Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவு தமிழர்களை ஏய்க்கும் அறிவா?

இந்த படத்தை பாருங்க அதுக்கப்புறம். “தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா” என்ற வாசகம் ஆயிரம் முறை நினைவுக்கு வரும் அப்படி ஒரு தமிழனின் பெருமை பேசும் படத்தை எடுத்திருக்கிறேன் என்று டயலாக் அடிக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

வன்கொடுமைகளாலும் போர்களாலும் தலைகுனிந்து நிற்கின்ற தமிழனை ஒரு திரைப்படம் தலைநிமிர வைத்து விடும் என்றால் இதை விட கேவலாம் வேறு என்னவாக இருக்க முடியும்? ஒரு திரைப்படத்தை வைத்து தமிழனை தலைநிமிர வைக்க வேண்டிய துரதிஷ்டத்தை எங்கு போய் முறையிடுவது.

சரி இவ்வளவு உன்னதமான நோக்கத்திற்கு எடுக்கப்பட்ட படத்தில் இவ்வளவு ஆபாசங்கள் ஏன்? ஒருவேளை இதுவும் தமிழனை வாய் பிளந்து, தலைநிமிர்ந்து பார்க்க வைக்கிற உத்தியோ?

அல்லது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது தலைநிமிர்ந்து பார்த்தால் பதவி போய்விடும் என்று பம்மியவர்களின் வாரிசு
பட தயாரிப்பளர் பரமஏழை!? உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில கோடிகளுக்கு அதிபதியாகி தலைநிமிர வேண்டும் என்பதாக கூட இருக்கலாம்?

சோழ மன்னனின் வரலாற்று கதையை எடுக்க போகிறேன் என்று வக்கிரமான “ஆயிரத்தில் ஒருவன்”படம் எடுத்த செல்வராகவன் இதே டயலாக்கைதான் விட்டார். ஐரோப்பா நாடுகளிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக இருக்கிற ஈழத்தமிழனின் தாயக ஆசைகளை “தாய் தின்ற மண்ணே” என்று பாடல் வைத்து அவனின் பர்ஸை கொள்ளையடித்தது.அந்தப் படம் வேறு என்ன சாதித்தது? ரீமாசென்,ஆன்ட்ரியா இரண்டு நடிகைகளையும் ஆபாசமாக காட்டி சில அற்பர்களின் கண்களுக்கு விருந்தாக்கியதை தவிர?


சரி கதைக்கு வருகிறேன்


 “போதி தர்மரை தமிழர் என்றும் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்த்வர் என்றும்” என்று சொல்கிறார்கள் ஏழாம் அறிவு திரைப்பட கோஷ்டி.


போதி தர்மர் தமிழரா? இல்லையா? என்பதை பிறகு பார்ப்போம். தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்ட மாணவன் என்ற முரையில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.  “காரத்தே” என்ற ஜப்பானிய மொழி சொல்லுக்கு நேரடி தமிழ் சொல் வெறும் கைகளால் சமாளித்தல் என்று பொருள்.


புத்த மதம் இந்தியாவில் தான் தோன்றியது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அப்படி தோன்றிய புத்த மதம் என்னதான் அஹிம்சையை போதித்தாலும். காட்டில் இருந்த புத்த பிக்குகள் கள்வர்களிடமிருந்தும் காட்டு கொடிய விலங்குகளிடம் இருந்தும் பாதுகாக்க சில தற்காப்பு கலைகள் அவசியமாக இருந்தன அப்படி தற்காக்கும் போது கொல்லக்கூடாது என்பதற்காக ஆயூதங்கள் இல்லாமல் வெறும் கைகளால் சமாளிக்கின்ற கலைகளை காட்டு விலங்களின் அசைவுகள், அவை சண்டையிடும் முறை இவைகளை உன்னிப்பாக கவனித்து தற்காக்கும் கலையை விலங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.


 “குங்பூ” ஸ்டைலில் இதனை பார்க்கலாம் டைகர்,சினேக்,மங்கி,ஈகிள் போன்ற வகைகளில் சொல்லித் தருவார்கள் புலி எப்படி பாய்ந்து தாக்கும். கழுகு எப்படி விரல்களால் பிடிக்கும் என்பன இவையெல்லாம் காட்டின் விலங்குகளிடம் புத்த பிக்குகள் கற்று உலகிற்கு அளித்த தற்காப்பு கலைகள். புத்த மதம் ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளுக்கு பரவியபோது இந்த தற்காப்பு கலைகளும் சேர்ந்தே அங்கு பரவியது. நீங்கள் கவனித்துப் பாருங்கள் புத்த மதம் எந்தெந்த நாடுகளில் இருக்கிறதோ இந்த தற்காப்பு கலையும் சேர்ந்தே இருக்கும்.


