடினும் பழமொழியில் இருக்கின்றது சகோ..!

    ReplyDelete
  11. Arumaiyaana thokuppau!
    naan arinthidaathavai! thodarattum!

    ReplyDelete
  12. @Aashiq Ahamed

    வ அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    //குழம்பை குறிக்கும் 'ஆணம்' என்ற சொல் முஸ்லிம் தமிழர்கள் மட்டுமே உபயோகிக்கும் சொல்லா? ஆச்சர்யம் தான்..//

    ஈழத்தமிழர்களும் பயன்படுத்துகிறார்களாம் சகோதரர் காட்டான் சொல்லி இப்பதான் தெரியும்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  13. @துரைடேனியல்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  14. @சிராஜ்
    வ அலைக்கும் வஸ்ஸலாம்
    நன்றி சகோ

    ReplyDelete
  15. @சகோதரர்காட்டான்

    //ஈழத்தமிழிலும் சொல்லுவர்ர்கள் மீன் கரைந்தால் ஆணத்தில் என்று.. ஆணம் என்ற சொல் பேச்சு வழக்கில் இல்லாவிடினும் பழமொழியில் இருக்கின்றது//

    நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் சுட்டிக்காட்டிமைக்கு நன்றி

    தமிழக முஸ்லிம் கிராமங்களில் இன்னும் குழம்பை ஆணம் என்று தான் விளிக்கிறார்கள்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    ஹலோ... எல்லாம் பழமொழி தானா...?

    ரொம்ப கிழ மொழியா இருக்கு...

    //“தொழுகிறான்,தொழுகிறான் அல்லாஹ்வுக்காக,வைக்கோலை களவாடறான் மாட்டுக்காக!’//

    நச்!

    வாழ்த்துகள்.. தொடருங்கள்

    ReplyDelete