சரி போதி தர்மர் தமிழரா?


இதனை விளக்க நண்பர் திங்கள் சத்யா அவர்கள்
http://marakkanambala.blogspot.com/2011/10/blog-post.html  இந்தலிங்கில் விரிவாக கிழே


‘‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்’ என ஜப்பானியர்கள் கூறுவதாக’’ சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா’ என்று பெயர் மாற்றியதே அவர்தான்’’ என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், ‘‘‘ஏழாம் அறிவு’ திரைப்படம், தாங்கள் கடவுளாகப் போற்றிவரும் ‘போதி தர்மரை’ இழிவுபடுத்துவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கில், வரலாற்றைத் திரித்துக் கூறி அவரை ‘தமிழராக’ சித்தரிப்பதாகவும், எனவே, அப்படத்தை தடை செய்யவேண்டும்’’ எனக் கோரியிருக்கிறது பவுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘நாகர் சேனை’ அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பானது சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

‘‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நாயகன் சூர்யாவும், ‘காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவுக்குப் போய், தற்காப்புக் கலையை நிறுவிய போதி தர்மருக்கு, சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் உள்ளன. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் நாங்கள் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்துள்ளோம். படம் வெளியான பிறகு, ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடந்துகொள்வான்’ என்று தமிழர்களை உசுப்பேற்றும்விதமாகப் பேசியுள்ளனர்.

இங்கே, போதி தர்மரை ‘தமிழர்’ என்று ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் அடையாளப்படுத்தக் காரணம், ‘உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளை, உண்மைக்கு மாறாக தட்டியெழுப்பி, கோடிக்கணக்கில் காசு பார்க்கும் முயற்சிதானே ஒழிய, தமிழ் பற்று அல்ல. படம் குறித்த விளம்பரத்தில்கூட, ‘10 நிமிட காட்சிக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டதாக’ சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

உண்மையில், ‘போதி தர்மர்’ ஒரு தமிழரே அல்ல. போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், அதாவது கி.பி. 300 முதல் கி.பி. 600-ம் ஆண்டுகள்வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.’’ என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இவர்களின் காலத்தை ‘‘தமிழகத்தின் இருண்ட காலம்’’ என, சிலர் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்’ தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது’ என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.’’ என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்’’ என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்’. களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

யாப்பருங்கல விருத்தி’ நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்’ என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்’ எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்” என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலில், ‘‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்.’’ எனச் சொல்வதுடன், ‘‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்’’ என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே’’ என்பதுடன், ‘‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்’’ என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’

‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,

‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.

‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார். ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.

நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.

முடிவுரை:

சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா&சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.

தரவுகள்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பவுதமும் தமிழும்’ மற்றும் தமிழ் விக்கிபீடியா. கருத்துப் பிழைகள் இருப்பின், தயவு செய்து சுட்டிவிட்டுச் செல்லவும்.


32 comments:

  1. தமிழர்களுக்காக எடுத்த படம் தெலுங்கில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப் படுகிறது, அங்கு என்ன பேசுவார் சூர்யா என்ற கேள்வி, இந்த பதிவில் வெளியிட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்

    ReplyDelete
  2. சலாம் சகோ ஹைதர்!

    கட்டுரை அருமையாக வந்துள்ளது. பல ஆதாரத்தோடு தந்துள்ளீர்கள். அதே சமயம் இரண்டு கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு டைரக்டர் முருகதாஸ் செய்த அதே தவறை தாங்களும் செய்யலாமா?

    ReplyDelete
  3. @சுவனப்பிரியன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //அதே சமயம் இரண்டு கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு டைரக்டர் முருகதாஸ் செய்த அதே தவறை தாங்களும் செய்யலாமா?//

    அந்தப் படங்கள், இது வரலாற்றுப் படம் அல்ல, ஆபாச வியாபாரம் என்பதை நிரூபிக்கும் படங்கள்.

    சரி நீக்கி விட்டேன்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///அந்தப் படங்கள், இது வரலாற்றுப் படம் அல்ல, ஆபாச வியாபாரம் என்பதை நிரூபிக்கும் படங்கள்.///

    :) :) :)

    தமிழ்ல இப்படித்தான் படம் வரும். வன்முறை, ஆபாசத்தை என்று எல்லாத்தையும் காட்டிவிட்டு கடைசியா வன்முறை, ஆபாசம் இதெல்லாம் தப்புன்னு சொல்லி பக்க பக்கமா வசனம் பேசுவாங்க...

    இறைவனுக்காக செயல்படும் நாமளும் அப்படி ஆகிவிட வேண்டாமே.

    இனி ஜாக்கிரதையாக இருங்கள் அண்ணன்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி...இப்புடு நம் தெசமுலு காணி ஏமி மீறு செப்துன்னாரு மாப்ள அதே கதா!

    ReplyDelete
  6. உங்களின் மீது இறைவனின் அமைதி நிலவட்டுமாக.

    சகோ. ஹைதர் அலி.

    மேலே காண்பிக்க பட்ட படங்களுக்காக, proxy போட்டாவது மைனஸ் வோட்டு போடணும்னு தான் நினைத்தேன், அதற்குள் சகோக்கள் சுட்டி காட்ட, படத்தையும் மாற்றிவிட்டீர்கள்.

    மற்றபடி, இந்த படம் பற்றி எனக்கு தெரியவில்லை., இருப்பினும் திரைப்படங்களில் காண்பிக்க படுபவை எல்லாம் காசு பார்க்கும் வித்தைகளே, உண்மையில் வரலாற்றை சொல்ல எவருமே முயற்சிக்க வில்லை, முயற்சித்தாலும் அது மறுதநாயகம் போலதான் ஆகும்.

    ReplyDelete
  7. அன்பு சகோதரனுக்கு வணக்கம்.
    பதிவுகள் தரமானதாக உள்ளது வாழ்த்துக்கள்.

    இன்றய அறிவுக்கு புத்தி புகட்டிய
    தலை அடி மிகவும் சரியே..

    படத்தை வரலாறுடன் எடுக்க முருகதாசும்- செல்வராகவனும் ஒரு தமிழன் தானா என்ற கேள்விகள் தெளிவாக எடுத்த கட்டுரை மிகவும் திருந்த வேண்டிய சினிமா சிதைக்கப்பட தமிழர்கள் என்ற இனம் விழிக்க உதவும் விமர்சனம். மிகுந்த நன்றிகள் பகிர்வுக்கு..

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    ஐந்தறிவு உயிர்கள் கூட ஆராய மறுக்கும் -ஆபாசத்தை

    ஆறறிவு மனிதன் அறிவற்ற சிந்தனையால் -

    ஏழாம் அறிவெனும் பெயரில் போலியாய் சமைத்தது தான்.. பொருளற்ற வேதனை...

    சுய அறிவோடு சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  9. இவ்வளவு அலசலான விசயம் சொல்லியுள்ளீர்கள்... நீங்கள் சொன்னதும் யோசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  10. வலையுகம்: ஏழாம் அறிவு தமிழர்களை ஏய்க்கும் அறிவா? அருமையான கட்டுரை.. இது படம் தான் ஒரு சிறு பொறி கொண்டு (உண்மை_) எழுதப்பட்ட நிகழ் கால கற்பனையில் மட்டுமே (கம்மேர்சியால்_) பாட்டும் ஆட்டமும் ..இதை முழுதும் புரிந்து கொள்ளுங்கள்...நாம் பெருமை பட வேண்டிய விஷயம்...ஏன்உண்மை யான நிகழ்வு (titanic _) அதில் காதல் என்றால் அதை ஏற்று படம் பார்த்தோமே.. தமிழ் சினிமா என்றால் ஏற்று கொள்ள முடியாதா...வரலாறு தெரியாதவர்கள் அல்ல நீங்கள்...படம் இது...அதில் சிறு பொறி...அதன் கற்பனை....வேறு சொல்ல முடிய வில்லை....உங்கள் கட்டுரை அற்புதம்....

    ReplyDelete
  11. நல்ல பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. @Aashiq Ahamed

    //இறைவனுக்காக செயல்படும் நாமளும் அப்படி ஆகிவிட வேண்டாமே.

    இனி ஜாக்கிரதையாக இருங்கள் அண்ணன்.//

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    இனி கவனமாக இருக்கிறேன்

    சுட்டி காட்டிமைக்கு ரொம்ப நன்றி

    ReplyDelete
  13. @தமிழ்விழி வானலை யாழகிலன்.

    நன்றி சகோதரா உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன் கவிதைகள் தீயாக இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. @G u l a m

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    ஆஹா ஆஹா கவிதே கவிதே

    நன்றி சகோ

    ReplyDelete
  15. @தமிழ் செல்வி

    தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. @Rathnavel

    உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி ஐயா

    ReplyDelete
  17. ஏமாற்றுபவர்தான் எத்தனை விதம், ஏமாளிகள் நிலைதான் திண்டாட்டம்.தமிழர்களே இனியும் ஏமாறாதீர்கள்.

    ReplyDelete
  18. நல்ல பதிவு ..
    இது போன்ற ஒரு பதிவை தனியாக எழுதலாம் - அதாவது போதி தர்மர் தமிழரா? என்கிற கேள்வியை மட்டும் வைத்து நீங்கள் எழுதியதையே மீள் பதிவு செய்யுங்கள்.
    திரைப் படம் என்பது வணிகம் சம்பந்தப் பட்டது. எனவே முருகதாஸ் அந்தத் துறை சம்பந்தப் பட்டவர் என்பதால் வணிக நோக்கில் அவர் சொல்ல வந்த ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார். அவர் குத்துப் பாட்டு சேர்த்திருப்பதால் அவர் சொல்ல வந்த கருத்து தவறு என்று ஆகி விடும் நோக்கம் இருக்கிறது. எனவே திரைப் படம் என்று மட்டும் பார்த்தால் அதில் ஆயிரம் ஓட்டைகள்...

    அந்த செய்தியில் இரண்டு கருத்துக்கள் உள்ளதை நீங்கள் எழுதியிருக் கிறீர்கள் - எனவே இரண்டையும் பிரித்துப் பார்ப்பது நல்லது. பொன்னர் சங்கர் ஒரு குத்துப் படமாகி விட்டதென்றால் அது இயக்குனர் மற்றும் கதாசிரியர் தவறு. அதற்கு பொன்னர்-சங்கர் என்ன செய்வார்கள் பாவம். அதே தான்... போதி தர்மர் வாழ்க்கை ஒழுங்காகச் சித்தரிக்கப் படவில்லைஎன்று நீங்கள் நினைத்தால் பாவம் அவர் என்ன செய்வார்?

    ReplyDelete
  19. @Dr. Khalil

    வருகைக்கு நன்றி டாக்டர் அவர்களே

    ReplyDelete
  20. @அப்பு

    தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    //திரைப் படம் என்பது வணிகம் சம்பந்தப் பட்டது. எனவே முருகதாஸ் அந்தத் துறை சம்பந்தப் பட்டவர் என்பதால் வணிக நோக்கில் அவர் சொல்ல வந்த ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார். அவர் குத்துப் பாட்டு சேர்த்திருப்பதால் அவர் சொல்ல வந்த கருத்து தவறு என்று ஆகி விடும் நோக்கம் இருக்கிறது. எனவே திரைப் படம் என்று மட்டும் பார்த்தால் அதில் ஆயிரம் ஓட்டைகள்...//

    ஒரு திரைப்படமாக பார்ப்பதில் எனக்கும் மாற்று கருத்தில்லை ஆனால் அந்த சினிமா தான் எல்லாம் இனிமேல்
    தமிழன் தலைநிமிர்ந்து நடக்கலாம் போன்ற மோசடிகளை தான் இங்கு சுட்டி காட்டியிருக்கிறேன்

    இது தான் முக்கியமான பதிவின் சாரம்சம்

    ReplyDelete
  21. அருமையான கட்டுரை உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. சிறப்பான அலசல் அண்ணா... நிறைய வரலற்றுக் குறிப்புகளுடன் தந்திருக்கிறீர்கள். நன்றி. என் தளத்திற்கு அடிக்கடி வந்து தொடர்ந்தும் வந்துக் கருத்துக்களை தந்து செல்ல வேண்டுக்றேன்.

    ReplyDelete
  23. அன்பு சகோதரா
    ஆருமையான பதிப்பு
    சினிமா மோகத்தில் திளைத்து இருக்கும் தமிழக மக்களில் சில பேர்களின் பர்ஸை பதம் பார்க்கும் முயற்சி தான் அந்த அறிவு. சரியான வரலாற்றை மக்கள் அறியச்செய்யும் முயற்சி அல்ல.

    ReplyDelete
  24. ஒரு திரைப்படத்துக்கு முழுமையான ஆய்வுக்கட்டுரையா? ..பலே

    ReplyDelete
  25. தமிழ் செல்வி said...
    வலையுகம்: ஏழாம் அறிவு தமிழர்களை ஏய்க்கும் அறிவா? அருமையான கட்டுரை.. இது படம் தான் ஒரு சிறு பொறி கொண்டு (உண்மை_) எழுதப்பட்ட நிகழ் கால கற்பனையில் மட்டுமே (கம்மேர்சியால்_) பாட்டும் ஆட்டமும் ..இதை முழுதும் புரிந்து கொள்ளுங்கள்...நாம் பெருமை பட வேண்டிய விஷயம்...ஏன்உண்மை யான நிகழ்வு (titanic _) அதில் காதல் என்றால் அதை ஏற்று படம் பார்த்தோமே.. தமிழ் சினிமா என்றால் ஏற்று கொள்ள முடியாதா...வரலாறு தெரியாதவர்கள் அல்ல நீங்கள்...படம் இது...அதில் சிறு பொறி...அதன் கற்பனை....//

    இந்த கருத்தும் பிடித்திருக்கிறது...

    ReplyDelete
  26. அப்பு said...
    நல்ல பதிவு ..
    இது போன்ற ஒரு பதிவை தனியாக எழுதலாம் - அதாவது போதி தர்மர் தமிழரா? என்கிற கேள்வியை மட்டும் வைத்து நீங்கள் எழுதியதையே மீள் பதிவு செய்யுங்கள்.
    திரைப் படம் என்பது வணிகம் சம்பந்தப் பட்டது. எனவே முருகதாஸ் அந்தத் துறை சம்பந்தப் பட்டவர் என்பதால் வணிக நோக்கில் அவர் சொல்ல வந்த ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார். அவர் குத்துப் பாட்டு சேர்த்திருப்பதால் அவர் சொல்ல வந்த கருத்து தவறு என்று ஆகி விடும் நோக்கம் இருக்கிறது. எனவே திரைப் படம் என்று மட்டும் பார்த்தால் அதில் ஆயிரம் ஓட்டைகள்...

    அந்த செய்தியில் இரண்டு கருத்துக்கள் உள்ளதை நீங்கள் எழுதியிருக் கிறீர்கள் - எனவே இரண்டையும் பிரித்துப் பார்ப்பது நல்லது. பொன்னர் சங்கர் ஒரு குத்துப் படமாகி விட்டதென்றால் அது இயக்குனர் மற்றும் கதாசிரியர் தவறு. அதற்கு பொன்னர்-சங்கர் என்ன செய்வார்கள் பாவம். அதே தான்... போதி தர்மர் வாழ்க்கை ஒழுங்காகச் சித்தரிக்கப் படவில்லைஎன்று நீங்கள் நினைத்தால் பாவம் அவர் என்ன செய்வார்?//

    இந்த கருத்தும் பிடித்திருக்கிறது... மனதில் நினைத்ததை மிக அழகாக இருவரும் சொல்லிருக்கிறார்கள் சகோ!

    ReplyDelete
  27. ஆழமான ஆய்வுக் கட்டுரை. இன்றுள்ள தமிழ் இன உணர்வு, அன்றைக்கு இருக்கவில்லை. போதி தர்மர் காலத்தில், மத உணர்வு மிகுதியாக இருந்தது. நமது காலத்தில் ஆங்கிலத்தில் கல்வி கற்பதைப் போல, அந்தக் காலத்தில் பாளி மொழியில் பௌத்த மத நூல்களை பயின்றார்கள். போதி தமிழர் தமிழ் மொழி பேசும் பெற்றோருக்கு பிறந்திருக்கலாம். ஆனால், அதை மட்டும் வைத்துக் கொண்டு, போதி தமிழர் தமிழரா, இல்லையா என்று மயிர் பிளக்கும் விவாதம் செய்வது அர்த்தமற்றது.

    ReplyDelete
  28. ஏழாம் அறிவு தமிழர்களை ஏய்க்கும் அறிவா?

    என்னை பொருத்தமட்டில் இதில் கேள்விக்கே இடம் இல்லை...

    போதிதருமர் - confusing...

    [ஒரு doubt அவர் தமிழராக இருப்பதில் உங்களுக்கு எதேனும் பிரச்சனையா?]

    ReplyDelete
  29. படங்கள் அனைத்துமே மக்களின் உணர்வுகளை தூண்டி காசுக்காக எடுக்கப்படுபவை தான். இதில் போய் இவ்வளவு ஆராய்ச்சி தேவையா? அவர்கள் காசு போடுகிறார்கள்! பல மடங்கு காசை எடுக்கவும் விரும்புவார்கள்! அதற்காக என்ன கழிசடை வேலைகளையும் செய்வார்கள். பொதுவாக படம் எடுப்பதே தவறு என்ற நிலைபாட்டில் இருந்தால் தான்... இந்த கழிசடைகளில் இருந்து நாம் விலகி இருக்க முடியும். இல்லையென்றால்,,, இந்த படம் தவறு என்றால்.. நல்ல படங்களும் இருக்கும் போல என்ற கருத்து விதைக்கப்பட்டு விடும்...

    ReplyDelete